II


240திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     தன்னது, னகரம் விரித்தல். கொண்டது - கொண்ட திருமேனியை
யுடைய. இறைவன் சுதந்தர னாகலின் அவன் கொள்ளும் திருமேனி அவனது
இச்சையாலாவதென்க;

"நிறுத்துவ னினைந்த மேனி நின்மல னருளி னாலே"

எனச் சிவஞான சித்தியார் கூறுதல் காண்க. (14)

இருட்டதும்பு கோதையார்
மருட்டதும்பு வினைகெட
அருட்டதும்பு கண்ணினாற்
றெருட்டதும்பி நோக்கினான்.

     (இ - ள்.) இருள் ததும்பு கோதையார் - இருள் மிக்க கூந்தலை
யுடைய அப் பெண்களின், மருள் ததும்பு வினைகெட - அஞ்ஞானத்தால்
வந்த பெருந்தீவினை கெடுமாறு, அருள் ததும்பு கண்ணினால் - அருள்
நிறைந்த திருவிழியால், தெருள் ததும்ப நோக்கினான் - ஞானமிக நோக்கி
யருளினான்.

     ததும்புதல் - நிறைதல். மருள் - அஞ்ஞானம். தெருள் - ஞானம்.
இசைப் பொருட்டு நான்கடியிலும் டகரம் விரிந்து நின்றது. (15)

அடிகளோக்க வம்புயங்
கடிகொணெய்தல் காந்தள்பைங்
கொடிகொண்முல்லை குமுதமேற்
படியப்பூத்த பாறையே.

     (இ - ள்.) அடிகள் நோக்க - இறைவன் அங்ஙனம் நோக்கியருள,
பாறை - அக் கற்பாறைகள், அம்புயம் - தாமரை மலர்களையும், கடி கொள்
நெய்தல் - மணத்தினைக் கொண்ட நெய்தல் மலர்களையும், காந்தள் -
காந்தட் பூக்களையும், பைங்கொடி கொள் முல்லை - பசிய கொடியிற்
பொருந்திய முல்லையரும்புகளையும், குமுதம் - ஆம்பல் மலர்களையும்,
மேல் படியப் பூத்த - தம்மேற் பொருந்துமாறு பூத்தன.

     அடிகள் நோக்க பாறை பூத்தன வென்க. அம்புயம் முதலியவற்றை
எழுவாயாக்கி, பாறையின்மேற் படியப் பூத்தன என்னலுமாம். கல்லுரு நீங்கிப்
பெண்ணுரு வெய்தினமையை இங்ஙனங் கூறினார். அம்புயம் முதலிய
உவமைகளால் முகம், கண், கை, பல், வாய் என்னும் பொருள்களை
இலக்கணையாகச் சொல்லினமையின் இச் செய்யுள் உருவகவுயர்வு
நவிற்சியணி.
(16)

தாக்கவேத கத்திரும்
பாக்கமுற்ற பொன்னென
நீக்கமற்ற விருண்மல
வீக்கமற்று விட்டதே.