காமதகனப் படலம்
 
492.
இந்திரன் வானவர் ஈட்டம் ஒடு ஏகி
முந்து உறு கஞ்ச முகட்டு இடை உற்றோன்
ஐந்திறன் ஆகிய ஆசுக வில் வேள்
வந்திடு மாறு மனத்தில் நினைந்தான்.
1
   
493.
நினைந்திடு கின்றுழி நீல் நிற மாயோன்
முனந் தருகின்ற முரண் தகு வில்வேள்
மனம் தனில் உன்னும் மலர்ப் பகவன் முன்
இனம் தரு சூழல் ஒடு இம் என வந்தான்.
2
   
494.
மா மறை அண்ணல் முன் வந்து பராவித்
தாமரை நேர் தரு தாள் தொழுது என்னை
நீ மனம் மீது நினைந்தது என்னாக்
காமன் வினவ அயன் கழற உற்றான்.
3
   
495.
கங்கை மிலைச்சிய கண் நுதல் வெற்பின்
மங்கையை மேவ நின் வாளிகள் டூவி
அங்கு உறை மோனம் அகற்றினை இன்னே
எங்கள் பொருட்டினில் ஏகுதி என்றான்.
4
   
496.
வேதன் இவ்வாறு விளம்பிய கூற்று ஆம்
தீது உறு பொங்கு அழல் செய்யவள் சேயோன்
காதிடையே நெறியாக் கடிதில் போய்
ஏதம் இல் உள்ளம் எரித்ததை அன்றே.
5
   
497.
கிட்டி அரன் செயல் கேடு செய் என்னும்
கட்டுரையே வரும் காமன் உள் எங்கும்
சுட்டது எனில் பிறை சூடியவன் மெய்
அட்டிடு கின்றதும் அற்புதம் ஆமோ.
6
   
498.
இத்திறம் ஆம் அலர் ஏந்தல் இயம்பக்
கைத்துணை கொன்று இரு கன்னமும் வல்லே
பொத்தியி னைந்து புராந்தகன் நாமம்
சித் தச வேள் உரை செய்தனன் அம்மா.
7
   
499.
ஈட்டு உறு பல் பவம் எய்துவது ஓர்சொல்
கேட்டனன் என்று கிலேசம் அது ஆகி
வாட்டிய மென் மலர் போல் அணி மாழ்கிப்
பூட்டு வில் அண்ணல் புகன்றிடு கின்றான்.
8
   
500.
வன் கண்ணர் மாசு அறு காட்சியர் பால்
நன் கண் உறின் உய்யும் நலம் புகல்வார்
உன் கண் உறின் இத்தவறு ஓதினை ஆல்
என் கண் அடிகட்கு இலையோ அருளே.
9
   
501.
வன்னப் புவி மங்கையை மா மலர் மேல்
பொன்னைப் பிறரைப் புணர் உற்றிடு வான்
கன்னல் சிலை பூம் கணை கொண்டு அமர் செய்
தென்னத் தனை வென்று இசை கொண்டிலனோ.
10
   
502.
வெள்ளைக் கமலத்தியை மெய் உறவும்
தெள் உற்று அணி செய்த திலோத்தமை பால்
உள்ளப் புணர் உற்றிடவும் முனையான்
பிள்ளைச் சமர் செய் திசை பெற்றிலனோ.
11
   
503.
சீர் பெற்றிடு செந் திருவைக் திருமால்
மார்பில் குடியாய் உற வைத்திலனோ
கார் பெற்ற விழிக் கலை மங்கையை உன்
ஏர் பெற்றிடு நாவில் இருத்திலனோ.
12
   
504.
தண் நின்ற குழல் சசி என்று உரை செய்
பெண்ணின் தலை உற்றிடும் பெற்றி அலால்
விண்ணின் தலைவற்கு உளம் மெய்ம் முழுதும்
கண் என்றிடும்பல் குறிகள் கண்டிலனோ.
13
   
505.
விசை உற்றிடும் செம் கதிர் மேலவர் கீழ்த்
திசை உற்றவர் ஆங்கு ஒரு சேய் இழை போல்
இசை உற்றிடு பாகன் இடைப் புணரா
வசை உற்றிடு பான்மை மயக்கிலனோ.
14
   
506.
கதனத் தொடு வந்து கலந்தவர் பால்
இத நட்பு உறு மா மதி என் கணையால்
மதனத் தொடு தேசிகன் மாதை உறாப்
புதனைத் தரு பான்மை புணர்த்திலனோ.
15
   
507.
முற்றே தின் மறைத் தொகை மூது அறிவால்
கற்றேதும் உணர்ந்திடும் காட்சி பெறு
நல் தேவர்கள் யாரையும் நாரியர் தம்
குற்றேவல் செயும் படி கூட்டிலனோ.
16
   
508.
மறை தேவரும் வசிட்டன் மரீசிமிகக்
குறி தாம் முனியத் திரி கோதமன் நல்
அறிவால் உயர் காசிபன் ஆதியராம்
துறவோர் தமது ஆற்றல் தொலைத்திலனோ.
17
   
509.
மன்னான் மரபு உற்றிடும் ஆனவரை
பின் ஆகிய மும்மை கொள் பேதகரை
மின்னார் கண் மயக்கினில் வீட்டிலனோ
என் ஆணை கடந்தவர் யார் உளரே.
18
   
510.
அறை பெற்றிடும் இத் திறம் ஆன எலாம்
முறை பெற்றிடும் என்னின் முடிந்திடுமோ
பிறை பெற்றிடு கின்ற பெரும் சடை எம்
இறை பெற்றிடும் சத்தியில் இயற்றிடுமே.
19
   
511.
மாலே முதல் ஆகிய வானவர்தம்
பாலே அடல் வாகை படைப்ப தலால்
மேலே நதி சூடிய மேலவன் மேல்
கோல் ஏவினன் வென்றிடல் கூடும் அதோ.
20
   
512.
ஐது ஆகிய சீர் கொடவன் முறை செய்
நொய்து ஆனவர் போல நுவன்றனை யால்
வெய்தாம் அழல் ஆகிய மேலவன் மேல்
எய்தாலும் என் வாளிகள் எய்திடுமோ.
21
   
513.
கையும் நகையும் கதிரார் விழியும்
மெய்யும் தழலாம் விமலன் தனையான்
எய்யும் படி சென்றிடின் இவ் உயிர் கொண்டு
உய்யும் திறமும் உளதோ உரையாய்.
22
   
514.
பற்றோடு இகலல் அற்ற பரம் பொருளை
எற்றோ மயல் செய்குவது ஈசனையும்
மற்றோர் என நின்னின் மதித் தனை ஆல்
சற்றோ அவன் ஆற்றல் தவிர்த்திடவே.
23
   
515.
சூறா வளி வைகிய சூழலின் வாய்
ஏறா ஒரு பூளை எதிர்ந்து உளதேல்
நீறு ஆடிய மெய்யுடை நின்மலன் மேல்
வீறாய் வினையேன் பொர மேவுவனே.
24
   
516.
ஆறு உற்றிடும் செம் சடை அண்ணல் உடன்
மாறு உற்றவர் உண்டு எனின் மற்றவர் தாம்
ஊறு உற்றனர் அல்லது உளத் துயர் கொண்டு
ஈறு உற்றனர் அல்ல திருந்துளர் யார்.
25
   
517.
இந் நாரணன் ஆதியர் யாவர்களும்
அந்நாள் அமலன் பணி ஆற்றிடலும்
உன்னா அவர் சிந்தனை மொய்ந் நகையால்
ஒன்னார் புரம் அட்டது உணர்ந்திலையோ.
26
   
518.
எந்தாய் அருள் என்று ஒர் இளங்குமரன்
வந்து ஆதியை யேத்தலும் வைது சினக்
கொந்தார் அழல் போல் வரு கூற்றுவனை
அந்தாள் கொடு தைத்தது அறிந்திலை யோ.
27
   
519.
முன்னைப் பகல் நீயும் முகுந்தனும் ஆய்ப்
பன்னகற்கு அரிது ஆய பரம் பொருள் யாம்
என்னச் சிவன் எய்தி இகழ்ந்த உனைச்
சென்னித் தலை கொண்டது தேர் கிலையோ.
28
   
520.
அடன் மேவும் சலந்தரன் ஆதியராய்ப்
படிமேல் உளது ஓர் பஃறானவர் தாம்
முடிவார் அரனோடு முரண்டிடலும்
கெடு மாறு புணர்த்தது கேட்டிலை யோ.
29
   
521.
வீடு எய்துறு நின் மகன் வேள்வி நிலத்து
ஊடு எய்தினர் யாவரும் ஒப்பு இல் அரன்
மாடு எய்திய வீரனின் மானம் ஒரீஇப்
பாடு எய்திய புன் செயல் பார்த்து இலையோ.
30
   
522.
அண்டாத அகந்தை யொடு ஆழியின் வாய்
விண் டானவரச் சுறம் மேவுவிடம்
உண்டான் நிகழ் கங்கையை ஓர் அணுவில்
கொண்டான் அவன் வன்மை குறிக்கிலையோ.
31
   
523.
தரியா உளமால் கொடு தன் னிகழும்
அரியோடு கைம்மாவை அடல் புலியை
உரியாம் இசைப் போர்வை உடுக்கை எனப்
பரியா அரன் உற்றது பார்த்தது இலையோ.
32
   
524.
ஓரார் தனது உண்மையை உள்ளம் மிசை
யாராயினும் மாற்ற அகந்தை பெறின்
வாரா அவர் தம் வலி மாற்றிடும் ஆல்
தேராய் கொல் பரம் சுடர் செய்கை அதே.
33
   
525.
இறுகின்ற கடைப் பகல் ஈறு இலது ஓர்
கறைதுன்று மிடற்று இறை கண்ணினும் வீழ்
பொறி ஒன்று அதனால் பொடி பட்டிடும் நீ
அறிகின்றிலையோ அகிலங் களுமே.
34
   
526.
இப்பெற்றியன் ஆகிய ஈசனை என்
கைப் பற்றிய வில் கொடு கந்தமலர்
அப்பில் பொருகின்றிலன் ஆர் உயிர்மேல்
மெய்ப் பற்று இலர் இச் செயல் வேண்டுவரே.
35
   
527.
மேல் நாள் அகிலம் தர மெல் இயலால்
ஆனா வரு தன்னை அளித்து ஒருபால்
தான் ஆக இருத்திய தற்பரனை
நானா மயல் செய்வது நன்று இதுவே.
36
   
528.
என்னா மதவேள் இசையா மறுத்திடலும்
பொன்னார் கமலப் பொகுட்டுத் தலை வந்த
மன்னன் ஆன வேதா மனக் கவலை கொண்டு சில்
                                     போது
உன்னா நெடிதே உயிரா உரைக்கின்றான்.
37
   
529.
வெண்மை அறிவால் தமை வியக்கும் விண்ணவர் பால்
அண்மை இலன் ஆகும் அண்ணல் இயல் கூறினை ஆல்
உண்மை இது ஆம் உவனைப் பொருவதுவும்
எண்மை அதுவோ எவர்க்கும் அரிது அன்றோ.
38
   
530.
அன்ன பரிசே எனினும் அடைந்தோர் தம்
இன்னல் அகற்றும் இறை அருளால் இக்கருமம்
முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ
முன்னின் இதற்கு முதல் காரணம் நீ காண்.
39
   
531.
எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே
அல்லாது இலை ஓர் அணுவும் அசையாது எவையும்
நில்லாது அருள் இன்றேல் நீ இன்று அவன் பாலில்
செல்லாய் உனது செயலும் அவன் செய்கை அதே.
40
   
532.
செம் மாந்து தற்புகழும் தேவர் குழுவும் மருள
எம் மான் பிறன் போல் இருந்தோர் துரும்பு நிறீஇ
அம்மா தன் செய்கை அனைத்தும் எனக் காட்டினனே
நம்மாலும் முற்றும் சில என் கை நாண் அன்றோ.
41
   
533.
பாடு திகழ் பாவை பல் உயிரும் அல்லனவும்
ஆடல் புரிவிப்பான் அரு உருவாய் நின்ற பரன்
நாடில் அவனை இன்றி நம்மால் ஒன்று ஆகா வற்றோ
ஏட இதன் நிலைமை இந் நாளும் ஓர்ந்திலையோ.
42
   
534.
கை யம்பு பூட்டிக் கருப்புச் சிலை கோட்டி
எய்யும் படி வழிக் கொண்டே காய் இறுதி இலா
ஐயன் தனை நீ அதுவும் அவன் அருள் காண்
மெய் அங்கு அதற்கு ஏது மேல் நாளே கண்டனம் யாம்.
43
   
535.
ஈங்கு இதுவும் அன்றி எவரேனும் தம் மடம் காத்து
ஈங்கு பெறின் உதவி செய் என்று இரந்திடலும்
ஆங்கு ஒருவன் செய்யாது அது மறுத்துத் தன் உயிரைத்
தாங்கல் உலக நடை தனக்குத் தக்கதுவோ.
44
   
536.
என்னானும் ஓர் உதவி யாது ஒருவன் யார்க்கு எனினும்
தன்னால் முடிவது எனில் தானே முடித்தல் தலை
சொன்னால் முடித்தல் இடை ஆகும் சொல்லுகினும்
பன்னாள் மறுத்துப் புரிதல் கடைப் பான்மை அதே.
45
   
537.
ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகி
ஓவில் குறை ஒன்று உளரே அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே மறுத்து உளரேல்
பாவம் அலது பழிவும் ஒழியாதே.
46
   
538.
உய்கை பொருளா ஒருவர்க்கும் ஓர் உதவி
செய்கை இலனேல் சிறியோன் கழித்த பகல்
வைகல் அதுவோ வறிதே அவன் வாழ்க்கை
பொய்கை மலர்ந்த கொட்டி போலும் பொலிந்து உளதே.
47
   
539.
அந் நாரணனோடு அமர் முற்றிய முனியைப்
பொன்னாடு அருளும் புலவோர் இறை இரப்ப
என்னாரும் என்பு விருத்திரனுக்கா உதவித்
தன் ஆருயிர் விட்ட தன்மை தனைக் கேட்டிலையோ.
48
   
540.
மேல் ஒன்று உளதோ விளம்ப எவர் எவர்க்கும்
மூலம் தலை தெரியா முன்னோன் கடல் எழுந்த
ஆலம் தனை உண்டு அமரர்க்கு அமுது அளித்த
சீலம் தனை நீ சிறிதும் தெளிந்து இலையோ.
49
   
541.
தேக்கும் சலதி இடைத் தீப் போல் எழுந்த விடம்
தாக்கும் பொழுது தளரேல் என உரையா
ஊக்கம் கொடு மால் ஒரு கணம் நின்றே நம்மைக்
காக்கும் படிக்குக் கறுத்த செயல் கண்டிலையோ.
50
   
542.
ஆராயினும் ஒருவர் அன்பில் தலைப் பட்டுப்
பேரா தரத்தால் பிறர்க்கு உதவி செய்வாரேல்
தீராத வெம் துயரில் சேர்தலே மாய்தல் இவை
பாரார் புகழே பயன் என்று கொள்வாரே.
51
   
543.
சூரம் தனில் வலி சேர் சூரபன் மன் ஏவலின் யாம்
ஆரும் துயர் கொண்டு அழுங்கினோம் அன்னது இனித்
தீரும் படிக்குச் சிவன் ஒரு சேயைத் தருவான்
ஓர் ஐம் படை செலுத்த உன்னை யாம் வேண்டினமே.
52
   
544.
ஆதலினால் எங்கள் அலக்கண் அகற்றும் பொருட்டுச்
சாதல் வரினும் தவறோ புகழ் செய்வார்
ஏது வரினும் எதிர் செல்வார் எம் பணியில்
போதி இனி மாறு புகலேல் என உரைத்தான்.
53
   
545.
பங்கயப் பொகுட்டு இருந்த பகவன் ஈது புகறலும்
ஐங்கணைக் கரத்தினோன் அரந்தை எய்தி யாதி யாம்
புங்கவற்கு மாறு கொண்டு பொருகிலேன் இது அன்றியே
இங்கு எனக்கு அடுத்தது ஒன்று இயம்பு செய்வல்
                                    என்றனன்.
54
   
546.
என்னும் வேலை அமர ரோடு இருந்த வேதன் முனிஉறா
நல் நயம் தழீஇ உரைத்த நமது சொல் மறுத்தியால்
அன்ன பான்மை புரியின் உய்தி அல்லதேல் உனக்கு
                                        யாம்
துன்னு சாபம் இடுதும் யாது துணிவு சொல்லுக என்றனன்.
55
   
547.
வெய்ய சாபம் இடுதும் என்று வெகுளியால் மொழிந்த                                     கேட்டு
ஐய மேனி மதன வேள் அழுங்கி வெய்து உயிர்த்து
                                    இனிச்
செய்யல் ஆவது என் எனத் தெரிந்து சிந்தை தேற்றியே
வையகம் படைத்த அண்ணல் வதனம் நோக்கி
                                 உரைசெய்வான்.
56
   
548.
கேள் இது ஒன்று உரைப் பல் வேத கேடு சூழும்                                    நினதுவாய்ச்
சூளின் மேலை இயல் பகன்று துன்பு உழந்து படுதலில்
காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகள்
                                   தூஉய்
மாளினும் சிறந்தது அம்ம மற்றும் உய்யல் ஆகுமே.
57
   
549.
செற்ற நீர்மை கொள்ளல் ஐய செம் சடைப் பிரானிடத்து
இற்றை வைகல் அமர் இயற்ற ஏகுவேன் யான் எனக்
கொற்ற வேள் உரைத்தலும் குளிர்ந்த பூ இருக்கை மேல்
உற்ற போதன் மகிழ் சிறந்து உளம் களித்து மொழிகுவான்.
58
   
550.
பணிந்த சொல்லன் ஆகி நாம் பணித்தவாறு புரிந்திடத்
துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலின் உனைவிடாத்
தணந்தி டேந்தொடர்ந்து பின்பு சார்தும் அஞ்சல் போக
                                    எனா
உணர்ந்து கூறி மார வேளை ஓவில் அன்பொடு
                                    ஏவினான்.
59
   
551.
ஏவு காலை மதனை வேள்வி இறை தெரிந்து மைந்த
                                     யான்
தேவரோடு துயர் உழந்து சிறுமை பெற்றது அறிதியே
ஓவில் வாழ்வு தருதி என்னின் உமை மடந்தைதனை
                                     அரன்
மேவு மாறு புரிக எனா விரைந்து செல்ல நல்கினான்.
60
   
552.
நல்கலும் கரங்கள் கூப்பி நான் முகத்தன் உலகொரீஇ
அல்கு தன்புரத்து நண்ணி அவ் வியற்கை கூறியே
ஒல்கு தேவியைத் தெளித்து ஒருப் படுத்தி நறியதேன்
பில்கு வாளி இட்ட தூணி பின்னி யாத்து இறுக்கினான்.
61
   
553.
கயக் கண் நின்ற பூவின் மிக்க காம காண்டம் கன்னல்                                      வில்
இயக்கம் ஆன பார வில்லெடுத்து மொய்மயில் ஏந்தியே
தயக்கம் உற்று லாய செய்ய தண் என் மா இளந்தளிர்
வயக்கடும் கண் வாளம் ஒன்று மா மருங்கு வைத்து
                                     அரோ.
62
   
554.
கோகிலங்கள் ஆனவும் குழாங் கொள் வேலை யான
                                     உம்
கா களங்கள் முரசம் ஆய்க் கறங்க ஓதம் ஆவதும்
சீ கரங்கள் ஆய் அசைந்து செல்ல மீன கேதனம்
ஆக உம்பர் உலவ வெண் மதிக்குடை நிழற்றவே.
63
   
555.
பொருவில் கிள்ளை என்னும் மாக்கள் பூண்ட தென்றல்                                     வைய மேல்
இரதி யோடும் ஏறி வேள் இருந்த தொல்லை உலகினை
அரிது அகன்று குறிகள் வெய்ய அளவை இன்றி நிகழவே
பரமன் வைகு கயிலை அம் பருப்பதத்தை அணுகினான்.
64
   
556.
கயிலை கண்டு தொழுது தேர் இழிந்து காமவேள் தனக்கு
அயலில் வந்த பரிசனத்தை அவண் நிறுத்தி மாது உடன்
பயிலும் வில்லும் வாளியும் பரித்து வல்லியத்தினைத்
துயில் உணர்த்தும் மான் எனத் துணிந்து போதல்
                                    மேயினான்.
65
   
557.
கூறு உலாவு மதி மிலைந்த குழகன் வைகும் கயிலை
                                     மேல்
ஏறியே தனாது கை இருந்த கார்முகம் வளைஇ
மாறு இல் ஏவு பூட்டி அம்கண் வைகும் புள்ளும்
                                     மாக்களும்
ஊறு இலாது இருந்த காமம் உன்னு வித்தல் முன்னினான்.
66
   
558.
பொருலில் காமன் இன்ன தன்மை புந்தி கொண்டு மற்று                                     அவண்
விரவு புள்ளின் மீதினும் விலங்கின் மீதினும் மலர்ச்
சரம் எலாம் விடுப்ப ஆதி தனது மந்திரத்து முன்
அருளின் ஓடி இருந்த நந்தி அடிகள் அன்ன கண்டரோ.
67
   
559.
கொம் எனச் சினம் புரிந்து பூசல் மதனனார்
தம் இயற்கை ஆம் தம்ம சரதம் என்று நினை உறா
உம் எனத் தெழித்து உரப்ப ஒலி கொள் புள்விலங்கின்
                                     மேல்
வெம்மையில் செலாது மாரன் விசிகம் விண்ணின்
                                     நின்றவே.
68
   
560.
நிற்ற லோடும் அவ் வியற்கை நின்று நோக்கி
                                   நெடியவேள்
கொற்ற நீடு சூரல் ஒன்று கொண்டு கோபுரத்தலைத்
தெற்றி மேல் இருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும்
முற்று நோக்கி நெடிது உயிர்த்து உளம் துளங்கி
                                   விம்மினான்.
69
   
561.
விம்மி நந்தி தேவர் முன் விரைந்து சென்று தாழ்ந்து                                     எழூஉச்
செம்மை செய் கருத்தனாய் திகழ்ந்து போற்று எடுத்தலும்
இம் மலைக் கண் வந்தது என்னை என அயன் புணர்ப்பு
                                    எலாம்
மெய்ம்மையால் உணர்த்தலும் வினாவி ஈது உளம்
                                    கொள்வான்.
70
   
562.
வேதன் ஆதி ஆன தேவர் விழும நோய் அகன்றிடும்
ஏதுவால் விடுத்துளார்கள் இவனை ஈசன் யேகுறும்
போதில் யாவர் வருகினும் புகாது செய்தி மதன வேள்
சாதல் எய்து வான் வரின் தடேல் எனா இயம்பினான்.
71
   
563.
புன்மை ஆம் பசுத் தடிந்து புரை இல் வேள்வி
                                    ஆற்றியே
தொன்மை போல் எழுப்பு மாறு சுருதி சொற்ற வாறு
                                    போல்
மன் மதன் தனைப் படுத்து மாதை வேட்டு மற்ற அதன்
பின் முறைக் கண் நல்க எம்பிரான் நினைந்தனன் கொல்
                                    ஆம்.
72
   
564.
ஆகையால் இது அருளதே இவன் வரத்தும்
                                 ஆணையென்று
ஓகையால் உணர்ந்து வேளை நோக்கி உம்பர் ஆகுலம்
போகுமாறு இயற்றல் செய்த பொருவிலாத கருணை சேர்
ஏக நாயகன் தன் முன்னர் ஏகல் வேண்டுமோ என்றான்.
73
   
565.
நந்திதேவன் இனைய வாறு நவிலவே உணர்ந்து வேள்
எந்தை கேட்டியால் இது ஒன்று எனக்கு ஒரு ஈறு
                                     குறுகினும்
அந்தி வேணி அண்ணல் முன்னம் அணுகுமாறு அமைந்து
                                    இவண்
வந்தனன் அன்ன அதற்கு இயைந்த வகைமை நல்குவாய்
                                    என.
74
   
566.
இகலும் அன்பும் இறையும் இன்றி எவ் உயிர்க்கும்
                                   உள்ளது ஓர்
புகுதி நாடி முறையினைப் புரிந்து சேர்ப வர்க்கு மேல்
தகுதி செய்து கருணை கூர் சயம்புமுன்பு சார்தியேல்
மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி ஏகு என்றனன்.
75
   
567.
என்றலும் கரம் குவித்து இறைஞ்சி மாரன் நேர்பு உறீஇ
நன்று இலங்கு வேத்திரக் கை நந்தி தேவர் விடைதரச்
சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்று
                                    அழல்
குன்றம் என்ன மோன மோடு இருந்த எல்லை
                                    குறுகினான்.
76
   
568.
ஒருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக்
குருளையின் அமலன் தன்னைக் கோல மால்புதல்வன்
                                    காணா
வெரு வரும் உளத்தன் ஆகி வியர்த்து மெய் பனியா
                                    உட்கிப்
பருவரல் உழந்து கொண்ட படை யொடும் கடிதில்
                                    வீழ்ந்தான்.
77
   
569.
எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே அஞ்சி
விழி இருள் மூடக் கோல வில் இட்டு வியர்ப்பின் வாரி
மழை பட இடி ஆர்ப்பு எய்த மார்பு மற்று அது
                                     வீழ்கின்ற
தொழில் முறை புதரம் காட்டத் துளங்கி வீழ்ந்திட்டது
                                    அன்றே.
78
   
570.
அஞ்சி வீழ்கு உற்ற மாரன் அறிவிலாத வசமாகத்
துஞ்சினன் கொல்லோ என்னாத் துயர் உழந்து எடுத்துத்
                                    தேவி
கஞ்ச நேர் கரத்தில் தாங்கி கடிவகை உய்த்துத் தேற்ற
நெஞ்சம் மேல் உணர்ச்சி கூட இனையவை நினைந்து
                                    நைவான்.
79
   
571.
முறுவலின் எயில் மூன்று அட்ட முதல்வனைப் பொருதி                                     என்றே
நறை மலர் அயனும் ஏனைத் தேவரும் நாகர் கோனும்
உறு துயர் அகல இங்ஙன் உய்த்தனர் வினையேற்கு
                                    இன்னே
இறுதிவந்து அணுகிற்று ஆகும் இதற்கும் ஓர் ஐயம்
                                    உண்டோ.
80
   
572.
எண் தகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த
                                    வண்ணம்
கண்டலும் வெருவி ஆவி காண்கிலன் அவனை என்
                                    கைக்
கொண்டது ஓர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய
                                    பான்மை
அண்டரும் அயனும் யாரும் அறிகிலர் போலும் அன்றே.
81
   
573.
தாக்கினால் வலி பெற்று உள்ள மருத்தின் முன் தனித்த                                     தீபம்
போக்கினால் நிற்பது உண்டோ அனையது போலத்
                                    தேவர்
வாக்கினால் மனத்தால் எட்டா வள்ளல் முன் உய்த்தார்
                                    அன்னான்
நோக்கினால் இனிச் சில் போதின் நுண் பொடி ஆவன்
                                    போலாம்.
82
   
574.
ஏமுற உலகம் எல்லாம் ஈறு செய் முதல்வன் தன்னைப்
பூ மலர் கொண்டு யானே பொருகின்றேன் நகை ஈது
                                    அன்றோ
ஆம் இது விதியின் செய்கை அதனையார் கடக்க
                                    வல்லார்
தாமரை முதவர்க்கு ஏனும் தள் அரும் தகையது
                                    அன்றோ.
83
   
575.
ஈங்கு இவை அமலன் சூழ்ச்சி ஆவதோ முடிவது ஓரான்
தூங்கியான் கிடத்தல் ஒல்லா துண் என எழுந்து வில்லும்
வாங்கினன் சரமும் பூட்டி வல்ல வாறு இழைப்பன் ஐயன்
பாங்குற நின்று மேலே பட்டவா படுக என்றான்.
84
   
576.
இனையன பலவும் உன்னி எழுந்து மா மத வேள் இட்ட
தனு வினை எடுத்து வாங்கித் தண் மலர் விசிகம் பூட்டி
மனைவி தன் அகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த
                                    சென்னிப்
புனிதன் ஒரு சார் போகிப் பொருவகை முயன்று
                                    நின்றான்.
85
   
577.
மாரவேள் ஈண்டு நிற்ப மனோவதி நகரின் மேய
ஆரணமுதல்வன் தன்னை அமரர் கோன் தொழுது
                                    நோக்கிக்
கார் உறழ் கண்டன் தன்பால் காமனை விடுத்தி
                                    அன்னான்
போர் இயல் உணர்வான் அம் கண் போதரல் வேண்டும்
                                    என்றான்.
86
   
578.
சத மகன் இனைய கூறத் தண்மலர்க் கடவுள் நேராக்
கதும் என எழுந்து வானோர் கணத்துடன் அனையன்
                                    போற்றப்
பொதி தரு கயிலை அம் தண் பொருப்பின் மேல்
                               ஒருசார் போகி
மதன் இயல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி
                                     நின்றார்.
87
   
579.
எறி தரு கணிச்சிச் செங்கை ஈசன் மேல் இலக்க நாடும்
குறியினர் போல நின்ற கொடும் தொழில் மாரன் துஞ்சு
நெறியினர்க்கு அச்சம் உண்டோ நினைத்தது முடிப்பன்
                                    என்னா
நறுமலர் வாளி ஐந்து நாதன் மேல் செல்ல விட்டான்.
88
   
580.
விட்ட வெம் பகழி ஐந்தும் வியத்தகு விமலன் மீது
பட்டலும் சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்தலோடும்
கட்ட அழல்பொதிந்த நெற்றிக் கண்ணது நெடிதே காமன்
சுட்டது கயிலை முற்றும் சூழ் புகை பரவிற்று அன்றே.
89
   
581.
ஆலை அம் சிலைவேள் ஆகம் அழல் படக் கயிலையின்                                        கண்
ஏல வெம் புகையும் தீயும் எழும் தரும் இயற்கை நாடின்
மால் அயன் முதலோர் யாரும் மதித்துழி விரைந்து
                                       பாலின்
வேலையின் நடுவு தீய விடம் எழுந்து அனைய அம்மா.
90
   
582.
செறிந்த தீப் புகையின் மாலை செல்லலும் குணபால்                                     வாய்தல்
உறைந்தது ஓர் நந்தி தேவன் ஒல்லையில் அதனைப்
                                     பாரா
இறந்துபாடு ஆயினான் கொல் ஏகிய மதனன் என்னா
அறிந்தரோ உடையார்க்கு ஓதி ஒருசெயல் அறையல்
                                    உற்றான்.
91
   
583.
நுண்ணிய உணர்வின் மிக்கீர் நுமக்கு இது புகல்வன் எம்                                     கோன்
கண் நுதல் உமிழ்ந்த செம் தீக் காமனைப் பொடித்தது
                                    அன்றால்
அண்ணலை எய்வன் என்னா அனையவன் துணிவில்
                                     கூறித்
துண் என ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும்.
92
   
584.
இன் இனி மகிழ்நன் துஞ்சும் இயற்கையை இரதி நாடி
வன்னி பெய் அலங்கல் போலாய் வயிறு அலைத்து
                            இரங்கி எம் கோன்
தன்னை வந்து இரப்ப வேளைத் தருகுவன் கண்டிர்
                                       அந்த
முன்னவன் அணுக்கட் காய முறை புரி அருளால்
                                     என்றான்.
93
   
585.
ஐந்தொகை ஆற்றின் மாடே அமலனை நினைந்து
                                     நோற்ற
நந்தி அம்தேவன் இன்ன நவிறலும் அவன் சூழ் கின்ற
அந்தம் இல் கணத்தோர் கேளா அகிலம் உய்பெருட்டால்
                                    எம் கோன்
புந்தி கொள் அருளின் செய்கை போற்று எடுத்தனர்
                                   ஆய் உற்றார்.
94
   
586.
வா வலம் கிள்ளை மான் தேர் மதன் புரி வினையா                                     அன்னான்
வேவரப் புணர்த்து நோக்கி மிகை படாது அவன் சார்
                                     ஆன
தேவியை முடிக்கும் ஆற்றல் செய்திலன் இகல் பற்று
                                     இன்றி
மூவரை விடுத்துத் தொல் நாள் முப்புரம் பொடித்த
                                    முன்னோன்.
95
   
587.
கண் அழல் சுடுதலோடும் காமவேள் யாக்கை முற்றும்
சுண்ணம் அது ஆகி வீழத் துஞ்சினன் போய பின்னை
அண்ணல் அம் பகவன் தொல்லை அமைதியின்
                               இருந்தான் எல்லாம்
எண்ணி நின்று இயற்றும் எம் கோற்கு இனையதோ
                                   அரிது மாதோ.
96
   
588.
பாடு உறு கணவன் செய்கை பார்த்தலும் இரதி உள்ளம்
கூடின துயரம் வீந்த கொண்ட தொல் உணர்ச்சி கண்ணீர்
ஓடின வியர்த்த மெய் மூக்கு உயிர்த்தன ஒடுங்கிற்று
                                     ஆவி
வீடினள் இவளும் என்ன விரைந்து கீழ்த் தலத்தின்
                                    வீழ்ந்தாள்.
97
   
589.
சுரி தரு குடிஞை ஆற்றில் சுழித்தலைப் பட்டமான்
                                     போல்
பருவரல் வாரி நாப்பட் படிந்து பற்று இன்றிச் சோரும்
இரதி சில் பொழுதில் பின்னர் இறந்த தொல் உணர்வு
                                    தன்பால்
வருதலும் மறித்துச் செம்கை வயிறு அலைத்து இரங்கல்
                                    உற்றாள்.
98
   
590.
செம் பதுமை திருக் குமரா தமியேனுக்குக் ஆர் உயிரே                                திருமால் மைந்தா
சம்பரனுக்கு ஒரு பகைவா கன்னல் வரிச் சிலை பிடித்த
                                  தடக்கை வீரா
அம் பவளக் குன்று அனைய சிவன் விழியால் வெந்து
                         உடலம் அழிவு உற்றாயே
உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ அயன்
                        ஆரும் உவப்பு உற்றாரோ.
99
   
591.
முன் நாளில் புரம் மூன்றும் அட்டவன் மேல் பொரப்                         போதன் முறையோ என்று
சொன்னாலும் கேட்டிலையோ அமரர் பணி புரிவதுவே
                             துணிந்து இட்டாயே
உன் ஆகம் பொடி ஆகிப் போயினதே இது கண்டும்
                             உய்வார் உண்டோ
என் ஆவி ஆகிய நீ இறந்த பின்னும் யான் தனியே
                               இருப்பது ஏயோ.
100
   
592.
மாறு ஆகப் பரமன் விழி நின் ஆற்றலால் இலது ஆக                             மற்று உன் மெய்யும்
நீறு ஆக விண்டு எல்லாம் நெருப்பாகக் கவலை
                     விண்ணோர் நெஞ்சத்து ஆக
ஆறாத பெரும் துயரம் எனக்காக எங்கு ஒளித்தாய்
                               அருவா யேனும்
கூறாயோ அறிந்திருந்தாய் என் கணவா யான் செய்த
                          குறை உண்டோ தான்.
101
   
593.
உம்பர் கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ
                                உன்னை உய்த்த
செம்பதுமத் திசை முகத்தோன் பாலேயோ அரன்
                     செயலைச் சிதைப்பன் என்னா
இம்பர் இடை வல் விரைந்து வந்திடு நின் பாலேயோ
                                ஈசன் கண்ணால்
வெம் பொடியாய் நீ இறந்த இப் பழிதான் எவர் பாலின்
                                மேவிற்று ஐயோ.
102
   
594.
வில்லான் முப்புரம் எரித்த பரம் பொருள் யோகம்
                    தவிர்க்க வேண்டில் விண்ணோர்
எல்லாரும் இறந்தனரோ என் கணவா நீயோ தான்
                               இலக்காய் நின்றாய்
கொல்லாது போல உனைக் கொன்றனரே என் உயிர்க்கும்
                              கொலை சூழ்ந்தாரே
பொல்லாத பேர்க்கு நன்றி செய்வது தம் உயிர் போகும்
                             பொருட்டே அன்றோ.
103
   
595.
என்ன பாவம் செய்தேனோ என்போல்வார் தமக்கு என்ன                                இடர் செய்தேனோ
முன்னை உள விதிப் பயனை அறிவேனோ இப்படியே
                                 முடிந்தது ஐயோ
கன்னல் வரிச் சிலை பிடித்த காவலவோ தமியேனைக்
                                   காத்திடாயோ
வன்னி விழியாய் உடைய பெருமானை நோவதற்கு வழக்கு
                                ஒன்று உண்டோ.
104
   
596.
பொன் செய்தார் முடிகாணேன் அழகு ஒழுகும் திரு                        முகத்துப் பொலிவு காணேன்
மின் செய் பூண் அணிகுலவும் புயம் காணேன் அகன்
                       மார்பின் மேன்மை காணேன்
கொன் செய்பூம் கணை காணேன் சிலை காணேன்
                      ஆடல் புரி கோலம் காணேன்
என் செய்வேன் என் கணவா என்னை ஒழித்து
                       எவ்விடத்தே இருக்கின்றாயே.
105
   
597.
அந் நாளில் அழல் கடவுள் கரி ஆக வானவரோடு
                             அயன் மால் காணப்
பொன் அரும் மங்கல நாண் பூட்டி எனை மணம் செய்து
                                 புணர்ந்தகாலை
எந் நாளும் இனி உன்னைப் பிரியலம் என்றே வாய்மை
                             இசைத்தாய் வேனில்
மன்னாவோ மன்னாவோ எனைத் தனியே விட்டு ஏகல்
                            வழக்கோ சொல்லாய்.
106
   
598.
போ என்று வரவிட்ட தேவர் எலாம் பொடி ஆகிப்
                                போன உன்னை
வா என்று கடிது எழுப்ப மாட்டாரோ நின் தாதை
                               வலியன் என்பார்
ஓ என்று நான் இங்கே அரற்றிடவும் வந்திலனால்
                                உறங்கினானோ
வே என்று நின் சிரத்தில் விதித்து இருந்தால் அவரை
                       எலாம் வெறுக்கல் ஆமோ.
107
   
599.
நேய மொடு மறை பயிலும் திசை முகனைப் புரந்தரனை                                   நின்னைத் தந்த
மாயவனை முனிவர்களை யாவரையும் நின் கணையால்
                               மருட்டி வென்றாய்
ஆய் அது போல் மதி முடித்த பரமனையும் நினைந்து
                          இவ்வாறு அழி வுற்றாயே
தீ அழலின் விளக்கத்தில் படுகின்ற பதங்கத்தின் செயல்
                                   இது அன்றோ.
108
   
600.
தண் பனி நீர்ச் சிவிறி கொண்டு விளையாடி மலர்கொய்து                                  தண் கா நண்ணி
எண்படும் பூம் பள்ளி மிசைச் சிறு தென்றல் கவரிகளாய்
                                   இனிது செல்ல
வெண் பளித நறும்சாந்தச் சேறு ஆடி இருவரும் ஆய்
                                 விழைந்து கூடிக்
கண் படை கொண்டு அமர் வாழ்வும் பொய் ஆகிக்
                      கனவு கண்ட கதை ஆயிற்றே.
109
   
601.
மருகு என்றே அவமதித்த தக்கனார் வேள்வி செற்ற                               வள்ளல் தன்னைப்
பொருக என்றே தேவர் எலாம் விடுத்தாரே அவராலே
                              பொடி பட்டாயே
எரிகின்றேன் உனைப் போல ஆறாத பெரும் துயரால்
                              யானும் அங்கே
வருகின்றேன் வருகின்றேன் என் உயிரே எனப் புலம்பி
                              வருந்துகின்றாள்.
110