மாயையுப தேசப் படலம்
 
2270.
அன்னது சரதமே அறிதிர் ஆதலால்
இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பு என
முன்னுறு காசிப முனிவன் செப்பலும்
நல் நய மாயவள் நகைத்துக் கூறுவாள்.
1
   
2271.
மறை தெரி முனிவ நீ வாய்மை ஆகிய
உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடு உறும்
அறிவுடை முனிவரர்க்கு அன்றி நாம் அருள்
சிறுவருக்கு இத்திறம் செப்பல் ஆகுமோ.
2
   
2272.
நன் பெரும் செல்வமும் நவை இல் கொற்றமும்
இன்பமும் அழிவிலாது இருக்கும் ஆயுளும்
மன்பெரும் சீர்த்தியும் மறு இல் வாழ்க்கையும்
அன்பு உடை இனையவர் அடைதல் வேண்டும் ஆல்.
3
   
2273.
காதலால் அவை எலாம் கடிதில் பெற்றிட
மாதவ முனிவர வருத்தி என்றலும்
ஈது கொலோ உனது எண்ணம் நீ அவர்க்கு
ஆதகும் இயல்பினை அறைதி என்னவே.
4
   
2274.
மாயவள் தன் சிறார் வதனம் நோக்கியே
தூய இம் முனிவரன் சொற்றது உண்மையே
ஆயினும் உங்களுக்கு ஆவது அன்று அவை
நீயிர்கள் கேண்ம் என நெறியில் கூறுவாள்.
5
   
2275.
மால் படு புந்தியின் மறு இல் சேதனம்
பால் படும் உயிர்க்கு எலாம் பவத்தின் மாண் பயன்
நூல் படு கல்வியின் நுவல் வளத்தினின்
மேல் படுகின்றது இல் விழுமிது இல்லையே.
6
   
2276.
திருமை கொள் வளனொடு தீது இல் கல்வியாம்
இருமையின் ஒன்றினை எய்திடாது எனின்
அருமை கொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும்
பெருமையது உடையது பேயின் தோற்றமே.
7
   
2277.
பிறந்த நல் உயிர்க்கு எலாம் பெருமை நல்கிய
இறந்ததோர் பொருண்மையது இரண்டின் வன்மையும்
அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில்
சிறந்தது திரு வெனச் செப்பல் ஆகுமால்.
8
   
2278.
சொல் தரு கலை எலாம் தொடர்ந்து பல் பகல்
கற்றவர் ஆயினும் கழி நிரப்பினால்
அற்றவர் ஆவரே ஆக்கம் வேண்டியே
பற்று அலர் தம்மையும் பணிந்து நிற்பர் ஆல்.
9
   
2279.
அளப்பரும் கல்வியும் ஆக்கம் யாவையும்
கொளப்படும் தன்மையில் குறை உறாதவை
வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலில்
கிளத்திடின் மேலது கேடில் செல்வமே.
10
   
2280.
நூல் உறு கல்வியை நுனித்து நாடியே
வால் அறிவு எய்திய வரத்தினோர்களும்
மேல் உறு திருவொடு மேவுறார் எனின்
ஞாலம் அங்கவர் தமை நவையுள் வைக்குமால்.
11
   
2281.
அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும்
உளப்படும் தருமமும் உயர்ந்த சீர்த்தியும்
கொளப்படு கொற்றமும் பிறவும் கூட்டலால்
வளத்தினில் சிறந்தது மற்று ஒன்று இல்லையே.
12
   
2282.
ஆக்கம் இங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல்
ஊக்கம் உண்டாவரேல் உறுவர் அன்னது
நீக்கம் இல் கொள்கையின் நிற்பரே எனின்
மேக்கு உறு பெரும் திரு விரைவின் மேவும் ஆல்.
13
   
2283.
அவ்வளம் பல வகைத்து ஆகும் ஆங்கு அவை
எவ்வரும் பெறுகிலர் இயல்பின் யாவையும்
செவ்விதின் நீர் பெறச் சிந்தை செய்யுமின்
உய்வது வேறு இலை உறுதி ஈது அலால்.
14
   
2284.
எங்கள் பால் நென்னலின் யாமம் தோன்றலால்
துங்கமா நிருதர் தம் கதியில் துன்னினீர்
உங்களுக்கு ஒன்னலர் உம்பர் யாவரும்
தங்கள் தம் முயற்சியால் தலைமை பெற்று உளார்.
15
   
2285.
நீவிர்கள் அனையரின் நிவந்த கொள்கையர்
ஆவிர்கள் போலும் ஆல் ஆக்கம் எய்துவான்
மூவிரும் முயலுதிர் முயலும் பெற்றியை
ஏவிரும் கேட்க யான் எடுத்துக் கூறுகேன்.
16
   
2286.
ஆனது ஓர் இத்திசை ஆலம் தீவு எனத்
தான் அறை கிற்பர் இத்தரைக்கு நேர் அதாய்ப்
போனது ஓர் உத்தர பூமி ஆயிடை
தானவர் நோற்றிடத் தகுவது என்பதே.
17
   
2287.
அப்புவி அதன் இடை ஆற்றற்கு ஈறு இலா
இப்பரிசனம் ஒடும் ஏகி ஆயிடை
ஒப்பு அறு குண்டமும் ஒழிந்த செய்கையும்
மெய்ப்பட இயற்றுதிர் வேள்வி செய்யவே.
18
   
2288.
காரி கொள் இந்தனம் கதழ விட்டு முன்
ஆர் அழல் மூட்டியே அழலின் பண்டமும்
சோரியும் ஊன்களும் பிறவும் தூவியே
வீரர்கள் புரிதிர் ஆல் வெய்ய வேள்வியே.
19
   
2289.
செம் கண் மால் அயன் முதல் தேவர் யாவரும்
எங்கள் நாயகன் என இறைஞ்ச மேதகு
கங்கை வார் சடை முடிக் கடவுள் போற்றியே
பொங்கு தீ வேள்வியைப் புரிதிர் பற்பகல்.
20
   
2290.
அம்மகம் புரிதிரேல் அருளின் முன் உறீஇ
மைம் மலி மிடறு உடை வான நாயகன்
மெய்ம்மையின் நீவிர்கள் வெஃகி ஆங்கு எலாம்
இம்மையின் எய்து மாறு இனிது நல்குமால்.
21
   
2291.
மூண்ட இவ் வேள்வியை முயல மூவிரும்
ஆண்டு சென்று உற்றுழி அன்னதற்கு அவண்
வேண்டிய பொருள் எலாம் வேறு வேறதா
ஈண்டு உற உதவுவன் ஏகுவீர் என்றாள்.
22
   
2292.
தந்திர நெறிகளும் தவறு இல் பான்மையும்
மந்திர முறைகளும் மற்றும் உள்ளவும்
இந்திரவளன் உறும் இயல்பின் மூவர்க்கும்
முந்திர உதவிய முதல்வி நல்கினாள்.
23
   
2293.
இன்னது ஓர் காலையில் ஈன்ற மாயவள்
தன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன்
பின்னவர் தம் ஒடும் பெயர் உற்று ஏகினான்.
24