திருநீறு வினைகளை விலக்குவதன்றி பிறவினைகள் பொருந்தாவண்ணம் கவசமாக நின்று அரண்புரியும். “கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்விரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி”
- திருமந்திரம் சிகரமுற்று :- சி என்ற ஒரு தனி எழத்து மகா மந்திரமாகும் அது ஏக பஞ்சாட்சரம் எனப்படும். நாயோட்டு மந்திரம் என்றுங் கூறுவர். நமசிவய--தூல பஞ்சாட்சம். சிவயநம--சூட்சும பஞ்சாட்சரம். சிவயசிவ--காரண பஞ்சாட்சரம். சிவ--மகா பஞ்சாட்சரம். சி--மகாமநு ந--திரோதம் ம--ஆணவம் சி--சிவம் வ--திருவருள் ய--ஆன்மா திரோத சக்தியால் ஆணவமலத்தையகற்றி, திருவருள் துணை கொண்டு ஆன்மா சிவத்தைச் சேர்ந்து பவத்தை யகற்றும். இவ்வைந்தெழுத்தே வேத இருதயமாகி விளங்குவது. “வேத நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச் சிவாயவே” -திருஞானசம்பந்தர். விஜயத்தென் திருத்தணி :- தென்-அழகு. திருத்தணி தன்னை அடுத்து வந்த ஆன்மாக்களின் பாவத்தை அழித்து வெற்றிக் கொள்வது. விசேடமான ஜயம் விஜயம். ஆதலால் உத்தமமான திருத்தலம் திருத்தணிகை பணிவார் வினைகளைத் தணித்து சிவஞானத்தை யருள்வது தணிகாசலம். கருத்துரை திருத்தணிகேசா! தவநெறியுற்று உன் தலவாசம் புரிய அருள்செய். |