அழிப்பர்-ஆண்களின் மன உறுதியைக் கலங்க வைப்பார்கள், மால் பெரிது- மோகமயக்கத்தை மிகவுஞ் செய்து, அவர் பொருளை கைபறிப்பர்-அவர்களுடைய பொருளைக்கவர்ந்து கொள்வார்களாகிய, வேசைகள் உறவு ஆமோ-வேசையர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது). பொழிப்புரை பத்துத் தலைகளும் தெறித்து விழ, இராவணனுடைய உடல் தொளைபட்டுத் துடிக்க, ஒரு வில்லை வளைத்துக் கணைவிடுத்த ஸ்ரீராமரது திருமருகரே! பிறைமதியையும் கங்கையையும் தரித்த சடைமுடியுடைய சிவபெருமான் பெற்ற வெற்றி வேலாயுதக் கடவுளே! கழுகுமலையில் சிறப்புடன் வீற்றிருக்கும் பெருமித முடையவரே! தனத்தை மூடித்திறப்பார்கள்; உடையைத்தளர்த்தி உடுத்துப் படுப்பார்கள்; அதரபானமும் முத்தமும் மாறி மாறி தருவார்கள்; அழகிய மலர்ப்படுக்கையில் நிலைகுலையக் கொண்டு தழுவுவார்கள்; ஆண்களின் மன உறுதியைக் கலங்க வைப்பார்கள்; இவ்வாறு மோக மயலைப் பெரிதாகத் தந்து பொருளைப் பறிக்கும் பொது மாதர்களின் உறவு ஆகுமோ?(ஆகாது). விரிவுரை அலைகுலையக் கொட்டணைப்பர்:- அலைகுலைய-நிலைகுலைய “கயிலைதன்னை.............தாக்கினான் தன்னையன்று அலைகுலையாக் குவித்தார் அவளிவணல்லூராரே! - அப்பர். கொண்டு என்ற சொல் சந்தத்தை நோக்கிக் கொட்டு என வந்தது. தலைமுடி பத்துத் தெறித்து:- இராவணனுடைய பத்துத்தலைகளையும் ஸ்ரீராமர் ஒரு கணையால் அறுத்துத் தள்ளினார். பொண்ணாசையால் அவன் குலமுழுதும் அழியத் தானும் அழிந்தான். கலைமதி:- சந்திரன் கடைசி மனைவியிடம் அதிக அன்புடன் இருந்து ஏனைய மனைவியர்களைப் புறக்கணித்தான். அதனால் ‘நாளுக்கு ஒரு கலையாகத் தேய்ந்து அழிக‘ எனத் தக்கன் சாபமிட்டான். ஒவ்வொரு கலையாகத் தேயப் பெற்ற சந்திரன் எங்கு சென்றும் உய்வு பெற்றானில்லை. கயிலை சென்று உமாபதியைச் சரண் அடைந்தான். அந்த ஒரு கலையைச் சிரத்தில் சூடி, ‘இந்த ஒரு கலை யழியாது‘ என்று கூறி அரனார் அருள்புரிந்தார். விளக்கம் திருப்புகழ் விரிவுரை முதல் தொகுதி 9ஆம் பக்கத்தில் காணலாம். |