கணங்கள் செல் படலம்
 
726.
அந்த வேலையில் கயிலையில் எம்பிரான் அருளால்
நந்தி தேவரை விளத்து நம் மணச் செயல் நாட
முந்து சீருடை உருத்திரக் கணங்கள் மான் முதலோர்
இந்திராதியர் யாரையும் தருதி என்று இசைத்தான்.
1
   
727.
இன்னல் இன்பமின்று ஆகிய பரமன் ஈதுரைப்ப
நன் நயப்புடன் இசைந்து பின் நந்தி எம் பெருமான்
அன்னர் யாவரும் மணப் பொருள் உற்றிட அகத்துள்
உன்னல் செய்தனன் அவர் எலாம் அவ்வகை உணர்ந்தார்.
2
   
728.
உலகம் உய்ந்திட எம்பிரான் மணம்புரி உண்மை
புலன் அதாதலும் அவன் அருள் முறையினைப் போற்றி
மலியும் விம்மிதம் பத்திமை பெருமிதம் மகிழ்ச்சி
பலவும் உந்திடக் கயிலையை முன்னியே படர்வார்.
3
   
729.
பாலத் தீப்பொழி விழியுடைப் பஞ்சவத்திரனே
மூலத்தீப் புரை விடைப் பெரும் கேது வே முதலாம்
சூலத் தீக்கரத் தாயிர கோடி யோர் சூழக்
காலத் தீப் பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில்.
4
   
730.
சுழலல் உற்றிடு சூறையும் வடவையும் தொலைய
முழுது உயிர்தொகை அலமர் உயிர்க்குர மொய்ம்
                                 புடையோர்
எழுபத்து இரு கோடி பாரிடத் தொகை யீண்ட
மழு வலத்தினன் ஆய கூர் மாண்டனும் வந்தான்.
5
   
731.
நீடு பாதலத்து உறைபவர் நெற்றியங் கண்ணர்
பீடு தங்கிய பல்வகை நிறத்தவர் பெரியர்
கோடி கோடியாம் உருத்திர கணத்தவர் குழுவோடு
ஆட கேசனாம் உருத்திரன் கயிலையில் அடைந்தான்.
6
   
732.
கோர மிக்குயர் நூறு பத்து ஆயிரம் கோடி
சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர்
ஆரும் அச்சுறச் சரபமாய் வந்து அருள் புரிந்த
வீரபத்திர உருத்திரன் வந்தனன் விரைவில்.
7
   
733.
விண்டு தாங்குறு முலகுயிர் முழுதும் ஓர் விரலில்
கொண்டு தாங்கு உறு குறள் படை கோடி நூறு ஈண்டப்
பண்டு தாங்கலந் தரி அரன் இருவரும் பயந்த
செண்டு தாங்கு கைம் மேலையோன் மால்வரை சென்றான்.
8
   
734.
முந்தை நான்முகன் விதி பெறான் மயங்கலும் முக்கண்
தந்தை ஏவலால் ஆங்கு அவன் நெற்றியந் தலத்தின்
வந்து தோன்றி நல் அருள் செய்து வால் உணர்வு
                                     அளித்த
ஐந்தும் ஆறும் உருத்திரர் தாமும் வந்து அடைந்தார்.
9
   
735.
இத்திறத்தரா முருத்திரர் அல்லதை ஏனை
மெத்து பல் புவனங்களும் அளித்து அவண் மேவி
நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர்
புத்தி அட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில்.
10
   
736.
தொட்ட தெண்கடல் யாவையும் துகளினால் தூர்க்கும்
எட்டு நூறு எனும் கோடிபார் இடத் தொகையீண்டக்
கட்டு செம் சடைப் பவர் முதலாகவே கழறும்
அட்ட மூர்த்திகள் தாங்களும் ஒருங்குடன் அடைந்தார்.
11
   
737.
ஏறு கொண்டிடு தெழிப்பினர் எம்பிரான் விழிநீர்
நாறு கொண்டுள கலத் தொடு பொடிபுனை நலத்தோர்
நூறு கொண்டிடு கோடி பூதத்தொடு நொடிப்பின்
வீறு கொண்ட குண்டோதரன் போந்தனன் வெற்பில்.
12
   
738.
அண்டம் யாவையும் உயிர்த்தொகை அனைத்தையும்                                    அழித்துப்
பண்டு போலவே தந்திட வல்லதோர் பரிசு
கொண்ட சாரதர் நூற்று இரு கோடியோர் குழுமக்
கண்ட கன்னனும் பினாகியும் வந்தனர் கயிலை.
13
   
739.
ஆன அனங்கள் ஓர் ஆயிரம் இராயிரம் அங்கை
மேனி வந்த பொன் மால்வரை புரைநிற மேவிக்
தானை வீரர் நூற்றைம்பது கோடியோர் சாரப்
பானுகம்பனாம் தலைவன் ஒண் கயிலையில் படர்ந்தான்.
14
   
740.
தங்கள் சீர்த்தியே மதித்திடு கடவுளர் தலையும்
பங்கி ஆகிய கேசமும் படைகளும் பறித்துத்
துங்கம் எய்திய கணங்கள் பல் கோடியோர் சூழச்
சங்கு கன்னன் வந்து இறுத்தனன் தடவரை தன்னில்.
15
   
741.
காள கண்டனும் தண்டியும் நீலனும் கரனும்
வாள் வயம் பெறு வீச்சுவ மாலியும் மற்றும்
ஆளி மொய்ம்பினர் ஆய பல் பூதரும் அனந்தம்
நீள் இரும் கடல் தானையோடு அணைந்தனர் நெறியால்.
16
   
742.
கூற்றின் மொய்ம்பினைக் கடந்திடு சாரதக் குழுவோர்
நூற்று முப்பது கோடியோர் சூழ்ந்திட நொய்தின்
மாற்றலார் புரம் அட்டவன் தாளிணை வழிபட்
டேற்றம் மிக்க ஈசானன் அக்கயிலையில் இறுத்தான்.
17
   
743.
எகினம் ஆகிய மால் அயன் வாசவன் இமையோர்
புகலும் மாதிரம் காவலர் கதிர் மதி புறக்கோள்
மிகைய தாரகை அன்னைகள் வசுக்கள் வேறு உள்ளார்
மகிழும் விஞ்சையர் முனிவரர் யாவரும் வந்தார்.
18
   
744.
வாலிது ஆகிய மறைகள் ஆகமங்கள் மந்திரங்கள்
ஞாலம் ஆதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள்
காலம் ஆனவை ஏனைய பொருள் எலாம் கடவுள்
கோலம் எய்தி வந்து இறுத்தன கயிலையில் குறுகி.
19
   
745.
இந்த வாற்றினால் கயிலையில் யாவரும் யாவும்
வந்த தன்மையை நோக்கியே ஆற்றவு மகிழ்ந்து
நந்தி உள்புகுந்து அமலனுக்கு இத்திறம் நவில
முந்தை அன்னவர் யாரையும் தருக என மொழிந்தான்.
20
   
746.
புராரி இத்திறம் மொழிதலும் சிலாதனார் புதல்வன்
ஒராய் முதல் கடை குறுகியே உருத்திர கணங்கள்
முராரி ஆதியாம் விண்ணவர் முனிவர் எல்லோரும்
விராவு நீர்மையில் சென்றிடக் கோயில் உள் விடுத்தான்.
21
   
747.
விடுத்த காலையில் அரி அணை மீமிசை விளங்கிக்
கடுத்த அங்கியக் கண்டன் வீற்று இருப்பது காணூஉ
அடுத்த அன்புடன் யாவரும் இறைஞ்சியே அவன்சீர்
எடுத்து நீட நின்று ஏத்தியே அணுகினர் இமைப்பில்.
22
   
748.
நீண்ட சீர் உருத்திரர் தமை நிறைந்த பல் கணத்தை
ஈண்டு தேவரை முனிவரை வீற்று வீற்று இசையா
ஆண்டு தன் விரல் சுட்டியே ஆதி நாயகற்குக்
காண்டல் செய்து நின்று ஏத்தினன் வேத்திரக் கரத்தோன்.
23
   
749.
ஆர் அழல் பெயர் அண்ணல் கூர் மாண்டன்                               ஆடகத்தோன்
வீரபத்திரன் முதல் உருத்திர கணம் ஏத்தப்
பார் இடத்தவர் யாவரும் எம்பிரான் பாங்கில்
சேரல் உற்று நின்று ஏத்தினர் பணிந்த சிந்தையராய்.
24
   
750.
அன்னகாலையில் நான்முகன் எம்பிரான் அணிவான்
உன்னியே முடி முதலிய பல் கலன் உதவிப்
பொன்னின் ஆயதோர் பீடிகையில் கொடு போந்து
முன்னர் ஆக வைத்து இறைஞ்சியே இத்திறம் மொழிவான்.
25
   
751.
ஐய கேள் உனக்கு இல்லையால் பற்றிகல் அடியேம்
உய்யு மாறு இவண் மணம் செய உன்னினை உன்பால்
மையல் மாசுணப் பணி எலா மாற்றி மற்று இந்தச்
செய்ய பேரணி அணிந்து அருள் என்று செப்பினனே.
26
   
752.
பங்கய ஆசனன் குறை இரந்து இனையன பகர
அம் கண் மூரல் செய்து அன்புடன் நீ அளித்திடலால்
இங்கு நாம் இவை அணிந்தென மகிழ்ந்தனம் என்னாச்
செங்கையால் அணி கலத்தினைத் தொட்டு அருள்
                                     செய்தான்.
27
   
753.
பிரமன் அன்பு கண்டு இவ்வகை அருள் செய்த பின்னர்
ஒரு தன் மெய் அணி பணிகளே அணிகளாய் உறுவான்
திரு உளம் கொள அவ்வகை ஆகிய செகத்தை
அருள் புரிந்திடும் பராபரற்கு இச் செயல் அரிதோ.
28
   
754.
கண்டு யாவரும் அற்புதம் அடைந்து கை தொழலும்
வண்டு லாங்குழல் கவுரி பால் ஏகுவான் மனத்தில்
கொண்டு பாங்குறை தலைவருக்கு உணர்த்தியே குறிப்பால்
பண்டு மால் அயற்கு அரியவன் எழுந்தனன் படர.
29