சோதியுணர்கின்ற வாழ்வு சிவம்:- மேற்கூரியவாறு சீவபோதம் இழந்தவுடன் ஆணவமல நீக்கத்தினால் அருட்சோதி தெரிசனம் உண்டாகும். உலகத்தில்காணப்படும் சோதி விறகு முதலிய ஒரு பொருளைப் பற்றி நிற்கும். அது சுத்த சுயஞ்சோதியாக விளங்குவது; உண்மை, வடிவாக நிற்பது; வேத முடிவில் விளங்குவது; பரிசுத்தமான சிவானந்த சொரூபமாகத் துலங்குவது; துரியாதீதத்தில் இணையற இலங்குவது; ஏகாந்தமாக இசைவது; ஆன்மாக்களின் உள்ளங்கள் தோறும் நிறைந்திருந்து பக்குவமில்லாத ஆன்மாக்களினால் காணமாட்டாமல் பேரொளிப் பிழம்பாக ஒளிசெய்வது. “காண்பரிய பேரொளி” என்றார் மணிவாசகரும். மரணமில்லாப் பொருவாழ்வு தருவது; சீவனைத் தன்மயமாக்கிக் கொள்ளும் தயவு நிறைந்து குளிர்ந்து விளங்குவது. மெய்யேமெய்யாகிய சோதி-சுத்த வேதாந்த விட்டில் விளங்கிய சோதி துய்யசிவானந்தசோதி-குரு துரியத்தலத்தே துலங்கிய சோதி ஏகாந்தமாகிய சோதி-என்னுள் என்றும்பிரியா திருக்கின்ற சோதி சாகாவரந்தந்த சோதி-என்னைத் தானாக்கிக் கொண்டதோர் சத்திய சோதி. - இராமலிங்க அடிகள். சோகமது தந்து என்னையாள்வாய்:- சோஹம் என்ற வடசொல் சோகம் என வந்தது; ஸ அஹம் எனப் பிரியும். ஸ-அது, அஹம்-நான்; “அதுநான்” எனப் பொருள்படும். சீவன் அநாதியே ஆணவ மலத்தால் தொடக்குண்டது. சிவன் அநாதியே மலநீக்கமுடையவர். சீவன் சிவமாகத்தன்னை பாவனை புரிவதால் மலநீக்கமுறும். கருடோஹம்பாவனை புரிவதனால் விடநீக்க முறுவதுபோல் என்றறிக. “தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும் பழித்த சிவம் அருளுறத் தீதும் பிடித்தவினை ஏதும் பொடித்துவிழ சீவன் சிவச்சொரூப மெனதேறி நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி நாதம் பரப்பிரம வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழானந்த சித்தியொட நாளுங் களிக்கபதம் அருள்வாயே” -திருப்புகழ் |