பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 349

 

நின்ற சீரே குலாவிய, நிலைபெற்ற சிறப்பு விளங்குகின்ற, பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே-பண்பு மிகுந்த தேவரீருடைய பாதமாகிய தாமரையை அடியேனுக்கு அருள் புரிவீராக.

பொழிப்புரை

சூரபன்மன் அஞ்சும்படி, அவன் பிழைத்துப் போகா வண்ணமும், அந்நாள் வேலாயுதத்தை விடுத்து தேவர்கள் சிறியினின்றும் விடுதலையடையும்படியும், அன்புடன் அந்த அமரர்களின் மனவிருப்பம் நிறைவேறும்படியும், அவர்கட்கு நல்வாழ்வு நல்கிய தேவாதிதேவரே! பராபரமுதல்வரே! திருவடியில் உள்ள சதங்ககைகள் இனிய ஒலியுடன் கொஞ்சியோடுமாறு திருநடம் புரிந்த கொன்றை மலரைச் சூடிய சிவபெருமான், திருவுளம் மகிழ்கின்ற திருக்குமாரரே! பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகளையுடைய குன்றுகளால் சூழ்ந்துள்ள மலைகள்தோறும் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! நெஞ்சில் கோடிக் கணக்கான வஞ்சனைகள் நிறைந்த கொடியவர்கள்; ஆடம்பரத்தைத் தருகின்றவர்கள்; வீண்வாதம் புரிபவர்கள்; கொஞ்சிப் பேசிக் காமலீலைகளைப் புகழ்ந்து மயலைத் தருகின்ற விலைமாதருடைய ஐம்பெரும் பாவங்களைப் புரிகின்ற தனங்களின் மீது ஆசைப்பட்டு வெகு வருத்தப்பாடுடன் பேசி தினந்தோறும் சிறியேன். மெலியாது, வரிசையாக நின்று தேவர்கள் தொழுது வணங்குகின்ற பெருமை தங்கிய பண்புடைய தேவரீரது திருவடிகளை அடியேனுக்குத் தந்தருளுவீராக.

விரிவுரை

வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேனிய வண்கணார்:-

நெஞ்சத்தில் கோடிக்கணக்கான வஞ்சனைகள் குவித்து உறைய தம்மை யடுத்தோர்க்குக் கொடுமை புரிபவர்கள்.

ஆரவாரமு மருள்வோராய்:-

ஆடம்பரமான வாழ்க்கையுடையவராய், தம்மையடுத்தவரையும் அப்படி வாழுமாறு கற்பிப்பவர்கள்.

விலையுயர்ந்த துணிமணிகளும், உயர்ந்த விலை தந்து பெறும் நறுமணப் பொருள்களும், விலை மதிக்க முடியாத சயனங்களும் உடையவராய் ஆடவரை மயக்குவர்.

வம்பிலே வாது கூறி:-

வீணான வகையில் தருக்கம் பேசிப் பொழுது கழிப்பார்கள். இல்லாததை உண்டு என்றும், இருப்பதை இல்லையென்றும்,