கயமுகன் வதைப் படலம்
 
3895.
ஏகா நிற்புழி ஏந்தல் கீழ்த்திசை
மா காவல் கொள் மதங்க மாமுகன்
மீகான் ஒப்ப வியன் கலத்தினுக்கு
ஆகாயத்தின் அமர்ந்து போற்றுவான்.
1
   
3896.
நூற்றுப் பத்து நுவன்ற தோன்முகன்
மூற்றைக் கையினன் மொய்ம்பிர் ஆயிரன்
சீற்றத் துப்புறு தீய சிந்தையான்
கூற்றத்துக்கு ஒரு கூற்றமே அனான்.
2
   
3897.
பொன்னார் ஏம புரத்து வைகலும்
மன்னாய் வாழ்பவன் மாறு கொண்டு தன்
முன்னா எய்தி முனிந்து போர் செய
ஒன்னார் இன்றி உளங்கு உறைந்துளான்.
3
   
3898.
கருமேகங்கள் கறித்து வாரியுண்டு
உருமேறு ஓடு முரற்ற ஓச்சுவான்
பெரு மேதக்க பவம் செய் பெற்றியான்
செருமேல் கொண்டிடு சிந்தை பெற்றுளான்.
4
   
3899.
மஞ்சார் வேழம் வனத்தில் வல்லுளி
எஞ்சா வெவ்வரி யாளி வல்லியம்
அஞ்சார் ஆயிர மங்கை கொண்டு உணாச்
செம் சோரிப் புனல் சிந்தும் வாயினான்.
5
   
3900.
காசைப் போது கடுத்த மெய்யர் தென்
ஆசைக் காலர் ஒர் ஆயிரத்தர் தம்
பாசத்தோடு பயின்று சேர்ந்து என
வீசித் தூங்கும் வியன்று திக்கையான்.
6
   
3901.
வாணாள் அஃகினன் மாயும் எல்லையான்
ஏணாள் அத்திசை ஏகும் வீரனைக்
காணா நின்று கனன்று சாலவும்
சேணான் இன்னன செப்பி ஏகுவான்.
7
   
3902.
மிக்கார் காவல் விலங்கி நீ இவண்
புக்காய் மாயை புகன்று உளாய் கொலோ
அக்கால் தானும் எம் ஆணை நீங்கியே
எக் காலத்தினும் ஏக வல்லதோ.
8
   
3903.
வறியர் ஆகி மயங்கும் வானவச்
சிறியார் வைகிய சீர் இல் ஊர் எனக்
குறியா வந்தனை கோது இல் இந்நகர்
அறியாயோ நமது ஆணை ஆற்றலே.
9
   
3904.
மூண்டு ஏகுற்றனென் மொய் சினத்தினேன்
மாண்டே போயினை வல்லை நீ இனி
மீண்டே போம் திறம் இல்லை மேல் உனக்கு
ஈண்டே மாய விழைத்த எல்லையே.
10
   
3905.
சூர் ஆள்கின்றது ஒர் தொல்லை மாநகர்
சேரா நின்றனை சீறு கேசரி
பேரா எல்லை ஒர் பீடின் மான்பிணை
ஆராய்தற்கு வரும் கொல் ஆற்றலால்.
11
   
3906.
தொடு நேமிக் கடல் துண் எனக் கடந்து
இடை சேர்கின்ற இலங்கை நீங்கியே
கடிதே இந்நகர் காண உன்னியே
அடைவாய் தேவர் கணத்து உளாரை நீ.
12
   
3907.
திருத்தம் கண் அகல் தேவர் தம்முளும்
விருத்தன் போலும் மிகத் துணிந்து நீ
ஒருத்தன் போந்தனை ஒன்று ஒர் வாளொடே
வரத்து என் இவ்விடை மாயை கற்றுளாய்.
13
   
3908.
ஆலாலத்தை அயின்ற நம்பனோ
மாலானோ வனசத்தில் அண்ணலோ
பாலார் தந்தி படைத்த கள்வனோ
மேலார் இங்கு உனை விட்ட தன்மையார்.
14
   
3909.
சுற்றா நின்றனை சூழ இந்நகர்
ஒற்றாய் வந்தனை போலும் உன்தனை
மற்றார் உய்த்தனர் வந்தது என் கொலோ
விற்றாய் நின் உயிர் எங்கண் உய்தி நீ.
15
   
3910.
சிறையில் பட்டு உழல் தேவர் செய்கையை
அறிகுற்று இந்திரன் ஆளை ஆகியே
நெறியில் போக நினைந்து உளாய் கொல் ஆங்கு
உறு குற்றாய் இதுவும் குறிப்பதோ.
16
   
3911.
விண் தோயும் கனல் மேவும் எல்லையின்
மண்டோய் பூளை மருத்தன் உய்த்தெனப்
பண்டே நொய்யை படும் திறத்து இவண்
கொண்டே வந்தது கொல்லும் வல்வினை.
17
   
3912.
முன்னம் நம் பணி முற்றும் ஆற்றியே
கின்னம் கொண்டு கரந்த கீழ்த் திசை
மன்னன் பால் உறுவாருள் அன்று நீ
இன்னும் அஞ்சலை என்னை எண்ணலாய்.
18
   
3913.
கொல்லா நிற்பது ஒர் கூற்றமே எனச்
செல்லா நின்றிடு திண்ணியேன் முனம்
நில்லாய் எங்கடா நீங்குவாய் எனா
ஒல்லான் ஓதி உரப்பி யேகினான்.
19
   
3914.
வன் தாள் கொண்ட மதக்க யாசுரன்
சென்றான் இன்னன செப்பி இம்மொழி
நன்றால் என்று நகைத்து நோக்கியே
நின்றான் வாகை நெடும் புயத்தினான்.
20
   
3915.
ஓவாது இவ்வகை ஓதி முன் வரும்
தீ வாயோன் எதிர் சென்று வல்லையில்
சாவா என் இடை சார்ந்துளாய் கொல் ஆம்
வாவா என்றனன் வாகை மொய்ம்பினான்.
21
   
3916.
வானோர் அஞ்ச வரும் கயாசுரன்
தான் ஓர் குன்று தனைப் பறித்திடா
ஊனோடு உன் உயிர் உண்ணும் ஈது எனா
வானோன் மைந்தன் முன் ஆர்த்து வீசினான்.
22
   
3917.
விண்தோய் மேனி வியன் கயாசுரன்
கொண்டு ஓர் கையில் விடுத்த குன்று அது
வண் ஓலம் புரி மாலை மொய்ம்பினான்
திண் தோள் மீ மிசை செவ்வண் உற்றதே.
23
   
3918.
வேழத் தோன் முகன் விட்ட பூதரம்
பாழித் தோள் மிசை பட்ட காலையில்
வாழிப் பூதியின் வட்டு விண்டு எனப்
பூழித்தாகி உடைந்து போயதே.
24
   
3919.
பொடியும் கால் எதிர்புக்க தீயவன்
மிடல் கொண்டு உற்றிடும் வீரன் ஆற்றல் கண்டு
உடலும் திண் சினம் உற்று ஒர் ஆயிரம் ஆம்
படரும் குன்று பறித்தன் மேயினான்.
25
   
3920.
பறியா நின்ற பகட்டு மாமுகன்
நெறி வீழ்கின்ற நெடும் கை சுற்றினான்
இறை சேர் மேரு இருந்த கோடு எலாம்
கறை சேர் காலவர் கட்டு எழுந்த போல்.
26
   
3921.
பத்தாம் நூறு படுத்த வேலையுள்
மத்தாகு உற்றன வாசுகித் தொகை
மொய்த்தார் வன்தலை முன்பு சூழ்ந்து எனக்
கைத்தா மால்வரைக் காட்சி மிக்கவே.
27
   
3922.
துண் என்றே கயா சூரன் நூறு பத்து
எண்ணும் தொல் கிரி யாவும் எம்பிரான்
கண் நின்றோன் விடு காமர் காளை மேல்
விண்ணம் கான்று என ஆர்த்து வீசினான்.
28
   
3923.
பாடார் பல்கிரி பற்றி வீசலும்
ஈடார் வெம்புலி யாளி கேசரி
கோடார் தந்திகள் கோடிகோடிகள்
வீடா ஆர்ப்பொடு விம்மி வீழ்பவே.
29
   
3924.
கேடாய் மன்னர் கிடப்ப ஆங்கு அவர்
வீடா ஆக்கம் இசைந்து உளார் எனப்
பாடா வண்டு பராரை மால்வரை
ஊடார் தேன்கள் உகுப்ப உண்டவே.
30
   
3925.
வேறு ஆகும் பல வெற்பு இடம் தொறும்
ஊறா நின்று உல உற்ற வான் புனல்
மாறாமல் கவிழ் உற்று வல்லை பேர்
ஆறாகிக் கடல் அன்ன ஆர்த்ததே.
31
   
3926.
வரை வீழ் பூம் புனல் மா நதிக் கணே
இரையா மாக்கள் யாவும் வீழ்தலால்
திரை சேர் வாரிகள் சென்று சேண் எழீஇ
விரைவால் வெய்யவன் வெப்பம் நீக்குமே.
32
   
3927.
பேசும் சீர் இவை பெற்ற வெற்பு எலாம்
ஈசன் தூதுவன் முன்னர் எய்தின
பாசம் சுற்றிய பம்பரத் தொகை
வீசும் காலை சுழன்று வீழ்வ போல்.
33
   
3928.
சுடர்ப் பெரும் கதிர் ஆதவன் துண் எனக் கரப்ப
அடுக்கல் ஆயிரம் இன்னவாறு ஒரு தலை ஆகக்
கடல் புகும் கண முகில் என வருதலும் கண்டான்
தடக்கை வேல் உடை அண்ணல் தாள் முன்னினன்                                      தமியோன்.
34
   
3929.
நிற்கும் எல்லையின் வெம் கொலைத் தொழின்முறை                                        நிரம்பக்
கிற்கும் வெய்யவன் விடுத்திடும் ஆயிரம் கிரியும்
பற்கன் மால்வரை காப்பவன் தன்மிசை பழிதீர்
அற்கன் மேல் வரும் எழிலிகள் என அடைந்தனவே.
35
   
3930.
மறு வரையாத திங்கள் வார்சடைக் கடவுள் நல்க
அறுவரை அனையாப் பெற்றோன் அருளினால் ஐயன்                                            நிற்ப
உறு வரை பத்து நூறும் ஒருங்கு மா உற்று மற்றோர்
சிறு வரை தன்னில் யாவும் சிதறியே உடைந்த அன்றே.
36
   
3931.
தெளிதரு வீரன் தன் மேல் செறிந்திடும் அடுக்கல் யாவும்
விளவொடு மாய்ந்த வன்றி விளைத்தில வேறு அங்கு                                     ஒன்றும்
வள நனி சுருங்கி வானம் வறந்த நாள் வெளிற்றுக்                                     கொண்மூக்
கிளர்வன பயன் இன்று ஆகிக் கேடுபட்டு உடையு மா                                     போல்.
37
   
3932.
மட்பகை வினைஞர் ஆனோர் வனை தரு கலங்கள்                                       முற்றும்
திட்பமொடு அமர்ந்த கற்றூண் சேர்ந்துழிச் சிதறுமா போல்
கொட் புறு புழைக்கை வெய்யோன் குறித்தெறி பிறங்கல்                                       யாவும்
ஒட்பம் மது அடைந்த வீரன் மிசைபட உடைந்த அன்றே.
38
   
3933.
விறல் கெழு புயத்தினான் மேல் விடுத்திடும் கிரிகள்                                           யாவும்
வறிது பட்டிடலும் காணாமால் கரி முகத்தன் நின்றான்
அற நெறி ஒருவி மொய்ம்பால் ஆற்றிய வெறுக்கை யாவும்
பிறர் கொள உகுத்தி யாதும் ஊதியம் பெறுகிலார் போல்.
39
   
3934.
கண்டு விம்மிதத்தன் ஆகிக் கயாசுரன் முனிந்தோர்                                        தண்டம்
திண்டிறன் மொய்ம்பன் தன்மேல் செலுத்தலும் அதனைக்                                        காணா
ஒண்தழல் புரையும் ஒள்வாள் உறை கழித்து ஒல்லை வீழத்
துண்டம் அது ஆக்கி அன்னோன் எதிர் உறத் துன்னல்                                        உற்றான்.
40
   
3935.
மத்த வெம் கயமாம் தீயோன் வாகை அம் தடந்தோள்                                       அண்ணல் மெய்த்தனி ஆற்றல் காணா விழுத்தகு பனைக்கை                                       யோச்சிப்
பத்து நூறு ஆன சாலப் பழுமரம் பறியா ஏந்தி
உய்த்திட ஒருதன் வாளால் ஒய்யெனச் சிந்தி ஆர்த்தான்.
41
   
3936.
காயெரி கலுழும் வெம் கண் கயாசுரன் விடுவான் பின்னும்
சேயுயர் வரை பல் வேறு தெரிந்தனன் பறிக்கும் எல்லை
நாயகன் தூதன் காணா நாந்தகம் கொடு போய் அன்னான்
ஆயிரம் ஆகி உள்ள புழைக்கையும் அறுத்தான் அன்றே.
42
   
3937.
அறுத்தலும் கவன்று தீயோன் ஆயிரத்து இரட்டி கையும்
செறித்திவன் தன்னைப் பற்றித் திற்றியாக் கொள்வன்                                          என்றே
குறித்தனன் வளைப்ப வாளால் கொம் என ஆற்றல் வீரன்
தறித்தனன் ஒருசார் வந்த ஆயிரம் தடக்கை முற்றும்.
43
   
3938.
செற்ற மால் கரியின் பேரோன் திண்கை ஆயிரமும் வீட்ட
மற்றை ஆயிரம் கை யாலும் வாகை அம் செம்மல்                                      மார்பின்
எற்றினான் எற்றும் எல்லை எல்லையில் வெகுளி எய்தி
அற்று வீழ்ந்திடவே வாளால் அவையெலாம் அடுதல்                                      செய்தான்.
44
   
3939.
கொலை கெழு தறுகண் நால்வாய்க் குஞ்சர முகத்து                                      வெய்யோன்
நிலை கெழு பாணி முற்றும் நீங்கி ஈர் ஐந்து நூற்றுத்
தலை கெழு நிலைமைத் தாகி தண் சினை பலவும் மல்கி
அலைகெழு வீழ்போய் உற்ற ஆலமே போல நின்றான்.
45
   
3940.
பாணிகள் இழந்து நின்ற பகட்டுடை வதனத் தீயோன்
நாணினன் இவனை அட்டு நம் உயிர் துறத்தும் என்னா
மாண் அறு மனத்தில் கொண்டு மற்றொழின் முன்னித்                                       தோளால்
தாணுவின் கயிலை காப்போன் தடம் புயம் தாக்கி                                       ஆர்த்தான்.
46
   
3941.
ஐயன தொற்றன் காணா ஆற்றலின்றாகி முற்றும்
கையினை இழந்து நின்றான் கடும்கதிர் வாளின் வெம்போர்
செய்யலன் இனியான் என்னாச் சிந்தை செய்து உறைவாள்                                       ஓச்சி
ஒய்யென அவன் தன் மார்பின் உதைத்தனன் ஒருதன்                                       தாளால்.
47
   
3942.
உதைத்திடு கின்ற காலை ஒல் என அரற்றி வீழ்ந்து
மதத்தினை உறுக போல மால்கரி முகத்து வெய்யோன்
பதைத்தனன் ஆவி சிந்திப் பட்டனன் பகிர்ந்த மார்பில்
குதித்திடு சோரி நீத்தம் குரை கடல் போயது அன்றே.
48
   
3943.
அவ் வியல் கண்டு பல்லோர் அவுணர்கள் நமரே ஈண்டு
தெவ் வியல் முறையின் நின்று செருவினை இழைப்பார்                                       போலும்
இவ் விவர் ஆடற்கு ஏது என் கொலோ அறிதும் என்றே
கவ்வையின் நெறிகள் தோறும் காண்பது கருதிப்                                       போந்தார்.
49
   
3944.
சென்றிடல் வீரன் காணாத் தீயர் என் செய்கை நோக்கில்
கன்றி வெம் சினம் மேற் கொண்டு கடும் சமர் இழைப்பர்                                         யானும்
நின்று அமர் புரிதல் வேண்டும் நிலைமை ஈது என்றால்                                         அம்மா
இன்றொடு முடியும் கொல்லோ இயற்றினும் இவர் போர்                                         என்றான்.
50
   
3945.
ஆரணம் தனக்கும் காணா ஆதி அம் கடவுள் சொற்ற
பேர் அருண் மறந்தே இன்னே பீடு இலார் தம்மோடு                                        ஏற்றுப்
போரினை இழைத்து நிற்றல் புல்லிது புலமைத்து அன்றால்
சூர் உறை மூதூர் தன்னில் துன்னுவன் கடிதின் என்றான்.
51
   
3946.
எப் பெரு வாயில் சார வேகினும் அங்கண் எல்லாம்
கைப் படை அவுணர் வெள்ளம் காவல் கொண்டு உற்ற                                        ஆற்றால்
தப்பினன் சேறல் ஒல்லா தமியன் இப் படிவத் தோடு
மெய்ப்பதி இதற்குச் செல்வன் வேற்று உரு எய்தி                                        என்றான்.
52
   
3947.
கூற்றினை உறழும் வைவேல் குமரவேள் அருளால் ஈண்டு                                         ஓர்
வேற்று உரு அதனைக் கொண்டு வெய்யராம் அவுண வீரர்
போற்றும் இக் குணபால் வாய்தல் பொள் எனக் கடந்து                                         பின்னர்
மாற்றலன் ஊரில் செல்வன் என்றனன் வாகை மொய்ம்பன்.
53
   
3948.
நொய்யதோர் அணுவின் ஆற்ற நுணுகியும் மேன்மை                                     தன்னில்
பொய் இல் சீர் பெருமைத்து ஆயும் பூரணமாகி வைகும்
செய்யதோர் குமரன் பொன் தாள் சிந்தை செய்து அன்பின்                                     போற்றி
ஒய்யென அருளின் நீரால் ஓர் அணு உருவம்                                   கொண்டான்.
54
   
3949.
நுணுகு தன் உணர்வே போல நோக்கரும் திறத்தால்                                    தானோர்
அணு உருக் கொண்டு வீரன் அடுகளம் அதனை நீங்கி
இணை அறு குமரன் போற்றி எழுந்து விண் படர்ந்து                                    மூதூர்க்
குண திசை வாய்தல் நின்ற கோபுர மிசைக் கண் உற்றான்.
55