பக்கம் எண் :


280 திருப்புகழ் விரிவுரை

 

பக்தியே முத்தியைத்தரும் என்கிறார் அருணகிரிநாதர் வேலைக்காரன் வகுப்பில்.

“ஆனபயபக்தி வழிபாடு பெறுமுத்தி”

இனியதாள் நினைப்பை:-

இறைவனுடைய இணையடிமலர் கரும்பினும் கற்கண்டினும், கனியினும், இனிமையானது.

கனியினுங் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க்குழற் பாவை நல்லாரினுந்
தனிமுடி கவித்தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.        - அப்பர்

மாசில்வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இயைணடி நீழலே.           - அப்பர்

பிறவி வெப்பத்தை மாற்றும் குளிர்ந்த நிழல் பெருமானுடைய திருவடி நிழல். அது சித்தத்தில் தித்திக்கும் தீஞ்சுவையுடையது.

இருபோதும்:-

இருபோது என்பதற்கு காலையும், மாலையும் என்று பொருள் செய்யக்கூடாது. காலை மாலையன்றி மற்ற நேரங்களிலும் இறைவனை மறத்தல் கூடாது. ஆகவே இரவும் பகலும் என்று கூறுதலே சிறப்பு.

“இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்”  - அப்பர்

இதய வாரிக்குள் உறவாகி:-

வாரிதி-கடல். உள்ளத்தைக் கடல் என்று உருவகித்தனர். கடல் ஆழமுடையது. அதுபோல் உள்ளமும் ஆழமுடையது. இதயமாகிய கடலுள் இறைவன் திருவடியாகிய மந்திரகிரி சேர்வதாய் திருவருளமுதம் தோன்றும்.

எனதுளே சிறக்க அருள்வாயே:-

திருவடித்தியானம் உள்ளத்தில் சிறப்பாக இருத்தல் வேண்டும். “நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்” ஆதலின் நன்று நினைத்து இறைவனை உள்ளக் கோயிலில் எழுந்தருளப் புரிவார் உய்வு பெறுவார்.

கதிர்காம வெற்பில் உறைவோனே:-

கதிர்காமம் என்பது மிகவும் புனிதமான திருத்தலம். இது ஈழ நாட்டில் இருப்பது. மாணிக்க கங்கை அருகில் ஓடுகின்றது.