சூரன் அரசிருக்கைப் படலம்
 
3426.
இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால்
முன்னம் ஏகிய அசமுகி வெய்ய துன் முகத்தாள்
தன்னொடு ஏகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள்
அன்னகாலையில் சூரன் வீற்று இருந்தவாறு அறைவாம்.
1
   
3427.
மீ உயர் கின்ற விண்ணினின்று இழிந்த விழுமிய
                         மேதினி வரைப்பின்
ஆயிரம் கோடி கொண்ட அண்டத்தில் ஆடகப்
                          பித்திகை அவற்றுள்
தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசை முகத்தவர்கள்
                                செய்து என்ன
ஓய்வு அற விளங்கும் தபனியப் பொது ஒன்று ஒரு
                    ஆயிரம் யோசனை உறுமே.
2
   
3428.
இத்தரை உளது ஆம் தொல்லை அண்டத்தில்
      இடை இடை எய்தியே இலங்கும்
அத்தமால் வரைகள் கைபுனைந்து இயற்றி
      அம்பு யாசனர் பலர் கூடி
வைத்து எனச் சூரன் அரசியல் நடாத்தும்
      மன்றினில் ஆயிரம் கோடி
பத்தியின் நிறுவும் ஆடகத் தூண் அம் பரந்தது
      அப் பெருமை யார் பகர்வார்.
3
   
3429.
தொல்லை அண்டத்தின் கண்டு ஒறுங்கு கெழீஇய
     சுவண மாதரை எலாம் தொகை செய்து
அல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த
     போல் அணிபெறு நிலத்தில்
ஒல் உறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பு
     இலாக் குலகிரிக் குழுவில்
பல்லிருந் துணி செய்து அணி படுத்து என்னப்
     பல் நிற ஓவியம் பயிலும்.
4
   
3430.
பொன் உலா அண்டத்து உம்பர்கள் தோறும்
      பொருந்திய செக்கர் வான் புராரி
தன்னது ஆணையினால் ஒருங்கு சூழ்ந்து என்னத்
      தண் மலர் விதானம் மீத் தயங்கப்
பன்னிரு கோடி ஆகி எங்கணும் சூழ் பகலவர்
      சிலவரே அன்றி
அன்னவர் பலரும் பணியில் உற்று என்ன
      அணிமணிக் கண்ணடி ஒளிரும்.
5
   
3431.
மண் உலா அண்டத்து இரவிகள் என்று ஊழ்
      வரம்பு இலா மதிகளின் உள ஆம்
தெண்ணிலாக் கற்றை ஐம்பெரு நிறத்த செல்
      இனம் யாவையும் செறிந்தே
அண்ணலார் மேலைக் கம்பலம் சூழ்போய்
      அமர்ந்து என ஆய் இடைக் கவரி
எண் இலாதனவும் பல் உகில் குழுவும் இடை
      விராய் மிடைவன எங்கும்.
6
   
3432.
பரக்குறும் அண்டம் தொறும் தொறும் உளவாம்
               பகலினைப் பரிமுகத்து எரியின்
உருக்கி ஒன்று ஆக்கித் தவிசு என இயற்றி ஒளிறு
                     தாரகை அவட் குயிற்றித்
தருக்கு உறுகின்ற மதிகளை மடங்கல் தகவு செய்து
                          இருத்தியது என்னத்
திருக்கிளர் அவையத்து அவுணர் கோன் இருப்பச்
               சிறந்தது ஓர் அரியணை திகழும்.
7
   
3433.
ஆனது ஓர் மன்றத்து அரியணை மிசையே ஆயிரம்
                           கோடி அண்டத்தின்
மேல் நிமிர் வடவை அங்கியும் விடமும் மிசைந்து
                          அழியா நெறி மேவித்
தானவர் பரவக் கூற்று எலாம் ஒன்றாய்த் தணப்பில்
                          பேர் அணிகலந் தயங்க
வான் நிமிர்ந்து உற்றால் என்ன வெம் சூர மன்னவர்
                        மன்னன் வீற்று இருந்தான்.
8
   
3434.
மேலை நாள் அமலன் உதவு பல் அண்டம் மேவர
                      நடாத்து தொல் ஆணைக்
கோல் ஒடு வெளிய சீர்த்திகள் முழுதும் குறுகியே ஈர்
                              உருக் கொண்டு
பால் உற வந்து நின்றதே என்னப் பாங்கரில்
                         அவுணர்கள் தாங்கும்
வாலிய துணை சேர் தவள வெண் கவிகை மா மதிக்
                             கடவுளை மலைய.
9
   
3435.
கார் உறழ் படிவத்து வரிகள் அனைத்தும் கண்
                     அகன் பால்கடல் முழுதும்
ஈர் உரு எய்தி எழுந்து மேல் ஓங்கி இருந்து என
                         வைகலும் செலும் அத்
தாரக விறலோன் பல் தலை சீயத் தலைமையான்
                         சார்ந்து அயல் இருப்ப
ஆர் அழல் உருவப் பண்ணவரே போல் அமைச்சரும்
                               குமரரும் அமர.
10
   
3436.
எவ்வெலா அண்டத்து உறை தரு மருத்தும்
             இரும்புனற்கு இறைவரும் ஆகிச்
செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம்
                            படுபனி சிதறி
அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவன்
                அடி பணிந்து எழும் திறம் போல்
மைவரை அனைய அவுணர்கள் இரட்டும் வாலிய
                              கவரிகள் வயங்க.
11
   
3437.
உரைத்திடும் அண்டம் தொறும் தொறும் உள்ள
                 உம்பரில் இயக்கர் கோன் உலகில்
தரைப் பெரு வரைப்பில் பிறவியில் உள்ளது அதனில்
                    தவறு இலா அற்புதத் தனவாத்
தெரித்தனர் எடுத்துப் போதிந்து என நறிய திரையன்
                  மெல் இலைத் துவர்ப் பழுக்காய்
விரைத்திடு சுண்ணம் கொள்கலம் பரியா வினை
                         முறையோர் பலர் விரவ.
12
   
3438.
நின்ற தேரோனை அருக்கருட் சிலரை நீரம் உய்த்து
                           உள்ள கோடிக மேல்
பொன் தரை உழியின் மணி சொரிந்து என்னப் புகட்டு
                           உறு தம்பலக் களாசி
மன்ற தொல் அறிவர் திருத்தினர் பொருவ மற்றவை
                           அவுணர்கள் ஏந்தித்
துன்றி இருந் துவர்க்காய் அடை பிற பரிக்கும்
                தொழுவர் தம் குழுவொடு துவன்ற.
13
   
3439.
ஆழி அம் கிரியில் கதிர் மணி வெயிலும் அன்னது
                         சூழ்ந்த பேர் இருளும்
வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதியும் பல
                                   மணியும்
ஊழியின் இறுதி அமைய மேல் எல்லாம் ஒன்றியது
                         என்ன முன் இருபால்
கேழ் உறு பின்னர் அவுணர் மாத் தலைவர்
                  கிளையொடு துன்றினர் கெழும்.
14
   
3440.
மின் அவிர் விசும்பின் அகட்டினை அளவி
              வெண்மதிக் கடவுள் மெய் அணுகிப்
பின் உறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப்
                              புணரியில் படியா
இந்நில மருங்கில் வானகத்து உள்ள எழில் மலர்க்
                        காவு தோறும் உலாவித்
தன் ஒலி இன்றி மென் மெல அசைந்து தண் என
                            வசந்தன் முன் சார.
15
   
3441.
விண் படு நிறை நீர்ப் புதுமதிக் கடவுள் வியன் பனித்
                           துவலையைத் துற்றுக்
கண் படு துறக்கத் தண்டலைப் பொதும்பில் காமரம்
                          போதிடைக் கவிழ்த்தி
எண் படு பன்னாள் கழித்த பின் கவர்ந்தே எழிலிகள்
                        கரந்து நின்று ஈண்டைத்
தண் பனி உறைப்பில் கண் உறாத் துவலை தணப்பு
                         அறச் சிதறிடத் தம்மில்.
16
   
3442.
தேன் அமர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை
                              மேனகை முதலாம்
வானவர் மகளிர் இயக்கர் தம் மகளிர் வலிகெழும்
                           அரக்கர் தம் மகளிர்
தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்
                                  தம் மகளிர்
ஏனையர் மகளிர் யாவரும் வெவ்வேறு இயல்படு
                              களிநடம் இயற்ற.
17
   
3443.
ஐந்திறத்து உருவம் காலையில் உரைப்பான் அமையம்
                          இன்று ஆகியே வேதா
வந்து ஒரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்று அவன்
                               உதவுறும் குமரர்
நந்து உறு பெரு நீர்க் குடங்கரில் கன்னல் நாடினர்
                             நாழிகைப் பறையை
முந்து உற விரட்டிப் பதம் தொறும் சென்று முறை
                        முறை உரைத்தனர் திரிய.
18
   
3444.
தேர்த்திடும் உழுவைச் சூழலில் சில மான் சென்றென
                           அவுணர்தம் செறிவில்
வேர்த்து உடல் பதைப்ப வரும் பல முனிவர் வேறு
                         வேறு ஆசிகள் இசையா
ஆர்த்திடும் ஒலியால் கேட்டிலவாம் என்று அஞ்சினர்
                          அவர் உறு புலத்தைப்
பார்த்திடும் தோறும் வாழ்க எனப் புரவிப் பாணியை
                              விரித்தனர் நிற்ப.
19
   
3445.
திருக்கிளர் பொன்நாட்டு இந்திரன் அல்லாத்
                  தேவர்கள் யாவரும் அவுணர்
நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடும் கடை
                           காறுமுன்று உள்ள
வெருக்கொடு சென்று மீண்டும் அற்றாகி வியன் கடை
                           காவலர் புடைப்பத்
தருக்குறும் அவையம் காணிய பெறாது தம் உளம்
                           குலைந்தனர் திரிய.
20
   
3446.
வெற்ற வெம் கதத்தர் அவுணர் கஞ்சுகிசேர் மெய்யினர்
                          வெறுக்கை அம் சூரல்
பற்றிடு கரத்தார் செல் எனும் தெழிப்பர் பனிப்பிறை
                        எயிற்றர் பல் இமையோர்
பொற்றட மகுடம் சிதறிடப் புடைப்போர் புயல் உறு
                            சூறையில் துரந்தும்
சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல் பெயர்
                            செப்பி முன் துதிப்ப.
21
   
3447.
பொன் திகழ் கமலத்து இதழ் எலாம் விரிந்த போதினில்
                        பொகுட்டு இடை தோறும்
மின் திகழ் நுசுப்பில் திருமகள் பலராய் வீற்று வீற்று
                            இருத்தலே போலக்
குன்று உறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டு
                       தன் உறை உளில் சென்று
துன்றிய பலவாம் தீபிகைத் தட்டம் சொல் முறை
                                ஆசியில் சுற்ற.
22
   
3448.
தென்னுறு பாலை குறிஞ்சியே மருதம் செவ்வழி
                         என்னும் நானிலத்தில்
பின் அகம் புறமே அருகியல் மற்றைப் பெருகு இயல்
                         உறழ வெண் இரண்டாய்
மன்னிய நாதத்து இசைகளில் பிறவில் வரம்பு இல வாய்
                               பாட்டு அதனுள்
கின்னரர் சித்தர் இயக்கர் கந்தருவர் கிளத்தும் அம்
                              கலத்தன இசைப்ப.
23
   
3449.
மாக நல்வேள்வி ஆற்றிய திறனும் மதி முடிப் பரன்
                            அருள் அடைந்தே
ஏகிய திறனும் தனதனை முதலா யாரையும் நிலை
                                அழித்தனவும்
சேகுறும் அண்டம் யாவையும் கண்டு திருவுடன் அரசு
                                  இயற்றியதும்
பூகத நிலைத்து அவுணர்கள் பல்லோர் புடை தனில்
                             முறை முறை புகழ.
24
   
3450.
கார்த்திடும் அவுணர் திசை உளார் ஏனோர் கை
             தொழூஉத் தனது நோன் கழல் கால்
தூர்த்திடும் மலரும் தொல் பெரும் கவியும் தூ நெறி
                         முனிவரர் தொகையும்
சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை
                             ஆசிகள் சாற்றிச்
சேர்த்தனர் சிந்தும் துணரும் அக்கதமும் சீர்த்த கால்
                               வீசினன் திரிய.
25
   
3451.
ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்து
                        தன்புகழுநர் தமக்கும்
பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவு செய்
                        தலைவர்கள் தமக்கும்
மீடு உறு மகுடம் கடகநூல் முதலாம் பேர் அணி
                        மணித் துகில் பிறவும்
மாடு உறு நிதியும் ஏனவும் நின்று மலர்க் கை நீட்டின
                               தொறும் வழங்க.
26
   
3452.
தேவரும் ஏனை முனிவரும் பிறரும் செய்து உறாத்
                         தங்கள் பால் அன்றி
ஏவர்பால் ஆனும் இறைவன் ஆம் ஒருதான் ஏதம்
                  நோக்கு உற்றனன் வெகுளின்
ஆவியது இழப்பார் போல் வெரீஇப் புகழ்ந்தும் அவன்
                     உவப்பு உற்றிடின் உய்ந்தும்
ஓவற நிற்பர் அசனி வீழ் தோறும் உரைக்கும்
                        மந்திரத்தினோர் என்ன.
27