காசிபனுபதேசப் படலம்
 
1960.
நீங்கிய சூர் முதல் நெறியின் ஏகியே
ஆங்கு அவர் அடி தொழுது அருள் செய் மேலையீர்
யாங்கள் செய்கின்றது என் இசைமின் நீர் என
ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான்.
1
   
1961.
உறுதியது ஒன்றினை உணர்த்து கின்றனன்
அறை கழல் மைந்தர் காள் அரிய மாதவ
நெறி தனில் மூவிரும் நிற்றிர் அன்னதன்
முறை தனை வாய்மையான் மொழிவன் கேண்மினோ.
2
   
1962.
சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம் பொருள்
மூன்று உள மறை எலாம் மொழிய நின்றன
ஆன்றது ஓர் தொல் பதி ஆர் உயிர்த்தொகை
வான் திகழ் தளை என வகுப்பர் அன்னவே .
3
   
1963.
அளித்திடல் காத்திடல் அடுதல் மெய் உணர்
ஒளித்திடல் பேர் அருள் உதவலே எனக்
கிளத்திடு செயல் புரிகின்ற நீலம் ஆர்
களத்தினன் பதி அது கழறும் வேதமே.
4
   
1964.
பற்று இகல் இல்லதோர் பரமன் நீர்மையை
இற்று என உரைப்பரிது எவர்க்கும் என்பர் ஆல்
சொற்றிடும் வேதமும் துணிகிலா அவன்
பெற்றியை இனைத்து எனப் பேச வல்லமோ.
5
   
1965.
மூவகை எனும் தளை மூழ்கி உற்றிடும்
ஆவிகள் உலப்பில அநாதி உள்ளன
தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையால்
ஓவற முறை முறை உதித்து மாயுமே.
6
   
1966.
பார் இடை உதித்திடும் பாரைச் சூழ்தரு
நீர் இடை உதித்திடும் நெருப்பில் வாயுவில்
சீர் உடை விசும்பு இடைச் சேரும் அன்னவைக்கு
ஓர் இடை நிலை என உரைக்கல் பாலதோ.
7
   
1967.
மக்களாம் விலங்கும் ஆம் மாசு இல் வான் இடைப்
புக்கு உலாம் பறவை ஆம் புல்லும் ஆம் அதில்
மிக்கதா வரமும் ஆம் விலங்கல் தானும் ஆம்
திக்கு எலாம் இறைபுரி தேவும் யாவும் ஆம்.
8
   
1968.
பிறந்திடு முன் செலும் பிறந்த பின்னர் மெய்
துறந்திடும் சில பகல் இருந்து துஞ்சும் ஆல்
சிறந்திடு காளையில் தேயும் மூப்பினில்
இறந்திடும் அதன் பரிசியம்பல் ஆகுமோ.
9
   
1969.
சுற்று உறு கதிர் எழு துகளினும் பல
பெற்று உள என்பதும் பேதை நீரது ஆல்
கொற்றம் அது உடைய தோர் கூற்றம் கைக் கொள
இற்றவும் பிறந்தவும் எண்ணல் பாலவோ.
10
   
1970.
கலை படும் உணர்ச்சியும் கற்பும் வீரமும்
மலைபடு வெறுக்கையும் வலியும் மற்று அது
மலைபடு அற்புதம் ஆகும் அன்னவை
நிலை படு பொருள் என நினைக்கல் ஆகுமோ.
11
   
1971.
தருமம் என்று ஒரு பொருள் உளது தாவிலா
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்கும் ஆல்
அருமையில் வரும் பொருள் ஆகும் அன்னதும்
ஒருமையினோர்க்கு அலால் உணர்தற்கு ஒண்ணுமோ.
12
   
1972.
தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும்
அருள் எனும் குழவியும் அணையும் ஆங்கு அவை
வரும் வழித் தவம் எனும் மாட்சி எய்துமேல்
தெருள் உறும் அவ் வுயிர் சிவனைச் சேரும் ஆல்.
13
   
1973.
சேர்ந்துழிப் பிறவியும் தீரும் தொன்மை ஆய்ச்
சார்ந்திடும் மூ வகைத் தளையும் நீங்கிடும்
பேர்ந்திடில் அரியது ஓர் பேர் இன்பம் தனை
ஆர்ந்திடும் அதன் பரிசு அறைதற்கு ஏயுமோ.
14
   
1974.
ஆற்றலை உளது மாதவம் அது அன்றியே
வீற்றும் ஒன்று உளது என விளம்பல் ஆகுமோ
சாற்ற அரும் சிவகதி தனையும் நல்கும் ஆல்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால்.
15
   
1975.
அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மை ஆக்குறும்
இத்துணை அன்றியே இம்மை இன்பமும்
உய்த்திடும் உளந்தனில் உன்னும் தன்மையே.
16
   
1976.
ஆதலில் பற்பகல் அருமையால் புரி
மா தவம் இம்மையும் மறுமையும் தரும்
ஏது அது ஆகும் அல் இருமையும் பெறல்
ஆதி அம் பகவனது அருளின் வண்ணமே.
17
   
1977.
ஒருமை கொள் மாதவம் உழந்து பின் முறை
அருமை கொள் வீடு பேறு அடைந்து உளோர் சிலர்
திருமை கொள் இன்பினில் சேர்கின்றோர் சிலர்
இருமையும் ஒருவரே எய்தினோர் சிலர்.
18
   
1978.
ஆற்றலில் தம் உடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகிலீர் கொலோ தேவர் ஆகியே
மேல் திகழ் பதம் தொறும் மே உற்றோர் எலாம்.
19
   
1979.
பத்திமை நெறியொடு பயிற்றி மா தவ
முத்தி பெற்று அரன் அடி முன் உற்றோர் தமை
இத்துணை எனல் அரிது இருமையும் பெறு
மெய்த்தவர் மால் ஒடு விரிஞ்சன் ஆதியோர்.
20
   
1980.
பல் உயிர் தன்னையும் மாய்த்துப் பாரினுக்கு
அல்லல் செய்து அரும் தவம் ஆற்றிடாதவர்க்கு
இல்லையே இருமையும் இன்பம் ஆங்கு அவர்
சொல் அரும் பிறவியுள் துன்பத்து ஆழுவார்.
21
   
1981.
அறிந்து இவை உரைப்பினும் அவனி மாக்கள் தாம்
மறம் கொலை களவொடு மயக்கம் நீங்கலர்
துறந்திடு கின்றிலர் துன்பம் அற்றிலர்
பிறந்தனர் இறந்தனர் முத்தி பெற்றிலார்.
22
   
1982.
தவம் தனின் மிக்கது ஒன்று இல்லை தாவில் சீர்த்
தவம் தனை நேர்வது தானும் இல்லையால்
தவம் தனின் அரியது ஒன்று இல்லை சாற்றிடில்
தவம் தனக்கு ஒப்பது தவம் அது ஆகுமே.
23
   
1983.
ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்
தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே
மா தவம் புரிகுதிர் மற்று அது அன்றியே
ஏது உள ஒரு செயல் இயற்றத் தக்கதே.
24
   
1984.
உடம்பினை ஒறுத்து நோற்பார் உலகு எலாம் வியப்ப  
                                     வாழ்வர்
அடைந்தவர்க் காப்பர் ஒல்லார்க்கு அழிவு செய்திடுவர்
                                     வெஃகும்
நெடும் பொருள் பலவும் கொள்வர் நித்தராய் உறைவர்
                                         ஈது
திடம் பட உமக்கு ஓர் காதை செப்புவன் என்று
                                   சொல்வான்.
25