பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 313

 

சேலையுங்கட்டிய சீராவுங் கையிற் சிறந்த செச்சை
மாலையுஞ்சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.
                                                      - அலங்காரம் (27)

“என் ஓலை என்று வருமோ? என் ஓலை எங்கு கிழிந்து விட்டதோ?” என்று வயோதிகர்கள் கூறும் சலிப்புரைகளையுங் காண்க.

இயமனுடைய தூதர்:-

பாவிகளைப்பற்றுதற்கு இயமன் தூதர் வருவர். புண்ணிய சீலர்களை யழைக்கச் சிவகணங்களும் விஷ்ணுகணங்களும் வரும்.

“சிவனடியார்கள் பால் நீங்கள் செல்லவேண்டா, அவர்களைக் கண்டால் பணிந்து, மிகவும் தொலைவாக விலகிச் செல்லுங்கள்” என்ற இயமன் தனது தூதர்கள் பால் கூறுவன்.

தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவிலாக் காளத்தி மன்னன்-பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையுஞ் சேய்த்தாக என்று                               - நக்கீரர்

மடிபிடியதாக நின்று தொடர்போது :-

வழக்குத்தலத்திலிருந்து வந்த சேவகன், நியாயத்தலத்தின் உடன் அழைப்புக் கடிதத்தை எடுத்துக்கொண்டு வந்து, மடியில் கையைப் போட்டு வலிந்து இழுத்துக் கொண்டு போவதுபோல், நமனுடைய தூதுவர் வந்து கடுமையுடன் அழைப்பர்.

“மயலது பொலாத வம்பன் விரகுடைய னாருமென்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள்:-

இயமனுடைய தூதர்கள் “இவன் மயக்கம் மிகுந்த பாதகன்; குற்றமே புரியுங் குணக்கேடன்; வம்பு புரியும் வஞ்சகன்; கொலையும் புலையுமிக்க குண்டகன்;” என்பனவாதி நிந்தனைச் சொற்களைக் கூறி ஏசுவார்கள்.

கருவியதனாலெறிந்து:-

புலை, கொலை, சூது, வாது பிறன்மனை நயத்தல், கள்ளருந்தல், குருநிந்தை முதலிய தீமையினைப் புரிந்தவர்களை இயமனுடைய தூதர்கள் நரகலோகத்தில் வைத்து, பற்பல ஆயுதங்களால் இடித்தும், அடித்தும், குத்தியும், எத்தியும், உதைத்தும், வதைத்தும், துன்புறுத்துவார்கள்.

நன்மை செய்யாவிடினும், தீமையாவது செய்யாதிருத்தல் வேண்டாவோ? தெய்வத்தை வந்திக்கா தொழியினும் நிந்திக் காமலாவது இருத்தல் வேண்டாவோ? உயர்ந்த மானுடப் பிறப்பு