பக்கம் எண் :

116திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



திருமுறையில் அடங்கியுள்ளன. (24)

துதித்த கீரனுக் கின்னருள் சுரந்துநீ முன்போன்
மதித்த நாவலர் குழாத்திடை வதியென மறைநூல்
உதித்த நாவினார் கருணைசெய் துருக்கரந் தயன்சேய்
விதித்த கோயில்புக் கிருந்தனர் விளங்கிழை யோடும்.

     (இ - ள்.) மறைநூல் உதித்தநாவினார் - வேதநூல் தோன்றிய
நாவினையுடைய சோமசுந்தரக் கடவுள், துதித்தகீரனுக்கு - இங்ஙனம் துதித்த
நக்கீரனுக்கு, இன் அருள் சுரந்து - இனிய அருள் சுரந்து, நீ முன்போல் - நீ
முன்போலவே, மதித்த நாவலர் குழாத்திடை வதி எனக் கருணை செய்து -
நின்னை நன்குமதித்த புலவர் கூட்டத்து நடுவிலே தங்குவாயாக வென்று
கூறியருளி, உருக்கரந்து - திருவுருவை ஒளித்து, அயன்சேய் விதித்த
கோயில்புக்கு - பிரமன் புதல்வனாகிய தேவதச்சன் அமைத்த
திருக்கோயிலினுட் புகுந்து, விளங்கிழையோடும் இருந்தனர் - விளக்க மாகிய
அணிகளை அணிந்த உமையம்மையோடும் வீற்றிருந்தனர்.

     மதித்த - யாவரானும் மதிக்கப்பட்ட என்றுமாம். விளங்கிழை,
வினைத்தொகைப் புறத்துப் புறந்த அன்மொழித் தொகை. (25)

கற்ற கீரனுங் கலைஞருங் கழகமண் டபத்தில்
உற்ற வாடகக் கிழியறுத் தந்தணற் குதவிக்
கொற்ற வேந்தனும் வரிசைகள் சிலசெயக் கொடுப்பித்
தற்ற நீங்கிய கல்வியின் செல்வரா யமர்ந்தார்.

     (இ - ள்,) கற்றகீரனும் கலைஞரும் - பல கலைகளையுங் கற்ற
நக்கீரனும் புலவர்களும், கழக மண்டபத்தில் உற்ற - சங்க மண்டபத்தின்
முன்தூக்கிய, ஆடகக்கிழி அறுத்து அந்தணற்கு உதவி - பொன் முடிப்பை
அறுத்துத் தருமி என்னும் மறையவனுக்குக் கொடுத்து, கொற்ற வேந்தனும்
வரிசைகள் சில செயக் கொடுப்பித்து - வெற்றி வேந்தனாகிய சண்பகமாறனும்
சில வரிசைகள் செய்யுமாறு கொடுப்பித்து, அற்றம் நீங்கிய கல்வியின்
செல்வராய் அமர்ந்தார் - குற்றம் நீங்கிய கல்விச் செல்வராக இருந்தனர்.

     அற்றம் - சோர்வு; குற்றம். கல்வியின், சாரியை அல்வழிக்கண் வந்தது.
(26)

          அறுசீரடியாசிரிய விருத்தம்
சம்பக மாற னென்னுந் தமிழ்நர் தம் பெருமான் கூடல்
அம்பக நுதலி னானை யங்கயற் கண்ணி னாளை
வம்பக நிறைந்த செந்தா மரையடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த வன்பாற் பல்பணி நடாத்தி வைகும்.