குமார பரிப் படலம்
 
1645.
அளவு இல் பூத வெம் படையொடு மண்ணியாறு
                                   அதன்கண்
குளகன் வந்துழி எழுந்திடு பூழி வான் குறுகி
ஒளிரும் வெய்யவன் கதிர் தனை மறைத்தலால் ஓடி
வளை நெடும் கடல் மூழ்குவான் புக்கு என மறைந்தான்.
1
   
1646.
மறைந்த காலையில் தோன்றின மாலையும் நிசியும்
குறைந்த திங்கள் வந்து உதித்தது தாரகை குறுகி
நிறைந்து எழுந்த ஓர் மன்னவன் இறந்துழி நீங்காது
உறைந்த ஒன்னலர் யாவரும் கிளர்ந்தவாறு ஒப்ப.
2
   
1647.
மிக்க தாருக வனத்தினை ஒத்தது விசும்பில்
தொக்க பேர் இருள் மாதர் ஒத்தன உடுத்தோற்றம்
செக்கர் ஈசனை ஒத்தது ஒண் போனகம் செறிந்த
கைக் கபாலம் அது ஒத்தது கதிர் இளம் பிறையே.
3
   
1648.
நிலவு உலாவிய ககனமா நீடு பால் கடலில்
குலவு கின்ற தோர் பொருள் எலாம் கொண்டு
                                கொண்டு ஏகி
உலகில் நல்குவான் முயல் எனும் ஒருமகன் உய்ப்பச்
செலவு கொண்டது ஓர் தோணி போன்றது சிறு திங்கள்.
4
   
1649.
ஆன காலையில் அறுமுகப் புங்கவன் அமல
மேனி சேர் ஒளி நிலவொடு கங்குலை வீட்டிப்
பானு மேவரும் மெல்லெனச் செய்தலில் பரமாம்
வான நாயகன் கயிலை போன்று இருந்தது அவ்வையம்.
5
   
1650.
வீசு பேர் ஒளி விறல் குகன் இவ்வாறு
ஆசின் மண்ணியின் அகன் கரை நண்ண
ஈசனாம் அவனை எய்துபு வேதாக்
கேசவன் முதல்வர் இன்ன கிளப்பார்.
6
   
1651.
ஆண்ட இந்நதி அகன் கரை எல்லாம்
மாண்ட வால் உகம் மலிந்து இனிது ஆகும்
நீண்ட சோலைகள் நிரந்தன தோன்றி
ஈண்டி ஈண்டையின் இறுத்துள அன்றே.
7
   
1652.
பிறை புனைந்திடு பெரும் தகை தானம்
இறுதி இல்லன இருந்தன வற்றால்
நறியது ஆகும் இந் நதிக்கரை தன்னில்
இறைவ இவ்விடை இருந்து அருள் என்றார்.
8
   
1653.
வனையும் மேனி அயன் மால்முதல் வானோர்
இனைய செப்புதலும் யாரினும் மேலோன்
வினைய மெத்த உள விச்சுவ கன்மப்
புனைவனுக்கு இது புகன்றிடுகின்றான்.
9
   
1654.
மெய் விதித் தொழிலில் வேதன் நிகர்க்கும்
கை வலோய் ஒரு கணம் படு முன்னர்
இவ்விடத்தினில் எமக்கு ஒரு மூதூர்
செவ்விதில் புனைவு செய்குதி என்றான்.
10
   
1655.
என்ன லோடும் அவ்விடம் தனில் எங்கோன்
துன்னு தொல் படை சுராதிப ரோடு
மன்ன அங்கண் ஒரு மா நகர் நெஞ்சத்து
உன்னி நல்கலும் உவந்தனர் யாரும்.
11
   
1656.
அப்புரத்தை அறிவன் கடிதாற்றி
முப்புரத்தை அடு முன்னவன் நல்கும்
மெய்ப்புரத் தவனை நோக்குபு மேலோய்
இப்புரத்து இடை எழுந்து அருள் என்றான்.
12
   
1657.
என்றலோடும் இரதத்தின் இழிந்தே
துன்றும் வானவர் சுராதிபர் ஆனோர்
சென்ற பூதர்கள் செறிந்துடன் ஏக
மன்றல் மா நகரில் வள்ளல் புகுந்தான்.
13
   
1658.
செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின்
மல்லல் மாநகர் வளம் தனை நோக்கி
எல்லையில் அறிவன் யாம் உறைதற்கு
நல்ல மாநகர் இது என்று நவின்றான்.
14
   
1659.
வீர வேள் இது விளம்புதலோடும்
ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
ஏர் எலாம் உடைய இந்நகர் சேய்ஞ
லூர் அது என்று பெயர் ஓதினர் அன்றே.
15
   
1660.
ஆய காலை அனிகப் படை சூழ
ஏய பின் இளைஞர் இந்திரன் வேதா
மாயன் ஏனையர் வழுத்திட ஆண்டைக்
கோயில் செல்லுபு குமாரன் இருந்தான்.
16
   
1661.
பன்னிரு புயத்தொகை படைத்த குமரேசன்
தன்னருள் அடைந்து விதி தன்னை முதலானோர்
அன்னவன் விடுத்திட அகன்று புடை யேகித்
தொன்னிலை இருக்கைகள் தொறும் தொறும் அடைந்தார்.
17
   
1662.
தானைகள் தமக்கு உரிய சாரதர் இலக்கர்
ஏனையர் வழுத்த எமை ஆளுடைய வள்ளல்
கோ நகர் இருக்க விடை கொண்டு செல் குழாத்துள்
வானவர் தமக்கு இறை செயற்கையை வகுப்பாம்.
18
   
1663.
தாங்கரும் பெரும்திறல் தாரகா சுரன்
பாங்கு அமர் குன்றொடும் பட்ட பான்மையால்
ஆங்கனம் புரந்தரன் அவலம் யாவதும்
நீங்கினன் உவகையால் நிறைந்த நெஞ்சினான்.
19
   
1664.
விருந்து இயல் அமிர்தினை விழுமம் இல்வழி
அருந்தினன் ஆம் என ஆகம் தண் எனப்
புரந்தரன் இருந்துழிப் புக்குத் தாழ்ந்தது ஆல்
வரம் திகழ் சிரபுர வனத்தில் தெய்வதம்.
20
   
1665.
முகில் பொதி விண்ணகம் முதல்வன் பூண்களும்
நகில் பொதி சாந்துடை நங்கை பூண்களும்
துகில் பொதி கிழியொடு தொல்லை வைத்து அவை
அகில் பொதி காட்டகத்து அடிகள் உய்த்ததே.
21
   
1666.
முந்து உற உய்த்தபின் முதல்வ கேட்டி நீ
பைந்தொடி அணங்கொடு பரமன் காழியில்
வந்தனை நோற்றநாள் வைத்த பூனிது
தந்தனன் கொள்கெனச் சாற்றி நின்றதே.
22
   
1667.
நிற் புறு கின்றுழி நேமி அண்ணற்கு
முற்படுகின்றவன் முளரிப் பண்ணவன்
கிற்புறு செய்ய பூண் கிழியை நோக்கினான்
கற்புடையாள் விடும் தூதின் காட்சிபோல்.
23
   
1668.
எரி மணி அணிகலன் இட்ட பூந்துகில்
விரிதரு பொதியினை விரலின் நீக்கினான்
திருமகள் அமர்தரு தெய்வத் தாமரை
வரி அளி சூழ் உற மலர்ந்தது என்னவே.
24
   
1669.
துண் எனக் கிழி அதன் தொடர்பு நீக்கலும்
ஒண் நுதல் துணைவி பூண் உம்பர் தோன்றலும்
கண் உறக் கண்டவன் கருதினான் அரோ
எண்ணுதற்கு அரியது ஓர் இன்பம் துய்த்துளான்.
25
   
1670.
பூட்கையின் முலையுடைப் பொன் அம் கொம்பின்மேல்
வேட்கையது ஆயினன் மிகவும் பற்பகல்
வாட்கையின் றிருந்தது மனத்தின் முன்னினான்
காட் கொளும் காம நோய்க் கவலை எய்தினான்.
26
   
1671.
நெய்ம் மலி தழல் என நீடிக் காமநோய்
இம் என மிசைக் கொள இரங்கி ஏங்கினான்
விம்மினன் வெதும்பினன் வெய்து உயிர்த்தனன்
மைம் மலி சிந்தையன் மருட்கை எய்தினான்.
27
   
1672.
பசை அற உலர் உறு பராரைப் பிண்டியின்
தசை மலி முழுது உடல் தளர்ந்து வாடினான்
இசைவரு கைவலோன் எழுது பாவைபோல்
அசைவு இலன் இருந்தனன் அணங்கு உற்று என்னவே.
28
   
1673.
முருந்து உறழ் எயிற்றினாள் முலைத் தடங்களில்
பொருந்து உற மூழ்கியே புணர்ந்து வைகலும்
இருந்திடுகின்றவன் இடர்பட்டு இன்னணம்
பிரிந்திடின் வருந்துதல் பேசல் வேண்டுமோ.
29
   
1674.
மெய்ந் நனி அலசுற விரக மீக்கொள
இன்னணம் சசி பொருட்டு இனையும் நீர்மையோன்
பொன் அணி தன்னையும் புனைதல் வேண்டலன்
தன் உழையவர் தமை நோக்கிச் சாற்றுவான்.
30
   
1675.
இக்கிழி ஒன்றினை ஏந்தி முந்து போல்
சிக்குற வீக்கியே சேமித்து உங்கள் பால்
வைக்குதிர் என்றலும் வணங்கி நன்று எனா
அக்கணம் அனையவர் அதனை ஆற்றினார்.
31
   
1676.
அன்னதோர் அளவையில் அடவித் தேவினைக்
கொன்னுனை வச்சிரக்குரிசில் நோக்கு உறா
நின் உழை அளித்திட நீ செல்க என்றலும்
மன்னவ நன்று என வணங்கிப் போயதே.
32
   
1677.
போந்திடு காலையில் பூலோமசைப்பெயர்
ஏந்திழை காமநோய் எரியின் துப்பினால்
காந்திய உளத்தினன் கனலும் யாக்கையன்
ஓய்ந்தனன் தட்பமேல் உளம் வைத்து ஏகினான்.
33
   
1678.
ஒளி இழை உழத்தியர் ஒளி மென் கூந்தலின்
அளி இனம் நறவு துய்த்து அலரில் கண் படு
நளி இருந்து தண்டலை ஞாங்கர் பொங்கிய
புளினம் ஒன்று அதன் மிசை புக்கு வைகினான்.
34
   
1679.
தீம் தழல் வெம் கதிர் திளைத்தவாறு என
நீந்து அரும் கங்குலின் நிலவுத் தீப்படப்
பூம் துணர் பரவிய புளினம் பொன்னகர்
வேந்தனுக்கு ஆற்றவும் வெம்மை செய்ததே.
35
   
1680.
சூல்புயல் மாறிய சுரத்தில் தொக்கு உறு
மால்பரல் வரை புரை மணலின் திட்டையின்
பால்படு கின்றனன் பனி மதிக் கதிர்
மேல்பட அசைந்தனன் வினையம் வேறிலான்.
36
   
1681.
திங்களும் வெம் கனல் சிதறிக் காய்ந்திடக்
துங்கவேள் படையுடன் பிறவும் சூழ்ந்திட
மங்கிய உணர்ச்சியன் மயலின் வன்மையான்
புங்கவர் மன்னவன் புலம்பல் எய்தினான்.
37
   
1682.
மட்டமர் புரிகுழல் மடந்தை என் உடல்
இட்டு உயிர் வவ்வினள் இருந்த யாக்கையும்
சுட்டிடு கிற்றியால் தூய திங்கள் நீ
பட்டவர் தம்மையும் படுப்பரோ என்பான்.
38
   
1683.
எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்கு நீ
நஞ்சினை உகுத்தி நண்ணலரில் தப்பியே
உஞ்சனன் இவன் உயிர் ஒழிப்பன் யான் எனா
வஞ்சினம் பிடித்தியோ மதியமே என்பான்.
39
   
1684.
நிற்றலும் வருதி நீ நீடு தண் அளி
உற்றிடல் அன்றியே ஒறுத்திலாய் மதி
அற்றம் இன்று உன்னி வந்து அடுதியார் இடைக்
கற்றனை இத்திறம் கள்வ நீ என்பான்.
40
   
1685.
பெண் இயலார் இடைப் பிறங்கு காமமும்
உள் நிகழ் விகரமும் உனக்கும் உண்டு அதை
எண்ணலை அழல் சொரிந்து என்னைக் காய்தியால்
தண்ணளி மதிக்கு இது தகுவதோ என்பான்.
41
   
1686.
அரிய நல்தவம் பல ஆற்றி இன்று காறும்
உரியது ஓர் என் பல தூனில் யாக்கையேன்
பரி உறச் சுடுவதில் பயன் என் பாரில் இவ்
ஒருவனை விடுக என உரைத்து வேண்டுவான்.
42
   
1687.
அண்டம் மேல் நின்றனை அவனி வானகம்
எண் திசை எங்கணும் எளிது காண்டியால்
ஒண் தொடி ஒருத்தி என் உயிர் கொண்டு உற்றனள்
கண்டது உண்டோ மதிக் கடவுள் நீ என்பான்.
43
   
1688.
யான் முதல் தோன்றினன் எனது பின்னவன்
கான் முளை ஆகிய காம நீ பல
பான்மையின் எனை அடல் பழியதே அலால்
மேன்மையது ஆகுமோ விளம்புவாய் என்பான்.
44
   
1689.
பரேர் உள உனது மெய் படுத்த கண் நுதல்
ஞெரேல் என உதவிய நிமலன் ஈண்டு உளன்
ஒரே கணம் ஒடுங்கு முன் உயிரும் வாங்கும் ஆல்
பொரேல் இனி மதன நீ போகு போகு என்பான்.
45
   
1690.
வான் உழை திரிதரு மதியம் போக்கிய
தீ நுழை புண்ணில் வேல் செறித்தது என்ன வேள்
கோல் நுழைகின்றன அதனில் கூடளி
ஈநுழை கின்றன போலும் என்கின்றான்.
46
   
1691.
வன்திறல் கொலைஞர்கள் மானில் கூவி மான்
ஒன்று அறக் கவர்தல் போல் உயிர் என் காலினை
இன்று அதுபோல வந்து உள்புக்கு ஈர்த்தலால்
தென்றலுக்கு யான் செய்த தீது உண்டோ என்பான்.
47
   
1692.
வாகுலப் பரியதோர் மாதர் மால் எனும்
ஆகுலப் புணிரியுள் அழுந்தி னோரையும்
வீகுலத் தொகையினுள் விட்டு இசைத்திடும்
கோகிலப் பறவையும் கொல்லுமோ என்பான்.
48
   
1693.
நம் உருவாயினன் நாகர் கோன் எனாத்
தம் மனம் உன்னியே தளர்வு நீக்கில
கொம் என அரற்றியும் கூவல் இன்றியும்
எம் உயிர் கொள்வன இரு புள் ஆம் என்பாள்.
49
   
1694.
தண்டுதல் இன்றியே தானு நானுமாய்ப்
பண்டு ஒரு வனிதையைப் பரிவில் கூடினேம்
அண்டரும் அறிகுவர் அற்றை நாள் சினம்
உண்டு கொல் கதிர் இனம் உதிக்கிலான் என்பான்.
50
   
1695.
கோழிலை மடல் பனைக் குடம்பை சேர் தரு
மாழை அம் பசலை வாய் மகன்றில் என்பவை
காழக வரிசிலைக் காமன் கோடு போல்
ஊழியும் வீழ்ந்திடாது ஒலிக்குமோ என்பான்.
51
   
1696.
துன்னலர் ஆகிய தொகையினோர் தமைத்
தன் இடை வைத்து எனைத் தளர்வு கண்டதால்
அன்னதும் அன்றி இன்று ஆவி கொள்ளவும்
உன்னியதோ கடல் உறங்கலாது என்பாள்.
52
   
1697.
இவ்வகை ஆம் இனி எல்லை முற்றவும்
வெவ் அழல் சுற்றிடும் விரக நோய் தெற
உய் வகை ஒன்றிலன் உயங்கல் அல்லது
செய்வது பிறிது இலன் தெருள் இல் சிந்தையான்.
53
   
1698.
ஆக்கம் இத்திறம் அடைவுழிப் பத்து நூறு அடுத்த
நோக்கம் உற்றவன் சசி பொருட்டு உற்ற நோய் அதனை
நீக்கு கின்றனன் யான் எனா நினைந்து உளான் என்ன
மாக்கள் பூண்ட தேர் வெய்யவன் குணதிசை வந்தான்.
54
   
1699.
வெம்பு தொல் இருள் அவுணர்தம் குழுவினை வீட்டி
உம்பர் மேல்செலும் மதிஎனும் மடங்கலை உருத்துப்
பைம் பொன் வெம் சுடர்க் கரங்களால் அதன் வலி
                                    படுக்கும்
சிம் புள் ஆம் எனத் தோன்றினன் செம் கதிர்க் கடவுள்.
55
   
1700.
தொடர்ந்த ஞாயிறு விடுத்திடும் கதிர்களாம் தூசி
படர்ந்த காலையில் நிலவு எனும் அனிகம் முன் பட்ட
அடைந்த மீன் எனும் துணைவரும் பொன்றினர்
                                   அமர்செய்
துடைந்த மன்னரில் போயினன் உடுபதிக் கடவுள்.
56
   
1701.
விரிந்த பல் கதிர் அனிகத்தை வெய்யவன் விடுப்பத்
துரந்த சோமனை அவன் புறம் காட்டினன் தொலைந்து
கரந்து போதலும் பின் உறக் சென்றில களத்தில்
இரிந்து ளோரையும் தொட்வரோ சூரர் தம் இனத்தோர்.
57
   
1702.
திங்கள் தன் குறை உணர்த்த வாய் திறந்து எனச் செய்ய
பங்கயங்கள் போது அவிழ்ந்தன குமுதங்கள் பலவும்
தங்கள் நாயகன் உடைந்தது நோக்கியே தபனற்
கங்கை கூப்பிய திறன் என ஒடுங்கிய அன்றே.
58
   
1703.
வனம் எழுந்தன வனசமும் எழுந்தன வரியின்
இனம் எழுந்தன மாக்களும் எழுந்தன எழில்சேர்
அனம் எழுந்தன புள் எலாம் எழுந்தன அவற்றின்
மனம் எழுந்தன எழுந்தன மக்களின் தொகையே.
59
   
1704.
ஞாயிறு உற்ற அவ் அளவையின் நனம் தலை உலகில்
ஏ எனச் செறி இருள் எலாம் மறைந்து இருந்து என்னச்
சே அரிக் கணி தந்திடு தெளிவு இல் காமத்து
மா இருள் தொகை ஒடுங்கியது இந்திரன் மனத்துள்.
60
   
1705.
கை இகந்து போய்த் தன் உயிர் அலைத்த காமத்தீப்
பை அவிந்திடு பாந்தள் போல் தணிதலும் பதைப்புற்று
ஓய் எனக் கடிது எழுந்தனன் நகைத்து வெள்கு உற்றான்
ஐய கோ இது வருவதே எனக்கு என அறைந்தான்.
61
   
1706.
தீமை உள்ளன யாவையும் தந்திடும் சிறப்பும்
தோம் இல் செல்வமும் கெடுக்கும் நல் உணர்வினைத்
                                 தொலைக்கும்
ஏம நல் நெறி தடுத்து இருள் உய்த்திடும் இதனால்
காமம் அன்றியே ஒரு பகை உண்டு கொல் கருதில்.
62
   
1707.
என்பது உன்னியே இந்திரன் ஆண்டை வைப்பு இகந்து
தன் புறம் தனில் கடவுளர் குழுஎலாம் சார
அன்பொடே படர்ந்து அறுமுகன் அடிகளை அடைந்து
முன்பு தாழ்ந்தனன் உரோமமும் செம் கையும் முகிழ்ப்ப.
63
   
1708.
தொழுத கையினன் கோட்டிய மெய்யினன் துகிலத்
தெழுது பாவையில் ஆன்று அமை புலத்தினன்
                                    இறைஞ்சிப்
புழுதி தோய்தரும் உறுப்பினன் சுருதியின் பொருண்மை
முழுதும் ஊறிய துதியினன் ஆகி முன் நின்றான்.
64
   
1709.
கரியவன் தனைச் செய்யவன் கருணை செய்து அருளி
வருதி என்று கூய் மறைகளும் வரம்பு காண்கில்லா
அரன தாள்களை அர்ச்சனை புரிது நாம் அதனுக்கு
உரிய ஆய பல் கரணமும் தருதி என்று உரைத்தான்.
65
   
1710.
உரைத்த எல்லையில் தொழுதுபோய் உழையரில் பலரைக்
கரைத்து வீற்று வீற்று ஏவியே கடி மலர்க் கண்ணி
திரைத்துகில் படா நறும் புனல் அவி புகை தீபம்
விரைத்த கந்தங்கள் ஏனவும் தந்தனன் விரைவில்.
66
   
1711.
அவ் அக் காலையில் ஆறுமா முகன் உடை அடிகள்
தெய்வக் கம்மியற் கொண்டு ஒரு சினகரம் இயற்றிச்
சைவத் தந்திர விதி உளி நாடியே தாதை
எவ் எக்காலமும் நிலையதோர் உருவு செய்திட்டான்.
67
   
1712.
தேவு சால் மணிப் பீடத்தில் ஈசனைச் சேர்த்தி
ஆவின் ஓர் ஐந்தும் அமுதமும் வரிசையால் ஆட்டித்
தாவில் இலாதது ஓர் வாலிதாம் அணித்துகில் சாத்திப்
பூவின் மாலிகை செய்யத் சாந்தத்தொடும் புனைந்தான்.
68
   
1713.
மருந்தின் ஆற்றவும் சுவையன வாலுவ நூல் போய்த்
திருந்தினார்களும் வியப்பன திறம் பல ஆகிப்
பொருந்துகின்றன நிரல் அமை கருனை அம் புழுக்கல்
சொரிந்து பொன் கலத்து அருத்தினன் மந்திரத்
                                   தொடர்பால்.
69
   
1714.
கந்தம் வெள் இலை பூக நல் காய் இவை கலந்து
தந்து பின் முறை அருத்தினன் புகை சுடர் தலையா
வந்த பான்மைகள் யாவையும் வரிசையால் உதவி
முந்து கை தொழூஉப் போற்றினன் மும்முறை வணங்கி.
70
   
1715.
இருவரும் உணர்கிலாது இருந்த தாள்களைச்
சரவண மிசை வரு தனயன் பூசனை
புரிதலும் உமை ஒரு புடையில் சேர்தர
அருள் விடை மீ மிசை அண்ணல் தோன்றினான்.
71
   
1716.
கார்த்திகை காதலன் கறை மிடற்று உடை
மூர்த்தி நல் அருள் செய முன்னி வந்தது
பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னி மேல்
சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான்.
72
   
1717.
செயிர்ப்பு அறு நந்தி தன் திறத்தில் வீரரும்
வியர்ப்பினில் வந்து எழு வீரரும் குழீஇக்
கயல் புரை கண் உமை கணவற் காணுறீஇ
மயிர்ப் புறம் பொடிப்புற வணங்கி ஏத்தினார்.
73
   
1718.
முண்டகன் முதல்வரும் முரண் கொள் பூதரும்
கண்டனர் அனையது கரங்கள் கூப்பியே
மண்டனின் மும்முறை வணங்கி வானகம்
எண் திசை செவிடு உற ஏத்தல் மேயினார்.
74
   
1719.
ஆயது காலை தன்னில் அரு உரு ஆகும் அண்ணல்
சேயினை நோக்கி உன்றன் வழிபடற் குகை செய்தேம்
நீ இது கோடி என்னா நிரந்த பல் புவனம் முற்றும்
ஏ என முடிவு செய்யும் படைக் கலத்து இறையை
                                     ஈந்தான்.
75
   
1720.
மற்று இது நம்பால் தோன்றும் வான் படை மாயன்
                                     வேதாப்
பெற்று உளது அன்றி யார் இப்பெரும் படை பரிக்கும்
                                       நீரார்
முற்று உயிர் உண்ணும் வெம் சூர் முரட் படை
                            தொலைப்பான் ஈது
பற்றுதி மைந்த என்னாப் பராபரன் அருளிப் போனான்.
76
   
1721.
கருணை செய் பரமன் சேணில் கரந்தனன் போன
                                   காலை
அருள் பெறு நெடு வேல் அண்ணல் அன்னவன்
                         போற்றிப் பின்னை
விரவிய இலக்கத்து ஒன்பான் வீரரும் அயனும் ஏனைச்
சுரர்களும் வழுத்திச் செல்லத் தூயதன் தேரில் புக்கான்.
77
   
1722.
சில்லி அம் தேர் மேல் செவ்வேள் சேர்தலும் உலவை
                                     வேந்தன்
வல்லை தன் தமர்களோடும் வாம்பரி கடாவி உய்ப்ப
எல்லை இல் பரிதி தோன்ற எழுதரும் உயிர்களேபோல்
ஒல் என எழுந்தது அம்மா உருகெழு பூத வெள்ளம்.
78
   
1723.
சாரத நீத்தம் எல்லாம் தரையின் நின்று எழுந்து சூழ்ந்து
போர் அணி அணிந்து போந்த புடைதனில் இலக்கத்து
                                     ஒன்பான்
வீரரரும் சுரர்கள் யாரும் மேவினர் வந்தார் வான்தோய்
தேர்மிசை அவர்க்கு நாப்பட்டு சென்றனன் குமரச்
                                  செம்மல்.
79
   
1724.
மண்ணி அம் கரையிற் றென்பால் வகுத்த சேய் ஞல்லூர்
                                         நீங்கி
எண்ணிய உதவும் பொன்னி இடை மருதினோடு
தண்ணியல் மஞ்ஞை ஆடும் தண்டுறை பறிய லூரும்
கண்ணுதல் இறைவன் தானம் ஏனவும் கண்டு போனான்.
80
   
1725.
எழில் வளம் சுரக்கும் தொல்லை இலஞ்சி அம் கானம்
                                      நோக்கி
மழவிடை இறைவன் பொன்தாள் வணங்கியே மலர்
                                  மென்பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவில் மங்கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர் கண்டான்.
81