இந்திரன் கயிலை செல் படலம்
 
3281.
அத்துணை தன்னில் அரும் துணை இல்லான்
மெய்த்துணை ஆகிய மின்னினை நோக்கி
எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே
சித்தம் வருந்தல் எனத் தெளிவித்தான்.
1
   
3282.
மாதினை அவ்விடை மன்னுற வைத்தே
பேதுறு வானவர் பேர் அவை நண்ணிப்
போதும் எனக் கொடு போந்து விரைந்தே
நாதன் அகன் கிரி நண்ணினன் அன்றே.
2
   
3283.
அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு
இந்திரன் அக் கயிலைக் கிரி எய்தி
நந்தி பிரான் உறை நன்கடைசேரா
வந்தனை செய்து வழுத்தினன் நின்றான்.
3
   
3284.
நிற்றலும் வந்தது என் நீ புகல் என்னச்
சொற்றனன் அங்கு அது தொன்மையின் நாடி
இற்றில கொல் உன் இருந்துயர் என்னா
நற்றவர் காண் உறு நந்தி உரைப்பான்.
4
   
3285.
நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான
மூல வியோக முதல்பொருள் காட்டி
ஏல இருந்தனன் யாவரும் ஏகக்
காலம் இது அன்று எனவே கழ றுற்றான்.
5
   
3286.
தேறு தவம் செய் சிலாதனன் மைந்தன்
கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து
மாறி இழிந்திடு வல்விட மற்றும்
ஏறியது என்ன இடர்க்கடல் உற்றான்.
6
   
3287.
இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப
உம்பர்கள் தாமும் உடல் தளர் உற்றார்
தம்பம் அது ஆன தடம் புணை தாழ
அம்புதி தன்னில் அழுந்திடுவார் போல்.
7
   
3288.
செல்லல் உழந்து தியங்கிய தேவர்
எல்லவர் தம் ஒடும் இந்திரன் என்போன்
அல்லருள் செய்திடும் நந்தி பிரான் தன்
மெல் அடி போற்றி விளம்புதல் செய்வான்.
8
   
3289.
தூய் நெறி நீங்கிய சூர பன்மாவுக்கு
ஆய்வொடு ஆற்றல் அளப்பு இல் செல்வம்
ஏயவை யாவும் இரும் தவநீரால்
நாயகன் முந்து உற நல்கினன் அன்றே.
9
   
3290.
நாங்கள் புரிந்திடும் நல்வினை நீங்கித்
தீங்கு குறித்து எழு தீவினை சேர
ஆங்கு அவன் ஏவலின் அல்லல் உழந்தேம்
ஈங்கு இதுவும் இறைவன் செயல் ஐயா.
10
   
3291.
சூனர் இயற்கை சுரர்க்கு அருள் செய்யும்
மா நிருதர்க்கு இறைவன் புரி துன்பம்
ஆனது உணர்த்தி அடைந்தனம் என்னில்
தான் அது போழ்து தவிர்த்திடல் வேண்டும்.
11
   
3292.
நீர்த்திரை போல நெறிப்பட யாம் கொள்
ஆர்த்தி அகற்றி அறம் தவிர் சூரன்
மூர்த்தி கொள் ஆவியும் மொய்ம்பொடு சீரும்
தீர்த்திடுகின்ற திறம் செயல் வேண்டும்.
12
   
3293.
அன்னது செய்திடின் அன்பு அறு சூரன்
முன்னர் அரும் தவம் முற்றிய காலைச்
சொன்ன வரம் தொலையும் தொலைவான் ஆல்
பின்னர் அவன் சொல் பிழைத்தனன் என்பார்.
13
   
3294.
அல்லது எம் அல்லல் அகற்றிலன் என்னில்
நல் அருளுக்கு ஒரு நாயகன் என்றே
எல்லவரும் புகழ் ஏற்றமும் இன்றாம்
தொல்லை மறைப் படியும் தொலைவாம் ஆல்.
14
   
3295.
ஆகையின் இவ்வகை ஆய்ந்து எமை ஆளும்
பாக நினைந்து பரம் பொருள் ஆனோன்
மோகம் இலார் பெற மோனக ஞான
யோக இயல் காட்டி உறைந்து உளனே கொல்.
15
   
3296.
ஈங்கு இவன் அல்லதை இத்திறம் ஆகும்
தீங்கினை நீக்க ஒர் தேவரும் இல்லை
ஓங்கிய மால் அவரோடு அமர் செய்தே
ஆங்கு அவன் நேமியும் அற்றனன் ஐயா.
16
   
3297.
மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை
யாவதும் ஈது என அண்டரும் யானும்
பூ உலகத்து இடை போந்திடின் இன்னே
தீவினையார் சிறை செய்வது திண்ணம்.
17
   
3298.
ஆதலின் ஆய் இடை அண்டரும் யானும்
போதல் இலைப் புனிதன் கழல் காணத்
தீது அறு வேலை தனைத் தெரி உற்று உன்
வாய்தலின் ஓர் புடை வைகுவன் என்றான்.
18
   
3299.
பேர் பெறு நந்தி பிரானது கேளா
ஆர் உறும் இன்னல் அகன்று இவண் நீவிர்
சேர் உறும் என்று அருள் செய்திட ஆங்கே
ஓர் புடை வாசவன் அண்டரொடு உற்றான்.
19
   
3300.
வானவர் கோன் அரன் மால் வரை தன்னில்
போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம்
மான புலோ மசை செய்கையும் அல்லா
ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம்.
20