எதிர் கொள் படலம் படலம்
 
2709.
திண் திறன் மாயையின் செம்மல் இத்திறம்
அண்டர் தம் துறக்க மேல் அடைந்த காலையில்
பண்டு இமையோர்களால் படரும் தானவர்
கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார்.
1
   
2710.
ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு
நாயகற்கு ஒற்றர் போய் நவில அன்னவன்
தூய நல் அமுதினைக் கிடைத்துத் துண் என
மேயினன் ஆம் எனக்களிப்பின் மேயினான்.
2
   
2711.
தானை அம் படையொடு தகுவர் கோமகன்
ஆன வெம் சூர் பெறும் அளப்பில் ஆக்கமும்
கூனல் அம் பிறை தவழ் குடுமிச் செம்சடை
வானவன் கருணையும் மனம் கொண்டு ஏகினான்.
3
   
2712.
அன்னவன் புகர்தனை அடைந்து நம் குல
மன்னனை உற்றிட வல்லை செல்லுவன்
முன் உற ஏகி எம் முறையும் செய்கையும்
பன்னுதி என்று முன் படர்வது ஆக்கினான்.
4
   
2713.
அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன்
முன் உற மானமேல் முடுகி ஏகலும்
தன் உறு கிளைஞரும் தானும் ஆங்கு அவன்
பின் உற மன்னவன் பெயர்ந்து போயினான்.
5
   
2714.
மாசு அறு பேர் ஒளி மான மீமிசைத்
தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில்
காசிபன் அருள் மகன் கண்டு சேண் இடை
ஈசனை எதிர்ந்து என எதிர் கொண்டு ஏகினான்.
6
   
2715.
அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை
நெஞ்சு அகம் மகிழ்வொடு நின்று தேசிகன்
விஞ்சுக திருவொடு விசயம் தான் எனா
எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான்.
7
   
2716.
ஆயது காலையில் அனையன் பாங்கரின்
மேயின அரிமுகன் வேழ மாமுகத்து
தீயவன் இருவரும் தேர் ஒடு ஏகியே
தூயது ஓர் புகர் அடி தொழுது போற்றினார்.
8
   
2717.
ஏத்திடும் அவர் தமக்கு இயலு ஆற்றினால்
மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப்
பார்த்தனன் உனக்கு யாம் படுத்து கின்றது ஓர்
வார்த்தை உண்டு அன்னது வகுத்தும் கேட்டி நீ.
9
   
2718.
பங்கம் இல் காசிபன் பன்னி ஆகிய
நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான்
சங்கை அற்று இருந்த தானவரைத் தாங்கினான்
எங்களுக்கு ஓர் துணை என்னும் தன்மையான்.
10
   
2719.
ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல்
மூண்டிடு வெம்சமர் முற்றி வீரத்தைப்
பூண்டனன் ஆதலில் புழுங்கி மாரி நாள்
மாண்டிடு கதிர் என மாழ்கி வைகினான்.
11
   
2720.
அத்தகு மேலையோன் அவனி மீமிசை
வித்திடு நாறு செய் விளைவு காண் உறா
எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே
நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே.
12
   
2721.
தவம் கொடு முந்து நீ தழலை வேட்டதும்
சிவன் புரி வரங்களும் செப்பக் கேட்டனன்
உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான்
நிவந்தன ஆங்கு அவன் நெடிய தோள்களே.
13
   
2722.
பற்றலர் புரம் அடு பரமன் ஈந்திடப்
பெற்றது ஓர் வரத்தொடு பெயர்ந்தி யாரையும்
வெற்றி கொண்டு இவண் வரும் மேன்மை கேட்புறா
மற்று உனை அடைந்திட வருகின்றான் எனா.
14
   
2723.
வன்திறல் அவுணர் கோன் வருதல் காட்டியே
புன் தொழில் படுத்திய புகர் உரைத்தலும்
துன்றிய கனை கழல் சூரன் என்பவன்
நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான்.
15
   
2724.
ஆர்ந்த தொல் கிளையொடும் அவுணர் காவலன்
சேர்ந்தனன் சூரனைச் செம்கையால் தொழாப்
பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்தது ஓர் உடல்
சார்ந்திடுகின்றது ஓர் தன்மை என்னவே.
16
   
2725.
ஆய் இடை வெய்ய சூர் அவுணர் கோவினை
நீ இனிது இருத்தி கொல் என்ன நீயுளை
தீயன அடையுமோ சிறுமை எய்துமோ
மேய நும் குல முறை விளங்கத் தோன்றினாய்.
17
   
2726.
என்று இவை நய மொழி இயம்பியே புடை
சென்றன மாயையின் செய்யன் காதலன்
துன்றிய தகுவர் தம் அனிகம் சூழ்தர
வென்றியோடு அவனி மேல் விரைவின் மீளவே.
18
   
2727.
மண் உலகத்தில் வெம் சூர் வந்தனன் எனும் சொல் கேளா
அண்ணல் அம் கமலத்தேவும் அமரர் கோமானும் ஏனை
விண்ணவராய் உள்ளோரும் வியத்தகு முனிவர் யாரும்
துண் என வந்து மாயோன் துயில் கொளும் கடலில்
                                        புக்கார்.
19
   
2728.
கொய் துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று
கை தொழுது இறைஞ்சித் தாங்கள் கனை கழல் சூரன்
                                        தன்னால்
எய்திடு சிறுமை எல்லாம் இயம்பினர் இனிமேல் யாங்கள்
செய்திடுகின்றது என்கொல் செப்புதி பெரும என்றார்.
20
   
2729.
அன்று அவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப்
புன் தொழில் தக்கன் வேள்வி புகுந்திடும் தீமை தன்னால்
இன்று இது பொருந்திற்று அம்மா யார் இது விலக்கல்
                                      பாலார்
ஒன்று இனிச் செய்யும் தன்மை கேண்மின் என்று ஓதல்
                                      உற்றான்.
21
   
2730.
பண்டு எயில் மூன்றும் அட்ட பராபரன் வரம் பெற்று
                                    உள்ளான்
அண்டம் எங்கும் எவையும் வென்றோன் ஆதலால்
                              நம்மால் வென்றி
கொண்டிடு திறத்தான் அல்லன் கொடிய அச்சூரன்
                                   தன்னைக்
கண்டு சென்றிடுதும் ஈதே காரியம் போலும் என்றான்.
22
   
2731.
செம் கமலத்தோன் ஆதி தேவரும் முனிவர் யாரும்
இங்கு இது கருமம் என்றே இசைந்தனர் ஆகி நிற்ப
அங்கு அவரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித்
துங்கம் அது உடைய தொல் சீர்ச் சூரனைக் காண
                                      வந்தான்.
23
   
2732.
மருத்துழாய் மவுலி ஆதி வானவர் முனிவர் யாரும்
திருத்தகு சூரன் நேரே சென்று நின்று ஆசி கூறி
அருத்தியது ஆகப் போற்ற அவர்களுள் பதினோர் கோடி
உருத்திரர் தொகுதி ஆனோர் ஒருங்கு உடன் நிற்பக்
                                    கண்டான்.
24
   
2733.
கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண்
அண்டர் தம் பெருமான் என்ன அமைந்த தொல் வடிவம்
                                       உள்ளார்
எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கு இவர் யாவர்
                                       என்னத்
தண் துளவு அலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல்
                                       உற்றான்.
25