அக்கினி முகாசுரன் வதைப் படலம்
 
6194.
எட்டாசை உளோர்களை எண் கரியைக்
கட்டா உறுசில் கதிரைப் பரியை
முட்டா வரு தேரினை முன் கொணரா
வட்டு ஆடியது ஓர் வலி பெற்று உடையான்.
1
   
6195.
கருவாய் உறுகின்றது ஒர் காலை முதல்
திருமாதுடன் முற்று அழல் சிந்திடலும்
பெரு மாயவள் வந்து பிறந்திடுவோன்
எரி மா முகன் என்ற இயற்பெயரான்.
2
   
6196.
பன்னாக மிசைத் துயில் பண்ணவன் ஊர்
பொன் ஆர் சிறை கொண்டது ஒர் புள்ளின் உடன்
அந் நான்முகன் ஊர்தியும் ஆடு உறுவான்
முன் நாள் கொடு வந்தது ஒர் மொய்ம்பு உடையான்.
3
   
6197.
முன் உற்றவன் வான் எழு மொய் கதிரோன்
தன்னைச் சிறை இட்டது தான் வினவா
மன் உற்றிடு சோமனை வைகல் பல
இன்னல் படவே சிறை இட்டு உடையான்.
4
   
6198.
தெய்வப் படை தாங்கிய செங்கையினான்
ஐவர்க்கு உளது ஆகிய ஆற்றல் உளான்
மை வைத்திடும் வஞ்சனை மாயம் வலான்
எவ்வெப்படை தன்னையும் ஈறு செய்வான்.
5
   
6199.
அந்தார் முடி கொண்டிடும் ஐயன் முனம்
வந்தான் அடி தன்னை வணங்கி இவண்
எந்தாய் மெலிவு உற்றனை என் எனலும்
சிந்தாகுலமோடு இது செப்பிடுவான்.
6
   
6200.
உண்ணாடிய மாயை கொடு ஒற்றுமையால்
விண் நாடர் பொருட்டு இவண் மேவி உள்ளான்
கண்ணார் எயில் வேலி கடந்து நமை
எண்ணாது புரத்து இடை ஏகினன் ஆல்.
7
   
6201.
ஏகும் தொழில் வெய்யவன் இந்நகரம்
வேகும்படி செந்தழல் வீசிடலும்
மா கொண்டல்கள் ஏவினன் மற்றவை மாறு
ஆகும் புனல் சிந்தி அவித்தனவே.
8
   
6202.
மடல் கொண்டிடும் தாரினன் மற்று அது கண்டு
உடல் கொண்ட சினத்தொடு ஒருங்கு உலகம்
கடை கொண்டிடுகின்ற கனல் படை தொட்டு
அடல் கொண்ட முகில் திறல் அட்டனனே.
9
   
6203.
அட்டான் அது கேட்டனம் ஆடகனை
விட்டாம் அனிகத்தொடு வெஞ்சமர் செய்
தொட்டார் வலி நோக்கி உடைந்தவனும்
நெட்டு ஆழி புகுந்து நிமிர்ந்தனன் ஆல்.
10
   
6204.
நம் கொற்றம் மிகுத்திடு நால் படையும்
அங்கு உற்றிடு கின்றன மாநகரை
உங்கு உற்றிடு தூதன் ஒறுத்தனன் ஆல்
இங்கு உற்ற நிகழ்ச்சி இது என்றனனே.
11
   
6205.
செங்கோல் முறை கோடிய தீயவுணன்
அங்கு ஓதியது கேட்டலும் ஆர் அழல் கால்
வெங்கோர முகத்து வியன் புதல்வன்
தம் கோமுகமா இது சாற்றிடுவான்.
12
   
6206.
மன்னர்க்கு இறை ஆகிய மன்னவ நீ
உன் உற்று உளம் மீதில் உருத்திடவே
முன் உற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ
என்னுக்கு அவன் ஆற்றலை எண்ணுதி நீ.
13
   
6207.
மிடல் கொண்டிடும் தூதனை மிக்கவரைப்
புடை கொண்டு அமர் செய்திடு பூதர் தமை
அடல் கொண்டு இவண் நின்னை அடைந்திடுவன்
விடை தந்து அருள் என்று விளம்பினனே.
14
   
6208.
நன்றே இது செப்பினை நண்ணலனை
வென்றே வருக என்று விடுத்திடலும்
நின்றே தொழுது அவ்விடை நீங்கினன் ஆல்
குன்றே நிகர் தோள் வலி கொண்டு உடையோன்.
15
   
6209.
கார்க் கோலமும் வெய்ய கருங்கடலின்
நீர்க் கோலமும் அன்னவன் நீடி அதன்
சீர்க் கோ நகரத்து இடை சென்றனன் ஆல்
போர்க் கோலம் அமைந்து புறம் படர்வான்.
16
   
6210.
மைக் கொண்டல் படர்ந்திடு மால் வரை போல்
மொய்க் கொண்டிடு சாலிகை முன்னு உறவே
மெய்க் கொண்டு அணி புட்டில் விரல் பரியாக்
கைக் கொண்டனன் விண்ணவர் கைப் படையே.
17
   
6211.
தன் தாதையினைத் தரு தாய் உதவும்
பொன் தாழ் சிலை கைக் கொடு பொள் எனவே
ஒன்று ஆகிய தேர் இடை ஒல்லை புகாச்
சென்றான் விழியில் கனல் சிந்திடுவான்.
18
   
6212.
அறம் அற்றிடும் தீயன் அகன்று நகர்ப்
புறம் உற்றனன் அங்கு அது போழ்து தனில்
திறம் அற்றது தூதுவர் செப்புதல் முன்
மறம் உற்றிடும் தானைகள் வந்தனவே.
19
   
6213.
ஓர் ஆயிர வெள்ளம் ஒருத்தல் இனம்
தேர் ஆனவும் அத்தொகை திண் திறல் மா
ஈர் ஆயிர வெள்ளம் யாவர்களும்
ஆராய்வரி தால் அவுணக் கடலே.
20
   
6214.
ஆன காலையில் அங்கி முகா சுரன்
மானம் மேல் கொண்டு மாற்றலர் யாரையும்
யான் ஒர் கன்னல் முன் ஈறு செய்வேன் எனாச்
சேனை தன்னொடும் சென்றிடல் மேயினான்.
21
   
6215.
நல்கு மாறு இன்றி நாள் பல நீங்கியே
மல்கு காதலர் வந்து கலந்துழிப்
பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர்
அல்குல் என்ன அசைந்து அகல் உற்ற தேர்.
22
   
6216.
அருத்தி மெல்லியர் ஆரதம் கொண்டு உழல்
விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல்
எருத்தம் மீதில் இடிப்பவர் தம் உரைக்
கருத்தின் நிற்கில காய் சின வேழமே.
23
   
6217.
மண்ணில் பாய்வன மாதிரம் சூழ்வன
விண்ணில் தாவுவ வீதியில் செல்வன
எண்ணில் பல் பொருள் இச்சை கொள் வேசியர்
கண்ணில் ஒப்பன கந்துக ராசியே.
24
   
6218.
வஞ்சம் நீடி அருள் அற்று மாயமே
எஞ்சல் இன்றி இருள் கெழு வண்ணமாய்
விஞ்சு தம் அல்குல் விற்று உணும் மங்கையர்
நெஞ்சம் ஒத்தனர் நீள் படை வீரரே.
25
   
6219.
தார்த் தடம் புயத் தானவர் பல்லியம்
ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால்
தூர்த்த மங்கையர் சோர்வினில் செய் பழி
வார்த்தை எங்கணும் வல்லையில் சேறல் போல்.
26
   
6220.
சோதி மெய் எழில் தூயன மாற்றியே
மீது செல் அரும் வெவ்விருள் உய்த்தலால்
ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர்
காதல் போன்ற கடிது எழும் பூழியே.
27
   
6221.
பீட்டின் மிக்க பெரும் பணை தாங்கிய
மோட்டின் ஒட்டகம் உந்திய கந்தரம்
நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முன் தலை
காட்டி வாங்கும் கணிகையர் போலவே.
28
   
6222.
சீறு மால் கரி தேர் மிசைப் பூண்டு விண்
ஆறு அளாவி நின்று ஆடுவ கேதனம்
ஊறு காதல் ஒருவன் கண் வைகினாள்
வேறு உளாரையும் வெஃகி விளித்தல் போல்.
29
   
6223.
வீழு மும்மத வேழங்கள் மத்தகம்
சூழி காலின் அசை தொறும் தோன்றுவ
மாழை நோக்கியர் மைந்தற்கு மால் உறக்
காழகத் தனம் காட்டி மறைத்தல் போல்.
30
   
6224.
தோமரம் சிலை சூலம் மழுப் படை
நாம வெங்கதை நாஞ்சில் முசலம் வேல்
நேமி தானவர் நீள் கரம் செல்வன
காமர் மங்கையர் கண் தொழில் தாங்கியே.
31
   
6225.
எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி
சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம்
வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும்
செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைகள் எல்லாம்.
32
   
6226.
சோம கண்டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன்
காமர் பிங்கலனே ஆதிக் கடிது எழு தானை வீரர்
மா மருங்கு அதனில் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன்
ஏமரு பூத சேனைக்கு எதிர் உற எய்தினானால்.
33
   
6227.
எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பில் பேரி
அதிர்ந்தன துடியும் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள்
உதிர்ந்தன அனையர் கூடி உடன்று போர் புரிய வையம்
பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்தது                                   அன்றே.
34
   
6228.
தொட்டனர் வேலும் வாளும் தூண்டினர் பகழி மாரி
விட்டனர் பிண்டி பாலம் வியன் மழுத் தண்டம் ஓச்சிக்
கிட்டினர் சூலம் வீசிக் கிளந்தனர் அவுணர் பூதர்
பட்டனர் அளப்பிலோர்கள் பரந்தன குருதி நீத்தம்.
35
   
6229.
முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக்
கைத் தலத்து இருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல்                                       தன்னை
எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை
அத்தலை அவுண வீரர் அளப்பிலர் பட்டார் அம்மா.
36
   
6230.
தறிந்தன புரவித் தாளும் தலைகளும் தடந்தேர் அச்சும்
முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண்
மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும்
செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய்.
37
   
6231.
இரு பெரும் படையும் இவ்வாறு ஏற்று இகல் புரியும்                                      வேலை
வெருவரு வேல் கண் மாதர் வியர்ப்பின் வந்து உதித்த                                      வீரர்
பொருவரும் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ
ஒருவரும் அவுணர் நில்லாது ஓடினர் உடைந்து போனார்.
38
   
6232.
உடைதலும் அவுணன் மைந்தன் ஒய் என விடுப்ப மேகன்
கடுமுரண் சோமன் சோம கண்டகன் முதலா உள்ள
படை உறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி
அடுசிலை வீரர் மேல் சென்று அமரினை இழைத்தார்                                   அன்றே.
39
   
6233.
இழைத்திட அதனை நோக்கி இலங்கு எழில் தாளில் வீரக்
கழல் புனைகின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத்து
அழல் பெரும் கடவுள் போல்வான் அசனி ஏறு அஞ்ச                                        ஆர்க்கும்
முழக்கினன் ஒருதன் சேனை முன் உறக் கடிது வந்தான்.
40
   
6234.
வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி
சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி
இந்து கண்டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர்
உந்திய சேமத் தேர் மேல் உற்று இகல் புரிந்து சூழ்ந்தார்.
41
   
6235.
சுற்றினர் வீரன் மேனி சோரி நீர் ஒழுகும் ஆற்றால்
முற்று உறு பகழி தூவ முழங்கு அழல் என்னச் சீறி
மற்றவர் சிலையும் தேரும் மண் மிசை வீட்டி வல்லே
நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கணை பலவும்                                    உய்த்தான்.
42
   
6236.
உய்த்தலும் அவுணர் வேந்தற்கு உற்றுழி உதவ நின்ற
மெய்த்திறல் ஆற்றல் ஆளன் மேகன் என்பவன் ஓர்                                     தண்டம்
கைத்தலம் மிசையில் ஏந்திக் கணப் படை வீரன் தேர்                                     மேல்
மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி                                     ஆர்த்தான்.
43
   
6237.
மோதலும் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ
மேதகு தலைவன் வீர புரந்தரன் வேல் ஒன்று ஏந்தி
ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவலோடும்
பூதலம் மிசை வீழாப் பொன்றினன் புயலின் பேரோன்.
44
   
6238.
புயல் உறு நாமத்து அண்ணல் பொன்றலும் அதனை நாடி
அயல் உறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக
இயல் அது தன்னை நோக்கி எரி முகன் எரியில் சீறிப்
பயில் உறு சிலை ஒன்று ஏந்திப் படையொடும் கடிது                                    வந்தான்.
45
   
6239.
வளைத்தான் தனிப் பெருவில்லினை மருவார் மனம்                                    வளைய
விளைத்தான் அவன் சிறு நாண் ஒலி மிக ஆர்த்தனன்                                    விண்மேல்
முளைத்தார் தரு பிறை போல்வது ஒர் முனை வாளிகள்                                    தெரியாக்
கிளைத்தார் தரு பூதப் படை கேடு உற்றிடப் பொழிந்தான்.
46
   
6240.
தலை அற்றனர் கரம் அற்றனர் தாள் அற்றனர் தோளா
மலை அற்றனர் மார்பு அற்றனர் வாய் அற்றனர் செய்யும்
கொலை அற்றனர் செவி அற்றனர் கூறு உற்றிடு நாவின்
நிலை அற்றனர் படை அற்றனர் நெடும் பூதர்கள் எவரும்.
47
   
6241.
ஆர் இற்றன சகடு இற்றன அச்சு இற்றன கிடுகின்
ஏர் இற்றன கொடி இற்றன முடி இற்றன ஈர்க்கும்
மூரிப் பரிமா இற்றன முருகன் படை வீரர்
தேர் இற்றன படை இற்றன செரு இற்றன அன்றே.
48
   
6242.
ஓடு உற்றன குருதிப் புனல் உலகச்சுற ஒலியா
ஆடு உற்றன கவந்தக் குறை அலகைக் குலம் இகவே
பாடு உற்றன ஞமலித் தொகை பரவுற்றன கொடிமேல்
கூடு உற்றன பாறு உற்றன குறுகு உற்றன கழுகே.
49
   
6243.
அக் காலையின் அது கண்டனன் அழல் கான்றிட நகையா
மைக் காலனும் வெரு உற்றிடு வலிசேர் திறல் மகவான்
கைக்கார் முகம் தனை வாங்குபு கணைமாரிகள் சொரியாப்
புக்கான் அவுணனும் ஆங்கு எதிர் பொழிந்தான் சர                                        மழையே.
50
   
6244.
கரவன் விடு நெடுவாளிகள் கந்தன் படைஞன் மேல்
வருகின்றன உறுகின்றன மன்னன் மகன் முன்னம்
பொருகின்ற நம் வீரன் விடுபுகர் வெங்கணை பலவும்
இரிகின்றன படுகின்றன விருவோர் பகழியுமே.
51
   
6245.
போர் இவ்வகை புரிகின்று உழிப் புரை தீர் விறல்                                        மகவான்
தேரும் பொரு சிலையும் கணை செறி யாவமும் சிதையா
ஈர் ஐம்பது சரம் மார்பு உற எய்தே இகல் அவுணர்
ஆரும் படி புகழும்படி ஆர்த்தான் அறம் பேர்த்தான்.
52
   
6246.
மாறு ஆகிய அவுணர்க்கு இறை வலியும் திறல் மகவான்
வீறு ஆனவை இழந்திட்டதும் விழித் தீயுற நோக்கிச்
சீறாச் சிலை வளையாக் கணை சிதறா வசை பலவும்
கூறா எதிர் புகுந்தார் அவன் துணையாம் எழுகுமரர்.
53
   
6247.
இடி கால் உறு முகிலாம் என எழுவீரரும் ஏகிக்
கடிதே முனிவொடு சிந்திய கணை யாவையும் விலக்கா
விடம் ஆகிய எரி மாமுகன் விறலோர் புய வரைமேல்
வடிவார் கணை பல சிந்துபு மழை ஆம் என மறைத்தான்.
54
   
6248.
சகத்து ஆனவர் புகழப்படும் தலைவன் மகன் சரங்கள்
மிகத்தான் விட மெலிவு உற்றிடும் எழு வீரரும்                                    வெய்யோன்
முகத்து ஆயிரம் கரத்து ஆயிரம் உரத்து ஆயிரம்                                    மொய்ம்பின்
அகத்து ஆயிரம் கணை பாய்ச்சினர் அவன் தேரையும்                                    அறுத்தார்.
55
   
6249.
அறுத்திடும் எல்லையின் அழலின் மாமுகன்
மறித்தும் ஒர் தேர் இடை வாவி வல்லை போய்
எறித்தரு கதிர் உடை எழுவர் தம்மையும்
செறுத்து எரி விழித்து இவை செப்பல் மேயினான்.
56
   
6250.
ஒன்று ஒரு படையினால் உங்கள் ஆவியைத்
தென் திசை மறலியார் தெவிட்ட நல்கியே
வென்றி கொள் மொய்ம்பு உடை விடலை தன்னையும்
கொன்றிடு கின்றனன் என்று கூறினான்.
57
   
6251.
கூறு போதத்தினில் குமரன் தானையோர்
வேறு வேறு அடு கணை வீசி வெய்யவன்
ஏறு தேர் தன்னையும் இவுளி தன்னையும்
நூறினார் அவன் உடல் நூழை ஆக்கினார்.
58
   
6252.
ஆயது காலையில் அவுணன் வேறு ஒரு
பாய் இரும் தேர் இடை பாய்ந்து கண்ணுதல்
தூயவன் படையினை எடுத்துத் துண் என
நேயமொடு அருச்சனை நிரப்பித் தூண்டினான்.
59
   
6253.
அடல் எரி முகத்தினான் ஆதி நாயகன்
படை தொட அன்னது படியும் வானமும்
வடவையின் உருவமாய் வரலும் அச்செயல்
விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார்.
60
   
6254.
அனல் படை அன்னதால் அதற்கு மாறதாப்
புனல் படை விடுக்குவம் என்று புந்தி கொண்டு
இனப்படு துணைவர்கள் யாரும் வாருண
முனைப் படை தூண்டினர் முடியும் செய்கை யார்.
61
   
6255.
தூண்டிய வாருணத் தொல்லை மாப் படை
சேண் தொடர்ந்திடுதலும் தேவன் தீப்படை
ஆண்டு எதிர் ஆகியே அவற்றை நுங்கிற்று ஆல்
ஈண்டு ஒரு முனி கடல் ஏழும் உண்டு என.
62
   
6256.
சலபதி படைகளைத் தடிந்து வாய் மடுத்து
உலகு உளோர் வெருவர ஊழியான் படை
வலியுடன் ஏகி ஏழ் வயவர் தம்மையும்
மெலிவு செய்து உயிர் கொடு மீண்டு போயதே.
63
   
6257.
மீண்டு அது போதலும் வீரர் அவ்விடை
மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார்
மூண்டிடும் பெரும் கனல் முகத்தன் அங்கு அது
காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான்.
64
   
6258.
ஒருங்கு உற வீரர்கள் உலந்து வீடலும்
மருங்கு உற நோக்கிய வய வெம் பூதர்கள்
கரங்களை மறித்தனர் கலங்கி வாய் புடைத்து
இரங்கினர் வெருவினர் இரிந்து போயினார்.
65
   
6259.
நெற்றியில் வீரர் தம் விளிவு நீங்கலாது
உற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வதும்
தெற்று என நோக்கினன் செயிர்த்து விம்மினான்
வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே.
66
   
6260.
வீர மொய்ம்பு உடையவன் வெருவலீர் எனப்
பாரிடக் கணங்களைப் பாணியால் அமைத்து
ஓர் இறை முன்னரே ஒரு தன் தேரொடும்
ஆர் அழல் முகத்தன் முன் அணுகப் போயினான்.
67
   
6261.
போய்க் குறுகு உற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின்
வீக்கிய கனை கழல் வீர வாகுவைத்
தாக்கு எரி முகம் உடைத் தறுகண் வெய்யவன்
நோக்கினன் வெகுண்டு இவை நுவறல் செய்குவான்.
68
   
6262.
எதிர் ஆகிய பூதரை ஏனையரை
மதியேன் நினையே அடவந்தனன் நீ
அது காலையின் இங்ஙன் அடைந்தனையால்
விதியே உனை என் முன் விடுத்ததுவே.
69
   
6263.
கொன்றாய் பலரைக் கொடு வெஞ்சமரின்
வென்றாய் பலரை மிகை செய்தனையாய்
நின்றாய் வருவாய் நினது ஆர் உயிருக்கு
இன்று ஆகுவதோ இறுதிப் பகலே.
70
   
6264.
முன்னர்ப் பொருதே முரிவு உற்றவர் போல்
என்னைக் கருதேல் இனி ஓர் இறையில்
உன்னைத் தலை கொய்து ஒரு சென்னியையும்
மன்னர்க்கு இறை சேவடி வைத்திடுவேன்.
71
   
6265.
பூண் பால் முலை மாதர் புணர்ச்சி எனும்
ஆண் போர் தனிலே வலி அற்று அழியும்
ஆண் பால் ஒருவன் அவனே அலனோ
ஏண் பால் உனையான் இவண் வென்றிலனேல்.
72
   
6266.
என்னா எதிரா இவை ஒப்பன சொல்
சொன்னான் அதுகேட்டிடும் தொல் விறலோன்
பொன்னார் தரு செங்கை புடைத்து நகைத்து
ஒன்னான் முகம் நோக்கி உரைத்திடுவான்.
73
   
6267.
முளையார் தரு பொன்னவன் முந்து சமர்
விளையா வடிவம் தனை விட்டு அகலா
வளையார் புனல் புக்கனன் அன்னவனுக்கு
இளையாய் ஒரு நீ எவண் உய்குதியோ.
74
   
6268.
மூண்டார் அமர் செய்திடும் மொய்ம்பர் எலாம்
மாண்டார் கதிரோன் பகை மற்று ஒருவன்
மீண்டான் அவனும் விளி உற்றிடு நீ
ஈண்டு ஆர் உயிர் தோற்றிட ஏகினையோ.
75
   
6269.
வீடிச் செருவில் விளிவா குதியோ
பேடித் தொழில் கற்றிடும் பிள்ளை என
ஓடிக் கடல் புக்கு உயிர் உய்குதியோ
நாடிக் கடிது ஒன்றை நவிற்றுதியே.
76
   
6270.
பார் காத்திடினும் பல தானவரும்
நேர் காத்திடினும் நிலை பெற்று அழியாச்
சூர் காத்திடினும் தொலைவு இல் விறலோர்
ஆர் காத்திடினும் அடுவேன் உனையே.
77
   
6271.
என்று இங்கு இவை வீரன் இசைத்திடலும்
குன்று அன்ன சினத்து அழல் கொம் எனவே
சென்று உள்ளம் மலைத்து உழி தீ முகவன்
வன் திண் சிலை ஒன்றை வளைத்தனனே.
78
   
6272.
நடுத்தான் அகன்றிடு சூர் மகன் நாண் ஓதையைச் சிலை                                     நின்று
எடுத்தான் எடுத்தலும் வெய்யவன் இரவோனுடன்                                     இரிந்தான்
உடுத்தான் உதிர்ந்தன சேடனும் உலைந்தான் உலகு                                     அனைத்தும்
கெடுத்தான் இவன் என வானவர் கிளை ஓடின அன்றே.
79
   
6273.
அக்காலையின் முகம் ஆறு உடைய அமலன் தனக்கு                                      அன்பன்
கைக் கார் முகம் இருகால் வளைத்து ஒருகால் ஒலி                                      காட்டத்
திக்கானன முடையான்முதல் தேவாசுரர் துளங்கி
இக்காலம தோபார்மழு திறுங்காலம தென்றார்.
80
   
6274.
என்னா இசைத்திடும் எல்லையில் எரிமாமுகன் ஈர் ஏழ்
கொன்னார் கணை விடுத்து ஆர்த்தனன் குறுகு உற்றது                                      வருமுன்
மின் ஆம் எனப் பதினால் கணை விடுத்தே அவை                                      விலக்கிப்
பொன்னார் தரு திறல் மொய்ம்பினன் புயல் ஏறு எனத்                                      தெழித்தான்.
81
   
6275.
செஞ்ஞாயிறு கதிர் கான்று என தீ மா முகத்து அவுணன்
ஐஞ்ஞான்கு எனும் தொகை பெற்றிடும் அயில் வெங்கணை                                   தொடுப்ப
எஞ்ஞான்றும் உற்றிடும் சீர்த்தியான் இருபான் கணை                                   துரந்து
மைஞ் ஞான்றிடும் முகில் மேல் செலும் மருத்தாம் எனத்                                   தடுத்தான்.
82
   
6276.
கண்டு அங்கு அது கனல் மாமுகன் கணை ஆயிரம்                                     துரந்து
புண் தங்கிய தனி வேல் உடைப் புனிதன் தனது இளவல்
முண்டம் புக உய்த்தே திறல் முது வால்வளை அதனை
அண்டம் கிழி பட ஊதினன் அவுணப் படை புகழ.
83
   
6277.
ஆர் ஆரும் வியக்கும் திறல் அடல் மொய்ம்பினன்                                         அங்கண்
ஓர் ஆயிரம் வடி வாளிகள் ஒருங்கே தொடுத்து உய்த்துச்
சூர் ஆகிய அவுணன் தரு தொல்லைத் தனி மைந்தன்
தேர் ஆனதும் பரி ஆனதும் சிலை ஆனதும் சிதைத்தான்.
84
   
6278.
சிதையும் பொழுது அயல் வேறு ஒரு தேரின் மிசைப்                               பாயாக்
கதை ஒன்றினை விடுத்தான் எரி கனல் மா முகன் அதன்                               மேல்
குதை ஒன்றினைத் துரந்தே அருள் குமரேசனுக்கு                               இளையோன்
சுதை ஒன்றியக் களத்தே விழத் துண்டம் பல கண்டான்.
85
   
6279.
மாற்று ஓர் சிலையினை வாங்கி வளைத்தே கனல்                               முகத்தோன்
காற்றோன் படை துரக்கின்று உழி இவனும் அது கடவக்
கூற்றோன் படை தொடுத்தான் அவன் குமரன் தனக்கு                               இளையோன்
வேற்று ஓர் படை துரந்திட்டு இலன் அதுவே செல                               விட்டான்.
86
   
6280.
மாகத்து உறு கதிர் வெம் படை மன்னன் தரு மதலை
வேகத்தினில் விட ஆங்கு அது விடுத்தே அது விலக்கி
நாகத்து அமர் கறை நீவிய நனி கூரிய கணை நூறு
ஆகத்து இடை படவே துரந்து அடல் மொய்ம்பினன்                                     ஆர்த்தான்.
87
   
6281.
தருமத்து இயல் நிறு உற்றிடும் தக்கோன் விடு சரங்கள்
மருமத்தினில் படுகின்றுழி வானோர் அமுது அருந்தும்
கருமத்தினில் விரவிக் கடல் கடையக் கவிழ்ந்திட்ட
பெரு மத்து என நிலை சோர்ந்து தன் பெரும் தேர்மிசை                                       வீழ்ந்தான்.
88
   
6282.
விழுகின்றது ஒர் எரிமா முகன் வியன் மார்பு எனும் வரை                                        நின்று
இழிகின்றன நதி ஆம் என எருவைப் புனல் உயிரும்
ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம்
அழிகின்றது வரும் அந்தகன் அச்சு உற்றனன் அணுக.
89
   
6283.
விளிந்தான் என மயங்கு உற்றவன் வெஞ் சூர் உரும்                                  ஏற்றால்
நெளிந்து ஆட அரவு அசைந்தால் என நெடும் தேர்                                  மிசைப் பெயராத்
தெளிந்து ஆயிடை இரங்கிப் பொரு திறல் வன்மை அது                                  இலனாய்
எளிந்தான் எளிந்திடுகின்றவன் இத்தன்மை சிந்தித்தான்.
90
   
6284.
மொழி பட்டிடும் திறல் மாற்றலர் முனை                         வெஞ்செருத்தனில் யான்
அழி பட்டிடின் வருவாய் என அந்நாள் சிறு காலைப்
பழி பட்டிடும் வெறியாட்டினைப் பயின்றே பலி யூட்டி
வழி பட்ட தன் நகர்க் காளியை மனத்தின் மிசை                         நினைத்தான்.
91
   
6285.
விஞ்சும் தொல் விறல் மேவு சூர் தரு
மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும்
நஞ்சும் துண் என நண்ணும் காளிதன்
நெஞ்சம் தன்னில் நினைத்தல் மேயினாள்.
92
   
6286.
சூலம் கொண்டு அலமர்ந்து தோன்றுவாள்
சூலம் கொண்டு அலமந்த தோளினாள்
கோலம் பெற்ற குலிங்க வேணியாள்
கோலம் பெற்ற குறுங்கொலைக் கணாள்.
93
   
6287.
போதம் கொன்று பொறாமை மிக்கு உளாள்
போதம் கொன்று பொலம் செய் தாளினாள்
ஏதம் தீர்ந்திடும் எண்ணலார் சிரம்
ஏதம் தீர்ந்திடும் ஏம வாளினாள்.
94
   
6288.
சங்காரத்து அணி தாங்கு கொங்கையாள்
சங்காரத்து அணி தந்த செங்கையாள்
உங்காரத்தின் உரத்த ஆடையாள்
உங்காரத்தின் உரப்பும் ஓதையாள்.
95
   
6289.
ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும்
ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள்
காலத் தீயர் களிற்றின் மேலையோர்
காலத் தீயர் கலங்கு காட்சியாள்.
96
   
6290.
அஞ்சத் தான் அடியான வானவர்
அஞ்சத் தான் அடி பேர்த்து உலாவு வாள்
நஞ்சத் தானவர் நைய வெம்மை செய்
நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள்.
97
   
6291.
அங்கு அத்தன்மையளாய் அமர்ந்திடும்
அங்கு அத்தன்மை யளாய காளி மால்
சிங்கத்து ஏறிய செல்வன் மைந்தன் முன்
சிங்கத்து ஏறினள் செல்லல் மேயினாள்.
98
   
6293.
மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டு உற
வேதக் கூளிகள் ஏறு கேதனம்
ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
மேதக்க ஓசை மிகுத்து மேவவே.
100
   
6293.
மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டு உற
வேதக் கூளிகள் ஏறு கேதனம்
ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
மேதக்க ஓசை மிகுத்து மேவவே.
100
   
6294.
விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்து அயர்
எரிமுக மதலையை எய்தி நோக்கியான்
உரம் மிகும் ஒன்னலர் உயிரை உண்பன் நீ
பரி உறல் என்றனள் அமைத்த பாணியாள்.
101
   
6293.
மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டு உற
வேதக் கூளிகள் ஏறு கேதனம்
ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
மேதக்க ஓசை மிகுத்து மேவவே.
100
   
6296.
ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்து என
ஆர்த்திடும் எல்லையில் அடல் வெம் பூதரும்
வேர்த்தனர் அழுங்கினர் மேல் சென்று ஏற்றனர்
வேர்த்தனர் அழுங்கினர் விண் உளோர் எலாம்.
103
   
6297.
காளிகள் சூலம் வேல் கணிச்சி கார் முகம்
வாளிகள் சிந்தினர் வரை நெடும் தரு
நீளிகள் எழுக் கதை நேமி இன்னன
கூளிகள் வீசினர் குறுகிப் போர் செய்தார்.
104
   
6298.
அத்திறன் நோக்கியே ஆடல் பூதர்கள்
எத் திறத்தவரையும் ஈறு செய்க எனாக்
கைத் தலத்து இருந்தது ஓர் கழு முள் வீசினாள்
பத்திரை தன் அருள் படைத்த காளியே.
105
   
6299.
வீசிய முத்தலை வெய்ய வேல் படை
காய் சின எரிபுகை கான்று காளிகள்
மாசு அகல் உருப் பல வகுத்துப் பார் இடர்
பாசன மருள் உறப் படர்தல் உற்றதே.
106
   
6300.
சண்டிகை விடு படை தனது வன்மையைக்
கண்டனன் இளையவன் கணங்கள் ஆர் உயிர்
உண்டிடும் இஃது என உன்னிஏழ் இரு
புண் தரும் சிலீ முகம் பொள் என்று ஏவினான்.
107
   
6301.
தீக் கலுழ் வேலினான் செலுத்தும் ஆசுகம்
மேக்கு உறு முத்தலை வேலை நுண் துகள்
ஆக்கியது ஆக்கலும் அனைய தன்மையை
நோக்கினள் காளி என்று உரைக்கும் நோன்மையாள்.
108
   
6302.
துண் என யான் விடு சூலம் தன்னையும்
அண்ணல் அம் பகழியால் அறுத்து என் ஆற்றலை
எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கு அவன்
உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள்.
109
   
6303.
என்றிடும் காளி ஓர் இமைப்பின் முந்து உற
நின்றிடும் சேனை அம் கடலை நீக்கியே
வென்றிடும் வயப் புலி மிசைக் கொண்டு ஆர்த்திடாச்
சென்றனள் வீரன் முன் செப்பல் மேயினாள்.
110
   
6304.
முன் உற யான் விடு மூஇலைப் படை
தன்னை வெங்கணைகளால் தடுத்து நின்றனை
இன்னும் ஒர் சூலம் உண்டு எறிவன் வீகுதி
அன்னது காத்திடல் அரிது காண் என்றாள்.
111
   
6305.
என்றலும் முறுவல் செய்து இலங்கு சூலம் ஆங்கு
ஒன்று அல ஆயிரம் ஒருங்கு வீசினும்
நின்று அவை முழுவதும் நீறு செய்வன் என்
வன் திறல் தெரிந்திலை மாது நீ என்றான்.
112
   
6306.
கொற்ற மொய்ம்பினன் இவை கூறக் கேட்டு உளம்
செற்றம் அது ஆகியே தெழித்துச் சண்டிகை
மற்றும் ஒர் சூல வேல் வல்லை வீசினாள்
சுற்றிய பார் இடத் தொகுதி உட்கவே.
113
   
6307.
அரும் திறல் அமரர்கள் அது கொல் ஆலம் என்று
இரிந்தனர் பணி எனா இன்னும் இந்துவும்
வருந்தினர் சூலம் முன் வந்த தன்மையைத்
தெரிந்தனன் வீர மொய்ம்பு உடைய செம்மலே.
114
   
6308.
எட்டுடன் இரண்டு நூறு எனும் தொகைப்படு
நெட்டு இரும் பகழிகள் நிகரத் தூண்டியே
அட்டனன் துணிபட அரியின் மேல் அவள்
தொட்டிட வருவது ஓர் சூலம் தன்னையே.
115
   
6309.
எறித்தரு சூலம் அது இற்று வீழ்தலும்
செறுத்தனள் இங்கு இவன் சிரத்தை வாளினால்
அறுத்து உதிரப் புனல் சுவைத்திட்டு ஆவியைப்
பறித்திடுவேன் எனப் பகர்ந்திட்டாள் அரோ.
116
   
6310.
நால் இரு தோள் உடை நங்கை தோன்றல் முன்
வால் உளை மடங்கலின் இருத்தல் மாண்பு ஒரீஇப்
பால் உறு திரைக் கடல் பரப்பை விட்டு அகல்
ஆலம் அதாம் என ஆர்த்திட்டு ஏகினாள்.
117
   
6311.
ஆர்த்திடும் சண்டிகை அங்கை தன்னில் ஓர்
கூர்த்திடும் வாள் படை கொண்டு கொம் எனத்
தீர்த்தனுக்கு இனியது ஓர் செம்மல் நிற்புறும்
தார்த்தடம் தேர் மிசைத் தனி வந்து எய்தினாள்.
118
   
6312.
நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை பூண்டு உளான்
தாக்கு அணங்காம் இவள் தன்னது ஆவியை
நீக்குதல் செய்வது நீர்மைத்து அன்று எனாத்
தூக்கினன் அவள் வலி தொலைக்க உன்னுவான்.
119
   
6313.
இடித்து என உரப்பினன் எண்கை தன்னையும்
ஒடித்தனனாம் என ஒருகையால் உறப்
பிடித்தனன் மற்று ஒரு பெரும் கையால் உரத்
தடித்தனன் காளி வீழ்ந்து அவசம் ஆயினாள்.
120
   
6314.
கரங்கொடு சேவகன் கல் என்று எற்றலும்
உரம் கிழி உற்றனள் உமிழ்ந்த சோரி நீர்
தரங்கம் அது எறிகடல் தன்னைப் போன்று உலாய்
இரங்கியது அவள் துயர் யாவர் கூறுவார்.
121
   
6315.
எண் கையும் ஒரு கையால் ஏந்தல் பற்றி ஓர்
ஒண் கையின் நீலி தன் உரத்தில் எற்றலும்
மண் கிழி உற்றன வகைகள் கீண்டன
விண்கிளர் அண்ட பித்திகையும் விண்டதே.
122
   
6316.
திரை பெறு கடல் எனக் கான்ற செம்புனல்
வரை பெறு தனது மெய் மறைத்தலால் துயர்க்
கரை பெறல் இல்லவள் காளி என்று முன்
உரை பெறு பெயரையும் ஒழி உற்றாள் அரோ.
123
   
6317.
இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்த பின்
ஐ வகை உணர்ச்சியும் அனாதி யானவும்
செவ்விது தொன்மை போல் சேரச் சூர் மகள்
வெவ்வலி இழந்து கண் விழித்து விம்மினாள்.
124
   
6318.
ஆண்மையின் மேல் அவன் அகலத்து எற்றிட
ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது
நீண் மயல் ஆனது நினைந்து நெஞ்சு இடை
நாண் மலி உற்றனள் நடுங்கும் ஆவியாள்.
125
   
6319.
அந்தம் இல் அறு முகத்து அமலன் ஏவலால்
வந்தவனொடு பொரின் வாகை எய்துமோ
புந்தி இல் ஆதிவட் புக்கனன் எனாச்
சிந்தை செய்து எழுந்தனள் வன்மை தீர்ந்து உளான்.
126
   
6320.
இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர் நகத்து
அகழ்ந்து உயிர் உண்டிடும் அணங்கு தேர் மிசைத்
திகழ்ந்தனள் நின்றிடு திறலினான் தனைப்
புகழ்ந்தனள் இணையன புகல்வது ஆயினாள்.
127
   
6321.
கன்றிய கற்பு உடைக் கனலி மாமுகன்
இன்று எனை அருச்சனை இயற்றி ஏத்தியே
ஒன்று அல உயிர்ப்பலி உதவி வேண்டினான்
நன்றி அது அயர்த்திலன் நான் இங்கு எய்தினேன்.
128
   
6322.
உன்னுடை வன்மையும் உனது வீரமும்
சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்து உறீஇ
நின்னுடன் இகலி இந் நிலைமை ஆயின
இன் இனி ஏகுவன் இருந்த தொல் இடை.
129
   
6323.
கறுத்து இனி வல்லையில் கனல் முகத்தனை
ஒறுத்து உயிர் உண்குதி ஒழிந்து உளாரையும்
அறுத்தனை நிற்குதி அலரி தன்னை முன்
செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மல் நீ.
130
   
6324.
அடையலர் தம்மை வென்று ஆறு மாமுகம்
உடையவன் கருணை பெற்று உவகை மேவுதி
நெடிது பல் ஊழியும் நீடி வாழ்தியால்
கடை முறை இவை எலாம் காண்டி நீ என்றாள்.
131
   
6325.
இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர்
வித்தகன் விடை கொடு மீண்டு கோள் அரிச்
சித்திர வெருத்தம் மேல் சேர்ந்து தொல்படை
மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி.
132
   
6326.
சண்டிகை போந்த காலைத் தழல் முகன் அனைய                                   எல்லாம்
கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வனது ஆற்றல்                                   என்னாத்
திண் திறல் ஆற்றல் சான்று சேண் கிடந்து உருமுக்                                   கான்று
கொண்டல் அது எழுந்தால் என்னக் கொம் என எழுந்து                                   சொல்வான்.
133
   
6327.
கொன்று உயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி
ஒன்று தன் அகடு தூராது உலப்பு உறாப் பசிநோய்                                     மிக்குச்
சென்றிடும் காளியாலோ தெவ்வர் தம் செருவை யான்                                     முன்
வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டுமோ                                     தான்.
134
   
6328.
சூலமும் தண்டும் வாளும் சுடர் மழுப் படையும் சீற்றக்
கோலமும் கொண்டு பாங்கில் கூளிகள் சூழ வைகும்
நீலிதன் வன்மை காண்பான் நினைந்து இவண் விளித்தது                                 அன்றி
வேலவன் படையை அன்னாள் வெல்லும் என்று உளம்                                 கொண்டேனோ.
135
   
6329.
வாவியும் குளனும் பொய்தீர் நதிகளும் மற்றும் எல்லாம்
தூவு நுண் பனியால் அன்றே துளும்புவ அஃதே போலத்
தேவரை ஏவல் கொண்ட சிறப்பு உடைத் தமியேன்                                   இங்ஙன்
மேவிய காளியாலோ எய்துவன் வீரத் தன்மை.
136
   
6330.
இன் இனிக் கணம் அது ஒன்றின் இளவலார் உயிரை                                      வௌவி
முன் உற அகன்ற ஒற்றன் முரண் வலி அதனைச் சிந்தி
அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான்
மன்னவன் முன் போவதில்லை வஞ்சினம் இஃதே                                      என்றான்.
137
   
6331.
கனல் முகன் இனைய மாற்றம் கழறியே அவுணத் தொல்                                    பேர்
அனிகம் வந்து அயலின் ஈண்ட ஆழி அம் தேரில்                                    சென்று
வனை தரு சிலை ஒன்று ஏந்தி வன்மையால் வாங்கி நூறு
முனை இரும் பகழி வீர மொய்ம்பன் மேல் தூண்டி                                    ஆர்த்தான்.
138
   
6332.
கொடுந்தொழிலாளன் செய்கை குரைகழல் வீரன் காணா
முடிந்திட வந்தாய் போலும் முயற்சி ஈது அழகிது என்னா
நெடும் தனிச் சிலைக் கால் ஊன்றி ஞெரேல் என                              வளைத்துத் தானும்
அடும் திறல் கணை நூறு ஓச்சி அறுத்தனன் அவுணன்                              வாளி.
139
   
6333.
அறுத்த பொழுதத்தில் அவுணர்க்கு அரசன் மைந்தன்
மறத்தின் ஒடு நூறு சரம் வாலியன பூட்டிச்
சிறப்பு உடைய செம்மல் உறு தேரினை அழித்துக்
குறித்த விறல் கொண்டு சமர் வால்வளை குறித்தான்.
140
   
6334.
தேர் அழிதலும் வெகுளி செய்து இளவல் ஈர் ஏழ்
கூரிய நெடும் பகழி கொம் என விடுத்தே
ஆர் அழல் முகத்து அவுணன் அங்கை இடை கொண்ட
மூரி வரி வெஞ்சிலை முரித்து அமர் விளைத்தான்.
141
   
6335.
வில் அது முரிந்திடலும் வேறு ஓர் சிலை வாங்கிக்
கல் என எயிற்று அணி கறித்து இவனை இன்னே
கொல்வன் எனும் வெய்ய மொழி கூறி மணம் நாறும்
அல்லி மலரோன் படையை அண்ணல் மிசை உய்த்தான்.
142
   
6336.
அத்தகைமை நோக்கினன் அயன் படையை யானும்
உய்த்திடின் எனக்கு வரும் ஊதியம் என் என்னாச்
சித்தம் உறு பூசனை செலுத்தி விறல் வீர
பத்திர நெடும் படை ஒர் பணி கொடு விட்டான்.
143
   
6337.
வாரிதி வளாகம் அரை மாத்திரையின் உண்ணும்
வீரன் நெடு வெம் படை விரைந்து படர் காலை
நாரணன் மகன் படை நடுங்கி நனி தாழா
யாரும் நகை செய்திட இரிந்து உளதை அன்றே.
144
   
6338.
அன்ன மிசையோன் படை அழிந்திடலும் வீரன்
தன்னது நெடும் படை தடுப்பில் வகை ஏகி
வன்னி முகன் ஆவி கொடு மாமுடிகள் தள்ளி
மின்னு என வீரன் இடை மீண்டு பரந்து அன்றே.
145
   
6339.
வெய்ய அக்கனல் முகன் விளிந்து வீழ்ந்தனன்
ஒய் என அச்செயல் உம்பர் நோக்கு உறா
ஐயனை வாழ்த்தி நின்று அலரின் மாரிதூய்
மெய் அணி துகில் எலாம் வீசி ஆடினார்.
146
   
6340.
புறம் தரு கலிங்கமும் பூணும் நாணமும்
துறந்தனர் உவகையால் சொல்லும் ஆடலர்
சிறந்து உடன் ஆர்த்தனர் தேவர் அற்றை நாள்
பிறந்திடு மைந்தர் தம் பெற்றி எய்தினார்.
147
   
6341.
எரி முகன் அவ்விடை இறப்ப ஆங்கு அவன்
பெரும் படை வீரர்கள் புலம்பி யாம் எலாம்
ஒரு சிறு தூதனுக்கு உடைதுமோ எனாச்
செருவினைக் குறித்தனர் உலப்பு இல் தீமையோர்.
148
   
6342.
முற்படும் தலைவர்கள் மூவெண்ணாயிரர்
பொற்பு உடை இளையவன் புடையில் சுற்றிடாக்
கப்பணம் திகிரிகோல் கணிச்சி வேல் கதை
சொல் படு படை எலாம் சொரிந்து போர் செய்தார்.
149
   
6343.
செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன்
கை தனில் இருந்தது ஓர் கார்முகம் வளைஇ
நொய் தினில் ஆயிர நூறு கோடி கோல்
எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே.
150
   
6344.
இத்திறம் கணம் அது ஒன்று இடை அறாமலே
கைத் தனு உமிழ்ந்திடும் கணையின் மாமழை
உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும்
மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே.
151
   
6345.
எறிந்திடும் படைகளும் எய்த கோல்களும்
முறிந்தன துணிந்தன மொய்ம்பு மார்பமும்
செறிந்திடும் கரங்களும் சிரமும் தாள்களும்
தறிந்தன அவுணர் தம் தலைவர் வீடினார்.
152
   
6346.
வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன
வாழி அம் தேர் நிரை அனைத்தும் இற்றன
சூழ் உறும் அவுணரும் தொலைந்து போயினார்
பாழி அம் தோளினான் பகழித் தன்மையால்.
153
   
6347.
பாறு ஒழுக்கு உற்றன ககனம் பார் மிசை
வீறு ஒழுக்கு உற்ற தொல் படைகள் வீந்திடச்
சேறு ஒழுக்கு உற்றன தசைகள் செம்புனல்
ஆறு ஒழுக்கு உற்றதால் அமர் செய் ஆறு எலாம்.
154
   
6348.
பல உடை நெடும் தலைப் பதகர் துஞ்சலும்
நிலவு உடை எயிற்று இடை நிவந்த தீக்கனல்
புலவு உடை விழு நிணம் புழுக்கல் செய்ததால்
கலி கெழு கொடியொடு கணமும் துய்க்கவே.
155
   
6349.
மாமையில் செறித்தன வடிவின் மால் கரி
தாம் அயிற்பு உற வடி தடக்கை வன்தலை
ஏ மயிர்த் தோகையோடு இற்று நீங்கு உற
ஆமையில் போவன குருதி ஆற்றினே.
156
   
6350.
கார் கெழும் அவுணருள் கலந்த சோரியின்
தாரைகள் நீத்தம் ஆய் எழுந்து தக்கவர்
பேர் உடல் உட்கொடு பெயர்ந்த பின் உற
வாரிதி வடவை உண்டு உலவு மாண்பு என.
157
   
6351.
கரியினும் பரியினும் கால் கொண்டு ஓங்கிய
குருதி அம் புனல் மழை குலாவும் வைகலின்
வரை தொறும் வரை தொறும் மாறு மாறு எழா
அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால்.
158
   
6352.
மீளிகள் குருதி நீர் வெள்ளமாய் அதில்
வாள் உறு வேல்களும் வாளும் மற்றவும்
கோள் உறு மயிலையில் குலவக் கண்டு தம்
கேளிர் என்று எதிர்வன கெழும வேலை மீன்.
159
   
6353.
அழல் பொரு செக்கர் வானகத்தின் மாமதிக்
குழுவினர் சேர்ந்து உறக் குலவும் கொள்கை போல்
நிழல் பொதி கவிகை தம் நெடிய தாள் அற
ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே.
160
   
6354.
அலை கெழு குருதி ஆறு அழுங்கு உற்று ஏகலால்
தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக்
கொலை புரி மறவர் தம் குடரில் பின்னியே
வலை எறிந்து ஈர்த்தனர் வய வெம் பூதரே.
161
   
6355.
ஞாளிகள் திரிவது ஓர் மருங்கு நாம வெம்
கூளிகள் திரிவது ஓர் மருங்கு கூளியாம்
மீளிகள் திரிவது ஓர் மருங்கு வென்றிடும்
காளிகள் திரிவது ஓர் மருங்கு கண் எலாம்.
162
   
6356.
தேர் இடை உலந்தவன் சிரத்தும் துஞ்சிய
சாரதி தலையினும் புரவி தம்மினும்
சோரிகள் இழிவன தொலைந்த வையமும்
ஆர் உயிர் எய்தி ஆங்கு அது பெற்று என்னவே.
163
   
6357.
சின வலி அவுணர் தம் திகிரி பூண்டிடும்
துனை வரு கேசரி துஞ்சச் சோரிநீர்
கனை கடல் இடை செலக் கண்டு தேரை தம்
இனம் என எதிர் தழீஇ இரங்கு கின்றவே.
164
   
6358.
விரிந்த இத்திறம் இயல் வெங்களத்து இடை
இரிந்திடும் தானவர் இறந்து நீங்கினார்
கருந்தலை அடுக்கலில் கழல்கள் தாக்கு உறத்
திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார்.
165
   
6359.
மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக்
கழுக்களும் கால் படக் கவல் உற்றார் சிலர்
விழுக்கொடு வள் உரம் விராய பூழியில்
இழுக்கினர் அழுந்தினர் இறந்து உற்றார் சிலர்.
166
   
6360.
பாய்ந்திடும் குருதி அம் பரவை ஆற்று இடை
நீந்தினர் ஒரு சிலர் நீந்திக் கால் எழா
தோய்ந்தனர் ஒரு சிலர் ஓடினார் சிலர்
மாய்ந்தனர் ஒரு சிலர் மாய வீரரே.
167
   
6361.
காண் தொறும் காண்தொறும் அவுணர் கண் இடை
ஈண்டிய வெள் இடை இளவல் மேனியாய்
நீண்டது ஒர் பையுளாய் நிகழ ஏங்கியே
மாண்டனர் சிலர் சிலர் வாய் வெரீஇயினார்.
168
   
6362.
துப்பு உறு பூதர் பின் தொடரத் தாள் தொழா
மெய்ப்படை முழுவதும் வீசி ஆய் இடைத்
தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர்
கைப்படை வாங்கியே கடிது உற்றார் சிலர்.
169
   
6363.
எண்ணம் இல் படைக்கலம் யாவும் வீசியே
தண்ணுமை வரி துடி தக்கை பேரியாம்
பண் அமை இயம்பல பற்றி ஆர்த்திடா
நண்ணினர் நடுவனை நடுக்கும் தானவர்.
170
   
6364.
பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத்து
இரக்கம் இல் அவுணர்கள் இரத்தத்தில் தம
நெருக்கு உறு சிரத் தொகை நீட்டி மெய் எலாம்
கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார்.
171
   
6365.
சூள் உறு போர் இடைத் தொலைந்து போகியே
நீள் இகல் உறுகிலா நிருதர் சம்புவாய்
ஆள் உடை வயவர் ஊன் அருந்த ஆயிடை
ஞாளிகள் கவர்தலும் நடுக்கு உற்றார் சிலர்.
172
   
6366.
தீயினை முருக்குறும் திறல் வெம் பூதர்கள்
தாயினர் தொடர்தலும் சாய்ந்துளோர் சிலர்
நாயினது உருக்கொடு நடக்க ஞாளிகள்
ஆயின அடர்த்தலும் அஞ்சினார் சிலர்.
173
   
6367.
விசை ஒடு சாரதர் விரவ வேற்று உரு
இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார்
தசை கவர் ஞமலிகள் தலைச் சென்று ஈர்க்கவும்
அசைவு இலர் ஆகியே அழுங்கினார் சிலர்.
174
   
6368.
புண் தரு குருதி நீர் புறத்துச் சிந்திட
மண்டு அமர் தன் இடை மாண்ட கேள்வரைக்
கண்டிலர் சிரம் தெரீஇக் கவன்று அரற்றிய
ஒண் தொடி மாதரின் உலவினார் சிலர்.
175
   
6369.
சூர்த்திடும் நோக்கு ஓடும் துண் என்று எய்தியே
ஆர்த்திடும் பூதர் வந்து அணுக வாய் வெரீஇ
வேர்த்து உடல் பனிப்ப வீழ்ந்து உதைத்தும் வெய்யதாள்
பேர்த்து இடல் இன்றியும் பேது உற்றார் சிலர்.
176
   
6370.
அழி தருவோர் தமை அவரின் முன்னரே
கழி தரும் உயிரினர் கணங்களாகி விண்
வழிதரு செலவினில் வந்து பற்றி எம்
பழிதருவீர் எனப் பணிக்கின்றார் சிலர்.
177
   
6371.
வல் விரை பறவையை நோக்கி மற்று அவட்
செல்லுதிர் பூதர்கள் தெரியக் கண்டிரேல்
இல்லை இந்நெறிதனில் இறந்து உளோர் எனச்
சொல்லுதிர் நீர் எனத் தொழுகின்றார் சிலர்.
178
   
6372.
காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை
ஆசையினொடு தழீஇ அலமந்து ஏங்கியே
பாசி இழை மாதரில் பரவப் பூதர்கள்
நாசி ஈர்ந்திடுதலும் நாணு உற்றார் சிலர்.
179
   
6373.
அடல் கெழு தூதனால் அவுணர் யாவரும்
கெடுவது திண்ணம் யாம் கெடுகிலோம் எனாக்
குடர் கெழு சோரி அம் குடிஞைக் கண் உறீஇக்
கடல் உறு வரையின் உள் கலந்து உளார் சிலர்.
180
   
6374.
சாரதர் குழுவினைத் தப்பித் தத்தமது
ஆர் உயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர்
சோரி அது உரமிசை துதையப் பூசியே
வீரர்கள் இவர் என மேவுவார் சிலர்.
181
   
6375.
இவ்வகை துஞ்சினர் அன்றி எண் இலா
வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும்
மை வரு நெறி முயல் மகேந்திரப் புரம்
கௌவையின் அரற்றின கடல் உடைந்த போல்.
182
   
6376.
அங்கு அது பொழுதினில் ஆடல் முற்றியே
செங் களம் நடு உறு செம்மல் தன் புடை
எங்கணும் நீங்கிய இலக்க வேந்தரும்
சங்கையில் பூதரும் தலைச் சென்று ஈண்டினார்.
183
   
6377.
எரிந்திடும் கனல் முகன் எய்த வெஞ்சரம்
உரந்தனை அகழ்ந்திட ஒருதன் வன்மை போய்
அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா
புரந்தரன் எழுந்து ஒரு புடையில் எய்தினான்.
184
   
6378.
புண்டர நீறு அணி புனிதன் பாங்கரின்
மிண்டினர் இவர் எலாம் மேவி நிற்றலும்
எண் தகும் இளையவர் எழுவர் தம்மையும்
கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான்.
185
   
6379.
ஆண்தகை வீரர்கள் அடையலார்க்கு எதிர்
மூண்டு அமர் இயற்றிய மூவர் நால்வரும்
மாண்டனரே கொலோ மயங்கினார் கொலோ
ஆண்டவர் கிடந்தனர் இயம்புவீர் என்றான்.
186
   
6380.
என்றலும் உக்கிரன் என்னும் சாரதன்
உன் துணையார் களை ஒன்னலன் மகன்
கொன்றனன் அவர் உயிர் கூற்றும் வௌவினான்
பொன்றிய வைப்பினை புகலக் கேட்டியால்.
187
   
6381.
இம்பரின் முன் உற இயம்பும் யோசனை
ஐம்பதிற்று இரண்டின் மேல் ஆலம் ஒன்று உள
தும்பு அரும் சிறிது என ஓங்கும் ஆயிடைத்
தம்பியர் மாய்ந்தனர் சரதமே என்றான்.
188
   
6382.
உக்கிரன் இனையன உரைப்ப யாரினும்
மிக்கவன் வினவியே வழும நோய் உறீஇப்
பக்கம் அது ஆயினர் படர ஏகினான்
தொக்கு உறும் இளைஞர்கள் துஞ்சும் எல்லை வாய்.
189
   
6383.
ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப்
பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள்
காய்சின அங்கி செங்கண் கான்றிடக் களேவரத்து
வாச மென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான்.
190
   
6384.
கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக்
கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச்                                     செவ்வாய்
விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி
உண்டிலது என்னச் சோர்ந்தான் உணர்ந்து பின் இரங்கல்                                     உற்றான்.
191
   
6385.
தம்பிமீர் தம்பிமீர் என்று உரைத்திடும் தழுவிக் கொள்ளீர்
எம்பிமீர் என்னும் ஐயோ எங்ஙனம் சென்றீர் என்னும்
வெம்பினேன் என்னும் என்னை விட்டு அகன்றீரோ                                 என்னும்
நம்பினேன் உம்மை என்னும் நான் உமக்கு அயலோ                                 என்னும்.
192
   
6386.
அங்கிமா முகனே நும்மை அடல் செய வல்லான் என்னும்
இங்கு நீர் முடிந்தீர் என்றால் என் செய்வன் தமியேன்                                      என்னும்
துங்க வெம் படைகள் ஏந்திச் சூழ்ந்து உடன் துணையாய்                                      வந்த
உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும்.
193
   
6387.
அம்மவோ விதியே என்னும் ஆதகாது உனக்கு ஈது                                     என்னும்
இம் எனச் செல்லாது இன்னும் இருத்தியோ உயிரே                                     என்னும்
செம்மை கொள் குணத்தாரோடு பிறப்பரே சிலர் இங்கு                                     என்னும்
எம்மை ஆளுடைய வள்ளற்கு என்னினி உரைக்கேன்                                     என்னும்.
194
   
6388.
சீர் இள மைந்தர் துஞ்சக் சிலையொடு திரிவேன் என்னின்
ஆர் எனக்கு ஒப்பு உண்டம்மா அழகிது என் ஆற்றல்                                       என்னும்
சூரர் தம் கிளையை எல்லாம் துண் எனச் சென்று சுற்றி
வேர் ஒடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி என்னும்.
195
   
6389.
துப்பு உடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச
வெப்படை தூண்டினானோ எரிமுகத்து அவுணன் என்னும்
அப்படை நல்கு தேவர் ஆர் கொலோ அறியேன் என்னும்
மெய்ப்படை வேலினாருக்கு அடியரோ வினையேம்                                    என்னும்.
196
   
6390.
அடுவனோ அவுணர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண
விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச்                                     சூர்மேல்
விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினேன் வேலுக்கு                                     என்னும்
படுவனோ துயரத்து என்னும் செய்வது என் பாவி என்னும்.
197
   
6391.
ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்கு உடன் படுத்த நீரால்
இன்று அமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ
வென்றி அது என்னும் என்தன் வீரம் மாசு உண்டது                                     என்னும்
பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே                                     என்னும்.
198
   
6392.
வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும்                                      ஏனை
மல்லல் அம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும்                                      வீரச்
சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப்                                      பார்க்கும்
கல் என எயிற்றின் பந்தி கறித்திடும் கவலும் அன்றே.
199
   
6393.
அருந்துயர் எய்தி இவ்வாறு அழுங்கினோன் எளியன்                                    ஆகி
இருந்தனன் அல்லன் ஏங்கி யாதும் ஓர் செயலும் இன்றி
வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக்கு உழன்றான்                                    அல்லன்
விரைந்து தன் இளையர்தம்மை எழுப்ப ஓர் வினையம்                                    கொண்டான்.
200
   
6394.
நால் தலை உடைய அண்ணல் நாரணன் முதலோர் நல்க
ஏற்றிடும் படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது
மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி                                   உண்டோன்
கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்து இவை கூறல்                                   உற்றான்.
201
   
6395.
ஊனோடு ஆவிக்கு இன்பம் விரும்பி உழல்கின்ற
வானோரே போல் தானவரே போல் வழி செல்லா
ஏனோரே போல் எண்ணனனே கொல் எமர் ஆவி
தானோ உண்பான் கூற்றுவன் என்னும் தமியோனே.
202
   
6396.
விரியும் உணர்ச்சியை மாற்றுவது அல்லால் விண்ணோர்கள்
ஒரு படை தானும் நங்கள் இனத்தை உயிர் உண்ணாது
எரிமுகன் என்பான் அட்டனன் அன்றே இளையோரைத்
தரியலன் ஆகிக் கொன்றவன் அம்மா தான் அன்றோ.
203
   
6397.
போதத்துக்கு ஓர் வைப்பிடம் மாயோ பொறி ஆகி
மூ தக்கோர் எண்டார் அக மூல மொழி கேட்டு
வேதத்தோனை வெஞ்சிறை பூட்டி விதி ஆற்றும்
ஆதித் தேவன் தம்பியர் என்பது அறியானோ.
204
   
6398.
ஆறுள் பட்ட ஐயிரு காலத்து அரன் நாமம்
கூறிட்டு ஓவாச் சேய் உயிர் வவ்வக் குறுகுங்கால்
சீறித் தாளால் தாக்கிய சின்னம் சிறிதும் தான்
மாறிற்று இல்லைக் கூற்றது தானும் மறந்தானோ.
205
   
6399.
சீலம் தன்னால் ஓர் விழுப் போதைச் சிவனுக்கு என்று
ஓலம் கொண்டே விண் இடை புக்கோன் உயிர் வௌவிச்
சூலம் தன்னில் கண் நுதல் ஏற்றச் சுழல் உற்றுக்
காலன் பல் நாள் தூங்கிய வண்ணம் காணானோ.
206
   
6400.
நஞ்சில் தீயன் வேட்டுவன் அன்று ஓர் நாள் முற்றும்
துஞ்சற்று ஊண் அற்று அரன் மிசைவில் வந்து                                      ஊர்த்தோனை
வெஞ்சொல் கூறிப் பற்றலும் யாங்கண் மிக எற்ற
அஞ்சித் தன் தூது ஆயினர் போனது அறியானோ.
207
   
6401.
அக் காலத்தின் எல்லையின் மைந்தற் கர என்றே
முக்கால் ஓதித் தீமை குறித்தே முடிவோனை
மெய்க்காலன் தூது ஆயினர் பற்ற விடுவித்தேம்
இக் கால் கொண்டே அவரை உதைத்தேன் யான்                                  அன்றோ.
208
   
6402.
மெச்சி இயல் கொள்ளாத் துன்மதியாலும் மிக வெய்ய
துச்சகனாலும் ஏனையராலும் தொல் நாளின்
இச்சகம் ஆற்றும் தன் இறை நீங்கி இடர் எய்தி
அச்சம் உழந்தே பட்டது சண்டன் அயர்த்தானோ.
209
   
6403.
நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன் பேர்
கூறு முகத்தார் தம் புடை செல்லக் குலை கூற்றன்
ஆறு முகத்தான் அடியவர் ஆவி அலைத்தானே
சேறு முகத்து ஆழ் கரியை அடாதே சிறு புள்ளும்.
210
   
6404.
என்னும் மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து
பின்னர் யாத்திடும் தூணியில் ஒரு சரம் பிடுங்கித்
தன்னகம் கொடே அன்னதன் தலை தனில் தரும
மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான்.
211
   
6405.
வேல் உடைத் தனி நாயகற்கு இளையவன் விடுத்தேன்
கால நாடு உறு கூற்றுவன் என்பவன் காண்க
கோல வெஞ் சிலைத் துணைவர் தம் ஆருயிர்                                கொண்டாய்
வாலிதோ இது விடுக்குதி கடிது என வரைந்தான்.
212
   
6406.
செந்நலம் கிளர் தன் அகத்து இன்னவா தீட்டிப்
பொன் நெடும் சிலை வாங்கி அப் பகழியைப் பூட்டிப்
பன்னிரண்டு தோள் விமலனை மனம் கொடு பரவி
மின் எனச் சென்று இயம புரம் புகும் வகை விடுத்தான்.
213
   
6407.
கரந்தை சூடுவான் திரு மகற்கு இளையவன் கணை முன்
விரைந்து தெண் கடல் ஏழையும் கடந்து விண் ஓங்கி
இருந்த மானசோத் தரகிரி தென் புறத்து இயம
புரந்தினில் சென்று மறலி தன் முன்பு போந்ததுவே.
214
   
6408.
தொடுத்த அக்கணை அந்தகன் முன்பு துண் எனப் போய்
அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன் சென்று
எடுத்து நோக்கினன் வீரவாகுப் பெயர் இளவல்
விடுத்தது ஆகலும் முற்று உற உணர்ந்தனன் விரைவில்.
215
   
6409.
அயில் நெடும் கணைப் பாசுரத்து அகலம் அது உணர்ந்து
துயர் உழந்து அஞ்சி ஈண்டு இலர் இளையவன் துணைவர்
பயில எங்ஙனம் சென்றனரோ எனப் பார்த்தான்
கயிலை ஏகியே இருப்பதா உணர்ச்சியில் கண்டான்.
216
   
6410.
கண்டு தேறினன் கடா மிசை ஏறினன் கடுங்கால்
கொண்ட தானைகள் சூறை அம் கால் எனக் குழுமப்
பண்டு தான் உறை பதியினை நீங்கினன் படரா
அண்டர் நாயகன் கயிலை அம் சாரலை அடைந்தான்.
217
   
6411.
ஆன காலையில் ஆயிடைப் பொதும்பர் ஒன்று அதனின்
மான வேல் படை அவுணர் தம் படைகளின் மாண்ட
சேனை வீரர்கள் சூழ் தர எழுவரும் சிறந்து
கான விஞ்சையர் பாடல் கேட்டு இருப்பது கண்டான்.
218
   
6412.
தொழுது மற்றவர் முன் உற மறலி போய்த் துன்னி
முழுது உணர்ந்து உளீர் நுங்களை நாடுவான் முன்னோன்
அழகிது என்று இவண் இருப்பது என் என்னையும்                                அயிர்ப்பான்
எழுவிரும் கடிது எழுவிர் இப் பூதரோடு என்றான்.
219
   
6413.
என்ற காலையின் எழுவரும் எழுந்து இரு மருங்கு
நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி
ஒன்று ஒர் மாத்திரை ஒடுங்கும் முன் அவுணர்கோன்                                    உறையும்
மன்றல் மாநகர் அடு களம் புக்கனர் மன்னோ.
220
   
6414.
புக்க காலையின் எழுவரும் தம் உடல் புகுந்தார்
மிக்க பார் இடத் தலைவர்கள் யாவரும் விரைவில்
தொக்கு வீழ் தரும் யாக்கைகள் உற்றனர் சுரர்கள்
அக் கணம் தனில் பூ மழை தூவி நின்று ஆர்த்தார்.
221
   
6415.
இன்ன வேலையின் எழுவரும் பதை பதைத்து எழுந்து
முன்னவன் தனது அடிக் கமலங்களை முறையால்
சென்னி தாழ்வு உற வணங்கினர் செங்கையால் எடுத்துப்
பொன்னின் மார்பு உறப் புல்லினன் எல்லை தீர்                                     புகழோன்.
222
   
6416.
புல்லினான் இள வீரரைப் புயங்கம் உண்டு உமிழ்ந்த
எல்லினான் என விளங்கினான் அவுணரை இனி நான்
வில்லினால் அடல் செய்வதோ அரிது என விறலும்
சொல்லினான் மகிழ்வு ஆயினான் புன்கணும்                                 தொலைந்தான்.
223
   
6417.
எண் தகும் திறல் எழுவரும் பிறரும் உய்ந்து எழுதல்
கண்டு வீரமா புரந்தரனும் கணத்தவரும்
திண் திறல் புனை இலக்கரும் உவகையில் சிறந்து
கொண்டல் கண்டிடும் சாதகம் போல் உளம் குளிர்ந்தார்.
224
   
6418.
அன்னது ஆகிய எல்லையில் கூற்றனும் அனிகம்
துன்ன ஆயிடை வந்தனன் இளவலைத் தொழுது
மின் உலாவிய வேலினாய் தமியனை வெகுண்டாய்
முன் நிகழ்ந்திடு வரன் முறை கேள் என மொழிவான்.
225
   
6419.
எழு திறத்தரும் இங்ஙனம் தம் உடல் விட்டுக்
குழுவினோடு போய்க் கயிலை அம் சாரலில் குறுகி
வழி படும் சில பூதரும் சுற்றிட வதிந்தார்
அழி பெரும் துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை.
226
   
6420.
அங்கம் மீதினில் நீறு கண்டிகையினை அணிந்தார்
தங்கள் பாலினும் செல்லுதற்கு அஞ்சுறும் தமியேன்
இங்கு நின் இளையார் உயிர் கொள்வனோ எவரும்
வெங்கனல் பொறி உண்பரோ பசிப் பிணி மிகினும்.
227
   
6421.
வினையம் உன்னி நீ விடு கணை நோக்கியான் வெள்ளித்
தனி வரைப் பெரும் சாரலில் போந்து சாதரரோடு
உனது தம்பியர் தங்களை விளித்து இவண் உய்த்தேன்
முனிவு கொள்ளலை ஐய என் இடை என மொழிந்தான்.
228
   
6422.
அந்தகன் மொழி வினவலும் ஐயனுக்கு இளவல்
நம் துயர்க் கடல் சுவற்றினை கயிலையின் நமர்கள்
வந்த தன்மையைத் தேற்றில மயங்கி ஈண்டு உற்றாம்
புந்தி கொள்ளலை ஆவது நீ எனப் புகன்றான்.
229
   
6423.
புகலல் உற்றபின் விடை கொண்டு கூற்று எனும் புத்தேள்
உவகை தன் ஒடு தன் புரத்து ஏகினன் ஒன்னார்
இகலை வெஃகியே பூதரும் துணைவரும் ஏத்த
நிகர் இலாதவன் அன்னது ஓர் களத்து இடை நின்றான்.
230
   
6424.
நின்று மற்று இவை நாடிய ஒற்றர்நீள் நகரில்
சென்று சூரனைத் தொழுது நின் மதலை போர் செய்து
வென்றி மொய்ம்பினான் விடுத்திடும் வீரன் மாப்                                       படையால்
பொன்றினான் பொடி ஆகி வீழ்ந்தனன் எனப் புகன்றார்.
231
   
6425.
அக்காலை தனில் அவுணர்க்குள் எலாம்
மிக்கான் புவியின் மிசை வீழ்ந்து அயரா
எக்காலும் உறாத இடர்க் கடலுள்
புக்கான் மெலிவோடு புலம்பு உறுவான்.
232
   
6426.
உண் நேயம் அதாம் உயிரே உறவே
கண்ணே மணியே கனல் மாமுகனே
விண் ஏகினையோ இவண் மீள் கிலையால்
எண்ணேன் உயிர் வாழ்க்கையை இங்கு இனியே.
233
   
6427.
எந்தைக்கு இளையான் தனை இந் நகரின்
வந்து உற்றது ஒர் தூதன் மலைந்திடலான்
நொந்து உற்றனை மெய்யும் நுடங்கினையால்
அந்தத் துயர் இங்ஙனம் மாறியதோ.
234
   
6428.
தேறா இகல் செய்திடுதேவர் எலாம்
மாறா மகிழ் உற்றிட வைத்து மனத்து
ஆறா இடர் என் வயின் ஆக்கினையால்
கூறாய் இதுவும் குமரற்கு இயல்போ.
235
   
6429.
கார் ஓதி மருங்கு உள காரணனோ
சீர் ஓதிமனோ திருமால் அவனோ
நேர் ஓதிய ஒற்றட நீ முடிக என்று
ஆர் ஓதினரோ அறிந்திலனே.
236
   
6430.
பொய் விட்டிடும் தூதுவர் போர் இடை நீ
மெய் விட்டனை என்று விளம்பினரால்
நெய் விட்ட அயில் படை நேர் அலன் முன்
கை விட்டு எனை ஏகுவது உன் கடனோ.
237
   
6431.
தூது ஆனவன் வாளி துணித்திட விண்
மீதே இனை என்று விளம்பினர் அப்
போதே அது உணர்ந்து பொறுத்தினன் ஆல்
ஏதே ஏது பொறாது இனம் என் உயிரே.
238
   
6432.
ஆவா தமியேன் அயர் உற்றிடவே
மூவா இள மைந்த முடிந்தனையே
ஓவாது மகப் பெறவோ அங்கு உதவத்
தேய்வார் களும் உண்டு கொல் இன்னமுமே.
239
   
6433.
எல்லே உணை நம்புவது என் அகல்வாய்
சொல் ஏதும் உரைத்திலை துன்புறுவேன்
கல்லே புரை நின் கவின் மார்பதனை
வல்லே தழுவிக் கொள வந்து அருளே.
240
   
6434.
செய்யாய் கரியாய் திருவே சிறுவா
மெய்யாய் உயிரே விடலாய் அடல் வேல்
கையாய் அரசே களிறே தமியேற்
கையா எனை நீயும் அயர்த் தனையோ.
241
   
6435.
என்று இன்னன பன்னி இரங்குதலும்
நன்று அன்னையது ஓர்ந்து நடுக்கம் உறாத்
துன்றும் துயரக் கடல் துன்னினளால்
அன்று அந் நகர் மிக்கது அழும் குரலே.
242