அதி வீரன் வதைப் படலம்
 
3830.
அன்னதொர் பான்மை களாக இலங்கை
முன் உறு வார்கடல் ஆழ்ந்தது மூழ்க
இந் நகர் போற்றி இருந்திடு கின்ற
மின் நுனை வேல் அதி வீரன் உணர்ந்தான்.
1
   
3831.
தனது புரங் கடல் சாருதல் காணா
நனி துயர் எய்தினன் நாணும் அடைந்தான்
சினவி உயிர்த்து அழல் சிந்த நகைத்தான்
அனையவன் இன்னது அகத்திடை கொண்டான்.
2
   
3832.
சுந்தர மேவரு சூரபன் மாவோ
அந்தம் இல் தம்பியர் ஓவனையார் தம்
மைந்தர்களோ மதியேன் அவர் அல்லால்
இந்த இயற்கையை யார் புரிகிற்பார்.
3
   
3833.
ஆயவர் என்னினும் ஆங்கு அது செய்தற்கு
ஏயது ஒர் ஏதுவும் இன்று தம் ஊர்க்குத்
தீயது செய்கலர் சிந்தையது அன்றால்
மாயையும் ஈது மதிக்கிலள் போலும்.
4
   
3834.
மூவரும் இச் செயல் முன்னலர் பின்னர்த்
தேவர்கள் யார் இது செய்திட வல்லார்
ஏவரும் நம் சிறை எய்தினர் வேள்விக்
காவலன் ஆருயிர் காத்து மறைந்தான்.
5
   
3835.
மாதிர மேலவர் வானிடை வைப்பின்
மேதகும் விண்ணவர் விஞ்சையர் சித்தர்
ஆதியர் நம் இறை ஆணையின் நீங்கார்
ஈது புரிந்திட எண்ணுவர் கொல்லோ.
6
   
3836.
தவ்வற ஈண்டு அமர் தானவர் ஆற்ற
மெய் வலி மாயைகள் மேவினர் ஏனும்
தெவ்வடு சூர் முதல் திண் படை அஞ்சி
இவ் இயல் தன்னை இழைக்கலர் போலும்.
7
   
3837.
ஆதலின் அன்னவர் ஆற்றலர் என்னின்
ஈது ஒரு செய்கை இழைத்தவர் யாரோ
தாதை அகன்றுழி தானவர் ஓடும்
காதலின் இந் நகர் காத்தது நன்று ஆல்.
8
   
3838.
காயம் ஒடுங்கு கனல் சிரம் ஊடு
போயது வல்லை புறம் செல நோற்று
மாயை பெரும் படை வன்மைகள் வேதன்
ஈய முன் வாங்கிய என் செயல் நன்றால்.
9
   
3839.
தந்தை உறாது தணந்துழி ஆங்கு ஓர்
மைந்தன் இருந்து தன் மா நகரோடும்
அந்தில் அகன் கடல் ஆழ்ந்தனன் என்றால்
நம் தமர் என்னை நகைப்பர்கள் அன்றே.
10
   
3840.
மன்னவன் ஈது மதித்திடின் மற்று என்
தன்னை அடும் பெறு தாதையும் அற்றே
பின் உளர் எள்ளுவர் பெற்றி இதாம் மேல்
என் இயல் நன்று என எண்ணி இனைந்தான்.
11
   
3841.
இனைந்த அதிவீரன் எனும் திறல் மைந்தன்
கனைந்திடு கின்ற கடற்கு இடை ஆழ்வோன்
அனந்தரம் ஊழ் வினை ஆற்றலின் அன்னான்
மனம் தனில் ஈது ஒரு தன்மை மதித்தான்.
12
   
3842.
ஒல் ஒலி சேருவர் வரிக் கடல் மீதாய்ச்
செல்லுவான் யார் இது செய்தனர் என்றே
வல்லையில் ஓர் குவன் மற்று அவர் தம்மைக்
கொல்லுவன் மெய்ப்படு சோரி குடிப்பன்.
13
   
3843.
என்று அதி வீரன் இரும் படையாவும்
ஒன்று அற வாரி உருத்துனி அகத்துள்
நின்று உளர் தங்களை நேடுபு கொண்டே
வன் திரை வேலையின் மீ மிசை வந்தான்.
14
   
3844.
விடலை திருமுன்னம் அதி வீரன் அனிகங்கள்
புடையில் வர நீரின் மிசை பொள் என எழுந்தான்
அடு தொழில் இயற்றிடும் ஆதி தனை எய்தக்
கொடிய விடம் வார் கடல் குலாய் நிமிர்வதே போல்.
15
   
3845.
விழுந்திடும் இலங்கை தனில் மேவும் அதிவீரன்
எழுந்து தன் தானையொடு இரும் கடலுள் அங்கிக்
கொழுந்து மிசை சென்று அனைய கோலமொடு நின்ற
செழும் திறல் கொள் மொய்ம்புடைய செம்மல் நிலை                                       கண்டான்.
16
   
3846.
கண்டனன் வெகுண்டு இதழ் கறித்து நகை செய்யா
அண்டர் குழு வான் இவன் ஓர் ஆண்டகை நம் மூதூர்
தெண் திரையில் ஆழும் வகை செய்தும் இவண் நின்றான்
எண் திசை தொழும் தகுவர் ஆணை இனிது என்றான்.
17
   
3847.
என்று மொழியா விரைவில் யாளி முகன் மைந்தன்
கொன்று இவனது ஆருயிர் குடிப்பன் என உன்னிச்
சென்றிடலும் ஆழ்ந்தவர் செயற்கை அது காண்பான்
நின்ற தொரு பேர் அறிஞன் நீர்மையது கண்டான்.
18
   
3848.
ஆன பொழுதுதத் தினில் அவன் புடையில் வந்த
தானவர்கள் சூழ்ந்தனர் சமர்த் தொழில் இயற்ற
மான விறலோன் தனது வாள் உறை கழித்தே
ஊன் ஒடு உயிர் சிந்திட ஒல்லை அடல் செய்தான்.
19
   
3849.
அற்றன சிரத் தொகுதி அற்றன கரங்கள்
அற்றன புயத்தொகுதி அற்றன பதங்கள்
அற்றன பெரும் புறமும் அற்ற உடன் முற்றும்
அற்றனர்கள் யாரும் உயிர் அற்றது அவர் பூசல்.
20
   
3850.
பங்கி செறி செம் தலைகள் பாய் குருதி நீர் மேல்
எங்கணும் மிதப்பன இரும் கடலின் ஊடே
செம் கொடி படந்திடு செழும் பவள வைப்பில்
அங்கமலம் ஆனவை அலர்ந்திடுதல் போலும்.
21
   
3851.
அற்றம் அகல் வீரன் அவுணப் படை துணிப்பச்
செற்றிய பிணத்தொகை திரைப் புணரி தூர்த்து
மற்று மிசை போந்து மணியாலும் ஒர் இலங்கைப்
பொற்றையது இயற்றியது போன்றுளது மாதோ.
22
   
3852.
தன் படை விளிந்து சலதிக் கடலுள் வீழ
முன் பன் அதி வீரன் முனி யாவதனை நோக்கி
என் புடையி னோரை எறிந்தாய் கடிதின் நின்னைத்
தின்பனது காண்டி எனவே செரு முயன்றான்.
23
   
3853.
சொல்லும் அதி வீரன் வரு தோற்றம் அது காணா
வல்லை வருக என்று திறல் வள்ளலும் அழைப்ப
எல்லை அதனில் செருவின் ஏற்று இவனை இன்னே
கொல்லுக என அங்கண் ஒரு குந்தம் அது எறிந்தான்.
24
   
3854.
உய்த்தது ஒரு கூர் அயில் உரத்தில் உறு முன்னர்
மத்தகய நேர் விடலை மற்று அது தெரிந்தே
கைத் தலம் இருந்திடும் கனல் புரையும் வாளால்
அத்துணை இரண்டு துணியாய் விழ எறிந்தான்.
25
   
3855.
கண்டம் உற ஞாங்கரது கண்டு திறன் மைந்தன்
தண்டம் விரைந்து ஒன்று ஒரு தடக்கை கொடு எடுத்தே
மண்டு அமர் செய் உன் உயிரை வாங்கும் இஃது என்னா
அண்டர் புகழ் காளை தனது ஆகம் உற விட்டான்.
26
   
3856.
விட்டகாலை அத் தண்டினை வெலற்கு அரும் திறலோன்
அட்டிடான் தனிவாளினால் ஏற்றனன் அகலம்
பட்டு மற்று அது நுண் துகளாக அப்பதகன்
மட்டு இலாத ஓர் விம்மிதம் எய்தினன் மறுகி.
27
   
3857.
வேறு ஒர் முத்தலைப் படையது கொண்டு அதி வீரன்
மாறு இலா விறல் மொய்ம்பினன் தன் மணி மார்பின்
ஊறு செய்திறம் ஓச்சலும் கண்டு நம் உரவோன்
சீறி ஆங்கு அது பற்றினன் செம்கையால் இறுத்தான்.
28
   
3858.
இறுத்த காலையில் இலங்கையில் யாளிமா முகன் சேய்
செறுத்து மற்று இவன் தனை அடல் அரிது எனச் சிந்தை
குறித்து மற்று ஒரு நாந்தகம் ஏந்தினன் குறுகி
வெறித்த கொண்டல் உட் கொட்புறு மின் என                                    விதிர்த்தான்.
29
   
3859.
கறங்கினில் பெரு வட்டணை புரிந்து தன் கரமேல்
நிறம் கொள் வாளினை இடம் வலம் திரித்தனன் நெறியே
பிறங்கும் ஆர் கலித் தெண்டிரை அலைதரப் பெரிது
மறம் கொள் நாந்தகம் ஈனு கண்டு அலமரும் வகை                                          போல்.
30
   
3860.
ஏது இங்கு இது நான்முகன் தந்து உளது எவர்க்கும்
பேதகம் செயல் அரியதால் அன்னது பிடித்தேன்
சாதி திண்ண நீ வருக எனா மிகை மொழி சாற்றிக்
கோது இல் வீரன் முன் அணுகலும் அனையவன் கூறும்.
31
   
3861.
நன்று நன்று நின் ஆற்றலும் ஆண்மையும் நம்மை
வென்றியே எனின் யாவரும் மேல் உனை வியப்பார்
நின்று நீ சில மொழிவது என் கடிது நேருதியால்
வென்றி வீரரும் தமைப் புகழ்கிற்பரோ வென்றான்.
32
   
3862.
என்ன ஒன்னலன் கிடைத்தனன் வீரனும் எதிர்ந்தான்
அன்ன பான்மையர் வாள் அமர் ஆடினர் அகல்வான்
மின்னு மா முகில் தோன்றியே எதிர் எதிர் விரிந்து
பின்னருள் புகுந்து உடன் உடன் செறிந்த பெற்றிமை                                         போல்.
33
   
3863.
சென்னி நாடுவர் களத்தினை நாடுவர் செவிதாள்
கன்ன நாடுவர் புயங்களை நாடுவர் கரங்கள்
உன்னி நாடுவர் உரத்தினை நாடுவர் உகளப்
பொன்னின் வார் கழல் நாடுவர் வாள் அமர் புரிவார்.
34
   
3864.
இணங்கு நீரவர் இருவரும் இனையன உறுப்பில்
அணங்கு செய்திடும் மரபினால் ஆயிடை உய்ப்பார்
நுணங்கு விஞ்சையின் வன்மையான் நொய்தின்                                      மாற்றிடுவார்
மணம் கொள் செந்நிற வாள் கொடே வட்டணை வருவார்.
35
   
3865.
போதம் இன்னதில் எம்பிரான் தூதுவன் பொருவான்
ஏதி கொண்டுளான் தன்னையான் வலிந்திடல் இயல்போ
ஆதலால் இவன் படை முறை வெல்வதே அறன் என்று
ஓதி சேர் உளம் கொண்டனன் இடை தெரிந் துற்றான்.
36
   
3866.
இடைபுகுந்த அதி வீரன் அது அடிகள் ஓர் இரண்டும்
முடியும் ஆகமும் தோள்களும் ஆங்கு ஒரு முறையே
சுடர் பிறங்கிய வாளினால் ஆண்தகை துணித்துக்
கடிது வீட்டினன் நடுவன் வந்து அவன் உயிர் கவர்ந்தான்.
37