வில்லவன் வாதாவிப் படலம்
 
2857.
அன்னவருடன் வந்தாள் அசமுகி எனும் நாமம்
மன்னினள் ஒருவன் தன் மனை எனும் முறை இல்லாள்
தன் இறை தவிர்கின்றாள் தருமம் அது இலள் வானோர்
பன்னியர் தமை முன்னோர் படர்புயம் உற உய்ப்பாள்.
1
   
2858.
ஆள்வினை புரி உள்ளத் தவ முனிவரர் ஆற்றும்
வேள்வி நை யுறும் வண்ணம் வெம் தொழில் புரிகின்றாள்
நீள் வினை வடிவானாள் நிருதர்கள் குலம் எல்லாம்
மாள் வினை என யாண்டும் வைகலும் உலவு உற்றாள்.
2
   
2859.
கட்டழகு உளதாகும் காளையர் தமை நாடிக்
கிட்டினள் புணர்கிற்பாள் கேளிரை இகழ்வோரை
அட்டனள் நுகர்கின்றாள் அனையவள் ஒருவைகல்
முட்டினள் துருவாச முனி உறு தனி எல்லை.
3
   
2860.
அந்த நன் முனி தன்னை ஆய் இழை அவள் காணாச்
சிந்துவன் இவன் இன்னே செய்தவம் அஃது அன்றி
மைந்தர்கள் பெறுவேனால் வல்லை இல் இவண் என்னாப்
புந்தியில் நினைவாயே போய் அவன் எதிர் உற்றாள்.
4
   
2861.
உறுதலும் முனிநாடி ஒண் தொடி தனியே நீ
குறுகியது எவன் மாதோ கூறுதி எனல் ஓடும்
மறு அறு முனி நின்பால் மனம் மகிழ்வொடு மேவிச்
சிறுவர்கள் பெற வந்தேன் செப்புவது இது என்றாள்.
5
   
2862.
என்றலும் முனி சூரற்கு இளையவள் என நாடி
வென்றி கொள் மட மாதே மேல் உறு தவம் எல்லாம்
குன்றிடும் உனை இன்னே கூடுவன் எனின் நீயும்
நின்றிடல் பழி அல்லால் நீதியும் அல வென்றான்.
6
   
2863.
முனி இது பகர் வேலை மொய் குழல் மடம் ஆனாள்
இனி உனை மருவாதே ஏகலன் ஒருவிப்போம்
மன நினைவு ஒழிக என்றே வன்மையினொடு புல்லி
அனையவன் இதழ் ஊறல் ஆரமுது அயில் உற்றாள்.
7
   
2864.
ஆடு எனும் முக வெய்யாள் அனையனை வலிது ஆகக்
கூடினள் அது போழ்தில் குறுகினர் இருமைந்தர்
ஈடு உறு வலி மிக்கார் இன்னவர் தமை அன்னை
மாடு உற வருக என்றே மகிழ்வொடு தழு வுற்றாள்.
8
   
2865.
தழுவினள் பரிவோடும் தன் புதல்வரை நோக்கி
மழ களிறு அனையீர் காள் வல் அவுணரில் வந்தீர்
விழுமிய தவம் ஆற்றி மேவுதிர் வலி என்ன
அழி தரு நிறை கொண்ட அசமுகி உரை செய்தாள்.
9
   
2866.
தாயினது உருவாயும் தந்தை தன் உருவாயும்
ஏயின இருமைந்தர் வில்வலன் வாதாவி
ஆயதொர் பெயர் பெற்றோர் அன்னை தன் உரை
                                  கொண்டே
தூயது ஒர் குரவோன் தன் துணை அடி பணி குற்றார்.
10
   
2867.
மூண்டிடு வெகுளித் தீ முனிவரன் அடி தன்னைப்
பூண்டிடு திறன் மிக்க புதல்வரை எதிர் நோக்கி
வேண்டியது என்ன என வெய்யவள் தரு மைந்தர்
ஈண்டு உனது தவம் எல்லாம் யாம் பெற அருள் என்றார்.
11
   
2868.
ஆற்றிடு தவம் எல்லாம் அருள் எனின் அவை தாரேன்
வீற்று ஒரு பொருள் உண்டேல் வினவுதிர் என மேலோன்
சீற்றம் அது உளர் ஆகிச் சிறுவர்கள் இவன் ஆவி
மாற்றுதும் இவண் என்னா வல்லையின் எழல் உற்றார்.
12
   
2869.
இறுதி செய்திட உன்னி இகலுடன் எழுகின்ற
சிறுவர்கள் செயல் நாடிச் சினமொடு முனி நீவீர்
மறு அறு தவருக்கே வைகலும் இடர் செய்வீர்
குறு முனி நுமது ஆவி கொள்ளுக இனி என்றான்.
13
   
2870.
இனையது முனி சொற்றே எமை அடுவர்கள் என்னா
மனம் உறு தனி விஞ்சை மாயையின் மறை போழ்தில்
தனயர்கள் இருவோரும் தந்தை தனைக் காணார்
அனை தனை விடை கொண்டே ஆயிடை ஒருவுற்றார்.
14
   
2871.
வேறு ஒரு வனம் எய்தி மெய்த்தவர் குழு எல்லாம்
கோறலை மனம் உன்னிக் குமரர்கள் இருவோரும்
தேறிய உணர்வோடும் திசைமுகவனை நோக்கி
ஈறு அகல் பகலாக எரி அதன் இடை நோற்றார்.
15
   
2872.
செந்தழல் இடை நோன்பு செய்யவும் அயன் அங்கண்
வந்திலன் அது நாடி மற்று ஒரு செயல் உன்னி
வெம் திறல் இளையோனை வில்வலன் எனும் வெய்யோன்
சுந்தர மணி வாளால் துணிபட எறிகுற்றான்.
16
   
2873.
கை அனது உடல் கீறிக் கறையொடு தசை எல்லாம்
நெய்யுடன் அவி ஆக்கி நீடிய கனல் ஊடே
வையகம் அருள் தாதை மந்திர முறை உய்த்து
வெய்யவன் ஒரு வேள்வி விரைவொடு புரிகுற்றான்.
17
   
2874.
தவம் ஒடு மாகம் ஆற்றச் சதுர்முகன் அது கண்டே
அவனியின் மிசை வந்தே அரியது ஒர் செயல் செய்வாய்
எவன் அருள் பரிசு என்ன இணை அடி தொழுது ஏத்தி
அவுணர்கள் வடிவாம் வில்லவன் இவை அறைகின்றான்.
18
   
2875.
வன்னியில் அவி ஊணாய் மாண்டிடும் ஒரு பின்னோன்
மெய்ந் நிறை வடிவோடும் விரைவுடன் வரல் வேண்டும்
என்னலும் வாதாவி எழுக என அயன் ஓத
அன்னதொர் பொழுதின் கண் ஆர்த்து அவன்
                                 எழுந்திட்டான்.
19
   
2876.
ஆங்கனம் அசுரேசன் அதிசயம் உளன் ஆகித்
தீங்குடன் ஒரு சூழ்ச்சி சிந்தையின் இடை உன்னிப்
பூம் கமலத் தோனைப் போற்றி செய்து அடியேனுக்கு
ஈங்கு ஒரு வரம் எந்தாய் ஈக என உரை செய்வான்.
20
   
2877.
புல் அயின் மறியே போல் பொலிவு உறும் வாதாவி
ஒல்லையின் இனிமேலும் உடல் துணி படுவானேல்
எல்லை இல் பரிவால் யான் எம்பியை எழுக என்னத்
தொல்லையில் வடிவோடும் தோன்றி முன் வரல்
                                   வேண்டும்.
21
   
2878.
இப்படி வரம் ஒன்றே யான் பெற அருள்க என்றே
மெய்ப்படும் உணர்வு இல்லா வில்வலன் உரை செய்ய
அப்படி பல காலம் அது முடிக என நல்கிச்
செப்ப அரும் மறை வேதாச் சேண் உடை நெறி
                                   சென்றான்.
22
   
2879.
சேறலும் அது காலைச் சிறுவர்கள் இருவோரும்
ஏறு என அமர் சூர் முன் ஏகி உன் மருகோர் யாம்
வேறு அல என ஓதி மேதினி முனி வோரைக்
கோறல் செய் பெரு வன்மை கொண்டதும் உரைசெய்தார்.
23
   
2880.
மன்னவன் அவர் தம்மை மகிழ்வொடு நனி புல்லி
என் உழை மருகீர்காள் இனிமை யொடு உறும் என்ன
அன்னவர் சில வைகல் ஆய் இடை தனில் வைகிப்
பின் உற இருவோரும் பெரு நில மிசை வந்தார்.
24
   
2881.
நவை தவிர் குடகின் கண் நால் வகை நெறி கூடும்
கவலையின் வளமல்கும் கானக விடை தன்னில்
அவுணர்கள் தாம் அங்கு ஓர் ஆச்சிரமம் செய்தே
எவர் எவரும் வெஃகும் எப் பொருள் களும் உய்த்தார்.
25
   
2882.
அன்னதொர் இடை தன்னில் ஆர் இடராய் உள்ளோர்
இன் உயிர் கொள உன்னி இருவருள் இளமைந்தன்
பொன் நிவர் திரி கோட்டுப் பொரு தகர் ஆய் நிற்க
முன்னவன் விரதம் செய் முனிவரின் இனிது உற்றான்.
26
   
2883.
வில்வலன் என ஓதும் வெய்யவன் அவ் வெல்லைச்
செல்வது ஓர் முனிவோரைச் செவ்விதின் எதிர் கொண்டு
வல்விரை வொடு தாழ்ந்து மற்று உமது அடியேன் தன்
இல் வருவீர் என்னா இயல்பொடு கொடு சென்றே.
27
   
2884.
இப்பகல் அடிகேளுக்கு இவ் இடை உணவு என்னா
ஒப்பு அறு நெறி கூறி ஓதன வகை எல்லாம்
அப் பொழுதினில் அட்டே அயம் எனும் இளையோனைத்
துப்பு உறு கறியாகத் துண்டம் அது உறுவித்தே.
28
   
2885.
உள் உறு குறியாகும் ஊன் முழுவதும் நாடி
வள் உறு சுடர் வாளால் வகை வகை பட ஈர்ந்தே
அள்ளுறு கறி ஆக அட்டபின் அவர் அவ்வூண்
கொள் உற நுகர்வித்தே கூவுவன் இளையோனை.
29
   
2886.
கூவிய பொழுதின் கண் கொறி எனும் உருவு ஆனோன்
ஆவி மெய் உளன் ஆகி அன்னவர் உதரத்தை
மா வலியொடு கீண்டே வருதலும் இருவோரும்
சாவுறு முனிவோர் தம் தசையினை மிசைவார் ஆல்.
30
   
2887.
வீடு உறு முனிவர் ஊன் மிசைந்து தொன்மை போல்
ஆடு என முனி என அனையர் மேவியே
நாள் தொறும் இச் செயல் நடாத்தி உற்றனர்
கேடு அறு முனிவர் தம் கிளைகள் மாளவே.
31