மாயை நீங்கு படலம்
 
2294.
ஏகிய காலையில் இணை இல் மாயவள்
மோகமொடு அயல் உற முனியை நோக்கியே
போகுவன் யான் இனிப் புதல்வர்ப் பேணுவான்
நீ கவலேல் என நிறுவிப் போயினாள்.
1
   
2295.
போதலும் முனிவரன் புந்தி உள் உறும்
ஆதரம் உந்திட அவள் பின் ஏகியே
ஏதிலன் ஆம் என எனை விட்டு ஏகுதல்
நீதி அது ஆகுமோ உரைத்தி நீ என்றான்.
2
   
2296.
ஆய் இழை புகலுவாள் அழுங்கல் மாதவ
சேயினர் பொருட்டு உனைச்சேர்ந்தது அன்றி ஈண்டு
ஏயது நின்னுடன் இருக்க அன்றி யான்
மாயவள் அறிக என மறைந்து போயினாள்.
3
   
2297.
அருவினள் சேறலும் அற் புதத்தவள்
வரு பொருள் யாவையும் மறைந்து போயின
வெரு அரு முறை புரி வேந்தை விட்டு அகல்
திருவொடு பெயர்வது ஓர் செல்வம் போலவே.
4
   
2298.
மாணலன் எய்திய மாயை தன் உருக்
காண் அலன் ஆகிய கமலத்தோன் மகன்
பூண் அலன் தெளிவினைப் பொருமி ஏங்கியே
ஆண் அலன் அழி உற அழுங்கி மாழ்குவான்.
5
   
2299.
வாவியும் தடங்களும் வரையும் ஏனவும்
தேவரும் காமுறச் செறிந்த அற்புதம்
யாவையும் காண்கிலான் இரங்கி நின்றனன்
ஆவியில் குரம்பையன் ஆகும் என்னவே.
6
   
2300.
மைந்தனது உறுதுயர் மலரின் மேவிய
தந்தை தன் உணர்வினால் தகவின் நாடியே
அந்தர நெறியில் வந்து அங்கண் மேவலும்
எந்தை வந்தனன் கொல் என்று எழுந்து தாழவே.
7
   
2301.
ஆசிகள் செய்து நின் அரிய நோன்பு ஒரீஇக்
காசிப மெலிவது கழறுக என்றலும்
பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டு உளம்
கூசினன் அவன் மனம் கொள்ளத் தேற்றுவான்.
8
   
2302.
வேதமும் கலைகளும் உணர்ந்து மேலதாம்
மூது அறிவு எய்திய முனிவ நீ ஒரு
மாது தன் பொருட்டினால் மையல் எய்தியே
பேதுறு கிற்றியோ பேதை மாந்தர் போல்.
9
   
2303.
கண்டது ஓர் நறவமே காமமே என
எண்டரு தீப் பொருள் இருமைத்து என்பர் ஆல்
உண்டு உழி அழிக்கும் ஒன்று உணர்வை உள்ளம் மேல்
கொண்டு உழி உயிரையும் கொல்லும் ஒன்று அரோ.
10
   
2304.
உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத் தீயதே.
11
   
2305.
ஈட்டு உறு பிறவியும் வினைகள் யாவையும்
காட்டியது இனையது ஓர் காமம் ஆதலின்
வாட்டம் இல் புந்தியான் மற்று அந் நோயினை
வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்து உளார்.
12
   
2306.
நெஞ்சினும் நினைப்பரோ நினைந்து உளார் தமை
எஞ்சிய துயர் இடை ஈண்டை உய்த்து மேல்
விஞ்சிய பவக் கடல் வீழ்த்தும் ஆதலால்
நஞ்சினும் தீயது நலம் இல் காமமே.
13
   
2307.
ஆதலில் காமம் உற்று அழுங்கல் நீ புணர்
மாதரும் வஞ்சக மாயை ஆகும் ஆல்
தீது இவண் இழைத்தனை தீரத் தொன்மை போல்
நீ தவம் புரிக என நிறுவி ஏகினான்.
14
   
2308.
மாறு அகல் நான்முகன் வாய்மை தேர்தலும்
தேறினன் மையல் நோய் தீர்ந்து காசிபன்
ஏறு அமர் கடவுளை இதயத்து உன்னியே
வீறு ஒடு நோற்றனன் வினையின் நீங்குவான்.
15
   
2309.
ஆண்டு அவண் அகன்றிடும் அணங்கு தன் சிறார்
மூண்டிடு தீமகம் முயலும் எல்லையில்
வேண்டியது உதவுவான் விமலன் போற்றியே
பூண்டனள் பெரும் தவம் புகரின் ஏவலால்.
16
   
2310.
காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்
ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும்
பேசினம் அங்கு அவர் பெற்ற பேற்றினை
ஈசனது அருளினால் இனி இயம்புவாம்.
17