திரு கைலாசப் படலம்
 
353.
பாசம் நீக்கித் தன் பாற் படு நல்லருள்
ஈசன் நல்கும் இயல்பு என எய்தினோர்
தேசு மாற்றிச் சிறந்த தன் மெய் ஒளி
வீசு கின்றது வெள்ளி அம் குன்றமே.
1
   
354.
ஆறு சூடிய வாதி அம் பண்ணவன்
ஏறு மூரி வெள் ஏறும் அக் கண் நுதல்
நீறு சேர் தரு கோலமும் நித்தனைத்து
ஏறும் அன்பர் தம் சிந்தையும் போன்றதே.
2
   
355.
மோன நல் நிலை முற்றிய பெற்றியர்
ஞானம் ஆர் பிழம்பு அன்ன நலத்தது ஆய்
ஊன் உலாய உயிர்த் தொகை மாசு ஒரீஇத்
தான் எலாம் செறிந்து என்னவும் சான்றதே.
3
   
356.
கானம் ஆர்ந்த கடுக்கை நல் கூவிளைத்
தேனவாம் பொழில் திண் சிகரத்து இடை
வான ஆறு வருதலின் மாசு இலா
ஞான நாயகன் போல நணியதே.
4
   
357.
தண் நறும் துள வாற்புனை தார் முடிப்
பண்ணவன் கண் படுத்திடும் பால் கடல்
கண்நுதற்கும் ஒர் காமரு பீடமாய்
நண்ணுகின்றது போலும் நலத்ததே.
5
   
358.
பொதியும் இன் அமுதோடு பொருந்துவ
கதிரின் மிக்க கறை அறு காட்சிய
மதியம் ஆயிரம் கோடி மணந்து தாம்
உதய மானது போன்றது அவ் ஒண்கிரி.
6
   
359.
நெற்றி மேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர்
பொன் தடம் புயம் நான்கும் பொருந்துறப்
பெற்ற எம்மான் அருளால் பிரம்பு ஒன்று கைப்
பற்று நந்தி பரிவொடு காப்பது.
7
   
360.
புரந்தரன் முதல் ஆகிய புங்கவர்
வரம்பின் மாதவர் மாசு அறு காட்சியர்
நிரந்த பூத கணவர் நிரந்தரம்
பரிந்து போற்றிப் பயில்வதம் மால் வரை.
8
   
361.
மின் அரம்பையர் ஆடலும் விஞ்சையர்
கின்னரம் பயில் பாடலும் கீழ்த்திசை
மன்னன் ஆதியர் வாழ்த்தும் அவ் வானவர்
இன்னியங்களும் எங்கணும் ஆர்ப்பது.
9
   
362.
கீண் நிலா உறும் உலகெலாம் நீங்கியே கீழ் போய்ச்
சேண் நிலா உறுபதம் எலாம் உருவி மீச் சென்று
மாண் நிலா உறும் அண்டத்தின் அடி முடி மருவத்
தாண்உவாய் உலகு இறுதியின் நிற்பதச் சயிலம்.
10
   
363.
மாடு சூழ் தரு மேருவே ஆதி ஆம் வரைகள்
பாடு சேரினும் உலகு எலாம் அழியினும் பரந்து
கூடும் அண்டங்கள் குலையினும் கொன்றை வேணியன்
                                        போல்
கேடு இலாமலே அமர்வது கயிலை அம் கிரியே.
11
   
364.
நலம் வரும் கலை மதியமும் இரவியும் நாகர்
குலம் வரும் தனுக் குறையலா மற்றைய கோளும்
அலமரும் சுடர் உடுக்களும் அமரரும் பிறரும்
வலம் வரும் படி இருப்பது கயிலைமால் வரையே.
12
   
365.
ஏற்றம் மேருவே ஆதியாம் வரைகள் ஏழ் வகையால்
சாற்றும் நேமிகள் ஆழிஅம் கிரி பெரும் சலதி
நால் திசைக் கணும் நொச்சி போல் சூழ்தர நடுவண்
வீற்று இருப்பது கயிலை ஆகிய தனி வெற்பு.
13
   
366.
படி எலாம் உண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டு ஓர்
அடியினால் அகப்படுத்தியும் இடந்து முற்று அருளும்
நெடிய மாயனும் உலகிறும் எல்லையில் நிமலன்
வடிவமே எனக் காணுதற்கு அரிய தவ் வரையே.
14
   
367.
அன்னது ஓர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல்                                       கொண்ட
நன் நெடும் சிமயத்து ஓங்கல் நவை ஒரீஇ நண்ணிற்று
                                      என்னக்
கன்னியும் காப்பு மேவிக் கதிர் மணிக் கற்றை சுற்றப்
பொன் நெடும் கோயில் ஒன்று பொலிவொடும்
                           பொருந்திற்று அன்றே.
15
   
368.
திணி கதிர் ஆரம் தன்னில் சிறந்த அச் சிரத்தில் செக்கர்
மணி தனில் முழு நீலத்தின் மற்றைய வெறுக்கை தன்னில்
பணிபட அருளால் தானே பலித்திடு சிகரம் ஆதி
அணியினுக்கு அணியாய் மல்கும் ஆலயச் சூழல் எங்கும்.
16
   
369.
என்றும் ஈறு என்பது இன்றி இருந்திடும் கயிலை
                                     வெற்பில்
பொன் திகழ் நகரம் தன் உள் பொருவிலாக் கோளும்
                                     நாளும்
துன்றிய தன்மைத்து என்னத் தூர்மணிக் கதிர்கள் சூழ
மன்று அமர் உறையுள் ஒன்று வனப்பொடு வைகிற்று
                                    அன்றே.
17
   
370.
சோதி சேரும் அத் தூ மணி மண்டபத்து
ஆதி ஆன அரி அணை உம்பரில்
காதல் ஆகும் கவுரி ஒர் பாங்கு உற
வேத நாயகன் வீற்று இருந்தனர் அரோ.
18
   
371.
படு கொண்ட பெருந்தவப் பெற்றியோர்
தேடுகின்ற சிறப்பு உடைத் தாம் புகழ்
நாடு தும்புரு நாரதர் விஞ்சையர்
பாடுகின்றனர் பாணியின் பால் பட.
19
   
372.
அதிகன் வேணியிலார் தரு கங்கையை
விதிபுரந்தரன் விண்டு உலகத்து உள
நதிகள் ஆழ்ந்தென நன்னயத்து ஏவல் செய்
கதியினோர்கள் கவரிகள் வீசினார்.
20
   
373.
சீல வட்ட முடிப் பிறை தேடுவான்
ஞால வட்டத்து எழு தரு நாகர் போல்
ஏல வட்ட முகத்தருக எங்கணும்
ஆல வட்டம் அசைத்தனர் அன்பினோர்.
21
   
374.
ஆதி தன் அருள் எய்தி அவன் திருப்
பாத தாமரை சூடியப் பண்ணவன்
கோது இலாத திரு உருக் கொண்டு உளோர்
பூதர் ஆதியர் போற்றி முன் ஈண்டினார்.
22