பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 325

 

விதித்து ஞாலம்:-

அவரவர்கள் கன்மங்களுக்கு ஏற்ப விதிக்கின்றவன் பிரமன், ஞாலம்-பூமி நால்-தொங்குவது. நால்வாய்-தொங்குகின்ற வாய். நால் என்ற சொல் ஞகரம் போலியாய் ஞால் எனதிரிந்தது. அம் சாரியை புணர்ந்து “ஞாலம்” என்றாயிற்று. ஞாலம் என்றால் தொங்குவது என்பது பொருள்.

ஓர்முடிகரத்துலாய்:-

பிரமன் தான்படைப்புத் தலைவன் என்று தருக்குற்றதனால் சிவபெருமான் வைரவரை யேவி பிரமனுடைய நடுத்தலையை நகத்தினால் கிள்ளச் செய்தார்.

“நல்லமலரின் மேல்நான்முகனார்தலை
   ஒல்லை யரிந்த தென்றுந்தீபற
   உகிரால் அரிந்த தென்றுந் தீபற”                   - திருவாசகம்

காமனையெரித்த:-

சிவமூர்த்தி மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தருளினார். திருமாலின் மக்களான பிரமனைத் தலையரிந்தும் மதனனைச் சாம்பலாக்கியும் தண்டித்தருளினார்.

ஆயிரவிடப் பணாமுடி நடுக்க:-

மயில்நடப்பதனால் ஆதிசேடனுடைய ஆயிரம்பணாமகுடங்களும் நடுங்குகின்றன.

“சேடன் முடிதிண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
   திடுக்கிட நடிக்கு மயிலாம்”

“பாரப்பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
       பதைபதைத்தே நடுங்க”                   - மயில்விருத்தம்.

அறத்தில் வாழுமை சிறக்க:-

காஞ்சிமா நகரில் காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளினார். சிறக்க-மகிழ.

“குறைவற முப்பத்திரண்டறம்புரி கின்றபேதை”
                                 - (தலைவலை) திருப்புகழ்

அருக்கொணாமலை தருக்குலாவிய:-

தருக்கு-மகிழ்ச்சி.

“கீதம் வந்த வாய்மையால் கிளர்தருக்கினார்”       - சம்பந்தர்

அருங்கொணாமலை என்பது கீரிமலை யெனவும் வழங்குகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்திலிருந்து 12 கல் தொலைவில் கடற்கரையில் திகழ்கின்றது.