வீரவாகு மீட்சிப் படலம்
 
4660.
இன்ன பான்மையால் யாளி மாமுகன்
தன்னை அட்டபின் தன் கை வாளினைப்
பொன் உலா உறை புகுத்திச் சென்றனன்
மின்னு செம் சுடர் மேனி வீரனே.
1
   
4661.
இந்திரத் திரு இலங்கை நீங்கியே
அம் திரைக் கடல் அழுவம் வாவியே
கந்த மாதனம் கவின்ற வேலை சேர்
செந்தி மா நகர் சென்று புக்கனன்.
2
   
4662.
புக்க காலையில் பொருவில் ஆற்றலான்
மிக்க சேவகன் மேவல் கண் உறாத்
தொக்க பாரிடம் சோமன் காண் உறு
மைக் கரும் கடல் மான ஆர்த்தவே.
3
   
4663.
பாரிடத் தொகை பரிக்கும் மன்னவர்
சேர வந்து தம் செம்கை கூப்பியே
வீரவாகுவை மெய் உறத் தழீஇ
ஆர்வம் எய்தினார் அன்பு கூறினார்.
4
   
4664.
தழுவுவோர் தமைத் தானும் புல்லியே
இழிஞர் தம்பதிக்கு ஏகும் வெம்பவம்
ஒழிவது ஆயினன் உமைக் கண்டே எனா
முழுவல் அன்பினான் முகமன் கூறினான்.
5
   
4665.
விலக்கு இல் வன்மை கொள் வீர வாகுவை
இலக்கத்து எண்மரும் எதிர்ந்து மற்று அவன்
மலர்க் கரும் கழல் வணங்கிக் கைத் தொழ
அலக்கண் நீங்கு மாறனையர்ப் புல்லினான்.
6
   
4666.
அமைவில் பாரிடத்து அனிக வேந்தரும்
தமர்கள் ஆயினோர் தாமும் சூழ்வர
விமலன் ஆகியே வீற்று இருந்திடும்
குமர நாயகன் கோயில் மேயினான்.
7
   
4667.
விண்டு வான் உளோர் விரிஞ்சன் மாதவர்
கொண்டல் ஊர்பவன் குழுமிப் பாங்கு உற
அண்டர் நாயகன் அமரும் தன்மையைக்
கண்டு முந்து கண் களிப்பின் மேயினான்.
8
   
4668.
உள்ளம் என்புடன் உருகத் தூய நீர்
வெள்ளம் கண் உற விதிர்ப்பு மேவரப்
பொள் எனப் புரம் பொடிப்பச் சூர் அடும்
வள்ளல் சேவடி வணங்கினான் அரோ.
9
   
4669.
அணங்கு சால் உறும் அந்தண் சேவடி
வணங்கி மும் முறை மகிழ்ச்சி அன்பு இவை
இணங்க அஞ்சலித்து ஏத்தி நிற்றலும்
குணங்கள் மேல் படும் குமரன் கூறுவான்.
10
   
4670.
சுரரை வாட்டு உறும் சூரன் முன்பு போய்
விரைவின் நம் மொழி விளம்ப மற்று அவன்
உரை செய் திட்டதும் ஒல்லை மீண்டதும்
மரபின் இவ்விடை வகுத்தியால் என்றான்.
11
   
4671.
வீரன் கூறுவான் விமல நின்மொழி
சூரன் முன்பு போய்ச் சொல்ல விண் உளோர்
ஆர் இரும் சிறை அதனை வீடலே
காரியம் எனக் கருத்தில் கொண்டிலன்.
12
   
4672.
கெடல் அரும் சுரர் கிளையை வெம் சிறை
விடுகிலேன் எனா வெகுண்டு கூறினான்
அடிகள் அன்னதால் ஆண்டு நீங்கியே
கடிது வந்தனன் கருமம் ஈது என்றான்.
13
   
4673.
என்ற காலையின் யாண்டும் ஆகியே
நின்று முற்று ஒருங்கு உணர்ந்த நீர்மையான்
உன் தன் செய்கையுள் ஒன்றும் சொற்றிலை
நன்று மற்று அது நவிறியால் என்றான்.
14
   
4674.
தொடக்கம் உற்று வாழ் சூரன் மா நகர்
அடுத்த காலையின் அகன்ற வேலையில்
தடுத்து உளோரை நின் சரண வன்மையால்
படுத்து வந்தனன் பான்மை ஈது என்றான்.
15
   
4675.
அரும் திறல் புயன் அனைய செப்பலும்
இருந்த கந்தவேள் இகலினோர் களால்
வருந்தினாய் கொலோ மன்ற என்று தன்
திருந்து பேர் அருள் செய்தல் மேயினான்.
16
   
4676.
அங்கு அவ் வெல்லையின் ஆயிரம் பெயர்ச்
செம் கண் மாயவன் திசை முகத்தவன்
மங்குல் மேலவன் வதனம் நோக்கியே
எங்கள் நாயகன் இனைய கூறுவான்.
17
   
4677.
தேவரைச் செயும் சிறை விடுத்து நீ
மேவு நன்கு எனா வெய்ய சூரனுக்கு
ஏவு தூதை விட்டு இயம்பு வித்தனம்
பாவி அன்னது பயன் என்று உன்னலான்.
18
   
4678.
வீதலே அவன் விதி அது ஆதலின்
தீது இல் விண்ணவர் சிறை விடோம் என
ஓதினான் அவனுயர்வு நீக்குவான்
போது நாளையாம் எனப் புகன்றனன்.
19
   
4679.
ஆறு மாமுகத்து ஐயன் இவ்வகை
கூறக் கோட்டுளோர் கொடிய சூர் மிசைச்
சேறும் என்ற சொல் தெளிவின் நம்துயர்
மாறிற்று என்றனர் மகிழ்ச்சி எய்தினார்.
20
   
4680.
ஆன அத்துணை ஆடல் மொய்ம்பினான்
தான அப்பதிச் சயந்தன் உற்றதும்
ஏனைச் செய்கையும் எடுத்துக் கூறியே
வானவர்க்கு இறை மனத்தைத் தேற்றினான்.
21
   
4681.
சீர் உலா மகேந்திர புரத்தினும்
வீரவாகு மீண்டது விளம்பினாம்
ஆர்ஞர்க் கடல் அலைப்ப ஆண்டு உறும்
சூரன் உற்றதும் பிறவும் சொல்லுவாம்.
22