“விதிகாணுமுடம்பை விடா வினையேன்” கந்தரநுபூதி (35) ஏட்டின் விதிவழி ஓட்டமறிகிலை:- பிரம்மா எழுதி வைத்த ஏட்டின் விதிப்படிதான் ஓட்டம் நடைபெறும். எல்லாம் அவ்விதியின்படி நடைபெறும். அதை யறியாத மனம் அவலப்படுகின்றது. பார்த்துமினியொரு வார்த்தை அறைகுவனிது கேளாய்:- மனமே! நீ இவ்வாறு எந்த வகையிலும் நலம் நாடாது அவலமாவதைக் கண்டு, நாம் இனி சும்மாவிருப்பது நன்றன்று என்று கருதி ஒரு சொல் கூறுகிறேன். கேட்டு உய்வாயாக. வாக்கு முனதுள நோக்கு மருளுவன் ஏத்த புகழ்:- புகழ் ஏத்த வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் என்று மாற்றிப் பொருள் கொள்க. அப்பெருமானுடைய புகழை ஏத்தும் இனிய நல்வாக்கு சித்தியை அருளுவான். உள்ளத்தை நோக்கும் அக நோக்கையும் அருளுவான். ஆதலால் மனமே! அடியார்க்கு எளிமையான முருகனை மருவு. அவன் இருவினை நீக்கி எளிதில் அருள்புரிவான். ஆட்டி:- இறைவன் அகலி உலகங்களையும் சாட்டையில்லா பம்பரம் போல் ஆட்டிவைக்கின்றான். “சாட்டையில்பம்பர சாலம் போலிறை ஆட்டுவான்உலகெலாம் அறிந்து நெஞ்சமே” - தாயுமானார். பல பந்துகளை ஆட்டுகின்றவன் ஆடுவதுபோல் தானும் உலகெலாம் ஆட்டிவைக்கும் இறைவன் தழனும் ஆடுகின்றான். வடவரைவாட்டி:- திரிபுரம் எரிக்க முயன்றபோது, தேவர்கள் வடமேரு மலையை வில்லாக்கி இறைவனிடம் தந்தார்கள். அரவொடு பூட்டி:- அந்த மேருவில்லில் வாசுகி என்ற நாகராசனை நாணாகச் சேர்த்தார்கள். “மாநாக நாண்வலுப் புறத்துவக்கியொர் மாமேருபூதரத் தநுப்பிடித் தொரு மாலாய வாளியைத் தொடுத்து” - (ஆனாதஞான) திருப்புகழ். திரிபுரமூட்டி:- வில்லுந்தேரும் சாரதியும் அமைத்துத் தந்தபின் தேவர்கள் தமது உதவியாலேயே சிவபெருமான் திரிபுரத்தை அழிக்கப் போகின்றார் |