பாயிரப் படலம்
 
271.
முந்து ஒரு காலத்தின் மூ உலகம் தன்னில்
வந்திடும் உயிர் செய்த வல்வினை அதனாலே
அந்தம் இல் மறை எல்லாம் அடி தலை தடுமாறிச்
சிந்திட முனிவோரும் தேவரும் மருள் உற்றார்.
1
   
272.
நெற்றியில் விழிகொண்ட நிமலன் அது அருளாலே
அற்றம் இல் மறை எல்லாம் ஆதியின் வரலாலே
மற்று அதன் இயல்பு எல்லாம் மயல் அறவே நாடித்
தெற்று என எவராலும் செப்புவது அரிதாம் ஆல்.
2
   
273.
ஆனது ஒர் பொழுதின் கண் அமரரும் முனிவோரும்
மா நிலம் மிசை வைகும் மாக்களும் இறை உள்ள
ஞானம் அது இலர் ஆகி நவின் மறை நெறி மாற்றித்
தீ நெறி பல ஆற்றிப் பனுவல்கள் சில செய்தார்.
3
   
274.
அவனியில் அறம் எல்லாம் அருவினை என நீக்கிப்
பவ நெறி அறம் என்றே பற் பலரும் செய்யப்
புவனம் அது உண்டோனும் போதனும் அது காணாச்
சிவன் அருளால் அன்றித் தீர் கிலது இது என்றார்.
4
   
275.
இன்ன பான்மையை எண்ணி இருவரும்
பொன்னி நாடு புரந்திடும் மன்னனும்
துன்னு தேவரும் சுற்றினர் வந்திடக்
கன்னி பாகன் கயிலையில் ஏகினார்.
5
   
276.
அந்தில் செம்பொன் அணி மணிக் கோயிலின்
முந்து கோபுர முன் கடையில் புகா
நந்தி தேவரை நண்பொடு கண்டுநீர்
எந்தை யார்க்கு எம் வரவு இசைப்பீர் என்றார்.
6
   
277.
தேவ தேவன் திருமுன்னர் ஏகியே
காவல் நந்திக் கடவுள் பணிந்து எழீஇப்
பூவை வண்ணனும் போதனும் புங்கவர்
ஏவரும் செறிந்து எய்தினர் ஈண்டு என்றான்.
7
   
278.
என்ற காலையின் யாரையும் இவ் விடைக்
கொன்றை சூடி கொணர்க எனச் செப்பலும்
நன்றதே என நந்தி வணங்கியே
சென்று மான் முதல் தேவரை எய்தினான்.
8
   
279.
செம்மை போகிய சிந்தையரைக் கெழீஇ
எம்மை ஆள் உடையான் அருள் எய்தினான்
உம்மை அங்கு வர நுவன்றான் இனி
வம்மின் நீர் என வல்லையில் கூவினான்.
9
   
280.
விளித்த காலை விழி வழி போத நீர்
துளிக்க நின்று தொழுது கவல் ஓரீஇக்
களிக்கு நெஞ்சினர் கண் நுதல் எந்தை முன்
அளித்தி யால் என்று அவன் உடன் ஏகினார்.
10
   
281.
புடை கடந்திடு பூதர்கள் போற்றும் அத்
தடை கடந்து தடுப்பரும் வேனிலான்
படை கடந்தவர் பாற்படும் எண் இலாக்
கடை கடந்து பின் அண்ணலைக் கண்டனர்.
11
   
282.
முன்னர் எய்தித் தொழுது முறை முறை
சென்னி தாழ இறைஞ்சினர் சேண் இடைத்
துன்னு மாதரம் தூண்ட வந்து அண்மினார்
உன்னும் அன்பின் உததயில் ஆழ்ந்து உளார்.
12
   
283.
ஈர்க்கும் பாசத்து இருவினை இன்றொடே
தீர்க்கின்றாம் இவண் என்னும் செருக்கினால்
தூர்க்கின்றார் மலர் சோதி பொன் தாள்மிசை
போர்க்கின்றார் மெய்ப் பொடிப்பு எனும் போர்வையே.
13
   
284.
நேய முந்த நெடும் பகல் நீங்கிய
தாய் எதிர்ந்திடும் கன்றின் தகைமையாய்த்
தூய வந்தனை யொடு தொழும் அவர்
வாயின் வந்தன வந்தன போற்றினார்.
14
   
285.
அண்ணல் ஈசன் வடிவை அகந்தனில்
எண்ணின் எல்லை இல் இன்பம் பயக்குமால்
கண்ணின் நேர் வரு காட்சியர் ஆயிடின்
ஒண்ணுமோ அவர் தம் செயல் ஓதவே.
15
   
286.
மேலை வானவர் வேந்து ஒடு எம்பிரான்
சீல மேய திருமுன்பு மேவினார்
மாலும் நான் முகத்து அண்ணலும் வந்து இரு
பாலும் ஆகிப் பரவினர் என்பவே.
16
   
287.
அம்புய ஆசனம் உடை அண்ணல் ஆழியான்
உம்ப ரோடு இத்திறம் உற்றுப் போற்று உழிச்
செம் பொன் நேர் முடி மிசைத் திங்கள் சேர்த்திய
எம்பிரான் அருள் புரிந்து இனைய கூறுவான்.
17
   
288.
ஒன்று ஒரு குறைகளும் உறாத பான்மையால்
நன்று நும் அரசியல் நடந்தவோ எனாக்
குன்றவில் உடைய ஓர் குழகன் செப்பலும்
நின்ற மால் தொழுது இவை நெறியில் கூறுவான்.
18
   
289.
ஆதியில் அயன் படைப்பு அல்லது என் அருள்
மேதியன் அடுதொழில் ஏனை விண்ணவர்
ஏதம் இல் செயன் முறை யாவும் கண் நுதல்
நாத நின் அருளினால் நடந்த நன்று அரோ.
19
   
290.
கருமணி மிடறு உடைக் கடவுள் இன்னும் நீ
அருளுவது ஒன்று உளது அதனைக் கூறுவன்
இரு நில மேலவர் யாரும் நின் தனைப்
பரம் என உணர்கிலர் மாயைப் பான்மை ஆல்.
20
   
291.
நின் தனது உரிமையை நிகழ்த்தி மேன்மை ஆல்
என்றனை அயன்றனை எண்ணுவார் சிலர்
அன்றியும் நின் உடன் அநேகர் தம்மையும்
ஒன்று எனவே நினைந்து உரைக்கின்றார் சிலர்.
21
   
292.
காலமும் கருமமும் கடந்தது ஓர் பொருள்
மூலம் உண்டோ என மொழிகின்றார் சிலர்
மேலும் உண்டோ சில விளம்ப விஞ்சையின்
பால் உறும் உணர்ச்சியே பரம் என்பார் சிலர்.
22
   
293.
ஆற்று உறு புனல் படிந்து அழுக்கு நீக்கலார்
சேற்று இடை வீழ்ந்து என மறைகள் செப்பிய
நீற்றோடு கண்டிகை நீக்கி வன்மையால்
வீற்று ஒரு குறிகொடு மேவுவார் சிலர்.
23
   
294.
காமமோடு உவகையும் களிப்பு நல்கலால்
வாமமே பொருள் என மதிக்கின்றார் சிலர்
தோம் இலா மூவகைத் தொழிலும் வேள்வியும்
ஏமம் ஆர் பொருள் என இயம்புவார் சிலர்.
24
   
295.
உரை இசை ஆதி ஆம் ஒலிகள் யாவையும்
பிரமம் அதே எனப் பேசுவார் சிலர்
அரிது செய் நோன்பினால் அடைந்த சித்திகள்
பொருள் பிறிது இலை எனப் புகல் கின்றார் சிலர்.
25
   
296.
பெருமை கொள் குலம் தொறும் பிறந்து செய்திடும்
விரதமும் சீலமும் வினை கண் மாற்றிட
வருகலும் பிறவுமாய் அங்கம் விட்டு உயிர்
பரவுதல் வீடு என பகருவார் சிலர்.
26
   
297.
அறிந்து அறிந்து உயிர் தொறும் அது அதுவாகியே
பிறந்து இறந்து உணர்வு எலாம் பெற்று நோன்பொடு
துறந்து கொன்று இட்டன துய்த்துக் கந்த மற்று
இறந்திடல் முத்தி ஆம் என் கின்றார் சிலர்.
27
   
298.
நல் நல மாதரை நண்ணும் இன்பமே
உன்னரும் முத்தி என்று உட்கொள்வார் சிலர்
இன்னன துறை தொறும் எய்தி யாவரும்
துன் அரும் பிறவியுள் துன்பம் நீங்கலார்.
28
   
299.
இறந்தன வரம்பு உலகு எவரும் வேத நூல்
மறந்தனர் பவ நெறி மல்கி நாள்தொறும்
சிறந்தன அவை உயிர் செய்த தொல்வினை
அறிந்து அருளைய நீ அமைத்த வாயினும்.
29
   
300.
அங்கு அவர் போதம் உற்று ஆசொரீஇ மனச்
சங்கையும் அகன்று நின் சரணமே உறப்
புங்கவ சிறிது அருள் புரிய வேண்டும் ஆல்
எம் கடம் பொருட்டு என இறைவன் கூறுவான்.
30
   
301.
இனிது ஒரு திறம் அதற்கு இசைத்தும் ஆர் உயிர்
அனையவும் பரப்புவன் ஆதலால் அவர்
வினை அறு நெறிமையால் வேண்டு கிற்றி நின்
மனன் உறும் எண்ணினை மறுத்தி மாசு இலாய்.
31
   
302.
காதலின் அருளுமுன் கலையின் பன்மையில்
கோது அறும் ஓர் கலை கொண்டு நேமி சூழ்
மேதினி அதன் இடை வியாதன் என்றிடு
போதக முனி எனப் போந்து வைகுதி.
32
   
303.
போந்து அவண் இருந்த பின் புகர் இலா மறை
ஆய்ந்திடின் வந்திடும் அவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபினோர்க்கு எலாம்
ஈந்தனை அவர் அகத்து இருளை நீத்தி ஆல்.
33
   
304.
அன்னது ஓர் மறையினை அறிந்து மையமா
உன்னிய நிலையினர் உள்ளம் தேறவும்
மன்னவர் அல்லவர் மரபிற்று ஏரவும்
இன்னம் ஓர் மறை உள இதுவும் கேண்மதி.
34
   
305.
ஏற்றமது ஆகிய மறைக்கும் யாம் முனம்
சாற்றிய ஆகமம் தனக்கும் ஆங்கு அது
வீற்று உற வருவதும் அன்று மேன்மை ஆல்
ஆற்றவும் நமது இயல் அறையும் நீரதே.
35
   
306.
என் பெயர் அதற்கு எனில் இனிது தேர்ந்து உளோர்
துன்பம் அது அகற்றிடும் தொல் புராணம் ஆம்
ஒன் பதிற்று இரு வகை உண்டு அவற்றினை
அன்பு உடை நந்தி முன் அறியக் கூறினேம்.
36
   
307.
ஆதியில் நந்தி பால் அளித்த தொன்மை சேர்
காதைகள் யாவையும் கருணையால் அவன்
கோது அற உணர் சனற் குமாரற்கு ஈந்தனன்
நீதியொடு அவன் இடை நிலத்தில் கேட்டி ஆல்.
37
   
308.
என்னலும் நன்று என இசைந்து தாழ்ந்து எழீஇ
முன்னவன் விடை கொடு முளிரியான் முதல்
துன்னிய வானவர் தொகை யொடு ஏகியே
தன் உலகத்தின் மால் சார்தல் மேயினான்.
38
   
309.
சார்தலும் அயன் தனைச் சதம் அகத்தனை
ஆர் தரும் அமரரை அருளின் அவ் அவர்
சேர் தரு புரம் தொறும் செல்லற்கு ஏவியே
கார் தரு மெய்யுடைக் கடவுள் வைகினான்.
39
   
310.
திருவொடு மருவி யோன் செறிவுற்று எங்கணும்
பரவுறும் இயல்பெறு பகவன் ஆதலால்
தரணியில் அருளினால் தனது சத்தியில்
ஒரு கலை தன் உடன் உதிக்க உன்னியே.
40
   
311.
பங்கயத்து அயன் வழிப் பராசரப் பெயர்த்
துங்க நன் முனி பனித் தூவ எல்லையில்
கங்கையில் யோசனத் கந்தியோடு உற
அங்கு அவர் தம் இடை அவதரித்தனன்.
41
   
312.
மற்று அவன் வதரிகா வனத்தில் வைகியே
அற்றம் இல் வாதரா யணன் எனும் பெயர்
பெற்றனன் ஆகி எம்பிரான் தன் ஆணையால்
கற்றிடாது உணர்ந்தனன் கரை இல் வேதமே.
42
   
313.
மோனகம் முற்றிய முனிவர் மேலவன்
தான் உணர் மறை எனும் தரங்க வேலையில்
ஆனது ஓர் பொருளினை அறிஞர் பெற்றிடத்
தூ நெறி கொண்ட நால் துறை செய்தான் அரோ.
43
   
314.
கரை அறு வேதம் ஆம் கடலை நான்க வாய்ப்
பிரிநிலை ஆக்கியே நிறுவு பெற்றியால்
புரை தவிர் முனிவரன் புகழ் வியாதன் என்று
ஒரு பெயர் பெற்றனன் உலகம் போற்றவே.
44
   
315.
விரவிய மறை தெரி வியாதனாம் அவன்
குரவனே ஆம் சனற் குமாரன் தன் இடை
இருவகை ஒன்பதாய் இயல் புராணமும்
மரபொடு கேட்டவை மனத்துள் கொண்டபின்.
45
   
316.
ஏத்திடு சுருதிகள் இசைக்கும் மாண்பொருள்
மாத்திரைப் படாவெனா மாசு இல் காட்சியர்
பார்த்து உணர் பான்மையால் பல வகைப் படச்
சூத்திரம் ஆனவும் சொற்று வைகினான்.
46
   
317.
மயல் அறு பயிலரே வைசம் பாயனர்
சயிமினி சுமந்து வாம் தவத்தர் நால்வர்க்கும்
வியல் இருக்கு ஆதியாம் வேதம் நான்கையும்
உயர் உறு தவத்தினான் முறையின் ஓதினான்.
47
   
318.
தோல் வரு மறைகளின் சூத்திரத்தையும்
மேல் வரு சயிமினி முதல மேதையர்
நால்வரும் உணர் இய நவின்று நல்கினான்
ஆல் வரு கடவுளை அனைய தன்மையான்.
48
   
319.
மெய்ம் முனி அனையரை விளித்து நீர் இனி
இம்மறை இயல்பினோர் எவர்க்கும் ஈம் என
அம்முறை நால்வரும் அனைய வேத நூல்
செம்மை யொடு அளித்தனர் சிறந்து உளோர்க்கு எலாம்.
49
   
320.
அன்ன தோர் முனிவரன் அதற்குப் பின்னரே
பன்னரும் தொகையினால் பதினெண் பான்மையாய்
முன் உறு புராண நூல் முழுதும் முற்றிய
இன்னருள் நிலைமையால் எனக்கு நல்கினான்.
50
   
321.
வேதம் அது உணர்தரு வியாத மா முனி
காதலன் ஆம் எனைக் கருணை செய்து இவை
ஓதுதி யாவரும் உணர என்றனன்
ஆதலின் உலகினில் அவற்றைக் கூறினேன்.
51
   
322.
காமரு தண் துழாய்க் கண்ணன் ஆகிய
மா முனி அருளினால் மறைகள் யாவையும்
தோமறு புராண நூல் தொகுதி யாவையும்
நேமி கொள் உலகு எலாம் நிலவி உற்றவே.
52
   
323.
நம்பனார்க்கு ஒருபது நாரணற்கு நான்
அம்புயத்தவற்கு இரண்டு அலரி அங்கியாம்
உம்பர் வான் சுடர்களுக்கு ஓர் ஒன்று என்பர் ஆல்
இம்பரில் இசைக்கும் அப் புராணத்து எல்லையே.
53
   
324.
எதிர் இல் சைவமே பவிடியம் மார்க்கண்டம் இலிங்கம்
மதிகொள் காந்த நல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவை சிவபுராணம்
பதும மேலவன் புராணம் ஆம் பிரமமே பதுமம்.
54
   
325.
கருது காருடம் நாரதம் விண்டு பாகவதம்
அரிகதைப் பெயர் ஆக்கினேன் அம்ம அழற் கதையாம்
இரவி தன் கதை பிரம கைவர்த்தம் ஆம் இவை தாம்
தெரியும் ஒன்பதிற்று இருவகைப் புராணம் ஆம் திறனே.
55
   
326.
இத் திறத்தவாம் புராணங்கள் ஒன்பதிற்று இரண்டின்
அத்தனுக்கு உள புராணம் ஈர் ஐந்தினில் அடல் வேல்
கைத் தலத்தவன் காந்தத்துள் அன்னவன் கதையை
மெய்த் தொகைப் பட உரைப்பன் என்றே முனிவிளம்பும்.
56
   
327.
பூ மிசை இருந்த புத்தேள் புரிந்திடு புதல்வர் தம்முள்
ஏமுறு தக்கன் ஈன்ற இருந் தனிக் குமரி ஆன
தீமையை அகற்ற அம்மை சிந்தை செய்து இமைய
                                    மன்னன்
மா மகளாகி நோற்று வைகினாள் வைகு நாளில்.
57
   
328.
அவுணர்களோடு சூரன் அவனிமேல் தோன்றி நோற்றுச்
சிவன் வரம் அளிக்கப் பெற்றுத் தேவர் யாவரையும்
                                      வென்று
புவிதனில் உவரி தன்னில் புங்கவர் புனைவன் செய்த
தவல் அரும் மகேந்திரத்தில் வைகினான் தானை சூழ.
58
   
329.
அனையதோர் காலை வெள்ளி அடுக்கலில் சனகனாதி
முனிவரர் தமக்குத் தொல்லை மூவகைப் பதமும் கூறி
இனியது ஓர் ஞானபோதம் இத்திறம் என்று மோனத்
தனிநிலை அதனைக் காட்டித் தற்பரன் இருந்தான்
                                     அன்றே.
59
   
330.
வீற்று இருந்து அருளும் எல்லை வெய்ய சூர் முதலா                                     உள்ளோர்
ஆற்றவும் தீங்கு செய்தே அமரர்கள் சிலரைப் பற்றிப்
போற்றிடும் சிறையில் உய்ப்பப் புரந்தரன் முதலா
                                    உள்ளோர்
மாற்றரும் துயரின் மூழ்கி மறைந்தனர் ஆகி வைகி.
60
   
331.
சங்கரன் மோனத் தன்மை சதுர் முகற்கு உரைப்ப                                     அன்னான்
வெம் கணை வேளை உய்ப்ப விழித்தவன் புரம்
                                     நீறாக்கிப்
பங்கயன் முதலா உள்ளோர் பலரும் வந்து இரங்கிப்
                                     போற்ற
அங்கு உறை மோனம் நீங்கி அவர்க்கு அருள்
                              செய்தான் ஐயன்.
61
   
332.
ஓர் எழுமுனிவர் தம்மை ஓங்கலுக்கு இறைவன் தன்பால்
பேர் அருள் முறையால் தூண்டி பெருமணம் பேசுவித்துப்
பார் அறு நோன்பின் மிக்க பராபரை அன்பு தேர்ந்து
கார் அணி கண்டத்து எந்தை கணங்களோடு இமையம்
                                        புக்கான்.
62
   
333.
புடை அகல் இமையம் தன்னில் புவனங்கள் முழுதும்
                                         ஈண்ட
வட புவி தாழ்ந்து தென்பால் உயர்தலும் மலயம் தன்னில்
கடமுனி தன்னை யேவிக் கவுரியை மணந்து பின்னர்
அடன் மத வேளை நல்கி அநங்கனே ஆகச் செய்தான்.
63
   
334.
மன் புனை கயிலை தன்னில் மலை மகளோடு மீண்டு
முன்பு என அமர்ந்து நாதன் முழுது உலகு உயிர்கட்கு
                                        எல்லாம்
இன்பமும் புணர்ப்பும் நல்கி இமையவர் யாரும் வேண்டத்
தன் பெரு நுதல் கண் தீயால் சரவண பவனைத் தந்தான்.
64
   
335.
அந்தம் இல் விளையாட்டு உள்ள அறுமுகக் கடவுள்                                     தன்னைத்
தந்திடும் எல்லை அன்னோன் தானை அம்தலைவராக
முந்திய விறல் சேர் மொய்ம்பன் முதலிய விலக்கத்து
                                    ஒன்பான்
நந்தி தன் கணத்தினோரை நங்கைபால் உதிப்பச்
                                    செய்தான்.
65
   
336.
அண்ணல் அம் குமரப் புத்தேள் அலகுஇலா ஆடல்
                                     செய்து
மண்ணுறு கடலும் வெற்பும் வானமும் திரிபு செய்து
துண் எனக் குழவியே போல் தோன்றிட அதனை
                                     நோக்கி
விண்ணவர் யாரும் சூழ்ந்து வெம் சமர் புரிந்து நின்றார்.
66
   
337.
ஆர் அமர் செய்து உளாரை அட்டு உடன் உயிரும்
                                நல்கிப்
பேர் உரு நிலைமை காட்டிப் பெறல் அரும் காட்சி
                                நல்கி
நாரதன் மகத்தில் தோன்றி நடந்தது ஓர் செச்சை
                                தன்னை
ஊர்தியது ஆகக் கொண்டே ஊர்ந்தனன் ஒப்பு
                                இலாதான்.
67
   
338.
மறை முதல் குடிலை தன்னின் மாண்பொருள் முறை
                                     கடாவி
வெறிகமழ் கமலப் புத்தேள் விடை கொடான் மயங்கக்
                                     கண்டு
சிறை இடை அவனை வைத்துச் செகம் எலாம் அளித்துத்
                                     தாதை
குறை இரந்திடவே விட்டுக் குறு முனிக்கு அதனை
                                     ஈந்தான்.
68
   
339.
ஆவது ஓர் காலை ஈசன் அறுமுகப் பரனை நோக்கி
ஏவரும் முடிக்க ஒண்ணாது இருந்த சூர் முதலோர்
                                     தம்பால்
மேவினை பொருது வென்று விரிஞ்சனே முதலா உள்ள
தேவர் தம் இன்னல் நீக்கிச் செல்லுதி குமர என்றான்.
69
   
340.
விராவிய இலக்கத்து ஒன்பான் வீரரை வெய்ய பூதர்
இராயிர வெள்ளத் தோரை இகல் படை மான்தேரோடு
பராபரன் உதவித் தூண்டப் பன்னிரு புயத்தன் ஏகித்
தராதலம் புக்கு வெற்பைத் தாரகனோடு செற்றான்.
70
   
341.
பூவினன் முதலா உள்ள புங்கவர் வழிபட்டு ஏத்தத்
தேவர் தம் கிரியின் வைகித் தென் திசை நடந்து தாதை
மேவரும் இடங்கள் போற்றி மேதகு சேய்ஞல் நண்ணி
மூஇரு முகத்தன் முக்கண் முன்னவன் படையைப்
                                      பெற்றான்.
71
   
342.
பரன் அருள் படையைப் பெற்றுப் பராசரன் சிறார் வந்து                                         ஏத்தத்
திரு அருள் புரிந்து சென்று செந்திலின் மேவிச் சூரன்
வரம் ஒடு திருவும் சீரும் வாசவன் குறையும் வானோர்
குரவனை வினவி அன்னான் கூறவே குமரன் தேர்ந்தான்.
72
   
343.
அறத்தினை உன்னி ஐயன் ஆடல் சேர் மொய்ம்பன்                                        தன்னை
உறத்தகு மரபில் தூண்டி ஒன் அலன் கருத்தை ஓர்ந்து
மறத்தொடு கடல் உள் வீர மகேந்திரம் அணுகியே தன்
புறத்து உள தானை யோரால் சூர் கிளை பொன்றச்
                                       செற்று.
73
   
344.
சீய மா முகத்தன் என்னும் செருவலான் தனையும் அட்டு
மாயையும் திருவும் சீரும் வரங்களும் பிறவு மாற்றி
ஆயிரம் இரு நால் அண்டத்து அரசனாம் சூரன் தன்னை
ஏயெனும் அளவில் வேலால் இரு துணி படுத்து நின்றான்.
74
   
345.
துணிபடு சூரன் ஓர் பால் சூட்டு வாரணமாய் ஓர்பால்
பிணி முகம் ஆகி நிற்பப் பெருந்தகை அவற்றை யூர்தி
அணி படு துவச மாக்கி அப் பகல் செந்தில் வந்து
மணி சொரி அருவி தூங்கும் வான் பரம் குன்றம்
                                   சேர்ந்தான்.
75
   
346.
தெய்வத யானை என்னும் சீர் கெழு மடந்தை தன்னை
அவ்விடை வதுவை ஆற்றி அங்ஙனம் சிலநாள் வைகி
மெய்வியன் உலகில் சென்று விண்ணவர்க்கு அரசன்
                                      ஆக்கி
எவ்வம் இல் மகுடம் சூட்டி இந்திரன் தன்னை வைத்தான்.
76
   
347.
சில்பகல் அம் கண் மேவிச் சேனையோடு அணங்கும்                                         தானும்
மல்லல் அம் கயிலை யேகி மங்கை பங்குடைய
                                     அண்ணல்
மெல் அடி வணங்கிக் கந்த வெற்பு உறை நகரின் ஏகி
எல்லையில் அருளால் வைகித் தணிகையில் எந்தை
                                      வந்தான்.
77
   
348.
சாரலின் ஓங்கு தெய்வத்தணிகை மால் வரையின் மீது
வீரம் அது உடைய வேலோன் வீற்று இருந்திடலும் அம்
                                        கண்
நாரதன் வந்து தாழ்ந்து நவை தவிர் எயின மாதின்
சீர் எழில் நலத்தைக் கூற அவள் வயின் சிந்தை
                                     வைத்தான்.
78
   
349.
வள்ளி மால் வரையில் போந்து மான் இடைப் பிறந்த                                         தெய்வக்
கிள்ளையை அடைந்து போற்றிக் கேடு இல் பல் உருவம்
                                        காட்டிக்
கள்ளமோடு ஒழுகிப் பல் நாள் கவர்ந்தனன் கொணர்ந்து
                                        பின்னர்த்
தெள்ளு சீர் வேடர் நல்கத் திருமணம் செய்து நேர்ந்தான்.
79
   
350.
செருத் தணி வரையில் வந்து சில பகல் வள்ளி
                                   தன்னோடு
அருத்தியின் மேவிப் பின்னர் அவளொடும் கந்த
                                    வெற்பின்
வரைத்தனிக் கோயில் புக்கு வான மின் பிரிவு நீக்கிக்
கருத்து உற இருவரோடும் கலந்து வீற்று இருந்தான்
                                      கந்தன்.
80
   
351.
என்று இவை அனைத்தும் சூதன் இயம்பலும் முனிவர்                                 கேளாத்
துன்றிய மகிழ்வால் சென்னி துளக்கி இங்கு இதனைப்
                                போல
ஒன்று ஒரு கதையும் கேளேம் உரைத்தனை
                                சுருக்கியாங்கள்
நன்றிதன் அகலம் கேட்க நனிபெரும் காதல்
                                கொண்டேம்.
81
   
352.
என்னவே முனிவர் ஆனோர் யாவரும் எடுத்துக் கூற
மன்னிய அருள் சேர் சூதன் மற்றவர் ஆர்வம் நோக்கி
அன்னவை சுருக்கம் இன்றி அறைந்தனன் அவ்வாறு
    
                                 ஓர்ந்து
தொல் நெறி வழாது யானும் வல்லவா தொகுத்துச்
                                     சொல்வேன்.
82