முதல் நாள் பானுகோபன் யுத்தப் படலம்
 
4954.
கோதை வேல் உடைக் குமரனது ஆற்றலும் கொற்றப்
பூதர் ஆற்றலும் ஏனையர் ஆற்றலும் போர் செய்
தூதன் ஆற்றலும் தொலைக்குவன் துண் என நீவிர்
ஆதவன் தனிப் பகைஞனைக் கொணர்திர் என்று                                    அறைந்தான்.
1
   
4955.
ஆன காலையில் நன்று எனத் தூதுவர் அகன்று
பானுகோபனது இருக்கை புக்கு அனையவன் பணிந்து
மேல் நிலைப்படு தந்தை தன் பணிவிடை விளம்ப
மான வால் அரித் தவிசு விட்டு எழுந்தனன் மன்னோ.
2
   
4956.
தொல்லை மந்திரத் தலைவரும் சுற்றம் ஆயினரும்
எல்லை தீர் தரு தானை அம் தலைவர்கள் யாரும்
ஒல் எனப் புடை சூழ்ந்தனர் உருமு கான்று என்னப்
பல் இயங்களும் ஆர்த்தன போர்த்தன பதாதி.
3
   
4957.
அக் கணத்தினில் இரவி அம் பகைஞன் ஓர் அணித்தேர்
புக்கு ஓர் ஆயிரம் கோடி வீதிகள் ஒரீஇப் புடையில்
தொக்க வீரரில் கண்டுளார் வயின் வயின் தொழப் போய்
மிக்க தாதை தன் திருநகர் அடைந்தனன் விரைவின்.
4
   
4958.
தேரின் நின்று இழிந்து அண்ணல் அம் கோயிலுள் சென்று
சூரபன்மனை அணுகியே அவன் அடி தொழுது
வீர வீர நீ எனை இவண் விளித்தது என் என்ன
வார் இரும் கழல் மன்னவன் இன்னன வகுப்பான்.
5
   
4959.
முந்து தாரக எம்பியை வரையொடு முடித்த
கந்தவேள் செந்தி நீங்கியே அளக்கரைக் கடந்து
நந்தி தன் கணத் தலைவரும் பூதரும் நணுக
இந்த மாநகர் வட திசை வாயில் வந்து இறுத்தான்.
6
   
4960.
சிந்து போன்று உலகு அளந்திடும் கள்வனும் செயிர்தீர்
கந்த மாமலர்க் கடவுளும் என் பணி கடந்த
இந்திராதியர் யாவரும் பிறரும் ஆய் ஈண்டி
வந்து உளார்களாம் அறுமுக மதலை தன் மருங்கு.
7
   
4961.
அளியர் ஆகிய அமரரும் அரன் தரு மகவும்
ஒளிறு வாள் படை நந்தி தன் கணத்தின் உள்ளோரும்
களியின் மூழ்கிய பூதரும் கடிது வந்து அடைதற்கு
எளிது பட்டதோ நன்று நன்று இனைய மா நகரம்.
8
   
4962.
பின்னை தன்னுடன் அடுக்கலை மைந்தனைப் பிறரை
முன்னம் அட்டிடும் மாற்றலர் தங்களை முருக்கச்
செல் நெறிக் கொடு போதல் என் கடன் அவர் சிறியர்
மன்னர் மன்னன் யான் ஆதலின் இருந்தனன் வறிது.
9
   
4963.
அந்தண் மா முகில் உயர்த்தவன் வேண்டலும் அமலன்
தந்த கந்தனைச் சாரதத் தலைவர் களோடு
நம் தமைப் பொர விடுத்தனன் ஆதலின் நானும்
மைந்த நிற்கொடு வென்றி பெற்று இருந்திடல் வழக்கே.
10
   
4964.
ஆதலால் இனிப் படையொடும் அமர்க்களத்து அடைந்து
நாதன் மைந்தனை நந்தி தன் கணத்து உளார் தம்மைப்
பூதர் தங்களைப் பொருது அழித்து அடல் வயம் புனைந்து
காதல் மைந்த நீ மீடியால் நம் முனம் கடிதின்.
11
   
4965.
என்று இவை சூர் முதல் இசைப்பக் கேட்டலும்
பொன்திகழ் தடம் புயம் பொருப்பில் சேண் செல
ஒன்றிய குமிழ் வடி உடலம் போர்த்திட
நின்றிடும் திருமகன் இவை நிகழ்த்து வான்.
12
   
4966.
இருள் உறு மிடற்றினன் ஏவும் மைந்தனை
மருள் உறு பூதரை மற்று உளார் தமை
வெருள் உறு சமரிடை வென்று மீள்வது ஓர்
பொருள் என நினைந்து கொல் புகன்றி இற்று எலாம்.
13
   
4967.
பன்னுவது என் இனிப் பரமன் கான் முளை
இந்நகர் நணுகுமுன் எதிர்ந்து போர் செய்வான்
நென்னலே வினவினன் நீ அது ஓர்ந்திலை
பின் இது புகலுதல் பிழை அது ஆகும் ஆல்.
14
   
4968.
படைப்பெருந் தொறு வொடும் படர்ந்து கந்தனை
அடுத்தனன் பேர் அமர் ஆற்றி வென்றி கொண்டு
இடுக்கணில் பூதரை ஏனை யோருடன்
முடித்து இவண் வருகுவன் முதல்வ காண்டி நீ.
15
   
4969.
கந்தனை விறல் கொடே அவன் தன் கண்படு
செம் திரு மார்பனைத் திசை முகத்தனை
இந்திரக் கள்வனை இமைப்பில் பற்றி முன்
தந்திடு கின்றனன் தகுவ செய்தி ஆல்.
16
   
4970.
என்று இவை கூறியே இறைஞ்ச மைந்த நீ
சென்றனை வருதியால் திறலினோடு எனா
நன்று என விடை கொடு நடந்து நன்கு அமை
பொன் திகழ் தனது தேர் புகுந்து போயினான்.
17
   
4971.
தொல்லை இல் பரிசனம் புடையில் சூழ்தரப்
பல் பதினாயிரம் துணைவர் பால் பட
ஒல் என இயம்பல ஒலிப்ப ஏகு உறா
எல்லை அம் பகை தனது இருக்கை எய்தினான்.
18
   
4972.
பண்டி அம் தேரினும் தணந்து பாங்கரின்
மண்டு உறு தூதரை வல்லை கண் உறீஇ
எண்டரும் நம் படை யாவும் இவ்விடை
கொண்டு அணைவீர் எனக் கூறிப் போயினான்.
19
   
4973.
ஏயிரும் பரிசனர் யாரையும் நிறீஇ
மா இரும் கலை மகள் வதிந்து வைகிய
ஆயுத சாலையின் அவுணர் கோன் மகன்
போயினன் தொழுதனன் பூசை ஆற்றினான்.
20
   
4974.
கயிரவ நிறத்த பூம் கச்சு வீக்கினான்
வயிர வொள் வாளினை மருங்கு சேர்த்தினான்
வெயில் விடு பொன் துகில் மீது சுற்றினான்
துயில் அறும் அமரரைத் துளக்கம் கண்டு உளான்.
21
   
4975.
செல் இடை உரும் எனத் தெழிக்கும் நோன் கழல்
கல் என அரற்றிடக் கழலில் பூட்டினான்
வல்லிதில் சாலிகை மருமம் சேர்த்தினான்
சொல்லினும் நிவந்து எழு தூண் செய் தோளினான்.
22
   
4976.
கோதையை அங்கையில் கொளுவிச் சுற்றினான்
போது உறழ் அங்குலி புட்டில் தாங்கினான்
சோதி கொள் சரம் படு தூணியைச் சுவல்
மீது உற வீக்கினான் விறலின் மேலையோன்.
23
   
4977.
வெம் பெரு நுதல் மிசை விசயப் பாலதாம்
செம் பொனின் பட்டிகை திகழச் சேர்த்தினான்
பம்புறும் அணிகலம் பலவும் தாங்கினான்
தும்பை அம் சிகழிகை மவுலி சூட்டினான்.
24
   
4978.
வடித்தது ஓர் பெரும் சிலை வயம் உண்டாக என்று
எடுத்தனன் விடுத்திடின் யாவர் தம்மையும்
படுத்திடும் மோகம் ஆம் படை ஒன்று ஏந்தினான்
அடுத்திடும் செறுநர் தம் ஆற்றல் உன்னலான்.
25
   
4979.
ஆனது ஓர் போர் அணி அணிந்து வாய்தலில்
பானுவின் மாற்றலன் படர முன்னரே
போனது ஓர் தூதுவர் எழுதிர் போர்க்கு எனத்
தானையோடு எழுந்தனர் தகுவர் யாவரும்.
26
   
4980.
* விசையன் நேமியன் மிகுந் திறல் மாயன்
முசலி கண்டகன் முரன் கரன் மூர்க்கன்
தச முகன் கனலி சண்டன் விசண்டன்
அச முகன் மகிடன் அக்கிர வாகு.
27
   
4981.
விசைய சேனன் விட சேனன் விமோகன்
வசை கொள் சோமகன் மதுச் சசி சித்துச்
சுசி முகன் அசனி சூனிய கேது
அசுர சேனன் இவர் ஆதியர் ஆனோர்.
28
   
4982.
தடுக்க ஒணா வகை தடிந்திடும் தெய்வப்
படைக் கலங்கள் அவை பற்பல பற்றா
உடைத்த வன்மையுடன் ஒய் என வந்தார்
கிடைத்ததோ அமர் எனக் கிளர்கின்றார்.
29
   
4983.
ஆன காலை பதினாயிரம் வெள்ளம்
தானவப் படைஞர் சார்பு தொர் ஏகி
மீன வேலைகளும் வெள்கு உற ஆர்த்து
மானவத் தலைவர் மாடு உற வந்தார்.
30
   
4984.
கோல வார் சிலை கொடும் கதை நீடும்
சூலம்நேமி அயில் தோமரம் ஈட்டி
ஆலம் வாள் கணயம் ஆர் எழு நாஞ்சில்
கால பாசம் இவை கைக் கொடு சென்றார்.
31
   
4985.
கந்துகத் தொகை கடம் கலுழ் கைம்மா
எந்திரத் திரதம் ஈங்கு இவை மூன்றும்
ஐந்தொகைப் படும் ஆயிரம் வெள்ளம்
தந்திரத் தலைவர் தம் புடை சூழ்ந்த.
32
   
4986.
ஐந்து நான்கு உடைய ஆயிர வெள்ளத்து
இந்த நாற் படையும் ஈண்டுபு செல்ல
மைந்தின் ஏற்ற மிகு மானவர் தத்தம்
சிந்தை போல் கடிது சென்றனர் அம்மா.
33
   
4987.
சென்ற காவலர்கள் சேனையினோடும்
என்ற வன் பகைஞன் எய்துழி நண்ணி
ஒன்ற அம் கை தொழுது ஒல் என ஆர்த்துத்
துன்றி வந்து புடை சூழ்ந்தனர் அன்றே.
34
   
4988.
இரவி தன் பகைஞன் ஈங்கு இவை காணா
ஒரு தன் ஏவலனை ஒல்லையின் நோக்கித்
திருமை பெற்றது ஒரு தேரினை வல்லே
தருக என்ன இனிது என்று தணந்தான்.
35
   
4989.
செப்பும் அத்தொழில் சிரம்கொடு சென்றே
மெய்ப் படைக் கருவி மேவுழி நண்ணி
முப்பது ஆயிரம் முரட் பரி பூண்ட
ஒப்பு இலா இரதம் ஒன்றினை உய்த்தான்.
36
   
4990.
உய்த்த தேரின் உதயக் கிரி வாவு
மொய்த்த வெம் கதிரின் மொய்ம்பொடு பாய்ந்தான்
மெத்து பேர் அனிக வெள்ளம் யாவும்
அத்துணைப் பொழுதின் ஆர்த்தன அன்றே.
37
   
4991.
உரத்த கந்திகள் ஓர் ஆயிரம் கோடி
பெருத்து நீண்டு அசைவு பெற்றிடும் பாளை
விரித்து நீட்டி என வெவ்வசு ரேசர்
கரத்தின் எண்ணில் கவரித் தொகை வீச.
38
   
4992.
மற்று அவன் தனது மாசு இருள் மேனி
உற்றிடற்கு அருமையால் அவன் ஒண் சீர்
சுற்றி மீது உலவு தோற்றம் அது என்னக்
கற்றை வெண் குடைகள் காவலர் ஏந்த.
39
   
4993.
அடைப்பை கோடிகம் அடும் சுடர் ஒள் வாள்
கடிக் கொள் பீலி கவின் உற்ற களாசித்
தொடக்கம் ஏந்தி முறை சுற்றி அனந்தம்
படைப் பெரும் தலைவர் பாங்கொடு போற்ற.
40
   
4994.
எழில் செறிந்த இரதத்து இடை வைகும்
அழலின் வெம் கதிரை ஆற்ற முனிந்தோன்
உழையரில் பலரை ஒய் என நோக்கி
விழுமியது ஓர் மொழி விளம்புதல் உற்றான்.
41
   
4995.
காமர் வெம் படை கணிப்பில கொண்ட
சேமம் ஆகி அமர் தேர் ஒரு கோடி
ஏமமோடு கொணர்வீர் எனலோடும்
தாம வேல் உழையர் தாழ்ந்தனர் சென்றார்.
42
   
4996.
அண்டரும் படை அளப்பு இல உய்த்துத்
திண் திறல் கெழுமு தேர் ஒரு கோடி
கொண்டு வந்து உழையர் கொற்றவன் மைந்தற்கு
எண் திசைப் புறமும் ஈண்டு உறுவித்தார்.
43
   
4997.
ஆண் தகைக் குமரன் அன்னது காலை
மாண்ட சீர் வலவன் மா முகம் நோக்கிப்
பாண்டின் மாத் தொகுதி பண்ணின இத்தேர்
தூண்டு கந்தன் அமர் சூழலின் என்றான்.
44
   
4998.
என்னலும் விழுமிதே என முட்கோல்
மன்னும் மத்திகையின் வன் தொழில் காட்டித்
துன்னுவாம் புரவியின் தொகை தூண்டிப்
பொன் அம் தேர் கடவினான் புகழ் வெய்யோன்.
45
   
4999.
வெய்யவன் தனை வியன் சிறை இட்ட
கையன் ஏக அது கண்டு புறம் சூழ்
மையல் மால் அவுண மாப் படை யாவும்
ஒய் எனப் பெரிது உலம்பின அன்றே.
46
   
5000.
எழுந்த தானவர் இகல் படை வெள்ளம்
எழுந்த தேர் நிரை எழுந்தன கைம்மா
எழுந்த வாசிகள் எழுந்தன ஓதை
எழுந்த கேதனம் எழுந்தன பூழி.
47
   
5001.
அறைந்த பேரிகை அறைந்தன சங்கம்
அறைந்த காகளம் அறைந்தன திண்கோடு
அறைந்த சல்லிகை அறைந்த தடாரி
அறைந்த தண்ணுமை அறைந்தன தக்கை.
48
   
5002.
ஆர்த்த தேர்த் தொகுதி ஆர்த்தன வாசி
ஆர்த்த தந்தி நிரை ஆர்த்தனர் வெய்யோர்
ஆர்த்த வால் துவசம் ஆர்த்தன கண்டை
ஆர்த்த தார் நிரைகள் ஆர்த்தது மூதூர்.
49
   
5003.
அதிர்ந்த மா நிலம் அலைந்தன நாகம்
உதிர்ந்த தாரகை உலைந்தனர் தேவர்
விதிர்ந்த மேக நிரை விண்டது மேருப்
பிதிர்ந்து போயின பிறங்கல்கள் ஏழும்.
50
   
5004.
ஊழியான் மதலை ஓங்கு படைப் பேர்
ஆழியோடு உற அருக்கன் வெருண்டே
பூழி வான் முகடு போர்த்து எழல் காணா
வாழி என்றதின் மறைந்து படர்ந்தான்.
51
   
5005.
வாழி மா நகர் வளைந்திடும் தொல் பேர்
ஆழி ஆம் கடை அவப் படை ஆகிச்
சூழும் வேலை இடை தோன்றி உலாவும்
பூழி தூர்த்துளது பூதர்களே போல்.
52
   
5006.
விட்ட சோதி நிமிர் விண் மிசை தாக்கப்
பட்டு உலாவரு பதாகையின் ஈட்டம்
வட்ட வானம் எனும் வான் படகத்தைக்
கொட்டு மண் மகள் குலாவுகை போலும்.
53
   
5007.
தாழும் வீரர் படை தம்மின் உரிஞ்சப்
பாழி வெம் கனல் பரந்த பதாகைச்
சூழல் வான நதி தோய்ந்தசை காலை
வீழும் ஆலிகளின் வீழ்ந்திடு கின்ற.
54
   
5008.
வானம் ஓடியன மால் கரி தள்ளும்
தானம் ஓடின சரங்களின் ஓடி
மீனம் ஓடு திரை வேலையின் ஓடும்
கானம் ஓடின களிற்று இனம் என்ன.
55
   
5009.
செப்புதற்கு அரிய சேண் நகர் தன்னில்
துப்பு மிக்கு எழுவு தொல் படை வெள்ளம்
இப் புறத்து நெறி இன்றி அவ் வானத்து
அப் புறத்தினும் அளப்பு இல சென்ற.
56
   
5010.
மறந்த அரும் கதிரை வன் சிறை செய்தோன்
செறிந்த தானையுடன் இவ்வகை செல்ல
இறந்த சீர் நகரின் இத்திறம் எல்லாம்
அறிந்து நாரதன் அகன்றிடு கின்றான்.
57
   
5011.
வான மேல் நெறி வழிக் கொடு பூதர்
மேன பாசறை வியன் பதி உள் போய்
ஞான வாலறிவன் நாரதன் விண்ணோர்
சேனை காவலன் அமர்ந்துழி சென்றான்.
58
   
5012.
சிந்துரப் பகை சிரத்தவிசு உற்ற
கந்தவேள் இரு கழல் துணை காணாப்
புந்தி நாகரொடு புகழ்ந்து வணங்கி
எந்தை கேட்க என இன்னது உரைப்பான்.
59
   
5013.
பூத சேனையொடு பொள் என ஏகி
ஆதி நீ இவண் அமர்ந்தன யாவும்
தூதர் கூற உயர் சூரபன்மா என்று
ஓது தீயவன் உணர்ந்து வெகுண்டான்.
60
   
5014.
நிகண்ட முற்பகல் நெடும் கதிரோன் பால்
உகண்ட தன் மகனை ஒல்லை விளித்தே
அகண்ட சேனையொடும் அன்பிலன் நின்மேல்
வெகுண்டு போர் செய விடுத்தனன் அம்மா.
61
   
5015.
விடுத்த காலை அவன் வெம் சமர் ஆற்றல்
கடுத்த கோலமொடு அளப்பு இல வான
கடல் பெரும் படை கலந்துடன் ஏகத்து
அடுப்பரும் வெகுளி தன்னொடும் வந்தான்.
62
   
5016.
இவனுடன் சமரின் ஏற்பவர் நீயும்
சிவனும் அன்றி எவர் தேவரின் உள்ளார்
அவனை வெல்வது அரிதாகும் முன் ஓர் நாள்
புவனி உண்டவர் புரந்தரன் என்றான்.
63
   
5017.
கரை இலா அமர் கடந்து இசை கொண்டான்
வரைவு இலாத பல மாயைகள் வல்லான்
உரக வேந்தினும் உரம் பெரிது உள்ளான்
பிரமன் ஈந்திடும் பெரும் படை பெற்றான்.
64
   
5018.
அறை கடற்கு இறைவன் அங்கை கொள் பாசம்
மறலி தன் பரசு வவ்வினன் மாயோன்
விறலின் நேமி கொள வேண்டலன் முன்னம்
சிறிய தந்தை அணிகுற்ற சிறப்பால்.
65
   
5019.
ஆகையால் அவனை ஆள் கொடு வல்லே
வாகை கொண்டிடலும் மற்று அரிது அம்மா
பாகு பட்ட படை பாங்கு உற நீயே
ஏகல் வேண்டும் அட என்று பகர்ந்தான்.
66
   
5020.
நாரதன் இவை நவின்றிடும் காலை
மூரல் எய்தி முருகன் புடை நின்ற
வீரவாகுவை விளித்து அருள் செய்து
சீரிதா இனைய செப்புதல் உற்றான்.
67
   
5021.
ஈண்டு பூதரொடு யாம் வரு தன்மை
யாண்டு சூரன் உணர்ந்து அந்நகர் தன்னின்
மாண்ட தானையுடன் மைந்தனை நம்மேல்
தூண்டினான் அமர் தொடங்கிய மன்னோ.
68
   
5022.
எள்ளுதற்கு அரிய எண்மர் இலக்கர்
உள்ள பேர்களும் ஒர் ஆயிர பூத
வெள்ளமும் புடையின் மேவர நீ போய்ப்
பொள் எனப் புரிசையின் புடை சூழ்தி.
69
   
5023.
சென்று முன்கடை சிதைத்தனை அங்ஙன்
கன்றி நேர் அவுணர் காவலன் மைந்தன்
துன்று சேனைகள் தொலைத்து அமர் ஆற்றி
வென்றி கொண்டு அவனை மீளுதி என்றான்.
70
   
5024.
ஈரும் வேல் முருகன் இவ்வகை கூறி
வீரவாகுவை விடுத்து இளை யோரைச்
சாரதத் தலைவர் தம்முடன் ஏவி
நாரதற்கு இது நவின்று அருள் செய்வான்.
71
   
5025.
கேட்டி யான் முனிவ கேழ் கிளர் சிம்புள்
கூட்டமீது சில கோள் அரி மேவின்
வாட்ட வல்லன கொல் மாய்குவது அல்லால்
காட்டு வாமுடிவு காண்டியது என்றான்.
72
   
5026.
குமரன் நல்கும் விடை கொண்டு படர்ந்தே
விமலவால் உணர்வின் மேதகு வீரன்
சிமைய மேரு நிகர் திண் சிலை ஒன்றை
அமரர் கோன் புகழ அங்கை பிடித்தான்.
73
   
5027.
வீக்கினன் கவசம் வெந்நிடை தன்னில்
தூக்கினன் பகழி பெய்திடு தூணி
நீக்கம் இல் விரலின் நீடுகை தன்னில்
தாக்கு கோதையொடு புட்டில் தரித்தான்.
74
   
5028.
சேம வெம் படை செறிந்திடு வைய
மா மருங்கினில் வரம்பு இல செல்லத்
தோம் இல் வீரமிகு தோளினன் அங்கு ஓர்
ஏமம் ஆம் இரதம் ஏறினன் மாதோ.
75
   
5029.
எட்டு வீரரும் இலக்கரும் ஏனை
மட்டு இல் பூத கண மன்னரும் ஆக
ஒட்டி ஆடு அமர் உருக்கொடு கொண்மூ
முட்டும் தேர்த் தொகையின் மொய்ம்பொடு புக்கார்.
76
   
5030.
தேரின் மேல் படு சிறப்புடை வீரர்
வீரவாகுவை விரைந்து அயல் சூழ்ந்தார்
நேர் இல் ஆயிர நெடும் கதிர் ஒன்றைச்
சூரர் தம் தொகுதி சுற்றிய வா போல்.
77
   
5031.
விரசியே அமர் விளைத்திட வெம் சூர்
அரசன் மா நகரின் ஆயிரம் வெள்ளம்
பரி சனங்கள் படர்மின் கடிது என்னா
முரசு அறைந்தனர்கள் ஆயிடை மொய்ம்போர்.
78
   
5032.
அறைந்த காலை தனில் ஆயிர வெள்ளம்
நிறைந்த பூதர் நெடு வேல் முருகன் பால்
செறிந்து போற்றி இட ஏனையோர் சென்றார்
உறைந்த ஆர் கலி உடைந்தது போல.
79
   
5033.
அருத்தியில் படரும் ஆயிர வெள்ளக்
கிருத்தி மத்தவர் கிளர்ந்திடு தீப்போல்
உருத்து வேலையின் ஒலித்து உயர் ஊழி
மருத்தின் வன்மை கொடு வந்திடு கின்றார்.
80
   
5034.
பை அரா இறை பரித்திடு கின்ற
வையம் யாவையும் ஒர் வாகுவின் வைக்கும்
கையர் காலனை அடும் தறு கண்ணார்
வெய்யர் ஆனவர்கள் யாரினும் வெய்யோர்.
81
   
5035.
அரத்த வேணியர் அடும் படை ஏந்தும்
கரத்தர் வெம் கழல் கலித்திடு தாளர்
வரத்தின் மே தகையர் மாயை கடந்தோர்
உரத்தின் அண்டமும் உடைத்திட வல்லோர்.
82
   
5036.
இனைய தன்மையினில் ஈண்டிய பூதர்
அனைவரும் செல அவர்க்கு இறை ஆனோர்
தனது தொல் இளைஞர் தம்மொடு சென்றான்
வனை கரும் கழல் வயம் புனை வாகு.
83
   
5037.
செல்லலும் திமிலை செல் உறழ் பேரி
கல் எனும் கரடி காகளம் ஆம் பல்
சல்லரிப் பறை தடாரி உடுக்கை
பல்லியம் பிற முழங்கின பாங்கர்.
84
   
5038.
மாறு இல் சேனை இடை வந்து எழு பூழி
நீறு பூசி முடி நீடிய கங்கை
ஆறு தோய்ந்த கல் விசும்பு இடை ஆடி
ஏறு கொண்ட கொடி ஈசனை ஒப்ப.
85
   
5039.
பாய சாரதர் படைக்குள் எழுந்தே
ஆய பூழி அவுணப் படை தன்னில்
சேய பூழியொடு சேர்வன தாமுன்
போய் எதிர்ந்து அமர் புரிந்திடு மாபோல்.
86
   
5040.
பான்மை இன்னன புடைப்புற எண்ணில்
சேனை வெள்ளமொடு திண் திறல் வாகு
தூ நலம் தவறு சூர் உறை மூதூர்
வான் உலாம் புரிசை மாடு உற வந்தான்.
87
   
5041.
ஆனது ஒர் காலையின் அதனை நோக்குறீஇத்
தானவர் ஒரு சிலர் தரிப்பின்று ஓடியே
சேனை அம் கடலினைத் தீர்ந்து வல்லை போய்ப்
பானுவின் பகைஞனைப் பணிந்து கூறுவார்.
88
   
5042.
மா இரும் தானைகள் மருங்கு சூழ்ந்திட
நீ அமர் செய வரும் நிலைமை நாடியே
வேயென முந்தி இவண் மேயினான் தனை
ஏயினன் குமரவேள் நிகழ்ச்சி ஈது என்றார்.
89
   
5043.
மற்று இவை அவுணர் கோன் மதலை கேட்டலும்
கற்றை அம் கதிர் மணிக் கடகக் கையினை
எற்றினன் முறுவல் செய்து எயிறு தீ உகச்
செற்றமொடு உயிர்த்து இவை செப்பல் மேயினான்.
90
   
5044.
இருந்திடும் பாலனை என்னொடே பொர
விரைந்து எதிர் தூதனை வியன் பதாதி ஆய்ப்
பொருந்திய பூதரைப் போர்க் களத்தில் யான்
துரந்திடு கின்றனன் தொலைந்து போகவே.
91
   
5045.
அந்தர வரைப்பினில் ஆசை எட்டினில்
வந்திடும் அளக்கரின் மற்றை நேமியில்
கந்தனும் ஒற்றனும் கணங்கள் யாவரும்
சிந்தினர் வெருவியே திரியக் காண்பன் ஆல்.
92
   
5046.
புன்மையர் ஆகிய பூதர் சேனையும்
வன்மையில் தூதனும் மழலைப் பிள்ளையும்
தொன் மிடல் ஒருவியே தொலைந்து போகினும்
என் மன வெகுளியும் ஏகல் பாலதோ.
93
   
5047.
விடுகிலன் அவர் தமை மேலை ஏழ் பெரும்
கடல் திசை முழுவதும் கடந்து செல்லினும்
புடையது சுற்றியே போக்கு உறாது இவண்
கொடு வருகின்றனன் குறுகிப் பற்றியே.
94
   
5048.
மேவலில் அவர் தமை மேலை நம் பெரும்
காவலன் முன்பு உறக் காட்டி இவ் இடைத்
தேவர்கள் தம்மொடும் சிறையில் வீட்டுவன்
ஏவரும் எனது சீர் இறைஞ்சி ஏத்தவே.
95
   
5049.
என்று இவை பல பல இசைத்துச் சூர் மகன்
கன்றிய மனத்தொடு கடிது சேறலும்
துன்றிய அவுணர் தம் தொறு முன் போயின
பொன் திகழ் வட மதில் புதவு நீங்கியே.
96
   
5050.
ஆனது ஒர் காலையின் அடையும் பூத வெஞ்
சேனையின் ஆற்றலும் திறலும் கண் உறீஇத்
தானவர் கூறுவார் சமர் கண்டு ஓடிய
வானவர் அன்றி இவர் வலியர் போலும் ஆல்.
97
   
5051.
என்னினும் இங்கு இவர் எம்மொடே பொரும்
வன்மையும் உடையரோ வரம்பு இல் குன்று எலாம்
பொன் மலை அதனொடு பொருவதே யினும்
மின் மினி கதிரினும் விளங்க வல்லதோ.
98
   
5052.
என்று இவை போல்வன இணை இல் தானவர்
ஒன்று அல பல பல உரைத்து வெம் சினம்
கன்றிய அழல் விழிக் கணத்தின் சேனை நேர்
சென்றனர் தெழித்தனர் சிலைத்த பல் இயம்.
99
   
5053.
வயிர்த்திடும் பூதர்கள் மறலி என்று உலகு
அயிர்த்திடும் அவுணரை நோக்கி அம்புவி
உயிர்த் தொகை அலைத்தவர் உவர் கொலோ எனாச்
செயிர்த்தனர் இடித்தனர் தீயின் வெம்மையார்.
100
   
5054.
கரை அறு தானவர் தாமும் காய் கனல்
புரை தரு சூர் விழிப் பூத வீரரும்
ஒருவரின் ஒருவர் உடன்று சேறலான்
இருவகை அனிகமும் இகலின் ஏற்றவே.
101
   
5055.
தந்தியின் கரங்களில் தண்டம் ஈந்திடா
வந்து எதிர் தெம் முனை மாய்ந்து வீடு உறச்
சிந்துதி எனும் குறி செப்பிப் பூதர் மேல்
உந்தினர் மீ மிசை உலப்பு இல் தானவர்.
102
   
5056.
பகைத்திடும் பூதர்கள் பலரும் நாடியே
திகைத்து இவை யாவெனச் சிந்தித்து ஐ உறத்
தகைத் தடம் தாளவை தரையின் பால் படாது
உகைத்தனர் பரி எனும் ஓத வேலையே.
103
   
5057.
கார் இடைச் சென்று எனக் களிற்றினும் திரை
நீர் இடைச் சென்று என நீடு மாவினும்
போர் இடைச் சென்றனர் புறத்துப் போற்றியே
தேர் இடைச் சென்றனர் வரையில் சென்று என.
104
   
5058.
அடு கரி நிரையினை ஆடல் மாக்களைத்
தடநெடும் தேர்களைத் தணப்பு இலா வகை
கடலினை வளைந்திடும் கரையதாம் எனப்
புடை தனில் சுற்றியே புவியின் ஏகினார்.
105
   
5059.
அத்திறம் எதிர்த்திடும் அவுணர் பூதர் மேல்
முத்தலை வேல் படை முசுண்டி தோ மரம்
சத்தியொடு எழும் மழுத் தண்டமே முதல்
எத்திறப் படைகளும் எடுத்து வீசினார்.
106
   
5060.
கரம் கொடு பெரும் படைக் கலங்கள் யாவையும்
பரம் கொடு வீசிய பதகர் உட்கிட
மரம் கொடும் எழுக் கொடும் வரை கொடும் தமது
உரம் கொடும் வீசினர் உலைவு இல் பூதரே.
107
   
5061.
செறிந்து நேர்ந்து செருச் செயும் எல்லையின்
இறந்த தானவர் எண் இலர் ஆவிபோய்த்
தறிந்த தாளும் தலையும் கழலும் ஆய்
மறிந்த சாரதரும் வரம்பு இல்லை ஆல்.
108
   
5062.
மாண்ட சாரதர் யாக்கையும் மண் மிசை
வீண்ட தானவர் மெய்களும் செம் களம்
யாண்டும் ஆகி இரும் கரை போல் உற
நீண்ட நேமியின் நின்றது சோரி நீர்.
109
   
5063.
விரவு பூதர் வெகுண்டு சென்று ஒன்னலர்
இரதமோடு இரதங்களை ஏற்றினார்
கரிகளால் கரியின் தொகை காதினார்
பரிகளோடு பரிகளை மோதினார்.
110
   
5064.
ஆளை ஆள் கொண்டு அடர்த்தனர் ஆங்கு அவர்
தோளையே தம் தோள் கொடு தாக்கினார்
தாளினால் அவர் தம் தலை சிந்தினார்
கோள் அரித்தொகை மான் அடும் கொள்கையார்.
111
   
5065.
ஏற்ற சாரதர் எற்றிடத் தானவர்
ஊற்றம் இன்றி உடைதலும் அவ் வழிக்
காற்றொடு அங்கி கலந்து அன்ன காட்சியான்
ஆற்றல் ஆளன் அனலி கண்டான் அரோ.
112
   
5066.
கையின் மேயின கார் முகம் ஒன்று தன்
மொய்யின் வாங்கி முரண் கெழு நாண் ஒலி
செய்யலோடும் அத் தேவர் வெருக் கொளா
ஐய கோ என்று அலக்கண் உற்றார் அரோ.
113
   
5067.
நாரி ஆர்ப்பு நணுகலும் நால் படை
மூரி ஆர்ப்பு முகில் இடை ஆர்ப்பு எனும்
பேரி ஆர்ப்பும் பிறங்கு பெரும் கடல்
வாரி ஆர்ப்பும் தம் வாய் மடிந்து இட்டவே.
114
   
5068.
கொற்ற வில்லில் கொடும் கனல் வெம் கணை
முற்று மாரியின் முத்திறம் தூண்டலும்
செற்று பூதர் தம் மொய்ம்பினுள் சென்றன
புற்றின் ஊடு புகுந்திடு பாந்தள் போல்.
115
   
5069.
அங்கி மாப் படை ஏவலும் அவ்வழிச்
சிங்கன் என்னும் திறல் கெழு சாரதன்
எங்கண் உய்தி இறந்தனை ஈண்டு எனாப்
பொங்கு சீற்றம் புகுந்தனன் புந்திமேல்.
116
   
5070.
நேர் கொண்டு ஆர்த்து நெடும் தகை தீயவன்
தேர் கொண்டு ஆர்க்கும் திறல் பரிச் சேக்கையின்
பார் கொண்டு ஆர்ப்பப் பரூஉத் தடக் கைதனில்
தார் கொண்டு ஆர்த்திடும் தண்டினில் சாடினான்.
117
   
5071.
சாடும் எல்லையில் சாரதி உந்திய
ஆடல் வாம் பரி ஆவி உலந்திட
ஓடல் இன்றி இரதம் ஆங்கு உற்றது ஆல்
நீடுகின்ற நிலைப்படு தேர் என.
118
   
5072.
மாக்கள் உற்ற மடிவினை நோக்கியே
தீக் கனல் பெயரோன் சினம் மேல் கொளாத்
தாக்க அணங்கு உறு தாழ்சிலை வாங்கியே
ஏக்கள் பூட்டி இது ஒன்று கூறுவான்.
119
   
5073.
தடுக்க ஒணா இச் சரம் சொரிந்து உன் உயிர்
படுத்து வானவர் பார்த்திடத் தென் திசை
விடுக்கிலேன் எனின் வெம் சமரத்து இடை
எடுக்கிலேன் சிலை யான் எனக் கூறினான்.
120
   
5074.
சூள் இவ்வாறு புகன்று தொலைவு இலா
வாளியான் மிசை அங்கியின் பேரினான்
கோளியார் பயன் ஆம் எனக் கூற்று உறழ்
வாளி தூண்டி மறைத்தனன் மேனியே.
121
   
5075.
மறையவே உடல் வாளிகள் தூண்டவும்
இறையும் உன்னலன் இன்னல் உற்று ஆழ்கிலன்
பொறையினோடு பொருக்கு எனப் போகியத்
தறையின் நின்ற சயந்தன் அத் தேறினான்.
122
   
5076.
நீர் முகந்த நெடு முகிலாம் எனத்
தேர் முகம் தனில் தீயவன் ஏந்திய
கார் முகம் தனைக் கைக் கொடு வாங்கியே
பார் முகத்துப் பதைப்பு உற வீசலும்.
123
   
5077.
வலக்கையால் ஒரு வான் கதை பற்றியே
சிலைக்கை ஈர்த்திடும் சிங்கனைத் தீயினான்
தலைக்கண் மோதலும் தானவர் ஆர்த்தனர்
கலக்கம் உற்றனர் கண்ட அத் தேவரே.
124
   
5078.
அடித்த தண்டு ஒடு அனலி தன் கைத்தலம்
பிடித்து மற்று ஒர் பெரும் கையினால் அவன்
தடித்த மார்பத் தடவரை சாய்ந்து உக
இடிப்பின் மும்மை இசைத்திட எற்றினான்.
125
   
5079.
எற்ற வெய்யவன் எல்லை இல் துன்பு உறச்
செற்றம் மிக்கு எழும் சிங்கனும் செம்கையில்
பற்று தண்டத் தொடும் அப்பாதகனைச்
சுற்றி வானம் துணுக்கு உற ஆர்த்தனன்.
126
   
5080.
மாறு இலாத அவுணனை வன் கையால்
சூறை போல அச் சிங்கன் சுலவலும்
ஈறு இல் பித்தினிலே மருவோன் மிகத்
தேறல் ஆர்ந்து எனத் தேற்றம் இன்று ஆயினான்.
127
   
5081.
ஆர் அழல் பெயர் அண்ணல் அறி ஒரீஇச்
சோரும் எல்லையில் துண் என ஏறிய
தேரை விட்டுத் திறல் அரிப் பேரினான்
பாரின் எற்றப் பதைப்பொடு துஞ்சினான்.
128
   
5082.
அண்டரும் திறலின் மிக்க அனலி அங்கு இறந்த வண்ணம்
கண்டனன் கவலா உள்ளம் அழல் எனக் கறங்கு                                 கண்ணான்
சண்டன் என்று உரைக்கும் பேரோன் தடுப்ப அரும்                                 படைகள் தன்கை
கொண்டு இவன் உயிரை இன்னே குடிப்பனால் என்று                                 சென்றான்.
129
   
5083.
என்றது ஓர் மாற்றம் கேளா எரி விழித்து இடியின் நக்குப்
பொன்றிய அனலி அங்கைப்போர் கெழு தண்டம் வாங்கிச்
சென்றனன் விரைவில் அன்னான் தேர்மிசைப் பாய்ந்து                                       நீலக்
குன்று எனும் வயிரத் தோள் மேல் புடைத்தனன் கூற்றம்                                       உட்க.
130
   
5084.
புடைத்தலும் உயிர்த்து நெஞ்சம் பொம் எனப் பொருமல்                                       எய்தித்
தடப் பெரும் தேரில் வீழும் சண்டனும் தனது செம் கை
எடுத்தது ஓர் தண்டம் தன்னால் எதிர் புகும் சிங்கன்                                       மார்பத்து
அடித்தனன் அவனும் தானும் ஆரஞர் உழந்து வீழ்ந்தான்.
131
   
5085.
அப்பொழுது அதனை நோக்கி அவுணரின் மாயன்                                    என்போன்
குப்பு உறு தடம் தேரோடும் குறுகலும் பூதர் தம்மின்
ஒப்பு இலா நீலன் நேர் போய் ஓச்சினன் கதை ஒன்று                                    அண்ணல்
முப்புரம் அதனில் தூண்டு மூரிவான் பகழி என்ன.
132
   
5086.
போந்தது ஓர் தண்ட மாயன் பொரு அகல் மார்பில் தாக்க
மாய்ந்தனன் போல நின்று வருந்தி மற்று அவன் தன்                                   பாணி
ஏந்து முத்தலை வேல் ஒன்றை எறிந்தனன் எழில்                                   ஆகத்தில்
சாய்ந்தது குருதி நீலன் தானும் அங்கு அயரா நின்றான்.
133
   
5087.
சிறிது போழ்து அதனில் தேறித் திரள் மணிக் கடகம்                                      சேர்த்த
எறுழ் வலித் தடக்கை தன்னால் எதிர்ந்தவன் உரத்தின்                                      எற்ற
அறை கழல் மாயன் தானும் அணங்கு உற நீலன்                                      என்போன்
கறை கெழு நாகம் என்னக் கனன்று இது கருதிச்                                      செய்வான்.
134
   
5088.
மந்தரம் தழீஇய தொல்லை வாசுகி என்ன மாயன்
சுந்தரத் தடம் பொன் தோளைத் துணைக்கையால்                            தொடர்ந்து வீக்கிக்
கந்தரம் தன்னில் தீய கறை செறி எயிற்றில் கவ்வி
முந்து உறு குருதிச் செந்நீர் குடித்தனன் மொய்ம்பின்                            ஓடும்.
135
   
5089.
சோரியது உண்டு நீலன் தொல் சினம் துறந்து நின்றான்
ஆர் உயிர் உண்டு போனான் அந்தகன் அனைய காலை
மூரி வில் தடக்கை மாயன் முடிந்தனன் சண்டன் சிங்கன்
பேரஞர் உழந்தோர் தேறிப் பின்னும் போர் புரியல்                                     உற்றார்.
136
   
5090.
கிட்டினர் தடம் தேர் மீது கிடந்த தண்டு ஏந்திக் கீழ்                                       போய்
ஒட்டினர் ஒருவர் தம்மின் ஒருவர் மேல் உடன்று பொங்கி
முட்டினர் இரண்டு பாலின் முறை முறை பெயர்ந்தார்                                       மொய்ம்பால்
வட்டு அணை திரிந்து தண்டில் தாக்கினார் மாற்று கின்றார்.
137
   
5091.
இங்கு இது போலப் பல் வேறு இயற்கையில் கதையின்                                     வெம் போர்
சிங்கனும் சண்டன் தானும் செய்தனர் திரிந்த வேலைப்
பொங்கிய பூதர் வேந்தன் பொருவரும் அவுணன் பொன்                                     ஆர்
அங்கையில் தண்டம் சிந்த அடித்தனன் அணிப் பொன்                                     தண்டால்.
138
   
5092.
வயிர்த்திடு தண்டம் அம் கண் வலி கெழு சிங்கன் மோத
அயிர்த்தொகை ஆதலோடும் ஆற்றல் சேர் அவுணர்                                     யாரும்
உயிர்த்தனர் என் கொலாம் என்று உன்னினர் உரும் ஏறு                                     என்னச்
செயிர்த்தனன் சண்டன் என்னும் செருவலான் உரைக்கல்                                     உற்றான்.
139
   
5093.
தண்டம் ஒன்று இற்றது என்று தருக்கலை தம் பொன்                                 தோளாக்
கொண்டதும் அஃதே அன்றோ கூற்றுவன் நகரும் மேலை
அண்டமும் உலையத் தொல் நாள் அடர்த்தனன் உனக்கு                                 இங்கு அஞ்சேன்
மண்டு அமர் புரிதி என்னா வலிகெழு கரம் கொண்டு                                 ஏற்றான்.
140
   
5094.
ஏற்றனன் இகலும் வேலை எரிசினம் கடவிச் சிங்கன்
ஆற்றலையாம் கொல் நீ என்று ஆற்றலை அணி பொன்                                    அண்டம்
போற்றுக என்று உய்ப்ப அம் கண் புகா நெறி புடைத்துக்                                    கையால்
கூற்றனும் உட்க ஆர்த்தான் குரு மணித் திரள் தோள்                                    கொட்டி.
141
   
5095.
அந் நெடும் தகையோன் ஆர்ப்ப அது பொறாது அழன்று                                    சிங்கன்
பொன் நெடும் தண்டால் அன்னான் புயம் இறப் புடைத்த                                    லோடும்
கல் நெடும் தோளும் ஓர் சார் கதும் என முரியத் தண்டும்
பல் நெடும் துணியாய்ச் சிந்திப் படி மிசைக் கிடந்தது                                    அன்றே.
142
   
5096.
புயம் தளர்ந்திடலும் சண்டன் போவது கரம் என்று                                 உன்னா
அயர்ந்திலன் ஒசி பொன் தோளை அம் கையின் இறுத்து                                 வாங்கி
வயம் கெழு தண்டில் பற்றி வட்டணை புரிந்தான்                                 வானோர்
வியந்தனர் இவனே கொல்லாம் வீரருள் வீரன் என்றே.
143
   
5097.
கரம் கெழு புயப் பொன் தண்டால் கார் கெழு சண்டன்                                   காமர்
உரம் கெழு உரத்தின் மோத உரு கெழு மடங்கல்                                   பேரோன்
இரங்கிலன் உவன் போல் யானும் எற்றலன் கரம் கொண்டு                                   என்னாச்
சரண் கொடே அவன் தன் ஆகத் தடவரை அதனைச்                                   சாய்த்தான்.
144
   
5098.
கண்டகன் சாய்த லோடும் கரம் எடுத்து ஆர்த்து வானோர்
புண் தரும் குருதி செம்கண் பூத நாயக நீ அன்றேல்
சண்டனை உதைப்பார் யாரே தாழ்த்திடல் அவன் தன்                                      ஆவி
கொண்டு அருள் இறையின் என்று குறை இரந்து அறையல்                                      உற்றார்.
145
   
5099.
வானவர் உரைகேளா மறலியொடு இகல் வெம் கண்
தானவன் இவனே என் தனி உயிர் அடுகிற்பான்
ஈனம் அது உறு தேவர் இவனொடு நுமை இன்றே
ஊன் உடல் உயிரோடும் உண்குவன் அது காணீர்.
146
   
5100.
என்னலும் இகல் சிங்கன் எரிகலுழ் விழியான் என்
முன் இனிது புகல் கின்றாய் முடிகுவை இனி என்னாக்
கொன் நவில் தருகையால் கொடிறு உடை தரம் ஓத
ஒன்னலன் அது போழ்தின் ஒலி முகில் என வீழ்ந்தான்.
147
   
5101.
போழ் உறு பகுவாயில் பொலி தரும் எயிறோடும்
வீழ் உறு நகையாலும் விரி குருதியினாலும்
தாழ் உறு மதி தன்னைத் தாரகை நிரை சூழ
ஊழ் உற அமர் செவ்வான் ஒத்தது அவ்வுழி அன்றே.
148
   
5102.
சண்டனும் இறலோடும் சமன் விட வருதூதர்
அண்டலர் வெருவா முன் அலமரல் உறுகின்றார்
கண்டனன் அது சிங்கன் கையனது உயிர் தன்னைக்
கொண்டு அணைகுதிர் என்னக் குறுகினர் அது                                   கொண்டார்.
149
   
5103.
ஆனது ஒர் செயல் பாரா அசமுகன் என ஓதும்
மானவன் இறை நில் நில் வந்து உனது உயிர் உண்பல்
ஏனையர் எனவே நீ எண்ணலை எனை என்னாக்
கான் நிமிர் தரு தேர் மேல் கடு விசையொடு சென்றான்.
150
   
5104.
சிங்கனது எதிர் செல்லும் செல் உறழ் பகுவாயான்
அங்கு அணுகிடும் வேலை அதி பல மது என்போன்
எங்கு இனி அகவாய் நீ இற்றனை இவண் என்னாப்
பொங்கிய சினமோடும் பொள் என விடை புக்கான்.
151
   
5105.
செம் தழல் புரை வெம் கண் திறல் அசமுகன் என்போன்
முந்து உற மது என்னும் மொய்ம்பினன் எதிர் கோடல்
அந்தகனொடு காலன் அமர் புரிதரவே முன்
வந்து எதிர் எதிர் தன்மை மானுவது எனலாம் ஆல்.
152
   
5106.
அணுகினர் இருவோரும் அசமுகன் அது காலைக்
குண நனி சிலை கொள்ளக் குலவிய சிலை கொள்ளாக்
கணிகையர் மிளிர் வேல் கண் கடை நிலவியது என்ன
நுணுகிய நுதி வெம் கணோன் கணை சிதறுற்றான்.
153
   
5107.
முன்னது வரலோடும் முகன் உறு செயல் ஓரான்
துன்னுபு செறி போழ்தும் துணை விழி இமையாதான்
தன்னிலை இறையேனும் தவிர்கிலன் ஒருதானே
அந்நிலை தனில் நின்றான் அடுதிறல் முயல் கின்றான்.
154
   
5108.
பால் உற நிமிர்கின்ற பழுமரம் அது பற்றா
மேல் உறு சரம் வீசான் விடுகணை பட மெய்யில்
சாலிகை என நின்றான் தகுவன் அது இரதத்தில்
கால் என விசை சென்றே கரு முகில் என ஆர்த்தான்.
155
   
5109.
ஆர்த்தனன் அது கேளா அசமுகன் அயர்வு எய்தித்
தேர்த்தனில் நில மீதில் சிலையொடு கணை சிந்தி
வேர்த்தனன் வறிது உற்றான் விம்மினன் மெலி தன்மை
பார்த்தனன் மது என் போன் இவை இவை பகர்கின்றான்.
156
   
5110.
வீரனும் அலை எஞ்சா வெம் சமர் வலன் எய்தச்
சூரனும் அலை நின்றே சூர் நிலை அது காணும்
தீரனும் அலை என்னே செரு முயலுதி நீ நின்
ஆருயிர் கொடு போக என்று அவனியின் மிசை                                   போனான்.
157
   
5111.
பார் இடன் நிலன் மேவப் பகர் அசமுகன் என்னும்
பேர் உடையவன் வெள்கிப் பெருமிதம் இலன் ஆகிப்
போர் இடை வெருவு உற்றேன் என ஒரு புரை உற்றேன்
ஆர் இடை இது தீர்வன் என அலமருகின்றான்.
158
   
5112.
ஆயிடை அவுணன் தான் அமர் புரிகிலன் ஆகிப்
போயினன் அவன் அந்தோ பொன்றுதல் இனிது என்னாத்
காயமொடு உளம் ஆனக் கனல் சுட மனம் வேவத்
தீ என வெகுள் உற்றான் செரு முயல் திறல் பெற்றான்.
159
   
5113.
ஒல்லையின் அவன் ஏகி உழி தனி தொடரா நின்
கொல்லுவன் இனி யாண்டுக் குறுகினும் அகலாதே
நில்லு நில்லு என வாரா நீல் நிற முகில் என்னச்
செல் உறழ் பகுவாயால் திசை செவிடு உற ஆர்த்தான்.
160
   
5114.
அற்றம் இல் மது என்போன் அசமுகன் உரை கேளாக்
கற்றதும் உள கொல்லோ கழறினை சிலவீரம்
பெற்றிலை எனை நாடிப் பெயருதல் பிழையேனும்
உற்றனை இசை எற்கோர் உறுபழி தருகின்றாய்.
161
   
5115.
என்று இது புகல்கின்றோன் எதிர் உற இகலிப் போய்ப்
பொன்திகழ் சிலை கோலிப் பொறி உமிழ் பிறைவாளி
ஒன்று அல பல உய்ப்ப உருகெழு சினம் எய்தி
நின்றனன் அவை யாவும் நெடியகை கொடுவீசி.
162
   
5116.
* வைத்தலைப் பகழிமேல் விடுப்ப மாமது
எய்த்திலன் இறையும் என்று எண்ணி எண்ணலன்
முத்தலைக் கழுவயின் முசலம் ஆதி ஆம்
கைத்தலப் படை எலாம் சிதறும் காலையே.
163
   
5117.
சாரதன் மெய் உறத் தளர்ந்து தானவன்
தேரினை விரைந்து தன் செம் கையால் எடா
வாரிதி மேல் செல விடுப்ப வஞ்சகன்
பாரிடை ஒல்லையில் பாய்ந்து மேயினான்.
164
   
5118.
குப்புறு கின்றவன் கூளி வேந்தன் முன்
வெப்ப மொடு அணுகு உறா வீங்கு தோளினால்
துப்பு உறு மற்றொழில் தொடங்க வானகத்து
அப்புறம் அவன் செல அடி கொண்டு ஓச்சினான்.
165
   
5119.
வெய்து என இறந்து வான் மீண்டும் பூதன் முன்
எய்தினன் அவன் உரத்து இடியின் எற்றியே
வைதனன் போயினன் மறைந்து மற்று ஒரு
கைதவம் நினைந்தனன் ககனம் புக்கு உளான்.
166
   
5120.
வரந்தனில் பெற்றதோர் மாயன் நேமியைக்
கரம் தனில் எடுத்தனன் கருத்தில் அர்ச்சனை
புரிந்தனன் தொழுதனன் போற்றிப் பூதன்மேல்
விரைந்து உற விடுத்தனன் விளியும் தன்மையான்.
167
   
5121.
மாசு உறும் அசமுகன் மதுவின் ஆகமேல்
பாசனம் வியப்ப மால் பரிதி உய்த்தலும்
காசினி அவன் வெறும் கரத்தன் ஆதலின்
வீசிய அப்படை வெகுண்டு மீண்டதே.
168
   
5122.
கணையிருள் உருவினைக் கனலி சேர்ந்து என
முனை கெழும் அசமுகன் முடியை அட்டதால்
தனது கை நேமி தன்னால் உறாதது ஓர்
வினை இலை என்பது மெய்மை போலும் ஆல்.
169
   
5123.
உலந்தனன் அசமுகன் உருமு வீழ்ந்து என
நிலம் தனில் வீழ்தலும் நின்ற தானவர்
புலந்தனர் ஆழி மால் படையில் போயது
தொலைந்தது இன்று அமரர் எனா அமரர் துள்ளவே.
170
   
5124.
சாற்றிய அவுணர் தம் தலைவர் ஏனையர்
நால் திறப் படையொடு நடந்து தம் உளம்
சீற்றம் அது ஆகியே செரு விளைத்தலும்
ஏற்று எதிர் சாரதர் இரிந்து போயினார்.
171
   
5125.
வெற்றி கொள் தானவர் வெகுண்டு போர் செயப்
பற்று அலர் ஆகிய பார் இடத்தவர்
இற்றனர் வன்மையை இரிந்து போயினார்
மற்று அது கண்டனன் வலிய தண்டகன்.
172
   
5126.
ஏற்றம் ஆகும் இலக்க வில் வீரருள்
சாற்று பேரிசைத் தண்டகப் பேரினான்
கூற்றை நேர்வது ஒரு சிலை கோட்டியே
மாற்றலார் மிசை வாளிகள் தூவினான்.
173
   
5127.
மின்னு நாரி வியன் சிலையே சிலை
துன்னு நாண் ஒலி சூர் உரு மேற்று ஒலி
பொன்னின் வாளி மழை பொழிந்திட்டதான்
மன்னு தண்டக மாப் பெரும் கொண்டலே.
174
   
5128.
தட்டின் மொய்ம்பு உடைத் தண்டக மேலையோன்
விட்ட வாளிகள் வெய்யவர் தானையுள்
பட்ட காலைப் பரந்து எழு சோரி நீர்
மட்டு இலாத குடிஞையின் வந்ததே.
175
   
5129.
இரதம் இற்றன எண் இல வண்ணம் ஆர்
பரிகள் பட்டன பல பல மா மதக்
கரிகள் பட்ட கணிப்பு இல எண் இலா
அரிகள் நேர் அவுணப் படை பட்டதே.
176
   
5130.
இந்தவாறு இவர் பட்டிட ஏனையோர்
நொந்து தம் உயிர் காப்ப நுதலியே
சிந்தியே எண் திசையினும் பாரினும்
அந்தரத்தினும் ஆய் இரிந்து ஓடினார்.
177
   
5131.
தண்டா அவுணப் படை இவ்வகை சாய்ந் வாறும்
எண் தானை மள்ளர் பலர் அம் கண் இறந்த வாறும்
விண் தாழ் கதிரைச் சிறை பூட்டிய வீர வீரன்
கண்டான் வெகுண்டான் நகைத்து ஒன்று கழறுகின்றான்.
178
   
5132.
மட்டார் தெரியல் மகவான் முதல் வான் உளோர்கள்
எட்டாத சேணில் தொலைவு எய்தி இரிந்து போக
வட்டு ஆடல் செய்த நமரங்களின் ஆவி மாண்டு
பட்டார் கொல் ஈசன் மகன் ஏவு படைகள் தம் ஆல்.
179
   
5133.
எல்லார் கதிரைச் சிறை பூட்டிய யானும் நிற்க
ஒல்லார்கள் ஆற்றல் உளராய் அடும் ஊற்றம் நன்று ஆல்
கொல்லாது சீற்றம் இலதாய் இகல் கொண்டு உறாதேல்
வெல்லாது கொல்லோ அரிதன்னையும் வேழம் எல்லாம்.
180
   
5134.
வாரார் கழல் கால் அமரார் அட மாய்ந்த வெள்ளம்
ஈர் ஆயிரத்தின் மிகும் அல்லதை எஞ்சு உறாது ஆல்
பேராமல் என் பாங்கரின் நிற்பன பேசில் வெள்ளம்
ஓர் ஆயிரமே இரிகின்றது ஒழிந்தது எல்லாம்.
181
   
5135.
ஒன்றே வரிவில் ஒருவேன் பிடித்து ஒன்னலார் மேல்
சென்றே அடல் செய்திலன் முன்னம் என் சேனை                                    எல்லாம்
கொன்றேன் இயானே பொர விட்டனன் கூழை தன்னின்
நின்றேன் இஃது ஓர் பொருள் என்று நினைத்திலேன் ஆல்.
182
   
5136.
தீரும் செயலை நினைந்து ஆவது என் சென்றி யானே
ஓர் ஒன்று கன்னல் முடிகின்ற முன் ஒன்னலார் தம்
பேர் இன்று எனவே அடுவேன் அது பெற்றிலேன் ஆல்
சூரன் குமரன் அலன் யான் எனச் சூள் மொழிந்தான்.
183
   
5137.
பானுப் பகைவன் இவை கூறிப் பரிதி மான்தேர்
மானக் கடுங்கோல் வலவன் மரபில் கடாவச்
சேனைக் கடலின் உடன் சென்று தன் செம் கை தன்னில்
கூனல் சிலையைப் புருவத்தின் ஒடும் குனித்தான்.
184
   
5138.
மே தக்க தன் கைச் சிலைவாங்கி விளங்கும் வெள்ளி
சோதிக்கு இறையாய் உறும் எல்லையில் சூல் கொள்                                  மேகம்
மூதக்க பாரில் சொரிந்து என்ன முனிந்து நேரும்
பூதப் படை மேல் சரமாரி பொழிதல் உற்றான்.
185
   
5139.
பொழிகின்ற காலைத் திறன் மேதகு பூதர் நோக்கிக்
குழிகின்ற கண்ணின் அழல் காலக் குலா சலங்கள்
ஒழிகின்ற வெற்பு முழுதும் பறித்து ஒல்லை வீசி
அழிகின்ற காலத்து உரும் ஏறென ஆர்த்து நின்றார்.
186
   
5140.
என்றின் பகைஞன் தனைப் பூதர்கள் யாரும் வீசும்
குன்றம் பலவும் புடைசுற்றக் குறித்து நோக்கி
ஒன்று அங்கு அதனுக்கு ஒரு கோடி ஒண் கோலது ஆகத்
துன்றும் படியே முறை தூண்டித் துகள் செய்திட்டான்.
187
   
5141.
வண்டு ஊது பூம் தாரவன் வாளியின் மாய்ந்த குன்றம்
நுண் தூளி ஆகியது வான் இடை நொய்தின் ஏகி
விண்டூர்கள் தோறும் செறிகின்றவர் மேனி தோயக்
கண்டு ஊதி ஆற்றாதவர் விண் இடைக் கங்கை புக்கார்.
188
   
5142.
தேவுத் தடம் தேர் ஒருவன் செரு எல்லை முற்றும்
மேவிக் கறங்கில் திரிவான் தனி வில்லை வாங்கிக்
கோவைத் தொடை ஒன்றினில் ஆயிர கோடி வாளி
தூவிக் கணத்தின் தொகை முற்றும் தொலைவு செய்தான்.
189
   
5143.
நன் கால நீவி மிளர்கின்ற நறு நெய் தோய்ந்த
மின் கால் அதனின் விரைகின்ற செம்தீயின் வெய்ய
முன் காலுகின்ற சுடர் உள்ளன மூன்று கண்ண
வன் காலன் அஞ்ச அட வல்லன வஞ்சன் வாளி.
190
   
5144.
தோளைத் துணிக்கும் கரத்தோடு துணிக்கும் மார்பைத்
தாளைத் துணிக்கும் எரி குஞ்சித் தலை துணிக்கும்
வாளைத் துணிக்கும் அணி மெய் வயப் பூதர் வாழ்க்கை
நாளைத் துணிக்கும் அசுரன் விடு நாம வெங்கோல்.
191
   
5145.
சூரற்கு இனிய மகன் வாளி துணித்து வீச
வீரத்தின் மிக்க கணத்தின் தலை வீழும் முன்னர்ச்
சீர் உற்ற சோரிப் புனல் சிந்துவ தீயர் சென்ற
பாரைப் புனிதம் செயும் தன்மை படைத்தது அன்றே.
192
   
5146.
பொன் சென்று இலங்கும் கணை தள்ளலும் பூதர் சென்னி
மின் சென்ற வானத்து எழச் சோரியு மீது எழுந்த
என் சென்றனை ஆம் குமரன் படை ஏகல் என்னாப்
பின் சென்று பற்றித் தருவான் தொடர் பெற்றி போலும்.
193
   
5147.
எய்யும் தொழிலுக்கு அவன் மேலவர் யாவர் எங்கள்
ஐயன் படை ஆகிய பூதர் தம் ஆற்றல் மொய்ம்பும்
கையும் வரையும் சிரமும் கழல் காலும் மார்பும்
ஒய் என்று அறுக்கும் அவுணன் விடும் ஒன்று ஒர் வாளி.
194
   
5148.
வானோர் தொகையைச் சிறை இட்டவன் மற்று இவ்வாறு
தான் ஓர் சிலையின் வலியால் அடத் தாவில் பூதர்
ஆனோர் அளப்பு இல்லவர் மாய்ந்திட ஆற்றல் இல்லா
ஏனோர்கள் யாரும் உடைவார் இவை எண்ணல் உற்றார்.
195
   
5149.
மின்னும் புகர் வேலவன் அங்கு உளன் வீரவாகு
பின் நின்றனன் ஈது உணரான் பிறர் ஆரும் அற்றே
முன் நின்ற நம்மை இவன் அட்டிடும் மொய்ம்பு இலேம்                                        யாம்
என் இங்கு நிற்பது எனப் பூதர் இரிந்து போனார்.
196
   
5150.
இரிகின்ற பூதர் எவரும் படைக்கு ஈற்றின் நின்ற
வரிகின்ற தண் தார் அடல் மொய்ம்பு உடை வள்ளல்                                      பாங்கர்ப்
பரிகின்ற நெஞ்சத்தொடு செல்ல அப் பான்மை யாவும்
தெரிகின்றனன் உக்கிரன் என்பது ஒர் சேனை வேந்தன்.
197
   
5151.
கண்டு உக்கிரன் ஆகிய பூதன் கனன்று செம் கண்
விண்டில் பெரிது நிவப்பு உற்று விளங்கு பொன்னம்
தண்டப் படை ஒன்றினை அம் கையில் தாங்கி ஏகி
அண்டத்தவர்கள் புகழத் தனி ஆர்த்து நேர்ந்தான்.
198
   
5152.
செற்றத்துடன் உக்கிரன் நேர்புகு செய்கை தன்னைக்
கற்றைக் கதிரை தளை இட்டவன் கண்டு தன்கைக்
கொற்றச் சிலையைக் குனித்து ஆயிரம் கோடி வாளி
முற்றத் துரந்தே அவன் யாக்கையை மூடி ஆர்த்தான்.
199
   
5153.
மைக்கின்ற மேனி நெடும் பூதனை வஞ்சன் வாளி
தைக்கின்று இல வான் உதி மாய்ந்து தளர்ந்து வீழ்ந்த
மெய்க்கின்ற இன்பும் அறனும் விளையாது வாளா
பொய்க் கின்றவன் கைப் பொருள் வல்லையில் போவதே                                        போல்.
200
   
5154.
விடுகின்ற வாளி பயன் இன்று அயல் வீழ்தலோடும்
படுகின்ற தன்மை அது கண்டனன் பானுகோபன்
அடுகின்றது எவ்வாறு இவன் தன்னை என்று அம்கண்                                      வானம்
தொடுகின்றது ஆங்கு ஓர் எழுவத்தைச் சுழற்றி விட்டான்.
201
   
5155.
தீயன் முசலந்தனை உக்கிரன் செம்கை தாங்கும்
ஆய் திண் கதையால் சிதைத்தே அவன் தேரை அண்மிப்
பாயும் பரியைப் புடைத்து ஒல்லையில் பாரின் வீட்ட
வேய் என்று பல்கால் இகழ்ந்து ஆர்த்தனர் யாரும்                                     வானோர்.
202
   
5156.
புரவித் தொகுதி விளிவாகப் பொருவின் மைந்தன்
எரியில் கனன்று புடை ஓர் இரதத்தின் வாவி
வரிவில் குனித்துக் கிரன் ஏந்தும் வலிய தண்டம்
முரி உற்றிடவே ஒரு நூறு மொட்டு அம்பு தொட்டான்.
203
   
5157.
நூறு ஒண் கணையால் அவன் தண்டம் நுண்டூளது ஆகச்
சீறும் திறல் உக்கிரன் கைக்கொடு தீயன் மைந்தன்
ஏறும் தடம் தேர் தனை வானின் எடுத்து வீச
வீறும் பரிதி பதத்தின் துணை மேயது அன்றே.
204
   
5158.
துன்னான் மதலை வருகின்றது சூரன் நோக்கி
முன் நாளின் நின்று நமைப் பற்ற முயன்று உளான் கொல்
அன்னான் புணர்ப்பை உணரேன் அணித்து ஆகும்                                     இன்னம்
என்ன ஆவதோ என்று உளத்து உன்னி இரிந்து                                     போனான்.
205
   
5159.
தேரோடு சென்ற அசுரன் மகன் சேணின் மீண்டு
பாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கில்
காரோடு வானம் தவறு உற்றுழிக் காமர் தாருத்
தூரோடு சாய்ந்து மறிகின்றது ஒர் தோற்றம் ஒக்கும்.
206
   
5160.
வீழுகின்ற தேர் ஒருவியே வெம் கதிர்ப் பகைஞன்
தாழும் மெய்யுடை உக்கிரன் தன்னை வந்து அணுகி
மாழை ஒண் கையால் எற்றியே எடுத்து வான் உலகோர்
ஏழையும் கடந்து அப்புறம் சென்றிட எறிந்தான்.
207
   
5161.
எறியும் வெய்யவன் வேறு ஒரு தேரின் மேல் ஏறி
வெறி கொள் பங்கயத்து அண்ணலார் விதித்து முன்                                அளித்த
செறியும் மூவிலை இருதலை வேலினைச் சேண் போய்
மறியும் உக்கிரன் எதிர்புக விடுத்தனன் மன்னோ.
208
   
5162.
விடுத்த தெய்வ வேல் உக்கிரன் மருமத்தை விடர் போல்
படுத்தியே புகுந்து அப்புறம் போந்திடப் பாரின்
அடுத்து மற்று அவன் சிறிது அயர்வு உற்றனன் அது                                  கண்டு
எடுத்த குன்றொடும் தண்டி என்று உரைப்பவன்                                  எதிர்ந்தான்.
209
   
5163.
தண்டி ஆகிய பாரிடன் தனது கைத் தலத்தின்
மிண்டு கின்றது ஓர் அடுக்கலை அவன் மிசை வீசக்
கொண்ட வார்சிலை வாங்கி ஆயிரம் கணை கோத்துக்
கண்ட துண்டம் அது ஆக்கினன் அதனை ஓர் கணத்தில்.
210
   
5164.
வெற்பு நுண்டுகள் ஆதலும் விண் உற நிமிர்ந்து
கற்பகம் புரை மரா மரம் ஒன்றினைக் களைந்து
வற்பு உறும் கரம்தனில் எடுத்து அவுணர் கோன்                                   மணித்தேர்
முன் புகுந்திடும் பரிசுகளைப் புடைத்தனன் மொய்ம்பால்.
211
   
5165.
மொய்ம்பினில் புடைத்து இடுதலும் கவனமா முழுதும்
அம் புவித் தலை மறிந்தன அதற்கு முன் அவுணன்
பைம் பொன் முத்தலைப் பல பதினாயிரம் பகழி
செம் புனல் கொளத் தண்டி தன் நெற்றியுள் செறித்தான்.
212
   
5166.
செறித்த காலையின் மெலிந்தனன் தண்டியச் செய்கை
குறித்து நோக்கியே பினாகி ஆம் பூதன் ஓர் குன்றம்
பறித்து வீசுவான் முயறலும் ஆயிரம் பகழி
நிறத்தின் மூழ்குமாறு எய்தனன் அனையனும் நின்றான்.
213
   
5167.
குன்று கொண்ட கைப் பினாகியும் தொல் வலி குறைந்து
நின்ற காலையில் ஏனைய பூதரும் நேர்ந்து
சென்று வீற்று வீற்று அமரினைச் சில பொழுது இயற்றி
ஒன்று தீம் கதிர்ப் பகைஞனுக்கு ஆற்றலர் உடைந்தார்.
214
   
5168.
எண்டரும் கணத் தலைவர்கள் தொலைதலும் இதனைக்
கண்டு வெம் சினம் திருகியே எதிர்ந்தனர் கபாலி
அண்ட லோசனன் நிரஞ்சனன் உருத்திரன் அகண்டன்
தண்டகன் முதல் இலக்கம் ஆகிய படைத் தலைவர்.
215
   
5169.
மிடல் படைத்திடும் இலக்கம் ஆம் வீரரும் விரவித்
தடம் அணிப் பெரும் தேரொடும் அவுணன் முன் சார்ந்து
சுடர் உடைக் கடகம் கிளர் செம் கையில் துன்னும்
கொடு மரத்தினைக் குனித்தனர் நாண் ஒலி கொண்டார்.
216
   
5170.
கவடு பட்டிடும் ஈர் இரு மருப்பு உடைக் ககுபக்
குவடு பட்டதை உரைப்பது என் ஒரு கரிக் கொம்பால்
சுவடு பட்டிடும் மேருவும் சலித்தது துளங்கிச்
செவிடு பட்டன வானமும் வையமும் திசையும்.
217
   
5171.
பானு கோபன் மற்று அது கண்டு சிறு நகை படைத்து
மான வெம் சிலை ஒன்றினைத் தோள் கொடு வணங்கி
மேல் நலம் திகழ் அண்டங்கள் யாவையும் வெருவத்
தேனின் வீழ்ச்சியை மலைந்திடும் குணத்து ஒலி செய்தான்.
218
   
5172.
உலகத்தின் மேல் படு மொய்ம்பு உடை இலக்கரும்                                  ஒருங்கே
வலத்தில் வெம் சிலை இடத்தினில் வடிக்கணை தொடுத்து
நிலத்தில் வந்து கார் நெடும் புனல் சிதறிய நெறி போல்
புலத்தியன் முறைப் பேரன் மேல் தலைத்தலை                                  பொழிந்தார்.
219
   
5173.
தொடலை அம் புயத்து இலக்கம் ஆம் பொருநரும்                                 தொடுத்து
விடு சரத் தொகை அவுணன் மேல் வீற்று வீற்று ஏகல்
நெடிய தெண் திரைப் பேரியாறு எண்ணில நிரந்து
புடவி கொண்டது ஓர் அளக்கர் மேல் போவன போலும்.
220
   
5174.
இலக்கர் விட்டிடும் சரம் எலாம் அவுணர்கள் எவரும்
கலக்கம் உற்றிட வருதலும் சூர் மகன் கண்டே
கொலைக் கொடும் சிலை வளைத்து அதில் ஆயிரம்                                   கோடி
விலக்கு அரும் கணை தொடுத்து அவை அறுத்தனன்                                   விரைவில்.
221
   
5175.
அறுத்து மற்றும் ஓர் ஆயிர கோடி அம்பு அதனைச்
செறுத்து விட்டிட அறுமுகன் பரிசனர் தெரிந்து
விறற் கடும் கணை ஆங்கு அதற்கு எழுமையால் விடுத்து
மறித்து மீண்டு இடு வித்தனர் அவுணர் கோன் வாளி.
222
   
5176.
அறம் திறம்பிய சூர்மகன் வாளிகள் அனைத்தும்
முறிந்து மற்று அவன் தன் மிசை உற்றன மூழங்கிச்
செறிந்த மா முகில் உயிர்த்திடும் சீகரம் செல்லா
தெறித்து கால் பொர வந்துழி மீண்டு போம் இயல் போல்.
223
   
5177.
செம் கதிர்ப் பகை சீறியே செயிர் இலா வயிரத்
துங்க வெம் கணை அபரித மிசை மிசை துரந்து
வெம் கண் வீரர்கள் செலுத்திய சரம் எலாம் விலக்கி
அம்கையில் கொண்ட கார்முகம் இலக்கமும் அறுத்தான்.
224
   
5178.
பிடித்த கார்முகம் அற்றுழி மானவர் பெயர்த்தும்
தடத்த தேர் இடை இருந்திடும் சேமம் ஆம் தனுக்கள்
எடுத்து வாங்கியே சரம் துரந்து இரவி அம் பகைவன்
தொடுத்து மேல் விடும் கணைகள் இடை இடை                               துணித்தார்.
225
   
5179.
சூரன் மா மகன் தொடும் சரம் துணித்த பின் தூண்டும்
தேரில் ஆயிரம் பரியின் நூறு ஆயிரம் தெழித்துக்
கார் உலா வரு பதாகையில் ஆயிரம் கடவி
ஊரும் வன்மை சேர் வலவன் மேல் ஆயிரம் உய்த்தார்.
226
   
5180.
வசை இல் வீரர்கள் இவ்வகை விடுத்தலும் மனத்தில்
பசை இல் சூர் மகன் இரதமும் பரிகளும் பாகும்
அசனி கொண்டது ஓர் துவசமும் அற்றன அதன் பின்
விசையில் வேறு ஒரு தேர் இடைப் பாய்ந்தனன்                               வெகுண்டு.
227
   
5181.
வையம் மேல் செலும் அவுணர்கோன் தன் சிலை                                வணக்கிச்
செய்ய கூர்ங்கணை நூறு நூறு ஆயிரம் செலுத்தி
ஐயன் விட்டு அவர் தேரொடு சிலைகளை அறுத்து
மெய் இடம் தொறும் அழுத்தினன் எண் இலா விசிகம்.
228
   
5182.
பரிதி மாற்றலன் பகழிகள் மெய் எலாம் பட்டுக்
குருதி சோர்தலும் இலக்கரும் தொல் வலி குறைந்து
பெரிது நோய் உழந்து ஆற்றலர் ஆகியே பின்னர்ப்
பொரு திறம் தனை நினைந்திலர் உடைந்து பின் போனார்.
229
   
5183.
வற் புறுத்திய இலக்கம் வில்லாளரும் மலைய
வில் பிடித்தவன் ஒருவனே யாரையும் வென்றான்
முன் பகல் புரி தவப் பயன் இஃது என மொழிமோ
கற்பின் ஆற்றல் என்று உரைத்துமோ கழறுவது எவையே.
230
   
5184.
ஆன காலையில் வீரகோள் அரி என அறையும்
மான வீரன் மற்று அது கண்டு தனது வில் வளைத்துப்
பானு கோபன் முன் எய்தியே பிறை முகப் பகழி
சோனை மாரியும் விம்மிதம் உற்றிடச் சொரிந்தான்.
231
   
5185.
சொரிந்த காலையில் அது கண்டு சூரன் மா மதலை
சிரம் துளக்கியே ஈங்கு இவன் ஆற்றலும் திறலும்
பெரும் தனிச்சிலை விஞ்சையும் நன்று எனப் பேசி
வரிந்த கார் முகம் குனித்தனன் பனித்தனர் வானோர்.
232
   
5186.
குனித்த சாபத்தின் நூறு நூறு ஆயிரம் கோடி
நுனித்த வச்சிர நொறில் உடைப் பகழிகள் நூக்கித்
தனித்து நேர்ந்தவன் விடுத்திடும் சரம் எலாம் தடிந்து
துனித்திடக் கணை ஆயிரம் அழுத்தினன் தோள் மேல்.
233
   
5187.
தோளில் ஆயிரம் வெம் கணை அழுத்தலும் தோலாக்
கோள் அரித் திறல் பேரினன் கோமகன் துரந்த
வாளி யாவையும் விலக்கியே ஆங்கு அவன் மருமம்
சாளரம் படச் செறித்தனன் ஆயிரம் சரங்கள்.
234
   
5188.
சரங்கள் ஆயிரம் அகல மேல் அழுத்தலும் தகுவன்
இரங்கி நோய் உழந்து ஆற்றவும் முனிவு செய்து இவனைக்
கரம் கொள் வில்லினால் வெல்ல அரிதாம் எனக் கருதி
உரம் கொள் விண்டுவின் படைக் கலம் தனை எடுத்து                                     உய்த்தான்.
235
   
5189.
நாரணன் படை ஆங்கு அவன் உருக்கொடு நடந்து
வீர கோளரி விடுத்திடும் சரம் எலாம் விழுங்கிப்
பாரும் அண்டமும் நடுக்கு உற இடிக்குரல் பகுவாய்க்
கார் இரிந்திட ஆர்ப்பொடு கடிது சென்றதுவே.
236
   
5190.
விண்டுவின் படை அணுகலும் விறல் அரி அதனைக்
கண்டு மால் படை எடுக்கும் முன் அப்படை கடிதாய்
வண்டு உலாம் தொடை மார்பு இடம் புகுந்து மன் உயிரை
உண்டது இல்லை ஆல் அவசம் ஆக்கியது அவன்                                  உணர்வை.
237
   
5191.
அண்ணல் ஏந்திடும் வேல் படை ஆணையால் அனையான்
உண்ணிலா உயிர் கொள அஞ்சி எருவை நீர் உண்டு
கண்ணனார் படை சிறிது தன் வன்மையும் காட்டித்
துண் எனப் பின்னர் மீண்டது சூர் மகன் தன்பால்.
238
   
5192.
மீண்ட காலையில் வீர கோளரி அவண் வீழ்ந்து
மாண்டுளான் என மயங்கினன் அங்கு அது வய மார்த்
தாண்டன் என்பவன் கண்டு தன் தனிச்சிலை குனித்து
மூண்ட செற்றமொடு அணுகினன் கதிர்ப் பகை முன்னர்.
239
   
5193.
ஓங்கல் வாகுடை வீரன் நேர்ந்திடும் முன் ஒண் கையில்
தாங்கும் வில்லினை அவுணன் ஓர் ஆயிரம் சரத்தால்
ஆங்கனம் துணித்து ஆயிரம் கணை நுதல் அழுத்த
ஏங்கினார் சுரர் அனையன் வேறு ஒரு சிலை எடுத்தான்.
240
   
5194.
எடுத்த கார்முகம் வாங்கும் முன் இரவி அம் பகைஞன்
தொடுத்து நூறு கோல் அதனையும் ஓர் இரு துணியாப்
படுத்து ஓர் ஆயிரம் பகழியால் தேரொடும் பரியை
முடித்து வாளி ஓர் ஏழு நூறு உய்த்தனன் மொய்ம்பில்.
241
   
5195.
தேர் அழிந்திடச் சிலை அதும் அழிந்திடத் திறல் சேர்
பேர் அழிந்திடத் தனிமையாய் நின்றவன் பிரியா
ஊர் அழிந்திட வறியன் ஆம் பரிதி போல் உற்றான்
கார் அழிந்திட ஆர்த்தனன் கிளர்ந்து எழும் கதத்தான்.
242
   
5196.
பாரக மாப் புவி அகழ்ந்திடும் பணை மருப்பு இரட்டை
வராகம் ஆயிரத்து ஆற்றல் பெற்று உடைய சூர் மகன்                                         மேல்
விராக நெஞ்சுடை விறல் கதிர் பாய்ந்தனன் விண்மேல்
இராகு வின் மிசைத் தினகரன் வாவினான் என்ன.
243
   
5197.
பாய்ந்து திண் திறல் வெய்யவன் வெய்யவன் பகைஞன்
ஏந்து வார்சிலை பறித்து இரு துணி படுத்து எறிய
வேந்தன் மா மகன் வெகுண்டு தன் மருங்கிடை விசித்த
நாந்தகம் முரீஇக் குற்றினன் மருமத்தின் நடுவண்.
244
   
5198.
வீர வெய்யவன் உரமிசைச் செலுத்திய வெம்கண்
கூரும் வாள் படை வாங்கும் முன் ஆங்கு அவன் குருதி
சூரியன் பகை அகலம் வந்து உற்றது தூயோன்
தாரை வாள் ஒன்று மாறு போய்க் குற்றியது அகவின்.
245
   
5199.
குற்றி வாங்கு முன் வீரமார்த் தாண்டனும் கொதித்துக்
கற்றை வெம் சுடர்ச் சுரிகையை மருங்கு உறை கழித்து
மற்று அவன் மணி மார்பத்து வயிரவான் கவசம்
இற்றிடும் படி குற்றினன் யாவரும் இரங்க.
246
   
5200.
கிளைத்திடும் திறல் வெய்யவன் குற்றலும் கேடு
விளைத்த சூர்மகன் தன் உடைச் சுரிகையால் மீட்டும்
குளத்தில் மூழ்குறக் குற்றினன் அன்னது ஓர் குற்றில்
களைத்து வீழ்ந்தனன் கால் பொர மறிந்த கற்பகம் போல்.
247
   
5201.
தாழ்ந்த சோரியும் அலக்கணும் பெருகு உறத் தடந்தேர்
வீழ்ந்தவன் தனை விளிந்தனன் இவன் என விடுத்துத்
தாழ்ந்தது ஓர் பெரும் தனுவினை எடுத்துழி தன்னில்
சூழ்ந்த தானையோடு ஏற்றனன் சூரியன் பகைஞன்.
248
   
5202.
ஏற்று நேர்வரு சூரன் மா மதலையை எதிர்ந்து
போற்றலார் புகழ் வீர ராக்கதன் எனும் பொருநன்
காற்றின் வந்தனன் துணைவர்கள் தொலைந்ததும்                                 கண்டான்
சீற்றம் உள்ளுற நிமிர்ந்து எழக் குனித்தனன் சிலையை.
249
   
5203.
சிலை குனித்து ஒரு பத்து நூறு அயில் கணை தெரிந்தே
ஒலி உடைக் கழல் சூரன் மா மதலை மேல் உய்ப்ப
விலகி யத்தொகைப் பகழியால் நம்பி தன் வியன் தேர்
வலவனைத் தலை துணித்தனன் வாளி நூறு அதனால்.
250
   
5204.
நூறு வாளியால் சூதன் மாண்டிடுதலும் நொடிப்பில்
வேறு ஒர் பாகனை வீர ராக்கதன் நிறீஇ வெகுளா
ஆறு மாமுகன் அடி நினைந்து ஆயிரம் கணையால்
கூறு செய்தனன் அவுணர் கோன் குருமணி மகுடம்.
251
   
5205.
உவமை நீங்கிய ஐ வகைத்து ஆய வேற்று உருவின்
மவுலி இற்றிடத் திரு இன்றி மன்ற நாண் எய்தி
அவதி இல்லதோர் பெரும் சினம் மூண்டு எழ அவுணன்
குவடு இலா மணிக் குன்று போல் நின்றனன் குறுகி.
252
   
5206.
மணி இழந்திடும் அரவு போல் கதிர் இலா வான் போல்
பணை இழந்திடும் கற்பகப் பழுமரம் தனைப் போல்
துணை மருப்பினை இழந்திடும் தந்தி போல் தொல்லை
அணி இழந்திடும் மகளிர் போல் அழகு இலன் ஆனான்.
253
   
5207.
இற்று ஒழிந்திடு மகுடம் நீத்து ஏவலர் அளித்த
கற்றை ஒண் சுடர் மவுலி ஒன்றினை முடி கவித்து
வெற்றி வீர ராக்கதன் விடு சரம் எலாம் விலக்கி
மற்று அவன் சிலை துணித்தனன் வாளி ஆயிரத்தால்.
254
   
5208.
ஆடல் வெம் சிலை அறுத்தலும் வயம் உடை அரக்கன்
நாடி ஓர் தனு எடுக்கும் முன் நாகு இளம் கதிரை
வீடரும் தளை இட்டு அவன் விசிகம் ஆயிரத்தால்
பாடு செய்தனன் அனையவன் தனது தேர்ப்பரியை.
255
   
5209.
மாய்ந்து மாத் தொகை படுதலும் வீரன் ஓர் மணித்தேர்
பாய்ந்த காலையில் இரவி மாற்றலன் அவன் பாணி
ஏந்து வில்லினை ஆயிரம் பகழியால் இறுப்ப
வேந்தன் மா மகன் தன் மிசை அயில் ஒன்று விடுத்தான்.
256
   
5210.
விடுத்த வேலினை நூறு கோல் தொடுத்து அவன் வீட்டத்
திடத்தின் மேல் படு வீர ராக்கதன் அது தெரிந்து
தடத்த தேரினும் இழிந்து அறை கூவியே தனி போய்
எடுத்து எறிந்தனன் பானுகோபன் தனி இரதம்.
257
   
5211.
எறியும் எல்லையில் தகுவர் தம் குரிசில் விண் எழுந்து
வெறி கொள் பங்கயத்து அண்ணல் முன் கொடுத்தது ஓர்                                   வேலைச்
செறுநன் ஆவியை உண்க என விடுத்தலும் சென்று
விறல் அரக்கன் மேல் பட்டது அங்கு அனையனும்                                   வீழ்ந்தான்.
258
   
5212.
தரையில் வீழ்ந்திடும் வீர ராக்கதன் நனி தளர்ந்தான்
முருகன் ஆணையால் போந்திலது அவன் உயிர் முன்னம்
இரவி அம் பகை திகிரியின் மறிந்துளான் எழுந்து
பொருதல் வன்மையின்று ஆகியே இடைந்து பின்                                 போனான்.
259
   
5213.
போன காலையில் வேறு ஒரு தேர் இடைப் புகுந்து
பானு மாற்றலன் வணக்கி ஓர் கார் முகம் பற்றி
ஊனும் ஆவியும் கவர்ந்திடும் சர மழை ஓச்சி
ஏனை வீரர்கள் தம்மையும் வெல்லுமாறு எதிர்ந்தான்.
260
   
5214.
வீர வந்தகன் வீரமா மகேச்சுரன் வீர
தீரன் வீர மா மகேந்திரன் திறல் புரந்தரனாம்
நேர் இலார் இவர் ஐவரும் சிலை கொடு நேர்ந்து
சூரியன் பகைவன் மிசைக் கணை மழை சொரிந்தார்.
261
   
5215.
சொரிந்து வேறு வேறு அளவை இலாத போர்த்                                  தொழிலைப்
புரிந்து பின் உறச் சூர் மகன் சரங்கள் மெய் புதைய
வருந்தி நின்றனர் இருவர்கள் மறிந்தனர் ஒருவர்
இரிந்து தேர் சிலை அழிந்து நொந்து ஏகினர் இருவர்.
262
   
5216.
சாற்றும் இத்திறம் வீரர்கள் யாரையும் தனி மைந்தன்
வீற்று வீற்று அமர் ஆடியே வென்றி கொண்டிடும் வேலை
ஆற்றல் இன்றி முன் பின்றிய அவுணர் தானைகள் முற்றும்
நால் திசைக் கணும் வந்து வந்து அவனை நண்ணிய அன்றே.
263
   
5217.
பின்று சேனைகள் யாவையும் தன் அயல் பெயர்த்தும்                                   வந்து
ஒன்றவே இரவி அம் பகை வருதலும் உது கண்டான்
நன்று நன்று இவன் ஆற்றலின் திறம் என நகை செய்தான்
என்று நந்தி தன் கணத்தரில் தலைமை பெற்று                                 இருக்கின்றான்.
264
   
5218.
வாகை மொய்ம்பு உடை மேலையோன் மால் அயன்                               தனக்கு எட்டா
ஏக நாயகன் திருமகன் தாள் இணை இனிது உன்னி
ஓகையால் நனி வழுத்தியே போர்த் தொழில் உளம்                               கொண்டு
சேகு நெஞ்சு உடைப் பானு கோபன் முனம் செலல்                               உற்றான்.
265
   
5219.
அரியும் நான்முகத்து ஒருவனும் குனித்திட அறத் தேவும்
சுருதி மா மறைத் தொகுதியும் குனித்திடச் சுரர் கோவும்
இரவி அண்ணலும் மதியமும் குனித்திடச் இகல் ஆடல்
திருவும் மோடியும் குனித்திடக் குனித்தனன் சிலை                                     தன்னை.
266
   
5220.
விசை எடுத்திடும் ஊதையும் வடவையும் வெருக் கொண்டு
வசை எடுத்திடக் அளக்கரும் தம் ஒலி வறிதாகத்
திசை எடுத்திடும் அண்டமும் புவனமும் சிதைந்தே மாறு
இசை எடுத்திட எடுத்தனன் சிலையின் நாண் இசை                                      தன்னை.
267
   
5221.
நாண் ஒலிக் கொடு வெம் சமர் புரிய மேல் நடப்பானைக்
காணல் உற்றனன் தினகரன் சினவிய கதக் கண்ணான்
ஏண் உடைப் பெரும் கார்முகம் ஒன்று வேறு                                    எடுத்திட்டான்
சேண் இலத்தவர் பனித்திடக் குனித்து ஒலி செய்திட்டான்.
268
   
5222.
முன்பு திண் திறல் வாகுவின் வாகுவின் முழக்கத்தை
அன்பின் நாடிய அமரர்கள் அளவை தீர் மகிழ்வு எய்திப்
பின்பு சூர் மகன் சிலை ஒலி கேட்டலும் பேது உற்றே
இன்ப துன்பங்கள் ஒரு வழிக் கண்டனம் இவண் என்றார்.
269
   
5223.
புகழ்ச்சி மேல் அவன் குணத்து ஒலி செவிக் கொடு                               பொலிந்தோர்கள்
இகழ்ச்சி மிக்கவன் குணத்திசை கேட்டலும் இரங்கு                               உற்றார்
திகழ்ச்சி ஆர் அமுது உண்டவர் நஞ்சம் உண் செயல்                               போன்றார்
மகிழ்ச்சி ஈற்றினில் துன்பு வந்து அடைவதோர் வழக்கு                               அன்றோ.
270
   
5224.
மாயன் நான்முகன் மகபதி முதலிய வானோர்கள்
காயம் யாவினும் நிரந்தனர் அமர்த்தொழில் காண்பார்                                     ஆய்
ஆய போழ்தினில் சூரபன்மன் மா அருள் அசுரேசன்
தூயவன் தனை நோக்கியே இனையன சொல்கின்றான்.
271
   
5225.
கோதை வேலினால் தாரகன் தனை அடு குகன் அல்லை
ஆதி ஏனம் ஆய்ப் புவியினைக் கிளைத்திடும் அரியல்லை
வேத நான் முகத்தவன் அல்லை விண்ணுளோர் வேந்து                                       அல்லை
தூதன் ஆகிய நீ கொல் என் எதிர் பொரும் தொழில்                                       வல்லாய்.
272
   
5226.
இழைத்த மாயையால் முன் பகல் போந்தனை எம் கோன்                                    முன்
பழித் திறம் சில கூறினை இளவலைப் படுத்திட்டாய்
அழித்தி மா நகர் யான் அஃது உணர்ந்திலன் அதனாலே
பிழைத்தி அன்று எனின் உய்ந்து இவண் வந்திடப்                                    பெறுவாயோ.
273
   
5227.
பொருது வென்றி கொண்டு உனது உயிர் நடுவன் ஊர்                                   புகுவிப்பன்
சரதம் இங்கு இது பிறந்திடும் அளவையில் தழல் காலும்
பரிதியைச் சிறை பிணித்தவன் ஒற்றனைப் படுத்தான் என்று
ஒரு தனிப் பழி கொள்வது அல்லால் புகழ் உறுவேனோ.
274
   
5228.
முனை முடித்த நின் துணைவரை வென்றனன் முரண்                                       பூதம்
தனை அடர்த்தனன் சிந்தினன் அனிகமும் தனி நேர்ந்த
உனை முடிக்குவன் உனை விடுத்தோனையும் உலைவித்து                                       என்
சினம் முடிக்குவன் மகபதி தன்னையும் சிறை செய்வேன்.
275
   
5229.
என்ற காலையில் வீரவாகு இயம்புவான் எவரேனும்
சென்று போர் புரிவார் தமை வெல்வதே திறல் ஆகும்
பின்று வார் தமை அடுவதே வசை அலால் பிறிது                                     உண்டோ
வென்றி எய்துவார் உரைப்பரோ போர் புரி விரைந்து                                     என்றான்.
276
   
5230.
என்னும் மாத்திரத்து இரவி அம் பகைஞன் ஈர் ஐந்து
பொன் நெடும் கணை எடுத்து வார் சிலை இடைப் பூட்டி
மின்னுவாம் என விடுத்தலும் வீரனும் விரைவில்
அன்ன ஈர் ஐந்து வாளி தொட்டு அவற்றினை அறுத்தான்.
277
   
5231.
ஆறு நாலு வெம் பகழியும் அறுத்த பின் அறிஞன்
நூறு வாளிகள் விடுத்தலும் வந்தது நோக்கி
வீறும் அத்தொகைச் சரங்கள் விட்டு அவை இடை வீட்டி
ஈறு இலான் மகன் மீதில் ஆயிரம் கணை எய்தான்.
278
   
5232.
ஆயிரம் கணை தூண்டி மற்று அவற்றினை அறுத்துத்
தூயவன் பதினாயிரம் சுடு சரம் துரப்பத்
தீயன் அத்தொகை வாளியால் அங்கு அவை சிந்தி
ஏ எனக் கொடும் பகழி நூறு ஆயிரம் எய்தான்.
279
   
5233.
உய்த்த வாளி நூறு ஆயிரம் தன்னையும் உரவோன்
அத் தொகைப் படு பல்லவம் தூண்டியே அறுத்துப்
பத்து நூற்றின் மேல் ஆயிரம் பெற்றிடும் பகழி
மெய்த் தழல் கதிர் இரவி அம் பகைவன் மேல்                                   விடுத்தான்.
280
   
5234.
விடுத்த வாளியைப் பத்து நூறு ஆயிரம் விசிகம்
தொடுத்து மாற்றியே சூரபன்மா அருள் தோன்றல்
எடுத்து நூறு நூறு ஆயிரம் புங்கவம் ஏவ
நொடிப்பில் வீட்டினன் அனையன் சிலீமுகம் நூக்கி.
281
   
5235.
வஞ்சனே வினை மாற்றியே எம்பிரான் மதலை
செஞ்ச வாளி நூறு ஆயிர கோடிகள் செலுத்தக்
கஞ்ச மா மகள் உயிர்த்திடு திருமகன் கணிப்பில்
புஞ்ச வார் கணை இறுதி நாள் முகில் எனப் பொழிந்தான்.
282
   
5236.
பார் மறைந்தன திசை எலாம் மறைந்தன படர் முந்
நீர் மறைந்தன குலகிரி மறைந்தன நிலவும்
கார் மறைந்தன ககனமும் மறைந்தன கதிரோன்
தேர் மறைந்தன இருவர் தம் கணை மழை செறிய.
283
   
5237.
பாரி வட்டமும் மாதிர வட்டமும் பரவை
வாரி வட்டமும் நேமியின் வட்டமும் மலிவான்
மூரி வட்டமும் அண்டத்தின் வட்டமும் முடுகிச்
சாரி வட்டமாய்த் திரிவன அனையவர் தடம்தேர்.
284
   
5238.
மாறு இல் வாளிகள் முறை முறை சொரிதலான் மறைவர்
ஈறு செய்து அவை அகற்றுழித் தோன்றுவர் இமைப்பில்
வேறு வேறதாய் இத்திறம் நிகழ்த்திடும் வீரர்
சூறை போல் அமர் ஆடினர் உலகு எலாம் சுற்றி.
285
   
5239.
இரவி வானவன் தனது திண் தேரினும் ஈர்க்கும்
புரவி மீதினும் உடுபதி மானத்தும் புறம் சூழ்
கரிகள் மீதினும் விண் உலா அமரர் தம் கண்ணும்
பொருவில் ஆளியர் விடுகணை சிதறியே போம் ஆல்.
286
   
5240.
செம் கண் வீரர்கள் இருவரும் பொருவது இத் திசை                                       என்று
அங்கு நாட அரிதவர் விடும் பகழிகள் அனந்தம்
மங்குல் வான் எலாம் நிரந்தன மிசையினும் வரும் ஆல்
இங்கு நிற்க அரிது எமக்கு என ஓடினர் இமையோர்.
287
   
5241.
புடவி கீழ்வன அண்டங்கள் துளைப்பன புறத்தில்
கடல் ஒர் ஏழையும் பருகுவ புவனங்கள் கடப்ப
அடலின் மேதக்க யாவரும் தடுத்திடற்கு அரிய
வடவை நாவையும் துணிப்பன அவர் விடும் வாளி.
288
   
5242.
இகல் கடந்திடு திண் திறல் வாகுவும் இரவிப்
பகையும் ஆற்றிய பெரும் சமர் வலியை யார் பகர்வார்
மிகுதி கொண்ட பல் கணை மழை உலப்பு உறா விடுப்பத்
திகிரி அம் படை போன்றன அனையர்கைச் சிலைகள்.
289
   
5243.
வெய்யவன் தனைத் தளை இடும் வெய்யவன் விறலார்
துய்ய மொய்ம்பினான் விடுசர மாரியைத் தொலைத்துக்
கை இருந்திடு கார்முகம் ஒன்றையும் கடிதின்
ஐ இரண்டு நூறு அயில் கணையால் அறுத்து ஆர்த்தான்.
290
   
5244.
ஆர்த்த காலையில் வீரவாகுப் பெயர் அறிஞன்
பேர்த்தும் ஓர் தனு வாங்கியே பெரும் சினம் பிடித்துச்
சூர்த்த வெம் கணை ஆயிரம் விரைவினில் தூண்டி
மூர்த்தம் ஒன்றினில் அவுணன் ஏந்திய சிலை முரித்தான்.
291
   
5245.
முரித்த காலையின் அவுணர் கோன் ஆற்றவும் முனிந்து
கரத்தின் மற்றொரு சிலை குனித்து ஆயிரம் கணைகள்
உரத்தின் நம்பியும் அணங்கு உற விடுத்தலும் ஓர் ஏழ்
சரத்தினால் அவன் தனிப் பெரு மவுலியைச் சாய்த்தான்.
292
   
5246.
வாய்த்த பன்மணி குயிற்றிய கனகமா மவுலி
சாய்த்த காலையின் வேறு ஒரு கதிர் முடி தன்னை
ஏத்தல் சான்றிடு சூர்மகன் புனையும் மாறு எடுத்தான்
பூத்த செம் கதிரவனை முன் பிடித்தவா போல.
293
   
5247.
எடுத்த பொன்முடி சென்னியில் கவித்தனன் இதன் முன்
வடித்த வெம் கணை ஆயிரம் தூண்டி மற்று அவன் மேல்
அடுத்த சாலிகை சிந்தினன் சிந்திய அளவில்
நடித்து நல் அறம் பாடின பரிதியும் நகைத்தான்.
294
   
5248.
நிருதர் போற்றிடும் சூர் மகன் ஆயிர நெடும் கோல்
சுருதி நாயகன் இளவல் தன் நுதல் இடைத் துரப்பக்
குருதி நீர் உண்டு குழுவொடும் தோன்றுவ குணபால்
பரிதி வானவன் இளம் கதிர் விரிந்து எழும் பரிசின்.
295
   
5249.
நெற்றி மீது கோல் ஆயிரம் படுதலும் நிறை இல்
சற்றும் நீங்கிலன் தன் வலி சுருங்கிலன் தக்கோன்
பற்றி அம் கையால் பறித்து அவை வீசினன் பகைஞன்
கொற்ற வெய்யகோல் விளிவின்றி நின்றிடும் கொல்லோ.
296
   
5250.
சகத்தை நல்கிய அறுமுகற்கு இளவல் அத் தகுவன்
முகத்தின் ஆயிரம் அகலத்தின் ஆயிரம் மொய்ம்பின்
அகத்தின் ஆயிரம் கரங்களின் ஆயிரம் ஆக
மிகைத்த வெம் கணை தெரிந்து ஒரு தொடையினில்                                விடுத்தான்.
297
   
5251.
விட்ட வாளிகள் சூர் மகன் அவயவம் விரவிப்
பட்டு மூழ்கலும் அவசமாய்த் தளர்ந்தனன் பாணி
நெட்டிரும் சிலை ஊற்றம் ஆய் வறியனாய் நின்றான்
தொட்ட தெண் கயத்து ஊறி மேல் எழுந்தது சோரி.
298
   
5252.
வந்து வந்து எழு குருதி நீர் முழுதுடன் மறைப்பப்
புந்தி தன் இடைச் சீற்றமும் மூண்டு எழப் பொலிவான்
செம் தழல் பிழம்பால் உயர் குன்று எனத் திகழ்ந்தான்
அந்தி மேல் திசை எழிலியின் வண்ணமும் ஆனான்.
299
   
5253.
ஆன போழ்தினில் அவுணமாத் தலைவர்கள் யாரும்
பானு மாற்றலன் பொருவலி இன்மையைப் பாராச்
சேனை நாற் பெரும் பரவையினோடு முன் சென்று
மான வேல் படை வீரவாகுவின் புடை வளைத்தார்.
300
   
5254.
இலை பிறங்கிய சூலம் விட்டு ஏறு தண்டு எழுவம்
உலை பிறங்கிய கணிச்சி நேமிப் படை ஓங்கும்
சிலை பிறங்கிய பகழிகள் வீரன் மேல் செலுத்தி
மலை பிறங்கிய இரவி சூழ் திமிரென மறைத்தார்.
301
   
5255.
தொடைக் கலன் நிலவு மார்பில் தொல் அசுரேசர்                                  கொண்ட
படைக் கலம் ஆன எல்லாம் விடுத்தலும் தனது பாணி
இடைக் கலந்து இருந்த வார் வில் குனித்தனன் இடுக்கண்                                  பட்டோர்
அடைக்கலம் புகுதும் வெள்ளி அருவரை அளித்த                                  அண்ணல்.
302
   
5256.
ஆயிரம் கோடி கோடி அடுசரம் தொடை ஒன்று ஆக
மா இரும் புயத்து வள்ளல் வல்லையின் வலிது தூண்டித்
தீயவர் உடன்று விட்ட படை எலாம் சிந்தல் உற்றான்
பாய் இருள் படலம் கீறும் செம் கதிர்ப் பரிதியே போல்.
303
   
5257.
அவுணர்கள் யாரும் உய்த்த அடுபடை மாரி சிந்திக்
குவ உறு விசயத் தோளான் கொடும் சரம் அனந்த கோடி
தவறு இலவாக உய்த்துத் தகுவர் தம் தானை முற்றும்
உவரி உண் வடவை போல ஒல்லையின் முடிக்கல்                                   உற்றான்.
304
   
5258.
தோலினை அறுக்கும் வாளைத் துணித்திடும் சோதி                                      வில்லின்
காலினை அறுக்கும் வெய்ய கணிச்சியை அறுக்கும் வீசும்
கோலினை அறுக்கும் நேமிக் கொடும் படை அறுக்கும்                                      காமர்
வேலினை அறுக்கும் அம்மா விடலை தன் வீரவாளி.
305
   
5259.
உரம் துணிக்கும் கவசம் இடும் உரம் துணிக்கும் புயம்                      துணிக்கும் ஒன்னலார் தம்
கரம் துணிக்கும் அடல் புரிமோ கரம் துணிக்கும் கழல்                      துணிக்கும் கணிச்சி கைத்தோ
மரம் துணிக்கும் குனித்த கொடு மரம் துணிக்கும் வாய்                      துணிக்கும் மவுலி தாங்கும்
சிரம் துணிக்கும் எறிந்திடும் வச்சிரம் துணிக்கும் உரவோன்                      தன் செம் கை வாளி.
306
   
5260.
கதம் அறுக்கும் வதம் அறுக்கும் தூங்கு புழைக் கை                     அறுக்கும் கபோலத்து ஊறும்
மதம் அறுக்கும் நுதல் அறுக்கும் வாய் அறுக்கும் செவி                     அறுக்கும் வயிரக் கோட்டின்
விதம் அறுக்கும் வால் அறுக்கும் மெய் அறுக்கும் தலை                     அறுக்கும் வேழம் செல்லும்
பதம் அறுக்கும் முரண் அறுக்கும் அரண் அறுக்கும் வீரன்
                    விடு பகழி மாரி.
307
   
5261.
ஆர் அறுக்கும் சகடு அறுக்கும் அச்சு அறுக்கும் நெடும்                  துவசம் அறுக்கும் தேரின்
பார் அறுக்கும் கூம்பு அறுக்கும் பாக அறுக்கும் அம்                  கண் உறும் பதகர் ஆவி
வேர் அறுக்கும் அடி அறுக்கும் விரிதரு கொய் உளை                  அறுக்கும் விளங்கும் செம் பொன்
தார் அறுக்கும் புரவிகளின் தலை அறுக்கும் நிலை                  அறுக்கும் சரங்கள் மன்னோ.
308
   
5262.
கானோடும் வரையோடும் கரையோடும் திரையோடும்                                 கழியின் ஓடும்
மீன் ஓடும் கடல் ஓடும் விசை ஓடும் திசை ஓடும் மேகம்                                 ஓடும்
வான் ஓடும் நிலன் ஓடும் இரு கதிரின் மருங்கு ஓடும்                                 வாளத் தோடும்
தேன் ஓடும் பூம் தாரான் சிலையோடும் நெடும் பகழி                                 சிந்தும் சென்னி.
309
   
5263.
பாய் இரும் புனல் போல் ஓடிப் படி எனப் பரந்து நீடித்
தேயுவின் திறல்மேல் கொண்டு சேண் என முடிவு இன்று                                    ஆகி
வாயுவின் விரைந்து சென்று வள்ளல் கை வாளி ஒவ்                                    வொன்று
ஆயிர கோடி சென்னி அறுக்கினும் வெறுக்கு இலாவே.
310
   
5264.
வரம் தனில் தலைமை சான்ற ஒரு சில மான வீரர்
சிரந்தனைத் துணித்துக் கொண்டு சீர் கெழு சூரன் வைகும்
புரம் தனில் கொடுபோய் அன்னார் பொன்தொடி மடந்தை                                         மார் தம்
கரம் தனில் உகுத்துச் செல்லும் கந்தனுக்கு இளவல் வாளி.
311
   
5265.
புரண்டன வயவர் யாக்கை பொழிந்தன குருதித் தாரை
உருண்டன மான் தேர் ஆழி உலவின பலவும் கூளி
திரண்டன குணங்கர் ஈட்டம் செறிந்தன சேனம் பிள்ளை
இருண்டன திசைகள் முற்றும் இரிந்தன ஒழிந்த தானை.
312
   
5166.
பட்டன புரவிப் பந்தி படிந்தன முடிந்த வேழம்
கெட்டனர் அவுணர் யாரும் கிடந்தன ஒடிந்த திண்தேர்
அட்டனன் ஒருவன் நின்றான் அகல் இரு விசும்பை                                    வல்லே
தொட்டன பிணத்தின் பொம்மல் சோரி ஆறு ஒழுகிற்று                                    அன்றே.
313
   
5167.
பாய்ந்திடு குருதி நீத்தம் படர்ந்தது புகுந்து பௌவம்
சேர்ந்தது சுறவு மாந்திச் செருக்கிய திறலோன் அம்பால்
வீந்திடும் அவுணர் ஆவி விடுத்தனர் சென்று தம் தாள்
ஓய்ந்தனர் நடுவன் தூதர் ஒழிந்தன கழிந்த பூசல்.
314
   
5168.
சிந்திய அவுணர் தானைச் செய்தியும் பரிதிக் கூற்றன்
நொந்தனன் தமியன் நின்ற தன்மையும் நோக்கி நோக்கி
நம் தமது அண்ணல் தன்பால் நண்ணுதும் என்னா மீண்டு
வந்தன முந்து சாய்ந்த வயப் பெரும் பூத வெள்ளம்.
315
   
5169.
இரிந்திடு பூத வீரர் யாவரும் மீண்டார் நின்று
வருந்திய தலைவர் தொல்லை வன் மிடல் பெற்றார்                                   அம்கண்
அரும் துயர் உழந்து வீழ்ந்தார் ஆவியோடு எழுந்தார்                                   இன்னோர்
பொரும் தனி வீரவாகு புடை உற வளைந்து புக்கார்.
316
   
5170.
அங்கு அது போழ்து தன்னின் அயர் உயிர்த்து உணர்வு                                      தோன்றச்
செம் கதிரோனைச் சீறும் சேவகன் சுற்று நோக்கிச்
சங்கையின் நிமிர்ந்த கொள்கைத் தன் பெரும் சேனை                                      காணான்
கங்கமும் கழுகும் ஆர்க்குங்களே பரச் சூழல் கண்டான்.
317
   
5171.
நேர் உறு தனி வில்லாளி நின்றது நோக்கி நம்பால்
சார் உறும் அனிகம் எல்லாம் தடிந்தனன் இவன் என்று                                     உன்னி
ஆர் இடை அடங்கிற்று அம்மா ஆண்மைக்கும் அவதி                                     உண்டோ
வீரன் மற்று இவனே அல்லால் வேறு இலை போலும்                                     என்றான்.
318
   
5172.
இனையன வியந்து பின்னும் என் எதிர் பொருத வீரர்
அனைவரும் விளிந்தோர் அன்றி அடல் வலி படைத்தோர்                                       இல்லை
குனி சிலை ஒருவன் நின்றான் கொற்றம் உற்றிடுவன்                                       அம்மா
தினகரன் பகைஞன் ஆற்றல் சீரிது சீரிது என்றான்.
319
   
5173.
கன்னல் ஒன்று அளவை தன்னில் கந்தவேள் ஒற்றன்                                      யாக்கை
சின்ன பின்னங்களாகச் செய்குவன் செய்திடேனேல்
பின் உயிர் வாழ்க்கை வேண்டேன் யான் பிறந்தேனும்                                      அல்லேன்
என் ஒரு சிலையும் யானும் எரியிடைப் புகுவன் என்றான்.
320
   
5174.
வஞ்சினம் இனைய கூறி மாதிரக் கிழவன் மைந்தன்
நெஞ்சினில் வெகுளித் தீயும் மானமும் நீடி ஓங்க
எஞ்சலில் ஈசன் முன்னம் ஏகிய கொடு நஞ்சு என்னச்
செம் சிலை வீரன் முன்னம் தேரொடும் சென்று                                  சேர்ந்தான்.
321
   
5175.
கைத்தலத்து இருந்த தொல்லைக் கார்முகம் வளைய                                     வாங்கி
முத்தலைப் பகழி ஆங்கு ஓர் ஆயிரம் விடுப்ப                                     மொய்ம்பன்
அத்திறத்து இயன்ற வாளி ஆயிரம் சிலையில் பூட்டி
உய்த்தனன் அறுத்துப் பின்னும் ஒர் ஆயிரம் சரங்கள்                                     விட்டான்.
322
   
5276.
அற்றது தெரிந்து தீயோன் ஆயிரம் விசிகம் தூண்டி
மற்று அவை விலக்கிப் பின்னும் வாளி ஓர் அயுதம்                                     தொட்டுக்
கொற்றவன் தேரும் பாகும் குரகதக் குழுவும் ஆயச்
செற்றனன் அதனை நோக்கிச் சேண் உளார் அலக்கண்                                     உற்றார்.
323
   
5277.
வில்லொடும் வீரவாகு வேறு ஒரு தேர் மேல் பாய்ந்து
வல்லிதின் நூற்று நூறு வாளிகள் துரந்து வெய்யோன்
சில்லை அம் தேரும் மாவும் வலவனும் சிலையும் வீழப்
பல் இரும் துண்டம் செய்தான் விண்ணவர் பண்ணை                                    ஆர்ப்ப.
324
   
5278.
பூங் கழல் மிழற்ற வேறு ஓர் பொன்னவாம் தேரின்                                     மீப்போய்
ஆங்கு ஒரு சாபம் பற்றி அவுணன் தன் செவியின் காறும்
வாங்கினன் ஏழுநூறு வச்சிரப் பகழி பூட்டி
ஓங்கலம் புயத்து வீரன் உரத்து இடைப் புக உய்த்து                                     ஆர்த்தான்.
325
   
5279.
ஆகத்தில் பகழி பாய அறுமுகன் தூதன் முன்னம்
சோகத்தை உணர்கிலா தோன் துயரத்தின் சுவையும் கண்டு
மாகத்தில் இரவி தன்னை வன் சிறை பிணத்தோன்                                சென்னி
காகத்துக்கு இடுவன் என்னா வெகுண்டனன் காலன்                                போல்வான்.
326
   
5280.
கறுத்திடு வீரன் ஈர் ஏழ் கங்க பத்திரங்கள் ஏவி
அறுத்தனன் சிலையைப் பின்னும் ஆயிரம் பகழி தூண்டி
நொறில் பரி இரதம் தன்னை நூறினன் நூறு கோலான்
மறுத்து எதிர் பொருத தீயோன் மருமத்தை வாயில்                                     செய்தான்.
327
   
5281.
வருந்திலன் அதற்கு மைந்தன் வயின் உறும் இரதம்                                     ஒன்றின்
விரைந்து உடன் புகலும் வீரன் விசிகம் ஆயிரத்தைத்                                     தூண்டி
உரம் திறந்து இட்ட ஆற்றால் ஓச்சியே புறத்தில் தூங்கும்
அரம் திகழ் பகழித் துணி துணிபட அறுத்தான் அன்றே.
328
   
5282.
தூவுறு பகழி தூர்க்கும் தூணி இற்றிடலும் நேமிக்
காவலன் தனயன் அம்மா கார்முகம் விஞ்சை தன்னால்
மேவலன் வென்றி கோடல் அரிது எனா வினையம்                                   உன்னித்
தேவர் தேவுதவு மோகப் படையினைச் செம்கை                                   கொண்டான்.
329
   
5283.
சிந்தனை கவரும் மோகத் தீப் படை அவுணன் செம்கை
வந்திட அனைய போழ்தின் மனத்தினால் வழிபாடு ஆற்றி
வெம் திறல் அனிகத் தோடு மேவலன் தன்னை எய்திப்
புந்தியை அழித்து வீட்டி வருக எனப் புகன்று விட்டான்.
330
   
5284.
விட்டிடு மோகம் என்னும் வியன் படை வெகுளி வீங்கித்
தட்டு உடை நெடும் தேர் வெய்யோன் தன் பெரும்                                 சுடர்கள் மாற்றி
நெட்டு இருட் படலை வீசி நிரந்த பல் உயிரும் அஞ்சி
உள் தெளிவு அகன்று மாழ்க ஒல் எனப் பெயர்ந்தது                                 அன்றே.
331
   
5285.
பெயந்திடும் மோக நாமப் பெரும் படை ஊக்க நோக்கித்
துயர்ந்தனர் வெருவி ஆற்றத் துளங்கினர் துணுக்கு என்று                                         உள்ளம்
அயர்ந்தனர் பூதர் யாரும் அவ் அவர் தலைவர் ஆனோர்
சயந்தனை இழந்து நின்று சாம்பினர் தேம்புகின்றார்.
332
   
5286.
மோகப் படை சேறலும் முந்து எதிர் மாறு
ஏகப் படை ஒன்றையும் மேவுகிலார்
சேகப் படை அத் தொடை சிந்தினர் ஆல்
மாகப் படை மொய்ம்பு உடைவள் ளல்பினோர்.
333
   
5287.
அந்தத் திறல் வெம் படை ஆற்றலுடன்
வந்து உற்றுழி மேலவன் மற்று இது தான்
எந்தப் படையால் அழிவு எய்தும் எனாச்
சிந்தித்தனன் வேறு ஒரு செய்கை இலான்.
334
   
5288.
ஒன்றா முதலோன் இவை உன்னுதலும்
அன்றால் அம் வரும் திறன் ஆம் எனவே
சென்றார் உணர்வும் சிதை வித்தது போர்
வென்றார் புகழ் மோக வியன் படையே.
335
   
5289.
இலக்கத்துடன் எண் மரும் ஏனையரும்
அலக்கத்துடன் வீழ்ந்தனர் மாற்றலர் ஊர்
கலக்கு உற்றிடு காளை கருத்து அழியா
நிலக் கண் படுகந்து என நின்றனன் ஆல்.
336
   
5290.
நிற்கும் பொழுதத்தினின் நீடு அகல்வான்
அற்கும் பரிதிப் பகை அங்கு அது கண்டு
எற் கின்று எதிர் ஆயினர் யாவர் உளார்
நற்கு உன்னினன் என்று நகைத்தனனே.
337
   
5291.
புகழ் உற்றிடு மேலவர் புந்தியின் மாறு
இகழ் உற்றிடு பெற்றி தெரிந்து அவுணன்
மகிழ் உற்று நகைத்து வயம் புனையா
நிகழ் உற்றிடு சீரொடு நின்றனனே.
338
   
5292.
மல் வன்மை கொள் மொய்ம்பனும் மற்றவரும்
தொல் வன்மை யிலாது உடல் சோர்ந்தனர் ஆல்
வில் வன்மையினால் இவர் வீடு உறவே
கொல்வன் கடிது என்று குறித்தனனே.
339
   
5293.
வரிகின்ற வில் வாங்கினன் வால் உணர்வு
திரிகின்றவன் மேல் சிலை வீரர்கள் மேல்
விரிகின்ற கணப் படைமேல் விசிகம்
சொரிகின்றனன் யாக்கை துளைத்தனனே.
340
   
5294.
ஆங்கு ஆகிய வேலையில் ஆறுமுகன்
பாங்காம் விறலோன் ஒடு பார் இடர்கள்
நீங்கா மருள் மால் கொடு நேர் அலனால்
தீங்கு ஆயின தன்மை தெரிந்தனனே.
341
   
5295.
தெரிந்தான் முகம் ஆறொடும் சேர்ந்து உயிர்த்தோர்
இருந்தார் அருள் செய்திடும் எம் பெருமான்
விரைந்து ஆங்கு ஒர் மோகவியன் படையைப்
புரிந்தான் அதனோடு புகன்றிடுவான்.
342
   
5296.
நன்றே தெளிவு உற்று எமர் நண்ணும் வகை
நின்று ஏதிலன் விட்ட நெடும் படை பால்
சென்றே அதன் வன்மை சிதைத்து இவண் நீ
வென்றே வருக என்று விடுத்தனனே.
343
   
5297.
ஏண் கொண்ட சிவன் மகன் ஏவு படை
சேண் கொண்டு படர்ந்து இருள் சிந்தையர் ஆய்த்
தூண் கொண்டிடும் தோளவர் துன்னியது ஓர்
மாண் கொண்ட செருக்களம் வந்ததுவே.
344
   
5298.
மிடல் கொண்டு அவ மோகவியன் படை சென்று
இடுகின்று உழி வெய்யவன் ஏவு படை
அடல் கொண்டிடும் வீர் ஆகத்தில் இருள்
உடையும் படி வல்லையின் ஓடியதால்.
345
   
5299.
அசை கொண்ட உடுத் திரளான எலாம்
மிசை கொண்டு அவினன் வரவேகிய போல்
திசை கொண்டிடும் நம்மவர் சேனை ஒரீஇ
விசை கொண்டு அவுணன் படை மீண்டதுவே.
346
   
5300.
மோகத் தனி வெம் படை மொய்ம்பு இலதாய்
ஏகத் திறல் வாகுவும் ஏனையரும்
ஆகத்தின் இன்மையல் அகன்று அமலன்
வாகைப் படை கண்டு மகிழ்ந்தனரே.
347
   
5301.
அழல் உற்றது போல அகல் மணியின்
நிழல் உற்றிடு தேர் மிசை நின்றவனும்
எழல் உற்றிடு வீரர்கள் யாவர்களும்
தொழல் உற்றனர் நின்று துதித்தனரே.
348
   
5302.
செயிர் கொண்ட கருத்தொடு செற்றலர் தம்
உயிர் கொண்டிடு வோன் படை ஊற்றம் எலாம்
அயிர் கொண்டிட அட்ட தன் ஆற்றல் தெரீஇ
மயிர் கொண்ட பொடிப் பொடு வாழ்த்தினர் ஆல்.
349
   
5303.
தீயோன் படை செய்த செயற்கையில் யாம்
மாயோ மருள் என் கையகத்து அடையா
வாயோடு உரை வீர் மறுத்தனர் ஆய்
ஏயோ என வெள்கினர் யாவருமே.
350
   
5304.
அண்டாதவனால் எம் அகத்தில் இருள்
உண்டாகிய தன்மை உணர்ந்து அறிவன்
விண்டான் உற இப் படை விட்டனன் என்று
எண் தாவும் உளத்து இடை எண்ணினர் ஆல்.
351
   
5305.
முந் நான்கு எனும் மொய்ம்புள மூர்த்தி தனை
உன்னா அருள் நீர்மை உளத்து அடையா
அன்னார் தொழுது ஏத்தினர் அத் துணையின்
மின்னாம் என அப் படை மீண்டதுவே.
352
   
5306.
மீண்டு உற்று அவமோகவியன் படை போய்த்
தூண்டு உற்ற குகன் புடை துன்னியது ஆல்
ஆண்டு உற்றிடும் வீரர்கள் அண்டலன் மேல்
மூண்டு உற்றிடு பூசல் முயன்றனரே.
353
   
5307.
ஆங்கு உற்றிடு காலை அடும் திறலின்
பாங்கு உற்றிடு மொய்ம்பு படைத்து உடையோன்
நீங்கற்கு அரு மானமும் நீள் சினமும்
ஓங்கு உற்று எழ இன்னதை உன்னினனே.
354
   
5308.
அந் நேரலன் ஈண்டு ஒர் அடல் படையான்
முன்னே மயல் செய்த முரண் தொலைய
இன்னே அடுவேன் என எண்ணம் உறாக்
கொன்னே அரன் மாப் படை கொண்டனனே.
355
   
5309.
அங்கு அத்துணை கண்டனன் அவ்வசுரன்
எங்கட்கு இறைவன் படை ஏகியதும்
வெம் கண் படுதன் படை மீண்டதுவும்
செம் கண் திறல் அண்ணல் செயற்கையுமே.
356
   
5310.
இம் எனச் சூர் மகன் இவற்றை நோக்கு உறா
விம்மிதம் எய்தினன் வீர மொய்ம்புடைச்
செம்மலை எதிர்ந்திலன் செருக்கு நீத்தனன்
கைம் மிகு துயரினன் கருதல் மேயினான்.
357
   
5311.
இவ்விடை ஒன்னலர் எண்ணம் யாவையும்
வவ்வினன் மா நில வரைப்பின் வீட்டினன்
உய்வகை பெற்று உடன் உணர்ந்து தோன்றினார்
செய்வது என் ஐய கோ கடவுள் செய்கையே.
358
   
5312.
எடுத்தனன் மாற்றலன் இறைவன் மாப்படை
தொடுத்திடுவான் எனில் துன்னி என் உயிர்
படுத்திடும் யான் அது பரித்து வந்திலன்
விடுத்து உடன் அப்படை விலக்கும் வண்ணமே.
359
   
5313.
வென்றிடல் அரிது இனி வீரவாகுவைச்
சென்றனன் முது நகர்த் தெய்வதப் படை
மன்றவும் தந்து இவன் வன்மை மாற்றுவன்
என்றிடல் பழுது என நெஞ்சில் உன்னினான்.
360
   
5314.
அயன் மகன் மதலை சேய் அருவம் ஆகியே
வியன் மிகு தனது தேர் விடுத்து விண் எழீஇப்
பயன் அறு முகில் எனப் படர்ந்து வல்லையின்
நயன் உறு கடிமதில் நகருள் போயினான்.
361
   
5315.
கொற்றவன் மறைந்து அகல் கொள்கை காண்டலும்
சுற்று உறு தானவர் தொலைந்து போயினார்
அற்றது தெரிந்திடும் அமரர் யாவரும்
வெற்றி இன்று எமது என விளம்பி ஆர்த்தனர்.
362
   
5316.
மாயையின் அருவமாய் வஞ்சன் மாநகர்
போயினன் காலையே புகுவன் போர்க்கு இனி
ஆயவன் தனை விரைந்து அடுதி என்று பூத்
தூயினர் வீரன் மேல் சுரர்கள் யாவரும்.
363
   
5317.
தினகரன் மாற்றலன் செம் பொன் தேர் ஒரீஇ
இனைவுடன் அருவமாய் இரிந்து போதலை
வினையமொடு ஓர் உறா வீரன் நின்றனன்
முனிவொடு பிழை படு மூரி யானை போல்.
364
   
5318.
விண்டிடு சூர் மகன் வெருவி வெந்நிடல்
கண்டனர் துணைவரும் கணத்தின் வீரரும்
திண் திறல் இழந்தனன் தீயன் பற்றி நாம்
கொண்டு அணைவாம் எனக் கூறல் மேயினார்.
365
   
5319.
என்பது விளம்பியே யாரும் ஆர்ப்பொடு
துன்புறும் அவுணனைத் தொடர்ந்து பற்றுவான்
முன்பொடு முயறலும் தெரிந்த மொய்ம்பினான்
தன் புடையோர்க்கு இது சாற்றல் மேயினான்.
366
   
5320.
பேடியர் சிறு தொழில் பேணி உள் வெரீஇ
ஓடினன் போகிய ஒன்னலான் தனை
நாடி நாம் அடுவது நலத்தின் பாலதோ
சாடுவன் இனி வரில் சரதம் யான் என்றான்.
367
   
5321.
என்று இவை வள்ளலும் இயம்ப யாவரும்
நன்று என இசைத்தலும் அவற்றை நாடியே
குன்று உறழ் புயத்துணை கொட்டி குப்புறீஇ
வென்றி கொள் பார் இட வெள்ளம் ஆர்த்தவே.
368
   
5322.
முற்றிய தமர் இனி முயல்வது இல்லை ஆல்
செற்றலன் ஓடினன் திரும்பும் வீரனும்
நிற்றிலன் இனி என நினைந்து நீங்குவான்
உற்றனன் ஆம் என இரவி ஓடினான்.
369
   
5323.
செம் திரு மது மலர் செறியப் பூத்துழி
முந்து உறு நித்திலம் முழுது மொய்த்து என
அந்தரம் முழுவதும் அடைந்த செக்கரில்
சுந்தர உடுநிரை பலவும் தோன்றிய.
370
   
5324.
குண்டு நீர்க் கனலொடு குலாவி மால் உளத்
தெண் தகு தமியரை இகலி மாமதி
பண்டு உள முனிவரர் பரமன் மேல் விடு
வெண்டலை ஆம் என விண்ணில் தோன்றினான்.
371
   
5325.
இத்துணை வேலையில் இலக்கத்து எண்மராம்
மெய்த் துணையார்களும் வெய்ய பூதரும்
அத்துணைப் படைகளும் அயலில் சென்றிட
மொய்த்துணை விறல் உடை மொய்ம்பன் மீண்டனன்.
372
   
5326.
அந்தம் இல் கயிலையை அருளில் போற்றிடு
நந்தி தன் கணத்தரின் நாதன் ஆகியோன்
விந்தை கொள் செரு நிலம் ஒருவி மீண்டு போய்க்
கந்தவேள் பாசறைக் கண்ணுள் நண்ணினான்.
373
   
5327.
நண்ணிய திறலினான் நான் முகன் முதல்
புண்ணிய மேலவர் போற்ற ஆண்டு உறு
கண் நுதல் அருள் புரி கந்தன் முன்பு போய்த்
துண் என வணங்கினன் துணைவர் தம்மொடும்.
374
   
5328.
வணங்கினன் எழுந்து பின் வள்ளல் தேர்ந்திட
இணங்கலன் தன் மகன் எதிர்ந்து போர் செயா
அணங்குடன் இரிந்ததும் அனைத்தும் செப்பலும்
கணங்களின் முதல்வன் மேல் கருணை ஆற்றினான்.
375
   
5329.
நல் அருள் புரிந்த பின் நம்பி இப்பகல்
தொல் அமர் உழத்தலில் துன்பம் கூர்ந்துளாய்
எல் இது பொழுது நின் இருக்கை தன் இடைச்
செல்லுதி துணைவரோடு என்று செப்பினான்.
376
   
5330.
செப்பலும் விடை கொடு செம்மல் பின்னவர்
மெய்ப்படு பாரிடம் விரவச் சென்று ஒராய்
ஒப்பரும் தனது பேர் உறையுள் வைகினான்
துப்பு உறு தானைகள் தொன்மை போல் உற.
377
   
5331.
சேயவன் விடுத்திடு சேனை பாசறை
போயதும் இருந்ததும் புகல் உற்றாம் இனி
மா இரு வளம் கெழு மகேந்திரப் பதி
ஆயிடை நிகழ்ந்தவாறு அறியக் கூறுவாம்.
378
   
5332.
ஆடுறு சமரிடை அழிந்து முன்னரே
ஓடிய அவுணர் கோன் உள்ளம் தன்னிடைப்
பாடுறு துயரமும் பழியும் மானமும்
நீடினன் பெருமித நிலைமை நீங்கினான்.
379
   
5333.
கோன் உறு மந்திரம் குறுகல் செய்திலன்
தான் உறு திரு நகர் தன்னில் ஏகியே
ஊனம் அது உடையர் போல் உயங்கி வைகினான்
பானுவின் பகைஞன் என்று உரைக்கும் பண்பினான்.
380
   
5334.
மந்திரக் கிளையொடு மருவ வேண்டலன்
தந்திரத் தமரொடும் சார்தல் வேண்டலன்
சிந்துரத் தொல் பகைச் சென்னி போற்றிய
இந்திரப் பெரும் தவிசிருக்கை வேண்டலன்.
381
   
5335.
ஆடுறு மங்கையர் ஆடல் வெஃகலன்
பாடுறு மங்கையர் இசையில் பற்றலன்
கூடுறு மங்கையர் குழாமும் நோக்கலன்
ஊடுறு மங்கையர் புணர்ப்பும் உன்னலான்.
382
   
5336.
நிசாவது சென்றபின் நெடும் செவ் வேலுடை
விசாகனை அவன் படை வீரர் தங்களை
அசா உறு செருவில் வென்று ஆடல் கொள்வதற்கு
உசாவினன் உளத்துடன் ஊக்கம் வேறு இலான்.
383
   
5337.
ஆதவன் தன் பகை அவ் வழி அமர்தலும்
மேதகும் தொல் சமர் விளைவு எலாம் நோக்கியே
மூதகும் திரு நகர் முழு மணிக் கோயிலில்
தூதர் கை தொழுது போய்ச் சூரனுக்கு உரைசெய்வார்.
384
   
5338.
கேட்டியால் உன் மகன் கேடு இலா வகை சேர்
தோள் துணையான் ஒடும் தொல் சமர் ஆற்றியே
ஈட்டு பல் பூதரை ஈறு செய்து இவ் இடை
மீட்டும் வந்து எய்தினான் வினையம் உண்டாம் கொலோ.
385
   
5339.
அன்ன பண் புணர்கிலேம் அதனை மேல் அறிதி யான்
மின்னு தண் சுடர் உடை வேலவன் தூதனும்
பன்னரும் படையொடும் பாசறைக்கு ஏகினான்
இன்னதால் விளைவு எனா இவை எலாம் பகர்தலும்.
386
   
5340.
மாற்றலார் தமை அட வலியினால் ஆகியே
ஊற்றமா மைந்தன் வந்து உற்ற சொல் கேட்குமுன்
சீற்றம் ஆய் எரி விழி சிதறவே வெய்து உயிர்த்து
ஆற்றவும் முறுவலித்து அரசன் ஒன்று உரை செய்வான்.
387
   
5341.
மைந்தரும் துணைவரும் மருவு பல் சுற்றமும்
தந்திரத் தலைவரும் சமரினுக்கு ஏகலர்
நந்தலில் படையொடு நாளை நான் சென்று பின்
கந்தனைத் திறல் கொடே கடிதில் மீண்டு இடுவனால்.
388
   
5342.
போதிர் இப்பொழுது எனப் புகறலும் பணிகுறாத்
தூதுவர் போயினார் சூரன் ஆம் அவுணர் கோன்
ஏதிலார் தம்மை வென்று இசை புனைந்திடுதல் மேல்
காதலாய் வைகினான் யாவதும் கருதலான்.
389
   
5343.
அடு பெரும் போரினை ஆற்றியே ஆற்றலால்
முடிவு இலா விறல் கொள முன்னும் வீரர்க்கு எலாம்
நெடியளாய்த் திறல் இலா நெஞ்சினார்க்கு எலாம்
கடியளாய் வைகினாள் கங்குலாம் நங்கையே.
390
   
5344.
பிரிகுவார் தங்களைப் பிரிகலாது ஏனையோர்
அருகு தான் நிற்கலாது அச்சம் நாண் இன்றியே
விரக நோய் தெறுதலால் மிக்கது ஓர் தூர்த்தராய்த்
திரிகுவார் ஆம் எனச் செல்லும் இவ் வெல்லியே.
391
   
5345.
பாடு சால் தென் திசைப் பார் புரந்திடும் இரா
ஈடு சால் வெம் பகல் எல்லொடும் வருவது
நேடியே மதி எனும் நீள் குடை முன் செல
ஓடல் போல் போயதால் உடு எனும் படையொடும்.
392
   
5346.
மை இருள் கலையினை மகிழ்நன் ஆம் மதி நிலாக்
கையினால் நீக்கியே கலவி செய்து அகலுழி
வெய்யவன் வரும் எனா வெள்கியத் துகில் உடீஇ
ஒய் எனப் போயினாள் கங்குல் என்று உற்று உளாள்.
393