வச்சிரவாகு வதைப் படலம்
 
4516.
கூடி ஆர் அமர் இயற்றினார் தம் வலி குறைந்து
வீடி ஆவி போய் விளிதலும் அன்னது விரைவின்
நேடி விண் இடை நணுகிய தூதுவர் நில்லா
தோடி ஆள் உடை அவுணர் கோன் முன்பு சென்று                                   உரைப்பார்.
1
   
4517.
துன்றும் ஆயிர மொய்ம்புடை நின் படைத் தொகைஞர்
சென்று சில் அமர் புரிந்தனர் அவன் அது தெரியா
ஒன்று ஒர் பாதவம் பறித்தனன் புடைத்தலும் ஒருங்கே
பொன்றி வீழ்ந்தனர் புகுந்தவாறு ஈதெனப் புகன்றார்.
2
   
4518.
புகன்ற வேலையின் அவுணர் கோன் புரையிலோன்                                          வன்மை
புகன்ற வேலையின் வடவையார் அழல் எனப் பொங்கி
அகன்றனன் பெருமிதத் துடன் ஆணையும் திறலும்
அகன்றனன் பெரும் துயர் கொளீஇ இனையன அறைவான்.
3
   
4519.
உமை அளித்திடு சிறுமகன் தூதுவன் ஒருவன்
எமது முன்னம் வந்து அவமதி செய்தனன் ஏகி
அமரில் யாரையும் அட்டு நின்று இன்னமும் அகலான்
நமது கொற்றமும் நன்று நன்றால் என நகைத்தான்.
4
   
4520.
முச் சகம் புகழ் அவுணர் கோன் முனிவினை முன்னி
அச் செனக் கிளர்ந்து எழுந்து சென்று அவன் அடி                                       வணங்கி
மெய்ச் சிரங்கள் ஓரை இரு திறல் உடை விறல் சேர்
வச்சிரத் திரு மொய்ம்புடைக் காதலன் வகுப்பான்.
5
   
4521.
நொய்ய தூதுவன் பொருட்டினால் இத்திறம் நுவறல்
ஐய கேட்க நிற்க இயலுமே இறை இவண் அமர்தி
மொய்யில் யான் சென்று மற்று அவன் பெரு முரண்                                    முருக்கிக்
கை யகப்படுத்து உய்ப்பனால் அன்னது காண்டி.
6
   
4522.
என்ன லோடும் இறப்பு எதிர் உற்றிடா
மன்னன் மைந்தனை நோக்கி மகிழ் உறா
அன்ன தன்மையை ஆற்றுதி நீ எனப்
பன்னி யேகும் படி பணித்தான் அரோ.
7
   
4523.
விடை புரிந்திட மெய்வழித் தாதை தன்
அடி வணங்கி அகன்று மன் கோயிலில்
புடை இருந்தன போர்ப் படை சாலையின்
இடை புகுந்தனன் யாரும் வழுத்தவே.
8
   
4524.
அட்டல் இன்றி அமர் தரு சாலிகை
இட்டு மார்பின் இறுக்கி வயத்தகு
பட்டி கைக் கலன் பாலத்து உறுத்தியே
புட்டில் அங்குலி பூண்டு பொருக்கு என.
9
   
4525.
ஆணி கொண்ட அயில் கணை பெய்த பொன்
தூணி கொண்டு பின் தும்பை மிலைச்சியே
நாணி கொண்டு நலம் தரு கார் முகம்
பாணி கொண்டு படை பிற ஏந்தியே.
10
   
4526.
கொற்ற மார் அமர்க் கோலங்கள் உள்ளன
முற்றவே கொண்டு மூரிவில் வெம் சமர்
கற்ற காளை கதும் என நோக்கியே
சுற்று கம்மியர்க்கு இன்னன சொல்லுவான்.
11
   
4527.
மிக்க நம் படை வெள்ளத்தில் ஓர் சில
தொக்க பூசல் தொழிலினை முற்றிய
இக் கணம் தருவீர் இவண் என்றலும்
தக்கதே எனத் தாழ்ந்து அவர் போயினார்.
12
   
4528.
ஆங்கு நின்றிடும் ஏவலர் அப்பணி
தாங்கி ஏகத் தகுவர் தம் கோமகன்
நீங்கல் இன்று தன் நீழலின் வந்திடும்
பாங்கர் யாரையும் நோக்கிப் பகருவான்.
13
   
4529.
குமர வேள் விடு கோல் தொழில் தூதனைச்
சமரில் வென்று ஒரு தாம்பில் தளை புரீஇ
இமை ஒடுங்கு முன் எந்தை முன் உய்க்குவன்
அமைதிர் போருக்கு அனைவிரும் என்றனன்.
14
   
4530.
பாலன் மற்று இவை பன்னலும் நன்கு எனா
ஏலுகின்ற இளைஞரும் மள்ளரும்
மேலை வெம் சமர் செய்ய விரைந்து போர்க்
கோலம் எய்திக் குழீஇயினர் கொட்பு உற.
15
   
4531.
தாறு கொண்டவன் தன் குறிப்பில் செலும்
நூறு நூறு நொறில் பரி மான் பெறீஇ
வீறு பண் அமை தேர் ஒன்றின் வெய்து என
வேறினான் மொய்ம்பு இருபது கொண்டு உளான்.
16
   
4532.
தந்திரத்துத் தலைவர் தம் மைந்தரும்
மந்திரத்து மதிஞர் தம் மைந்தரும்
சுந்தரத்துத் தொடர் பினில் சுற்று உறா
எந்திரப் பெரும் தேர்களில் ஏறினார்.
17
   
4533.
ஆன வேலை அரசன் சுதன் விடப்
போன கம்மியர் போர்வினை கூறியே
யானை மேல் கொண்டு இரும் பணை எற்றலும்
சேனை தம் உள் சில திரண்டு உற்றவே.
18
   
4534.
ஒருங்கு தாம் பல ஓடலின் அன்னவை
பரம் கொளற்கு அரிதாகிப் படிமகள்
புரம் கிழிந்திடு புண் கொண்டு அரற்றல் போல்
இரங்கும் ஓதை கொண்டு ஏகுவ தேர்களே.
19
   
4535.
கருவி வானம் கடல் உண்டு செல் உறும்
வரை களாம் என வந்து தம் மேல் உறீஇ
உரும் இனத்தை உகுத்து ஒலி கேட்டலும்
வெருவி வீழ விரைவன வேழமே.
20
   
4536.
கிட்டி நாடு நயனமும் கேடு செய்
தொட்டலார் தம் உளமும் சுழன்றிட
எட்டு மாதிரத்து எல்லையும் சாரிகை
வட்டம் ஆகி வருவன வாசியே.
21
   
4537.
ஆடல் வேல் கதை ஆழி அலப்படை
பாடு சேர்ந்த பலகை ஒள் வாள் சிலை
நீடு சூலம் நெடு மழு ஆதியாக்
கூடு பல் படை கொண்டிடும் கையினார்.
22
   
4538.
இடித்த சொல்லர் இமையவர் போர் பல
முடித்த மொய்ம்பர் முரணிய பல் படை
வடித்த கற்பினர் மால் வரை ஆனவை
படித் தலத்தில் படர்ந்து அன்ன காட்சியார்.
23
   
4539.
விசும்பின் மாலை மிலைச்சிய குஞ்சியர்
பசும் பொன் வீர மெய்ப் பட்டிகை நெற்றியர்
நிசும்பர் அன்னது ஒர் நேரலர் சோரியின்
அசும்பு அறாத அகன் பில வாயினார்.
24
   
4540.
தீ மடங்கல் திறலினர் தென் புலக்
கோ மடங்கலின் கொள்கையர் தம்கிளை
தாம் அடங்கத் தறி பிளந்து ஆர்த்து எழு
மா மடங்கல் தனைப் பொரும் வன்மையார்.
25
   
4541.
ஏகும் வெம் சமர்க்கு என்றலும் பூண் பரீஇ
மாகம் அஞ்ச வளர்ந்து எழு தோளினார்
மோகம் இல்லவர் மொய்ம்பினின் மேலவர்
ஆகும் வீரர் அளப்பிலர் எய்தினார்.
26
   
4542.
ஐந்து நூறு எனும் வெள்ளம் அழுங்கு தேர்
தந்தியின் குழுத் தானும் அனையதே
உந்து மாக்கள் ஒர் ஆயிரம் வெள்ளம் ஆம்
பந்த மிக்க பதாதி இரட்டியே.
27
   
4543.
இத் தொகைப் படும் ஈர் இரு தானையும்
மைத் திரைக் கடல் வாரியின் ஆர்ப்பு உறீஇப்
பத்து இரட்டி படர் புயத்து அண்ணலைத்
தத்தமில் கலந்து ஒன்றித் தழீஇயின.
28
   
4544.
துடி வலம்புரி துந்துபி சச்சரி
கடி கொள் மொந்தை கரடிகை தண்ணுமை
இடி கொள் பேரி இரலைகள் ஆதி ஆம்
முடிவில் ஆவிய முற்று முழங்கிய.
29
   
4545.
இற்ற எல்லையின் ஈர் இரு தானையும்
நெற்றியே கடை நீடு அயலில் செல
மற்று உளார்களும் வந்திட வச்சிரப்
பொன் தடம் புயன் பொள் என ஏகினான்.
30
   
4546.
வல் இயக் கடுமான் பொரும் ஆனவர்
செல் இயக்கமும் செல்லினை மாறு கொள்
சொல் இயக்கமும் துண் எனத் தொக்கு எழு
பல் இயக் கடல் ஆர்ப்பும் பரந்தவே.
31
   
4547.
ஊழி மால் படை ஒல் எனவே வேய் எழப்
பூழி ஈண்டி விண் பொள் என மூடிய
வேழ மால் வரை வீழ்தரு தான நீர்
ஆழி என்ன அகன் புவி கொள்ளவே.
32
   
4548.
திகந்தம் எட்டும் திரு நிழல் ஓச்சியே
உகந்த தேர்களின் ஒண் கொடி ஆடுவ
குகன் விடுத்திடு கொற்றவன் ஆற்றல் கண்டு
அகன் சிரங்கள் அசைப்பன போன்றவே.
33
   
4549.
ஆகும் எல்லை அவுணர் மன் தேர் மிசைப்
பேய்கள் சூழ்ந்து பிணங்கி மலைந்தன
காகம் யாவும் கழுகும் வெம் சேனமும்
கூகை யோடு குழீஇயிரங் குற்றவே.
34
   
4550.
மடித்த வாய் உடை வச்சிர மொய்ம்பினான்
பிடித்த கையில் பெரும் சிலை வீழ்ந்தது
தொடுத்த வெந்நுறு தூணியும் இற்றது ஆல்
துடித்த வால் இடக் கண்களும் தோள்களும்.
35
   
4551.
அண்ணல் மைந்தனது ஆழிஅம் தேர் மிசைக்
கண்ணகன் கொடி கை அற வீழ்ந்தன
விண்ணின் ஏறு விசும்பின்றி ஆர்ப்பன
எண்ணில் தீக்குறி இவ்வகை உற்றவே.
36
   
4552.
உற்ற காலவை உள்ளுறக் கொள்கிலன்
செற்ற மேல் கொண்டு சென்னியோர் பத்து உளான்
மற்றோர் தூணியும் வார் சிலையும் கொளாப்
பொன் தடம் கை புறந்தனில் சேர்த்தினான்.
37
   
4553.
மொய் கொள் வச்சிர மொய்ம்பன் இத்தன்மையால்
வெய்ய தன் படை வெள்ள மொடு ஏகியே
செய்ய வேல் உடைச் சேவகன் ஏவல் செய்
ஐயன் நின்ற அடுகளம் எய்தினான்.
38
   
4554.
வண்டு உலாம் தொடை வச்சிர வாகுதன்
தண்டமோடு சமர்க் களம் சேர்தலும்
அண்டர் நாயகன் தூதுவன் அன்னவை
கண்டு நின்று கழறுதல் மேயினான்.
39
   
4555.
இந்திர ஞால வையத்து இறைவனே அல்லன் மற்றை
மைந்தரில் ஒருவன் ஆகும் வருபவன் வருவான் தன்னை
முந்திய தானையோடு முரண் அற முருக்கி வீட்டி
அந்தி வான் புகுமுன் எந்தை அடிதொழப் போவன்                                        என்றான்.
40
   
4556.
எறிதிரை அளக்கர் என்ன ஈண்டு உறும் அனிகம் யாவும்
முறை முறை சாடி வந்த முதல்வனை முடித்து மாலை
உறுதல் முன் விசயமோடும் ஒய் என மீளேன் என்னின்
அறுமுக ஐயன் தூதன் ஆவனோ அடியன் என்றான்.
41
   
4557.
எண் திசை புகழும் வீரன் இனையன விளம்பிச் செவ்வேள்
புண்டரீகத்துப் பொன் தாள் புந்தியால் இறைஞ்சிப் போற்றி
மண்டு அமர் முயன்று நேமி மறிதர வரைகள் கீற
அண்டமும் திசையும் வானும் குலுங்கத் தோள் கொட்டி                                       ஆர்த்தான்.
42
   
4558.
ஆர்த்திடும் ஓதை கேளா அமர் குறித்து எழுதேர்                                       மேலோர்
கார்த்திடு தந்தி மேலோர் கவன மாப் புரவி மேலோர்
பேர்த்திடு நிலத்தின் மேலோர் பிறங்கு சீர் அவுணர்                                       யாரும்
வேர்த்தனர் திரிந்து சிந்தை வெருவினர் விளம்புகின்றார்.
43
   
4559.
வாழிய உலகம் யாவும் மன் உயிர்த் தொகையு மாய
ஊழியில் தனி நின்று ஆர்க்கும் உருத்திரன் ஆர்ப்போ                                       அன்றேல்
ஆழிகட்கு அரசன் ஆர்ப்போ அண்டங்கள் நெக்க                                       ஆர்ப்போ
ஏழ் கடல் உடைந்த ஆர்ப்போ இத்திறம் ஆர்ப்பது                                       என்றார்.
44
   
4560.
செரு வலி கொண்ட சீற்றச் செம் கணான் ஆர்க்கும் ஓதை
மரு மலர்த் தொடையல் ஆக வச்சிர வாகு என்போன்
இருபது செவியின் ஊடும் இரவியும் புழைகள் புக்க
உரும் எனச் சேற லோடும் உளம் பனித்து உரைக்கல்                                      உற்றான்.
45
   
4561.
ஈர் எழு திறத்த வான உலகினுள் இன்று காறிப்
பேர் ஒலி கேட்டது இன்றால் பிறந்தது இத் துழனியாதோ
தேருதிர் என்று பாங்கர் உழையரில் செப்பத் திண் தேர்ச்
சாரதி விசயன் என்பான் தாழ்ந்து இவை புகலல் உற்றான்.
46
   
4562.
தெற்று என உணர்தி மான் தேர் செலுத்திய வலவன்                                       என்றே
மற்று எனது உரையை எள்ளல் வல்லை மேல் காண்டி                                       எந்தை
அற்றம் இல் படையினோடும் அமர் செய வருதல் நாடி
ஒற்று என நின்றோன் போர் வேட்டு ஆர்த்திடும் ஒலி ஈது                                       என்றான்.
47
   
4563.
தூதுவன் ஆர்ப்பிது என்று சொல்லும் முன் உருத்துக்                                     கண்கள்
மீது எரி பொங்க நக்கு வெய்து உயிர்த்து உரப்பியான்                                     போய்
ஈது ஒரு கணத்தின் அன்னான் இகல் முரண் அழித்துப்                                     பற்றித்
தாதை முன் உய்ப்பன் காண்டி சரதம் இத் தன்மை                                     என்றான்.
48
   
4564.
என்று இவை உரைத்துப் போதும் எல்லையின் முன்னம்                                         ஆகச்
சென்றிடும் அவுண வீரர் சேனையை வகுத்துச் சீறித்
தன் துணைத் தாளும் தோளும் தடக்கையும் அனிகம் ஆக
நின்றது ஓர் வீரன் தன்னை நேமியின் சுற்றி ஆர்த்தார்.
49
   
4565.
கைதனில் இருந்த செம் பொன் கார் முகம் குனித்து வெம்                                         கோல்
எய்தனர் முசலம் நாஞ்சில் எறிந்தனர் தண்டம் சூலம்
பெய்தனர் கணிச்சி விட்டார் பிண்டி பாலங்கள் தூர்த்தார்
நெய்தவழ் அயில் வேல் தொட்டார் நேமிகள் உருட்டு                                         கின்றார்.
50
   
4566.
தஞ்செனக் கொடுமை செய் தானவப் படைஞர்கள்
வெஞ்சினத் தன்மையால் விடு படைக் கலம் எலாம்
கஞ்சனைச் சிறை செயும் காரணன் தூதுவன்
செம் சுடர்ப் படிவ மேல் செவ்வண் வந்து உற்றவே.
51
   
4567.
துய்யன் மேல் வெம் படைத் தொகுதி வந்து அடைதலும்
மெய் எலாம் உற்ற தான் மிக்க சோரிப் புனல்
மையல் தீர் காலையின் வந்து எழும் பரிதி பால்
பையவே செய்ய தண் கதிர் வரும் பான்மை போல்.
52
   
4568.
ஆனது ஓர் காலை எம் ஐயன் வெம் சினம் உறா
மான் இனம் பல பல மருவியே செறி உழி
மேனி வந்து ஏகி ஓர் வேங்கை பாய்ந்து அடுதல் போல்
தானவப் படையினைத் தாக்குதல் மேயினான்.
53
   
4569.
ஆயிரம் ஆயிரம் அவதி சேர் அவுணர் தம்
சேய தண் குஞ்சியைச் செம் கையால் பற்றியே
பாயிரும் தரையினும் பாற்படு கிரியினும்
ஏய் எனும் அளவை முன் எற்றியே எறியும் ஆல்.
54
   
4570.
எய்யும் வெம் படைகளும் எறியும் வெம் படைகளும்
கையினில் பற்றியே கனல் எழப் பிசை தரு
மெய் எனப் பதை பதைத்து ஓலம் இட்டு இருகச்
செய்ய பொன் தாள்களால் சிலவரைத் தேய்த்திடும்.
55
   
4571.
மத்த மால் கரிகளும் வாம்பரித் தொகுதியும்
சித்திரம் திகழ் மணித் தேர்களும் அவுணர்தம்
கொத்தொடே வீழ்தரக் கோலம் ஆல் அடி தனக்கு
ஒத்த தன் தாள்களால் உதை புரிந்து உலவுறும்.
56
   
4572.
கிடைத்திடும் சிலவரைக் கீண்டனன் நீண்ட மெய்
துடித்திடக் கழல்களால் துகைத்தனன் சிலவரை
அடித்தனன் சிலவரை அரைத்தனன் சிலவரைப்
புடைத்தனன் சிலவரைப் புதுமரத் தண்டினால்.
57
   
4573.
மத்த வெம் கரி பரி வயவர் தேர் ஆயின
பத்து நூறு ஒரு தலைப் பட நெடும் பாணியால்
குத்திடும் சிகர மேல் கோள் அரி பாய்ந்து எனத்
தத்தியே திரிதரும் தலை மலைக் குலமிசை.
58
   
4574.
தேர் எலாம் இற்றன திண் திறல் கவனமாப்
பேர் எலாம் இற்றன பிளிறு மால் கரிகளின்
தார் எலாம் இற்றன தானவத் தலைவர் செய்
போர் எலாம் இற்றன புகழ் எலாம் இற்றதே.
59
   
4575.
ஆங்கது ஓர் பொழுதினில் அவுணர்க்கு இறைமகன்
பாங்கராய் வந்திடும் பல் பெரும் குமரரும்
ஓங்கு நால் படையொடும் ஒருவனைச் சுற்றியே
தாங்கு பல் படையினால் சமர் முயன்று ஆற்றினார்.
60
   
4576.
அன்ன காலையில் வீரவாகுப் பெயர் அறிஞன்
தன்னது ஓர் கரத்து இருந்திடு பழுமரத் தண்டான்
முன்னர் வந்து சூழ் மைந்தர்கள் முரண் படையோடும்
சின்னம் ஆகியே விளி உறப் புடைத்தனன் திரிந்தான்.
61
   
4577.
செய்ய மத்தகம் இற்றன இற்றன செழும் தாள்
கைகள் இற்றன மருப்பிணை இற்றன கரிகள்
வெய்ய காலுடன் எருத்தமும் இற்றன மிலைச்சும்
கொய் உளைத்தலை இற்றன குரகதக் குழுவே.
62
   
4578.
தட்டு அழிந்தன பாரகம் அழிந்தன சகடு
கெட்டு அழிந்தன கேதனம் அழிந்தன கிளர்ந்த
மொட்டு அழிந்தன பாகினம் அழிந்தன முரண் மாக்
கட்டழிந்தன ஒழிந்தன கனை குரல் பஃறேர்.
63
   
4579.
கால்கள் உற்றிடும் வெம் சிலை இற்றன கடிய
கோல்கள் இற்றன பரிதிகள் இற்றன கொட்பார்
தோல்கள் இற்றன நாந்தகம் இற்றன தூண்டும்
வேல்கள் இற்றன நாஞ்சில்கள் இற்றன விரைவில்.
64
   
4580.
நெரிந்த சென்னிகள் நெரிந்தன மார்பகம் நெடிது
சரிந்த வெங்குடர் சரிந்தன இழுக்குடைத் தசைகள்
சொரிந்த மூளைகள் சொரிந்தன விரிந்து எழு சோரி
திரிந்த கூளிகள் திரிந்து மாய் உற்றன சேனை.
65
   
4581.
கரம் துணிந்தனர் புயங்களும் துணிந்தனர் காமர்
சிரம் துணிந்தனர் நாசிகள் துணிந்தனர் செழும் பூண்
உரம் துணிந்தனர் கழல் அடி துணிந்தனர் உள தொல்
வரம் துணிந்தனர் வன்மையும் துணிந்தனர் மைந்தர்.
66
   
4582.
வாக்கினால் சிலர் தம் உயிர் உண்டிடும் வன்கைத்
தாக்கினால் சிலர் தம் உயிர் உண்டிடும் சமர் செய்
ஊக்கினால் சிலர் தம் உயிர் உண்டிடும் உலம்பு
நோக்கினால் சிலர் தம் உயிர் உண்டிடு நொய்தின்.
67
   
4583.
அங்கண் ஓர் சில அவுணரை ஆடல் வெம் பரியை
வெங்கண் யானையை இரதத்தை வாரினன் விரைவின்
மங்குல் வானினும் தரையினும் கடலினும் வரைகள்
எங்கும் ஆகியே வீழ்தர வீரனார்த் தெறிந்தான்.
68
   
4584.
அன்பு உலப்பு உறு கொடும் தொழில் அவுணர்கள்                                    அமரும்
வன் புலத்து உயிர் கொள வரும் மறலி தன் தூதர்
துன்பும் அச்சமும் அணங்குடன் அகன்றுதற் துதிப்பத்
தென் புலத்தவன் முன் உற வீசினன் சிலரை.
69
   
4585.
ஒருதலைப் படும் கேளிரைத் துன்னுவான் உய்ப்பக்
கருதினான் கொலோ சிலசில அவுணர் தம் கணத்தை
நிருதி மாநகர் புகுந்திட வீசினன் நிகர் இல்
சுருதி நாயகன் ஏவலால் ஆற்றிய தனித் தூதன்.
70
   
4586.
நேர்ந்து போர் புரிந்து உயிர்தனை விடாதது அந்                                      நிலைமை
ஓர்ந்து விண்ணவர் மானங்கள் விடுத்திடாது உயர்வான்
சார்ந்த ஞாயிறு பிளந்திடாது ஆடலின் தன்மை
சேர்ந்துளார் பெறும் துறக்கம் மேல் வீசினன் சிலரை.
71
   
4587.
எண் திசைப் புறம் தாங்கியே பெயர்கிலாது இரக்கம்
கொண்ட வெம் கரிக்கு இரை எனச் சிலவரைக்                                  கொடுக்கும்
தெண் திரைப் புனல் பருகிய நிரப்பது தீர
உண்டி ஆகவே வடவை பால் சிலவரை உய்க்கும்.
72
   
4588.
ஏந்தல் இன்ன பல் வகையினால் அடுதலும் இமைப்பின்
வீந்த தானைகள் துணைவரும் பொன்றினர் மிக்கோர்
ஓய்ந்து வானினும் கடலினும் திசையினும் உலைத்துச்
சாய்ந்து போயினர் மானமும் வன்மையும் தவறி.
73
   
4589.
மற்று இந் நீர்மையைக் காண்டலும் வச்சிர வாகு
இற்றதே கொலாம் நம் பெரும் தானை என்று இரங்கிச்
செற்ற மீக் கொண்டு வலவனை நோக்கி இத் தேரை
ஒற்றன் முன் உற விடுத்தி ஆல் கடிது என உரைத்தான்.
74
   
4590.
உரைக்கும் வாசகம் கேட்டலும் தொழுது முன் உற்ற
பரிக் குலங்களின் மத்திகை வீசியே பாகன்
அருக்கன் ஆழி அம் திகிரி ஊர் வலவனும் அஞ்சி
வெருக் கொளும் படி தேரினை வீரன் முன் விடுத்தான்.
75
   
4591.
கொடிய வெம் சினம் திருகியே சூர் தரு குமரன்
கடிது போர் செய்வான் வருவது மேலையோன் காணா
முடிவு இலா மகிழ்வு எய்தியே முழுது உலகு அளந்த
நெடிய மாலினும் நெடியன் மற்று இவன் என நிமிர்ந்தான்.
76
   
4592.
நெடிய தாள் புவி அளந்திடப் புயங்கள் விண் நெருக்க
முடி எலாம் கடந்து அண்ட கோளிகை தனை முட்ட
வடிவு அமைந்திடு திறலினான் பணிபதி மயங்க
அடி பெயர்ந்து பார் வெடி பட இடிபட ஆர்த்தான்.
77
   
4593.
புரம் அடங்கலும் தெறு கணை போன்று உளான்                                பொன்னோன்
வரம் அடங்கலும் சோரியது அடங்கலும் வாழ் நாள்
உரம் அடங்கலும் உண்டிடத் தறியின் வந்து உதித்த
நரம் அடங்கலும் வெருவர எரி எழ நகைத்தான்.
78
   
4594.
முச்சகம் புகழ் திறலினான் முறுவலும் முழக்கும்
வச்சிரத் தட மொய்ம்பினான் கேட்டலும் மறுகி
மெய்ச்சிரத் தொகை துளக்கி ஆர் அழல் எழ விழித்து
நச்சு எயிற்று அரவமாம் எனச் செயிர்த்து இவை                                   நவில்வான்.
79
   
4595.
வீர நன்று நின் ஆண்மையும் நன்று மே தக்க
பேரு நன்று பேர் ஆற்றலும் நன்று நீ பெற்ற
சீரும் நன்று நின் விஞ்சையும் நன்று செய்கின்ற
போரும் நன்று நிற்கு ஏற்பது இவ் ஆர்ப்பு எனப்                                 புகன்றான்.
80
   
4596.
மற்றும் ஓர் உரை புகலுவான் வந்து எதிர் மலைந்த
கொற்ற வீரரைப் படுத்தனம் என்று உளம் கொண்டாய்
அற்று எலாம் இனி விடுமதி நின் மிடல் அலைத்துப்
பற்றி எந்தை முன் விடுப்பன் ஆல் உனை எனப்                                    பகர்ந்தான்.
81
   
4597.
நின்னை வென்றிட முயலுவன் தமியனும் நீயும்
என்னை வென்றிட முயலுதி இருவரும் அதனைப்
பன்னி நிற்பதில் பயன் எவன் கடிது அமர் பயிறி
பின்னை வென்று உளார் வெல்லுக என்றனன் பெரியோன்.
82
   
4598.
என்னு முன்னரே வச்சிர வாகு என்று இசைக்கும்
மன்னன் மாமகன் தனது கைக் கார் முகம் வாங்கிப்
பொன்னின் நாண் ஒலி கொண்டு ஒர் ஆயிரம் கணை                                        பூட்டி
மின் உலாம் தனி வேலவன் தூதன் மேல் விடுத்தான்.
83
   
4599.
விடுத்த ஆயிரம் பகழியும் விடலை தன் மிசையே
அடுத்த எல்லையில் காண் உறா அங்கை ஒன்று அதனை
எடுத்து முன் உற ஓச்சியே அங்கு அவை எனைத்தும்
பிடித்து வல்லையின் நுண் துகள் பட்டிடப் பிசைந்தான்.
84
   
4600.
விட்ட வாளிகள் பூழி பட்டு இடுதலும் வெகுண்டு
மட்டு வாகை வெம் சிலையினைப் பின்னரும் வணக்கி
நெட்டிலைச் சரம் ஒரு பதினாயிரம் நிறத்தில்
பட்டிடும் படி தொட்டனன் அவுணர் கோன் பாலன்.
85
   
4601.
அசைவு இலான் அது நோக்கியே முந்து போர் அகத்தில்
இசைமை நீங்கியே முடிந்திடு தானவர் இட்ட
முசலம் ஆகியது ஒன்றினை எடுத்து முன் வந்த
விசிகம் யாவையும் புடைத்தனன் திசை தொறும் வீழ.
86
   
4602.
வழுவில் வாளிகள் வறிது பட்டிடுதலும் மற்றும்
விழுமிது ஆகிய ஒரு பதினாயிரம் விசிகம்
பழுது உறாதன தூண்டியே ஆண் தகை பரித்த
எழுவை நுண் துகள் ஆக்கியே பின்னரும் எய்வான்.
87
   
4603.
தலையில் ஆயிரம் களத்தினில் ஆயிரம் தடந்தோள்
மலையில் ஆயிரம் உரத்தினில் ஆயிரம் வயத்தாள்
நிலையில் ஆயிரம் கணைகளாத் தூண்டினன் நீடும்
கொலையில் ஆயிரம் கூற்றினைப் போல் உறும்                                   கொடியோன்.
88
   
4604.
கையில் ஏந்திய பேர் எழு முரிந்திடக் காமர்
செய்ய மெய்ம் முழுது ஈண்டியே பகழிகள் செறிய
ஐயன் நின்றனன் ஓர் இறை வருந்தியே அதற்பின்
ஒய் எனச் சென்று வெய்யவன் தேரினை உதைத்தான்.
89
   
4605.
உதைத்த காலையில் பண் உறு பரியெலாம் ஒருங்கே
பதைத்து வீழ்ந்தன பாகனும் உருண்டனன் பட்டான்
கதித்த வையமும் அழிந்தது அன்னது காணா
மதித்து வேறு ஒரு தேர் இடைப் பாய்ந்தனன் மறவோன்.
90
   
4606.
பாய்ந்து வச்சிர வாகுவாம் தொல் பெயர் படைத்தோன்
தேய்ந்த ஒண்பிறை பணியொடு சேர்ந்தன சிலையின்
ஆய்ந்து ஒர் ஆயிரம் அயில் கணை பூட்டியே அடுபோர்
ஏந்தல் நெற்றியுள் செறித்தனன் அமரர்கள் இரங்க.
91
   
4607.
ஆயிரம் கணை நுதல் இடை அழுத்தலும் அடல் வேல்
தூயவன் திருத் தூதுவன் சூரருள் புரிந்த
தீயவன் தடம் தேரினைச் செம் கையால் எடுத்து
மீ உயர்ந்திடும் விண் இடை எறிந்தனன் விடுத்தான்.
92
   
4608.
விண் அகத்து இடை எறிந்த பின் வீரவாகுப் பேர்
அண்ணல் வச்சிரவாகு வந்து ஏறுவான் அமைந்து
பண் உறுத்திய ஏமம் ஆய் நின்ற தேர் பலவும்
துண் எனப் புடைத்து எறிந்து தைத்து ஒல்லையில்                                 தொலைத்தான்.
93
   
4609.
தொலைக்கும் எல்லையின் அவுணர் கோன் மதலை தொல்                                       புவிக்கு ஓர்
இலக்கம் யோசனை எல்லையின் காறும் விண் ஏகி
அலக்கண் உற்ற மீண்டு அழி தரு தேருடன் அமரில்
வெலற்கு அரும் திறல் அறுமுகன் தூதன் முன் வீழ்ந்தான்.
94
   
4610.
நில வரைப்பு உறும் சூர் மகன் எழுந்து தன் நெடிய
சிலை வளைத்து அமர் செய்திட முன்னலும் திறலின்
தலைமை பெற்றவன் கண்டு கை ஓச்சியத் தனுவை
வலிது பற்றியே முரித்தனன் பேர் ஒலி மயங்க.
95
   
4611.
ஏந்து கார் முகம் தனை முரித்திடுதலும் எரியில்
காந்து கண் உடை வச்சிர மொய்ம்பு அனோர் கரத்தின்
வாய்ந்த வாள் கொடே எதிர்தலும் தன் உடை மருங்கின்
நாந்தகம் தனை உறை கழித்து அறிவன் மேல் நடந்தான்.
96
   
4612.
நடந்து வச்சிர வாகு முன் உய்த்திட நனி தோள்
அடைந்த வாளினை விலக்கியே அறிவரில் அறிவன்
கடந்த போர் வலி கொண்ட தன் வாளினால் கடிது
தடிந்து வீட்டினன் அவுணர் கோன் நாந்தகத் தடக்கை.
97
   
4613.
செய்யது ஓர் கரம் துணிபடத் தீயவன் செறுத்தோர்
கை இருந்திடு தண்டினை எறிதலும் கண்டு
மை இல் கேள்வியன் துணி படுத்து அவுணர் கோன்                                       மதலை
ஐ இரண்டவாம் தலையையும் வாளினால் அறுத்தான்.
98
   
4614.
எந்தை தன் தூதுவன் எறிந்த வாளினால்
ஐந்து இரு சென்னியும் அற்று வீழ்தலும்
மைந்து இயல் வச்சிர வாகு ஆகிய
வெம் திறல் அவுணர் கோன் வீடினான் அரோ.
99
   
4615.
ஆடியல் அவுணர் தம் அண்ணல் தன் மகன்
வீடிய காலையின் வெருவிப் பாங்கரின்
நாடிய அவுணர்கள் நனி புலம்பு உறீஇ
ஓடினர் திசை தொறும் உடைந்து போயினார்.
100
   
4616.
துஞ்சினன் வச்சிரத் தோளன் கண்டு இது
நெஞ்சகம் மகிழ்ந்து இவண் நிற்பனே எனின்
வெம் சின அவுணர் கோன் வினவில் தீமை என்று
அஞ்சினன் கரந்து என அருக்கன் போயினான்.
101