தாரகன் வதைப் படலம்
 
1329.
வெம்மை தீர்ந்திடும் அப்பெரு நெறியிடை விரைந்து
செம்மை சேர் தரு குமரவேள் படையொடு செல்ல
அம்ம சேர்ந்தது தாரகற்கு உறையுளாய் அடைந்தோர்
தம்மை வாட்டியே அமர் கிரவுஞ்சம் ஆம் சைலம்.
1
   
1330.
விண்டு உலாய் நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர்
கண்டு உளம் பதை பதைத்தனர் மகபதி கலக்கம்
கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன்
புண்டரீக நேர் பதம் தொழுது இன்னன புகல்வான்.
2
   
1331.
தூய நான்மறை அந்தணர் முனிவர் இச் சுரத்தில்
போய எல்லையின் நெறியதாய் வரவரப் புணர்த்து
மாய்வு செய்து பின் குறுமுனி சூளின் இவ் வடிவாய்
ஏய தொல் பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இது காண்.
3
   
1332.
நேரில் இக்கிரிக்கு ஒரு புடை மாய நீள் நகரில்
சூர் எனப்படும் அவுணனுக்கு இளவல் ஆம் துணைவன்
போரில் அச்சுதன் நேமியை அணியதாப் புனைந்தோன்
தாரகப் பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால்.
4
   
1333.
இன்னவன் தனை அடுதியேல் எளிதுகாண் இனையோன்
முன்னவன் தனை வென்றிடல் என முனி மொழிய
மின்னு தண் சுடர் வேலவன் அவற்றினை வினவி
அன்னவன் தனை முடிக்குதும் இவண் என அறைந்தான்.
5
   
1334.
சிறந்திடு முருகவேள் இனைய செப்பலும்
நிறைந்திடும் அமரரும் இறையும் நெஞ்சினில்
உறைந்திடு கவல் ஒரீஇ உவகை எய்தினார்
இறந்தனன் தாரகன் இன்றொடே எனா.
6
   
1335.
ஐயர்கள் பெரு மகிழ்வு அடைய ஆறு இரு
கை உடை முருகன் அக் காலை தன் புடை
மெய்யருள் எய்திய வீர வாகு ஆம்
துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான்.
7
   
1336.
உற்றவக் கிரி கிரவுஞ்சம் ஆகும் ஆல்
மற்று அதன் ஒரு புடை மாய நெச்சியுள்
செற்றிய அசுரர் தம் சேனை தன்னுடன்
அற்றம் இல் தாரகன் அமர்தல் மேயினான்.
8
   
1337.
ஏய நின் துணைவர்கள் இலக்கத்து எண்மர்கள்
ஆயிர வெள்ளம் ஆம் அடல் கொள் பூதர்கள்
சாய்வறு தலைவர்கள் தம்மொடு ஏகியே
நீ அவன் பதியினை வளைத்தி நேர் இலாய்.
9
   
1338.
தடுத்து எதிர் மலைந்திடும் அவுணர் தானையைப்
படுத்தனை தாரகப் பதகன் எய்து மேல்
அடுத்து அமர் இயற்றுதி அரியது ஏல் யாம்
முடித்திட வருகுதும் முந்து போ என்றான்.
10
   
1339.
நலமிகு குமரவேள் நவில இன்னணம்
வலமிகு சிறப்புடை வாகு நன்று எனாத்
தலை மிசை கூப்பிய கரத்தன் தாழ்ந்து முன்
நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே.
11
   
1340.
ஏந்தல் அம் துணைவராம் இலக்கத்து எண்மரை
ஆய்ந்திடு பூதரை ஆதி நோக்கியே
வாய்ந்திடு பெரும் திறல் வாகு தன்னுடன்
போந்திடும் அவுணரைப் பொர என்று ஏவினான்.
12
   
1341.
ஏவலும் அனையவர் யாரும் எம்பிரான்
பூ அடி வணங்கியே போதற்கு உன்னலும்
ஆவியுள் ஆவி ஆம் அமலன் பாங்கு உறும்
தேவர்கள் கம்மியற்கு இதனைச் செப்புவான்.
13
   
1342.
மேதகு பெருந்திறல் வீரவாகுவை
ஆதியர் தமக்கு எலாம் அளிக்கும் பான்மையால்
ஏதம் இலாத பல்லிரதம் நல்கெனா
ஓதினன் உலகு எலாம் உதவும் தொன்மையோன்.
14
   
1343.
அத்திறம் கேட்ட ஓர் அமரர் கம்மியன்
ஒத்தது ஓர் மாத்திரை ஒடுங்கு முன்னரே
சித்திர வயப்பரி சீயம் கூளிகள்
இத்திறம் பூண்ட பல் இரதம் நல்கினான்.
15
   
1344.
அன்ன தேர்த் தொகை அதனை எம்பிரான்
மின்னு கால வேல் வீர வாகுவும்
பின்னர் எண்மரும் பிறரும் சாரத
மன்னரும் பெற வழங்கினான் அரோ.
16
   
1345.
பாகர் தூண்டிடப் படரும் தேர்கள் மேல்
வாகை சேர்தரும் வாகுவே முதல்
ஆனோர் அடைந்து அம் பொன் மால் வரைத்
தோகை மைந்தனைத் தொழுது போற்றினார்.
17
   
1346.
தொழுது வள்ளலைச் சூழ்ந்து மும்முறை
விழுமியது ஆகிய விடை பெற்று ஏகினார்
பழுது இல் நீத்தம் ஓர் பத்து நூறு எனக்
குழுமிப் பார் இடம் குலவிச் செல்லவே.
18
   
1347.
பாய பூதர்தம் படைக்கு வேந்தராய்
ஏயினார்க்குவீ் றிலக்கத்து எண்மராய்
மேயினார்க்கு எலாம் வீர வாகு ஓர்
நாயகம் பெறீஇ நடுவன் போயினான்.
19
   
1348.
அமர் விளைக்க முந்து அவனை ஏவியே
தமர வேலையில் தானை சூழ்தர
இமையவர்க்கு இறை ஏனையோர் தொழக்
குமர வேள் கடைக் கூழை யேகினான்.
20
   
1349.
பிற் பட எம்பிரான் பெயர ஏவலால்
முற்படு வீரனை முயங்கிப் பாரிடச்
சொல் படை படர்வன தூமம் தன்னொடு
சிற்பரன் நகை அழல் புரத்துச் சென்றபோல்.
21
   
1350.
அரி நிரை பூண்டதேர் அலகை பூண்டதேர்
பரி நிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ
விரி கடல் வரைப்பினில் மேக ராசியும்
கிரி உறழ் கலங்களும் கெழுமிச் செல்வபோல்.
22
   
1351.
இடையல் இரத மோடு இரதம் தாக்கிய
படையொடு படை வகை செறிந்த பல் வகைக்
கொடியொடு தொடி நிரை துதைந்த கூளியர்
அடு சமர் பயின்றிடும் அமைதி போலவே.
23
   
1352.
சங்கொடு பணைதுடி தடாரி காகளம்
பங்கம் இல் தண்ணுமை ஆதிப் பல்லியம்
எங்கணும் இயம்பின எழுந்து பூழிபோய்ச்
செங்க மலத்தவன் பதத்ததைச் செம்மிற்றே.
24
   
1353.
சாற்றும் இவ் இயல் புறத் தானை வீரரும்
சீற்ற வெம் புதரும் செல்ல வாகையான்
கோல் தொழில் அகற்றிய கோட்டு மா முகன்
போற்றிய மாய மா புரியைச் சேர்ந்தனன்.
25
   
1354.
சேர்ந்திடும் எல்லை பூதர் சேனை போய் நகரம் புக்கு
நேர்ந்திடும் அவுணரோடு நின்று அமர் விளைத்து
                                      நின்றார்
ஓர்ந்தனர் அதனைத் தூதர் ஓடித் தம் கோயில் புக்குச்
சார்ந்திடு திருவில் வைகும் தாரகர் தொழுது சொல்வார்.
26
   
1355.
எந்தை மற்று இது கேள் நும் முன் இமையவர்
                           தொகையை இட்ட
வெம் துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள்
                                  மைந்தன்
கந்தன் என்று ஒருவன் வந்தான் அவுணரைக் கடக்கும்
                                       என்னா
அந்தர நெறி செல் விண்ணோர் அறைந்திடக் கேட்டும்
                                       அன்றே.
27
   
1356.
என் இவர் மாற்றம் என்னா யாம் தெரி குற்றேம் ஆக
அன்னவர் இயம்பி ஆங்கே ஆயிரத்து இரட்டி என்னப்
பன்னுறு பூத வெள்ளம் படர்ந்திடக் குமரன் போந்தான்
முன்னுறு தூசி நம்தம் முதுநகர் அலைத்தது என்றார்.
28
   
1357.
என்றலும் வடவைத் தீயில் இழுது எனும் அளக்கர்
                                      வீழத்
துன்றிய எழுச்சி மானத் துண் எனச் செற்றம் தூண்ட
மின் திகழ் அரிமான் ஏற்று வியன் தவிசு இருக்கை
                                     நீங்கிக்
குன்று உறழ் மகுடம் அண்ட கோளகை தொட
                                  எழுந்தான்.
29
   
1358.
எழுந்து தன் மருங்கு நின்ற ஒற்றரை நோக்கி இந்தச்
செழும் திரு நகர் மேல் வந்த சேனையை முளிபுல்
                                    கானில்
கொழும் தழல் புகுந்தது என்னக் கொல்வன் நம் தானை
                                       முற்றும்
உழுந்து உருள்கின்ற முன்னர் ஒல்லைத் தடுந்திடுதிர்
                                     என்றான்.
30
   
1359.
அன்ன பணி முறை புரிவான் ஒற்றுவர்கள் போயிடலும்
                               அவுணன் நின்ற
கொன் உறு வேல் பரிசனரைக் கொடு வருதிர் இரதம்
                             எனக் கூறலோடும்
முன்னம் ஒரு நொடி வரையில் தந்திடலும் அதன்
                    இடையே மொய்ம்பில் புக்குப்
பின்னர்வரும் அமைச்சர்கள் தம் தொகை பரவ
               மதர்ப்பினொடு பெயர்தல் உற்றான்.
31
   
1360.
வீடுவான் போலும் இனித் தாரகன் என்றவன் சீர்த்தி
                             விரைவில் வந்து
கூடியே புரள்வதுவும் அரற்றுவதும் காப்பதும் ஆம்
                          கொள்கைத்து என்ன
நீடு சாமரத் தொகுதி பல விரட்ட வெள் ஒலியல்
                               நிமிர்ந்து வீசப்
பீடு சேர் தவள மதிக் குடை நிழற்ற வலம்புரிகள்
                             பெரிதும் ஆர்ப்ப.
32
   
1361.
ஈமத்தே நடம் புரியும் கண் நுதலோன் எடாத சிலை
                             என்ன மாலோன்
மாமத்தே எனக் கிடந்த முழுவயிரத் தண்டம் ஒன்று
                             வயிரக் கண்டைத்
தாமத்தேர் பெறுகின்ற மடங்கல் பல ஈர்ந்து வரும்
                             சகடத் திண்கால்
சேமத்தேர் மிசைப் போத ஏனையபல் படைக் கலமும்
                              செறிந்து நண்ண.
33
   
1362.
ஒற்றர் கூவிய வேலை ஏற்று எழுந்த அவுணர் கடல்
                             ஒருங்கு செல்லக்
கொற்ற மால் கரிபரிதேர் இனத்தினொடு வந்து ஈண்டக்
                                குழவித் திங்கள்
கற்றை வார் சடைக் கடவுள் வாங்கிய பொன்
                       மால்வரையைக் காவலாகச்
சுற்று மால் வரையென்னப் படைத்தலைவர் பஃறேரில்
                                 துவன்றிச் சூழ.
34
   
1363.
மொய் அமர் செய் கோலமொடு முப்புரமேல்
                  நடந்தருளும் முக்கண் மூர்த்தி
பை அரவின் தலைத்துஞ்சும் கணை தூண்ட மூண்ட
                        தழல் பதகர் ஆனோர்
மெய் உடலம் முழுதும் நுங்கத் தலை கொள்ளப்
           பெருந் தூம மிசைக் கொண்டு என்னச்
செய்ய முடி அவுணர் பெரும் கடலினிடை எழும் பூழி
                            சேட் சென்று ஓங்க.
35
   
1364.
கார்க் குன்றம் அன்ன திறல் கரிமீதும் பரிமீதும்
                             கடிதில் தூண்டும்
தேர்க்குன்றம் அதன் மீதும் வயவர்கள் தம்
                     கரங்களினும் செறி பதாகை
ஆர்க்கின்றது உயர்ந்து ஓங்கி அசைகின்றது எம்
                  மருங்கும் அம் பொன் நாட்டில்
தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசே போல்
                             துவன்றித் தோன்ற.
36
   
1365.
வாகை உள பல்லியமும் இயம்பத்தன் நகர் நீங்கி
                           மன்னர் மன்னன்
ஏகியதோர் படி நோக்கி உவரி மிசைக் கங்கைகள்
                        வந்து எய்து மாபோல்
சாகை உள பன்மரனும் பல் படையும் குன்றுகளும்
                             தடக்கை ஏந்திச்
சேகுடைய பெரும் சீற்றப் பூதர் படை ஆர்த்து எதிர்ந்து
                                   சென்றதன்றே.
37
   
1366.
எல்லோரும் தொழு தகைய குமரன் அடி இணை
                     வழுத்தி இகல் வெம் பூதர்
கல்லோடும் மரனோடும் கதையோடும் கணிச்சியோடும்
                                  கழுமுள் வீச
வில்லோடும் கணையோடும் வேலோடும் நேமி யொடும்
                                 மிக்க எல்லாம்
அல்லோடும் புரையு மனத்து அவுணர் படை எதிர்
                        சிதறி அமர் செய்திட்டார்.
38
   
1367.
எண் உறு படைகள் இவ்வாறு எதிர்தழீஇ அடரும்
                                   வேலை
விண் உறு பூழி என்னும் விரிதரு புகை மீச் செல்ல
மண் உறு குருதியான வன்னியை மாற்றுவார் போல்
கண் உறும் இமையோர் கண்கள் கடிப்புனல் கான்ற
                                   அன்றே.
39
   
1368.
இரிந்திடல் இன்றி நேர் வந்து ஏற்று அமர் புரிதலாலே
சொரிந்திடு குருதி பொங்கத் தோளோடு சென்னி துள்ளச்
சரிந்திடும் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் மாயப்
பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதரும் சிலவர் பட்டார்.
40
   
1369.
தேருடைத் தெறிந்து பாய்மாத் திறத்தினைச் சிதைத்து
                                         நீக்கி
ஆருடைத் திகிரிச் சில்லி அங்கையால் எடுத்துச் சுற்றிப்
போருடைத் திறலோர் தம்பால் பொம்மென நடாத்தும்
                                     பொற்பால்
காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார்
                                      அன்றே.
41
   
1370.
தேர் பரித்து எழுந்து மண்ணில் செல் உறாப் பவளச்
                                    செங்கால்
கார் பரித் தன்ன தோகைக் கவனவாம் புரவி யீட்டம்
போர் பரித்து ஒழுகு சீற்றப் பூதர்கள் புடைத்துச் சிந்திப்
பார் பரித்திடவே செய்தார் படிமகள் இடும்பை தீர்ப்பார்.
42
   
1371.
வால் உடைக் களிற்றின் ஈட்டம் வாரியே கரத்தால்
                                      எற்றிக்
கால் உடைத் திகிரி திண் தேர் கழல்களால் உருட்டிக்
                                       காமர்
பால் உடைப் புரவித் தானை பதங்களால் உழக்கிக்
                                     சென்றார்
வேல் உடைத் தடக்கை அண்ணல் விடுத்து அருள் வீர
                                         வீரர்.
43
   
1372.
வார் உரு புரசை பூண்டவன்களிற்று ஒருத்தல் யாவும்
சூர் உறு நிலையவாகித் துஞ்சிய தொகுதி சூழப்
பேர் உறு குருதி நீத்தம் பிறங்கு அழல் கதிர் காணாது
கார் உற ஊர்கோள் தோன்றும் காட்சியை ஒத்தது
                                      அன்றே.
44
   
1373.
கண் எதிர் நின்று போர் செய் கார் கெழும் அவுணர்ப்
                                       பற்றித்
துண் எனப் பூதர் வீசத் துளங்கிய கலன் களோடும்
விண் இடை இறந்து நொய்தின் வீழ்வது விசும்பில் தப்பி
மண் இடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே.
45
   
1374.
ஆயிர வெள்ள மாகும் கணவரும் ஆங்கண் உள்ள
பா இரும் குன்றம் எல்லாம் பன் முறை பறித்து வீசி
மாயிரும் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார்
ஏ யென உலகைச் சிந்தும் இறுதி நாள் எழிலி போல்வார்.
46
   
1375.
நிணம் கவர் ஞமலி ஓர் சார் ஞெரேல் எனக் குரைப்பப்
                                      புள்ளின்
கணங்களும் அலகை தானும் கறங்கிடக் கானத்து ஓங்கிப்
பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேர் அமர் விலக்கி
                                     யார்க்கும்
அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா.
47
   
1376.
தரைத் தடம் சிலையது ஆக தறு கண் வெம் பூதர்
                                     ஆனோர்
வரைத்துணை அன்ன தானே வலி கெழு குழவி ஆகத்
திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை
அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர்
                                     செய்வார்.
48
   
1377.
தத்துறு புரவித் திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி
பத்து நூறு ஒன்றில் வீழப் பழுமரப் பணை கொண்டு
                                        எற்றி
முத்தலை எஃகம் வீசி முசலத்தில் புடைத்து
                                  மொய்ம்பால்
குத்தி நின்று உழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூதவீரர்.
49
   
1378.
விழுந்தன படிவம் யாண்டும் விரிந்தன கவந்த மேன்
                                      மேல்
எழுந்தன குருதித் தாரை ஈர்த்தன நீத்தம் ஆக
அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய
கொழும் தசை மிசைந்து நின்று குரைவை ஆட்டு
                                 அயர்ந்த கூளி.
50
   
1379.
கண்டனன் இனைய தன்மை தாரகன் கடிய சீற்றம்
கொண்டனன் வையம் நீங்கிக் குவலயம் இசைக்குப்
                                       புற்றுத்
தண்டம் ஒன்று எடுத்துப் பூதப் படையினைத் தரையில்
                                       வீட்டி
அண்டமும் குலுங்க ஆர்த்திட்டு அடிகளால் உழக்கிச்
                                    சென்றான்.
51
   
1380.
அல் எனப் பட்ட மேனி அவுணர் கட்கு அரசன் கையில்
கல் எனப் பட்ட தண்டால் புடைத்தலும் கரங்கள்
                                     சென்னி
பல் எனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கில் சாய்ந்த
புல் எனப் பட்ட தம்மா பூதர் தம் சேனை எல்லாம்.
52
   
1381.
பிடித்திடு வயிரத் தண்டம் பெரும் கடல் பூத வெள்ளம்
முடித்திடல் புகழோ அன்றால் தாரக மொய்ம்பின்
                                     மேலோன்
அடித்திடும் காலை கீண்டது அம்புவி அடிப்பான் ஓங்கி
எடுத்திடும் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல்.
53
   
1382.
தார் இடம் கொண்ட மார்பத் தாரகன் வயிரத் தண்டம்
போர் இடம் கொண்டோர் சென்னி புயமுரம் கரங்கள்
                                       சிந்திக்
காருடம் கண்ட பாந்தட் கணம் எனத் துடிப்ப வீட்டிப்
பார் இடம் தன்னை எல்லாம் பார் இடம் ஆக்கிற்று
                                      அம்மா.
54
   
1383.
அன்று அரி விடுத்த ஆழி ஆரமா அணிந்த தீயோன்
கொன்றனன் அனிகம் என்னும் கொள்கையும்
                           அவன்மேல் செல்லும்
வன்திறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி
நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சு அழிந்து உடைந்து
                                      போனார்.
55
   
1384.
திண்கண நிரையின் வேந்தர் சிந்துழிச் சீற்றம் தூண்ட
எண் கணம் ஆகி உள்ள இலக்கரும் சிலை கால் ஊன்றி
மண் கணை முழவம் விம்ம வயிர் எழுந்து இசைப்ப
                                        வாங்கி
ஒண் கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார்.
56
   
1385.
சூழ்ந்தனர் துரந்த வாளி தோன் முகத்து அவுணன்
                                     யாக்கை
போழ்ந்தில ஊறது ஏனும் புணர்த்தில புன்மை ஆகித்
தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒரு மகன் தலைமை
                                      தாங்கி
வாழ்ந்தவர் தமக்குச் சொல்லும் சொல்லென வறிதுமீண்ட.
57
   
1386.
தரைப்படப் புகழ் வைத்துள்ள தாரகன் தடமார்பத்தைப்
புரைபடச் செய்திடாது பொள்ளெனப் பட்டு மீண்டு
நிரை படத் திறலோர் உய்த்த நெடும் கணை ஆன
                                      எல்லாம்
வரை படச் சிதறும் கல்லின் மாரி போல் ஆன அன்றே.
58
   
1387.
விடு கணை மாரியாவும் மீண்டிட வெகுண்டு விண்ணோர்
படை முறை வழங்கி நிற்பத் பதகன் மேல் அவைகள்
                                         எய்தா
உடைய தம் வலியும் சிந்தி ஒல் என மறிந்து செல்லக்
கடவுளர் அதனை நோக்கிக் கரங் குலைத்து இரங்கல்
                                        உற்றார்.
59
   
1388.
மற்றது காலை தன்னில் வலியினால் வயிரத் தண்டம்
சுற்றினன் தற் சூழ்கின்ற சுடர் மணிக் கடுமான் தேர்கள்
எற்றினன் புழைக் கை நீட்டி இலக்கர் தம் தொகையும்
                                        வாரிப்
பொன் தனுவோடும் வீழப் புணரியின் மீது விட்டான்.
60
   
1389.
துளும்பிய அளக்கர் தன்னில் சூழ் உற நின்ற தெங்கின்
வளம்படு பழுக்காய் வர்க்கம் மாருதம் எறியச் சிந்திக்
குளம் புகு தன்மை என்ன வீழ் தரு கொற்ற வீரர்
இளம் பிறை புரையும் வில்லோடு எழுந்து ஒரு புடையில்
                                      போனார்.
61
   
1390.
கொற்றவில் உழவன் வீர கோள் அரி அதனை நோக்கிச்
செற்ற மோடு ஏகிச் செவ்வேள் சேவடி மனத்துள்
                                      கொண்டு
பற்றிய தனுவை வாங்கி பகழி நூறு உய்த்துத் தீயோன்
பொன் தட மவுலி தள்ளிப் புணிரியும் நாண ஆர்த்தான்.
62
   
1391.
ஆர்த்திடும் ஓதை கேளா அண்டர்கள் அனையன் மீது
தூர்த்தனர் மலரின் மாரி தோன் முகன் அதனைக்
                                       காணா
வேர்த்தனன் மான முற்றான் வீர கேசரி மேல் அங்கைத்
தார்த்தடம் தண்டம் உய்த்துத் தனது மான் தேரில்
                                     சென்றான்.
63
   
1392.
சென்று ஒர் மாமுடி புனைஉழித் தண்டம் அத் திறலோன்
மன்றல் மார்பகம் படுதலும் வீழ்ந்தனன் மயங்கி
வென்றி மொய்ம் புடை ஆண்டகை அது கண்டு
                                    வெகுண்டு
குன்றம் அன்ன தோள் தாரகனொடு பொரக் குறித்தான்.
64
   
1393.
குறித்தே விறல் புயன் தாரகக் கொடியோன் எதிர்குறுகி
வெறித்தேன் மலர்த் தொடை தூங்கு தன் விறல் கார்
                                முகம் குனியாப்
பொறித்தே உறு கனல் வாளிகள் பொழிந்தே அவன்
                                      புரத்தில்
செறித்தே உற வளைத்தான் ஒரு சிலை தானவர்
                                    தலைவன்.
65
   
1394.
பொழிந்தான் சரமழை நம்மவன் புரமேலது பொழுதின்
இழிந்தான் சிலை உயர்ந்தான் கணை ஈர் ஏழு தொட்டு
                                       இறுப்ப
அழிந்தாய் எனை எதிர்ந்தாய் இதற்கு ஐயம் இலை
                                      என்னா
மொழிந்தான் ஒரு சூலம் தனை மொய்ம்பில் செல
                                    உய்த்தான்.
66
   
1395.
பொருமூவிலை வேல் அங்கு அவன் பொன் மார்பு உறப்
                                      பொருமிப்
பெரு மோக மோடே நின்றிடப் பின் அங்கு அது காணா
உருமேறு என அதிர் தாரகனுடனே அவன் துணையாய்
வருமூவரும் ஒரு நால்வரும் மாறு உற்று அமர்
                                     இழைத்தார்.
67
   
1396.
அமர் செய்திடும் எழுவீரரும் அவுணன் தனக்கு உடையக்
குமரன் பதம் தலைக் கொண்டும் கோமானது காணா
எமர்மற்று இவர் எல்லோரகளும் இரிந்தார் பொருது
                                     என்னாச்
சமர் முற்றிட வருதாரகத் தகுவன் முனம் அடைந்தான்.
68
   
1397.
ஒரு கார் முகம் இருகால் வளை உறவே குனித்து
                                 உகுதேன்
அருகா தொழுகிய தன்மையின் அவிர் நாண் ஒலி
                                  எடுப்பத்
திருகா நெடு வரை யானவும் தெருமந்தன அவுணர்
இரு காதையும் நனி பொத்தினர் ஏங்கு உற்றனர்
                                  இரிவார்.
69
   
1398.
நாண் கொண்டிடும் ஒலி கேட்டலும் நடுங்கா வெரு
                                   உற்றார்
பூண் கொண்டிடு சிலை வாங்கலும் மகிழ் உற்றிடு
                                 புலவோர்
சேண் கொண்டிடும் முகில் வேண்டினர் அது வந்திடச்
                                      சிறந்தே
மாண் கொண்டதன் உருமுச் செல மயங்கித் தளர்வது
                                       போல்.
70
   
1399.
மேதாவியர்கள் பரவும் திறல் வீரவாகு
மாதாரு வன்ன சிலை தன்னை வளைத்து வாகைத்
தாதார் பிணையல் புனைதாரகன் தன்னை நோக்கித்
தீதாம் அழல் போல் வெகுண்டே இது செப்புகின்றான்.
71
   
1400.
பொன்றா வலி கொண்டு அமர் ஆடிய பூதர் தம்மை
வன்தாழ் சிலை கொண்டு இடு வீரரை வன்மை தன்னால்
வென்றாம் என உன்னினை போலும் விரைந்து நின்னைக்
கொன்று ஆவி உண்பன் எனலும் கொடியோன்
                                    உரைப்பான்.
72
   
1401.
மாயன் தனை வென்றவன் நேமியை மாசில் கண்டத்
தேயும் படியே புனைந்தேன் வலி எண்ணுறாதே
நீ இங்கு அடுவாம் எனக் கூறினை நீடு மாற்றம்
சீயம் தனையும் நரி வெல்வது திண்ணம் ஆமோ.
73
   
1402.
சாரும் குறள் வெம் படை யாவையும் சாய்ந்தவீரர்
ஆரும் தொலை உற்றனர் நீயும் அயர்ந்து நின்றாய்
வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய்
பார் என் வலியால் உனது ஆவி படுப்பன் என்றான்.
74
   
1403.
என்னும் துணையில் சரம் ஆயிரம் ஏந்தல் உய்ப்பத்
தன்னம் கையில் ஓர் சிலை வாங்கினன் தாரகப் பேர்
மன்னன் கடிது கணை ஆயிரம் மாறு தூண்டிச்
சின்னம் புரிந்து கணை நூறு செலுத்தினான் ஆல்.
75
   
1404.
எவ்வக் கொடியோன் தொடு வாளியை ஏந்தல் காணா
அவ்வக் கணைகள் விடுத்தே அவை முற்று மாற்றக்
கை விற்கு ஒருவன் இவன் ஆகும் இக் காளை தன்னைத்
தெய்வப் படையால் முடிப்பேன் எனச் சிந்தை செய்தான்.
76
   
1405.
வெம் கனல் படை தாரகன் விட வீரவாகு வெகுண்டு
                                       பின்
செம் கனல் படை ஏவி அன்னது சிந்தவே வருணப்படை
அம் கண் உய்த்திட அவுணர் கோமகன் அடுபுனற்கு
                              இறை படையினைத்
துங்க முற்றிய வீரன் உய்த்தது துண்டம் ஆம் வகை
                                     கண்டனன்.
77
   
1406.
இரவி தன் படை அவுணன் விட்டனன் இவனும்
                            அப்படை ஏவியே
விரைவில் அன்னது தொலைவு கண்டனன் வீரமேதகு
                                     தாரகன்
உரம் மிகும் தனி ஊதை வெம் படை உந்தினான் அது
                                   கந்த வேள்
அருள் மிகும் தனி அடியன் மாற்றினன் அனைய தொல்
                               படைதனை விடா.
78
   
1407.
அனில வெம் படை வீறு அழிந்திட அவுணர் கோமகன்
                                     அம்புயன்
தனது தொல் படை ஏவினான் அது தணிவு இல் செற்ற
                                 மோடு ஏகலும்
வனை கருங்கழல் வீரவாகுவும் மற்று அவன் படை
                                   தூண்டியே
நினையும் முன் அது தொலைவு செய்தனன் நிகரில்
                              வானவர் புகழவே.
79
   
1408.
ஆய தன்மைகள் கண்டுதாரகன் அற்புதத்தினன்
                                 ஆகியே
மேய வானவர் படைகள் யாவையும் வீரன் மற்று இவன்
                                    வென்றனன்
மாய நீர்மையின் இங்கு இவன் திறல் வன்மை
                        கொள்ளுதும் இனி எனாத்
தீய புந்தியில் இனைய வாறு தெரிந்து சிந்தனை செய்து
                                        மேல்.
80
   
1409.
தொல்லை மாயையின் விஞ்சை தன்னை நவின்று உளம்
                               கொடு துண் என
மல்லன் மேவரு தாரகாசுரன் வடிவம் எண்ணில
                                     தாங்கியே
எல்லை தீர் தரு படை வழங்கினன் எங்கும் ஆகி
                                  இருள் குழாம்
ஒல்லை வந்து பரந்த போல் அவன் ஒருவன் நின்று
                                 அமர் புரியவே.
81
   
1410.
கண்டு மற்று அது வான் உளோர்கள் கலங்கி
                           ஏங்கினர் முன்னரே
விண்டு நீள் இடை நின்ற பூதர் வெருண்டு பின்னரும்
                                     ஓடினார்
மண்டு பேர் அமர் செய்து அயர்ந்திடும் ஆன வீரரும்
                                   அச்ச மேல்
கொண்டு நின்றனர் முறுவல் செய்தனர் குணலை
                            இட்டனர் அவுணரே.
82
   
1411.
தாரகப் பெயர் அவுணர் கோன் மாயையின் சமரும்
ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல் மொய்ம் புடையோன்
பேர் அழல் பொறி கதுவுற நோக்கியே பிறங்கும்
வீரபத்திரன் நெடும் படை எடுத்தனன் விடுவான்.
83
   
1412.
துங்க உக்கிரச் சிம்புள் மாப்படையினைத் தூயோன்
செம்கை பற்றலும் அன்னது தாரகன் செயலால்
அங்கண் நின்றிடு மாயை கண்டு அச்சம் உற்று
                                   அழுங்கிப்
பொங்கு பானுமுன் இருள் என முடிந்த அப்பொழுதே.
84
   
1413.
தன் புணர்ப்பு உறு மாயை தான் உடைதலும் தமியாய்
முன்பு நின்றது ஓர் தாரகன் மொய்ம்பு உளான் தன்னைப்
பின்பு மாயையில் படுத்த ஓர் சூழ்ச்சியைப் பிடித்து
மின் பொலிந்த தன் தேரைவிட்டு ஓடினான் விரைவில்.
85
   
1414.
தாரகன் தொலைந்து ஓடலும் தனக்கு இணை இல்லோன்
போர் அழிந்து வென் இட்டவன் தன் மிசைப் புத்தேள்
வீர வெம் படை விடுப்பது வீரம் அன்று என்னாச்
சீரிது ஆகிய தூணியுள் அன்னதைச் செறித்தான்.
86
   
1415.
அற்ற போர் வலித் தாரகன் பின் வரைந்தணுகிப்
பற்றி நாண் கொடு புயம் தனைப் பிணித்து எனைப்
                                      பணித்த
கொற்ற வேலன் முன் உய்க்குவன் யான் எனக் குறித்து
மற்று அவன் தனைத் தொடர்ந்தனன் நெடும் திறல் வாகு.
87
   
1416.
வேழ மா முகற்கு இளவலை உன்னியே வீரன்
ஆழி மால் கடலாம் என ஆர்த்துவை தணுகச்
சூழு மாயையின் இருக்கை ஆம் தொல் கிரவுஞ்சப்
பாழி ஒன்று சென்று ஒளித்தனன் தாரகப் பாதகன்.
88
   
1417.
முன்னம் ஆங்கு அவன் போகிய பூழை உள் முடுகிப்
பொன்னின் வாகையந் தோள் உடை ஆண்டகை புகலும்
அன்னது ஓர் வரை அகம் எலாம் ஆயிரம் கதிரின்
மன்னனே ஏகுறா இருள் நிலம் போன்று வைகியதே.
89
   
1418.
நீளு மால் இருள் படர்தலும் சில் விடை நெறியால்
தாளின் ஒற்றியே படர்ந்தனன் தாரகற் காணான்
ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின்
                                  புணர்ப்பான்
மீளுகின்றது ஓர் நெறியையும் கண்டிலன் வெகுண்டான்.
90
   
1419.
செற்ற மிக்கவன் மாயை இவ்வரை எனச் சிந்தித்து
உற்ற காலையில் அவுணன் ஆகிய கிரவுஞ்சப்
பொற்றை அன்னது கண்டு மோகத் துயில் புரிந்து
மற்றவன் தனது உணர்வினை மையல் செய்ததுவே.
91
   
1420.
இயல் இசைத் தமிழ் முனிவரன் இசைத்த சூள் இசைவால்
வியல் உடைத் திறல் வாகுவை அவ்வரை மிகவும்
மயல் உடைப் பெருமாயம் அது இயற்றலும் மயங்கித்
துயிலல் உற்றனன் தொல்லையின் உணர்வு எலாம்
                                    துறந்தே.
92
   
1421.
அம் மலைக் கணே முன்னவன் உறங்கலும் அனைய
செம்மலுக்கு இளையோர் இரு நால்வரும் சிறந்த
தம் இனத்தர் ஓர் இலக்கரும் சாரதர் பலரும்
விம்மல் உற்றனர் சிறை இலாப் பறவையின் மெலிந்தார்.
93
   
1422.
உடைந்து போயின தாரகன் தன்னை நம் உரவோன்
தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடும் துன்னி
அடைந்து வெற்பினில் போர் புரிவான் கொலோ அங்கட்
படர்ந்து நாடுதும் யாமும் என்று எண்ணினர் பலரும்.
94
   
1423.
எண்ணியே இசைந்து இளையோர் எண் மரும் இலக்கம்
நண்ணும் வீரரும் பாரிடம் தன்னுள் நாயகரும்
அண்ணல் வான் படை ஏந்தியே ஆயிடை அகன்று
விண் உலாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில்.
95
   
1424.
ஆய வெற்பினில் வீரவாகுப் பெயர் அடலோன்
போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலும்
தீய தொல்வரை முன்னவற்கு இழைத்திடு திறம் போல்
மாயம் எண்ணில புரிதலும் மயங்கியே வதிந்தார்.
96
   
1425.
வெற்றி வீரவாகு பெயர் அண்ணலும் வீரர்
மற்றி யாவரும் மயங்கலும் தாரகன் வாரா
உற்று நோக்கி நம் மாயையால் இவர் எலாம் ஒருங்கே
இற்று உளார் என மகிழ்ந்து மால் வரை மிசை
                                   எழுந்தான்.
97
   
1426.
அண்ட மீமிசை நின்ற வானவர்கள் இவ் அனைத்தும்
கண்டு கடபுனல் பனிவர அரற்றியே கலங்கிக்
கொண்ட துன்பொடு பதை பதைத்து ஓடினர் கூளித்
தண்டம் யாவையும் வெருவின தலைவர் இன்மையால்.
98
   
1427.
மலையின் மீமிசை யெழுதரு தாரகன் மற்றோர்
தலைமை ஆகிய விரத மேல் கொண்டு தானவர்கள்
பலரும் வந்து வந்து ஆர்த்தனர் சூழ்தரப் பைம் பொன்
சிலையது ஒன்றினை வாங்கியே செருநிலம் சென்றான்.
99
   
1428.
நீடு தன் சிலை நாண் ஒலி கொண்டு நீள் சரங்கள்
கோடி கோடி மற்றொரு தொடை ஆகவே கொளுவி
ஆடல் சேர் தரு பூதர் மேல் பொழிதலும் அலமந்து
ஓடல் உற்றனர் திசையினும் விண்ணினும் உலைந்தே.
100
   
1429.
ஆன காலையின் நாரதன் இனைய கண்டு அழுங்கி
மேனி துண் என வியர்ப்புற வழிக் கொடு விரைந்து
போன விண்ணவர் தம்மொடு சென்று புத்தேளிர்
சேனை காவலன் நின்றதோர் கடைக் கூழை சேர்ந்தான்.
101
   
1430.
அரிது மாதவம் புரி தரு நாரதன் அடலின்
விரவு மாயிரம் பூத வெள்ளத்தொடு மேவும்
கருணை சேர் அறு முகத்தானைக் கண்டு கண் களித்துச்
சுரர் களோடு போய் இறைஞ்சியே இனையன சொல்வான்.
102
   
1431.
ஐய நின் படை வீரர்கள் பெரும் சமர் ஆடி
வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச்
செய்ய மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப்
பொய்யின் மொய்ம்புடைத் தாரகன் தன்னொடும்
                                 பொருதார்.
103
   
1432.
தலைக் கண் ஆகிய வீரனும் தம்பியர் பிறரும்
இலக்க வீரரும் பார் இடத்தலைவர்கள் யாரும்
புலைக் கொடும் தொழில் தாரகன் தன்னொடும்
                                 பொரத்தன்
மலைக் கண் உய்த்தனன் அவர் தமைச் சூழ்ச்சியின்
                                   வலியால்.
104
   
1433.
உய்த்த காலையில் அவுணன் ஆகிய கிரவுஞ்சம்
மெத்து மாயைகள் அனையவர்க்கு இழைத்தலும்
                                   வெருவிப்
பித்தர் ஆம் என மயங்கினர் போலும் ஆல் பின்னர்
இத்திறம் தனை உணர்ந்தனன் தாரகன் என்போன்.
105
   
1434.
தெரிந்து தாரகன் மகிழ்வொடு பறந்தலை சென்று
துரந்து நம் பெரும் தானையைக் கணை மழை சொரிய
முரிந்து போயின நிகழ்ச்சி யீது உயிர்த்தொகை முற்றும்
இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான்.
106
   
1435.
என்ற காலையில் நாரதன் உள்ளமும் இமையோர்
நின்று தாம் அயர்கின்றதும் அமரர் கோன் நெஞ்சில்
துன்று சோகமும் நான்முகன் ஆதியோர் துயரும்
ஒன்ற நோக்கியே அறுமுகப் பண்ணவன் உரைப்பான்.
107
   
1436.
ஆரும் இது கேண் மின் அமரர் ஆடுகளன் ஏகித்
தாரகனை வேல் கொடு தடிந்து அவுணர் வைகும்
ஓர் அரணம் ஆன கிரவுஞ்ச கிரி செற்றே
வீரர் தமை ஓர் இறையின் மீட்டிடுவன் என்றான்.
108
   
1437.
எந்தை இவை கூறுதலும் யாரும் அவை தேர்ந்து
சிந்தை உறுகின்றது உயிர் செற்று முடிவு இல்லா
அந்தம் இல் மகிழ்ச்சியுடன் ஆடி இசை பாடிக்
கந்தன் அடி வந்தனை புரிந்தனர் களிப்பால்.
109
   
1438.
கந்த முருகேசனது காலை முது பாகாய்
வந்தது ஒரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச்
சிந்தை தனில் முந்தும் வகை தேர் அதனை வல்லே
உந்துதி விரைந்து என உரைத்து அருள லோடும்.
110
   
1439.
என்ன இனிது என்று தொழுதே எழுவகைத்தாம்
தன் இனம் அது ஆகியவர் தாங்கள் புடைபோதக்
கொன்னு உனைய தாம் முளவு கோல் கயிறு பற்றித்
துன்னு பரிமான் நிரைகள் தூண்டி மிக ஆர்த்தான்.
111
   
1440.
ஆன காலை தனில் அண்டமும் வையம்
தானும் அங்கு உள தடங்கிரி யாவும்
ஏனை மா கடலும் எண் திசை உள்ள
மான வேழமும் நடுங்கின மன்னோ.
112
   
1441.
வாவு கின்ற பல மா நிரை தூண்டத்
தேவர் தங்கள் சிறை தீரிய செல்வோன்
மேவு தொல் இரதம் விண்ணெறி கொண்டே
ஏவரும் புகழ ஏகியது அன்றே.
113
   
1442.
ஆதி அம் குமரன் அவ்வழி பொன்தேர்
மீது செல்லுதலும் விண் முகில் பல்வேறு
ஓதும் வண்ணமுடன் உற்று என வானில்
பூதசேனை புடை போயின அன்றே.
114
   
1443.
போர் அழிந்து புறகிட்டு எதிர் பூதர்
ஆரும் நேர்ந்து தொழுது ஆற்றலொடு எய்த
நாரணன் தனது நன் மருகு ஆனோன்
தாரகன் திகழ் சமர்க்களம் உற்றான்.
115
   
1444.
கவன மோடு படர் காலினும் உந்திச்
சிவன் மகன் தனது சேனையது ஆனோர்
உவரி ஆம் என உறும் திறம் நோக்கி
அவுணர் தானையை அணிந்து எதிர் சென்றார்.
116
   
1445.
சகம் துதிக்க வரு சாரதர் தாமும்
அகந்தை உற்ற அவுணத் தொகை யோரும்
இகந்த வன்மையொடு எதிர்ந்து இகல் எய்தி
வெகுண்டு பேர் அமர் விளைத்திடல் உற்றார்.
117
   
1446.
கரம் கொள் நேமிகள் கணிச்சிகள் தீவாய்ச்
சரங்கள் ஆதியின தானவர் விட்டார்
உரம் கொள் மால் வரைகள் ஓங்கும் எழுக்கள்
மரங்கள் விட்டனர் மறம் கெழுபூதர்.
118
   
1447.
முரிந்த தேர் நிரை முடிந்தன மாக்கள்
நெரிந்த தானவர் நெடும் தலை சோரி
சொரிநிந் பூதர் மெய் துணிந்தன வானில்
திரிந்த பாறுகள் செறிந்தன அன்றே.
119
   
1448.
நிறம் கொள் செம் குருதி நீத்தம் அது ஆகிக்
கறங்கி ஓடின கவந்தம் ஓர் கோடி
மறம் கொடு ஆடுவ வயின் தொறும் ஆகிப்
பிறங்கு கின்றன பிணம் கெழு குன்றம்.
120
   
1449.
அனைய வாறு இவர் அரும் சமர் ஆற்றப்
புனையல் வாகை உள பூதர்கள் தம்மால்
வினையம் வல்ல அவுணர் வெவ்வலி சிந்தி
இனைதலோடும் இரிகு உற்றனர் அன்றே.
121
   
1450.
தன் படைத் தொலைவு தாரகன் நோக்கிக்
கொன் படைத்த குனிவில் குனி வித்தே
மின் படைத்த பல வெம் கணை தூவி
வன் படைக் கணம் வருந்த நடந்தான்.
122
   
1451.
நடந்து எதிர்ந்த கண நாதரை எல்லாம்
தொடர்ந்து பல் கணை சொரிந்து துரந்தே
இடம் திகழ்ந்த இமையத்து இறை நல்கும்
மடந்தை தந்த திருமைந்தன் முன் உற்றான்.
123
   
1452.
உற்ற காலை தனில் ஒற்றரை நோக்கிக்
சற்று நீதி அறு தாரக வெய்யோன்
செற்றம் எனும் அழல் சிந்தையின் மூள
மற்று இவன் கொல் அரன் மாமகன் என்றான்.
124
   
1453.
என்னலும் குமரன் இங்கு இவனே யாம்
மன்ன என்றிடலும் மற்று அவன் ஏறும்
துன்னு தேர் கடிது தூண்டி எவர்க்கும்
முன்னவன் மதலை முன்னுற வந்தான்.
125
   
1454.
முழுமதி அன்ன ஆறு முகங்களும் முன் நான்கு ஆகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணி மணித் தண்டை ஆர்க்கும்
செழுமலர் அடியும் கண்டான் அவன் தவம் செப்பற்
                                       பாற்றே.
126
   
1455.
தற்பம் அது உடைய சிந்தைத் தாரகன் இனைய ஆற்றால்
சிற்பர மூர்த்தி கொண்ட திரு உரு அனைத்தும் நோக்கி
அற்புதம் எய்தி நம் மேல் அமர் செய வந்தான் என்றால்
கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன் கொல் என்றான்.
127
   
1456.
இந்தவாறு உன்னிப் பின்னர் யார்க்கும் மேலாகும் ஈசன்
தந்தது ஓர் வரமும் வீரத் தன்மையும் வன்மைப் பாடும்
முந்து தாம் பெற்ற சீரும் முழுவதும் நினைந்து சீறிக்
கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான்.
128
   
1457.
நாரணன் தனக்கு மற்றை நான்முகன் தனக்கும் வெள்ளை
வாரணன் தனக்கும் அல்லால் மதி முடி அமலனுக்கும்
தாரணி தனில் எமக்கும் சமரினை இழைப்ப இங்கு ஓர்
காரணம் இல்லை மைந்தா வந்தது என் கழறுக என்றான்.
129
   
1458.
அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டம்
                                   செய்யும்
இறைவன் ஆகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள்
சிறை இடை வைத்த தன்மை திருவுளம் கொண்டு நும்தம்
விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை என்றான்.
130
   
1459.
கூரிய வேல் படைக் குமர நாயகன்
பேர் அருள் நிலைமையால் இனைய பேசலும்
போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத்
தாரகன் என்பவன் சாற்றல் மேயினான்.
131
   
1460.
செந்திருத் திகழும் மார்புடைய செங்கணான்
சுந்தரக் கலுழன் மேல் தோன்றிப் போர் செய்தே
அந்தரக் கதிர் புரை ஆழி உய்த்தது என்
கந்தரத்து அணிந்தது காண் கிலாய் கொலோ.
132
   
1461.
இன்று காறும் எம்முடன் இகலிப் போர் செயச்
சென்றுளார் யாவரும் சிறிது போழ்தினுள்
பொன்றுவார் இரிந்தனர் போவர் அல்லது
வென்று உளார் இலை அது வினவலாய் கொலோ.
133
   
1462.
முட்டி வெம் சமரினை முயல முன்னம் நீ
விட்டிடு தலைவரை வென்று வெற்பினில்
பட்டிட இயற்றினன் பல கணங்களை
அட்டனன் அவற்றினை அறிந்திலாய் கொலோ.
134
   
1463.
ஆகையால் எம்முடன் அமர் இயற்றியே
சோகம் அது அடையலை சூல பாணி பால்
ஏகுதி பால நீ என்று கூறலும்
வாகை அம் குமர வேள் மரபில் கூறுவான்.
135
   
1464.
தார் அணி மறையவன் ததீசி தன் மிசை
நாரணன் விடுத்த ஓர் நலம் கொள் ஆழிதன்
கூரினை இழந்து போய்க் குலாலன் சக்கர
நீர்மை அது ஆனது வினவலாய் கொல் நீ.
136
   
1465.
சூற் புயல் மேனியான் துங்கச் செம் கையின்
பாற் படு திகிரி போல் பழியில் துஞ்சுமோ
வேற்புறு படைக்கு எலாம் இறைவன் ஆகு நம்
வேல் படை நின் உயிர் விரைவின் உண்ணுமால்.
137
   
1466.
உங்கள் பேர் ஆற்றல் இவ் உலகை வென்றன
இங்கு நாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன
அம் கண் மா ஞாலம் உண்ட அமரும் ஆர் இருள்
பொங்கு பேர் ஒளி வர விளிந்து போன போல்.
138
   
1467.
ஈட்டிய மாயைகள் எவையும் தன்வழிக்
காட்டிய கிரியையும் கள்வ நின்னையும்
தீட்டிய வேல் கொடு செற்றுச் சேனையை
மீட்டிடு கின்றனன் விரைவினால் என்றான்.
139
   
1468.
என்றலும் சீறியே இகலித் தாரகன்
குன்று உறழ் தன் சிலை குனியக் கோட்டியே
மின் திகழ் நாண் ஒலி எடுப்ப விண்மிசைச்
சென்றிடும் அமரரும் தியக்கம் எய்தினார்.
140
   
1469.
எய்திய காலையில் எந்தை கந்தவேள்
கைதனில் இருந்த ஓர் கார் முகந்தனை
மொய்தனில் வாங்கி நாண் முழக்கம் கோடலும்
ஐதென உலகு எலாம் அழுங்கிற்று என்பவே.
141
   
1470.
நாரியின் பேர் ஒலி நாதன் கோடலும்
ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார்
பேர் உலகு எங்கணும் பேதுற்று ஏங்கின
தாரக முதல்வனும் தலை துளக்கினான்.
142
   
1471.
துளக்கிய தாரக சூரன் கைத்தலம்
கொளல் குரி வில் உமிழ் கொள்கைத்து ஆல் என
வளக்கதிர் நுனை கெழு வயிரவான் கணை
அளக்கரும் எண் இல ஆர்த்துத் தூண்டினான்.
143
   
1472.
ஆயதோர் காலையில் ஆறு மாமுகன்
மீ உயர் சிலைதனில் விரைவில் ஆயிரம்
சாயகம் தூண்டியே தாரகா சுரன்
ஏயின பகழிகள் யாவும் சிந்தினான்.
144
   
1473.
சிந்திய காலையில் செயிர்த்துத் தாரகன்
உந்தினன் பின்னரும் ஓர் ஆயிரம் கணை
கந்தனும் அனையது கண்டு வல்லையின்
ஐந்திரு பகழி தொட்டு அவற்றை நீக்கினான்.
145
   
1474.
மீட்டும் அத்தாரகன் விசிகம் வெம் சிலை
பூட்டிய வாங்கலும் புராரி காதலன்
ஈட்டம் ஒடு ஒரு கணை ஏவி ஆங்கு அவன்
தோள் துணை வில்லினைத் துண்டம் ஆக்கினான்.
146
   
1475.
ஆங்கு ஓர் சிலையைக் குனித்தான் அது காலை தன்னில்
எம்கோ முதல்வன் ஒரு பாணியின் ஏந்து வில்லில்
செங்கோல் வகையா ஆயிரம் பூட்டினன் செல்ல
                                   உய்த்தான்
வெம் கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில்.
147
   
1476.
சேரார் பரவும் திறல் வேலவன் செய்கை நோக்கித்
தாரார் முடித் தாரக வீரன் தனது வில்லில்
ஓர் ஆயிரம் வாளிகள் பூட்டினன் ஒல்லை உய்த்து
நராய் விரவும் கணையாவையும் நீறு செய்தான்.
148
   
1477.
வெய்யான் அநந்தம் கணை தூண்ட விமலன் நல்கும்
துய்யான் அவைகள் அறுத்துக் கணை கோடி தூண்டி
மையார் அவுணர் புகழ் தாரகமான வேழம்
எய்யாகும் வண்ணம் செறித்தான் அவன் யாக்கை
                                     எங்கும்.
149
   
1478.
ஒரு கோடி வாளி உறலோடும் உருத்து நீசன்
இரு கோடி வாளி விட அன்னதை ஏவின் நீக்கி
முரு கோடிய தார் அசுரேசன் முகம் கொள் கையும்
பொரு கோடும் வீழ விடுத்தான் இரு புங்க வாளி.
150
   
1479.
வந்து அங்கு இரண்டு சரமும் பட மாயை மைந்தன்
தந்தங்கள் கையோடு இறலோடும் தளர்ச்சி எய்தி
முந்தும் கணை ஆயிரம் தன்னை முனிந்து தூண்டிக்
கந்தன் தடம் தேர்த் துவசம் துகள் கண்டு நின்றான்.
151
   
1480.
மல்லல் கொடி இற்றது கண்டு மறம் கொள் வெய்யோன்
வில்லைக் கணை நான்கு இரண்டால் நிலம் மீது வீட்டித்
தொல்லைக் கனலின் கணை ஆயிரம் தூண்டி
                                    அன்னோன்
செல் உற்ற திண் தேர் பரி பாகொடு சிந்தி நின்றான்.
152
   
1481.
வேறு அங்கு ஒருதேர் மிசை யேறி ஒர் வில்லை வாங்கி
நூறைந்து இருதீ விசிகந்தனை நொய்தின் ஏவி
மாறு இன்றி வைகும் பரமன் வடிவான செவ்வேள்
ஏறும் தடம் தேர் வலவன் புயத்து எய்த உய்த்தான்.
153
   
1482.
வென்றோர் புகழும் குமரன் வியன் தேர் கடாவிச்
சென்றோன் வருத்தந் தெரிந்து ஆயிரம் தீயவாளி
வன்றோன் முகத் தாரகன் நெற்றியுள் மன்ன உய்ப்பப்
பொன் தோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான்.
154
   
1483.
வீழ் உற்றிடலும் விழு செம்புனல் வெள்ள மிக்கே
தாழ் உற்ற பாரில் புகுந்தே புடை சார்தல் உற்ற
பாழிக் கடலில் பரிமா முகம் பட்ட செந்தீச்
சூழிக் களிற்றின் வதனத்தினும் தோன்றும் என்ன.
155
   
1484.
மன் ஆகிய தாரகன் அங்கண் மயங்கி வீழ
அன்னான் தனது படைவீரர் அதனை நோக்கிக்
கொன்னார்சினங் கொண்டு அடுபோரைக் குறித்து நம்பன்
தொன்னாள் உதவும் திறல் மைந்தனைச் சூழ்ந்து
                                    கொண்டார்.
156
   
1485.
சூலம் திகிரிப் படை தோமரம் துய்ய பிண்டி
பாலம் சுடர் வேல் எழு நாஞ்சில் பகழி தண்டம்
ஆலம் கணையங் குலிச ஆயுதம் ஆதி ஆக
வேலும் படைகள் பொழிந்து ஆர்த்தனர் எங்கும் ஈண்டி.
157
   
1486.
கறுத்தான் அவர் தம் செயல் கண்டு தன் கார் முகத்தை
நிறுத்தா வளையாக் கணை மா மழை நீட உய்த்து
மறுத்தான் உடைய கொடும் தானவர் வாகை சிந்தி
அறுத்தான் விடுதொல் படை யாவையும் ஆடல்
                                     வேலோன்.
158
   
1487.
வெய்தாகிய தீம் கணை மாரி விசாகன் மீட்டும்
பெய்தான் அவுணர் முடி தன்னைப் பிறங்கு மார்பைத்
துய்த்தான் உறும் வாயினை அங்கையைத் தோளைத்
                                     தாளைக்
கொய்தான் குருதிக் கடல் எங்கணும் கொண்டது அன்றே.
159
   
1488.
வில்லோர் பரவும் திறல் வேலவன் வெய்ய கோலால்
அல் ஓடிய தீய மனத்தானவர் ஆயினோரில்
பல்லோர் இறந்தார் குருதிக் கடல் பாய்ந்து நீந்திச்
சில்லோர்கள் தத்தம் உயிர் கொண்டு சிதைந்து போனார்.
160
   
1489.
மைக் கார் சிவந்தது எனும் தாரகன் மையல் நீங்கி
அக்காலை தன்னில் எழுந்தே அயல் போற்றி நின்று
தொக்கார் தமை யாரையும் காண்கிலன் துன்பம் எய்தி
நக்கான் அவர் தம் செயல் கண்டு நவிறல் உற்றான்.
161
   
1490.
செய்ய வார் சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கு ஒருவன்
                                        பொரக்
கை இழந்து முகத்தின் ஊடு கவின் கொள் கோடும்
                                    இழந்தனன்
மையல் எழுதி விழுந்தனன் பொரும் வலிய தானையும்
                                     மாண்டன
ஐய வீங்கு ஒரு தமியன் நின்றனன் அழகிதால் எனது
                                  ஆண்மையே.
162
   
1491.
தாவில் வெம் சிலை வன்மை கொண்டு சரங்கள்
                          எண்ணில தூண்டியே
மேவலான் இவன் உயிர் குடிப்பதும் வெல்லு கின்றதும்
                                    அரியதால்
தேவர் மாப்படை தொடுவன் இங்கு இனி என்று
                            சிந்தனை செய்துபின்
ஏவரும் புகழ் தாரகா சூரன் இனைய செய்கை
                                   இயற்றினான்.
163
   
1492.
அடல் அரி நான்முகன் ஆதி வானவப்
படையினை யாவையும் பவம் செய்தாரகன்
விட விட வந்தவை வெருவி மேலையோன்
புடைதனில் ஒடுங்கியே போற்றி நின்றவே.
164
   
1493.
செம் கண் மால் அயன் முதல் தேவர் மாப்படை
துங்கமொடு ஏகியே துளங்கி வேல் உடைப்
புங்கவன் பாங்கரில் போற்றி நிற்றலும்
அங்கு அது கண்டனன் அவுணர் மன்னவன்.
165
   
1494.
ஒருவினன் அகந்தையை உள்ளம் ஓர் இறை
வெருவினன் விம்மிதம் மிகவும் எய்தினான்
எரிகலுழ் விழியினன் இவனை வென்றிடல்
அரியது போலும் என்று அகத்தில் உன்னினான்.
166
   
1495.
பாங்கரின் மாது உடைப் பரமன் தொல் படை
ஈங்கினி விடுதும் என்று எண்ணி அப்படை
வாங்கினன் அருச்சனை மனத்தினால் ஆற்றினான்
ஓங்கி இரும் சினமுடன் ஒல்லை ஏவினான்.
167
   
1496.
சங்கரன் தொல் படை தறுகண் ஆலமும்
புங்கவர் படைகளும் பூத ராசியும்
அங்கத நிரைகளும் அளப்பில் சூலமும்
வெங் கனல் ஈட்டமும் விதித்துச் சென்றதே.
168
   
1497.
கலை குலாம் பிறை முடிக் கடவுள் மாப்படை
அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும்
உலைகுறாது அலமர உருத்துச் சேறலும்
இலை குலாம் அயில் உடை எந்தை நோக்கினான்.
169
   
1498.
கந்தவேள் அனையது கண்டு தந்தையைச்
சிந்தையில் உன்னி ஓர் செங்கை நீட்டியே
அந்த வெம் படையினை அருளில் பற்றினான்
தந்தவன் வாங்கிய தன்மை என்னவே.
170
   
1499.
நெற்றியில் விழி உடை நிமலன் காதலன்
பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான்
மற்று அது தாரக வலியன் கண் உறீஇ
இற்றது நம் திரு இனி என்று ஏங்கினான்.
171
   
1500.
தேவர்கள் தேவனார் தெய்வத் தொல் படை
ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான்
மூ இரு முகம் உடை முதல்வன் வன்மையை
நாவினில் ஒருவரால் நவிலல் பாலதோ.
172
   
1501.
ஆயினும் அரன்மகன் அறத்தின் போர் அலால்
தீயது ஓர் கைதவச் செருவ துன்னலான்
மாயைகள் ஆற்றியே மறைந்து நின்று நான்
ஏ யென இயற்றுவன் அமர் என்று எண்ணினான்.
173
   
1502.
கையனும் இவ்வகை கருத்தில் உன்னியே
ஒய் எனவே கிரவுஞ்ச வெற்பின் முன்
வையமொடு ஏகி நீ வல்ல மாயைகள்
செய்குதி செய்குதி என்று செப்பினான்.
174
   
1503.
செப்பிய இறுவரை கிரவுஞ்சம் திகழ் உறு மாயையின்
                                நிகழ் உன்னி
முப்புர வகை பல என நிற்ப முரனு உறு தாரக
                              முதல்வன் தான்
அப்புர நிருதர்கள் என நின்றான் அகல்வரை பல பல
                                  முகில் ஆக
ஒப்பறு சூரன் அது இளையோனும் உரும் என அவை
                          இடை உலவு உற்றான்.
175
   
1504.
வேலைகள் உருவினை வரை கொள்ள விசயம் அது
                      உடையது ஒர் அசுரேசன்
காலம் அது இறுதியில் உலகு உண்ணும் கனை ஒலி
                      அனல்கள் என நின்றான்
சீலம் இன் முதுகிரி நெடு நேமித் திருவரை சூழ் தரும்
                                  இருள் ஆக
மால் கரி முகமுள அவுணத் தான் வரை அறு பாரிட
                                 நிரையானான்.
176
   
1505.
இந்திரன் முதல் உள சுரர் வைகும் ஏழ் உடன் ஒரு
                            திசை வேழம் போல்
அந்த நெடும் கிரி வரலோடும் அருகினில் உறுகுல கிரி
                                       ஆகித்
தந்தியின் முகம் உள அவுணன் தான் சட சட முதிர்
                            ஒலி உடன் வந்தான்
முந்திய தம் தமது உரு மாறி முறை முறை நின்றது ஒர்
                                 திறனே போல்.
177
   
1506.
வாயுவின் உரு என மலை செல்ல மதகிரி முகம் உள
                                 பதகன் தான்
தேயுவின் உரு என வரல் உற்றான் திரியவும் நெடுவரை
                                  விரைவோடும்
காய் கனல் உகு ஞெகிழிகள் ஆகிக் ககன மது இடை
                               உற மிடைகாலை
ஆயிர கோடி வெய்யவரே போல் அலமரல் உற்றனன்
                                அறம் இல்லான்.
178
   
1507.
அவ்வகை தாரகன் வரையோடும் அளவறு மாயையின்
                                 வடிவு எய்தி
எவ்விடையும் செறிதரல் ஓடும் எம் பெருமான் அவன்
                               இவை காணாத்
தெவ் வலி கொண்டு உறும் இவன் ஆவி சிந்துவன்
                  என்று உளம் மிசை கொண்டே
கைவரு வேல் படை தனை நோக்கி இனையன சில
                           மொழி கழறுற்றான்.
179
   
1508.
தாரகன் என்பது ஓர் பேரோனைச் சஞ்சலம் உறு
                                  கிரவுஞ்சத்தை
ஓர் இறை செல்லும் முன் உடல் கீறி உள் உயிர் உண்டு
                                   புறத்து ஏகிப்
பார் இடர் தம்மை இலக்கத்து ஒன்பதின்மர் ஆக
                                   உரைக்கின்ற
வீரரை மீட்டி இவண் வருக என்றே வேல் படை
                          தன்னை விடுத்திட்டான்.
180
   
1509.
சேய் அவன் விட்டிடு தனி வைவேல் செரு முயல்
                          தாரகன் வரையோடும்
ஆய் இடை செய்த புணர்ப்பு எல்லாம் அகிலமும் அழி
                            தரு பொழுதின் கண்
மாயையினால் ஆகிய உலகு எங்கும் மலிதரும்
                          உயிர்களும் மதி சூடும்
தூயவன் விழி அழல் சுடுமா போல் துண் என அட்டது
                                   சுரர் போற்ற.
181
   
1510.
அரண்தரு கழல் கால் ஐயன் அறுமுகத்து எழுந்த சீற்றம்
திரண்டு ஒரு வடுவின் வேறாய்ச் சென்றதே எனவு நான்கு
முரண் தரு தடம் தோள் அண்ணல் முத்தலை படைத்த
                                         சூலம்
இரண்டு ஒரு படையாய் வந்தது என்னவும் ஏகிற்று
                                      அவ்வேல்.
182
   
1511.
முடித்திடல் அரிய மாய மூரி நீர்க் கடலை வற்றக்
குடித்திடுகின்ற செவ்வேல் கூற்றம் வந்திடுதல் ஓடும்
தடித்திடும் எயிற்றுப் பேழ் வாய்த் தாரகன் இதனைப்
                                       பற்றி
ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல் என உருத்து வந்தான்.
183
   
1512.
அச்சம் ஒர் சிறிதும் இல்லா அவுணர் கோன் உவணன்
                                   மேல் செல்
நச்சு அரவு என்னச் சீறி நணுகலும் அவன் மார்பு
                                     என்னும்
வச்சிர வரையின் மீது வான் உரும் ஏறு உற்று என்னச்
செச்சை அம் தெரியல் வீரன் செலுத்தும் வேல் பட்டது
                                      அன்றே.
184
   
1513.
தாரகன் மார்பம் என்னும் தடம் பெரு வரையைக் கீண்டு
சீரிய கிரவுஞ்சத்தில் சேர்ந்து பட்டு உருவிச் சென்று
வீரமும் புகழும் கொண்டு விளங்கியது என்ன அங்கட்
சோரியும் துகளும் ஆடித் துண் என மீண்டது அன்றே.
185
   
1514.
மீண்டிடுசீற்ற வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற
ஆண் தகை வீரர் தம்மை ஆயிடை எழுப்பி வான்
                                     போய்
மாண் தகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன்
தூண்டிய கரத்தில் வந்து தொன்மை போல் இருந்தது
                                     அம்மா.
186
   
1515.
தண்டம் அது இயற்றும் கூர்வேல் தாரக அவுணன்
                                   மார்பும்
பண்டு உள வரையும் பட்டுப் பறிந்த பேர் ஓசை கேளா
விண்டது ஞாலம் என்பார் வெடித்தது மேரு என்பார்
அண்டம் அது உடைந்தது என்பார் ஆயினர் அகிலத்து
                                     உள்ளோர்.
187
   
1516.
வடித்ததை அன்ன கூர்வேல் மார்பை ஊடு அறுத்துச்
                                     செல்லத்
தடித்திடுகின்ற யாக்கைத் தாரகன் அநந்த கோடி
இடித் தொகை என்ன ஆர்த்திட்டு இம் என எழுந்து
                                    துள்ளிப்
படித்தலம் தன்னில் வீழ்ந்து பதை பதைத்து ஆவி
                                   விட்டான்.
188
   
1517.
தடவரை அனைய மொய்ம்பில் தாரகன் வேலால் பட்டுப்
புடவியில் வீழா நின்றான் பொள் என வானில் துள்ளிக்
கடல் உடைந்து என்ன ஆர்க்கும் காலையில் கலக்கம்
                                        எய்தி
உடுகணம் உதிர்ந்தது அஞ்சி ஓடினன் இரவி என்போன்.
189
   
1518.
தளர்ந்திடல் இல்லா வீரத்தாரகன் பட்டு வானில்
கிளர்ந்தனன் வீழும் எல்லைக் கீழ் உறு பிலமும் பாரும்
பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்தது
                                     அண்டம்
உளம் தடுமாறி யோலிட்டு ஓடின திசையில் யானை.
190
   
1519.
தண் அளி சிறிதும் இல்லாத் தாரகன் கிளர்ந்து
                                 வான்போய்
மண் இடை மறிந்ததன்மை வன்சிறை இழந்த நாளில்
திண்ணிய மேரு இன்னும் செல்லலாம் கொல் என்று
                                    உன்னி
விண் இடை எழுந்து வல்லே வீழ்ந்ததே போலும்
                                    அன்றே.
191
   
1520.
வெற்றியது ஆகும் கூர்வேல் வெற்பினை அட்டகாலைச்
செற்றிய பூழி யீட்டம் சிதறிய பொறிகள் எங்கும்
பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம்
வற்றிய கடல்கள் வானில் கங்கையும் வறந்தது அன்றே.
192
   
1521.
சிறந்திடு மாய வெற்பைத் திருக்கை வேல் பொடித்த
                                    காலைப்
பிறந்திடு கின்ற தீயைத் தீ எனப் பேசல் ஆமோ
அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணன் ஆகையினான்
                                     மெய்யில்
உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவாறு ஆகும் அன்றே.
193
   
1522.
யான் உற்ற குன்றம் தன்னை எறிந்தனன் என்று
                                   செவ்வேள்
தான் உற்ற நதியை வந்து தடிந்ததே என்ன வெற்பில்
ஊன் உற்ற நெடு வேல் பாய உதித்திடும் பொறியின்
                                     ஈட்டம்
வான் உற்ற கங்கை புக்கு வறந்திடு வித்தது அன்றே.
194
   
1523.
திறல் உடை நெடுவேல் அட்ட சிலம்பினில் சிதறித்
                                    தோன்றும்
பொறிகளும் துகளும் ஆர்ப்பும் பொள்ளெனச் செறிந்த
                                      தன்மை
மறி கடல் முழுதும் அம் கண் வடவையும் அடைந்து
                                     ஒன்றாகி
இறுதியில் உலகம் கொள்ள எழுந்தது போலும் மாதோ.
195
   
1524.
தந்தியின் வதனம் கொண்ட தாரக அவுணன் மார்பில்
சிந்துறு குருதிச் செந்நீர் திரை பொருது அலைத்து வீசி
அந்தம் இல் நீத்தம் ஆகி அயில் படை அட்ட குன்றில்
வந்திடு பூழை புக்கு மறிகடல் மடுத்த தன்றே.
196
   
1525.
விட்ட வேல் மீண்டு கந்தவேள் கரத்து இருப்பத்
                                      தீயோன்
பட்டதும் வெற்பு மாய்ந்த பான்மையும் அவுணர் யாரும்
கெட்டதும் நோக்கி மாலும் கேழ்கிளர் கமலத் தேவும்
முட்டு இல் ஆகமத்தின் வேந்தும் முனிவரும் சுரரும்
                                     ஆர்த்தார்.
197
   
1526.
ஆடினர் குமரற் போற்றி அம் கைகள் உச்சி மீது
சூடினர் தண் பூ மாரி தூர்த்தனர் அவனைச் சூழ்ந்து
பாடினர் தொழுது முன்னம் பன் முறை பணிந்து நின்றார்
நீடிய உவகை என்னும் நெடும் கடல் ஆழும் நீரார்.
198
   
1527.
ஆங்கு அது காலை தன்னில் அளப்பு இலா மாயை
                                        வல்ல
ஓங்கல் அது இறப்ப அம் கண் உறங்கிய வீரர் எல்லாம்
தீங்குறு மையல் நீங்கிக் கதும் எனச் சென்று செவ்வேள்
பூம் கழல் வணங்கி நின்று போற்றிய புடையின் நின்றார்.
199
   
1528.
வார் உரு கழல் கால் வீர வாகுவே முதலா உள்ள
வீரர்கள் தம்மை எல்லாம் வேல் உடைக் கடவுள்
                                  நோக்கித்
தாரகன் வரை உள் பட்டுத் தகும் உணர்வு இன்றி நீவிர்
ஆருநொந்தீர்கள் போலும் மாயை ஊடு அழுந்தி
                                  என்றான்.
200
   
1529.
செய்யவன் இனைய வாறு சீர் அருள் புரிய வீரர்
ஐய நின் அருள் உண்டாக அடியம் ஊறு அடைவது
                                    உண்டோ
மையலோடு உறங்குவார் போல் மருவும் இன்புற்றது
                                      அன்றி
வெய்யதோர் கிரி மாயத்தால் மெலிந்து இலம் இறையும்
                                      என்றார்.
201
   
1530.
என்றலும் வீர மொய்ம்பின் ஏந்தலை விளித்துச்
                                    செவ்வேள்
வென்றிகொள் சூரன் பின்னோன் விட்டிடத் தான் முன்
                                     கொண்ட
வன் திறல் படையின் வேந்தை மற்று அவன் கரத்தின்
                                        நல்கி
நன்று இது போற்றுக என்றே நவின்று நல் அருள்
                                     புரிந்தான்.
202
   
1531.
தாரகன் போரில் துஞ்சும் சாரதர் தம்மை எல்லாம்
ஆரு நீர் எழுதிர் என்னா அவர் எலாம் எழவே செய்து
பாரிட வனிகம் சூழப் பண்ணவர் பரவல் செய்யச்
சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவ்வேள்.
203