பக்கம் எண் :


2திருப்புகழ் விரிவுரை

கிரிகளுக்கெல்லாம் முதன்மையானதாகிய மகாமேருகிரியில், முற்பட எழுதிய- எல்லா மொழிகளுக்கும் முதன்மையுற எழுதிய, முதல்வோனே-எல்லாத் தேவர்களுக்கும் முதன்மையானவரே! முப்புரம் எரிசெய்த-மூன்று புரங்களையும் தழலெழ நகைத்து எரித்தருளிய, அச்சிவன் உறைரதம்-அந்த (அளக்கரிய புகழையுடைய) சிவபெருமான் ஊர்ந்த இரதத்தினுடைய, அச்சது பொடி செய்த- (தன்னை நினையாத காரணத்தினால்) அச்சை முறித்துப் பொடியாக்கிய, அதிதீரா-மிகுந்த தீரத்தன்மையுடையவரே! அத்துயர் அதுகொடு-இன்பரச சக்தியாகிய வள்ளி நாயகியாரை மணந்து ஆன்மாக்களுக்கு பேரின்பத்தை யருள வேண்டுமென்றதாகிய அந்த இரக்கத்தைக் கொண்டு, சுப்பிரமணி படும்- சுப்பிரமணியக் கடவுள் சென்ற, அப்புனம் அதனிடை-வள்ளியம்மையாரிருந்த அந்தத் தினைப்புனத்தில், இபம்ஆகி-யானை வடிவங்கொண்டு, அக் குறமகளுடன்-அந்தக் குற மாதாகிய வள்ளிநாயகியாரோடு, அச்சிறு முருகனை- அந்த இளம்பூர்ணனாகிய முருகப்பெருமானை, அக்கணம் மணம் அருள்-அத் தருணத்திலேயே விவாகமாகும்படித் திருவருள் புரிந்த, பெருமானே- பெருமையிற் சிறந்தவரே! என-என்று துதிசெய்ய, வினை கடிதேகும்- தீவினைகள் விரைவில் நீங்கும், (ஆதலால்) மத்தமும்-ஊமத்தமலரையும், மதியமும்-சந்திரனையும், வைத்திடும் அரன்மகன்-சடாமுடியின் கண் (கருணைகொண்டு) தரித்துள்ள சிவபெருமானது திருக்குமாரராகிய, மல் பொரு திரள்புய-மல்யுத்தம் செய்கின்ற திரண்ட தோள்களையுடைய, மத யானை- மதங்களைப் பொழிகின்ற யானைமுகத்தையுடையவரை, மத்தள வயிறனை- மத்தளம்போன்ற அழகிய வயிற்றையுடையவரை, உத்தமி புதல்வனை-உத்தம குணங்களின் வடிவமாகிய உமாதேவியாரது புத்திரராகத் தோன்றிய மகா கணபதியை, மட்டவிழ் மலர் கொடு-தேன் துளிக்கின்ற மலர்களைக்கொண்டு அர்ச்சித்து, பணிவேன்-வணங்குவேன்.

பொழிப்புரை

கரதலத்திலே நிறைந்துள்ள பழம், அவல், பொரி, அப்பம் முதலியவைகளை யருந்துகின்ற யானை முகத்தையுடைய கணேச மூர்த்தியின் திருவடிக் கமலங்களை விரும்பி, (பதியினிலக்கணங்களையோதும் அறிவு நூல்களைக்) கற்கின்ற அடியாரது சித்தத்தில் எப்போதும் நீங்காது வாழ்கின்றவரே! நினைத்ததைத் தரவல்ல கற்பக விருட்சம்போல் (சரணாரவிந்தங்களை இடைவிடாது துதிக்கும்) தொண்டர்கள் நினைந்தவையெல்லாம் எளி