மாயைப் படலம்
 
1784.
ஊர் இலான் குணம் குறி இலான் செயல் இலான்
                               உரைக்கும்
பேர் இலான் ஒரு முன்னிலான் பின் இலான் பிறிதோர்
சார்இலான் வரல் போக்கு இலான் மேல் இலான் தனக்கு
நேர் இலான் உயிர்க் கடவுளாய் என் உளே நின்றான்.
1
   
1785.
வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
ஆறு கோடியது ஆகிய அவுணருக்கு அரசன்
மாறு இல் மங்கல கேசி ஆம் அரக்கியை மணந்து
பேறது ஆகவே சுரசை என்று ஒரு மகள் பெற்றான்.
2
   
1786.
தூய அம்மகள் வளர்ந்த பின் புகர் எனும் தொல்லோன்
தீய மயையின் கல்விகள் யாவையும் தெருட்டி
ஆய விஞ்சையின் வல்லபம் நோக்கியே அவட்கு
மாயை என்று பேர் கூறினன் மனத்து இவை மதிப்பான்.
3
   
1787.
இன்னல் எய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர்
மன்னன் ஆதியர் பெருமையும் வான நாட்டு உறைவோர்
நல் நலம் தொலைந்து அசுரரால் மெலிந்திட நந்தி
சொன்ன வாய்மையும் கருதினன் புகர் எனும் தூயோன்.
4
   
1788.
கருதி இன்னண மேல் வரும் தன்மையும் கண்டு
குருதி தோயும் வேல் அவுணர் கோன் பயந்த கோல்
                                   தொடியை
வருதி என்று கூய் வரம் பெறு பேர் அருள் வழங்கி
ஒரு திறம் தனைக் கேள் எனத் தேசிகன் உரைப்பான்.
5
   
1789.
வனச மங்கை தன் கணவனால் வாசவன் தன்னால்
முனிவர் தேவரால் அளப்பிலா அவுணர்கள் முடிந்தார்
அனையர் மேன்மையை யாவரும் உணர்குவர் அதனால்
உனது தந்தையும் வலி இழந்தே ஒடுங்கு உற்றான்.
6
   
1790.
மின் பொருட்டினால் கேதகை மலர்ந்திடும் விளங்கும்
என் பொருட்டினால் மாமழை சொரிந்திடும் ஈட்டும்
பொன் பொருட்டினால் யாவும் உண்டாம் அது போல்
உன் பொருட்டினால் அவுணர்க்கு மேன்மையது உளதாம்.
7
   
1791.
வாச மாமலர் மடந்தையும் வந்து அடி வணங்கப்
பேச ஒணாதது ஓர் பேர் அழகு உருக் கொடு பெயர்ந்து
காசிபன் தனை அடைந்து நின் வல்லபம் காட்டி
ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில்.
8
   
1792.
அல்லிடைப் புணர்ந்து அசுரர்கள் தம்மை உண்டாக்கி
மெல்ல அங்கு அவர் தங்கட்கு நாமமும் விளம்பி
எல்லை இல் வளம் பெற்றிட அவுணருக்கு இயலும்
தொல்லை வேள்வியும் விரதமும் உணர்த்துதி தோகாய்.
9
   
1793.
இன்ன தன்மைகள் முடிந்த பின் நின்சிறார் எவரும்
நல் நலம் தனை அடையவும் நண்ணலர் எல்லாம்
பன்னரும் பழி மூழ்கவும் அரும்தவம் பயில
அன்னை மீளுதி என்றனன் புகர் எனும் ஆசான்.
10
   
1794.
குரவன் வாய்மையை வினவியே கோது இல் சீர் அவுணர்
மரபு மேம்படு தன்மையான் மற்று இவை எல்லாம்
அருளுகின்றனை ஆதலால் இப்பணி அடியேன்
புரிகுவேன் என அவன் அடி வணங்கியே போனாள்.
11
   
1795.
மயிலை அன்னவள் அவுணர் தம் மன்னற்கும் இனைய
செயலை ஓதியே அவன் விடையும் கொடு சென்று
கயிலை என்ன நீறு ஆடியே காசிபன் இருந்து
பயிலும் நோன்பு உடை எல்லையை நாடியே படர்ந்தாள்.
12
   
1796.
திருவும் மாரவேள் இரதியும் திலோத்தமை என்ன
மருவு தையலும் மோகினி என்பதோர் மாதும்
ஒருதனித் திரு வடிவு கொண்டால் என உலகில்
பொருவில் மாயவள் பேர் அழகு உருக் கொடு
                              போனாள்.
13
   
1797.
மண் உற்றோர்களும் மாதிரத் தோர்களும் மதி தோய்
விண் உற்றோர்களும் அன்னவள் எழில் நலம் விரைவில்
கண் உற்று ஓர்கிலர் அணுகினர் காமவேள் கணையின்
புண் உற்றோர் விளக்கு அழல் உறு பறவையில்
                                     புலர்ந்தார்.
14
   
1798.
மதியும் ஞாயிறும் சூழ்தரு மேருவின் வடபால்
விதி மகன் தவம் புரிதரும் வியன் நிலை மருங்கின்
அதிர் சிலம் பொடு மேகலை புலம்புற அனையாள்
திதி கொல் என்று எலாத் தேவரும் ஐயுறச் சென்றாள்.
15
   
1799.
சென்ற மாயை அக் காசிபன் இருக்கையில் திருவாழ்
மன்றல் வாவியும் தடங்களும் சோலையும் மணிசெய்
குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமும்
தன் தன் ஆணையால் துண் எனச் சூழ்தரச் சமைத்தாள்.
16
   
1800.
இனைத்தெலாம் அவண் வருதலும் எந்தை தன் அடியை
மனத்தினில் கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்
தனித்து நோற்றிடும் காசிபன் புகுந்த அத் தகைமை
அனைத்தும் நோக்கி ஈது என்கொல் என்று அதிசயம்
                                 அடைந்தான்.
17
   
1801.
முற்றும் ஆங்கு அவை ஆசையின் நெடிது பன்
                                முறையால்
உற்று நாடியே மாயை தன் செயல் என உணரான்
இற்று எலாம் இவண் இயற்றினர் யார் என எண்ணிச்
சுற்று நோக்கினன் யாரையும் காண்கிலன் தூயோன்.
18
   
1802.
மெய்த்தவ உணர்ச்சியை விடுத்து மேலையோன்
அத்தனது அருளினால் அணங்கு மாயையால்
வைத்தன கண் உறா மனம் கொள் காதலால்
சித்திரம் என வெரீஇ இனைய செப்புவான்.
19
   
1803.
வான நாடு இழிந்ததோ மகத்தின் வேந்து உறை
தான நாடு இழிந்ததோ தனதன் ஆதியோர்
ஏனை நாடு இழிந்ததோ இது அன்றேல் இவை
ஆனவாறு உணர்கிலேன் அழுங்கு சிந்தையேன்.
20
   
1804.
ஆரணன் செய்கையோ அகிலம் உண்டு உமிழ்
நாரணன் செய்கையோ அவர்க்கு நாடு ஒணாப்
பூரணன் செய்கையோ பிறர் புரிந்ததோ
காரணம் தேர்கிலேன் கவலும் நெஞ்சினேன்.
21
   
1805.
புன் நெறிக் கான் இடைப் புகுந்த இத்திரு
நல் நெறிக்கு ஏதுவோ நலந்த வீர்ந்திடுந்
துன் நெறிக்கு ஏதுவோ தொல்லை ஞாலமேல்
எந் நெறிக்கு ஏது என்று இதுவும் தேர்கிலேன்.
22
   
1806.
என்று இவை சொற்றி இவண் யாவது ஆயினும்
நன்று அதன் இயற்கையும் நமக்கு முன்னரே
ஒன்று அறத் தெரிவுறும் உணர்ச்சி இங்ஙனம்
சென்றது பழுது எனச் சிந்தித்தான் அரோ.
23
   
1807.
தெற்று எனத் தன் மனம் தேற்றித் தொன்மை போல்
நல்தவம் இயற்றுவான் நணுகும் வேலையில்
மற்று அது தெரிந்திடு மாயை தூமணிப்
பொற்றையில் தமியளாய்ப் பொலிந்து தோன்றினாள்.
24
   
1808.
தோன்றினள் நிற்றலும் தொல்லை நான் முகற்கு
ஆன்றது ஒர் காதலன் அவளை நோக்கினான்
வான் திகழ் கற்பகவல்லி செய் தவத்து
ஈன்றது ஒர் கொடி இவன் எய்திற்றோ என்றான்.
25
   
1809.
நால் தலையான் மகன் நம்முன் இக் கொடி
தோற்றியது அற்புதச் சூழ்ச்சிக்கு ஏது வென்று
ஆற்று உறு தவத்திறன் அகற்றி ஆயிடை
வீற்று இருந்திடுவது விடுத்துப் போயினான்.
26
   
1810.
கண் அகல் வரை மிசைக் கடிது போயுறீஇ
அண்ணியன் ஆதலும் அரிவையாய் உறப்
பெண் உருவே கொல் இப் பெற்றித்தால் என
எண்ணினன் மையலுக்கு எல்லை காண்கிலான்.
27
   
1811.
புண்டரிகத்தி கொல் பொன்னம் பாவை கொல்
அண்டர் தம் அணங்குகொல் என்னின் அன்னரைக்
கண்டறிவேன் எனைக் காதல் பூட்டிய
ஒண் தொடி இனையள் என்று உணர்கிலேன் அரோ.
28
   
1812.
சேய் இரும் கமலமேல் செம்மல் செய்கையால்
ஆய் அவள் என்னில் இவ் அழகு பெற்றிடாள்
ஏயது தேறினன் எல்லை இல்லது ஓர்
மாயையே பெண் என வந்தவாறு என்பான்.
29
   
1813.
புகன்று இவை பல பல பொருவில் நான்முகன்
மகன் தனது அரும் தவவலியும் போதமும்
அகன்றனன் புணர்ச்சி வேட்டு அழுங்கி நைவது ஓர்
மகன்றிலின் பரிசு என வருத்தம் எய்தினான்.
30
   
1814.
உண்ணிகழ் ஊன் பெருட்டு உயிர் கொல் வேட்டுவர்
கண்ணி உள் பட்டது ஓர் கலையின் மாழ்குவான்
பெண் அரசு ஆய இப் பேதைக்கு என் கொலோ
எண்ணம் என்று இடர் உழந்து இரங்கி ஏங்கினான்.
31
   
1815.
அது பொழுது அவுணரை அளிக்க வந்திடும்
திதி நிகர் மட மகள் சிறந்த கண்களால்
பொது இயல் நோக்கொடு புணர்ச்சி நோக்கினைக்
கதும் எனக் காட்டினள் முனிவன் காண் உற.
32
   
1816.
கண்டனன் முனிவரன் கலங்கினான் பொதுக்
கொண்ட தோர் நோக்கியல் குறித்துக் கூடுதல்
எண் தரு நோக்கினால் இவளை எய்து மாறு
உண்டு என நினைந்தனன் உவப்பின் உம்பரான்.
33
   
1817.
பெருந்துயர் உதவு வெம் பிணியும் தீர்ப்பது ஓர்
மருந்து மற்று ஆதலும் மையல் மேதகும்
அருந்தவ முனிவரன் அனைய மாதுதன்
திருந்திய நோக்கியல் தெளிந்து செப்புவான்.
34
   
1818.
கற்பனை முதலிய கடந்த கண் நுதல்
சிற்பரன் யாவையும் சிதைய ஈறு செய்
அற்புதமும் அவன் அருளும் போன்றதால்
பொற்புறு கின்ற இப்பூவை நாட்டமே.
35
   
1819.
மாயையும் கொலையுமே மருவி வைகலும்
ஆயது ஓர் உலகினை அளிக்கும் நீர்மையால்
பாய் இருந் திரைக் கடல் நடுவண் பள்ளி கொள்
தூயனை நிகர்த்தது இத் தோகை நோக்கமே.
36
   
1820.
இயல் இருள் மேனியால் இடியின் ஆர்ப்பினால்
வியன் உயிர் முழுவதும் வெருவச் செய்து உடன்
பயன் உறு தீம் புனல் பரிவின் ஈதரு
புயலையும் நிகர்த்தன பூவை பார்வையே.
37
   
1821.
என்பன பல பல எண்ணி அன்னவள்
தன் படிவத்து உருத் தகைமை காண் உறீஇ
அன்பினில் வியந்து நின்று அழுங்கு நெஞ்சொடு
நன்பெரு நயப்பினால் நவிறல் மேயினான்.
38
   
1822.
வான் உறு புயலின் தோற்றம் வரம்பு இல் சீர்க்
                          கங்குல் வண்ணம்
ஏனைய கருமை எல்லாம் இலக்கணத்து ஒருங்கே
                                   ஈண்டி
மீன் உறழ் தடம் கணாள் பால் மேவிய என்பது
                                அல்லால்
நானம் ஆர் கூந்தற்கு அம்ம நாம் புகல் உவமை
                                  யாதோ.
39
   
1823.
கோட்டு உடைக் குழவித் திங்கள் குனி சிலை இரண்டு
                                      மானின்
சூட்டு உடை நுதற்கு ஒவ்வாது தொலைந்து போய்த்
                            தொல்லை வான
நாட்டிடைக் கரந்தும் தோன்ற நணுகியும் திரியும்
                                 என்னின்
மீட்டு இதற்கு உரைக்கல் ஆகும் உவமைகள் வேறும்
                                    உண்டோ.
40
   
1824.
அருவத்தில் திகழும் காமன் ஆடல் அம் சிலையும்
                                    நெற்றி
உருவத்துக்கு உடைந்து வான்புக்கு ஒதுங்கிய மகவான்
                                     வில்லும்
மருவத்தந் துரைத்தும் என்னின் மற்ற அவை இரண்டும்
                                       மாதின்
புருவத்தைப் போலா தம்மின் மீ மிசைப் பெருந்தும்
                                   அன்றே.
41
   
1825.
வண்ணமா வடுக் கோல் நீலம் வாள் அயில் கயல்
                              சேல் என்றே
எண்ணின அவற்றில் ஒன்றும் யாவதும் இயல்பு உற்று
                                   அன்றால்
கண் இணைக்கு இணையேது என்னில் காமர் பால்
                            கடலுள் எங்கோன்
உண்ணிய எழு நஞ்சு என்னில் ஒரு சிறது ஒப்பது
                                     அம்மா.
42
   
1826.
எள் என்றும் ஒருத்தி என்றும் ஏர் கொள் சம்பகப்
                             போது என்றும்
தள் அரும் குமிழ் அது என்றும் சாற்றினர் அவைகள்
                                      நாடில்
தெள்ளிதும் அன்று வேறு செப்ப ஓர் பொருளும்
                                     இல்லை
உள்ளது ஒன்று உரைக்க வேண்டும் துண்டத்துக்கு
                              உவமை தேரின்.
43
   
1827.
கெண்டை அம் தடம் கண் பாவை கேழ்கிளர்
                     இதழ்க்கு ஒப்பு உன்னில்
தொண்டை அம் கனி உண்டு என்று சொல்வனேல்
                           அதுவும் துப்பால்
உண்டிடும் விருப்பினோருக்கு உலப்பிறா அமிர்தம்
                                   நல்கிக்
கொண்டு இருந்திடினே ஒப்பாம் இல்லையேல் கூடாது
                                     அன்றே.
44
   
1828.
முகை உறு தளவும் புள்ளின் முருந்தமும் குருந்தும்
                                   முத்தும்
அகை உறும் உடுவும் சாற்றின் அணி எயிறு அதற்கு
                                ஒவ்வா வால்
நகை அது தெரிந்தோர் வெஃக நல் நலம் புரியும்
                                      நீரால்
நிகர் பிறிது இல்லை திங்கள் நிலா எனில் ஆகும்
                                    அன்றே.
45
   
1829.
மயிர் எறி கருவி வள்ளை தோரண மணிப் பொன் ஊசல்
பெயர்வன நிகர்க்கும் என்று பேசுதல் பேதை நீர்த்தாம்
செயிர் அற உலோகம் ஆக்கும் திசை முகக் கொல்லன்
                                        செய்த
உயிர் எறி கருவி போலும் ஒண் குழைக் காது மாதோ.
46
   
1830.
கொங்குறு கூந்தலாள் தன் கோல வாள் முகத்துக்கு
                                   ஒப்பாம்
திங்கள் என்று உரைக்கில் தேயும் வளர் உறும் சிறப்பது
                                      அன்றால்
பங்கயம் எனினும் உண்டு ஓர் பழுது மற்று அதற்கும்
                                     என்னில்
அங்கு அதற்கு அதுவே அல்லால் அறையலாம் படி
                               மற்று உண்டோ.
47
   
1831.
சரம் தெறு விழியினாள் தன் களத்தினது எழிலைச் சங்கம்
கரந்தன கமுகும் அற்றே அன்னது கண்டு நேரா
வரம் தரு புலவர் சொற்றார் மற்றவர் அதற்கோ நாளும்
இரந்திடும் தொழிலர் ஆகி இழுக்கம் உற்றார்கள் அன்றே.
48
   
1832.
மாயவன் அதரம் சேர்த்தி வரன் முறை இசைத்த பச்சை
வேய் எனும் அதுவும் யான் செய் மெய்த்தவம் அனைய
                                        நீராள்
தூய பொன் தோள் கண்டு அஞ்சித் தோற்றதால்
                             என்னில் அன்னான்
சேய் அவன் வணக்காது ஏந்தும் சிலை கொலோ
                                 நிகர்ப்ப தம்மா.
49
   
1833.
பூந்தள வனைய மூரல் பொன் கொடி கரத்துக்கு ஒவ்வா
காந்தளும் நறிய செய்ய கமலமா மலரும் என்னில்
மாந்தளிர் பொருவது உண்டோ வள் உகிர் கிள்ளை நாசி
ஏய்ந்தள வற்றுக் காமர் இலைச்சினை ஆயது அன்றே.
50
   
1834.
பொருப்பு என எழுந்து வல்லின் பொற்பு எனத்
                        திரண்டு தென்னம்
தருப் பயில் இளநீர் என்னத் தண் எனா அமுது
                            உட்கொண்டு
மருப்பெனக் கூர்த்து மாரன் மகுடத்தில் வனப்பும்
                                    எய்தி
இருப்பது ஓர் பொருள் உண்டாம் மேல் இணை
                   முலைக்கு உவமை ஆமே.
51
   
1835.
அந்திரு அன்னாள் மேனி அமைத்து வெம் முலைக்கண்
                                     செய்வான்
சுந்தர வள்ளம் நீறு உண்துகிலிகை விதிகொள் போழ்தில்
சிந்திய துள்ளி ஒன்றின் ஒழுக்கம் கொல் சிறப்பின் மிக்க
உந்தியின் மீது போய உரோமத்தின் ஒழுக்கம் அன்றே.
52
   
1836.
மாசு அடையாத நீல மணி உறழ் வண்ண மாலோன்
காசு அடை அகலம் தாங்கும் கனங்குழைத் திருவும்
                                  போற்றும்
தேசு உடை மாதினுந்திச் சீரினுக்கு அனையன் துஞ்சும்
பாசடை நேர்வதாமோ பகரினும் பழிய தன்றோ.
53
   
1837.
கண்டுழி மாயும் அன்றே மின் எனில் ககனம் ஆகக்
கொண்டிடின் உருவு இன்றாகும் கொடி எனில் துடியது
                                     என்னில்
திண் திறல் நாகம் என்னில் சீரிது அன்று அணங்கின்
                                    நாப்பண்
உண்டிலை என்று மானும் உண்மைக்கு ஓர் உவமை
                                   உண்டோ.
54
   
1838.
மயல் உடைப் பணியும் ஆல வட்டமும் வனப்புச் செய்த
வியல் உடைத் தேரும் அச்சுற்று இரங்கியே உயிர்க்கும்
                                      என்றால்
கயல் உடைக் கண்ணாள் அல்குற்கு ஒப்பவோ காமர்
                                   வீடு அவ்
வியல் உறுப் பென்பர் யாரும் மேல் அது காண்டும்
                                     அன்றே.
55
   
1839.
கோழிலை அரம்பை ஈனும் குருமணித் தண்டை வேழத்
தாழ் இரும் தடக்கை தன்னை நிகர் எனில் தகுவது
                                     அன்றால்
மாழை உண் கரும் கண் மாதின் மகரிகை வயங்கு
                                  பொன் பூண்
சூழ் உறு கவானே போலும் அவை எனில் சொல்லல்
                                      ஆமோ.
56
   
1840.
அலவனாம் ஞெண்டை அன்னாள் அணி கெழு
                      முழந்தாட்கு ஒப்பாப்
புலவர்கள் புகலா நின்ற வழக்கு அலால் பொருந்திற்று
                                     அன்றால்
திலக நன் மணியே போல்வாள் தெய்வத வடிவுக்கு இந்த
உலகினுள் இழிந்தது ஒன்றை உரைக்கின் அஃது உவமை
                                        ஆமோ.
57
   
1841.
தமனியத்து இயன்ற பொற்பில் தாவிலா ஆவந் தானும்
சிமைய நேர் கொங்கை மாதின் திகழ் கணைக் காலும்
                                     தூக்கில்
சமம் இது பொருள் இது என்றே தமியனேன் துணிந்து
                                      சிந்தை
அமை உற அறிதல் தேற்றேன் ஐயம் உற்றிடுவன் யானே.
58
   
1842.
அரும்பு உறு காலைக் கொங்கைக்கு அழிவுற்று முகம்
                                    ஒவ்வாது
சுரும்பு உற மலர்ந்த பின்னும் தொலைந்து கையினுக்குத்
                                     தோற்றுத்
திரும்பவும் அடிக்கும் அஞ்சித் சிதைந்தது கமலம்
                                      என்றால்
பெரும் பயம் உற்று நோற்றும் பிழைத்தது போலும்
                                      அன்றே.
59
   
1843.
மேக்கு உயர் கூனல் ஆமை விரை செறி குவளைத்
                                    தோடு
தாக்கு உறு பந்து பிண்டித் தண் தளிர் சார்பு கூறில்
தூக்கு உறு துலையின் தட்டுத் தொகுத்து ஒரு வடிவில்
                                       வேதா
ஆக்கு உறின் மாதின் தாளுக்கு அது நிகராகும் போலும்.
60
   
1844.
ஆவியின் நொய்ய பஞ்சும் அனிச்ச மாமலரும் அன்னத்
தூவியும் மிதிக்கில் சேந்து துளங்கு உறும் அடிகள்
                                     என்றால்
நாவி அம் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர்
பூவதோ அது பூ அன்றேல் பொன்னடி பொருந்து
                                    மோதான்.
61
   
1845.
கயல் உறழ் கரும் கண் செவ்வாய்க் காரிகை தனது
                                     சாயல்
மயில் எனக் கூறின் அல்லால் மற்று அதற்கு உவமை
                                     இல்லை
இயல் உறு வடிவில் ஒப்பதே உளது இவளே போலச்
செயலுறுத் எழுதிற்று உண்டேல் சித்திரம் அஃதே
                                    போலும்.
62
   
1846.
ஆனன் அம் நான்கு செய் தாட்கு ஆயிரம் மடங்கு ஏர்
                                      கொண்ட
மான் இனி தன்னை வேதா வகுத்திலன் கொல்லோ
                                     அன்னான்
தான் அமைத்து உளனே என்னில் தலை பல தாங்கி
                                        இந்தத்
தூ நிலா நகையினாளைத் தொடர்ந்து பின் திரிவன்
                                      அன்றே.
63
   
1847.
மையறு புவியில் வந்த மாது இவள் அடியில் உள்ள
துய்யதோர் குறிகள் வானில் தொல் பெரும் திருவில்
                                    வைகும்
செய்யவன் தனது தேவி சிரத்தினும் இல்லை என்றால்
மெய் உறு குறிகள் எல்லாம் இனைத்து என விளம்பல்
                                     பாற்றோ.
64
   
1848.
என்று முன்னி அவ் வேந்திழை தன் முனம்
சென்று காமர் திருவினும் சீரியோய்
நன்று நன்று நின் நல்வரவே எனா
நின்று பின்னும் நெறிப்பட ஓதுவான்.
65
   
1849.
யாது நின் குலம் யாது நின் வாழ் பதி
யாது நின் பெயர் யார் உனைத் தந்தவர்
ஓதுவாய் என்று உரைத்தனன் உள்ளுறு
காதலான் மிகு காசிபன் என்பவே.
66
   
1850.
வனிதை கூறுவள் மாதவ நீ இது
வினவி நிற்றல் விழுமிது அன்று என்னிடைத்
தனியன் ஆகியும் சார்ந்தனை நோற்பவர்க்
கினியவே கொல் இனையது ஓர் நீர்மையே.
67
   
1851.
ஏதில் நோன்பை இகந்து உணர்வு இல்லதோர்
பேதை மாந்தரில் பேசி என் சார்வது
நீதியே அன்று நின் கடன் ஆற்றிடப்
போதி என்ன முனிவன் புகலுவான்.
68
   
1852.
மங்கை கேட்டி வரம்பு அறு பற் பகல்
அங்கம் வெம்ப அகம் மெலிவு உற்றிடச்
சங்கை இன்றித் தவம் பல செய்திடல்
இங்கு வேண்டியது எய்துதற்கே அன்றோ.
69
   
1853.
பொன்னை வேண்டிக் கொலோ பொன்னின் மாநகர்
தன்னை வேண்டிக் கொலோ சசியாம் பெயர்
மின்னை வேண்டியே அல்லது வேறு மற்று
என்னை வேண்டி அவ் இந்திரன் நோற்றதே.
70
   
1854.
ஐதின் மேனி அலசுற யான் தவம்
செய்தது இங்கு உனைச் சேருதற்கு இத்திறம்
நொய்தின் மேவினை நோற்றதற்குப் பயன்
எய்தி உற்றது இனித்தவம் வேண்டுமோ.
71
   
1855.
பேரும் ஊரும் பிறவும் வினவினேற்கு
கோர ஒன்றும் உரைத்திலை ஆயினும்
சேரவே பின் தெளிகுவன் காம நோய்
ஈருகின்றது இரங்குதி நீ என்றான்.
72
   
1856.
மாயை கேட்டு வறிது நகையளாய்
நீ இவ்வாறு நெடும் தவம் செய்ததும்
ஆயில் என் பொருட்டோ அஃது அன்று அரோ
தூயை வஞ்சம் சொலன் முறையோ என்றாள்.
73
   
1857.
மற்று இவ் வண்ணம் மயில் புரை சாயலாள்
சொற்ற காலை அனையவள் சூழ்ச்சியை
முற்றும் ஓர்ந்து முதிர் கலை யாவையும்
கற்று உணர்ந்திடு காசிபன் கூறுவான்.
74
   
1858.
பொய்ம்மை யாதும் புகல்கிலன் நான்முகன்
செம்மல் யான் அது தேருதி போலுமால்
இம்மையே பரம் ஈந்திடு வோய் இவண்
மெய்ம்மையே உரைத்தேன் உள வேட்கையால்.
75
   
1859.
பல் நெடும் தவம் பல பகல் ஆற்றியான்
முன்னி நின்றது முத்தி பெற்று உய்ந்திட
அன்னதே எற்கு அருள் செய வந்தனை
உன்னை மேலவன்றோ உயர் முத்தியே.
76
   
1860.
ஈதலான் மற்று எனக்கு ஒரு பேறு இலை
ஆதலால் உனையே அடைந்தேன் எனக்
காதல் மாதும் அக் காசிபற் கண் உறீஇ
ஓதலாம் பரிசு ஒன்றை உணர்த்துவாள்.
77
   
1861.
மங்கலம் இயைந்திடு வடாது புலம் உள்ளோன்
செம் கனக மேரு வரை சேர்ந்தது ஒரு தென்பால்
கங்கை நதியின் கரை கலந்திட நினைந்தேன்
அங்கண் உறுகின்றது ஒர் அரும்பயன் விழைந்தே.
78
   
1862.
வல்லை அவண் ஏகுறுவன் மாதவ வலத்தோய்
நில் இவண் எனப் பகர நீ நிறமது ஆகும்
செல் உறழுமேனி தரு செம்மல் அருள் மைந்தன்
ஒல்லை இது கேண்ம் என உரைக்கல் உறுகின்றான்.
79
   
1863.
கங்கை நதி ஆதிய கவின் கொள் நதி ஏழும்
அம் கண் உலகம் தனில் அரன் பதிகள் யாவும்
மங்குல் தவழ் மேனியவன் வாழ்பதியும் மற்றும்
இங்கு உற அழைப்பன் ஒர் இமைப் பொழுது தன்னில்.
80
   
1864.
பொன் உலகும் விஞ்சையர்கள் போது உலகும் ஏனோர்
மன் உலகும் மாதிரவர் வாழ் உலகும் அம் கண்
துன்னிய தொர் தேவரொடு சூழ் திருவினோடும்
இன்ன பொழுதே விரைவின் ஈண்டு தரவல்லேன்.
81
   
1865.
மூவகைய தேவரையும் முச்சகம் அது உள்ளோர்
யாவரையும் நீ தெரிய எண்ணுகினும் இங்ஙன்
மேவர வியற்றிடுவன் வெஃகல் புரிவாயேல்
காவல் உறு பேர் அமிர்தமும் கடிதின் ஈவேன்.
82
   
1866.
எப் பொருளை வேண்டினும் இமைப்பில் உன வாக
அப் பொருள் யாவையும் அளிப்பன் அஃதல்லால்
மெய்ப் புதல்வர் வெஃகினும் விதிப்பன் அவர் தம்மை
ஒப்பு இலை இவர்க்கு எனவும் உம்பர் இடை உய்ப்பேன்.
83
   
1867.
அந்தம் மிகு மேனகை அரம்பை முதல் ஆனோர்
வந்து உன் அடி ஏவல் செய வல்லை புரிகிற்பேன்
சிந்தை நனி மால் கொடு இயங்கும் எனது ஆவி
உய்ந்திட நினைந்தருடி ஒல்லை தனில் என்றான்.
84
   
1868.
முனி இது புகறலோடு முற்றிழை முறுவல் எய்தித்
தனி இனள் என்று கொல்லோ சாற்றினை இனைய நீர்மை
இனியது தவிர்தி மேலோர்க்கு இசையுமோ முன்னம்
நினைவுழிச் செல்வல் நோற்று நீ இவண் இருத்தி என்றே.
85
   
1869.
கங்கையின் திசையை முன்னிக் கடிது அவள்
                             செல்வாள் என்ன
அங்கு அவள் போதலோடும் அருந்தவன் தொடர்ந்து
                                      செல்ல
மங்கையும் அவரும் எய்தி மாயையில் கரந்து நிற்ப
எங்கணும் நோக்கிக் காணான் இடர் உழந்து இரங்கி
                                    நைவான்.
86