அயிராணி சோகப் படலம்
 
3192.
அன்னம் பொருவு நடையாள் அவன் வரலும்
முன் அங்கு எதிரா முறையால் பலமுறையும்
பொன் அம் கழல் இணையைப் பூண்டு வணங்கி எழீஇ
என் இங்கு ஒர் எண்ணம் உடன் ஏகிற்று இறை என்றாள்.
1
   
3193.
அம்மொழியைக் கேளா அரசன் உரை செய்வான்
வெம்மை புரி சூரன் வியன் பணியாலே வருந்தி
எம்மை அடைந்தார் இனைய சில தேவர்
தம்முன் இடர் பலவும் சாற்றி இரங்கினரே.
2
   
3194.
அன்னார் மனம் கொண்ட ஆகுலமும் நம் துயரும்
பொன் ஆர் சடை முடி எம் புண்ணியற்குத் தாம்புகலின்
இந் நாள் அவுணர்க்கு இறுவாய் தனைப் புரிந்து
தொல் நாள் உரிமை அளிப்பன் எனும் துணிவால்.
3
   
3195.
ஆகின்ற துன்பத்து அழலால் பதை பதைத்து
வேகின்ற சிந்தை வியன் அமரர் தம் உடன் யான்
பாகொன்று தீம்சொல் உமை பாகன் பனிவரைக்குப்
போகின்றேன் ஈது புகலுதற்கு வந்தனனே.
4
   
3196.
என்னும் பொழுதில் இடர் உற்று இகல் வாளி
தன் அங்கம் மூழ்கத் தளர்ந்து வீழ் மஞ்ஞை என
அன்னம் பொருவு நடையாள் அயிராணி
மன்னன் திருமுன் மயங்கு உற்று வீழ்ந்தனளே.
5
   
3197.
வீழ்ந்தாள் தரிக்க அரிதாம் வெய்ய துயர்க் கடலில்
ஆழ்ந்தான் தனது அறிவும் அற்றான் பிரியாது
வாழ்ந்தாள் என் செய்வாள் மகவான் அது கண்டு
தாழ்ந்து ஆகுலத்தோடு எடுத்தான் தடக்கையால்.
6
   
3198.
ஆர்வமொடு கையால் அணைத்தே அவளைத் தன்
ஊரு மிசை ஏற்றி உணர்ச்சி வரும் பான்மை எலாம்
சேர ஒருங்கு ஆற்றச் சிறிதே தெளிவுற்றாள்
காரின் மலிகின்ற மின் போலும் காட்சியினாள்.
7
   
3199.
சிந்தை மயக்கம் சிறிது அகன்று தேற்றம் வர
முந்தை இடர் வந்து முற்றும் தனைச் சூழ்ந்த
வந்த மடமான் அது போழ்தில் தன் உள்ளம்
நொந்து நடுங்கி இனைய நுவல்கின்றாள்.
8
   
3200.
பொன் நாடு விட்டுப் புவியின் வனத்து இருந்து
முன்னார் அருள் கொண்டு உவப்பு உற்று மேவினன் ஆல்
என் ஆர் உயிரே எனை நீ பிரிவாயேல்
பின்னார் துணை யான் பிழைக்கும் நெறி உண்டோ.
9
   
3201.
வாகத்து நேமிக்கும் வான்பாடு புள்ளினுக்கும்
மேகத் திறமும் வியன் மதியும் ஆவது போல்
நாகத்து உறைவோர்க்கு நாயகமே நீ அலது என்
சோகத்தை நீக்கித் துணை ஆவார் வேறு உண்டோ.
10
   
3202.
அன்றி உனைப் பிரிந்தும் ஆவிதனைத் தாங்க வல்லேன்
என்றிடினும் யான் ஒருத்தி யாரும் துணை இல்லை
ஒன்று நெறி நீதி உணராத தீ அவுணர்
சென்றிடுவர் நாளும் அவர் கண்டால் தீங்கு அன்றோ.
11
   
3203.
நீடு புகழ்சேர் நிருதர் கோன் சூழ்ச்சியினால்
தேட அரிய பொன் உலகச் செல்வத்தை விட்டு இந்தக்
காடு தனில் வந்து கரந்து தவம் புரிந்து
பாடு படும் ஆறும் பழிக்கு அஞ்சியே அன்றோ.
12
   
3204.
தீய அவுணர் திரிவர் அவர் சிறியர்
மாயை பல பலவும் வல்லார் பவம் அல்லால்
ஆய தருமம் அறியார் பழிக்கு அஞ்சார்
நீயும் அஃது உணராய் அன்றே நெடுந்தகையே.
13
   
3205.
உன் அன்புடைய ஒரு மகனும் இங்கு இல்லை
துன்னும் சுரரும் இல்லை தொல் களிற்றின் வேந்தும்
                                   இல்லை
பின் இங்கு ஒரு மாதரும் இல்லை பெண் ஒருத்தி
தன்னம் தனி இருக்க அஞ்சேனோ தக்கோனே.
14
   
3206.
பல்லாறு ஒழுகிப் பவம் செய் அவுணர் எனும்
ஒல்லார் எனைக் காணின் ஓடி வந்து பற்றினர் போய்
அல்லாதன புரிவர் ஆனால் அனைய பழி
எல்லாம் உன்பால் அன்றி யார் கண்ணே சென்றிடுமே.
15
   
3207.
மன்னே இது ஓர் துணிவு உரைப்பன் மன் உயிர் கொண்டு
இன்னே தமியேன் இரேன் உலகில் யாவரையும்
முன்னே படைத்து அளிக்கும் முக்கணர் தம்
                               வெற்பினுக்கு உன்
பின்னே வருவேன் பெயர்வாய் என உரையா.
16
   
3208.
பின் தாழ் குழலி பெரும் துயரத் தோடு எழுந்து
நின்றாள் இறை உன்னி நேயத் தொடு நோக்கி
நன்றால் உனது திறன் என்று நாகர் இறை
சென்று ஆர்வம் ஓடு அவளைப் புல்லி இது
                           செப்புகின்றான்.
17
   
3209.
வாராய் சசியே வருந்தேல் அமரர் உடன்
காரார் களத்தோன் கயிலைக்கு யான் போனால்
ஆராய்ந்து நின்னை அளிப்பவர் அற்றால் அன்றோ
பேர் ஆர்வமோடு எனது பின் நீ வருவதுவே.
18
   
3210.
செய்ய சடைமேல் சிறந்த மதிக் கோடு புனை
துய்யவனும் வேலைத் துயின்றோனும் சேர்ந்து அளித்த
ஐயன் எமக்கு ஓர் அரண் ஆகியே இருக்க
நையல் முறை ஆமோ நங்காய் நவிலுதியால்.
19
   
3211.
ஏவென்ற கண் மடவாய் ஈசன் அருள் அன்னோனை
வா என்று அளியால் வழுத்தி மனத்து உன்னின் இங்கே
மேவும் கயிலையில் யான் மீண்டு வரும் துணையும்
கா என்று உனை அவன்பால் கை அடையா
                                நல்குவன் ஆல்.
20
   
3212.
ஆற்றல் பெரிது உடைய ஐயனே நின் தன்னைப்
போற்றி அருள் செய்யும் பொருந்துதி ஆல் ஈண்டு என்று
தேற்றுதலும் அன்னான் சிறப்பு எவன் கொல்
                                செப்புக எனக்
கோல் தொடி கேள் என்னா அமரேசன் கூறுகின்றான்.
21