நகர் புகு படலம்
 
5983.
முன் உறச் செவ்வேல் ஏக மூஇரு முகத்து வள்ளல்
தன் அடிக் கமலம் உன்னித் தரங்க நீர் உவரி வைப்பின்
மின் எனக் கடிது போந்து விறன் முகு தடந்தோள்                                 அண்ணல்
தொல் நிலைத் திருவின் மேவும் சூரன் மூதூரைக்                                 கண்டான்.
1
   
5984.
கண்டலும் எயிற்றின் மாலை கல் எனக் கலிப்பக் கண்கள்
மண்டு தீப்பொறிகள் கால வாய் புகை உமிழ நாசித்
துண்டம் அது உயிர்ப்ப மார்பம் துண் என வியர்ப்புத்                              தோன்றத்
திண் திறல் மொய்ம்பின் மேலோன் செயிர்த்து இவை                              புகலல் உற்றான்.
2
   
5985.
வெஞ்சமர்க்கு ஆற்றல் இன்றி வெருவிப் போய் விண்ணின்                                        நின்று
வஞ்சனை புரிந்து நம்மை மாயத்தால் வென்று மீண்டும்
உஞ்சனன் இருந்த கள்வன் உயிர் குடித்தது அன்றி ஐயன்
செஞ்சரண் அதனைக் காணச் செல்வது இல்லை யானே.
3
   
5986.
நன் நகர் அழிப்பன் இன்று நண்ணலன் மதலை நேரின்
அன்னவன் தனையும் யானே அடுவனால் அடுகிலேன் ஏல்
பின் உயிர் வாழ்க்கை வேண்டேன் யான் பிறந்தேனும்                                   அல்லேன்
என் ஒரு சிலையும் யானும் எரி இடைப் புகுவன் என்றான்.
4
   
5987.
சூள் இது முதல்வன் கூற துணைவரும் பிறரும் கேளா
வாள் அரி அனைய வீர அடையலர்க் கழிந்தேம் வாளா
மீளுதல் பழியது ஆகும் வென்றி கொண்டு அல்லால்                                     எந்தை
தாள் இணைக் காண்பது உண்டோ சரதமே இது மற்று                                     என்றார்.
5
   
5988.
நும் மனத் துணிவு நன்றால் நொறில் படைக் கணத்தோடு                                      ஏகி
இம்மெனச் செறுநர் மூதூர் எரியினுக்கு உதவி நேர்ந்தார்
தம்மை அட்டு அவுணன் மைந்தன் தன்னையும் தடிதும்                                      யாரும்
வம்மெனப் புகன்றான் என்ப வாகையம் புயத்து வள்ளல்.
6
   
5989.
ஆரியன் தனது மாற்றம் அனைவரும் வியந்து செல்ல
ஓர் இமை ஒடுங்கும் முன்னம் உவரியின் நடுவண் ஆன
வீரமா மகேந்திரத்தின் மேல் திசை வாயில் போந்தான்
பார் இடக் கணங்கள் ஆர்த்த பரவைகள் அழிந்ததே                                    போல்.
7
   
5990.
ஆர்த்தன அவுணர் கேளா அற்புதம் நிகழ வான் போய்ப்
பார்த்தனர் சிலவர் உள்ளம் பதைத்தனர் சிலவர் யாக்கை
வேர்த்தனர் சிலவர் ஈது மேலவர் துழனி என்னாச்
சீர்த்தனர் சிலவர் அம்மா செரு எனக் கிளரும் தோளார்.
8
   
5991.
வேழத்தின் தொகை வெம் பரி வெய்யோர்
ஆழித் தேர்கள் அளக்கரின் ஈண்ட
ஊழித் தீச் செறி உற்றனவே போல்
பாழித் தீபிகை பற்பல மல்க.
9
   
6092.
கரங்கள் பன்னிரண்டு கொண்ட கடவுள் வந்து எதிர்க்கின்                                         நம்தம்
வரங்களும் படைகள் யாவும் மாயையும் திறலும் சீரும்
உரங்களும் திருவும் எல்லாம் ஊழி நாயகன் முன் உற்ற
புரங்களும் அவுணரும் போல் பூழி பட்டு அழிந்திடாவோ.
37
   
5993.
அரணம் கொண்ட தன் ஆணை கடந்த
முரணும் கூற்றுவன் முத்தலை வேலும்
வருணன் பாசமும் வன்மையின் வாங்கி
விரணம் கொண்டு வியன் சிறை செய்தோன்.
11
   
5994.
விண்ணில் தீச் சுடர் போல் மிளிர் மெய்யான்
வண்ணப் பல் பொறி மாமுகம் உள்ளான்
அண்ணல் சீயவர் இத் தவிசின் கண்
நண் உற்றான் அடல் நஞ்சினும் வெய்யோன்.
12
   
5995.
சேணார் மாமுகில் செல்லொடு சிந்த
மாணார் பூத வயப் படை ஆர்த்தே
ஏணார் வீரரொடு எய்திய தன்மை
காணா நின்று கனன்று எழ உற்றான்.
13
   
5996.
தன் கண் நின்றிடு தானைகள் எல்லாம்
முன் கண் சென்றிட மொய்ம்புடன் ஏகிப்
புன் கண் தீயவன் ஏற்று எதிர் புக்கான்
வன் கண் பூதர்கள் வந்து மலைந்தார்.
14
   
5997.
வில் உண் வாளிகள் வேல் மழு நேமி
அல் உண் மெய் அவுணப் படை தூர்த்த
கல்லும் மாமரமும் கதை யாவும்
செல் என்று உய்த்தனர் சீர் கெழுபூதர்.
15
   
5998.
முட்டா வெஞ்சினம் மூண்டிட இன்னோர்
கிட்டா நின்று கிளர்ந்து அமர் ஆற்றப்
பட்டார் தானவர் பாரிடர் பல்லோர்
நெட்டாறு ஒத்து நிமிர்ந்தது சோரி.
16
   
5999.
கண்டார் அன்னது காவலர் சீற்றம்
கொண்டார் தாம் எதிர் கொண்டு அமர் செய்ய
அண்டார் நின்றிலர் ஆவி யுலந்தே
விண்டார் ஓர் சிலர் மீண்டும் தொலைந்தார்.
17
   
6000.
இடித்தார் தேரினை எற்றினர் மாவை
அடித்தார் தந்திகள் ஆனவை சிந்த
முடித்தார் ஒன்னலர் மூளையின் நின்றே
நடித்தார் பூதர்கள் நாரதர் பாட.
18
   
6001.
முன் சூழ் தானை முடிந்தது கண்டான்
மன் சூழ் வெம் புலி மாமுக வீரன்
என் சூழ்வு இங்கு இனி என்று நினைந்தோர்
கொன் சூலப் படை கொண்டு நடந்தான்.
19
   
6002.
நடக்கின்றானை நலிந்து கணத்தில்
அடக்கின்றாம் என ஆர்த்து எதிர் நண்ணிக்
கடக் குன்றங்கள் கணிப்பில வைகும்
தடக் குன்றம் பல சாரதர் உய்த்தார்.
20
   
6003.
சாலம் கொண்டிடும் சாரதர் உய்த்த
நீலம் கொண்ட நெடும் கிரி யாவும்
சூலம் கொண்டு பஃறுண்டம் அது ஆக்கி
ஆலம் கொண்ட அளக்கரின் ஆர்த்தான்.
21
   
6004.
அந் நேர் கொண்டவன் ஆற்றலை நோக்கி
என்னே நிற்பதி யாம் இவண் என்னா
முன்னே நின்ற முரண் கெழு சிங்கன்
மின்னே என்ன விரைந்து எதிர் சென்றான்.
22
   
6005.
வய மிகு பூதரின் மடங்கல் பேரினோன்
வெயில் உமிழ் முத்தலை வேல் ஒன்று ஏந்தியே
குய வரி முகம் உடைக் கொடியன் முன்பு போய்ப்
புயல் இனம் இரிந்திடத் தெழித்துப் பொங்கினான்.
23
   
6006.
அத்துணை வேலையில் அவுணர் காவலன்
முத்தலை வேலினான் முந்து சிங்கன் மேல்
குத்தினன் அனையனும் கொடியன் மார்பு இடைக்
கைத்தலம் இருந்த தன் கழுமுள் ஓச்சினான்.
24
   
6007.
செறித்திடு சூல வேல் செருவின் மேலவர்
புறத்தினில் போயின பொழிந்த செம்புனல்
நெறித்தரு பகலவன் நின்ற குன்றினும்
எறித்தரும் இளங்கதிர் என்னச் சென்றதே.
25
   
6008.
ஆங்கு அவர் முறை முறை அயில் கொள் சூல வேல்
வாங்கினர் இடம் தொறும் மற்றும் ஓச்சுவர்
ஈங்கு இது போல நின்று இகலிப் போர் செய்தார்
நீங்கு அரும் தளை படு நெறியர் என்னவே.
26
   
6009.
அற்றது காலையில் அனையர் கைத்தலம்
பற்றிய முத்தலைப் படைகள் ஆனவை
இற்றன ஒரு தலை இரண்டும் வீழ்தலும்
மற்றொழில் புரிந்தனர் நிகர் இல் வன்மை ஆர்.
27
   
6010.
புலி முகன் அவ்வழிப் புரிந்து மற்றொழில்
வலியினை இழந்தனன் மையல் எய்தினான்
தலம் மிசை வீழ்தலும் தனது தோள் கொடே
உலம் உறழ் தோளினன் உதைத்து உருட்டினான்.
28
   
6011.
ஒலி கழல் மேலவன் உதைத்த வன்மையால்
அலமரு தீயவன் ஆவி நீங்கினான்
மலர் மழை தூவினர் வான் உளோர் அரி
புலி தனை வெல்வது புதுமைப் பாலதோ.
29
   
6012.
சூர் கொளும் முத்தலைச் சூல வேல் கொடு
நேர் கொளும் புலிமுகன் இறந்த நீர்மைகண்டு
ஆர் கலியாம் எனப் பூதர் ஆர்த்தனர்
வார் கழல் வீரனும் மகிழ்ந்து நோக்கினான்.
30
   
6013.
கழிந்தன தானைகள் காவல் வீரனும்
அழிந்தனன் மேல் திசை அரணம் வீட்டியே
செழும் திரு நகர் இடைச் சேறும் யாம் என
மொழிந்தனர் பூதர்கள் முரணின் முந்தினார்.
31
   
6014.
முந்திய பூதர்கள் முனிந்து மேல் திசை
உந்திய புரிசையை ஒல்லைச் சேர் உறாத்
தம் தமது அடிகளால் தள்ளிப் பொள் எனச்
சிந்தினர் பறித்தனர் சிகரி தன்னையும்.
32
   
6015.
பொலம் படு சிகரியைப் பறித்துப் பூதர்கள்
நலம் படு மகேந்திர நகருள் வீசியே
உலம்பினர் அவுணர்கள் உலைந்து சிந்தினார்
கலம் பகிர்வு உற்றிடக் கடல் உற்றார்கள் போல்.
33
   
6016.
முகுந்தனை வென்றிடும் முரண் கொள் பூதர்கள்
புகுந்தனர் மகேந்திர புரத்து ஞெள்ளலில்
தொகும் தொகும் அவுணரைத் தொலைத்துச் சென்றனர்
தகும் தகும் இவர்க்கு என அமரர் சாற்றவே.
34
   
6017.
நீக்கம் இல் மாளிகை நிரைகள் யாவையும்
மேக்கு உயர் பூதர்கள் விரைந்து தம் பதத்
தாக்கினில் அழித்தனர் தவத்தின் மேலவர்
வாக்கினில் அகற்றிய வண்ணமே என.
35
   
6018.
ஆர்த்திடும் கரி பரி அவுணர் ஆயினோர்
தேர்த் தொகை மாளிகை சிகரம் மாய்ந்திடக்
கூர்த்திடும் நெடுங்கணை கோடி கோடிகள்
தூர்த்தனர் சென்றனர் துணைவர் ஆயினோர்.
36
   
6019.
அன்னது ஓர் அமைதியின் ஆடல் மொய்ம்பினான்
வன்னியின் படையொடு மருத்தின் மாப்படை
பொன் நெடும் சிலை தனில் பூட்டி நீவிர் போய்
இந்நகர் அழித்திர் என்று இமைப்பில் ஏவினான்.
37
   
6020.
ஏவிய அப்படை இரண்டும் ஒன்றியே
மூவுலகு இறுதியின் முடிக்கும் தம் உரு
மேவின நகர் எலாம் விரவிச் சூழ்ந்தன
தீ விழி அவுணரும் இரிந்து சிந்தவே.
38
   
6021.
ஒட்டலர் நமை இனி உருத்துச் செய்வது என்
விட்டனன் இங்கு உளன் வெருவலேம் எனா
நெட்டு அழல் கொளுவியே நிலவி மாநகர்
சுட்டன உடுநிரை பொரியில் துள்ளவே.
39
   
6022.
எரிந்தன சில்லிடை இறந்து பூழியாய்
விரிந்தன சில்லிடை வெடித்த சில்லிடை
கரிந்தன சில்லிடை கனலி சூழ்தலால்
பொரிந்தன சில்லிடை புகைந்த சில்லிடை.
40
   
6023.
எப் புவனங்களும் இறைஞ்சு சூர் நகர்
வெப்புறு கனல் கொள விளிந்து போயதால்
அப்புறழ் செஞ்சடை அமலன் மூரலால்
முப்புரம் ஆனவை முடிந்ததே என.
41
   
6024.
இன்னணம் இந்நகர் எரி மிசைந்துழி
அன்னவை ஒற்றர்கள் அறிந்து வல்லை போய்ப்
பொன்னிவர் கடிநகர் புகுந்து வாய் வெரீஇ
மன்னவர் மன்னனை வணங்கிக் கூறுவார்.
42
   
6025.
காய் கதிர் அண்ணலைக் கனன்ற நின் மகன்
மாய வெம் படையினால் மலைந்து உளார் தமைத்
தூயது ஒர் புனல் கடல் துன்ன உய்த்தனன்
நீ அது தெரிந்தனை நிகழ்ந்த கேட்டி மேல்.
43
   
6026.
அங்கு இவை நாரதன் அறையக் கந்தவேள்
செங்கையில் வேல் படை செலுத்த அன்னது
பொங்கு உறு தெண்புனல் புணரி சேறலும்
மங்கியது ஓடிய மாயை தன் படை.
44
   
6027.
வஞ்சனி தன் படை மாண்டு போந்துழித்
துஞ்சுதல் ஒழிந்தனர் தொன்மை போலவே
நெஞ்சினில் உணர்வு எலாம் நிகழ யாவரும்
உஞ்சனர் எழுந்தனர் உம்பர் ஆர்த்திட.
45
   
6028.
மாற்படு புந்தி தீர் மறவர் தாம் உறு
பாற்பட வருவது பார்த்துக் கை தொழு
தேற்பு ஒடு பணிதலும் யாவரும் வம் எனா
வேல் படை முன் உற விரைந்து மீண்டதே.
46
   
6029.
மேல் நிகழ் நெறி கொடு மீண்ட செய்யவேல்
ஆனது குமர வேள் அங்கை போந்ததால்
ஊனம் இல் மாற்றலர் ஒல்லை வந்து நம்
மாநகர் மேற்றிசை வாயில் நண்ணினார்.
47
   
6030.
மேல் திசை வாய்தலில் வீரர் சேறலும்
ஏற்றனன் தானையோடு இருந்த காவலன்
ஆற்றினன் சிறிது அமர் அவனது ஆவியை
மாற்றினர் அனிகமும் மாண்டு போயதே.
48
   
6031.
குடதிசை எயிலினைக் கொடிய பூதர்கள்
அடி கொடு தள்ளினர் ஆண்டு நின்றிடும்
படி அறு சிகரியைப் பறித்து மாநகர்
நடு உற வீசினர் நமர்கள் மாயவே.
49
   
6032.
சோர்வு அறு பூதரும் துணைவர் ஆகிய
வீரரும் தலைவனாம் வீர வாகுவும்
சீரிய நகர் இடைச் சென்று மேல் திசை
ஆர் அழல் கொளுவி நின்று அழித்தல் மேயினார்.
50
   
6033.
அண்டலர் வன்மையால் அயுத யோசனை
உண்டது கொழும் கனல் உண்ட எல்லையும்
கண்டனம் இதனை நீ கருத்தில் ஐயமாக்
கொண்டிடல் மன்ன என்று ஒற்றர் கூறினார்.
51
   
6034.
ஒற்றர் இவ்வகை உரைத்தலும் அவுணர் கோன் உளத்தில்
செற்றம் மிக்கன நெறித்தன உரோமங்கள் சிலிர்த்த
நெற்றி சென்றன புருவங்கள் மணி முடி நிமிர்ந்த
கற்றை வெங்கனல் கான்றன சுழன்றன கண்கள்.
52
   
6035.
கறங்கு சிந்தனைச் சூரன் இத்தன்மையில் கனன்று
மறம் கொள் சாரணர் தங்களை நோக்கி நீர் வான்                                  போய்ப்
பிறங்கும் ஊழியில் உலகு எலாம் அழித்திடப் பெயர்வான்
உறங்கு மாமுகில் யாவையும் தருதிர் என்று உரைத்தான்.
53
   
6036.
அயலின் நிற்புறு தூதுவர் வினவியே ஐய
இயலும் இப்பணி எனத் தொழுது உம்பரின் ஏகிப்
புயல் இனத்தினைக் கண்டு தம் பாணியால் புடைத்துத்
துயில் எழுப்பியே விளித்தனன் இறை எனச் சொற்றார்.
54
   
6037.
எழுவகைப் படு முகில்களும் வினவியே ஏகி
விழுமிது ஆகிய மகேந்திரத்து இறைவன் முன் மேவித்
தொழுது நிற்றலும் இத்திரு நகரினைத் தொலைக்கும்
அழலினைத் தணிவித்திடுவீர் என அறைந்தான்.
55
   
6038.
அறையும் எல்லையில் நன்று என எழிலிகள் அகன்று
செறி தரும் புகை உருக்கொடு விண்மிசைச் சென்றோர்
இறையில் எங்ஙணும் பரந்தன மாவலி இடை போய்க்
குறிய மாயவன் நெடிய பேர் உருவு கொண்டது போல்.
56
   
6039.
கரு முகில் கணம் முறை முறை மின்னின ககனத்து
உரும் இடிக்குலம் ஓர் ஆயிரங் கோடியை உகுத்த
பரும் உடிக்குலக் கிரியொடு மேருவும் பகிர்ந்த
திரு முடித்தலை துளக்கியே வெருவினன் சேடன்.
57
   
6040.
விண்டுலா மதில் கடிநகர் தன்னை வெங்கனலி
உண்டு உலாவுறு தன்மையும் அவுணர் தம் முலைவும்
கண்டியாம் இது தொலைந்திடின் ஈண்டு ஒரு கணத்தில்
அண்டர் நாயகன் தானை மன்னவன் எமை அடுமால்.
58
   
6041.
நீட்டம் மிக்க இத்திரு நகர் புகுந்து நீறு ஆக்கி
வாட்டும் வெந்திறல் எரியினை அகற்றிலம் வறிது
மீட்டும் ஏகுதும் என்றிடின் அவுணர் கோன் வெகுண்டு
பூட்டும் வன் தளை செய்வது என் என்றன புயல்கள்.
59
   
6042.
தொல்லை மாமுகில் இவ்வகை உன்னியே சூரன்
எல்லை இல்பகல் இட்டிடும் உவளகத்து எய்தி
அல்லல் உற்றிடு கின்றதின் ஆடலம் புயத்தோன்
கொல்ல நம் உயிர் வீடினும் இனிது எனக் குறித்த.
60
   
6043.
புந்தி மேல் இவை துணிவு என நாடியே புயல்கள்
சிந்து துள்ளி ஒன்று இபத்துணை அளவையில் செறிய
முந்தியோர் இறை பொழிந்தன பொழிதலும் முடிந்த
அந்த மாநகர் மேல்திசை பொடித்திடும் அழலே.
61
   
6044.
ஆய தன்மையை நோக்கினான் ஆறு இரு தடந்தோள்
நாயகன் படைக்கு இறையவன் அழல் எழ நகைத்துத்
தீயின் ஆற்றலை அழித்தன மேகமோ செறுநர்
மாயமே கொலோ என்று தேர் வுற்றனன் மனத்தில்.
62
   
6045.
தேருகின்று உழி நாரதன் விண் இடைச் சென்று
வீர கேள் இவை ஊழிநாள் முகில் இனம் வெய்ய
சூரன் ஆணையால் வந்தன வடவையம் தொல்லோன்
மூரி வெம் படை தொடுத்தியால் விரைந்து என                             மொழிந்தான்.
63
   
6046.
விண்ணில் வந்து இவை நாரதன் உரைத்தனன் மீட்டும்
துண் எனச் செல வினவியே வாகையம் துணைத்தோள்
அண்ணல் ஊழிநாள் அனல் படை தூண்டினன் அது                                       போய்க்
கண் அகல் முகில் இனத்தினைச் சூழ்ந்தது கணத்தில்.
64
   
6047.
சூழல் போகிய எழிலிகள் யாவையும் சுற்றி
ஊழி மாப் படை அவற்றிடைப் புனல் எலாம் உண்டு
வாழி மொய்ம்பனை அடைந்தது மற்று அது காலை
ஆழி மால் கடல் தொகை என வீழ்ந்தன அவையே.
65
   
6048.
மறிந்த எல்லையில் ஆறு மாமுகம் உடை வள்ளல்
சிறந்த ஆறு எழுத்து உண்மையை விதிமுறை செப்ப
இறந்த தொல் மிடல் வருதலும் உய்ந்து உடன் எழுந்து
புறம் தரும் கடல் அதன் இடை ஓடின புயல்கள்.
66
   
6049.
விழுந்து கொண்டல்கள் இரிதலும் பார் இட வெள்ளம்
எழுந்து துள்ளியே ஆர்த்தன மலர் மழை இமையோர்
பொழிந்து வான் இடை ஆடினர் இவை கண்டு பொறாமல்
உழுந்து கண்ணடி செல்லும் முன் போயினர் ஒற்றர்.
67
   
6050.
கொற்றவை ஆடுறு கோநகர் நண்ணி
அற்றம் இல் மன்னன் அடித்துணை மீது
தற்று உறு பூமுடி தாழ இறைஞ்சி
மற்று இது கேண்மிய என்று வகுப்பார்.
68
   
6051.
ஊழி புகுந்துழி உற்றிடு கொண்மூ
ஏழும் விரைந்து நின் ஏவலின் விண் போய்
வீழ் புனல் சிந்துபு மேல் திசை தன்னில்
சூழ் உறும் அங்கியினைத் தொலை வித்த.
69
   
6052.
மாற்றலர் தூதுவன் மற்று அது காணூஉ
வீற்று உறு தீப்படை ஏழ் முகில் மீது
மாற்றலின் விட்டிட அன்னவை வீழ்ந்து
மேல் திசை வாய்தலில் வேலை புகுந்த.
70
   
6053.
வன்னி செறிந்தன மாய்ந்தன என்றே
உன்னலை பூதர் ஒழிந்திடும் வீரர்
அன்னதன் எண்மையின் ஆடுறு கின்றார்
இந்நகர் என்றலும் ஏந்தல் முனிந்தான்.
71
   
6054.
மயிர்ப் புறம் பொடித்திட வரை கொள் மார்பகம்
வியர்ப்புற எரிதழல் விழிகள் சிந்திட
உயிர்ப்பு இடை புகை வர உருமுக் கான்று எனச்
செயிர்த்திடும் மன்னவன் இதனைச் செப்பினான்.
72
   
6055.
போரினை இழைத்து வெம் பூதர் தங்களை
வீரர்கள் தொகையினை வீட்டிப் பின் உறச்
சார் உறு சிவன் மகன் தன்னை வென்று இவண்
சேருதும் கொணர்திர் நம் தேரை என்றனன்.
73