II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்339



மறையோர்கள் பின்னும் பழிமேலிடு வண்ண நோக்கி
இறையோ யிதுநான் முகன்சென்னி யிறுத்த கூடல்
அறவேதியனைத் தினமாயிரத் தெண்காற் சூழல்
உறவே யொழிக்கப் படு* மின்ன முரைப்பக் கேட்டி.

     (இ - ள்.) பின்னும் பழி மேலிடும் வண்ணம் - மீண்டும் கொலைப்
பாவம் ஓங்கி வளருந் தன்மையை, மறையோர்கள் நோக்கி - அந்தணர்கள்
கண்டு, இறையோய் - மன்னனே, இது - இந்தக் கொலைப்பாவம், நான்
முகன் சென்னி இறுத்த - பிரமன் தலையைக் கிள்ளிய, கூடல் அறவேதியனை
- மதுரையில் வீற்றிருக்கும் அறிவுருவினனாகிய சோம சுந்தரக் கடவுளை,
தினம் ஆயிரத்து எண்கால் சூழ உற ஒழிக்கப்படும் - நாள்தோறும்
ஆயிரத்தெட்டு முறை வலம் வருதலால் ஒழிக்கப்படும்; இன்னம் உரைப்பக்
கேட்டி - இன்னுஞ் சொல்லக் கேட்பாயாக.

     பிரமச்சாயை ஒழிதற்குப் பிரமன் சென்னியைக் கிள்ளிய பெருமானை
வணங்குதலே ஏற்புடைத்தென்றார் என்க. (11)

ஆனா விரத நெறியாலிரண் டைந்து வைகல்
வானா டனையம் முறையால் வலஞ் செய்து வந்தாய்
ஆனா லதற்கு வழிகாட்டுமென் றையர் கூறப்
போனா னரசன் புனிதன்றிருக் கோயில் புக்கான்.

     (இ - ள்.) ஆனா விரத நெறியால் - நீங்காத நோன்பின் வழி நின்று,
இரண்டு ஐந்து வைகல் - பத்து நாட்கள், வான் நாடனை - சிவலோக
நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை, அம்முறையால் வலம் செய்து வந்தாய்
ஆனால் - மேற்கூறிய எண்ணின்படி வலம் வருவாயாயின், அதற்கு வழி
காட்டும் என்று - அவன் அக்கொலைப்பாவம் நீங்கும் நெறியைக்
காட்டியருளுமென்று, ஐயர்கூற - அவ்வந்தணர்கள் சொல்ல, அரசன் போனான்
- வரகுண மன்னன் சென்று, புனிதன் திருக்கோயில் புக்கான் - இறைவனது
திருக்கோயிலையடைந்தான்.

     போனான் : முற்றெச்சம். (12)

விழியா யிரத்தோன் பழிதீர்த்தனை வேதி யன்றன்
கழியாத மாபா தகந்தீர்த்தனை கௌவைக் கங்கைச்
சுழியா றலைக்குஞ் சடையாயெனைத் தொட்ட லைக்கும்
பழியா னதுந்தீர்த் தருளென்று பணிந்து வீழ்ந்தான்.

     (இ - ள்.) கௌவைக் கங்கைச் சுழி ஆறு அலைக்கும் சடையாய் -
ஒலியினையுடைய கங்கையாகிய சுழித்தல் பொருந்திய ஆறு அலைக்கின்ற
சடையையுடையவனே, விழி ஆயிரத்தோன்பழி தீர்த்தனை - ஆயிரங்
கண்களையுடைய இந்திரன் பழியை நீக்கியருளின; வேதியன் தன் கழியாத
மாபாதகம் தீர்த்தனை - ஓர் மறையோனுடைய (எவ்வாற்றானும்) நீங்காத


     (பா - ம்.) * ஒழியப்படும்.