அகத்தியப் படலம்
 
2965.
பொன்னார் கழல்கள் அருச்சித்திடப் போது கொய்யும்
கைந் நாக மாலை நினைந்தே காரா ஒன்று கௌவ
என் நாயகனே எனத்தன் கை எடுத்து அழைப்ப
அன்னான் அங்கு எய்தி விடுவித்தது அறிகிலாயோ.
1
   
2966.
பூவார் கமலத்து அயன் நல்கிய பூவை தன்மேல்
தூவா மயலாய்க் கிளி ஆகித் தொடர்ந்து செல்லக்
காவாய் பரனே எனலோடும் கலங்கல் என்றே
தேவாதி தேவன் அருள் செய்தது தேர்கிலாயோ.
2
   
2967.
சத்தார் பிருகு தனது இல்லைத் தடிந்த எல்லை
இத் தாரணியில் அளவு இல் பிறப்பு எய்துக என்ன
அத்தா அருள் என்று அரி நோற்றுழி ஐயன் வந்து
பத்தாக என்று நிறுவுற்றது பார்த்திடாயோ.
3
   
2968.
தேவர்க்கு எனினும் நிலத்தின் கண் செறிந்து வாழ்வோர்
ஏவர்க்கு எனினும் ஒரு துன்பு உறின் எய்தி நீக்கல்
காவற்கு உரியார் கடனாம் அக் கடமை தூக்கின்
மேவற்கு அரிதாம் தனி முத்தியின் மேலது அன்றோ.
4
   
2969.
தெள்ளத் தெளிந்த மறைக் கள்வனைச் செற்ற
                              மீன்போல்
அள்ளல் கடலை ஒரு நீ அகன்கை அடக்கிக்
கள்ளத்து அவுணன் நிலை காட்டி நம் கண்ணில்
                                  வைத்த
கொள்ளைக் கருணை உலகு எங்கணும் கொண்டது
                                   எந்தாய்.
5
   
2970.
வித்தக் கிரி நாரதன் சூழ்ச்சியின் மேரு வெற்போடு
இந்தப் பொழுதத்து இகல் கொண்டு உலகு எங்கும் ஈறாம்
அந்தத் துயரும் கயிலைக்கு இணை ஆவல் என்றே
சிந்தித்தது கொல் எழுந்திட்டது சேணது எல்லாம்.
6
   
2971.
மண் உற்ற எல்லை அளவு இட்டிடுமால் கொல் என்றே
எண் உற்று எவரும் வெருக் கொண்டிட ஈண்டை விந்தம்
விண் உற்ற அண்டத் துணையாய் மிசைப் போவது ஐயா
கண் உற்ற நோக்கம் விடுத்தே இது காண் கிலாயோ.
7
   
2972.
மல்லல் கிரி விண் நெறி மாற்றலின் மற்று எமக்கும்
செல்லற்கு அரிது ஆயது பார் உடைத் தேயம் முற்றும்
எல்லைப் பொழுது மயக்கு உற்ற இவற்றை நீக்க
ஒல்லைக் குறியோய் வரல் வேண்டும் என்று உன்னல்
                                      உற்றார்.
8
   
2973.
உன்னலோடும் உலகம் நனந்தலைப்
பொன்னின் மேருப் புடையொர் பொதும்பரின்
மன்னி நோற்று உறை வண் தமிழ் மாமுனி
தன் உளத்தில் அத் தன்மை கண்டான் அரோ.
9
   
2974.
மேக்கு உயர்ந்திடும் விந்தத்தின் ஆற்றலை
நீக்கி வான நெறியினைத் தொன்மை போல்
ஆக்கி அண்டர் குறையும் அகற்றுவான்
ஊக்கினான் முன் உததியை உண்டு உளான்.
10
   
2975.
துள்ளி கண் இடைத் தூங்கு உறக் கை தொழ
உள்ளம் என்பொடு உருகவும் ரோமம் ஆர்
உள்ளி பொங்கப் புகழ்ந்து புரிசடை
வள்ளல் தன்னை மனத்து இடை உன்னினான்.
11
   
2976.
முன்னும் எல்லையில் மூரி வெள் ஏறு எனும்
மின்னு தண் சுடர் வெள்ளி வெற்பின் மிசைப்
பொன்னின் மால் வரை போந்து எனப் புங்கவன்
துன்னு பார் இடர் சூழ்தரத் தோன்றினான்.
12
   
2977.
ஆதி உற்றுழி அச்ச மொடு எழீஇ
மூது உரைத் தமிழ் முற்றுஉணர் மாமுனி
கோதை உற்றிடக் கொம்பொடு வாங்கிய
பாதவத்தில் பணிந்தனன் பன்முறை.
13
   
2978.
சென்னி பாரில் திளைத்திடத் தாழ்ந்து பின்
முன்னர் நின்று முறைப் படப் போற்றலும்
மின் உலாம் சடை விண்ணவன் வெஃகியது
என்னை மற்று அது இயம்புதியால் என்றான்.
14
   
2979.
விந்த மால் வரை மேருவை மாறு கொண்டு
அந்தரத்தை அடைத்த அதன் வலி
சிந்த என் கண் சிறிது அருள் செய்க எனாச்
சந்த நூல் தமிழ்த் தாபதன் கூறினான்.
15
   
2980.
அக் கணத்து உனக்கு ஆற்றல் வழங்கினாம்
மிக்க விந்தத்தை வேரொடும் வீட்டி அத்
தெக்கிணம் சென்று சீர் பொதியத்து இடைப்
புக்கு வைக எனப் புங்கவன் செப்பினான்.
16
   
2981.
என்றலும் தொழுது ஏத்தி நின் பூசனை
நன்று செய்ய நளி தடம் கூவலும்
நின்றிடாப் புனல் நீடவும் தென் திசைக்கு
ஒன்று ஒர் தீர்த்தம் உதவுக என்று ஓதினான்.
17
   
2982.
அனைய காலை அரும் கயிலாய மேல்
இனிது வைகிய ஏழ் நதி தன் உளும்
புனிதம் ஆகிய பூம் புனல் பொன்னியைப்
பனி மதிச் சடைப் பண்ணவன் முன்னினான்.
18
   
2983.
அந்த வேலை அஃது உணர்ந்தே வெரீஇச்
சிந்தை பின் உறச்சென்று திருமுனம்
வந்து காவிரி வந்தனை செய்தலும்
எந்தை நோக்கி இதனை இயம்புவான்.
19
   
2984.
தீது நீங்கிய தென் திசைக்கு ஏகிய
கோது இலாத குறு முனி தன்னொடும்
போதல் வேண்டும் பொருபுனல் காவிரி
மாது நீ என மற்று அவள் கூறுவாள்.
20
   
2985.
திண்மை ஐம்பொறி செற்றுளன் ஆயினும்
அண்ணலே இவன் ஆண் தகை ஆகும் ஆல்
பெண்யான் இவன் பின் செலல் நீதியோ
எண்ணின் ஈதும் இயற்கை அன்று என்னவே.
21
   
2986.
திரிபு இல் சிந்தையன் தீது நன்கில் படா
ஒருமை கொண்ட உளத்தன் நம் அன்பருள்
பெரியன் ஈங்கு இவன் பின் உறச் செல்க எனா
அருள் புரிந்தனன் ஆல மிடற்றினான்.
22
   
2987.
ஆங்கு அதற்கு இசைந்து அந் நதி இன்றி யான்
தீங்கு இலாத முனியொடு பின் செல்வன்
ஓங்கல் மேய ஒருவ இவன் தனை
நீங்கு காலத்தை நீ அருள்க என்னவே.
23
   
2988.
நன்று நன்று இது நங்கை நின் காரணத்து
என்று நோக்கி இவன் கரம் காட்டுவன்
அன்று நீங்கி அவனியின் பாலது ஆய்ச்
சென்று வைக எனச் செப்பினன் எந்தையே.
24
   
2989.
செப்பு மாற்றம் செவிக்கு அமுது ஆதலும்
அப்பெரும் புனல் ஆறு அவன் பின் செல
ஒப்பலோடும் உயிர்க்கு உயிர் ஆகியோன்
தப்பின் மாமுனிக்கு இன்னது சாற்றினான்.
25
   
2990.
நீடு காவிரி நீத்தத்தை நீ இனிக்
கோடி உன் பெரும் குண்டிகைப் பால் என
நாடி அத்திறம் செய்தலும் நன் முனி
மாடு சேர்ந்தனள் மா நதி என்பவே.
26
   
2991.
ஆய காலை அகத்தியன் தென் திசைத்
தேயம் ஏகு எனச் சீர் விடை நல்குறாப்
பாயும் மால் விடைப் பாகன் மறைந்தனன்
போயினான் செறி பூதர் இனத்தொடும்.
27
   
2992.
அத்தன் அங்கு ஒருவ அன்னான் அருள் அடைந்து
                              அங்கண் நீங்கி
மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பர் கோன் பயந்த
                                     லோபா
முத்திரை தனை முன் வேட்டு முதுக்குறைத் திண்மை
                                      சான்ற
சித்தனை அளித்த வள்ளல் தென்திசை நோக்கிச்
                                  சென்றான்.
28