அயனைச் சிறை நீக்கு படலம்
 
1224.
ஆலம் ஆம் மிடற்று அண்ணல் சேய் இத்திறம்
                                   அளப்பில்
காலம் யாவையும் அளித்தனன் இருத்தலும் கரியோன்
நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடிச்
சீல வானவர் முனிவரைச் சிந்தனை செய்தான்.
1
   
1225.
சீதரத் தனிப் பண்ணவன் சிந்தனை தேறி
ஆத பத்தினர் பரிமுகர் வசுக்கள் அன்னையர்கள்
ஏதம் அற்றிடும் விஞ்சையர் உவணரோடு இயக்கர்
மாதிரத்தவர் யாவரும் விரைந்து உடன் வந்தார்.
2
   
1226.
மதியும் ஏனைய கோள்களும் கணங்களும் வான்தோய்
பொதிய மேயவன் ஆதியாம் பொருவில் மாதவரும்
விதி புரிந்திடு பிரமர் ஒன் பதின் மரும் வியன்பார்
அதனை ஏந்திய சேடனும் உரகரும் அடைந்தார்.
3
   
1227.
இன்ன தன்மையில் அமரரும் முனிவரும் எய்த
அன்னர் தம்மொடும் செம் கண் மால் கயிலையை
                                     அடைந்து
முன்னர் வைகிய நந்திகள் முறையின் உய்த்திடப்
                                     போய்த்
தன்னையே தனக்கு ஒப்பவன் பொன் கழல் தாழ்ந்தான்.
4
   
1228.
பொன் திருப் பதம் இறைஞ்சியே மறை முறைப் போற்றி
நிற்றலும் சிவன் அருள் கொடே நோக்குறீஇ நீவிர்
எற்றை வைகலும் இல்லதோர் தளர்வொடும் எம்பால்
உற்றது என் கொலோ என்றலும் மால் இவை உரைப்பான்.
5
   
1229.
இறைவ நின் மகன் ஈண்டு உறு போதனை
மறை முதல் பத வான்பொருள் கெட்டலும்
அறிகிலான் உற அன்னவன் தன்னை முன்
சிறை புரிந்தனன் சிட்டியும் செய்கின்றான்.
6
   
1230.
கந்த வேள் எனக் கஞ்சனும் ஐய நின்
மைந்தனாம் அவன் வல்வினை ஊழினால்
அந்தம் இல் பகல் ஆழ் சிறைப் பட்டு உளம்
நொந்து வாடினன் நோ உழந்தான் அரோ.
7
   
1231.
ஆக்கம் அற்ற அயன் தன் சிறையினை
நீக்குக என்று நிமலனை வேண்டலும்
தேக்கும் அன்பில் சிலாதன் நல் செம்மலை
நோக்கி ஒன்று நுவலுதல் மேயினான்.
8
   
1232.
குடுவைச் செம் கையினானைக் குமரவேள்
இடுவித்தான் சிறை என்றனர் ஆண்டு நீ
கடிதில் சென்று நம் கட்டுரை கூறியே
விடுவித்தே இவண் மீள்க எனச் சாற்றினான்.
9
   
1233.
எந்தை அன்னது இசைத்தலும் நன்று எனா
நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்து போய்
அந்தம் அற்ற அடல் கணம் சூழ்தரக்
கந்த வெற்பில் கடி நகர் எய்தினான்.
10
   
1234.
எறுழுடைத் தனி ஏற்று முகத்தினான்
அறுமுகத்தன் அமர்ந்த நிகேதனம்
குறுகி மற்றவன் கோல மலர்ப்பதம்
முறை தனில் பணிந்து ஏத்தி மொழிகுவான்.
11
   
1235.
கடிகொள் பங்கயன் காப்பினை எம்பிரான்
விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கு எனைத்
தடை படாதவன் தன் சிறை நீக்குதி
குடிலை அன்னவன் கூறற்கு எளியதோ.
12
   
1236.
என்னு முன்னம் இளையவன் சீறியே
அன்ன ஊர்தி யரும்சிறை நீக்கலன்
நின்னையும் சிறை வீட்டுவன் நிற்றியேல்
உன்னி ஏகுதி ஒல்லையில் என்றலும்.
13
   
1237.
வேறுது ஒன்றும் விளம்பிலன் அஞ்சியே
ஆறு மாமுகத்து அண்ணலை வந்தியா
மாறு இலா வெள்ளி மால்வரை சென்றனன்
ஏறு போல் முகம் எய்திய நந்தியே.
14
   
1238.
மை திகழ்ந்த மணி மிடற்று அண்ணல் முன்
வெய் தெனச் சென்று மேவி அவன் பதம்
கைதொழூஉ நின்று கந்தன் மொழிந்திடும்
செய்தி செப்பச் சிறு நகை எய்தினான்.
15
   
1239.
கெழுத கைச்சுடர்க் கேசரிப் பீட மேல்
விழுமிது உற்ற விமலன் விரைந்து எழீஇ
அழகு உடைத் தனது ஆலயம் நீங்கியே
மழ விடைத் தனி மால் வரை ஏறினான்.
16
   
1240.
முன்னர் வந்த முகில் புரை வண்ணனும்
கின்னரம் பயில் கேசரர் ஆதியோர்
நன்னர் கொண்டிடு நாகரும் நற்றவர்
என்னரும் தொழுது எந்தை பின் ஏகினார்.
17
   
1241.
படைகொள் கையினர் பல் நிறக் காழக
உடையர் தீயின் உருகெழு சென்னியர்
இடி கொள் சொல்லினர் எண்ணரும் பூதர்கள்
புடையில் ஈண்டினர் போற்றுதல் மேயினார்.
18
   
1242.
இனைய காலை இனையவர் தம்மொடும்
வனிதை பாதியன் மால் விடை ஊர்ந்துராய்ப்
புனித வெள்ளி அம் பொற்றை தணந்து போய்த்
தனது மைந்தன் தடவரை எய்தினான்.
19
   
1243.
சாற்ற அரும் திறல் சண்முக எம்பிரான்
வீற்று இருந்த வியன் நகர் முன் உறா
ஏற்றி னின்றும் இழிந்து விண்ணோர் எலாம்
போற்ற முக்கண் புனிதன் உள் போயினான்.
20
   
1244.
அந்தி போலும் அவிர் சடைப் பண்ணவன்
கந்தன் முன்னர்க் கருணையோடு ஏகலும்
எந்தை வந்தனன் என்று எழுந்து ஆங்கு அவன்
வந்து நேர் கொண்டு அடிகள் வணங்கியே.
21
   
1245.
பெருத்த தன்மணிப் பீடிகை மீ மிசை
இருத்தி நாதனை ஏழ் உலகு ஈன்றிடும்
ஒருத்தி மைந்தன் உயிர்க்கு உயிர் ஆகிய
கருத்த நீ வந்த காரியம் யாது என்றான்.
22
   
1246.
மட்டு உலாவு மலர் அயனைச் சிறை
இட்டு வைத்தனை யாம் அது நீக்குவான்
சுட்டி வந்தன மால் சுரர் தம் உடன்
விட்டிடு ஐய என்று எந்தை விளம்பினான்.
23
   
1247.
நாட்ட மூன்று உடை நாயகன் இவ்வகை
ஈட்டு அன்பொடு இசைத்திடும் இன் சொலைக்
கேட்ட காலையில் கேழ்கிளர் சென்னிமேல்
சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான்.
24
   
1248.
உறுதி ஆகிய ஓர் எழுத்தின் பயன்
அறிகிலாதவன் ஆவிகள் வைகலும்
பெறுவன் என்பது பேதைமை ஆங்கு அவன்
மறைகள் வல்லது மற்று அது போலுமால்.
25
   
1249.
அழகிது ஐய நின் ஆர் அருள் வேத முன்
மொழிய நின்ற முதல் எழுத்து ஓர்கிலான்
இழிவில் பூசை இயற்றலும் நல்கிய
தொழில் புரிந்து சுமத்தினை ஓர்பரம்.
26
   
1250.
ஆவி முற்றும் அகிலமும் நல்கியே
மேவு கின்ற வியன் செயல் கோடலால்
தாவில் கஞ்சத் தவிசு உறை நான்முகன்
ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும்.
27
   
1251.
நின்னை வந்தனை செய்யினும் நித்தலும்
தன்ன கந்தை தவிர்கிலேன் ஆதலால்
அன்னவன் தன் அரும் சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே.
28
   
1252.

மைந்த நின் செய்கை என்னே மலர் அயன் சிறை விடு                                      என்று
நந்தி நம் பணியால் ஏகி நவின்றதும் கொள்ளாய்
                                       நாமும்
வந்து உரைத்திடினும் கேளாய் மறுத்து எதிர்
                         
மொழிந்தாய் என்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை
                                      வள்ளல்.

29
   
1253.
அத்தனது இயல்பு நோக்கி அறுமுகத்து அமலன் ஐய
சித்தம் இங்கு இதுவே யாகில் திசைமுகத்து
                                 ஒருவன்தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவன் என்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான்.
30
   
1254.
நன் சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்கத்
தன் சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள்
                                     நோக்கி
முன் சிறை ஒன்றில் செம் கேழ் முண்டகத்து அயனை
                                     வைத்த
வன் சிறை நீக்கி நம் முன் வல்லை தந்திடுதிர் என்றான்.
31
   
1255.
என்றலும் சாரதர்க்குட் சிலவர்கள் ஏகி அம்கண்
ஒன்று ஒரு பூழை தன்னுள் ஒடுங்கினன் உறையும் வேதா
வன் தளை விடுத்தல் செய்து மற்றவன் தனைக் கொண்டு
                                     ஏகிக்
குன்றுதொறு ஆடல் செய்யும் குமர வேள் முன்னர்
                                     உய்த்தார்.
32
   
1256.
உய்த்தலும் கமலத்து அண்ணல் ஒண் கரம் பற்றிச்                                      செவ்வேள்
அத்தன் முன் விடுத்த லோடும் ஆங்கு அவன் பரமன்
                                     தன்னை
மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து வெள்கினன் நிற்ப
                                     நோக்கி
எய்த்தனை போலும் பல் நாள் இரும் சிறை எய்தி
                                     என்றான்.
33
   
1257.
நாதன் இத் தன்மை கூறி நல் அருள் புரிதலோடும்
போதினன் ஐய உன்றன் புதல்வன் ஆற்றிய வித்
                                     தண்டம்
ஏதம் அன்று உணர்வு நல்கி யான் எனும் அகந்தை
                                     வீட்டித்
தீது செய் வினைகள் மாற்றிச் செய்தது புனிதம் என்றான்.
34
   
1258.
அப்பொழுது அயனை முக்கண் ஆதி அம் பரமன்                                      காணூஉ
முப்புவனத்தின் மேவும் முழுது உயிர்த் தொகைக்கும்
                                     ஏற்ற
துப்புற வதனை நன்று தூக்கினை தொன்மையே போல்
இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை இருத்தி என்றான்.
35
   
1259.
அருள் உருவாகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்
முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து அருளை
                                     நல்கி
வருதியால் ஐய என்று மலர்க்கை உய்த்து அவனைப்
                                     பற்றித்
திரு மணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச்
                                     செய்தான்.
36
   
1260.
காமரு குமரன் கென்னி கதும் என உய்த்துச் செக்கர்த்
தாமரை புரையும் கையால் தழுவியே அயனும் தேற்றா
ஓம் என உரைக்கும் சொல்லின் உறு பொருள் உனக்குப்
                                     போமோ
போம் எனில் அதனை இன்னே புகல் என இறைவன்
                                     சொற்றான்.
37
   
1261.
முற்று ஒருங்கு உணரும் ஆதிமுதல்வகேள் உலகம்                                      எல்லாம்
பெற்றிடும் அவட்கு நீ முன் பிறர் உணராத வாற்றால்
சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாரும்
                                     கேட்ப
இற்றென இயம்பல் ஆமோ மறையினால் இசைப்பது
                                     அல்லால்.
38
   
1262.
என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின்
                                     என்னாத்
தன் திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை
                                     என்னும்
ஒன்று ஒரு பதத்தின் உண்மை உரைத்தனன் உரைத்தல்
                                     கேளா
நன்று அருள் புரிந்தான் என்ப ஞான நாயகனாம்
                                     அண்ணல்.
39
   
1263.
அன்னதோர் ஐயம் ஆற்றி அகம் மகிழ்வுஎய்தி அம்கண்
தன் இளம் குமரன் தன்னைத் தலைமையோடு இருப்ப
                                     நல்கி
என்னை ஆள் உடைய நாதன் யாவரும் போற்றிச்
                                     செல்லத்
தொல் நிலை அமைந்து போந்து தொல் பெரும் கயிலை
                                     வந்தான்.
40
   
1264.
முன்பு உறும் அயன் மால் தேவர் முனிவரை விடுத்து                                      முன்னோன்
தன் பெரும் கோயில் புக்கான் தாவில் சீர்க் கந்த
                                     வெற்பில்
பொன் புனை தவிசின் ஏறிப் புடைதனில் வயவர்
                                     போற்ற
இன்பொடு குமர மூர்த்தி இனிது வீற்று இருந்தான்
                                    அன்றே.
41
   
1265.
ஆங்கு உறு குமரப் புத்தேள் அருமறைக்கு ஆதி ஆகி
ஓங்கும் எப் பொருட்கு மேலாம் ஓர் எழுத்து உரையின்
                                     உண்மை
தீங்கு அற வணங்கிக் கேட்பச் சிறுமுனிக்கு உதவி
                                     மற்றும்
பாங்கு உறும் இறைவன் நூலும் பரிவினால்
                           உணர்த்தினான் ஆல்.
42