விரிவுரை இத்திருப்புகழ் அருணகிரிநாதருடைய வரலாற்றுத் தொடர்புடையது. மூன்று அடிகளில் தன்னை மயக்கிய கணிகையரது அங்க நலன்களைக் கூறுகின்றார். காமுகனகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கு வருமோதான்:- “பொது மாதரது வசமாகிய ஆசைக்கடலில் முழுகியிருந்த அடியேன், அந்த ஆசையை அடியோடு மறக்குமாறு அருள்புரிந்த உமது பாதமலரை மறக்க வொண்ணுமோ! ஒருபோதும் மறவேன், மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார். தேரிரவியுட்கிப்புகாமுதுபுரம்:- இராவணனுடைய ஆணைக்கு அஞ்சி இலங்கையில் சூரியன் தேர் செல்ல மாட்டாது. “பகலவன் மீதியங்காமை காத்த பதியோன்” - சம்பந்தர் “பகலவன் மீதியங்காத இலங்கை” - பெரியதிருமொழி "புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ்பதி”- (நிணமொடு) திருப்புகழ் அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி கோண சயிலம்:- அதி உக்ர-அத்யுக்ர. கோண சயிலம்-திருகோணமலை. இது இலங்கையில் உள்ள அருமையான தலம். தேவாரப் பாடல் பெற்றது. “கனமணிவரன்றிக் குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமா மலை” - சம்பந்தர் வேரி மழையில்:- வேரி-வாசனை. மழை-மேகம். இரு ஆகு பெயராகக் கூந்தலைக் குறிக்கின்றது. வேல்களில்:- வேல் போன்ற கண். இதுவும் ஆகு பெயர். கருத்துரை கதிர்காமத்திருமுருகா! அடியேனுடைய ஆசையை யகற்றிய உன்பாத மலரை ஒருபோதும் மறவேன். |