நகரழி படலம்
 
4402.
ஆசுறும் அவுண வெள்ளம் ஐம்பது முடித்தோன் ஐஞ்ஞூறு
யோசனை அளவை ஆன்றே ஒர் ஆயிரம் உம்பர் ஏகித்
தேசுறு மேரு என்னச் சிகரம் ஓர் இலக்கம் சூடி
வீசு பொன் சுடர நின்ற வேரம் ஒன்று அங்கண் கண்டான்.
1
   
4403.
புறத்து இருள் இரிய வைகும் பொலம் சுடர்ப் பொன் செய்                                       வேரந்
திறத்து இயல் கோயில் முன்னம் சேர்ந்தது தன்னை வீரன்
பறித்து ஒரு கரத்தின் ஏந்திப் பதகன் ஆம் சூரபன்மன்
அறத்து இயல் இழுக்கி வைகும் அவைக்களம் வீசி                                       ஆர்த்தான்.
2
   
4404.
பன்மணி செறிந்த பொற்பில் பாய் ஒளி எரி பொன் வேரம்
மன்னவன் உறையும் செம் பொன் மாயிரு மன்றில் போதல்
மின்னவிர் மேரு ஆதி வெற்பு எலாம் மிகலின் ஒன்றிப்
பொன்னகர் பொடிப்பச் செல்லும் தன்மையைப் போலும்                                         அம்மா.
3
   
4405.
வார்த் தரு கழல் கால் வீரன் வான் உரும் ஏறும் உட்க
ஆர்த்திடு துழனி யேகி அரசன் மேவிய அத்தாணி
சேர்த்தவர் கன்னத்து ஊடு செறியும் முன் எறிதல் உற்ற
பேர்த்திடு செம் பொன் வேரம் பேரவை மிசை உற்று                                        அன்றே.
4
   
4406.
வில் செறி தூபிச் செம் பொன் வியன் மணி கஞலும்                                      வேரம்
கல் செறி பெரும் தோள் வீரன் எறிதலும் கடிது நண்ணிப்
பொன் செறி மார்பில் சூரும் புதல்வரும் சிலரும் வைகும்
சிற் சில இடையே அன்றி மன்று எலாம் சிந்திற்று ஆம்                                      ஆல்.
5
   
4407.
தடத் தனி வேரம் கீண்டு தபனியத்து அவைக் கண் ஓச்சி
இடித்தனன் ஒருதான் நிற்கும் எம்பிரான் ஏவல் தூதன்
படைத்து அளித்து இறுதி வேலைப் பசும் பொன் ஆர்                              தசும்பின் அண்டம்
உடைத்து உலகு அழித்து நிற்கும் ஒரு பெரும் கடவுள்                              ஒத்தான்.
6
   
4408.
புலவு கொள் அலகு வெவ்வாய்ப் புள் செறி பொதும்பர்                                       தன்னில்
பலம் உடை உருமு வீழப் பட்டது ஓர் பரிசது என்னத்
தொலை வகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்                                       சீர்
மலிவுறு சனங்களோடு மன்றம் அங்கு உற்றது அம்மா.
7
   
4409.
இடிந்தன மிசையின் எல்லை இற்ற பித்திகையின் சூழல்
பொடிந்தன உத்திரங்கள் போதிகை பூழி ஆகி
முடிந்தன மதலை யாவும் முரிந்தன கபோதம் வீழ்ந்த
மடிந்தன திருவும் சீரும் மன்று அழிவு உற்றது அன்றே.
8
   
4410.
பீடிகை புரைந்த பொற்பில் பேர் அவை தகர்தலோடும்
பாடு உற அரசர் சூழ்ந்த பரிசனர் தம்முள் சில்லோர்
ஓடினர் சிலவர் மெய் ஊறு உற்றனர் சிலவர் நெக்கு
வீடினர் சிலவர் ஆற்ற மெலிந்தனர் புலம்பல் உற்றார்.
9
   
4411.
நெக்கது பொதியில் ஆக நிரந்தது செம் பொன் பூழி
திக் கொடு புவியும் வானும் செறிந்தன அவுணர் ஆகித்
தொக்கனர் உடைந்து மாய்ந்து தொகை பிரிந்து அழிந்தார்                                    தொல்லைத்
தக்கனின் உணர்வு தீர்ந்த தகுவர் கோன் இவற்றைக்                                    கண்டான்.
10
   
4412.
ஆயிர நாமத்து அண்ணல் அனையவன் வன்மை காணா
ஆயிரம் வடவையே போல் அழன்று தன் அயலின் நின்ற
ஆயிரம் நெடுந்தோள் ஐஞ் ஞூறு ஆனனம் கொண்ட                                      தீயோர்
ஆயிரர் தம்மை நோக்கி அடல் உரும் ஏற்றில்                                      சொல்வான்.
11
   
4413.
விழிப்பரு நிவப்பின் ஓங்கும் வேரம் ஒன்று அதனைக்                                 கீண்டே
தெழிப்பொடு குமரன் தூதன் செலுத்தினன் செம் பொன்                                 மன்றம்
இழிப் புறத் தகர்ந்து வீழ்ந்த தீண்டு சில்லிடமே அன்றிப்
பழிப்பு எனக்கு இதன் மேல் உண்டோ பட்டது என்                                 புகழும் மன்னோ.
12
   
4414.
கோறலே கொற்றம் அன்றால் ஒற்றனைக் குறுகி நீவிர்
மாறு போர் இயற்றி ஏனும் மற்று அவன் வழாத ஆற்றால்
ஈறு செய்திடாது பற்றி எம் முனர்த் தருதிர் மெய்யின்
ஊறு செய்து அவனை வானோருடன் சிறை உய்ப்பன்                                      என்றான்.
13
   
4415.
அன்னவர் அதனைக் கேளா அரசவீ தருளிக் கேண்மோ
ஒன்னலன் தூதன் சோரி உயிரொடு குடித்தற்கு உற்றாம்
நின் அருள் ஆணை நாடி நெஞ்சகம் புழுங்கி அஞ்சி
இன்னது ஓர் பொழுதும் தாழ்த்தேம் இனி அது புரிதும்                                        என்றார்.
14
   
4416.
என்றனர் வணக்கம் செய்ய இனிது என உவகை பூத்துக்
கன்றிய அவுணர் தங்கள் காவலன் விடுப்ப அம் கண்
சென்றனர் பத்து நூற்றுத் திறல் உடை மொய்ம்பர்                                    முன்னம்
நின்றிடு வீரவாகு நிலைமையை உரைக்கல் உற்றாம்.
15
   
4417.
வேரம் அது எறிந்து அவை வீட்டி நின்று உளான்
சூர் உறை நகர் வளம் தொலைச்சிச் சூழுநர்
சேர் உறும் இருக்கையும் சிதைப்பன் இன்று எனா
ஓர் உறு புந்தியில் உன்னினான் அரோ.
16
   
4418.
மறிப் பிணை முதலிய மான்கள் புள் இனம்
சிறப்பு உறு தண்டலை மணியில் செம் பொனின்
குறிப்பினர் குயிற்று செய் குன்றம் யாவையும்
பறித்தனன் திசை தொறும் பரவ வீசினான்.
17
   
4419.
வரை வயிறு உயிர்த்திடு மாசு இல் பல்பகை
அரதன நிரைகளின் அணிய செம் பொனின்
மரபினில் இயற்றிய வரம்பு இல் தெற்றிகள்
விரை வொடு தொட்டனன் எடுத்து வீசினான்.
18
   
4420.
முடிவகல் பேழையின் மூட்டு நீக்கியே
அடியுறு கொள்கலம் அவற்றைச் சாய்த்து எனப்
படி உறு மண்டபம் பலவும் தொட்டு எடா
இடி புரை ஓதையான் யாண்டும் வீசினான்.
19
   
4421.
மலர் அயன் மிசை உறு மாயல் புல்லுவான்
நிலமகள் கைகளை நீட்டி என்ன வான்
உலகெலாம் இகந்து மேல் ஓங்கு கோபுரம்
பல பல பறித்தனன் பாங்கர் ஓச்சினான்.
20
   
4422.
மூள் உறும் எரி சிகை முடித்துத் தானவர்
கேள் ஒடு தமித் தமி கெழுமி உற்று என
வாள் உறு மா மணி வயங்கு தூபிகைச்
சூளிகை பலபல தொட்டு வீசினான்.
21
   
4423.
கற்றிடும் விஞ்சையின் கழகம் பல்கடைத்
தெற்றிகள் வேதிகை சிறந்த சாலைகள்
துற்றிடு பழுமரச் சோலை வாவிகள்
மற்றுள பிறவொடும் மட்டித்தான் அரோ.
22
   
4424.
கந்துகம் வியன் நிரை கரிகள் தேர்த் தொகை
பந்தியில் சாலையில் பயின்று நின்றன
அந்தம் இன்று ஆயின அள்ளி அள்ளியே
உந்தினன் திசை தொறும் உரற்றி வீழவே.
23
   
4425.
நில வரை சூழ் தரு நேமி வெற்பு என
மலி தரு செம் மணி வகையில் பண்ணிய
பல வகை இயந்திரப் பதண இஞ்சிகள்
ஒலி கழல் காலினான் உதைத்து வீட்டினான்.
24
   
4426.
பூழியம் பொன் புயப் புனிதன் வெய்ய சூர்
வாழ் உறு கோ நகர் வளத்தை இன்னணம்
ஊழியின் மருத்து என உலாவி அட்டபின்
சூழ் உறு கிடங்கருந் தூர்த்திட்டான் அரோ.
25
   
4427.
அறம் தலை நின்றிடா அரசன் கோயில் நின்று
எறிந்திடு சிகரிகள் இலங்கு சூளிகை
நிறைந்திடு மண்டபம் நெருங்கு காமர் காச்
செறிந்தன பிறவொடு சென்று சேண் எலாம்.
26
   
4428.
உளர்ந்திடும் வரி அளி உலாவு தொங்கலான்
வளர்ந்திடும் பாணியான் மன்னன் செல்வமாய்க்
களைந்தெறிகின்றன கணிப்பு இலாதவும்
கிளர்ந்திடும் நெடு முகில் கிழித்துச் சென்றவே.
27
   
4429.
சூர் எனும் அவுணர் கோன் படைத்த தொல் வளம்
சேரிய மிசை வரத் தெரிந்து வான் இடைச்
சார் உறு கடவுளர் தம் உள் ஏங்கியே
ஏர் இயல் தொகை பிரிந்து இரியல் போயினார்.
28
   
4430.
ஊன் இவர் குருதி வேல் ஒருவன் ஓச்சிய
தானவர் கோன் வளம் தகைந்து விண்ணவர்
மேல் நிகழ் பதங்களை வீட்டி ஏகியே
வானதி தன்னையும் வல்லை தூர்த்தவே.
29
   
4431.
வெறித்திடு தார் புய விடலை நொய்தினில்
பறித்து எறி அவுணர் கோன் பல வளங்களும்
எறித்திடு தீம் கதிர் எல்லை வேந்தனை
மறைத்தன பணி பல மயங்கிச் சூழ்ந்த போல்.
30
   
4432.
சோலையின் மண்டபத் தொகையில் சூளிகைப்
பாலினில் சிகரியில் பயின்ற புள் எலாம்
மேல் உறு செலவினில் விரைவின் ஏகியே
மால் அயன் புள்ளொடு மருவி வைகிய.
31
   
4433.
செம் சுடர்ச் சூளிகை சிகரம் ஆதிகள்
விஞ்சிய மிசைவர விழித்துத் தாள் இலோன்
எஞ்சிய உடலமும் இறும் கொல் இன்று எனா
அஞ்சினன் அழுங்கினன் அலரி பாகனே.
32
   
4434.
வள் உறு வசி கெழு வயிர மா முடி
உள்ள பல் சூளிகை உம்பர் செல்வன
பிள்ளைகள் எறிந்திடப் பிறங்கு பம்பரம்
பொள் என ஈண்டி வாள் போவ போன்றவே.
33
   
4435.
மீப் படு வியன் முகில் கிழித்து விண் மிசை
மாப் பெரும் சிகரிகள் வல்லை செல்வன
நீப்ப அரும் ககன மான் நெடும் கதுப்பினில்
சீப்பிடு கின்றது ஓர் செய்கை போலும் ஆல்.
34
   
4436.
பயன் உறு பழுமரப் பைம் பொன் காமர் கா
வயன் நெறி தந்திட அகல் விண் செல்வன
நயன் அறும் அவுணன் ஊர் நணிய கற்பகம்
வியன் உலகு இருந்திட மீள்வ போன்றவே.
35
   
4437.
ஐயன் அது ஒற்றுவான் அள்ளி வீசிய
செய்ய பல் பொருள்களும் செறிந்து சேண் எலாம்
கொய் உளை வயப்பரிக் கொடிஞ்சித் தேர் மிசை
வெய்யவன் செலவினை விலக்கு கின்றவே.
36
   
4438.
திரு மிகு சூளிகை சிகரம் ஆதிகள்
நிரல் பட ஏகியே நிரந்த பல் வகைப்
பருமணி எரிசுடர் பரப்பி வான் படர்
இரவி தன் கதிரையும் இகலி வென்றவே.
37
   
4439.
மின் அவிர் சிகரி பொன் வேரம் ஆதிகள்
என்னவும் வான் படர்ந்து எழாலின் விஞ்சையர்
உன் உறும் ஓங்கலும் உவண வைப்பு எனும்
பொன் எயில் வட்டமும் பூழி செய்தவே.
38
   
4440.
குன்றொடு சூளிகை கோபுரம் பிற
ஒன்றுடன் ஒன்று பட்டு உரிஞ்சி ஆய் இடைத்
துன்றிய மணி திசை தோறும் சிந்துவ
மின் திகழ் தாரகை விளிந்து வீழ்வ போல்.
39
   
4441.
பொற்றைகள் சிகர கோபுரங்கள் தத்தமில்
எற்று உழிப் புகை என எழுந்து பூழிகள்
சுற்றிய புலிங்கமும் தோன்று கின்றன
வெற்ற வெம் புயல்களும் மின்னும் போலவே.
40
   
4442.
ஏழ் உயர் களிறு அனான் எறிந்த யாவையும்
சூழ் உற வான் இடைத் துவன்ற எற்றலில்
கேழ் உறு நுண் துகள் கெழுமிச் சிந்துவ
பூழியின் நெடு மழை பொழியும் தன்மை போல்.
41
   
4443.
ஆரியன் ஓச்சிய அணிகொள் மண்டபம்
வேரம் ஒடு அகன் பொழில் பிறவும் விண் உறீஇத்
தாரகை முதல் சுடர்த் தனுக்கள் சார்ந்திடச்
சோரியும் இடை இடை துளித்தது என்பவே.
42
   
4444.
புந்தி இலான் மகம் புகுந்த தீமையால்
இந்திரன் ஆதியோர் யாரும் சூரனால்
நொந்தனர் அவன் நகர் வளமும் நோவுற
அந்தரத்து அவரையும் அலக்கண் செய்தவே.
43
   
4445.
வெற்பு உறழ் மொய்ம்பினான் விடுத்த சூளிகை
பல பல பொருந்தலும் பட்ட வன்னி போய்
எற்படு கதிர் உடை இரவி பச்சை மாப்
பொற்புறு கொய் உளை பூழி செய்ததே.
44
   
4446.
பொன் அவிர் சிகர கோபுரங்கள் ஆதிய
துன்னியது ஆக்கலில் தோன்றித் தீப்பொறி
இன் உயிர் வழங்கிய எல்லை எங்கணும்
வன்னி பெய் மழை என மயங்கி வீழ்பவே.
45
   
4447.
வழு உறும் அவுணர் கோன் வளங்கள் யாவையும்
கெழுதகு விசும்பினைக் கிழித்துச் சேறலின்
எழிலிகள் வயிறு உடைத்து இரங்கி ஆற்றலாது
அழுது என உலகெலாம் அறல் சிந்து உற்றவே.
46
   
4448
ஏசு இலா அறிவன் விட்ட இன்ன பல் வெறுக்கை யாவும்
மாசு அகல் விசும்பின் ஏகி மதி முடி அருள் பெற்று                                       உள்ள
கோசிகன் துறக்கம் உய்த்த கொற்றவன் தவறி என்ன
ஆசு உற மீண்டு ஞாலத்து அகிலமும் வீழ்ந்த அன்றே.
47
   
4449.
படிதனில் திசையின் பாலில் பௌவத்தில் பழுவம் தன்னில்
தடவரை தன்னில் இன்ன தகையன பிறவில் சூரன்
உடைய பல் வளங்கள் எல்லாம் உரற்றி வீழ ஆண்டும்
இடை தரும் உயிரின் பொம்மல் வெருவி வீழ்ந்து இரிதல்                                          உற்ற.
48
   
4450.
அலைந்தது பரிதி ஓங்கல் அதிர்ந்தது மேருச் சையம்
குலைந்தது சூழும் குன்றம் குலுங்கிய அசலம் ஏழும்
கலைந்தது நாகர் வைப்பும் கலங்கிய கடலும் பாரும்
உலைந்தன உயிர்கண் முற்றும் ஓடின திசையின் யானை.
49
   
4451.
தண்படு தொடலை மார்பன் தான் எறிந்த வற்றில்                                     பல்வேறு
ஒண்புவி முழுதும் சிந்திற்று ஒழிந்தன உலப்பிலாத
எண் பதினாயிரப் பேர் யோசனை எல்லைத்து ஆகிக்
கண் படு சூரன் ஊரில் கல் என வீழ்ந்த மாதோ.
50
   
4452.
முடிந்திடல் அரிய சூரன் மொய் வளம் அவன் ஊர்                                        முற்றும்
தடிந்து எறி உரும் ஏறு என்னத் தணப்பற வீழ்தலோடும்
இடிந்தன மாட வீதி யாவையும் கடிகா இற்ற
பொடிந்தன சிகரி ஆதி புரிசைகள் மறிந்து மாண்ட.
51
   
4453.
மண்டபம் சிகரி வேரம் அணி மதில் மாட கூடம்
எண் தகு பொதியின் முற்றும் இடி பட எழு பொன் பூழி
விண் தொடு திசை பார் யாண்டும் வெறுக்கையின் வடிவம்                                       ஆக்கி
அண்டர் தம் உலகு ஈது என்றே அறிகுறா வகை                                       செய்தன்றே.
52
   
4454.
புடை அகல் பொன் செய் மூதூர் பொள் எனத் தகர்ந்து                                            வீழ
மிடை தரு வீதிமுற்றும் ஏயின சனங்கள் பூசல்
கடை வரு நாளது எல்லைக் ககன மூது அண்ட கூடம்
உடைதலும் முடியும் ஆவி அரற்றுமாறு ஒத்தது அன்றே.
53
   
4455.
* நாகம் உந்து நறு நிழல் மாதவி
நாகம் உந்தும் நறு நிழல் பொன் கணி
சேகரம் பல சிந்திடு காழ் உடைச்
சேகரம் பலவோடு சிதைந்தவே.
54
   
4456.
கோடரம் குலம் உற்றிட வான் தொடும்
கோடரம் குலம் உற்றிடு தண்டலைக்
கோடரம் குலம் கோலம் செய் பொன் வரைக்
கோடரம் குலம் உற்று இறை கொண்டவே.
55
   
4457.
ஓடும் வாவியின் மீன் இனம் ஓங்கு புள்
ஓடும் வாவி விண் உற்றிட வீதியின்
மாட மாலை வரிசையின் மல்கிய
மாட மாலை மறிந்து இடிபட்டதே.
56
   
4458.
அண்டர் அண்டரும் அந் நகர் மாண்டன
அண்டர் அண்டம் அளவிடு சூளிகை
மண்டபம் மதில் மாடம் தரித்து அயர்
மண்டபம் மதில் மாதவம் ஆவதே.
57
   
4459.
பூவை அன்ன மணி மயில் பொற்பு உறு
பூவை அன்ன மணி மயில் பொற்பு உறா
வாவி ஓடை வண்டானம் அழிந்திட
வாவி ஓடை வண்டானம் அழியும் ஆல்.
58
   
4460.
மொய் உடைத்து அறி மோதித் தளைபரீஇ
மை உடைப் பெரு மால் கரி சோரி நீர்
மெய்யிடத்து உக விண் முகில் அச்சு உறக்
கை எடுத்துக் கதறி உடைந்தவே.
59
   
4461.
ஈடு சான்ற வெருத்தம் உரிந்திட
நீடு பூ நுதல் நெக்கு உறக் கிம்புரிக்
கோடு சிந்தக் குருதி உகுத்தரோ
ஓடி வீழ்வ உவாக்கள் அரற்றியே.
60
   
4462.
கார் கொள் சிந்துரம் காயத்து இடை இடைச்
சோரி சோர் தரத் தோன்றுவ ஈற்றினின்
மேரு ஆதி விலக்கலை மெய்க் கனல்
சாரும் வெம் புகை தன்னொடும் சூழ்ந்த போல்.
61
   
4463.
கொடிகள் இற்ற கொஞ்சி முரிந்தன
இடை கொள் பீடிகை எல்லைகள் நெக்கன
அடி கொள் சில்லியும் ஆரும் சிதைந்தன
பொடியது ஆகிப் புரண்டன தேர்களே.
62
   
4464.
பந்தி தோறும் பராவிய ஐங்கதிக்
கந்துகங்கள் கலங்கி நெரிந்திட
நொந்து மேனி நொறில் வரு செம் புனல்
சிந்தி ஓடச் சிதறிய திக்கு எலாம்.
63
   
4465.
சிதவல் கொண்டிடு செம் மயிர்க் கொய்யுளை
மதுகை வெம்பரி வாய்களின் வீழ்தரு
முதிர வாரி ஒலி கடல் புக்கதால்
இது கொலோ வடவைக் கனல் என்னவே.
64
   
4466.
காள வெம்கரிக் காலின் வயப்பரித்
தாளின் ஊடு அகப்பட்டு தரை புகா
மூளை சிந்த முழுது உடல் பூழியாய்
மாளு கின்றனர் மா நகரோர் சிலர்.
65
   
4467.
ஆளி மொய்ம்பு உடை அண்ணல் முன் வீசின
நீளு மாநகர் ஞெள்ளலின் வீழ்தலும்
தோள் இழந்து சுவல் முரிந்து ஒய் எனத்
தாள் இழந்து தரங்கம் உற்றார் சிலர்.
66
   
4468.
பொற்றை அன்ன பொலன் மணி மாளிகை
இற்று வீழ்தலும் என் இது என்று எழீஇ
வெற்ற வெள்ளிடை மேவுதல் முன்னியே
முற்றம் வந்திடு முன் மறிந்தார் சிலர்.
67
   
4469.
ஊடு மைந்தரும் ஒண் தொடி மாதரும்
மாட மோடு மறிந்தனர் தம் உடல்
வீடி விண் மிசை வேற்று உரு எய்தியே
கூடியே வழிக் கொண்டனர் ஓர் சிலர்.
68
   
4470.
உவமன் இல்லவன் ஓச்சின எங்கணும்
அவதி இன்றிப் பொழிய அவை தெரீஇத்
தவறிலாது செய் தாழ் வரை கீண்டு எடாக்
கவிகை யாத்தமைக் காத்து நிற்பார் சிலர்.
69
   
4471.
விறல் கொள் வாகு விடுத்தன கல் அக
உறைப்பின் வீழ ஒதுங்கு இடம் இன்மை இல்
சிறக்கு மா நகர்ச் செம் தரைக் கொண்ட கீழ்
அறைக்கு உளேபுக்கு அல மருவார் சிலர்.
70
   
4472.
மாதர் தங்களை மக்களை அன்னையைத்
தாதை மாரைத் தமது கைப் பற்றியே
ஏதின் மாடம் இகந்து உகச் சோரி நீர்
வீதி போந்து வெருவி நிற்பார் சிலர்.
71
   
4473.
கருவி வானினும் கண் அகன் திக்கினும்
தரணி தன்னினும் தாவிலன் வீசிய
திரு வளங்கள் செறிந்தன வீழ்தலும்
வெருவிப் போய்க் கடல் வீழ்ந்து ஒளிப்பார் சிலர்.
72
   
4474.
கிழிந்த சென்னியில் கேழ் படு செம்புனல்
கழிந்து தோன்றவும் கண்டனர் ஐ உறாப்
பொழிந்து மெய்ப்புறம் போர்த்தலும் தேற்றியே
அழிந்து இரங்கு உற ஆகுலிப்பார் சிலர்.
73
   
4475.
ஆடல் மொய்ம்பினன் ஆர்த்து முன் வீசிய
மாட வீதி வளநகர் எங்கணும்
நீட வீழ்தலும் நிற்றலை அஞ்சியே
ஓடி ஊறு உற்று உயிர் துறப்பார் சிலர்.
74
   
4476.
திங்கள் சூடி திருமகன் விட்டன
எங்கும் வீழும் இறப்பினை நோக்கியே
அங்கி வெம் கணை தொட்டு அறுத்து அன்னவை
தங்கள் ஆர் உயிர் தாங்கி நிற்பார் சிலர்.
75
   
4477.
மையல் மாதரும் மைந்தரும் ஆவியும்
பொய் இல் புந்தியும் ஒன்றிப் புணர்தலும்
செய்ய மாடம் சிகரமொடே விழ
மெய்யும் ஒன்றி விளிந்திடுவார் சிலர்.
76
   
4478.
அந்தண் மாடத்து அறிவன் விடுத்தன
வந்து வீழ மறிந்து உரும் மேறு எனச்
சிந்தவே உகு செம் பொறி மெய்ப்பட
வெந்து சின்னம் விரவுறுவார் சிலர்.
77
   
4479.
வரம் கொள் வீர மகேந்திரத்து இன்னணம்
தரங்கம் எய்திச் சனங்கள் எல்லாம் இரீஇ
உரங்கள் சிந்தி அழிந்து உழி ஒல் என
இரங்கும் ஓதை எழுகடல் உண்டதே.
78
   
4480.
மன்றின் இற்கரி பொய்த்து மனு நெறி
கொன்று வாழும் கொடியர் தம் இல் எனத்
துன்றுமாடத் தொகை வெள் இடைய தாய்ப்
பொன்றி வீழ்ந்தன புல் என ஆகியே.
79
   
4481.
நீறு பட்ட நெடு நகர் எங்கணும்
ஆறு பட்ட உயிர்கள் தம் சோரி நீர்
ஆறு பட்டிட அங்கு அவை யோடு அளாய்ச்
சேறு பட்டன செக்கர் விண் போலவே.
80
   
4482.
மலிந்த சீர்த்தி மகேந்திர மாபுரம்
அலைந்து தொல்லைத் திரு முழுது அற்றதால்
மெலிந்திடும் படி விண்ணவர் தம் எலாம்
நலிந்தவன் வளம் நன்று உறுமே கொலாம்.
81