பக்கம் எண் :

2திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     வேறு என்பது ஏனை யென இடைச்சொற் பொருட்டாய் நின்றது.
உள்ளமும் மதியும் முதலியவற்றின் என்க; மதி - அந்தக்கரணத்து ளொன்றாய
புத்தி; மதியின் பேதம் - போத விகற்பம் எனினுமாம். இவையன்றி நின்ற
பிறிதல்ல என்பதற்கு, இவையல்லாத வேறு பொருளும் அல்ல என்றும்,
இவற்றை விடுத்து வேறாக நின்ற தல்ல என்றும் பொருள் கூறலுமாம்;

‘ஒன்று நீயல்லை யன்றி யொன்றில்லை’

என்னும் திருவாசகம இங்கே சிந்திக்கற்பாலது. இந்நூலாசிரியர்,
அவையடக்கத்தில்,

‘அல்லையீ தல்லை யீதென மறைகளு மன்மைச்
 சொல்லினாற் றுதித் திளைக்குமிச் சுந்தரன்’

என்று கூறியதும் இச்செய்யுளும் கருத்தொருமையுடையவாதல் காண்க.
பூதங்களும் அதுவல்ல என்றிங்ஙனம் விரித்துக்கொள்க. பிறிதல்ல என்புழிப்
பன்மையொருமை மயக்கம். அல்ல என்பன பன்மை குறியாது நின்றன
வென்னலுமாம். வேதங்களாலும் அறிய வொண்ணாது கரந்திருத்தலின்
‘வஞ்சவெளி’ என்றார்; மாணிக்க வாசகப்பெருமான் ‘ஒளிர்குஞ்சோரன்’
எனத் திருவாய்மலர்ந்தருளியதுங் காண்க. இறைவன் இங்ஙனம் மறைகளாலும்
அறிதற்கரியனாயினும் அடியார்க்கு மிக எளியனாவன் என்பதனை
விளக்குவார் ‘கூடல், மறுகிற் பாதங்கணோவ வளையிந்தனாதி பகர்வார்’
என்றார், ‘எத்தனையும் அரிய நீ எளியையானாய்’ என்றார்
திருநாவுக்கரசரும்; இது கூடற் காண்ட மாதலும், இக்காண்டத்து
முதற்படலம் கூடலாயின வரலாறுணர்த்தலும் கருதிக் ‘கூடல்’ எனப் பெயர்
கூறினார். பாதங்கள் நோவ என்றது ஆராமை மேலிட்டுக் கூறியவாறு. நடந்து
என்பது சொல்லெச்சம். ஆதி என்றமையால் மாணிக்கமும் பரியும் விற்றல்
கொள்க. இந்தனாதி, வடமொழி : நெடிற்சந்தி. ஆயுமவர் வெளியென்ப என முடிக்க. (1)

சிற்சத்தி

[அறுசீரடியாசிரிய விருத்தம்]

திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை யிடக்கண் ஞானப் பெருமக ணுதற்க ணாகப் பெற்றுவான் செல்வங் கல்வி அருமைவீ டளிப்பாள் யாவ ளவளுயிர்த் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணி யொசிந்தபூங் கொம்பி னின்றாள்.

      (இ - ள்.) திருமகள் வலக்கண் - பூமகளை வலக்கண்ணும், வாக்கின்
சேயிழை இடக்கண் - நாமகளை இடக்கண்ணும், ஞானப்பெருமகள் நுதல்
கண் ஆகப் பெற்று - ஞானக்கோமகளை நெற்றிக் கண்ணுமாகப் பெற்று,
வான் செல்வம் கல்வி அருமை வீடு அளிப்பான் யாவள் - சிறந்த
செல்வத்தையும் கல்வியையும் எய்துதற்கரிய வீடுபேற்றையும் அருள்பவள்
யாவள், அவள் - அம்முதல்வியே, உயிர்த்துணைவன் காண - தன்
உயிர்த்துணைவன் கண்டவளவில், ஒரு முலை மறைந்து - ஒரு கொங்கை
மறையப்பெற்று, நாணி - நாணுற்று, ஒசிந்த பூங்கொம் பின் நின்றாள் -
துவண்ட பூங்கொம்புபோல நின்றாளாவள்.