இந்திராணி மறுதலைப் படலம்
 
3333.
தக்க வேழகத் தலையாள் கூறிய
அக் கொடும் சொலை அணங்கு கேட்டலும்
தொக்க தன் செவித் துளையில் அங்கிவேல்
புக்கதே எனப் பொருமி விம்மினாள்.
1
   
3334.
கைம் மலர்க் கொடே கடிதில் தன் செவி
செம்மி வல்வினைத் தீர்வு நாடியே
விம்மி அங்கு உறும் வெய்யள் கேட்டிட
இம் எனச் சில இசைத்தல் மேயினாள்.
2
   
3335.
ஏடி நீ இவண் இசைத்த தீ மொழி
நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி
ஊடு சேர்வர் ஆல் உரைத்த நிற்கு மேல்
கூடு தீமையார் குறிக்கற் பாலரே.
3
   
3336.
வேதம் யாவையும் விதித்த நான்முகன்
காதலன் தரும் கடவுள் மங்கை நீ
நீதி இல்லதோர் நெறியின் வாய்மையைப்
பேதையார் எனப் பேசல் ஆகுமோ.
4
   
3337.
தீங்கி யாவர்க்கும் செய்திடாதவர்
தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர்
ஆங்கு எவர்க்கு முன் அல்லல் செய்வரால்
ஈங்கு நீ இவை எண்ணலாய் கொலோ.
5
   
3338.
தருமம் பார்த்திலை தக்க மாதவக்
கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை
பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை
உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை.
6
   
3339.
பழியும் பார்த்திலை படி இகழ்ந்திடு
மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை
வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை
இழியும் தீய சொல் இளம்பல் பாலையோ.
7
   
3340.
ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள் பின்
ஊன்று சீர்த்திகள் ஒருவு உற்றோர்க்கு இது
தோன்று நீ இவை துணியல் வாழி கேள்
சான்று நின் குலத் தகுவர் யாவரும்.
8
   
3341.
இத்திரற்கு அலால் ஏவர் பாலினும்
சிந்தை வைத்திடேன் தீது இல் கற்பினேன்
வந்து எனக்கு இது வகுத்தி நின் கிளை
உய்ந்திடத்தகும் உரையது அன்றியே.
9
   
3342.
நூன்மை யாவையும் நுனித்து நாடிச் செம்
கோன்மை அன்றியே கொடுமை செய்து உள
மேன்மை மன்னரும் வேறு உளார்களும்
பான்மையால் பிலம் படுவர் திண்ணமே.
10
   
3343.
மீள் இல் வெம் துயர் வேலை சார்ந்து உளான்
நாளும் நாதன் என்று அறைதி யார்கணும்
கோளும் நல்லவும் குறுகும் அல்லலும்
நாளை உங்கள் பால் நணுகு உறாதவோ.
11
   
3344.
நீதி ஆகிய நெறி இலாதவள்
ஆதலான் மிக அறிவு மாழ்கியே
தீது கூறினாய் செவ்விது அன்று அரோ
மாது நீ இது மறத்தி உய்யவே.
12
   
3345.
ஏவர் என்று எனை எய்தல் பாலினோர்
தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தை என்
ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணும்
காவல் உண்டு நீ கடிதில் போக என்றாள்.
13
   
3346.
என்ற காலையில் எயிறு தீ உகக்
கன்று சேயிதழ் கறித்து வெய்து உயிர்த்து
ஒன்றொடு ஒன்று கை உருமில் தாக்கியே
நன்று நன்று எனா நகைத்துச் சீறினாள்.
14
   
3347.
மறுவில் வாசவன் மனைவி கூறிய
உறுதி வெய்யவன் கூற்றம் செய்தில
அறிவு இல் பேதை ஆய் அலகை தேறலால்
வெறி கொள் பித்தனுக்கு உரைத்த மெய்மை போல்.
15
   
3348.
ஆன காலையில் அச முகத்தினாள்
ஊன வெம் துயர் உழக்கும் பெற்றியால்
வானவர்க்கு இறை மாதை நோக்கியே
தான் உரைத்தனள் இனைய தன்மையே.
16
   
3349.
கிட்டி நல்லன கிளத்தினேன் எனை
ஒட்டி வந்திலை உரைத்தி மாறு உனை
அட்டு நுங்குவன் அண்ணற்கு ஆகவே
விட்டனன் இது மெய்மை ஆகும் ஆல்.
17
   
3350.
ஆர்த்தி யாவுநீ அகல என்னுடைச்
சீர்த்தி அண்ணன் பால் சேறல் சிந்தியாய்
பேர்த்திடாது உனைப் பிடித்து வன்மையால்
ஈர்த்துப் போகின்றேன் சரதம் மீது அரோ.
18
   
3351.
முடிவு இல் ஆற்றலார் மூவர் யாவரும்
தடை செய்கிற்பினும் சமரின் ஏற்பினும்
விடுவன் அல்லன் யான் விரைவினில் கொடே
படர்வன் அன்னது பார்த்தி மேல் எனா.
19
   
3352.
வெய்யள் அவ் வயிராணி மென்கரம்
கையில் பற்றியே கடிதின் ஈர்த்து உராய்
மொய்யில் போயினாள் முரண் இலாதவள்
ஐயகோ எனாஅரற்றல் மேயினாள்.
20
   
3353.
பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி
ஆவி போந்து என அவசம் ஆகியே
ஓவிலாத தொல் உணர்வு மாய்ந்தனள்
காவி ஒண் கணீர் கலுழத் தேம்பினாள்.
21
   
3354.
ஐயர் கையில் வந்து அவுண ரைச் செறுந்து
உய்ய தீம் படை தோகை கண் உறா
வெய்ய சூர் கிளை வீட்ட வந்தது என
மை உலாய கண் வாரி மிக்கதே.
22
   
3355.
காசிபன் தரும் கலதி கூற்றுவன்
பாசம் அன்ன கைப் பட்டு விம்மினாள்
வாசவன் தனி மனைவி வெம் கொலைப்
பூசை வாய்ப்படும் புள்ளின் பேடை போல்.
23
   
3356.
நார் இலாதவள் நலிந்து கொண்டனள்
பேரும் எல்லையில் பேது உற்றே உளம்
சோருகின்றவள் சுற்று நோக்கியே
யாரும் காண்கிலள் அரற்றல் மேயினாள்.
24