சூரன் தண்டம் செய்படலம்
 
3501.
என்று பல பல உரைத்தனள் ஆவலித்து இரங்கிப்
பின் தொடர்ந்திடு துன் முகி தன்னொடும் பெயரா
மன்றின் மேவரு சூரபன்மா எனும் வலியோன்
பொன் தடம் கழல் முன்னரே வீழ்ந்து போய்ப் புரண்டாள்.
1
   
3502.
புரண்டு மற்று அவள் சகடையில் பெயர்ந்திடும் போழ்தின்
மருண்டு பேரவை அகத்தினோர் அஞ்சினர் மறுக
அரண்டு அரும் கழல் சூரபன்மா எனும் அவுணன்
இரண்டு நோக்கினும் தீ எழ விழித்து இவை இசைப்பான்.
2
   
3503.
என்னையோ இவள் புலம்புதி அசமுகத்து இளையோய்
உன்னை ஓர்கிலாது என்னையும் நினைகிலாது உன்கை
தன்னையும் இவள் கரத்தையும் வாளினால் தடிந்து
முன்னையோர் என இருந்துளார் யார் என மொழிந்தான்.
3
   
3504.
புரந்தரன் புணர் புலோ மசை புவியில் ஓர் புறத்தில்
இருந்து நோற்றலும் உன் தனக்கு என்று சென்று                                  எடுத்தோம்
விரைந்து வந்து ஒரு விண்ணவன் எங்களை வெகுண்டு
கரம் துணித்து மற்று அவளை மீட்டு ஏகினன் கண்டாய்.
4
   
3505.
என்னும் முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய்
துன்னும் தீம் புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம்
வன்னி கால் உறு கால் என உயிர்த்தது மதி போல்
மின்னல் வாள் எயிற்று இதழினை மறைத்தது விரைவில்.
5
   
3506.
வெடிக்கல் உற்றது எவ் அண்டம் என்று ஐயுற விரைவில்
இடிக்கல் உற்றது தீயவாய் நகை வந்தது இதழும்
துடிக்கல் உற்றது புருவம் மேல் நிமிர்ந்தது துள்ளிக்
கடிக்கல் உற்றன எயிற்று அணி கறகற கலிப்ப.
6
   
3507.
புயல் புறம் தொறு நித்தில முதிர்ந்தவா போல
வியர்ப்பு மிக்கன முறை முறை அன்னது விளிய
மயிர்ப் புறம் தொறும் புலிங்கம் வந்து அடைந்தன வல்லே
செயிர்ப்பு எனும் கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும்.
7
   
3508.
நீடு வெம் சினம் இத்திறம் அவன் இடை நிகழ
ஓடு கின்றனர் திசை உளார் உலைந்தனர் முனிவர்
ஆடுகின்றது ஓர் தெய்வதக் கணிகையர் அவன் சீர்
பாடு கின்றவர் யாவரும் பதை பதைத் திரிந்தார்.
8
   
3509.
தாங்கல் உற்றிடு திசைக் கரி ஓடிய தரிக்கும்
ஓங்கல் மேருவும் குலைந்தன பணிஎலாம் உலைந்த
ஏங்குகின்றனர் வானவர் நடுங்கினர் இரவி
தீங்கு நாடியே போயினன் மீண்டனன் திரிந்தான்.
9
   
3510.
பார் நடுங்கின விண் எலாம் நடுங்கின பரவை
நீர் நடுங்கின அயன் பதம் நடுங்கின நெடியோன்
ஊர் நடுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து
ஆர் நடுங்கிலர் அவன் சினம் சிறியதோ அன்றே.
10
   
3511.
அண்ணல் அம்புகழ்ச் சூரபன்மா என அறையும்
கண்ணில் புன்மனத்து அவுணர்கோன் இத்திறம் கனன்று
துண் எனச் சினத்து அமரர்கள் யாரையும் தொலைப்பான்
எண்ணி உற்றிடும் இளையரைப் பார்த்து இவை                                   இசைப்பான்.
11
   
3512.
மீன் எடுத்து நம் ஏவலில் திரிந்த விண்ணவர் கோன்
கான் இடத்து இருந்து ஒருவனைக் கொண்டு இவர்                                     கரங்கள்
ஊன் எடுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த
மானுடத் தரும் அடுவரே இங்கு இனி மாதோ.
12
   
3513.
பரமனே அலன் பங்கயத் தவிசினோன் அல்லன்
திருவுலா வரு மார்புடைத் தேவனும் அல்லன்
இரியும் வாசவன் தான் அலன் அவன் பணி இயற்றும்
ஒருவனாம் இவர் கை தடிந்து ஆவி கொண்டு உறைவான்.
13
   
3514.
விண் மயங்கு உறு செருவிடைத் தானையால் வீக்கி
எண்மை கொண்டு உறும் அமரரைக் கொணர்தலும் எனது
கண்முன் நின்றிடும் அவுணர்தம் அழிபசி ஒழிய
உண்மின் நீர் எனக் கொடுத்திலேன் அற நினைந்து                                   உற்றேன்.
14
   
3515.
மறை வைத்தே அமர்கின்றதோர் வாசவன் தனையும்
நறை வைத்தே அமர் பூம் குழல் சசியையும் நான் முன்
சிறை வைத்தேன் இலன் சிறியர் என்று உன்னினன் தீயின்
குறை வைத்தோர்கள் போல் ஆயினேன் இத்திறம்                                      குறியேன்.
15
   
3516.
கைப் படுத்திய உயிர்ப்பலி கடிதின் உண்ணாது
தப்ப விட்டது ஓர் மால் கரி ஒத்தனன் தமியேன்
இப்புவிக்கணே இவர் கரம் குறைத்திட்டது எனது
மெய்ப்படுத்திய ஊனமே அலது வேறு உண்டோ.
16
   
3517.
பூதரம் தனைச் சிறை தடிந்திடு புரந்தரனை
மாதரார் புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள்
தூதர் இன்னமும் கண்டிலர் கொல் அவர் துணிவால்
ஏதம் இன்றி இப் புடவியில் குறும்பு செய்து இருத்தல்.
17
   
3518.
நீர் இருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகர் இல்
தேர் இருந்தது நேமியும் இருந்தது சிறிது என்
பேர் இருந்தது யானும் இங்கு இருந்தனன் பின்னை
யார் இருந்தும் என் இருந்தும் ஆகின்றது என் அந்தோ.
18
   
3519.
வான் அளாவு வெண் பஞ்சியின் மால் வரை வறிதே
தீ நிலாயது ஓர் அளவையின் முடிந்திடும் செயல் போல்
தூ நிலா எயிற்றினையர் கைச் சோரியின் துளியால்
போனதே பல அண்டமும் கொண்ட நம்புகழே.
19
   
3520.
இழிவும் இங்கு இவர்க்கு உறுவதே இமையவர் தங்கள்
வழியின் நின்றது ஓர் அரந்தையும் இவ்விடை வருமே
பழியும் என்னிடத்து எய்துமே என்றும் இப்பழி தான்
ஒழிவது இல்லையே பொறுப்பதே அதனை என் உயிரே.
20
   
3521.
மல்லல் அம் தடம் தேர் கடக் கைம்மலை வயமா
எல்லை இல்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச்
சில்லை மென்குழல் அசமுகி படுவது இத் திறமோ
நல்ல நல்ல என் அரசியல் முறை என நக்கான்.
21
   
3522.
நக்க காலையில் கால் உறும் வார்கழல் நரல
மக்கள் தங்களில் பானு கோபப் பெயர் வலியோன்
செக்கர் அங்கியில் கிளர்ந்து தன் தந்தை முன் செவ்வே
புக்கு வந்தனை செய்து நின்று இனையன புகல்வான்.
22
   
3523.
ஐய கேண் மதி நமது குற்றேவலால் அழுங்கித்
தொய்யல் உள்ளமோடு இந்திரன் கரந்தனன் சுரரும்
நொய்யர் இத்தொழில் நினைப்பதும் செய்யலர் நுங்கை
கை இழந்தது என் மாயமோ உணர்கிலேன் கவல் வேன்.
23
   
3524.
வந்தி பெற்றிடும் கான் முளை எட்டி வான் தவழும்
இந்துவைக் கரம் கொண்டனன் என்பது ஓர் இயல்பே
அந்தரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை
சிந்தி உற்றனன் என்று நீ உரைத்திடும் திறனே.
24
   
3525.
வலியர் ஆகியே புரிந்தனர் எனினும் மற்றவர்கள்
மெலியர் ஆற்ற நீ வெகுளுறும் தகைமை மேவினரோ
ஒலி தரும் கடல் மீன் சுமந்து உன் பணி உழந்தார்
அலியர் அல்லதை ஆண்டகையார் கொலோ அனையோர்.
25
   
3526.
நறை மலர்க் கமலத்தனை வெகுளினும் நாரத்
துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர்
எறிபுனல் சடை இறைவனை வெகுளினும் இயல்பே
சிறியர் தம்மையும் முனிதியோ பெருமையில் சிறந்தோய்.
26
   
3527.
முத்திறப் படும் தேவரே அல்லது உன் முனிவிற்கு
எத்திறத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே
சித்தம் உற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர்
கைத்தலம் தனை இழந்துழிப் பெயருவன் கடிதின்.
27
   
3528.
விசைய வாளினால் இங்கு இவர் கரந்தனை வீட்டும்
அசைவில் ஆடவன் தன்னை நின் உளத்தின் மால்                                     அளித்த
சசியை இந்திரக் கள்வனைத் தம் உயிர் தமக்குப்
பகை இலாதது ஓர் அமரரைப் பற்றினன் படர்வேன்.
28
   
3529.
அங்கண் உற்றிலர் மறைகுவரே எனில் அகிலம்
எங்கும் நாடுவன் அனையர் வாழ் துறக்க நாடு ஏகிச்
செம் கனல் கொள அளிக்குவன் அமரர் தம் திறத்தை
மங்கை மாரொடும் பற்றி ஓர் கன்னலின் வருவேன்.
29
   
3530.
ஈதியால் விடைதமியனுக்கு என்று நின்று இரப்பத்
தாதை ஆகிய அவுணர் கோன் முனிவினைத் தணிந்து
போதி மைந்த நின் படையொடும் ஆங்கெனப் புகல
ஆதவன் பகை அழகிது என்று உவகை அடைந்தான்.
30
   
3531.
ஓகை சேர் தரு விண்ணவர் மணி முடி உரிஞ்சிச்
சேகை சேர் தரு தாதைதாள் உச்சியில் சேர்த்தி
வாகை சேர் சிறு தந்தையர் தம்மையும் வணங்கிப்
போகை சேர் விடை கொண்டு தன் இருக்கையில்                                 போனான்.
31
   
3532.
மைந்தன் ஏகலும் சூரபன்மா எனும் வலியோன்
உந்து தீவிழி உழையரில் சிலவரை நோக்கி
அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை
நந்தம் முன்னுறக் கொடுவருவீர் என நவின்றான்.
32
   
3533.
எங்கண் உற்றுளான் அயன் எனக் கூவினர் ஏகிப்
பங்கயத்தனைக் கண்டு நின் கொணர்க எனப் பணித்தான்
நங்கள் கொற்றவன் என்றலும் ஒல் என நடவா
அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன் முன்                            அணைந்தான்.
33
   
3534.
அணைந்த பூமகன் வைகலே பக்க நாள் அவற்றால்
புணர்ந்த யோகொடு கரணம் மேல் உள்ளன புகல
நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்து உளாய்                                  நொய்தில்
தணந்தகை இவர்க்கு உதவுதி என்றனன் தலைவன்.
34
   
3535.
என்று தான் இவை மொழிதலும் திசை முகன் இசைந்து
வன் திறல் கரம் கூடுக மற்று இவர்க்கு எனலும்
ஒன்று ஒர் மாத்திரைப் பொழுதின் முன் அவை வளர்ந்து                                         உறலும்
நன்று நன்று நின் வல்லபம் என்று சூர் நவின்றான்.
35
   
3536.
அன்னதன் பின்னர் அசமுகத்து அணங்கினை அரசன்
தொல் நகர்க்குளே இருந்திடச் செய்து துன் முகத்தி
தன்னை மைந்தனோடு உய்த்தனன் புலோமசைத் தையல்
முன் இருந்துழி காட்டியே வருக என மொழிந்து.
36
   
3537.
உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில்
தழைத்த செம் கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை
எழுச்சி கொண்டு உறு கோளினை யாரையும் இன்னே
அழைத்திரால் எனச் சொற்றனன் அவுணர் கட்கு அரசன்.
37
   
3538.
சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலம் சென்று
நேடி அன்னவர் தமை எலாம் கொணர்ந்து முன் நிறுவ
மூடு கொண்டலில் கரந்த மின் பின் எழு முறை போல்
கேடு கொண்ட தொல் சின வெரி சூரன் உள் கிளர்ந்த.
38
   
3539.
வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர் தமை விளியா
அயர்க்கை இன்றியே வான் இடைத் திரியு நீர் அறியா
இயற்கை ஒன்று இலை எங்கை தன் செங்கையை                                    எறிந்தோன்
செயற்கை காணுதிர் வறிது நீர் இருந்தது என் சேணில்.
39
   
3540.
இளையள் தன் கரம் குறைத்திடும் இமையவன் உயிரைக்
களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித்
தளை செய்து இவ்விடைக் கொணர்ந்திலிர் அல்லதத்                                       தலையில்
விளைவை வந்து எமக்கு உரைத்திலீர் நன்று நும் மிகுதி.
40
   
3541.
மறத் திறத்தினால் எங்கை தன் கையை ஓர் வலியோன்
குறைத்ததற்கு நீர் அகத்தரே அல்லது குறிக்கில்
புறத்தர் அன்று நம் ஆணையால் இத்தொழில் புரிவீர்
முறைத்திறம் கொலோ நுங்களுக்கு இது என மொழிந்தான்.
41
   
3542.
நீதி இல்லவன் ஈங்கு இவை உரைத்தலும் நிருப
ஏதும் எங்களை வெகுளலை இங்கு இவள் கரத்தைக்
காது வான்தனைக் கண்டிலம் இன்று செல் கதியின்
மீது சென்ற வெம் விழி என உரைத்தனர் விண்ணோர்.
42
   
3543.
துண்டம் ஆகியே இவள் கரம் துணிபட்ட செய்கை
கண்டிலார் களாம் கதி இடைச் சென்றவாம் கண்கள்
அண்டர் தம் செயல் அழகிது என்று அனையரை எல்லாம்
தண்டல் இல்லதோர் சிறை புரிவித்தனன் தலைவன்.
43
   
3544.
தினகரன் முதலினோர் சிறையில் புக்க பின்
வினைஞரில் சிலர் தமை விளித்து நீவிர் போய்த்
துனைவரு மருத்துவர் தொகையைத் தம் என
முனிவொடு தூண்டினன் முடிவு இல் ஆற்றலான்.
44
   
3545.
ஒற்றரில் ஒரு சிலர் ஒல்லை ஏகியே
குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே
பற்றி முன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான்
தெற்றென ஆங்கு அவர்க்கு இதனைச் செப்புவான்.
45
   
3546.
வான் இடை மண் இடை மாதிரத்து இடை
மேல் நிகழ் கடலிடை வியன் பிலத்து இடை
ஊன் இடை உயிரிடை ஒழிந்து நின்றிடும்
ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால்.
46
   
3547.
ஏண் உறுகின்ற என் இளையள் கையை ஓர்
சேணினன் வாள் கொடு சேதித் திட்டதைக்
காணுதிர் உமக்கு எவர் கரக்கற் பாலினோர்
நீள் நகர் குறுகி இந் நிலைமை சொற்றிலிர்.
47
   
3548.
தரி அலர் சூழ்ச்சியால் தகுவர்க்கு இப்பழி
வருவது நன்று என மகிழ்ந்து வைகினீர்
பெருமிதம் நன்று எனப் பேச மாறு சொல்
உரை அற நின்றனர் உலவைப் பண்ணவர்.
48
   
3549.
வன் திறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
நின்றிடு கால்களை நீடு கால்களில்
துன்றிய கனைகழல் சூரன் என்பவன்
ஒன்று ஒரு சிறைதனில் உய்த்திட்டான் அரோ.
49
   
3550.
ஈற்றினை இழைத்திட இருக்கும் கால்களைச்
சீற்றமொடு அவுணர் கோன் சிறையில் வீட்டினான்
சாற்றிடின் உலக மேல் தவத்தினால் வரும்
பேற்றினும் உளது கொல் பெருமைத் தானதே.
50
   
3551.
திரிதரு மருத்தரைச் சிறையில் வைத்தபின்
குரை கழல் வினைஞரைக் கூவி இற்றை யாண்டு
இருது நல் மதிமுதல் எல்லை யாளரைத்
தருதிர் என்று உரைத்தலும் தாழ்ந்து போயினார்.
51
   
3552.
ஏவலர் ஆயினோர் ஏகி எல்லையின்
காவலர் ஆகியே கடவுளோர் தமைக்
கூவினர் பற்றினர் கொடுவந்து உய்த்தலும்
தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான்.
52
   
3553.
புல்லிய மகபதி புணர்த்த அச்செயல்
ஒல்லுவது என்று அதற்கு உள்ளம் ஆகி நீர்
எல்லிரு மனம் மகிழ்ந்து இருத்திர் என்னொடும்
சொல்லிய வந்தலீரி யாண்டும் துன்னினீர்.
53
   
3554.
நிரந்தரம் நம் பணி நெறியின் நின்று நீர்
இருந்ததில் பயன் எவன் இருக்கலாமையால்
வரும் தவறு என் சுரர் மருங்கு உற்றீர் எனா
அரும் தளை இட்டனன் அவர்கள் தம்மையும்.
54
   
3555.
தூவலி கெழுவிய சூரன் பின் சில
ஏவலர் தங்களை விளித்திட்டு இப்புவி
காவலர் தமை எலாம் கடிது வம்மெனக்
கூவுதிர் தம் மெனக் கூறித் தூண்டினான்.
55
   
3556.
தூண்டலும் அளவை தீர் தூதர் ஓடியே
ஈண்டிய காவலர் இனத்தை மாநிலம்
தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள்
ஆண்டகை இறைவனது அவையின் உய்ப்பவே.
56
   
3557.
ஆக்கையில் வியர்ப்பு உற அச்சம் நாண் உயிர்
தாக்கு உற நனி உளம் தளரக் கை தொழும்
காக்குநர் தொகுதியைக் காவல் மன்னவன்
நோக்கினன் வெகுண்டு இது நுவறல் மேயினான்.
57
   
3558.
எளித்து உறல் இன்றி நம் ஏவல் நீங்கியே
களித்திடு சசியொடும் கடவுள் வாசவன்
ஒளித்தனன் இம்பரின் உம்பர் இல்லை நீர்
அளித்தது சாலவும் அழகிதாம் அரோ.
58
   
3559.
குறித்திடு புரை மனக் கொண்டல் ஊர்பவன்
நெறித்திகழ் ஆணையின் நின்ற தூதுவன்
மறித்திரு முகன் உடை மங்கை தன் கரம்
அறுத்து அவண் இருந்தனன் அதுவும் தேர்ந்திலீர்.
59
   
3560.
மறம் கிளர் தேறல் வாய் மடுத்து வைகலும்
கறங்கு உறு நிலையராய்க் கலங்கினீர் கொலோ
உறங்கினிரே கொலோ ஓம்பலீர் கொலோ
பிறங்கு தொல் வளமையால் பித்து உற்றீர்கொலோ.
60
   
3561.
ஓயும் என் பஞைரோடு உறவு உற்றீர் கொலோ
வாயவர் தங்களுக்கு அஞ்சினீர் கொலோ
சேய் இழையர் இடைச் செருக்கு உற்றீர் கொலோ
நீயிர்கள் இருந்தது என் நிலைமை என்னவே.
61
   
3562.
எண்டரும் எந்தை நீ இசைத்த தன்மையில்
கொண்டிலம் ஒன்று உமக்கு குவலயம் தனைப்
பண்டு தொட்டு அளிக்கு தும் பகைஞர் யாரையும்
கண்டிலம் கரந்து உறை கதையும் கேட்டிலம்.
62
   
3563.
தாய் எனும் ஏழகத் தலையள் துன்முக
ஆயிழை யொடும் வரல் அதுவும் அன்னர்கை
போயதும் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி
மாயம் இது ஆகுமால் மன்ன என்னவே.
63
   
3564.
மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால் கொளீஇப்
புடவியை இடை தொறும் போற்றல் செய்திலீர்
இடை உற என்வயின் இனைய தோர்பழி
அடைவது மாயையாம் அழகிதே என்றான்.
64
   
3565.
ஒலிகெழும் உவரிப்புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத்
தொலை உழி எழுவதே போல் சூரனும் சினமீக் கொள்ள
மலிகதிர் இருள் புக்கு என்ன வாள் உரீஇ மருங்கே                                     தானைத்
தலைவர் நின்றாரை ஏவித் தனித் தனி தண்டம் செய்வான்.
65
   
3566.
சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான்
சிற்சிலர் துண்டம் தன்னைச் செவிகளைக் களைதல்                                   செய்தான்
சிற்சிலர் மருமம் தன்னைச் சிறு புறத்தொடு கொய்                                   வித்தான்
சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப்                                   பித்தான்.
66
   
3567.
எறி தரு கழல்கால் சூரன் இத்திறம் பல் தண்டங்கள்
முறையினில் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து
விறல் கெழும் இளையர் செல்ல விடை கொடுத்து அயனை                                  நோக்கி
மறை முனி போதி என்ன மற்று அவன் இனைய                                  சொற்றான்.
67
   
3568.
மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர்
இந் நில மடந்தை வேலைக்கு இறையவர் யாரும் என்றும்
உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி ஆகா
அன்னவர் பிழை உட்கொள்ளேல் அரும் சிறை விடுத்தி                                        என்றான்.
68
   
3569.
குறை இரந்து இனைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட
நறை இருந்து உலவு தாரோன் நன்று என இசைவு                                    கொள்ளா
உறை இருந்து இலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நம்தம்
சிறை இருந்தோரைத் தம்மின் என்றலும் சென்று அங்கு                                    உய்த்தார்.
69
   
3570.
வன்தளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா
என்று நம் பணியில் நிற்றிர் இந்திரனொடு சேர் கல்லிர்
சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட என்ன அன்னோர்
நன்று இது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார்.
70
   
3571.
போதலும் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர்                                    யார்க்கும்
மேதகு முனிவர் யார்க்கும் வியன் படைத் தலைமை                                    யோர்க்கும்
போதலை உதவிச் சூரன் உறையுளில் புகுந்தான் முன்                                    செல்
ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைதல்                                    உற்றேன்.
71