சூரபன்மன் வதைப் படலம்
 
7288.
கொற்ற வேல் படை பரித்திடும் ஆயிர கோடி
ஒற்றர் தங்களை நோக்கியே சூரன் ஆம் உரவோன்
மற்று என் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச்
சுற்று தானையைத் தம்மினோ கடிது எனச் சொன்னான்.
1
   
7289.
சொன்ன காலையின் நன்று என வணங்கியே தூதர்
பன்னரும் கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து
பொன்னின் மேதகும் அண்டங்கள் இதை தொறும்புகுந்து
மன்னர் மன்னவன் தன் பணி முறையினை வகுத்தார்.
2
   
7290.
வகுத்த காலையில் ஆண்டு உறை அவுண மன்னவர்கள்
தொகுத்த நாற்பெருந் தானை அம் கடலொடும் துவன்றி
மிகுத்த அண்டத்தின் புடை தொறும் புடை தொறும்                                     மேனாட்
பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளால் படர்ந்தார்.
3
   
7291.
முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கு இருஞ்சேனை
வந்து வந்து இவண் செறிவன விதியொடு மாறாய்ச்
சுந்தரம் கெழு மாயன் இவ்வுலகு உயிர் துய்ப்ப
உந்தியின் வழி அங்கு அவை தோன்று மாறு ஒப்ப.
4
   
7292.
பூதம் யாவையும் உயிர்களும் புவனம் உள்ளனவும்
பேதம் நீங்கிய சுருதி ஆகமங்களும் பிறவும்
ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில்
பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின்.
5
   
7293.
இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்
வனை கருங்கழல் அவுணர் தம் படை இவண் வரலும்
கனலி தன் சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்
அனிலன் தானும் மெய் வியர்த்தனன் நெருக்கும் உற்று                                  அயர்வான்.
6
   
7294.
ஆர்த்த ஓசையால் அகிலமும் துளங்கிய அவுணர்
கார்த்த மெய் ஒளி கதுவலால் இருண்டன ககனம்
தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்
பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த.
7
   
7295.
கூடும் இப்பெரும் தானையை நோக்கி மெய் குலைவு உற்று
ஓடுதற்கு இடம் இன்றி நின்று இரங்கினர் உம்பர்
வீடினான் என வாசவன் மருண்டனன் விதியும்
நீடு மாயனும் முடிவது என்னோ என நினைந்தார்.
8
   
7296.
பூதலந்தனில் அம்பர நெறிதனில் புடை சூழ்
மாதிரங்களில் அளக்கரில் வரைகளில் வழியில்
பாதலங்களில் பிறவினில் அவுணர் தம் படைகள்
ஏதும் வெள்ளிடை இன்றியே சென்றன ஈண்டி.
9
   
7297.
மலர் அயன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்
உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள்
அலரி ஆதியர் செல்கதி பிலங்களில் அனிகம்
பலவும் நின்றன செல்லிடம் பெறாத பான்மையினால்.
10
   
7298.
மாறு இலாதன தொல்லை அண்டங்களின் வந்த
வீறு இலாதது ஓர் தூசிகள் படர்ந்திடும் எல்லை
நூறு கோடி யோசனைகள் என்று அறிஞர்கள் நுவன்றார்
வேறு பின் வரும் தானையின் பெருமை யார் விதிப்பார்.
11
   
7299.
குறுமை யாம் உயிர் வாழ்க்கையர் கொண்ட தொல் வளம்                                      போல்
சிறுமையோ இது விரித்திட அவுணர் கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்று இதற்கு உவமையும் ஒன்று இலை பேசின்.
12
   
7300.
அஞ்சு பட்டிடு பூதங்கள் பல் உருவம் அமைந்து
நெஞ்சு பட்டிடும் உயிர் கொடு நேரு மேல் நிகரும்
அஞ்சு பட்டிடு பொருப்பு எலாம் சூரை முன் மயங்கும்
பஞ்சு பட்டிட நடந்திடு தூசி முற் படையே.
13
   
7301.
அந்தம் இன்றியே அகன் புவி கொண்ட அண்டத்தில்
வந்திடும் திறல் படைகளின் பெருமை யார் வகுப்பார்
முந்து தூசிகள் மகேந்திரப் பெரு நகர் மூடி
இந்த அண்டத்தின் இடம் எலாம் நிறைந்தன இமைப்பில்.
14
   
7302.
ஆன காலையில் ஒற்றர் போய்ச் சூரனை அடைந்து
பானல் மெல்லடி கை தொழுது ஐய நீ படைத்த
சேனை வந்து அயல் நின்றன தூசி முன் சென்று
வான் உலாவு பேர் அண்டத்தை நெருங்கின மன்னோ.
15
   
7303.
என்னும் எல்லையில் நன்று என அவுணர் கோன் எழுந்து
தன்னது ஆகிய உறையுள் போய்த் தடம் புனல் ஆடித்
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த
அன்னம் உண்டனன் நஞ்சு கொல் மருந்து கொல் அதுவே.
16
   
7304.
நீறு அணிந்தனன் நெற்றி மெய்ந் நிறை விரை களபச்
சேறு அணிந்தனன் பூந்தொடை பங்கியில் செறித்தான்
மாறு இல் பொன் சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி
வேறு வேறு நன்கு இனியன புனைந்தனன் விரைவில்.
17
   
7305.
ஈசன் மாப்படை ஏனையோர் பெரும் படை யாவும்
மாசு இல் ஆயிர கோடி தேர் செலுத்தியே அவையும்
கேசரித் திறல் யானமும் கேடில் பொன் தேரும்
பாசத்திறல் அவுணர் கொண்டு ஏகுவான் பணித்தான்.
18
   
7306.
ஆங்கு அவ்வெல்லையில் சூர பன்மா எனும் அவுணன்
பாங்கர் வந்திடு வலவர் தம் தொகையினைப் பாரா
ஓங்கும் ஓர் தடந்தேரினைக் கொணர்திர் என்று உரைப்பப்
பூங்கழல் துணை வணங்கியே நன்று எனப் போனார்.
19
   
7307.
வாட்டு கேசரி எழுபதினாயிரம் வய மாக்
கூட்டம் அங்கண் ஒர் எழு பதினாயிரம் கூளி
ஈட்டம் ஆகிய எழு பதினாயிரம் ஈர்ப்பப்
பூட்டி நன்கு உறப் பண்ணினார் ஆங்கு ஒரு பொலன்                                         தேர்.
20
   
7308.
மண்டலத்தினும் ஆன்ற பேர் இடத்தது மருங்கில்
தெண் திரைக் கடலாம் என ஆர்ப்பது செறிந்த
அண்டம் ஆயிரம் கோடியும் தன் இடத்து ஆற்றிக்
கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர்.
21
   
7309.
முடியும் எல்லையில் எழு தரு மருத்தினும் உந்திக்
கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத்
தட நெடுங் கிரி அலமரத் தபனரும் குளிர
வடவை அங்கிகள் விளிந்திடப் புரிவ தம் மான்தேர்.
22
   
7310.
ஏழு நேமியும் இடைப் படு தீபமும் யாவும்
சூழுகின்ற பேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்
கேழில் பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்
ஆழி தாங்கிய அண்டம் ஒத்து இலங்கியது அகன்தேர்.
23
   
7311.
தொழு தகும் திறல் அவுணர் கோன் வேள்வியில் துஞ்சி
எழுவது ஆகிய எல்லையில் தோன்றியது எதிர்ந்தார்
குழு விரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்
அழியும் நாளினும் அழிந்திடாது இருப்பது அவ் வகல்தேர்.
24
   
7312.
கண்ணகன் படை அளப்பில பரித்தது காமர்
விண்ணவர்க்கு உள வலி எலாம் கொண்டது மேனாள்
அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனையது
எண்ணின் மேல் படும் யாணர் பெற்று உடைய அவ்                                        விரதம்.
25
   
7313.
அனையது ஆகிய தேரினை வலவர் கொண்டு அணைந்து
தினகரன் தனை வெகுண்டவன் தாதை முன் செலுத்தத்
துனையம் அற்றதில் இவர்ந்தனன் இவர்தலும் தொழுது
புனைதி வாகை என்று அவுணர்கள் பூ மழை பொழிந்தார்.
26
   
7314.
பொழிந்த காலையில் வலவர்கள் அங்கு அதில் புக்குக்
கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத்
தழிந்து அழீம் எனப் பல்லியம் இயம்பின சகங்கள்
அழிந்த நாள் எழு கடல் என அவுணர்கள் ஆர்த்தார்.
27
   
7315.
அங்கி அன்ன பொன் படி அகம் கோடிகம் அடைப்பை
திங்கள் வெண் குடை கவரி கொண்டு ஒழுகினர் சிலதர்
துங்கம் மிக்கவன் சீர்த்தியும் ஆணையும் தொடர்ந்து
மங்கலம் திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல்.
28
   
7316.
அண்ணல் மேவரு கோ நகர் எல்லையுள் அடைந்த
எண்ணில் மாப் பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே
கண் அகன் ஞெள்ளல் ஆயிரம் கோடியும் கடந்து
வண்ண மா மணிக் கோபுர முதல் கடை வந்தான்.
29
   
7317.
தானவர் கோமகன் தடம் பொன் தேரொடு
மா நகர் முதல் கடை வாயில் போதலும்
ஆனது நோக்கியே அங்கண் சூழ் தரு
சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே.
30
   
7318.
ஞெலித்திடு பரவையின் நீல வெவ்விடம்
ஒலித்து எழுந்தால் என உலப்பில் தானைகள்
கலித்தன படர்ந்தன கண்ணகன் புவி
சலித்தது கொடியரைத் தரிக்க ஒணாமையால்.
31
   
7319.
நேரியம் பரியது ஓர் நிசாளம் சல்லிகை
பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை
தூரியம் காகளம் துடி முதல் படு
சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே.
32
   
7320.
சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்
பாயின தானையில் படர்ந்த பூழிகள்
வாயின பரவை மேல் வடவைத் தீ விராய்ப்
போயின நாள் எழு புகையைப் போன்றவே.
33
   
7321.
வானினும் கண்ணினும் மாதிரத்தினும்
தானிறை கடலினும் தணப்பு இன்று ஆகியே
மேனிறை பூழிகள் மிடைய எங்கணும்
சேனை கொள் பின் பனித் தூவல் போன்றவே.
34
   
7322.
சூரன் இகத்து எழு தூளி அந்நகர்
ஆர் அகில் ஆவியும் யாரும் ஆடிய
பூரி கொள் சுண்ணமும் பொருந்திப் போவது
கார் இன மின்னொடு கடல் உண்டு ஏகல் போல்.
35
   
7323.
திண் திறல் கரிகளில் தேரில் வெண் கொடி
மண்டு உறு பூழி தோய் வானில் செல்வன
கொண்டலின் இருதுவில் கொக்கின் மாலைகள்
தண் துளி உறைப்புழி படரும் தன்மை போல்.
36
   
7324.
படை வகை திசை எலாம் படரப் பாயிருள்
அடைவது சூரறிந்து அண்டம் யாவினும்
மிடை தரு கதிர்களை விளிக்க வந்து எனக்
குடை நிரை எங்கணும் குழுமு கின்றவே.
37
   
7325.
வெம் பரி கரி உமிழ் விலாழி மாமதம்
இம்பரின் நகர் எலாம் ஆற்றின் ஏகலால்
உம்பர் மற்று அல்லதை ஒருவன் தானைகள்
அம்புவி சென்றிடற்கு அரியது ஆனதே.
38
   
7326.
இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்
தெவ்வலி அவுணர் கோன் செம்பொன் தேரின் மேல்
மைவரை மேருவின் வருவதாம் எனக்
கவ்வையின் அமர் புரி களரி ஏகினான்.
39
   
7327.
பூசலின் எல்லையில் புரவலன் செலத்
தூசி அது ஆகியே தொடர்ந்த தானைகள்
ஈசனது அருள் மகன் இனிது வைகிய
பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய்.
40
   
7328.
உரற்றிய கண மழை உம்பர் சுழ்ந்து என
விரல் தொடு சூழ் படை ஈட்டம் நோக்கியே
மரற்று உறு பலங்களில் வரி கண் வர
அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும்.
41
   
7329.
அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்
விழுங்கு உறும் இருவரும் விம்மினார் உளம்
புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்
கொழுங்கனல் இடைப் படு விலங்கின் கொள்கை போல்.
42
   
7330.
ஆவது ஓர் காலையில் அரியும் நான் முகத்
தேவனும் ஏனைய திசையினோர் களும்
மூவிரு முகம் உடை முதல்வன் தன் இரு
பூவடி பணிந்து இவை புகறல் மேயினார்.
43
   
7331.
அந்தம் இலாத அண்டம் ஆயிரத்து எட்டுத் தன்னில்
வந்திடு தானையோடு மா பெரும் சுர பன்மன்
உந்திய தேரின் மேலான் உறு சமர் புரிவான் போந்தான்
முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்தது என்றார்.
44
   
7332.
என்னலும் முறுவல் செய்து ஆங்கு இலங்கு எழில் தவிசின்                                     வைகும்
பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க
முன்னம் அது உணர்ந்து வல்லே முளவு கோல் கயிறு                                     பற்றிப்
பொன் அவிர் மன வேகப் போர்ப் புரவி மான் தேர்முன்                                     உய்த்தான்.
45
   
7333.
உய்த்திடு கின்ற காலத்து ஒய் என எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர் மழுக் குலிசம் சூலம்
சத்தி வாள் பலகை நேமி தண்டு எழுச் சிலைக் கோல்                                      கைவேல்
கைத்தலம் கொண்டான் என்னின் அவன்தவம் கணிக்கற்                                      பாற்றோ.
46
   
7334.
மாறு இலா அருக்கன் நாப்பண் வைகிய பரமனே போல்
ஆறு மா முகத்து வள்ளல் அலங்கு உளைப் புரவி மான்                                          தேர்
ஏறினான் வீரவாகு இலக்கரோடு எண்மர் ஆகும்
பாறு உலாம் குருதி வேலார் பாங்காய்ப் பரசி வந்தார்.
47
   
7335.
இராயிர வெள்ளம் ஆகும் எண் தொகைப் பூதர் யாரும்
மரா மரம் பிறங்கல் ஈட்டம் வரம்பு அறு படைகள் பற்றி
விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர்                                       யாரும்
பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார்.
48
   
7336.
தூர்த்திடுகின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத்
தீர்த்தன் மான் தேர் மேல் ஆகித் திண் புவி அண்டம்                                       தன்னில்
பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின் உறு முன்னோன்                                       போல
ஆர்த்திடு தானை வெள்ளத்து அவுணர்கள் மீது                                       போனான்.
49
   
7337.
ஆங்கு அது காலை தன்னில் ஆறு இரு தடந்தோள்                                       ஐயன்
பாங்கு உறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும்
நீங்குதல் இன்றிச் சூழும் நேர் அலன் படையை நோக்கி
ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனர் இனைய                                       சொற்றார்.
50
   
7338.
தீயன புரியும் சூரன் செய்திடு தவத்தால் பெற்ற
ஆயிர இருநான் கண்டத்து அவுணரும் போந்தார் அன்றே
ஏயது ஓர் அண்டம் ஒன்றில் இருந்தனர் இவர் மற்று                                   அன்றால்
மா இரும் திசையும் விண்ணும் வையமும் செறிந்து நின்றார்.
51
   
7339.
வரத்தினல் பெரியர் மாய வன்மையில் பெரியர்                                 மொய்ம்பின்
உரத்தினில் பெரியர் வெம்போர் ஊக்கத்தில் பெரியர்                                 எண்ணில்
சிரத்தினில் பெரியர் சீற்றச் செய்கையில் பெரியர் தாங்கும்
கரத்தினில் பெரியர் யாரும் காலனில் பெரியர் அம்மா.
52
   
7340.
மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்
சோகத்தை விளைத்து வெம்போர் தொடங்கியே தொலைவு                                       செய்தோர்
மோகத்தின் வரம்பாய் நின்றோர் முழுது உயிர்க் கடலுள்                                       வேட்கை
மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன் ஏற்றிடினும்                                       வெல்வோர்.
53
   
7341.
கூற்று எனும் நாமத்து அண்ணல் கொண்டிடும் அரசும்                                      செங்கேழ்
நூற்று இதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு
மாற்றிடும் செய்கை வல்லோர் மாநில முழுது உண்டாலும்
மாற்றரும் பசிநோய் மிக்கோர் அண்டங்கள் அலைக்கும்                                      கையோர்.
54
   
7342.
வெங்கனல் சொறியும் கண்ணார் விரிகடல் புரை பேழ்                               வாயார்
பங்கம் இல் வயம் மேல் கொண்டோர் பவத்தினுக்குக்                               குறை உளானோர்
செங்கதிர் மதியம் தோயும் சென்னியர் செயிர் தீர் ஆற்றல்
அங்கத விறையும் பேர அடி பெயர்த்து உலவும்                               வெய்யோர்.
55
   
7343.
அங்கி மா முகத்தினான் போல் அடைந்தனர் பல்லோர்                                       யாளித்
துங்க மா முகத்தினான் போல் தோன்றினர் பல்லோர் சூழி
வெங்கை மா முகத்தினான் போல் மேயினர் பல்லோர்                                       மேலாம்
சிங்க மா முகத்தினான் போல் திகழ்ந்தனர் பல்லோர்                                       அன்றே.
56
   
7344.
மது வொடு கைடபன் போல் வந்தனர் பல்லோர் யாரும்
துதி உறு புகழ்ச் சுந்தோப சுந்தரில் செறிந்தோர் பல்லோர்
அதிர் கழல் சலந்தரன் போல் ஆர்த்தனர் பல்லோர்                                       ஆற்ற
முதிர் சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா.
57
   
7345.
அரன் படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின்                                      மேவும்
வரன் படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டம்                                      தாங்கும்
கரன் படை பரித்தோர் பல்லோர் கால் படை பரித்தோர்                                      பல்லோர்
முரன் படை படுத்த கொண்டல் முது படை பரித்தோர்                                      பல்லோர்.
58
   
7346.
ஆனது ஒர் அவுண வெள்ளம் அநந்த கோடியதாம்                                 என்றே
தான் உரை செய்வது அல்லால் சாற்ற ஓர் அளவும்                                 உண்டோ
வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்கும்
சேனைகள் ஆகிச் சூழின் யாம் என் கொல் செய்வது                                 அம்மா.
59
   
7347.
ஓர் அண்டத்து அவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே                                       எல்லாப்
பேர் அண்டத்தோரும் தாக்கில் பிழைப்பு உறு பரிசும்                                       உண்டோ
கார் அண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியும் கால்கள்
ஏர் அண்டச் சுழல் புக்கால் அவை பின்னும் இருக்க                                       வற்றோ.
60
   
7348.
ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர் பின்னை
இருவரே சென்று தாக்கின் யார் இவண் உய்ய வல்லார்
துருவரே அனைய துப்பில் சூழ் உறும் அவுணர் யாரும்
பொருவரே என்னில் நேர் போய்ப் பூசலார் தொடங்கற்                                     பாலார்.
61
   
7349.
எல்லை இல் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர்                                     யாரும்
அல்லன வீரர்தாமும் அவுணரை எதிர்க்கல் ஆற்றார்
கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்
ஒல்லை நம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே.
62
   
7350.
நால் படை அவுணர் தாக்கின் நாம் எலாம் விளிதும் வீரர்
கால் படு பூளையே போல் கதும் என இரிவர் வாகைப்
பால் படு திறலோன் நிற்கில் பழிபடும் இனைய ரோடும்
வேல் படை ஒருவன் அன்றி வேறியார் எதிர்க்க வல்லார்.
63
   
7351.
நீடு உறு திசையும் வானும் நிலனும் வெள்ளிடையது                                    இன்றிப்
பாடு உற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்
ஓடியும் உய்யல் ஆகா ஒல்லும் மாறு அவரைத் தாக்கி
வீடுதல் உறுதி என்றே விளம்பி மேல் சேறல் உற்றார்.
64
   
7352.
மற்றது காலை தன்னில் மாபெரும் பூத சேனைக்
கொற்றவர் பலரும் ஏனை வீரர் தம் குழுவினோரும்
வெற்றி கொள் மொய்ம்பன் தானும் மிடைந்து சூழ்                             படையை நோக்கி
இற்றன கொல்லோ நந்தம் வன்மை என்று எண்ணம்                             உற்றார்.
65
   
7353.
அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகிலம் எங்கும்
தண்டுதல் இன்றிச் சூழும் தானவர் அனிகம் எல்லாம்
கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருள் காரி
வண்டு உள அலங்கல் சென்னி வானவற்கு இனைய                                    சொல்வான்.
66
   
7354.
ஆண் தகை முருகன் தன்மேல் ஆயிர இருநால்                                 அண்டத்து
ஈண்டிய தானை எல்லாம் இறுத்தன இவற்றினோடு
மூண்டு அமர் இயற்றி வெல்ல ஊழி நாள் முடியும்                                 என்றான்
மாண்டிடு கின்றது எங்ஙன் அவுணர்கள் மன்னன்                                 மன்னோ.
67
   
7355.
அடு திறல் வலிபெற்று உள்ள அவுணராம் பானாட் கங்குல்
விடிவதும் அமரர் தங்கள் வெஞ் சிறை வீடு மாறும்
நெடிய தொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம்
முடிவதும் இல்லை கொல்லோ மொழிந்து அருள் முதல்வ                                        என்றான்.
68
   
7356.
இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை காத்த
ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற
செந்திரு மருமத்து அண்ணல் தேவரை அளிக்கும்                                 தொல்லோன்
புந்தி கொள் கவலை நாடி இனையன புகலா நின்றான்.
69
   
7357.
காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கருமம் இன்றிக்
கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள்                                       இன்றி
ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகம் கொண்டு                                       உற்றான்.
70
   
7358.
குன்று தொறு ஆடல் செய்யும் குமரவேள் மேரு என்னும்
பொன் திகழ் வெற்பின் வந்து புனங்கள் முழுதும் அங்கண்
சென்று உறை உயிர்கள் முற்றும் தேவரும் தன் பால்                                        காட்டி
அன்று ஒரு வடிவம் கொண்டது அயர்த்தியோ அறிந்த                                        நீதான்.
71
   
7359.
பொன் உரு அமைந்த கஞ்சப் புங்கவன் ஆகி நல்கும்
என் உரு ஆகிக் காக்கும் ஈசன் போல் இறுதி செய்யும்
மின் உரு என்ன யார்க்கும் வெளிப்படை போலும்                                   அன்னான்
தன் உரு மறைகளாலும் சாற்றுதற்கு அரியது அன்றே.
72
   
7360.
பாயிரும் கடலில் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்
ஏ எனும் முன்னம் வீட்டும் சிறுவன் என்று எண்ணல் ஐய
ஆயிரம் கோடி கொண்ட அண்டத்தின் உயிர் கட்கு                                       எல்லாம்
நாயகன் அவன் காண் நாம் செய் நல்வினைப் பயனால்                                       வந்தான்.
73
   
7361.
சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க                                   உன்னின்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன்                                   வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேர் இலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார்.
74
   
7362.
பார் இடர் சேனையோடு படர்ந்தது இலக்கத்து ஒன்பான்
வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச்
சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியும் தூக்கின் மாதோ
வாரணம் முதலா மேலோற்கு அனைத்தும் ஓர் ஆடலே                                      காண்.
75
   
7363.
துய்யதோர் குமரனே போல் தொன்றிய முதல்வன் சூழ்ந்த
வெய்ய தானவரை எல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக்
கையில் வேல் அதனால் சூரன் ஆற்றலும் கடக்கும் யாதும்
ஐயுறேல் காண்டி என்றான் அறிதுயில் அமர்ந்த பெம்மான்.
76
   
7364.
மால் இவை பலவும் கூறி மகபதி உளத்தைத் தேற்றி
ஓல மொடு அவுண வெள்ளம் உம்பரும் செறிந்த                                  செவ்வேள்
பால் உற நின்று போரின் பரிசினைப் பார்த்தும் என்றே
வேல் உடை முதல்வன் பாங்கா விண்ணவரோடும்                                  போந்தான்.
77
   
7365.
அன்ன தன்மை கண்ட அறு முகன் முறுவல் செய்து                                      அடுபோர்
உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத்
துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்து அமர் தொடங்க
முன்னம் ஏகிய பாரிடர் யாவரும் முரிந்தார்.
78
   
7366.
முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள் முரட்போர்
புரிந்து சாய்ந்தனர் இலக்கரோடு எண்மரும் பொருதே
இரிந்து நீங்கினர் இன்னது ஓர் தன்மைகள் எல்லாம்
தெரிந்து திண்திறல் மொய்ம்பினோன் சிலை கொடு                                     சேர்ந்தான்.
79
   
7367.
சேர்பு தன் சிலை வாங்கியே சர மழை சிதறி
நேர் புகுந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்
மார்பு வெங்கரம் கழலடி வரைகளாய் வீழ
ஈர்பு நின்று அமர் இயற்றினன் சிறுவரை இகலி.
80
   
7368.
மாக மேல் நிமிர் ஆயிரம் கோடி மா கடலுள்
நாகம் ஒன்று சென்று அலைத்து என நண்ணலர் எதிர்                                        போய்
ஆகவம் புரிந்து உலப்புறாத் தன்மை கண்டு அழுங்கி
ஏக நாயகன் தனது பால் வந்தனன் இளவல்.
81
   
7369.
காலை அங்கு அதில் அவுணர் தம் தானை ஓர் கணத்தின்
சாலம் ஓடின பூதரில் தலைவரும் சாய்ந்தார்
கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்
பாலனே இவண் வரும் எனச் சுழ்ந்தனர் பலரும்.
82
   
7370.
தண்டு நேமியும் குலசமும் சூலமும் தனுக்கள்
உண்டு உமிழ்ந்திடும் வாளியும் உடம்பிடித் தொகையும்
பிண்டி பாலமும் கணிச்சியும் பாசமும் பிறவும்
அண்டர் தந்திடு படைகளும் சொரிந்து நின்று ஆர்த்தார்.
83
   
7371.
பாரிடங்களின் படை எலாம் நெக்கதும் பாங்கர்
வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்தி மீண்டதுவும்
கார் இனம் புரை அவுணர் தம் செய்கையும் காணா
மூரல் செய்தனன் எவ்வகைத் தேவர்க்கும் முதல்வன்.
84
   
7372.
நாட்டம் மூன்று உடைத் தாதை போல் சிறிது இறை                                      நகைத்து
நீட்டம் மிக்கது ஓர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்
கோட்டி நாண் ஒலி கொண்டிட அண்டரும் குலைந்தார்
ஈட்ட மிக்க பல் உயிர்களும் துளக்கம் எய்தினவே.
85
   
7373.
முக்கணன் உதவிய திருமுருகன் முரண் உறு வரி சிலை                     முதிர் ஒலி போய்த்
தொக்கன செவி தொறும் நுழைதலுமே தொலைவு அறும்                     அவுணர்கள் தொகை முழுதும்
நெக்கன பகிர்வன இரதம் எலாம் நிரை பட வரு பரி                     புரள்வனவே
மைக்கரி தரை மிசை விழுவன வான் மதி தொடு                     நெடுவரை மறிவன போல்.
86
   
7374.
மாசறு மறைகளின் மறை அதனை மலை முனி உணர்                    வகை அருள் புரியும்
தேசிக முதல்வன் வரி சிலையில் செறி முகில் உறை வகை                    சிதறுவ போல்
ஆசுகம் அளவில கடவினனால் அடல் கெழும்                    அவுணர்கள் புடைவளையும்
காசினி அகலமும் விரிகடலும் ககனமும் மிடைவன கணை                    எனவே.
87
   
7375.
கொடிகளை அடுவன அளவு இலவே குடைகளை அடுவன                            அளவு இலவே
படைகளை அடுவன அளவு இலவே பரிகளை அடுவன                            அளவு இலவே
கடகரி அடுவன அளவு இலவே கனை ஒலி இரதமொடு                            அவுணர்கள் தம்
முடிகளை அடுவன அளவு இலவே முழுது உலகு                            உடையவன் விடுசரமே.
88
   
7376.
பரவிய தரு இனம் என அவுணப் படை நிரை விழுவன                          தொடு கடலில்
திரை என விழுவன புரவி இனம் திருநெடு வரைகளின்                          விழுவன தேர்
கருமை கொள் மணி முகில் இனம் எனவே கடகரி                          விழுவன கனவரை சூழ்
இரவியும் மதியமும் விழுவன போல் எழுவன கவிகையும்                          விழுவனவே.
89
   
7377.
செல் உறு தாள்களும் அடு படைகள் சிந்திய செங்கைகள்                               உந்திறலே
சொல்லிய வாய்களும் விம்மல் உறும் தோள்களும் நோக்கு
                              உறு துணை விழியும்
கல் என ஆர்த்திடு கந்தரமும் கவசமும் வீரர்கள்
                              துவசமுடன்
எல்லை இலாதமர் தனி முதல்வன் எய்திடும் வாளிகள்
                              கொய்திடுமே.
90
   
7378.
வட்டணை கொண்டிடு மால் வரையும்
எட்டு எனும் ஓங்கலும் யானைகளும்
பட்டு உருவிக் கணை பாரினவால்
ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே.
91
   
7379.
பொன் உலகு எல்லை புகுந்து உலவும்
அன்னம் உயர்த்திடும் அண்ணல் பதம்
துன்னுறும் அச்சுதர் தொல் உலகின்
மின் எனவே செலும் வேள்கணையே.
92
   
7380.
மேதினி கீண்டு விரைந்து புகும்,
பாதல மூடு பரந்து செலும்
மூதகும் அண்ட முகட்டு உருவும்,
மாதிரம் ஏகுறும் வள்ளல் சரம்.
93
   
7381.
மூவிரு செய்ய முகத்து ஒருவன்,
ஏவிய செஞ்சரம் எங்கும் உறா
மேவலர் தங்களை வீட்டிடும் வேறே,
ஏவர்கள் கண்ணும் இறுத்திலவே.
94
   
7382.
ஆனனம் ஆறுள அண்ணல் சரம்,
தானவர் சென்னிகள் தள்ளுதலும்
வான் இடைபோயின மாண்கதிர்கள்,
மேனி மறைப்பு உறும் வெய்யவர் போல்.
95
   
7383.
வாள் எழுவேல் பிறவாங்கினர் தம்,
தோள்களை வாளி துணித்து எறிய
நீள் இடை சென்று நிரந்திடு தம்,
கேளிரை அட்டன கீழ்மையர் போல்.
96
   
7384.
மாசு அகல் வானக மாதிரவாய்,
காசினி வேலைகளத்தின் அகம்
பாசறை சுற்றிய பாடி எலாம்,
ஆசற அட்டனன் அற்புதனே.
97
   
7385.
அட்டிடுகின்றுழி அம்புயன் மால்,
ஒட்டுறு வாசவன் உள் மகிழாக்
கெட்டனர் தானவர் கேடு இல் துயர்,
விட்டனம் என்று விளம்பினரே.
98
   
7386.
அடைந்தனர் விம்மிதம் ஆங்கு அவுணர்,
மிடைந்தது நோக்கினர் வேல் படையோன்
தடிந்தது காண் கிலர் தாரணிமேல்,
கிடந்தது கண்டனர் கேசரரே.
99
   
7387.
அலமரு பாரிடர் அவ்வவர் தம்,
தலைவர்கள் ஏனையர் தானவர் தம்
மலிபடை சாய்த்து வயம் புனைவில்,
புலவனை ஆர்ப்பொடு போற்றினரே.
100
   
7388.
வள்ளல் சரம் பட வான் முகடு,
கொள்ளுறு தானை குழாம் தொலைய
வெள்ளிடை யாயின விண்ணவர் தம்,
உள்ளகம் மாற்றவும் உவப்பு உறவே.
101
   
7389.
அண்ட கடாகமது அப்புறமாய்க்,
கொண்டிடு தானவர் கொள்கை இது
கண்டு இறைவன் கழல் காண நெறி,
உண்டு இனி என்றனர் உள் மகிழ்வார்.
102
   
7390.
காற்று என அண்ட கடாக நெறி,
தோற்றிய வாயில் தொடர்ந்து புகா
மேல் திகழ் தேர் கரி வெம்பரியின்,
ஏற்றமொடு ஒல்லென ஏகினரால்.
103
   
7391.
அந் நெறி ஏகி இவ்வண்டம் எலாம்,
துன்னினர் வான் புவி சூழ்ந்து வெளி
என்னதும் இல் என ஈண்டினரால்,
முன்னுற வந்து முடிந்தவர் போல்.
104
   
7392.
சூரன் எனப் படு தொல் இறைவன்,
பேர் அமர் ஆற்றிடு பெற்றியினால்
தேர் இடை வந்து உறு செய்கை தெரீஇ,
ஆர்வமொடு நெடிது ஆர்த்தனரே.
105
   
7393.
ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம்,
பேர்த்திடுகின்ற பிணக் கிரியாய்
ஈர்த்திடு சோரி இடைப் படுதல்,
பார்த்தனர் சிந்தை பரிந்தனரே.
106
   
7394.
பரிந்தனர் நம் படை பட்டிடவே,
புரிந்திடு வானொடு போர் புரியா
விரைந்து வயங்கொடு மீடும் எனாத்,
தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே.
107
   
7395.
தேற்றிடு கின்றுழி தேவர் எலாம்,
போற்றிட வீரர் புடைக்கண் உற
ஆற்றல் கொள் பூதர்கள் ஆர்த்திடவே,
தோற்றினன் ஈறொடு தோற்றம் இலான்.
108
   
7396.
சேய் உரு ஆகிய சீர் முதல்வன்,
மேயது கண்டு மிகச் சிறியன்
பாய் பரி யானை படைத்தும் இலான்,
ஏயிவனே நமது எண்ணலனே.
109
   
7397.
ஆண்டகை மைந்தன் இவ்வண்டம் எலாம்,
ஈண்டிய தானை இமைப் பொழுதின்
மாண்டிட அட்டனன் மற்றிது தான்,
ஈண்டிடும் அற்புத நீர்மை அதே.
110
   
7398.
அன்னது நின்றிட அங்கு அவன் மேல்,
மன்னவர் மன்னவன் வந்து பொரு
முன் அமர் ஆற்றி முடிக்குதும் யாம்,
என்ன இயம்பினர் யாவருமே.
111
   
7399.
தற்பமொடு இன்னன சாற்றி அவண்,
முற்படு தானவர் முக்கண் உடைத்
தற்பரன் நல்கிய சண்முகனை,
வற்புடன் ஆர்த்து வளைந்தனரால்.
112
   
7400.
வளைந்திடு காலையில் வானவர்கள்,
உளைந்தனர் பூதர்கள் உட்கி மனம்
தளர்ந்தனர் வீரர் சலித்தனரால்,
விளைந்தது பேர் அமர் மீட்டும் எனா.
113
   
7401.
ஐயன் மருத்தினை அத்துணை நோக்கிக்
கை அணி நெற்றி கடைக் குழை ஆகி
வெய்யவர் தானைகள் மேவுழி எல்லாம்
வையம் விடுக்குதி வல்லையில் என்றான்.
114
   
7402.
அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன்
கட்டுரை கொண்டு கரந்து ஒழு காலோன்
ஒட்டுறு நண்ணலர் உற்றுழி காணா
விட்டனன் அம்ம விறல் பரி மான் தேர்.
115
   
7403.
மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும்
விண்ணிடை சூழ் தரும் வேலையின் மீதாம்
கண் உறும் எப்படி கை தொழும் வானோர்
எண்ணினும் நாட அரிது எந்தை எம்பிரான் தேர்.
116
   
7404.
சேயது காலை திறத்திறம் ஆகி
மூயின தானவர் மொய்ம்புறு தானை
சாய்வுற ஓர் தொடை தன்னில் அநந்தம்
ஆயிர கோடிகளாக் கணை தொட்டான்.
117
   
7405.
பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரந்துணி வுற்றன செம்புனல் ஆழி
சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால்
நெரிந்தது வையம் நெளிந்தது நாகம்.
118
   
7406.
பொய் கொலை ஆற்றிய பூரியர் உக்கார்
செய்குவர் நன்மை செறிந்து உளரேனும்
கை கெழு ஞாளிகளே கறித்து உண்ட
மை கெழு தானவர் மாண்டிடும் யாக்கை.
119
   
7407.
ஒன்னலர் மீதின் உயிர்க்கு உயிரானோன்
மின் என வீசிய வெஞ்சர மாரி
பின்னுற முந்து பெயர்ந்திடும் என்றால்
அன்னவன் தேர் விரைவார் கணிக்கின்றார்.
120
   
7408.
பரத்தினு மேதகு பண்ணவன் வார் வில்
கரத்தனையும் விரைவால் கரம் தூண்டும்
சரத்தினையும் தடந் தேரினையும் கால்
உரத்தினையும் புகழ்வார் புடை உள்ளார்.
121
   
7409.
வெவ்விசயப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர் விசை நாடினர் செவ்வேள்
கைவிசையோ நெடுங்கால் விசைதானோ
வெவ்விசையோ என்றனர் வானோர்.
122
   
7410.
துய்யவன் வாளி துணித்திட வீரர்
கையொடு வானிடை செல்வ கணிப்பில்
ஐயிரு வட்டம் அராப்புடை பற்ற
வெய்யவர் பற்பலர் விண் எழல் போலும்.
123
   
7411.
கால் ஒரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்
வால் ஒரு பாங்கர் மருப்பொடு எருத்தம்
மேல் ஒரு பாங்கர் வியன் கை ஒர் பாங்காத்
தோலினம் இவ்வகையே துணி கின்ற.
124
   
7412.
பல்லணம் அற்றன பன் முழுது அற்ற
செல் உறு தாளொடு சென்னியும் அற்ற
ஒல்லொலி அற்ற உரந்துணி உற்ற
வல்லமர் நீந்துறு மாத்தொகை முற்றும்.
125
   
7413.
மாழை கொள் வையம் மடிந்திட நேமி
ஆழி கொள் சோரியின் ஆழ்வன மேருச்
சூழ் உறும் வெய்யவர் தொல் புவி கீண்டே
கீழ் உறும் எல்லை கெழீஇயின போலும்.
126
   
7414.
ஏறிய தேர்களும் யானைகள் யாவும்
சூறை கொள் வாசிகளும் துணிவு உற்றே
வீறு அகல் வீரர் மிசைப் பட வீழ்ந்த
மாறு அவை ஆற்றிடும் வல் வினையே போல்.
127
   
7415.
ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி
மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்
சாலும் இவற்கு இது தாள் வலியால் கொல்
காலன் எனப்புகல் கட்டுரை பெற்றான்.
128
   
7416.
எறி படை யாவையும் ஏமம் அது ஆகச்
செறிபடை யாவையும் சேய் அவன் ஏவலால்
முறி படு கின்ற முனிந்து உவணப் புள்
கறிபட மெய்துணி கட்செவியே போல்.
129
   
7417.
முன் உறுவார்கள் முரட் படை தூவிப்
பின் உறுவார் பெயராது புடைக்கண்
துன் உறுவார்கள் எலாம் துணிவாக
மின் என எங்கணும் வேள் கணை தூர்த்தான்.
130
   
7418.
சூலம் அதே கொல் கணிச்சி கொல் தொல்லை
மால் எறி நேமி கொல் வச்சிரமே கொல்
காலொடு சென்ற கனல் குழுவே கொல்
வேலது கொல் என வேள் கணை விட்டான்.
131
   
7419.
மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள்
இழைத்திடு மாய இயற்கைகளும்
விழுத்தக வீசும் விறல் படையும்
பிழைத்தன தாங்கள் பிழைத்திலர் ஆல்.
132
   
7420.
முக்கணன் மா மகன் மொய் கணைகள்
தொக்கவர் யாக்கை துணித்திடலும்
மெய்க்கு இடு பல்கலன் மீன் விழல் போல்
திக்குலவிப் படி சிந்தினவே.
133
   
7421.
அண்ணல் சரங்கள் அறுத்திடலும்
எண்ணலர் யாக்கைகள் இற்றவை தாம்
மண்ணை அளந்த அயில் மால் எனவே
விண்ணை அளந்து விழுங்கினவே.
134
   
7422.
சூழ் உறு தானை துணிந்த உடல்
ஏழ் எனும் நேமியும் எண் தகு பேர்
ஆழியும் விண்ணும் அடைத்து இமையோர்
வாழ் உலகங்களை வௌவியவே.
135
   
7423.
காடி இழந்து கவந்தம் அதாய்
ஆடின வெள்ளமும் ஆயிரமா
கோடியது உண்டு குகன் கணையால்
வீடின எல்லை விதிக்குநர் யார்.
136
   
7424.
வீழுறு மாற்றலர் மெய்க்குருதி
ஆழிகள் ஆகிய அகன் புவியில்
பூழைகளோடு புகுந்து பிலம்
ஏழுள எல்லையும் ஈண்டியதே.
137
   
7425.
பாதல எல்லை பரந்திடு சோரி
பூதலம் மீண்டு புகுந்து பராவி
ஓத நெடுங்கடல் ஓங்கிய வா போல்
மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே.
138
   
7426.
மீன் ஊடுவாக விளங்கிய திங்கள்
பானு மலர்ந்திடு பங்கய மாகச்
சோனை கொள் மா முகில் தோணியது ஆக
வான் நிமிர் செம் புனல் மா கடல் ஒக்கும்.
139
   
7427.
மாசு அறு கூற்றனும் மற்று உளர் தாமும்
கேசரர் ஆகிய கிங்கரர் யாரும்
பாச மலைந்திடு பல் பிணி பற்றா
வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார்.
140
   
7428.
பால் உறுகின்ற பணிக்கிறை நாப்பண்
மால் அருளில் துயில் மாட்சிமை என்ன
நீல் உறு திங்கள் நிணம் கெழு செந்நீர்
வேலையின் மீது விளங்கியது அம்மா.
141
   
7429.
மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி
ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்
தட்டு உறு செங்கதிர் சண்முக மேலோன்
விட்டிடு நேமியின் விண் மிசை செல்லும்.
142
   
7430.
சிறைப் புறவுக்கு அருள் செய்திட மெய் ஊன்
அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்
நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை
உறப்படு சோரி மெய் உற்றிடு நீரால்.
143
   
7431.
ஆனது ஒர் எல்லையில் அண்ட நிறைந்த
சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால்
ஊன் உயிர் பூதம் ஒழிந்தன முக்கண்
வானவன் மூரலின் மாய்ந்திடு மா போல்.
144
   
7432.
அண்டம் ஈங்கு இது முற்று ஒருங்கு ஈண்டிய அவுணர்
தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்
கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்
கண்டு மற்று அவை தொலைத்தனன் செலுத்திடு                                கணையால்.
145
   
7433.
அறுத்து வெம்முனைத் தானையை யாண்டு செல் அனிகம்
மறித்தும் வந்து வந்து அடை தரும் இவண் என மனத்துள்
குறித்து வெங்கணை மாரியால் அண்ட கோளகையின்
நெறித்தரும் பெரு வாயிலை அடைத்தனன் நிமலன்.
146
   
7434.
ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல் வெங்                                   கணையால்
மாண்ட தானைகள் சோரியும் களேவர மலிவும்
நீண்ட பாதலம் கடல் புவி கொண்டு வான் நிமிர்ந்தே
ஈண்டு கின்றது கண்டனன் வரை பக எறிந்தோன்.
147
   
7435.
நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடும் நிமலன்
பெற்ற மா மகன் பன்னிரு விழிகளும் பிறங்கு
கற்றை வெஞ்சுடர் வடவை போல் ஆக்கி அக்கணத்தில்
உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத்து ஓங்கல்.
148
   
7436.
வெந்து நுண்டுகள் பட்டன களேவரம் விசும்பின்
உந்து சோரி நீர் வறந்தன மூவகை உலகு
முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன்
இந்திராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி.
149
   
7437.
பாறு உலா வரு களேவரத்து அமலையும் படிமேல்
வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து
நீறது ஆக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்
ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல்.
150
   
7438.
ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத்து அடைந்த
சேகு நெஞ்சுடைச் சூரன் இத்திறம் எலாம் தெரிந்து
மாக நீடு நம் தானையை அலைத்த மாற்றலனை
நாகர் தம்மொடு முடிக்குவன் யான் என நவின்றான்.
151
   
7439.
மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர் கோன் மனத்தில்
சீற்றம் மூண்டிட அமர் வினை குறித்தனன் திகிரிக்
காற்றின் ஒல்லை வந்து ஏற்றலும் மருத்துவன் கடவிப்
போற்று தேர் மிசை முருகனும் சென்று எதிர் புகுந்தான்.
152
   
7440.
புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையின்
மிக்க பன்னிரு கரங்களும் வியன் படைக் கலனும்
தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்
தக்கனே என அவுணர் கோன் இன்னன் சாற்றும்.
153
   
7441.
சிறந்த வான் மதி மிலைச்சினோன் அருள் புரி செயலால்
இறந்திடேன் இனியான் என்றும் இப் பெற்றியாய்                               இருப்பேன்
மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே
இறந்துளார் பலர் உணர்ந்திலை போலும் நீ இதுவே.
154
   
7442.
உள்ளம் நொந்து நொந்து என் பணி ஆற்றியே உலைந்து
தள்ளுறும் சுரர் மொழியினைச் சரதம் என்று உன்னிப்
பிள்ளை மென் மதியால் இவண் வந்தனை பெரிதும்
அள்ளல் உற்றுழிப் புகுந்திடும் கய முனியது போல்.
155
   
7443.
உடைப் பெரும் படை செறுத்தனை பாலன் என்று                                     உன்னை
விடுப்பது இல்லையால் வெரிந்து கொடுக்கினும் விரைவில்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையும்
கெடுப்பன் என்றனன் தன் பெரும் கிளையுடன் கெடுவான்.
156
   
7444.
வெம்புரைத் தொழிற்கு ஒருவனாம் கயவ நீ வெறிதே
வம்பு உரைத்தனை ஆவது ஒன்று இல்லை நின் மார்பஞ்
செம் புரைப்பட யாம் விடுகின்றது ஓர் திறல் வாய்
அம்புரைத்திடு மாறு உனக்கு என்றனன் அமலன்.
157
   
7445.
ஆரும் நேர் இலாப் புங்கவன் சேய் இனது அறையச்
சூரன் ஆகிய அவுணர் கோன் துண் எனச் செயிர்த்து
மேரு நேர்வது ஓர் வரிசிலை எடுத்து விண் இழியும்
வாரி போன்றிடு நாணினை ஏற்றியே வளைத்தான்.
158
   
7446.
வளைத் தடங்கிரி புரைவது ஓர் சிலையினை வயத்தால்
வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்
வளைத் தடங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான்
வளைத்த தன்மை போல் அவுணர் தம் முதல்வனை                                  வளைத்தார்.
159
   
7447.
சிலையை வீசினர் கொடு மரம் வீசினர் செறிமூ
விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார்
உலைய வீசியே அடல் செயும் மும் மதத்து உவாவை
வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன.
160
   
7448.
கண்டு மற்றதை அவுணர் கோன் வில் உமிழ் கணையாம்
கொண்டல் நுண் துளி சிதறியே கணங்கள் கூட்டறுத்து
விண்டு உலாவர அரக்கினால் குயின்றது ஓர் வெற்பைச்
சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான்.
161
   
7449.
வீடினார்களும் புயங்கரம் துணிந்திட மெலிந்து
வாடினார்களும் மயங்கி வீழ்ந்தார்களும் வல்லே
ஓடினார்களும் ஓடவும் வெருவி வேற்று உருவம்
கூடினார்களும் ஆயினர் பார் இடக் குழாத்தோர்.
162
   
7450.
பூதர் சாய்ந்து உழி இலக்கரோடு எண்மரும் பொருவில்
வேத நாயகன் தூதனும் சூழ்ந்து உடன் மேவிக்
கோதை தூங்கிய கொடுமரம் ஆயின குனித்துச்
சோதி வான் கணை மாரிகள் அவுணன் மேல் சொரிந்தார்.
163
   
7451.
சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலும் சூரன்
தெரிந்து வாளிதொட்டு அறுக்கலன் நின்றதோர் செவ்வி
விரைந்து வந்தவை ஆங்கு அவன் மெய்ப்பட விளிந்து
பரிந்து போயின செய்தது ஒன்று இல்லை அப்பகழி.
164
   
7452.
பரப்பின் ஈண்டிய வீரர் தம் சூழ்ச்சியைப் பாரா
உரப்பி ஆவலம் கொட்டியே வெகுளி கொண்டு ஒரு தன்
பொருப்பு நேர் சிலை குனித்து வெஞ்சிலீமுகம் பொழிந்து
திருப் பெருந்தடந் தேரொடும் சாரிகை திரிந்தான்.
165
   
7453.
நூறு கோடி வெஞ்சரம் ஒரு தொடை உற நூக்கிச்
சூறையாம் என வட்டணை திரிந்துளான் சூழ்வோர்
மாறு தூண்டிய சரங்களைத் துணித்து மற்றவர்கள்
ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான்.
166
   
7454.
வையம் வில்லுடன் இற்ற பின் மற்றவர் மலைவு
செய்ய உன்னும் முன் மொய்ம்பினும் உரத்தினும் சிரத்துங்
கையினும் கணை ஆயிரம் ஆயிரம் கடுந்தீப்
பெய்யும் மாரி போல் செறித்தனன் செம்புனல் பெருக.
167
   
7455.
புரந்தனில் செறி கறையினார் புலம்பு கொள் மனத்தார்
உரம் தளர்ந்து உளார் வில் வலி இழந்து உளார் ஒருங்கே
இரிந்து நீங்கினர் இலக்கரோடு எண்மரும் இளவல்
திருந்தலன் தடந்தேர் மிசைப் பாய்ந்தனன் சினத்தால்.
168
   
7456.
பாய்ந்து திண் திறல் மொய்ம்பினான் பரமன் முன் அளித்த
நாந்தகம் தனை உரீஇக்கொடு நண்ணலர்க்கு இறைவன்
ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல்
காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்தில் ஓர் கரத்தால்.
169
   
7457.
அங்கைகொண்டு சூர் ஒரு புடை புடைத்தலும் அகலம்
பொங்கு சோணிதம் அலைத்திட வாகை அம் புயத்துச்
சிங்கம் வீழ்ந்து அயர் உற்றிடத் தூதனைச் செகுத்தல்
இங்கு எனக்கு அடாது என்று எடுத்து உம்பரின்                                 எறிந்தான்.
170
   
7458.
எறிந்த காலையில் விண் இடைப் படர்ந்திடும் ஏந்தல்
அறிந்து மீண்டு சென்று ஆறுமா முகன் புடை                                  அடைந்தான்
தறிந்து போகிய சிலையினைத் தரை மிசை இட்டுச்
சிறந்தது ஓர் தனு எடுத்தனன் தீயரில் தீயோன்.
171
   
7459.
அத்த மேல் கிரி உதய மால் வரைத் துணை யான்று
நித்தலும் பிறர்க்கு இடர் செய்து மேருவின் ஈண்டு
கொத்து நீடு பல் குவடு உடைத்து ஆகியே குமரன்
சத்தியால் அடநின்ற வெற்பனை அதத்தனுவே.
172
   
7460.
வனை கருங்கழல் அவுணன் கார் முகம் வளைத்துப்
புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய
எனைவரும் துளக்கு உறும் வகை நாண் ஒலி எடுத்தான்
அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன்.
173
   
7461.
புயலின் மேனியன் புவி நுகர் காலையும் போதன்
துயிலு மாலையும் துஞ்சிய வேலையும் தொலையாது
இயலும் அண்டத்தின் அடி முடி உருவி நின்று இலங்கும்
கயிலை போல்வது ஓர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன்.
174
   
7462.
வாரியால் உலகு அழிந்திடும் எல்லையின் மருங்கின்
மேரு ஆதியாம் வரைகளும் கிரிகளும் விசும்பில்
காரு மேல் உள உலகமும் அமரரும் கயிலைச்
சாரல் சூழ்தல் போல் விரவியார்ப்பு உடையது அத்தனுவே.
175
   
7463.
நீட்டம் மிக்கது ஓர் அப் பெருஞ் சிலையினை நிமலன்
தோள் துணைக் கொடு வாங்கி ஏழ் வகையினால்                               தோன்றும்
ஈட்டம் மிக்க பல் உயிர்களும் வான் உரும் ஏற்றின்
கூட்டம் ஆகியே ஆர்த்து எனக் குணத்து ஒலி                               கொண்டான்.
176
   
7464.
குணங் கொள் பேர் ஒலி கோடலும் இரலை ஊர்                                 கொற்றத்து
அணங்கு உலா வரு கார் முகம் குழைத்து உளைய வதி
இணங்க வாங்கியே பத்து நூறு ஆயிரத்து இரட்டி
கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினும்                                 கடியோன்.
177
   
7465.
வான் மறைத்தன மாதிரம் மறைத்தன மதி தோய்
மீன் மறைத்தன கதிர் வெயின் மறைத்தன வேலை
தான் மறைத்தன வசு மதி மறைத்தன தருவார்
கான் மறைத்தன வரைகளை மறைத்தன கணைகள்.
178
   
7466.
காற்றில் செல்வன அங்கியில் படர்வன கடுங்கண்
கூற்றில் கொல்வன வேலை வெவ் விடத்தினும் கொடிய
பாற்றுத் தொல் சிறை உள்ளன பஃறலை படைத்த
நால் திக்கும் புகழ் அவுணர் கோன் ஆணையின் நடப்ப.
179
   
7467.
பருமிதத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்
வரை கிழிப்பன அண்டமும் பொதுப்பன வான் தோய்
உரும் இடிக்குலம் பொருவன விடத்தை உண்டு உமிழ்வ
கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள்.
180
   
7468.
துண்ட வெண்பிறை வாள் எயிற்று அவுணர் கோன் துரப்ப
மிண்டு வெங்கணை எங்கணும் செறிந்திட விண்ணோர்
கண்டு கண்ணனை அணுகியே கை குலைத்தைய
உண்டு கொல் நமக்கு ஒளிப்பது ஓர் இடம் என                                     உரைத்தார்.
181
   
7469.
உரைத்து உளார்க்கு மால் மாறுரை வழங்கு முன்                                     ஓள்வேல்
கரத்தில் ஏந்திய குமரவேள் இன்னது கண்ணால்
தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோல் சிலதன்
சரத்தினால் அவன் தூண்டிய கணை எலாம் தடிந்தான்.
182
   
7470.
மடிந்திடும் படி மாற்றலன் சரங்களை வள்ளல்
தடிந்த தன்மை கண்டு அமரர்கள் உவகையில் தழைத்தார்
படர்ந்து நீடிய கங்குலின் பாய் இருள் புலர
விடிந்த காலையின் எழுங்கதிர் கண்ட மேதினி போல்.
183
   
7471.
அங்க வெல்லை அவுணர் கோன், எங்கள் நாதன்                                    எதிர் உற
மங்குல் போல் வரம்பு இலாச், செங்கண் வாளி
                                   சிதறினான்.
184
   
7472.
ஆய காலை அறுமுகன், தீயன் உந்து செறிகணை
மாய வாளி மா மழை, ஏ எனா முன் ஏவினான்.
185
   
7473.
எங்கள் நாதன் ஏவிய, துங்க வாளி சூர் விடும்
புங்கவங் களைப் புரத்து, அங்கி போல் அறுத்தவே.
186
   
7474.
அறுத்த பின்னும் அறன் இலான், மறுத்தும் வாளி மாமழை
கறுத்த கண்டர் காளை மேல், செறுத்து வல்லை                                   சிந்தினான்.
187
   
7475.
சிந்து கின்ற செஞ்சரம், வந்து உறா முன் வந்தெனக்
கந்தன் நூறு கணை தொடா, அந்தில் பூழி ஆக்கினான்.
188
   
7476.
பூழி செய்து பொள் என, ஊழி நாதன் ஒண் சரம்
ஏழு நூறது ஏவினான், சூழு மாயை தோன்றல் மேல்.
189
   
7477.
மாயை மைந்தன் மற்று அதை, ஆய வாளியால் அறுத்து
ஏயினான் அனிர் ஆயிரம், சேயின் முன் சிலீ முகம்.
190
   
7478.
விட்டதனை அத்தொகை விறல் பகழி தன்னால்
அட்டு விரை வில்கடவுள் ஆயிரம் விரட்டி
கட்டு அழலை ஒத்து உள கடுங்கணைகள் தம்மைத்
தொட்டனன் வருத்தமொடு சூர் கிளை துளங்க.
191
   
7479.
முராரி உதவும் சுதனை முந்து தளை இட்டாண்டு
ஒர் ஆயிரம் அளித்த பரன் உய்த்த கணை செல்ல
இர் ஆயிரம் நெடும் பகழி ஏவி அவை நீக்கி
அரா விறையும் வையமும் அழுங்கல் உற ஆர்த்தான்.
192
   
7480.
ஆர்த்தவன் விடுங்கணை அனைத்தினையும் முக்கண்
மூர்த்தி தரு கான்முளை செலச் செல முடித்தான்
கார்த்து எழு புகைப் படலை கான்று நிமிர் செந்தீச்
சேர்த்தின் அவை யாவையும் மிசைந்திடு திறம் போல்.
193
   
7481.
ஐயன் விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்
வெய்யன் விடு வாளிகளை வேள் கடிது அறுக்கும்
எய்யும் நெடுவெம் பகழி இற்றவைகள் சிந்தி
வையம் மிசை போகியன வானம் அணித்து என்ன.
194
   
7482.
முற்றிய அமர்த்தலை முனிந்து இவர் செலுத்தும்
கொற்ற நெடு வாளிகள் குறைந்துழி எழுந்தீப்
பற்றியது பாரிடை பகிர்ந்த வரை முற்றும்
வற்றிய அளக்கரும் வறந்து உளது கங்கை.
195
   
7483.
தார் கெழுவு வேல் படை தடக்கை உடை யோனும்
சூரனும் இவாறு அமர் இயற்று தொழில் காணா
வீரம் அட மாதுளம் வியந்து இவர் தமக்குள்
ஆரிடை நடத்தும் என ஐயமொடு நின்றாள்.
196
   
7484.
ஆளரி தன் முன் இளவல் ஆனை வதனத்துக்
காளை மகிழ் பின் இளவல் கார் முகம் உகைக்கும்
வாளி மழை ஏயலது மற்றவர்கள் தம்மை
நீள்விழியினால் தெரிகிலார் புடையின் நின்றோர்.
197
   
7485.
நீடு சமர் இன்னணம் நிகழ்ச்சி உறும் எல்லை
மேடமிசை ஊர்பரன் விடுத்த கணை எல்லாம்
ஈடுபட நூறி அவன் ஏறி வரு மான்தேர்
ஆடுறு பதாகையை அறுத்து விரைந்து ஆர்த்தான்.
198
   
7486.
ஆர்த்து விறல் வால் வளையை அம்பவள வாயில்
சேர்த்து இசைத்தான் தனது சீர்த்தி இசைத்து என்ன
மூர்த்தம் அது தாழ்க்கிலன் முனிந்து கணை பின்னும்
தூர்த்து முருகன் தனது தோற்றம் மறைத்திட்டான்.
199
   
7487.
மறைத்து பகழித் தொகையை வாளி மழை தன்னால்
குறைத்து அவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சி நெடு மான்
                                       தேர்
விறல் கொடி தனைக் கொடிய வெஞ்சரம் ஒர் ஏழால்
அறுத்து முருகன் பரவை ஆழ் கடலின் இட்டான்.
200
   
7488.
தானவர்க்குத் தலைவன் தனிக்கொடி
மீன வேலையில் அற்று உடன் வீழ்ந்துழிப்
பானு கம்பன் எனப் படு பாரிடர்
சேனைக் காவலன் தெற்று என நோக்கினான்.
201
   
7489.
கண்டு சிந்தை களித்துப் பெருமிதம்
கொண்டு குப்புற்று இசைத்துக் குனித்திடா
அண்டர் போற்றத் தன் ஆயிரம் வாயினும்
ஒண் திரள் சங்கம் ஒல்லை வைத்து ஊதினான்.
202
   
7490.
கானுகம் படு கந்துகத் தேர் உடைப்
பானு கம்பன் பனி மதி ஆயிரம்
மானு கம்பவை வாய் வைத்து இசைத்தலும்
தானுகம் பல தங்கிற்று அவ்வோசையே.
203
   
7491.
பாய் பெரும் புகழ்ப் பானு கம்பன் வளை
ஆயிரங்களும் ஆர்த்திட அண்டர் தம்
நாயகன் தன் விறல் கண்டு நாரணன்
தூய சங்கு முழங்கிற்றுத் துண் என.
204
   
7492.
போதம் அங்கு அதில் புங்கவர் யாவரும்
சோதி வேல் படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன் கொடி
ஆதி நீ என்று அழலினை ஏவினார்.
205
   
7493.
ஏவலோடும் எரிதழல் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி ஆகியே
தேவ தேவன் திருநெடுந் தேர் மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட.
206
   
7494.
படியிலா தமர் பண்ணவன் தேர் மிசைக்
கொடியதாய் நின்று குக்குடம் கூயது
கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்
விடியல் வைகறை வேலையைக் காட்டல் போல்.
207
   
7495.
சங்கமோடு தபனனும் ஆர்த்தலும்
மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்
பங்கய ஆசனப் பண்ணவன் ஆர்த்தனன்
திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே.
208
   
7496.
மறலி ஆர்த்தனன் மாருதங்கட்கு எலாம்
இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தனன்
அறை கடற்கு அரசானவன் ஆர்த்தனன்
குறைவு இல் செல்வக் குபேரனும் ஆர்த்தனன்.
209
   
7497.
ஆர்த்த ஓசை போய் அண்டத்தை முட்டியே
சூர்த்த நோக்குடைச் சூரபன்மன் செவிச்
சீர்த் துளைக்குள் செறிதலும் தேவரைப்
பார்த்தனன் கடு உண்டு அன்ன பான்மையான்.
210
   
7498.
மாறில் என் முன் வருவதற்கு அஞ்சியே
பாறு போன்று பழுவத்துலைந்து உளார்
தேறி வந்து தெழித்தனர் என் முனும்
ஆறு மாமுகன் ஆற்றல் கொண்டே கொலாம்.
211
   
7499.
நன்று நன்று இது நான்முகன் ஆதியா
நின்ற தேவர் நிலை அழித்து ஒல்லையில்
கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்
என்று சீறினன் யாரையும் எண்ணலான்.
212
   
7500.
இருக்க மைந்தன் இகல் இவண் விண்ணிடைச்
செருக்கு தேவர் திறலினைச் சிந்துவான்
அருக்கன் ஓடிய அந்தரத்து உய்க்குதி
தருக்கு தேரினைச் சாரதி நீ என்றான்.
213
   
7501.
மற்று இவ்வாறு வலவனை நோக்கியே
சொற்ற காலைத் தொழுது எந்தை நன்று எனாப்
பொற்றை போலும் பொலன் மணித்தேரினை
வெற்றியாக என விண் மிசைத் தூண்டினான்.
214
   
7502.
பாகன் தூண்டிய பாண்டில் அம் தேர் எழீஇ
மேகம் கீண்டு மிசைப் படு சூறையின்
ஆகம் கீறி அமரர்கள் ஈண்டிய
மாகம் சென்றது வான் இழிந்து என்னவே.
215
   
7503.
சென்ற தேரொடு சேண் இடைப் புக்குளான்
குன்றம் அன்ன கொடுஞ்சிலை கோட்டியே
துன்று தேவர் தொகை இரிந்து ஓடு உற
மன்ற வாளி மழைகளை வீசினான்.
216
   
7504.
வீசு கின்றுழி விண்ணவர் மேல் சரம்
நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே
ஈசன் மாமகன் ஈண்டு நின்று எண் இலா
ஆசுங்களும் உய்த்து அங்கு அவை சிந்தினான்.
217
   
7505.
மற்று அவை துணித்த பின் வடிக் கயிறு முட் கோல்
பற்றிய தடக்கை உள பாகுதனை நோக்கிக்
கொற்ற அயில் தூண்டி ஒரு குன்றை வெளி கண்டோன்
தெற்று என விண் மேல் நமது தேர் விடுதி என்றான்.
218
   
7506.
என்னலும் இறைஞ்சி இரலைப் பரியின் மேலோன்
பொன் உலகு பார் உலகு புக்கு எழுவது என்ன
மின்னின் மிளிர் தேர் அதனை விண் மிசை கடாவி
நன்னெறி செலா அவுணர் நாயகன் முன் உய்த்தான்.
219
   
7507.
வைய நெடு வானமிசை வல்லை புகும் எல்லை
ஐயன் இமையோர்கள் அயர்ந்து ஓடுவது நோக்கி
நையலிர் புலம்பலிர் நடுங்கலிர்கள் என்றோர்
செய்ய கரம் ஏந்தி முருகன் கருணை செய்தான்.
220
   
7508.
கந்தன் மொழி வானவர் கணத்தவர்கள் கேளா
எந்தை இவண் வந்திடலின் யாம் உயிர் படைத்தே
உய்ந்தனம் எனா விரைவில் ஓடுவது நீங்கிச்
சிந்தை மகிழ்வத் தொடு திகந்தம் உற நின்றார்.
221
   
7509.
நின்றிடலும் வெவ்வவுணன் நீர்மையது நோக்கிப்
பின்றிடுவராம் பிரமனே முதல் தேவர்
ஒன்று ஒர் சிறுவன் கொல் எனை உற்று எதிரு நீரான்
நன்று இது எனவே வெகுளி கொண்டு நகை செய்தான்.
222
   
7510.
காய்சின மிகுந்து அவுணர் காவலன் அநந்தம்
ஆசுகம் விரைந்து படர் ஆசுகம் அது என்ன
வீசுதலும் வாளி பல விட்டவை விலக்கி
ஈசன் அருள் மா மதலை ஏற்று இகல் புரிந்தான்.
223
   
7511.
சுறுக்கொள மயிர்ப் பொடி உயிர்ப்பு விடு சூரன்
கறைக் கதிர் அயில் பொலி கரத்தன் இவர் தம்மில்
செறுத்து உடன் வடிக்கணை செலுத்தி அகல் வானம்
மறைப்பது மறுக்குவதும் ஆகி மலைவு உற்றார்.
224
   
7512.
விரைந்து இருவோர்களும் வியன் கணை மாரிகள்
சொரிந்தனர் பேர் அமர் தொடர்ந்து செய் போழ்தினில்
எரிந்தது மாதிரம் இரங்கினர் பார் உளர்
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே.
225
   
7513.
கறங்கினம் போல்வன கலஞ்செய் குலாலன
திறங்கொளும் ஆழிகள் திரிந்தன மானுவ
மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன
துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே.
226
   
7514.
பாதலம் மூழ்குவ பார் இடை சூழ்குவ
மாதிரம் ஓடுவ வாரிதி சேர்குவ
பூதர மேவுவ பூமலரோன் நகர்
மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே.
227
   
7515.
எண் திசை சூழும் இருங்கடல் பாய்வன
விண் தொடு நேமி வியன் கிரி வாவுவ
கொண்டலின் ஆர் இருள் கொண்டுழி போகுவ
அண்ட முன் ஏகுவ அங்கு அவர் ஏறுதேர்.
228
   
7516.
பெயர்ந்திடு தேர் உறு பிழம்பு அவை காணுபு
தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீர் உரு
மயங்கி ஆதவர் மருண்டனர் வானவர்
உயங்கினர் பார் உளர் உலைந்தனர் நாகரே.
229
   
7517.
முதிர்ந்திடு போரினர் முழங்கிய தேர் செல
அதிர்ந்தது பார் உலகு அலைந்தன வேலைகள்
பிதிர்ந்தன மால்வரை பிளந்தது வான் முகடு
உதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே.
230
   
7518.
தேர் இவை இரண்டும் ஆகித் திகழும் மூதண்டம் எங்கும்
சாரிகை வருதலோடும் சண்முகன் மீது செல்லச்
சூர் எனும் அவுணர் கோமான் தொலையும் நாள் எழிலி                                       பொங்கி
ஆர் அழல் மழை கான்று என்ன அடுசர மாரி தூர்த்தான்.
231
   
7519.
மழுப் படை அநந்த கோடி வச்சிரம் திகழ் முச் சென்னிக்
கழுப்படை அநந்த கோடி கப்பணம் அநந்த கோடி
கொழுப் படை அநந்த கோடி குலிசம் வேல் அநந்த                                     கோடி
எழுப் படை அநந்த கோடி இடை இடை இடிபோல்                                     உய்த்தான்.
232
   
7520.
கூற்று உயிர் குடிக்கும் துப்பில் கொடும் படை மாரி                                    தன்னை
ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றை                                    எல்லாம்
காற்று எனப் பகழி தூண்டி முறை முறை கடிதில் சிந்தி
மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும்.
233
   
7521.
இத்திறம் திரிந்த செவ்வேள் இடை தெரிந்து ஏழோடு
                                    ஏழு
பொத்திரம் தன்னைத் தூண்டிப் புகழ் உறும் அவுணர்                                     செம்மல்
சித்திரத் தேரும் மாவின் தொகுதியும் சிந்தி நீக்கக்
கைத்தனு வோடும் தீயோன் கதும் எனப் புவிக்கண்                                     உற்றான்.
234
   
7522.
நாண் உடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்
ஏண் உடை வயிரவாளி எண்ணில தூண்டி ஏற்பத்
தாணுவின் மதலை கண்டு தன் பெரும் சிலையைக்                            கோட்டித்
தூணி கொள் கணையின் மாரி தொடுத்து அவை
                           துணித்து விட்டான்.
235
   
7523.
துணிப்பு உறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த                                      கோடி
தணப்பு அற விடுத்த லோடும் சண்முகன் அவற்றை                                      எல்லாம்
கணைப் பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது
                                     செம்மல்
அணிப் படு தோள் மேல் பின்னும் ஆயிரம் பகழி                                      உய்த்தான்.
236
   
7524.
ஊழியின் முதல்வன் மைந்தன் ஒர் ஆயிரம் கணையும்                                     சூரன்
பாழி அம் புயத்து மீது படுதலும் கடிதே இற்றுச்
சூழ் உறச் சிதறிற்று அம்மா தொலைவு இலா வயிரம்                                     கொண்ட
காழ் கிளர் வரை மேல் வீழ்ந்த கன்மழைத் தன்மையே                                     போல்.
237
   
7525.
அந்தம் இல் வன்மை சான்ற அவுணன் மற்று அதனை                                     நோக்கி
முந்து உறு வெகுளி தூண்ட முறுவலும் உயிர்ப்பும்                                     தோன்ற
எந்தை தன் மொய்ம்பில் செல்ல இராயிரம் பகழிவாங்கிச்
சிந்தையில் கடிது தூண்டித் தேவரும் மருள ஆர்த்தான்.
238
   
7526.
உட்டெளிவு உற்றோர் காணும் ஒப்பு இலா முதல்வன்                                    தோள்மேல்
விட்டிடு பகழி முற்றும் வெந்து வெந்து துகளது ஆகிப்
பட்டன திசைகள் முற்றும் பரந்தன பரத்தின் மேலோன்
கட்டழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கையே போல்.
239
   
7527.
ஆங்கு அது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்
நீங்கு அரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும்                                    மாற்றிப்
பாங்கு அமர் வயவர் மீதும் பாரிடப் படைகள் மீதும்
தீங்கணை அழுத்தல் உற்றான் தேவரை இடுக்கண்                                    செய்தான்.
240
   
7528.
தன் இணை தானே ஆகி நின்றிடும் தனிவேல் வீரன்
அன்னது ஓர் தன்மை கண்டோர் ஆயிரம் பகழி பூட்டித்
துன்னலன் குனித்த சாபம் துணித்தனன் துணியா முன்னம்
பின்னும் ஓர் சிலையை ஏந்திப் பெரு முகில் இரிய                                     ஆர்த்தான்.
241
   
7529.
இம்பரின் மலைந்த சூரன் இம் என வருக் கொண்டு ஏகி
அம்பரத்து இடையே தோன்ற அன்னது குமரன் காணா
உம்பரில் சென்று தாக்க ஓர் இறை எதிர்ந்து நின்று
நம்பியோடு ஆடல் செய்வான் நவிலரும் மாயை சூழ்வான்.
242
   
7530.
விண் இடை நின்ற சூரன் விரைந்து உடன் கரந்து
                                   சென்று
மண் இடை மீட்டும் செல்ல மாநில வரைப்பில்
                                   செவ்வேள்
துண் என வந்து வெம்போர் தொடங்கலும் தோற்றம்                                    ஆற்றிக்
கண் அகல் தூய நீத்தக் கனை கடல் நடுவண் ஆனான்.
243
   
7531.
ஆயிடை முருகவேள் சென்று அடு சமர் இயற்றும்
                                  எல்லை
மாயையின் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற
ஏய் என ஆண்டும் செவ்வேள் ஏகியே நெடும்போர்                                   ஆற்றக்
காய் கனல் உமிழும் வேலான் கரந்து பாதலத்தின்                                   நின்றான்.
244
   
7532.
ஆறு இரு தடம் தோள் வள்ளல் அது கண்டு பிலத்துள்                                    ஏகி
மாறு அமர் இயற்றும் எல்லை வல்லை தன் உருவ
                                   மாற்றி
வீறு உள சிமையச் செம் பொன் மேருவின் குவட்டின்                                    நிற்ப
ஏறு உடை முதல்வன் மைந்தன் இம் என அங்கண்                                    சென்றான்.
245
   
7533.
மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்
பேர் அமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி
நாரணன் உலகில் தோன்ற நம்பியும் தொடர்ந்து போந்து
சூர் எனும் அவுணனோடு தொல் சமர் ஆற்றி நின்றான்.
246
   
7534.
ஆற்றிடு கின்ற காலத்து அவுணர் கோன் அண்ட கோள
மேல் திகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி
ஏற்று எதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரைக்
கூற்று உறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றம்                                  கொண்டான்.
247
   
7535.
கந்துக விசய மான் தேர் இற்றலும் கடும் கோன் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எறுழ் மணித் தடந்தேர் தன்னைச்
சிந்தனை செய்தலோடும் சேண்கிளர் செலவிற்று ஆகி
வந்திட அதன் மேல் ஏறி வல்லை போர் புரிதல் உற்றான்.
248
   
7536.
மண்டு அமர் புரியும் எல்லை வள்ளல் தன் பகழி                                     தன்னால்
அண்டம் அது அடைந்த வாயில் அடைத்ததும் அப்பால்                                     உள்ள
தண்டம் அது எல்லாம் செல்லாத் தன்மையும் தகுவர்                                     கோமான்
கண்டனன் நன்று நன்று என் இறைத்தொழில் காவல்                                     என்றான்.
249
   
7537.
இறைத் தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை                                       வாங்கித்
திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரம் தூண்டி அண்ட
நெறிப்படு வாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும்
அறுத்து நுண் தூளி ஆக்கி அம்பரம் சுழல விட்டான்.
250
   
7538.
காவலன் அண்ட வாயில் கணைகளின் கபாடம் நீக்கி
மாவொடு களிறும் தேரும் வயவரும் வரம்பு இன்று ஆகி
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்
கூவினன் வருக என்று குவவுத் தோள் கொட்டி                                 ஆர்த்தான்.
251
   
7539.
ஆர்த்திடுகின்ற காலத் தண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த் தொகை களிற்றின் ஈட்டம் திறல் கெழும்
                            இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வெள்ளம் துண் என ஈண்டை ஏகிப்
போர்த் தொழில் முயன்று செவ்வேள் புடையுறத்                             தெழித்துச் சூழ்ந்த.
252
   
7540.
நீணுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை
ஏண் ஒடும் அண்டத்து அப்பால் இருந்திடு தானைச் சுற்றச்
சேண் உறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாம் தேவர்
காணுதலோடும் உள்ளம் கலங்கி மற்று இனைய சொல்வார்.
253
   
7541.
காலமோடு உலகம் உண்ணக் கனன்று எழு கரிய
                                    தீயின்
கோலமோ அண்டத்து அப்பால் குரைபுனல் நீத்தம்                                     தானோ
ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிரம் கோடி சூழ்ந்த
சாலமோ யாதோ என்று தலை பனித்து இரியல் போனார்.
254
   
7542.
ஆயின காலை தன்னில் அண்டங்கள் தோறும் நின்ற
மாயிரும் தகுவன் தானை வந்து தன் மருங்கு சுற்றிப்
பாய் புனல் முகில் கான்று என்னப் படைத் தொகை வீசி                                      ஆர்ப்பத்
தீ உரு ஆன செம்மல் சிறிது தன் நாட்டம் வைத்தான்.
255
   
7543.
அடலையின் நலத்தை வீட்டி அரும் பெறல் ஆக்கம்
                             சிந்தி
அடலையின் உணர்வு இன்றhாகும் அவுணர் கோன்                              தானை முற்றும்
அடலையின் நெடுவேல் அண்ணல் அழல் எழ விழித்த                              லோடும்
அடலையின் உருவாய் அண்டத் தொல் உரு அழிந்த                              மன்னோ.
256
   
7544.
முற்படும் அனிக முற்றும் முடிதலும் முடிதல் இன்றி
எற்படும் அண்டத்து அப்பால் ஈண்டிய பதாகினிக்கு உள்
பிற் பட அளப்பில் சேனை பெயர்ந்து மற்று ஈண்டை                                     துன்னிச்
சிற்பரன் குமரன் தன்பால் படை முறை சிதறிச் சூழ்ந்த.
257
   
7545.
பரப்பொடு மிடைந்த தானைப் பரவையை நோக்கி ஐயன்
நெருப்பு உமிழ் தன்மைத்து என்ன நெட்டு உயிர்ப்பு                               அனிலம் உந்தி
உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூளைப்
பொருப்பு இடை அழல் புக்கு என்னப் பூழியாய் உலகம்                               போர்த்த.
258
   
7546.
மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத்                                 தொல்லை
மாட்சியின் உயிரே தாங்கி மலைதும் என்று உன்னிப்                                 பின்னும்
சூட்சியின் வளைந்தவா போல் சோதி வேல் குமரன் தன்                                 பால்
சூட்சியின் மேவிற்று அம்மா தூய நுண் துகளின் ஈட்டம்.
259
   
7547.
அந்தம் இல் தானை முற்றும் அத்தன் ஓர் உங்காரத்தால்
வெந்துகள் ஆகப் பின்னும் மேலை அண்டத்துள் நின்ற
தந்தியும் பரியும் தேரும் தானவப் படையும் ஆர்த்து
வந்து வந்து அயலில் சூழ வரம்பு இலா முதல்வன்                                  கண்டான்.
260
   
7548.
திருத்தமிழ் மதுரை தன்னில் சிவன் பொருள் நிறுக்கும்                                      ஆற்றால்
உருத்திர சருமனாகி உற்றிடு நிமலன் வெம்போர்
உருத்தி கொள் கணிச்சி சூலம் ஆழி தண்டு எழுவத்து                                      ஆகும்
கரத்தினில் படைகள் தம்மை நோக்கியே கழறல் உற்றான்.
261
   
7549.
வென்றி அம் படைகாள் கேண்மோ விரைந்து உடன்                               தழுவி நம்பால்
சென்றிடும் அனிகம் தன்னைச் சென்னெறிபெறாமல்                               அப்பால்
நின்றிடு படையை எல்லாம் நீவிர் பல் உருக் கொண்டு                               ஏகிக்
கொன்று இவண் வருதிர் என்று கூறி மற்று இவற்றைத்                               தொட்டான்.
262
   
7550.
ஆதி நாயகன் விட்டுள்ள படை எலாம் அநந்தகோடி
சோதியார் கதிரும் தீயும் பணிகளும் போலத் தோன்றி
ஏதிலான் அனிகம் ஆகி இம்பர் உற்றன இமைப்பின்
பாதியின் முன்னம் அட்டுப் பெருவறல் படைத்த மன்னோ.
263
   
7551.
தூயது ஓர் குமரன் சூழ்ந்த படையை முன் தொலைத்து                                    வீட்டி
ஏயின படை ஓர் ஐந்தும் இம்பரே ஒழிய நின்ற
ஆயிரத்து ஓர் ஏழ் அண்டத்து அகலமும் சென்று                                    சென்றாங்
கோய்வற எழுந்த தானை முழுது மட்டு உலவுகின்ற.
264
   
7552.
ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற
வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரிதலோடும்
தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த்து மற்று இதனை                                      நோக்கி
இவ்வொரு கணத்தின் முன்னம் இவன் உயிர் உண்பன்                                      என்றான்.
265
   
7553.
சாற்றி இத் தன்மை தன்னைத் தானவர்க்கு அரசன்                                    முன்னம்
கூற்று உயிர் குடித்த நோன் தாள் பண்ணவன் கொடுப்பக்                                    கொண்ட
மாற்றரும் திகிரி தன்னை வாங்கின்ன வழிபட்டு ஏத்திக்
காற்றினுங் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான்.
266
   
7554.
விட்டிடு திகிரி யாரும் வெருக்கொள விரைந்து சென்று
கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்தது ஓர் பாணி நீட்டி
வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற
ஒட்டலன் அதனை நோக்கி உளம் தளர்ந்து உயிர்த்து                                     நின்றான்.
267
   
7555.
உண்ணிலா மாயை வல்ல ஒருதனி தேர் மேல் நின்றோன்
எண் இலா உருவம் கொண்டே இருங்கணை மாரி                                       தூர்ப்பத்
தெண்ணிலா மௌலி அண்ணல் உதவிய செம்மல் நோக்கி
நண்ணலான் ஒருவன் மாய நன்று நன்று என்று நக்கான்.
268
   
7556.
சிறு நகை செய்து மேலாம் சேதனப் பகழி பூட்டி
அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடும் மாய முற்றும்
இறைதனில் முடித்தி என்றே ஏவலும் விரைவின் ஏகி
முறை நெறி பிழைத்தோன் மாயம் முற்று ஒருங்கு                              அட்டதன்றே.
269
   
7557.
மாயையின் உருவம் நீங்க வலி அழிந்து உள்ளம் மாழ்கித்
தீயவன் ஒருவன் ஆகிச் சேண் உயர் தேரின் நின்றான்
ஆயது தெரிந்து வானோ அறுமுகத்து அவனைப்                                 போற்றிப்
பாய் புனல் கடலின் ஆர்த்துப் பனிமலர் மாரி தூர்த்தார்.
270
   
7558.
தூர்த்தலும் தேரும் தானும் துண் எனக் கரந்து சூரன்
பேர்த்திடும் அண்ட கூடப் பித்திகை வாயில் எய்தி
ஆர்த்து அறை கூவிப் புக்கு ஆங்கு அப்புறத்து
                              அண்டம் செல்ல
தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந்து                               போனான்.
271
   
7559.
தொடர்ந்து தன் மனத்தில் செல்லும் தொல்லை மால்                               இரதத்தோடும்
கடந்த பேர் ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோடு இகல்
                              போர் ஆற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத்து அண்டம்
                              போனான்.
272
   
7560.
இந்நிலை அவுணர் கோமான் இருநிலத்து அண்டம்                                   முற்றும்
மின் எனப் படர்ந்து தோன்றி வெய்ய போர் விளைத்து                                   நின்று
பின்னரும் கரந்து செல்லப் பிரானும் அவ் வண்டம்                                   தோறும்
துன்னலன் தனை விடாது தொடர்ந்து அமர் இயற்றிப்                                   போனான்.
273
   
7561.
ஆய காலை அயன் முதல் தேவர்கள்
நேயம் மிக்க குரவரை நீங்கிய
சேயினோர்களில் தேம்பித் திருமகள்
நாயகன் தனை நோக்கி நவிலுவார்.
274
   
7562.
வலங்கை வாளுடை மாயை தன் மாமகன்
பொலன் கொள் அண்டப் புரைதனுட் போயினான்
இலங்கு வேல் படை எந்தை தன் போரிடை
விலங்கினான் அலன் என்றும் விளிகிலான்.
275
   
7563.
மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டு ஒரீஇப்
போய தன்மை புணர்ச்சியதே அலால்
ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்
தூயன் மற்றது சுழ்ந்திலன் போலும் ஆல்.
276
   
7564.
வாடினான் என மாற்றலனை தொடர்ந்து
ஓடினான் எந்தை ஒல்லையில் சூரனைக்
கூடினான் கொல் குறுகலன் ஆகியே
நாடினான் கொல் அறிகிலம் நாம் எலாம்.
277
   
7565.
மாக மேல் நிமிர் மற்றை அண்டத்தினும்
சேகு உலாவிய சிந்தையன் தன்னுடன்
ஏகினான் ஐயன் என் இனித் தான் விளை
வாகுமோ என்றும் அஞ்சுதும் ஏழையேம்.
278
   
7566.
என்ற காலையில் அங்கு எழில் பூவை போல்
நின்ற மாயவன் நீள் மலரோன் முதல்
துன்றும் வானவர் சூழலை நோக்கியே
ஒன்றும் அன்பொடு உளப் பட ஓதுவான்.
279
   
7567.
வஞ்சமே தகும் அவுணர் கோன் ஆற்றலை மதித்து
                                    ஈண்டு
அஞ்சி அஞ்சியே இரங்கலீர் அறுமுகத்து ஒருவன்
செஞ்சிலைத் தனி வன்மையும் வீரமும் தெரிந்து
நெஞ்சகத்து இடை ஐயுறு கின்றது நெறியோ.
280
   
7568.
ஓதி ஆகியும் உணர்ந்தவர்க்கு உணரவும் ஒண்ணா
நீதி ஆகியும் நிமல மது ஆகியே நிகழும்
சோதி ஆகியும் தொழுதிடும் எம்மனோர்க்கு எல்லாம்
ஆதி ஆகியும் நின்றவன் அறுமுகன் அன்றோ.
281
   
7569.
ஈறு இலா தமர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறு மாமுகம் கொண்டு உதித்தான் என்பது அல்லால்
வேறு செப்புதற்கு இயையுமோ மேலவன் தன்மை
தேறியும் தெளிகின்றில உமது சிந்தையுமே.
282
   
7570.
ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்யன் ஏகினும் தொடர்ந்து போய் வெஞ்சமர் இயற்றிச்
செய்ய வேலவன் துரந்து வந்திடுந் தினைத் துணையில்
கையின் நெல்லி போல் காட்டுவன் நீவிரும் காண்டீர்.
283
   
7571.
என்று மாயவன் கழறலும் அயன் முதல் எவரும்
நன்று எனத் தெளி உற்றனர் அவ்வழி நண்ணான்
ஒன்றின் ஆயிர கோடி அண்டத்தினும் ஓடி
நின்று நின்று அமர் ஆடினன் எந்தையை நேர்ந்து.
284
   
7572.
வெந்திறல் சமர் ஆற்றியே அவுணர் கோன் மீட்டும்
இந்த அண்டத்து மகேந்திர வரைப்பில் வந்து இறுத்தான்
முந்து நீழலை விடாது செல்வோர் என முனிந்து
கந்தனும் தொடர்ந்து அவனொடு போந்தனன் கடிது.
285
   
7573.
போந்திடு தன்மை நோக்கிப் புராரி தன் புதல்வன்
                             நங்கள்
ஏந்தலைத் தொடர்ந்தான் என்னா இம்பரில் அவுணர்                              தானை
தீந் தழல் என்னப் பொங்கிச் செங்கையில் படைகள் வீசி
ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதி தன் புடை
                             சூழ்ந்து ஆர்த்தார்.
286
   
7574.
நாதனும் அதனை நோக்கி நன்று இவர் முயற்சி என்னா
ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொல் நாள்
மூது எயில் என்ன நீறாய் வெந்து உடன் முடிந்தது அம்மா
தாதை தன் செய்கை மைந்தன் செய்வது தக்கது அன்றோ.
287
   
7575.
ஆனது ஓர் காலை தன்னில் அறுமுகம் படைத்த                                      அண்ணல்
தூ நகை அங்கி செல்லத் துண் எனப் பதைத்து வீழ்ந்து
தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி
வானவர் மகிழ்ந்து பூத்தூய் வள்ளலை வழுத்தி நின்றார்.
288
   
7576.
முருகு அவிழ் தொடையலான் தன் முறுவலான் அனிக                                       முற்றும்
விரைவின் நுண் துகள் அது ஆகி வீழ்தலும் அவுணர்                                       வேந்தன்
ஒருவனும் தமியன் நின்றான் ஒண் தமிழ் முனிவன்                                       உண்ணத்
திரை கடல் இன்றித் தோன்றும் தீப்பெருங் கடவுள்                                       ஒத்தான்.
289
   
7577.
முன் படை குமரன் அங்கண் முறுவலித்து இட்டவாறும்
தன் படை அழிந்த வாறும் தமியன் தான் நின்றவாறும்
கொன்படை வீரரோடு குறட்படை ஆர்க்கு மாறும்
துன் படை அவுணன் கண்டு ஆங்கு உளத்தொடும்                            செல்லல் உற்றான்.
290
   
7578.
பின்னுறு துணைவர் மைந்தர் பேர் இயல் அமைச்சர்                                   ஏனோர்
முன் உற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்
பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமியன் ஆனேன்
என் இவண் செய்வது என்னா உயிர்த்தனன் எண்ண                                   மிக்கான்.
291
   
7579.
மாயவன் தன்னை மன்னன் மனத்து இடை                               நினைத்தலோடும்
ஆயவள் வந்து தோன்றி அரும் பெறல் ஆற்றல் மைந்த
நீ ஒரு தமியன் ஆகி நின்று உளம் தளர்ந்தே என்னைக்
கூயினை முன்னின்று என்னை தெரிவுறக் கூறுக என்றாள்.
292
   
7580.
அறிந்திடு மாயை இவ்வாறு அறைதலும் குமரன் போரின்
மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்
இறந்திட எஞ்சினேன் யான் இனியாவரும் எழுதற்கு ஒத்த
திறந்தனை அருண்மோ என்ன நகைத்து அவள் செப்பல்                                        உற்றாள்.
293
   
7581.
உறு படை சுற்றம் துஞ்ச ஒருவனே யாயும் விண்ணோர்
சிறை விடுத்து உய்யு மாறு சிந்தனை செய்திலாய் நீ
அறுமுகன் தன்னோடு இன்னும் அமர் செயக் குறித்தி                                      யாயின்
நிறை பெரும் செல்வ வாழ்க்கை நீங்கினை போலும்                                      அன்றே.
294
   
7582.
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பாலன்
                                   என்றே
உன்னலை அவன் கை வேலால் ஒல்லையில் படுதி                                    கண்டாய்
இன் உயிர் துறக்க நின்றாய் என் மொழி கேட்பாய்                                    அன்றே
சென்னியில் விதியை யாவர் ஆயினும் தீர்ந்தார்
                                   உண்டோ.
295
   
7583.
நின்றிட அனைய தன்மை நின் உளம் மகிழும் ஆற்றால்
பொன்றினர் எழுதல் வேண்டில் புறக் கடற்கு ஒரு சார்                                      ஆக
மன்றல் கொள் அமுத சீத மந்தர கூடம் என்று ஓர்
குன்று உளது அதனை ஈண்டே கொணருதி கூடும்                                      என்றாள்.
296
   
7584.
இவ்வகை உரைத்து மாயை ஏகினள் ஏக லோடும்
மைவரை யென்ன நின்ற மன்னவர் மன்னன் கேளா
அவ்வை தன் சூழ்ச்சி நன்றால் அடுகளத்து அவிந்தோர்                                     யாரும்
உய்வகை இதுவே என்னா உன்னினன் உவகை மிக்கான்.
297
   
7585.
ஆவகை உவகை கொள்ளா அமுத மந்தரம் கொண்டு
                                     ஏக
ஏவரை விடுத்தும் என்றே இறைப் பொழுது அவுணர்                                      தங்கள்
காவலன் முன்னி மாயக் கடுமுரண் தேரின் நீங்கித்
தேவியல் அரிமான் ஏற்றுத் திறல் உடை எருத்தம்                                      புக்கான்.
298
   
7586.
இந்திர ஞாலம் தன்னை இறையவன் விளித்து நீ என்
புந்தியின் விரைந்து சென்று புறக் கடல் மருங்கின் மேவி
அந்தம் அது அடைந்தோர்க்கு ஆவி அளித்திடும்                            அமுதம் கொண்ட
மந்தர கிரியைக் கீண்டு மற்று இவண் கொணர்தி
                           என்றான்.
299
   
7587.
விழுமிய மாய மான் தேர் வினவி ஓர் கணத்தின்
                                முன்னம்
எழு கடலினுக்கும் அப்பால் இருந்திடு கடலின் சார்
                                போய்
அழி உறாது அங்கண் நின்ற அமுத மந்தரத்தைக்                                 கொண்டு
வழி படர் கதியின் மீண்டு மகேந்திரம் புக்கது அன்றே.
300
   
7588.
அக்காலையில் இரதந்தரும் அமுதத் தனி வரையின்
மெய்க்கால் வர அந்நாள் வரை வெம் பூசல் இயற்றி
மைக் காலன் மெய் உயிர் உண்டிட மறியும் படை
                                  முழுதும்
தொக்காலமது எழுந்தால் எனத் துண் என்று
                                  எழுந்தனவே.
301
   
7589.
பரியின் தொகை முழுது உய்ந்தன பனை போலிய                                   நெடுங்கைக்
கரியின் தொகை முழுது உய்ந்தன கடுந்தேர்த் தொகை                                   ஈர்க்கும்
அரியின் தொகை முழுது உய்ந்தன அவுணப் படை ஆகி
விரியும் தொகை முழுது உய்ந்தன மெய் ஊறது நீங்கி.
302
   
7590.
வடிவற்று உடல் அழிந்து இட்டிடும் உயிரானவும் மருமம்
அடிகைத்தலம் முடி தோள் முதல் அங்கங்கள் குறைந்தே
முடிவு உற்றிடும் உயிரானவும் முளரிக் கனல் உண்ணப்
பொடி பட்டிடும் உயிரானவும் எழுந்திட்டன புவிமேல்.
303
   
7591.
மிண்டிக் கடிது உயிர் பெற்று எழு வெஞ்சூர் முதல்                                      அனிகம்
எண்டிக் கொடு புவி பாதலம் இரு நால் கடல் எங்கும்
மண்டிக் ககனத்து ஏழ் வகை உலகங்களும் மல்கி
அண்டத்தனி முடிகாறும் அடைந்திட்டன மிடைந்தே.
304
   
7592.
மாதண்டம் எழுத் தோமரம் வயிரப் படை வாள் கோல்
கோதண்டம் முதல் பல் படை கொடு தானவர் அனிகம்
வேதண்டம் எனச் சேண் உயர் வேழம் பரி நிரைகள்
மூதண்டம் வெடிக்கும் படி முழங்கு உற்றன அன்றே.
305
   
7593.
எழுந்தான் வயப் புலி மா முகன் இரவிப் பகை
                                  எழுந்தான்
எழுந்தான் எரி முக வெய்யவன் இளமைந்தனும்
                                  எழுந்தான்
எழுந்தான் அறத்தினைக் காய்பவன் இருபாலாரும்                                   எழுந்தார்
எழுந்தார் ஒரு மூவாயிரர் ஏனோர்களும் எழுந்தார்.
306
   
7594.
சூர்க்கின்ற தொல் வடிவம் கொடு துண் என்று                                   எழுகின்றோர்
பார்க்கின்றனர் அனிகங்களைப் பகுவாய் திறந்து                                   இடிபோல்
ஆர்க்கின்றனர் தமது ஆடலை அறைகின்றனர் நம்மேல்
போர்க்கு இன்று வந்தனர் யார் எனப் புகல் கின்றனர்                                   இகலால்.
307
   
7595.
ஈடுற்றிடு சமர் எல்லையில் இடை உற்றிடு படைகள்
நாடு உற்று இவண் எடுத்திட்டனர் நறை உற்றிடு தும்பை
சூடுற்றிடு மணி மாமுடிச் சூரன் புடை தன்னில்
கூடு உற்றனர் வெம் போர் செயும் குறிப்பு உற்றனர்                                    அன்றே.
308
   
7596.
உய்ந்து இவர் யாவரும் ஒல்லை எழுந்தே
அந்தம் இல் சேனையோடு ஆர்த்திடு காலை
இந்திர ஞாலம் எனப்படு மான்தேர்
வந்தது தானவர் மன்னவன் முன்னம்.
309
   
7597.
பொற்றையினோடு பொலன் கெழு மான்தேர்
உற்றதும் அன்பினர் உய்ந்து எழு மாறும்
இற்ற பதாதி இரைத்து எழுமாறும்
தெற்றென மாயவள் செம்மல் தெரிந்தான்.
310
   
7598.
மகிழ்ந்தனன் ஆர்த்தனன் வானவர் தம்மை
இகழ்ந்தனன் விம்மிதம் எய்தினன் யாயைப்
புகழ்ந்தனன் மேனி பொடித்தனன் நெஞ்சம்
திகழ்ந்தனன் நன்கை செய்தனன் அன்றே.
311
   
7599.
உந்தி நிரப்பு உறும் உண்டிய நின்றி
முந்தி நிரப்பிடை மூழ்கினன் வல்லே
வெந்திறல் ஆளி வியன்று அவி சேறி
இந்திர நல்வளம் எய்தியது ஒத்தான்.
312
   
7600.
ஓங்கிய சென்னி உயர்ந்தன மொய்ம்பு
வீங்கிய தால் உடன் மிக்கு மதர்ப்புத்
தேங்கிய சிந்தை சிலிர்த்த உரோமம்
ஆங்கு அவன் எய்திய தார் அறைகிற்பர்.
313
   
7601.
வஞ்சன் இதந்திடு மைந்தன் இவ் வாற்றால்
நெஞ்சம் மகிழ்ந்து அவண் நின்றிடு காலை
நஞ்சம் எழுந்திடு நாள் கொல் இது என்றே
அஞ்சி நடுங்கினர் அண்டர்கள் எல்லாம்.
314
   
7602.
பொன் நகர் வாழ்க்கை புவித் திசை வாழ்க்கை
பின் உறு கின்ற பெரும் பத வாழ்க்கை
எந் நகர் வாழ்க்கையும் எய்திய இன்னே
ஒன்னலர் கொல்லும் முன் ஓடுதும் என்றார்.
315
   
7603.
ஊர்ந்திடும் ஊர்திகள் ஓர் புடை தம்பால்
சார்ந்தவர் ஓர் புடை தாம் ஒரு பாலாய்ச்
சேர்ந்திடு கைப்படை சிந்தி விண் ணோர்கள்
பேர்ந்து இரிகின்றனர் பின்னது நோக்கார்.
316
   
7604.
கிள்ளை புறா மயில் கேழ் கிளர் அன்னம்
பிள்ளை மணிக் குயில் பேர் இசை ஆந்தை
கள் உணும் வண்டு கரண்டம் அது ஆதிப்
புள் உருவம் கொடு வானவர் போனார்.
317
   
7605.
அங்கு அது நோக்கி அடல் கண வீரர்
மங்கிய தானையும் மாண்டுளர் யாரும்
இங்கு எழுகின்றனர் யாம் இவண் வீந்தாம்
சங்கையில் என்று தளர்ந்து அலை உற்றார்.
318
   
7606.
இலக்கரும் எண்மரும் ஏந்தலும் நோக்கி
அலக்கணும் அச்சமும் அற்புத நீரும்
கலக்கமும் வெய்ய கடுஞ் சினமும் கொண்டு
உலைக்கனல் அன்ன உயிர்ப்பொடு நின்றார்.
319
   
7607.
வென்றி கொண்ட வேல் குமரன் இவ் விளைவு எலாம்                                     நோக்கி
நின்ற ஒன்னலன் சூழ்ச்சியும் வலவை சொல் நெறியும்
குன்றின் வன்மையும் உய்ந்து எழு பரிசனர் குழுவும்
நன்று நன்று எனக் கை எறிந்து அழல் எழ நகைத்தான்.
320
   
7608.
ஆன காலையில் அரி முகன் அலரி தன் பகைஞன்
ஏனை மைந்தர்கள் அறத்தினை வெகுண்டிடும் ஏந்தல்
சேனை காவலர் யாவரும் சூரன் முன் சென்று
மான வீரமோடு இறைஞ்சி நின்று இனையன வகுப்பார்.
321
   
7609.
எந்தை நீ இவண் நிற்குதி யாம் எலாம் ஏகிக்
கந்த வேளுடன் அவன் படை வீரரைக் கடிந்து
சிந்தர் ஆகிய பூதர் தம் தொகையையும் செகுத்து
வந்து நின்னடி வணங்குதும் வல் விரைந்து என்றார்.
322
   
7610.
கொற்ற வீரர்கள் இவ்வகை உரைத்தலும் கொடியோன்
மற்று இவ் வாசகம் நன்று எனைப் போற்றுவான் வந்தீர்
பற்று அலன் பெரு வன்மையும் வீரமும் படுத்து
வெற்றி இன்று எனக்கு அருளுதிரால் என விடுத்தான்.
323
   
7611.
விடுத்த காலையில் விடாது சூழ் அனிகங்கள் விரவி
அடுத்து வந்திடப் பொள் என ஏகியே ஆர்த்துப்
பிடித்த பல்வகைப் படைகளும் உரும் எனப் பெய்து
வடித்த வேல் படை நம்பியை அன்னவர் வளைத்தார்.
324
   
7612.
தீங் கனல் பெரும் கடவுள் பால் செறி இருள் தொகை                                       போல்
வாங்கு வில் கரத்து ஐயனை அவுணர்கள் வளைப்ப
ஏங்கல் உற்றனர் பாரிடர் ஏனையோர் எம்மால்
தாங்குதற்கு அரிது இப் பெரும் படை எனத் தளர்ந்தார்.
325
   
7613.
விறல் உடைப் பல் தானையும் வெய்யவர் தொகையும்
நெறில் உடைக் கதிகொண்டு சூழ் உற்றது நோக்கி
அறுமுகத் தனிப் பண்ணவன் உயிர்த் தொகை
                                 அனைத்தும்
இறுதியைப் புரி கடவுள் மாப் படையினை எடுத்தான்.
326
   
7614.
அங் கையில் கொடு சிந்தையால் வழிபடல் ஆற்றிச்
சிங்க மா முகன் ஆதியாம் அவுணர் தம் திறத்தைச்
சங்கை இன்றியே நின்றிடு தானைகள் தம்மை
இங்கு வல்லையில் அடுதியால் என விடுத்து இட்டான்.
327
   
7615.
விடுத்த காலையில் கட்செவி நிரைகளும் விடமும்
இடிக் குழாங்களும் உருத்திரர் உருக்களும் எரியும்
கடல் பெரும் கணத் தொகுதியும் அளவு இலாக் கடவுள்
படைக் கலங்களுமாய் விரிந்தது சிவன் படையே.
328
   
7616.
இன்ன தன்மையால் அரன் படை மூதண்டம் எங்கும்
துன்னி ஆர்த்து எழீஇத் துண் எனச் சென்று சூழ் உற்று
முன்னர் உய்ந்து எழும் அவுணர் தம் படை எலாம்                                       முருக்கி
ஒன்னலன் தமர் யாரையும் ஒருங்கு கொன்றதுவே.
329
   
7617.
முந்து வெய்ய சூர்ப் பரிசனத் தொகை எலாம் முருக்கி
இந்திரப் பெரு ஞாலமாம் தேர் மிசை இருந்த
மந்தரப் பெரும் கிரியினைத் துகள் எழ மாய்த்துக்
கந்தவேள் படை மீண்டது சிவன் படைக்கலமே.
330
   
7618.
அரி முகத்தவன் ஆதவன் தனை முனம் அழன்றோன்
எரி முகத்தவன் வச்சிர மொய்ம்பன் நூற்று இருவர்
முரண் மிகுத்த மூவாயிரர் அறப்பகை முதலோர்
விரிகடல் படை வெற்பொடு முடிந்து அவண் வீழ்ந்தார்.
331
   
7619.
தன்மை அங்கு அவை யாவையும் கண்டனன் தளர்ந்தான்
வன்மை நீங்கினன் கவன்றனன் இரங்கி மெய் மறந்தான்
புன்மை ஆயினன் உயிர்த்தனன் செயிர்த்தனன் புலர்ந்தான்
தொன்மை போலவே தமித்தனன் துணை இலாச் சூரன்.
332
   
7620.
கண்டகன் படை முற்று ஒருங்கு இறந்தது காணா
எண் தொகைப் படு பூதரும் ஏனை வீரர்களும்
முண்டகம் தனில் இருந்திடு புங்கவன் முதலாம்
அண்டர் யாவரும் துயர் ஒரீஇ உவகை பெற்று
                               ஆர்த்தார்.
333
   
7621.
அழுந்தும் ஆர் இருள் ஒருவி விண் மிசைதனில்                               அடைவோர்
கழிந்ததோர் இடை ஊற்றினான் மீட்டும் அக் கதியில்
விழுந்ததே எனத் துன்பொடு நின்றனன் விளி உற்று
எழுந்த தானையை இழந்திடும் அவுணருக்கு இறைவன்.
334
   
7622.
அனைய தன்மையின் நின்றிடும் அவுணர் கோன்
                                  ஆற்றச்
சினம் அது எய்தி என் படை எலாம் சிதைத்த                                   பாலனையும்
தனிமை செய்து பின் வெல்வன் என்று உளங்கொடு                                   தழல்கண்
முனைவன் நல்கிய தேரினை நோக்கியே மொழிவான்.
335
   
7623.
கொச்சகத்து இயல் குதலைவாய் மதலை பால் குழீஇய
வச்சிரத்து எயிறு உடை வெம் பூதரை வயின் சூழ்
கைச் சிலைத் திறல் வீரரைக் கவர்ந்து போய் அண்டத்து
உச்சியில் கொடு வைத்தனைக் இருத்தி என்று உரைத்தான்.
336
   
7624.
உரைத்த காலையில் நன்று என வினவியே ஓடித்
திருத்தகும் திறல் வாகுவை முதலினோர் திறத்தைக்
கிருத்தி மப்பெரும் தானையைக் கிளையொடும் வாரிக்
கருத்தை மா மயல் செய்தது கைதவன் கடும் தேர்.
337
   
7625.
கையர் தன்மையில் கடற் படை முழுவதும் கவர்ந்து
மையல் சிந்தையில் செய்து தன் வயின் இடைத் தாங்கி
ஒய் எனச் சென்று மூதண்ட கோளகை உழிப் போய்
வெய்யவன் பணி ஆற்றி ஆண்டு இருந்தது வியன்தேர்.
338
   
7626.
நிமலன் அவ்வழித் தானை அம் பெருங்கடல் நீங்கத்
தமியன் நின்றனன் ஆங்கு அது தகுவர் கோன் காணா
நமது தேர் வலி நன்று என உவகையால் நகைத்தான்
அமரர் அச்செயல் நோக்கியே பின்னரும் அயர்ந்தார்.
339
   
7627.
சூர் இடத்து உறு சூழ்ச்சியும் துணைவர்கள் தம்மைப்
பார் இடத்தொடு முகந்தெழீஇ மாயையில் படர்ந்த
தேர் இடத்து இயல் வன்மையும் ஆங்ஙனம் தெரிந்தான்
நேர் இடப் பிறர் இன்றியே தமியனாம் நெடியோன்.
340
   
7628.
கண்டு சீறியோர் கார் முகம் வாங்கியே கடிதோர்
திண் திறல் கணை பூட்டி நம் சேனையைப் பற்றி
அண்ட கோளகை புக்குறும் அடுமுரண் தேரைக்
கொண்டு வல்லையின் வருக என விடுத்தனன் குமரன்.
341
   
7629.
விடுந் தனிக் கணை வேல் எனச் சென்று வில் வீசி
இடம் திகழ்ந்திடும் ஏழ் வகை உலகமும் இமைப்பில்
கடந்து மற்று உள பதங்களும் நீங்கி ஓர் கணத்தில்
தொடர்ந்து மூதண்ட கோளகை புகுந்தது துன்னி.
342
   
7630.
துன்னி வெஞ்சரம் மாய மான் தேர் வலி தொலைச்சி
அன்னதைக் கொணர்ந்து ஒல்லையின் மீண்டு உளது                                      அம்மா
மின் உலாய் நிமிர் எழிலியை விண்ணினும் பற்றி
இந் நிலத்தினில் கொடுவரும் மாருதத்து இயல் போல்.
343
   
7631.
வெந்திறல் நெடுங்கணை மீண்டு ஞாலமேல்
இந்திர ஞாலமாம் இரதத்தை கொடு
கொந்து அவிழ் மாலை வேல் குமரன் தன் முனம்
வந்தது வானவர் வழுத்தி ஆர்ப்பவே.
344
   
7632.
முப்புரம் முடித்தவன் முருகன் தன் கணை
இப்புவி வருதலும் இலக்கத்து எண் மரும்
ஒப்பரும் இளவலும் ஒல்லென் பூதரும்
குப்புறல் உற்றனர் கொடியன் தேரினும்.
345
   
7633.
குதித்தனர் புடவியில் குமர வேள் இரு
பதத்து திருமலர் தனைப் பணிந்து பன்முறை
துதித்தனர் புடையராய்த் துன்னி நின்றனர்
கதித்திடு பேர் அருள் கடலின் மூழ்கியே.
346
   
7634.
ஆவது ஓர் காலையில் அகிலம் யாவும் ஆம்
மூவிரு முகன் உடை முக்கணன் மகன்
வாவியல் வனப்பு உடை மாயத் தேர் தெரீஇத்
தேவர்கள் பரசுற இனைய செப்புவான்.
347
   
7635.
தொல்லை இல் வரம் பெறு சூரன் தன் புடை
செல்லலை ஆங்கு அவன் முடிகை திண்ணம் ஆல்
மல்லல் அம் திரு உடை மாயத் தேரை நீ
நில் இவண் என்றனன் நிகரில் ஆணையான்.
348
   
7636.
ஆண்டு அது வினவுறா அவுணர் கோன்புடை
மீண்டிடல் அஞ்சியே மேலை வன்மை போய்
மாண்டிடல் பிறப்பு இலான் மதலை மாடு உறப்
பாண்டில் அம் தேரது பணியின் நின்றதே.
349
   
7637.
அண்டம் அது அடைந்த தேர் ஐயன் வாளியால்
மண்டலம் இழிந்து தன் மருங்கு உறாததும்
எண்தகு பூதரும் யாரும் மீண்டதும்
கண்டனன் அவுணர் கோன் கனலில் சீறினான்.
350
   
7638.
அன்னது காண்டலும் அவுணன் ஆங்கு ஒரு
கொல் நெடும் சிலையினைக் குனித்து வல்லையில்
பன்னிரு கரம் உடைப் பண்ணவன் மிசை
மின் நிகர் பகழிகள் மீட்டும் வீசினான்.
351
   
7639.
மாசு அறு கங்கை தன் மதலை அவ்வழிக்
காய்சினம் கொண்டு ஒரு கார் முகம் வளைஇ
ஆசுக மாரி பெய்து அவுணர் கோமகன்
வீசிய கணை எலாம் விலக்கினான் அரோ.
352
   
7640.
கையனும் அத்துணை காய் சினம் கொளீஇ
ஒய் என எந்தை தேர் உய்க்கும் வன்மையோன்
மெய் இடம் எங்கணும் வெளிஉறா வகை
செய்யன பகழிகள் செறித்துப் போர் செய்தான்.
353
   
7641.
பொருந்தலன் கணைபடப் புலம்பிக் காற்றினோன்
வருந்தினன் மயங்கினன் மாக்கள் தூண்டலன்
இருந்தனன் வறிதவன் இயற்கை யாவையும்
தெரிந்தனன் குமரவேள் அருளின் செய்கையான்.
354
   
7642.
கண்டிடு முருகவேள் கணைகள் ஆயிரம்
விண் தொடர் செலவினால் விடுத்து வெய்யசூர்
கொண்டிடு சிலையினைக் குறைத்துப் பல் பெரும்
துண்டம் அது ஆக்கினான் அமரர் துள்ளவே.
355
   
7643.
கைச்சிலை முரியச் சூரன் கண்நுதல் பொருமான் தந்த
முச்சிகைப் படை ஒன்று ஏந்தி முடங்கு உளை ஊர்தி                                     தன்னை
உச்சியின் நீபஞ் சூடும் உலகு உடை ஒருவன் ஊர்ந்த
அச்சு உறு தடந்தேர் முன்னர் அணுகுறத் தூண்டிச்                                     சென்றான்.
356
   
7644.
தூண்டிய அரிமான் ஏறு சூரன் அது உளத்தில் போந்து
மாண் தகு தனது தீய வள் உகிர்க் கரத்தால் எந்தை
பாண்டிலம் தேரை ஆற்றும் பரித் தொகை பதைப்ப                                      மோதி
ஆண்டு அயல் நின்ற பூதர் அலமர ஆர்த்தது அன்றே.
357
   
7645.
அன்னது பொழுது தன்னில் அரிமிசைச் சென்ற சூரன்
தன்னுடை வலங்கை கொண்ட தனிப் பெரும் சூலம்                                      தன்னைப்
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவன் மேல் திரித்து வீச
மின் என நிலவு கான்று விண் வழிப் படர்ந்தது அன்றே.
358
   
7646.
நீடிய சூலம் செல்ல நிமிர்ந்தன எழுந்து செந்தீக்
கூடின அசனி ஈட்டம் குழீஇயின படையின் கொள்ளை
ஆடியல் கணங்கள் ஈண்டி ஆர்த்தன அதனை நோக்கி
ஓடினர் அமரர் ஆனோர் உலகு எலாம் வெருவிற்று                                     அம்மா.
359
   
7647.
அண்ணலும் அதனை நோக்கி ஆயிர கோடி வாளி
கண்ணகன் சிலையில் பூட்டிக் கதும் என எதிர் தந்து                                      உய்ப்பத்
துண் என அவற்றை எல்லாம் சூலவேல் துணித்து வீட்டி
நண்ணலன் வெகுளித் தீயின் உருவு என நடந்தது                                      அன்றே.
360
   
7648.
நடத்தலும் முகம் ஆறு உள்ளோன் ஞான நாயகன்
                               ஈந்து உள்ள
படைத்திறல் வன்மை உன்னிப் பாணி ஒன்று அதனின்                                மேவி
அடுத்திடு குலிசம் தன்னை அடையலன் உய்த்த சூலம்
பிடித்தனை வருதி என்று பேசினன் செல்லவிட்டான்.
361
   
7649.
விட்டிடுகின்ற எல்லை வியன் பெரும் குலிசம் ஏகி
நெட்டு அழல் சிகை மீக் கான்று நிமிர்ந்திடும் சூலம்                                    தன்னைக்
கிட்டுதலோடும் பற்றிக் கிளர்ந்த முத்தலையும் கவ்வி
ஒட்டலன் சிந்தை உட்க ஒய் என மீண்டது அன்றே.
362
   
7650.
முத்தலைப் படையைக் கொண்டு முரண் மிகு குலிசம்                                     செவ்வேள்
கைத்தலம் உய்த்துத் தானும் கதும் என இருந்தது அம்மா
பைத்தலை பாந்தள் போற்றும் பருவரைச் சிகரம் மூன்றும்
இத்தலப் புணரி தன்னில் இடு மருத்து இயற்கையே போல்.
363
   
7651.
ஆண்டது காலை தன்னில் அறு முகத்து ஐயன் கையில்
தூண்டிய குலிசத்தோடு சூலமும் வருதலோடும்
காண் தகும் அமரர் எல்லாம் கரதலம் உச்சிக் கூப்பி
ஈண்டு இவன் தன்னை அட்டே எமை அளித்திடுதி                                    என்றார்.
364
   
7652.
என்னலும் எந்தை கேளா இராயிரம் பகழி பூட்டி
ஒன்னலன் ஊர்ந்து செல்லும் ஒரு பெரு மடங்கல் ஏற்றின்
சென்னியில் அழுத்தலோடும் சேண் கிளர்ந்து அரற்றி                                      வீழ்ந்து
தன் உயிர் ஒல்லை வீந்து தரை இடைப் பட்டது அன்றே.
365
   
7653.
ஊர்தி அது இறந்து வீழ ஒரு தனிச் சுரன் காணாப்
பார் தனில் பாய்ந்து நின்று பராபரன் செம்மல் கையில்
கூர் தரு சூலம் போன கொள்கையும் தெரிந்து பின் நாள்
சேர் தரு வடவை என்னச் செயிர்த்து இவை சிந்தை                                      செய்வான்.
366
   
7654.
தேரொடு படையை வௌவித் திறல் உடை மடங்கல்
                                   சிந்தி
நேர் அலன் வலியனே போல் நின்றனன் அனையன்                                    தன்னைச்
சாரதர் தொகையை ஏனைத் தலைவர்கள் தம்மை
                                   எல்லாம்
ஓர் உருக் கொண்டு யானே விழுங்குவன் ஒல்லை                                    என்றான்.
367
   
7655.
என்று இவை மனத்தில் உன்னி இணை அறு மாயை நீரால்
நின்று உள அவுணர் செம்மல் நேமியம் புள்ளே போல
ஒன்று ஒரு வடிவம் எய்தி ஒலிதிரைக் கடலின் ஆர்த்துத்
தன் துணைச் சிறகர் பெற்ற தனிப் பெரும் கிரிபோல்                                     உற்றான்.
368
   
7656.
கறை அடித் தந்தி சிந்தும் காய் சின அரிமேல் உய்க்கும்
நறை அடிக் கமலத் தையை ஞாட்பிடை ஆடற்கு ஒத்த
பறை அடித்திட்டதே போல் படி மகள் உடலம் விள்ளச்
சிறை அடிக் கொண்டு தீயோன் சேண் இடை எழுதல்                                       உற்றான்.
369
   
7657.
மண் இடை வரைப்பு முற்றும் மணிச்சிறை அதனான் மூடி
விண் இடைப் பரிதி ஒள்வாள் விலக்கியே சுழலும்                                    வேலைக்
கண் இடைப் பெரு மீன் குப்பை கவர்ந்திட ஊக்கிற்று                                    என்னத்
துண் எனப் பூதர் தானைச் சூழல் புக்கு எறியும் மாதோ.
370
   
7658.
அடித்திடும் சிறகர் தன்னால் அளவை இல் பூதர் தம்மைப்
பிடித்திடும் புலவு நாறும் பெருந்தனி மூக்கில் குத்தி
மிடற்று இடைச் செறித்து மெல்ல விழுங்கிடும் விறல்வேல்                                       அண்ணல்
கொடித்தடந் தேரைச் சூழும் கொடிய புள் வடிவக்                                       கூற்றம்.
371
   
7659.
சுற்றிடும் குமரன் தேரைத் தூண்டிய வலவன் தன்னை
எற்றிடும் கொடிஞ்சி எஞ்ச இறுத்திடும் பரிகள் தம்மைக்
குற்றிடு மூக்கில் சென்னி கொய்திடும் குழீஇய வீரர்ப்
பற்றிடும் படைகள் முற்றும் பறித்திடு முறித்து வீசும்.
372
   
7660.
இத்திறம் அவுணர் செம்மல் இருஞ் சிறைப் புள்ளது ஆகி
அத்தலைக் கறங்கி வீழ்வுற்று அந்தரம் திரிதலோடும்
முத்தியை உதவு நோன் தாள் மூவிரு முகத்தன் காணாக்
கைத்தலம் புடைத்து நக்கு நன்று இவன் கற்பிது என்றான்.
373
   
7661.
எறித்தரு சுடர் வேல் அண்ணல் இம் என வெகுண்டு                                    போரில்
நிறுத்திய மேரு என்ன நிமிர்ந்தது ஓர் வரிவில் வாங்கி
விறல் கணை அநந்த கோடி மிசை மிசைக் கடிது பூட்டித்
திறத்து இயல் புள்ளாய்ச் சூழும் அவுணன் மேல் செல்ல                                    உய்த்தான்.
374
   
7662.
நெறித் திகழ் பகழி மாரி நிமலன் விட்டிடலும் வெய்யோன்
சிறைப் புடைக் கொண்டு பாங்கில் சிந்திட அவற்றை                                     மோதிக்
குறைத்திடும் துண்டம் தன்னால் கொய்திடும் தாளில் பற்றி
முறித்திடும் கிளர்ந்து வானம் முழுவதும் சுழன்று செல்லும்.
375
   
7663.
வேலைகள் எல்லை முற்றும் படர்ந்திடும் விராவி மேவு
ஞாலம் அது அகலம் முற்றும் படர்ந்திடு நாகர் வைகும்
வாலிய உலகம் முற்றும் படர்ந்திடும் வந்து பூத
சாலமது எறிந்து கவ்வித் தலைத்தலை மயங்கிச் செல்லும்.
376
   
7664.
சூரன் மற்று இனைய ஆற்றால் சுலாய்க் கொடு                                  திரதலோடும்
பூரணன் அதனைக் காணாப் புள் எனப் பெயர்வான்                                  தன்னைத்
தேரொடும் தொடர்ந்து கோறல் பழி எனச் சிந்தை செய்து
வாரணம் உயர்த்தோன் தன்னை நோக்கினன் வானோர்                                  தம்முள்.
377
   
7665.
இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்பும் தன்மேல்
அந்தம் இல் அருள் வைத்துள்ள தன்மையும் அறிந்து                                       நோக்கிச்
சுந்தர நெடும் கண் பீலித் தோகை மா மயிலாய்த் தோன்றி
வந்தனன் குமரர் போற்றி மரகத மலை போல் நின்றான்.
378
   
7666.
நின்றிடு மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலம் கிழிய மேருக்
குன்றமும் புறம் சூழ் வெற்பும் குலைந்திட கரிகள் வீழ
வன்திரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞ்சத்
தன் துணைச் சிறகால் மோதி இனையன சாற்றல் உற்றான்.
379
   
7667.
ஐய கேள் அமரர் எல்லாம் வழிபட அளியன் தன்பால்
செய்ய பேர் அருளை வைத்தாய் ஆதலிற் சிறுமை                                    தீர்ந்தேன்
உய்யலாம் நெறியும் கண்டேன் உன்னடி பரிக்கப்                                    பெற்றேன்
பொய் உலா மாய வாழ்க்கைப் புன்மையும் அகல்வன்                                    மன்னோ.
380
   
7668.
அல்லல் செய்து எமரை எல்லாம் அருஞ்சிறைப் படுத்தி                                     வீட்டிப்
பல்வகை உலகை ஆண்ட அவுணர் கோன் பறவை                                     யாக்கை
செல் உழிச் சென்று சென்று செருவினை இழைத்து                                     வெல்வான்
ஒல்லையில் அடியேன் தன்மேல் ஏறுதி ஊர்தற்கு                                     என்றான்.
381
   
7669.
என்னலும் உளத்தில் செல்லும் இவுளி மான் தேரின்                                       நீங்கிப்
பன்னிரு நாட்டது அண்ணல் படர்கிறை மயூரம் ஆகி
முன் உறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி
ஒன்னலன் செலவு நோக்கி உம்பரில் ஊர்தல் உற்றான்.
382
   
7670.
ஆறு முகத்து எம் அண்ணல் அசனிபோல் அகவி                                     ஆர்க்கும்
மாறு இலா மயூரம் என்னும் வயப் பரிதனை நடாத்தி
ஈறு சேர் பொழுதில் சூழும் எரியினை அடுவான்  
                                    முன்னிச்
சூறை மாருதம் சென்று என்ன அவுணனைத் தொடர்ந்து                                     சூழ்ந்தான்.
383
   
7671.
ஆகிய பொழுது தன்னில் ஆழி அம் புள்ளாய்த் தோன்றி
மாகம் அது உலாவுகின்ற மாற்றலன் அதனை நோக்கிச்
சீகர அளக்கர் என்னத் தெழித்து மேல் சென்று தாக்கக்
கேகய அரசன் தானும் கிடைத்து அமர் புரிதல் உற்றான்.
384
   
7672.
நிறம் கிளர் பசலைத் துண்ட நீட்டியே யாக்கை முற்றும்
மறம் கொடு கீண்டு செந்நீர் வாய்ப்பட கவ்வி வாங்கிப்
புறம் கிளர் சிறைகள் தம்மால் புடைத்து வெங்காலில்                                      தாக்கிப்
பிறங்கு புள் உருவம் ஆனோர் இவ்வகை பெரும் போர்                                      செய்தார்.
385
   
7673.
இத்திறம் பொருத காலைப் பிணிமுகத்து ஏந்தல் தன்னைப்
பைத்தலை உடைய தூவி பறித்திடா வதனம் முற்றும்
குத்தி வெங்குருதி வீட்டிக் குரு மணிக் கலாபம் ஈர்த்து
மெய்த்துயர் புரிந்தான் நேமிப் புள் உருக் கொண்ட                                    வெய்யோன்.
386
   
7674.
அச்செயல் முருகன் காணா ஆர் அழல் என்ன நக்குக்
கைச்சிலை அதனை வாங்கிக் கடுந்தொழில் அவுணர்                                     மன்னன்
உச்சியின் முகத்தில் உரத்தினில் சிறைகள் தம்மில்
வச்சிர நெடுங்கண் வாளி வரம்பு இல தொடுத்து
                                    விட்டான்.
387
   
7675.
விட்டிடுகின்ற வாளி வெய்யவன் அங்கம் எங்கும்
பட்டிடு கின்ற காலைப் பதை பதைத்து உதறிச் சிந்தி
எட்டு உள திசையும் வானும் இருங்கடல் உலகம் எங்கும்
கட்டழல் சிந்திச் சீறிக் கறங்கு எனத் திரியா நின்றான்.
388
   
7676.
திரிந்திடு கின்ற காலைச் செஞ்சுடர்த் தனிவேல்
                                அண்ணல்
புரந்தரன் உருவாய் நின்ற பொறி மயில் நடாத்தி யேகி
அரந்தெறு கணைகள் தூண்டி அகிலமும் அவுணன்                                 தன்னைத்
துரந்து அமர் இழைக்கல் உற்றான் விண்ணவர் தொழுது                                 போற்ற.
389
   
7677.
அத்தகும் எல்லை தன்னின் அவுணர்கள் எவர்க்கும்                                   மேலோன்
எய்த்து உளம் மெலிந்து சால இடர் உழந்து இரக்கம்                                   எய்தி
மெய்த் தழல் என்னச் சீறி வேல் படை கொண்ட செம்மல்
கைத் தலத்து இருந்த வில்லைக் கறிப்பது கருதி வந்தான்.
390
   
7678.
வருவது நிமலன் காணா மலர்க்கரம் ஒன்றில் வைகும்
ஒரு தனி ஓள் வாள் வீசி ஒன்னலன் பறவை யாக்கை
இரு துணி ஆகி வீழ எறிந்தனன் எறிதலோடும்
அரி அயன் முதலாம் தேவர் அனைவரும் ஆடல்                                கொண்டார்.
391
   
7679.
தாரார் வாகை சூடிய வேலோன் தன் கையில்
கூரார் வாளால் புள் உருவத்தைக் குறை விக்கச்
சூராம் வெய்யோன் அண்ட முகட்டைத் தொட ஓங்கிப்
பாராய் நின்றான் விண்ணவர் யாரும் பரிவு எய்த.
392
   
7680.
ஏழு உட்பட்ட ஆழ் திரை நேமி இடை தூர்த்துத்
தாழ்வில் செல்லு மாதவர் தேரைத் தடை செய்து
சூழிக் கால்கள் வான் நெறி செல்லும் துறை மாற்றிப்
பாழித் திக்கை மூடினன் நின்றான் படி ஆனோன்.
393
   
7681.
ஆறார் சென்னிப் பண்ணவன் மைந்தன் அது காணாச்
சீறா நன்றால் சூர் புரி மாயத் திறன் என்னாக்
கூறா அங்கைச் செஞ்சிலை தன்னைக் குனிவித்தே
ஊரார் வெங்கோல் ஏழு தொடுத்தே உரை செய்வான்.
394
   
7682.
நெடு வானத்தின் காறும் எழுந்தே நிமிர் எய்தி
முடிவான் வெய்யோன் பாரகமாய் என்முன் நின்றான்
கடல் ஏழ் என்னும் தன்மையின் நீவிர் கடிது ஏகி
அடுவீர் என்றே விட்டனன் யார்க்கும் அறிவொண்ணான்.
395
   
7683.
ஒற்றைச் செவ் வேலோன் விடு வாளி உலகு எல்லாம்
சுற்றிக் கொண்டே உண்டிடும் நேமித் தொகை போலாய்ச்
செற்றத் தோடும் ஆர்ப்பொடும் ஏகித் திரை வீசி
மற்று அச் சூரன் தன் உருவத்தை வளைவு உற்ற.
396
   
7684.
வளையா வெஞ்சூர் மாயிரு ஞால வடிவத்தைக்
களையா உண்டே இன்மை அது ஆக்கிக் கணை ஏழும்
திளையார் நீத்தத் தொல் உரு நீக்கிச் செருவின் கண்
விளையாடு உற்ற எம் பெருமான் பால் மீண்டு உற்ற.
397
   
7685.
காணா வெய்யோன் பார் உரு நீங்கிக் கடல் எல்லாம்
ஊணா வையம் வானொடும் உண்டற்கு எழு மாப் போல்
ஏனார் நீத்தத்து ஓர் வடிவு ஆகி இறை முன்னம்
நீணா கத்தின் காறும் நிமிர்ந்தே நின்றிட்டான்.
398
   
7686.
நேரான் மாயத் தொல் உருவத்தின் நிலை நோக்கிக்
கூரார் வாளி நூறு தொடுத்தே கொடியோன் பால்
சேரா வூழித் தீ இயல்பு ஆகிச் செறி உற்றுப்
பேராது அட்டே வம் என விட்டான் பெயர் வில்லான்.
399
   
7687.
அவ்வாறு ஆக வாளிகள் நூறும் அருள் நீரால்
வெவ்வாய் அங்கிப் பேர் உரு ஆகி விரவிப் போய்த்
தெவ்வாய் நின்றோன் நீத்தம் அது ஆகும் செயல் நீங்க
வெவ்வாயும் சென்று உண்டன அம்மா இறைதன்னில்.
400
   
7688.
தண்டாது ஆர்க்கும் நீத்த இயற்கை தனை எல்லாம்
உண்டால் இத்தே வாளிகள் மீண்டே உறு காலைக்
கண்டான் மாயத் தன்மை படைத்தோன் கனல் மேனி
கொண்டான் அண்டம் காறும் நிமிர்ந்தே குலவு உற்றான்.
401
   
7689.
குலவும் காலைக் கண்டு நகைத்தே கூற்று என்ன
நிலவும் செங்கோல் ஆயிரம் வாங்கா நீடுழி
சுலவும் சண்டச் சூறையின் ஏகிச் சூர் மாயம்
பலவும் செற்றே வம் என உய்த்தான் பரமான் ஆனோன்.
402
   
7690.
உய்க்கும் காலத்து ஒய் என ஏகி உலகு எங்கும்
திக்கும் வானும் சூழு மருத்தின் திறன் எய்தி
மைக்கும் தூமம் போல்பவன் மெய்த் தீ வடிவு எல்லாம்
பொய்க்கும் வண்ணம் சாடின ஐயன் புகர் வாளி.
403
   
7691.
வண்டு உலா வரும் வாகை அம் தாரினான்
கொண்டு எழுந்த கொழுந்தழல் யாக்கையை
உண்டு வாளிகள் ஒய் என மீண்டு ஒராய்
அண்டர் நாயகன் பாங்கர் அணைந்தவே.
404
   
7692.
ஆங்கு அவ் வெல்லையில் அவ் வடிவத்தினை
நீங்கு மாற்றலன் நீள் சின மேற் கொளா
ஓங்கும் ஓதை உருவு கொண்டு ஆர்த்தலும்
ஞாங்கர் எந்தை நகையொடு நோக்கினான்.
405
   
7693.
ஆய்ந்து வாளி ஒர் ஆயிரம் நூற்றினை
வாய்ந்த கைக் கொடு மாற்றலன் வன்மையைப்
பாந்தள் ஆகிப் படுத்து வம்மோ எனா
ஏந்தல் கூறி இமைப்பினில் தூண்டினான்.
406
   
7694.
அவ் வயில் கணை அந்தரத்தில் செலாச்
செவ்விதில் கிளர் செந்தழல் போல் எழீஇப்
பை விரித்த பஃறலைப் பன்னகம்
வெவ் வுருக்கொடு சூர்மிசை மேயதே.
407
   
7695.
கூற்றம் அன்ன கொடுந்தொழில் மன்னவன்
காற்றின் யாக்கை கரப்ப மிசைந்திடா
ஆற்றல் மேவி அணைந்து உடன் மீண்டன
வேல் தடக்கை விமலன் புடை தனில்.
408
   
7696.
இன்ன தன்மையில் ஈர் இரு நாள் வரைத்
துன்னலன் தொலையாது அமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னியே பல் உருக் கொடு தோன்றினான்.
409
   
7697.
ஓவா இயல்புரி மூவரில் ஒரு சார் வரு மொழியும்
தேவா சுரர் பிறர் ஆம் என ஒரு சார் வரும் சேண்
                                      நாள்
கோவாம் என ஒரு சார் வரும் ஒருசார் வரும் குறள்                                       போல்
ஆவா எனக் கொடும் கூற்று என ஒரு சார் வரும்                                       அன்றே.
410
   
7698.
பேய் ஆம் என ஒரு பால் வரும் பிறழ் வெம் புகைப்                                       படலைத்
தீ ஆம் என ஒரு பால் வரும் திசை எங்கணும் சுழலும்
ஓயா மருத் தினம் ஆம் என ஒரு பால் வரும் அகிலம்
பாயா எழு திரை ஆழியில் ஒருபால் வரும் பரவி.
411
   
7699.
ஒரு சார் விடம் என வந்திடும் ஒருசார் வரும் பணி                                       போல்
ஒரு சார் முகில் என வந்திடும் ஒரு சார் வரும் இருள்                                       போல்
ஒரு சார் உரும் என வந்திடும் ஒரு சார் வரும் வரை                                       போல்
ஒரு சார் தனது உருவாய் வரும் ஒரு சார் வரும் கதிர்                                       போல்.
412
   
7700.
தொக்கார் பல படை ஆம் என ஒரு சார் வரும் சூழும்
திக்கார் களிற்று இனம் ஆம் என ஒரு சார் வரும்                                     சினத்தால்
நக்கார் தரும் அரியேறு என ஒருசார் வரும் நலிவான்
அக்கால் வரு தனிப்புள் என ஒருசார் வரும் அன்றே.
413
   
7701.
கரியின் முகத் துணைவன் என ஒரு சார் வரும்
                                  கடுங்கண்
அரியின் முகத்து இளையோன் என ஒரு சார் வரும்                                   அளக்கர்ப்
பரியின் முகத்தினில் வந்திடு பாழிக் கனல் படுக்கும்
எரியின் முகத் தனி மைந்தனில் ஒரு சார் இடையேகும்.
414
   
7702.
எல்லோன் தனை வெகுண்டோன் என ஒரு சார் வரும்                                        ஏனைச்
சொல் ஓங்கிய திறன் மைந்தரில் ஒரு சார் வரும் சூழ்ச்சி
வல்லோன் என ஒருசார் வரும் மானப் படை மள்ளர்
பல்லோர்களும் செறிந்தால் என ஒருசார் இடைப் படரும்.
415
   
7703.
இத்தன்மையில் அவுணர்க்கு இறை யாண்டும் செறிவு
                                 ஆகி
அத்தன் தனைப் புடை சூழ்தலும் அவை நோக்கிய                                  இமையோர்
சித்தம் தளர்ந்து திரிகுற்றனர் திரிகுற்றனர் அம்மா
கத்தும் கடல் புவி மாய்ந்திடு காலத்து உயிர் எனவே.
416
   
7704.
அங்கு அதன் நிலைமை நோக்கி ஆயிர கோடி வாளி
செங்கையில் வாங்கி வாங்கும் திரு நெடும் சிலையில்                                    பூட்டி
இங்கு உள அமரர் தங்கள் இருஞ்சிறை அகற்ற வந்து
பங்கயன் சிறை செய்து இட்ட பகவன் மற்று இதனைச்                                    சொல்வான்.
417
   
7705.
தெவ்வடு பகழி என்னும் தேவிர்காள் நீவிர் ஏகி
மெய் வலி படைத்து நின்ற மேலவன் ஒருவன் கொண்ட
அவ்வுரு அனைத்தும் எய்தி ஆங்கு அவன் மாய முற்றும்
இவ்விடை அட்டு நீக்கி ஏகுதிர் என்று விட்டான்.
418
   
7706.
விட்டிடு சிலீ முகங்கள் விரைந்து போய் வெகுளி வீங்கி
ஒட்டலன் கொண்ட ஒவ்வொன்று உருவினுக்கு எழுமை                                       ஆகி
எட்டுள புலமும் வானும் இருநில வரைப்பும் ஈண்டி
அட்டு அடல் பெற்ற அம்மா அனையவன் மாயம்
                                      தன்னை.
419
   
7707.
உடல் சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்
அடல் வலி கொண்ட வாளி அந்தர நெறியான் மீண்டு
புடை உறு சரங்களோடு பொள்ளெனத் தூணி புக்க
சுடர் நெடுந் தனிவேல் அண்ணல் அவன் முகம்
                      நோக்கிச் சொல்வான்.
420
   
7708.
வெம் புயல் இடையில் தோன்றி விளிந்திடு மின்னு
                                வென்ன
இம்பரில் எமது முன்னம் எல்லை இல் உருவம்                                 கொண்டாய்
அம்பினில் அவற்றை எல்லாம் அட்டனம் அழிவு இலாத
நம் பெரு வடிவம் கொள்வ நன்று கண்டிடுதி என்றான்.
421
   
7709.
கூறி மற்று இனைய தன்மை குரை கடல் உலகம் திக்கு
மாறு இலாப் புவனம் அண்டம் வானவர் உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்தது அன்றி
வேறு இலை என்ன ஆங்கு ஓர் வியன் பெரு வடிவம்                                   கொண்டான்.
422
   
7710.
உள்ளடி வரைகள் யாவும் ஒண் புற அடியின் நீத்தம்
வள் உகிர் விரல்கள் முற்றும் வான் உரு மேறு நாள்                                      கோள்
எள்ளரும் பரடு தன்னில் இரும் புனல் இறைவன் சோமன்
நள் இருள் அனைய மேனி நிருதியோடு அரக்கர் நண்ண.
423
   
7711.
அடி திரள் கணைக்கால் தன்னில் ஆரிடர் மணிகள்
                                சானு
வடிவு அமை முழந்தாள் விஞ்சை வானவர் ஆதி                                 ஆனோர்
தொடைதனின் மகவான் மைந்தன் தொடை முதல்
                                நடுவன் காலன்
கடிதடத்து அசுரர் பக்கம் கடவுளர் யாரும் நிற்ப.
424
   
7712.
இருப்பினில் நாகர் கோச எல்லையில் மருந்தே உந்திக்
கருப்படும் உயிர்கள் மார்பில் கலைகள் முந் நூலில்                               போதம்
அருப் பயில் உரோமத் தண்டம் அங்கையில்                               அகிலபோகம்
திருப் பெருந் தடந்தோள் வைப்பில் செங்கண் மால்                               விரிஞ்சன் மேவ.
425
   
7713.
மெல்லிதழ் அனைய செங்கை விரல் மிசை அணங்கின்                                       நல்லார்
ஒல் ஒலி அங்கி கண்டம் ஒப்பு இலா மணிவாய் வேதம்
பல் இடை எழுத்து நாவில் பரம ஆகமத்தின் பேதம்
நல் இதழ் மனுவின் விஞ்சை நாசியில் பவனன் மன்ன.
426
   
7714.
கருணை கொள் விழியில் சோமன் கதிரவன் செவியில்                                      திக்குத்
திரு நுதல் குடிலை வைப்புச் சென்னியில் பரம ஆன்மா
மரபினின் மேவித் தோன்ற மாறு இலாது இருக்கும்                                      தொல்லை
ஒரு தனது உருவம் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார்.
427
   
7715.
செஞ்சுடர் அநந்த கோடி செறிந்து ஒருங்கு உதித்த
                             என்ன
விஞ்சிய கதிர் கான்று உள்ள வியன் பெரு வடிவை                              நோக்கி
செஞ்சகம் துளங்கி விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி
அஞ்சல் மின் அஞ்சல் மின் என்று அருளினன்
                             அமைத்த கையான்.
428
   
7716.
அண்டர்கள் யாரும் எந்தை அருள் முறை வினவி உள்ளம்
உண்டிடு விதிர்ப்பு நீங்கி உவகையால் தொழுது நின்றார்
தண் துளி வரையது என்னத் தணப்பு அறச் சிதறும் ஊழிக்
கொண்டலின் தோற்றம் நோக்கிக் குலவுறு மஞ்சையே                                       போல்.
429
   
7717.
இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவம் தன்னைக்
கறை விடம் உறழும் சூரன் கண்டு விம்மிதத்தின் நிற்ப
அறிவரும் உணர்தல் தேற்றா ஆறுமா முகத்து வள்ளல்
சிறிது நல் உணர்ச்சி நல்க இனையன செப்பல் உற்றான்.
430
   
7718.
எண் இலா அவுணர் தானை யாவையும் இமைப்பில்
                                 செற்று
விண் உலா அண்டம் தோறும் வியன் சமர் ஆற்றி                                  என்பால்
நண்ணினார் தம்மை எல்லாம் நாமறத் தடிந்து வீட்டி
வண்ண மான் தேரும் மீண்டு வரா நெறி தடுத்தான்                                  மன்னோ.
431
   
7719.
திண் திறல் உடையேன் தூண்டும் திறல் படை யாவும்                                       நீக்கிக்
கொண்ட வென் மாய முற்றும் கொடுஞ்சரம் அதனான்                                       மாற்றி
அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவும் தன்பால்
கண்டிடும் வடிவம் ஒன்று காட்டி என் கண்முன்
                                      நின்றான்.
432
   
7720.
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலன் என்று இருந்தேன் அந் நாள் பரிசு இவை                           உணர்ந்திலேன் யான்
மால் அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும்
                          யார்க்கும்
மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ.
433
   
7721.
ஒற்று என முன்னம் வந்தோன் ஒரு தனி வேலோன்                            தன்னைப்
பற்றி இகல் இன்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபு எனக்
                           கொண்டிலேன் ஆல்
இற்றை இப் பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை                            கண்டேன்.
434
   
7722.
மீ உயர் வடிவம் கொண்டு மேவிய தூதன் சொற்ற
வாய்மைகள் சரதம் அம்மா மற்றியான் பெற்ற அண்டம்
ஆயவை முழுது மற்றும் அறுமுகம் படைத்த செம்மல்
தூய பொன் பதர் ஓமத்தில் தோன்றியே நிற்கும் அன்றே.
435
   
7723.
அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி                                    அண்ணல்
கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு                                    ஏனும்
கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே.
436
   
7724.
சீர்க் குமரேசன் கொண்ட திருப் பெரும் வடிவம் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள உலகில் அம்மா அற்புதத்தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும் என் பார்வை                                         தானும்.
437
   
7725.
நேர் இலன் ஆகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேர் உரு அதனை நோக்கிப் பெரிதும் அச்சுறுவ
                                     தல்லால்
ஆர் இது நின்று காண்பார் அமரரில் அழிவு இலாத
சீரிய வரம் கொண்டு உள்ளேன் ஆதலில் தெரிகின்றேன்                                      ஆல்.
438
   
7726.
ஆயிர கோடி காமர் அழகு எலாம் திரண்டு ஒன்றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாஞ் சரணம் தன்னில்
தூய நல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின் இனைய                                  தொல்லோன்
மாயிரு வடிவிற்கு எல்லாம் உவமை யார் வகுக்க வல்லார்.
439
   
7727.
இங்கு எனது உயிர் போல் உற்ற இளவலும் இளைய                            சேயும்
செங்கையில் வேலோன் தன்னைச் சிறுவன் என்று                            எண்ணல் கண்டாய்
பங்கயன் முதலோர் காணாப் பரமனே ஆகும் என்றார்
அங்கு அவர் மொழிந்த வாறும் சரதமே ஆனது அன்றே.
440
   
7728.
அண்ணலார் குமரன் மேனி அடி முதல் முடியின் காறும்
எண் இலா ஊழிகாலம் எத்திறம் நோக்கினாலும்
கண்ணினால் அடங்காது உன்னி கருத்தினால் அடங்காது                                        என்பால்
நண்ணினான் அமருக்கு என்கை அருள் என நாட்டலாமே.
441
   
7729.
திருகிய வெகுளி முற்றும் தீர்ந்தன செருவின் ஊக்கம்
அருகியது உரோமம் புள்ளி ஆயின விழியில் தூநீர்
பெருகியது இவன் பால் அன்பு பிறந்தன தமியேற்கு                                    உள்ளம்
உருகியது என்பு தானும் உலை மெழுகு ஆகும் அன்றே.
442
   
7730.
போயின அகந்தை போதம் புகுந்தன வலத்தது ஆன
தூயது ஓர் தோளும் கண்ணும் துடித்தன புவனம் எங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படுகின்ற                             விண்ணோர்
நாயகன் வடிவம் கண்டேன் நற்றவப் பயன் ஈது அன்றே.
443
   
7731.
சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும்                                    அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும்
                                   தாலும்
ஆழுதல் வேண்டும் தீமை அகன்று நான் இவற்காள்
                                   ஆகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே.
444
   
7732.
ஒன்னலர் பொருட்டால் ஏகி உறு சமர் இழைத்த செம்மல்
தன் உரு அதனை காண்கின் முனிவதே தகுதி ஆகும்
வன்னி கொள் வெண்ணெயே போல் வலி அழிந்து                            உருகிற்று என்றால்
என்னுடை வயத்த வன்றோ உணர்ச்சியும் இயாக்கை                            முற்றும்.
445
   
7733.
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காறும்
நீடிய இகல் போர் ஆற்றி நீங்கலான் நின்றது எல்லாம்
ஆடலின் இயற்கை என்றே அறிந்தனன் அஃது ஆன்று                                       தன்னான்
சாடிய வேண்டும் என்னின் யார் அது தாங்கற் பாலார்.
446
   
7734.
ஏதம் இல் அமரர் தம்மை யான் சிறை செய்தது எல்லாம்
தீது என உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கை                                     யாலே
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா
நாதன் இங்கு அணுகப் பெற்றேன் நன்றதே ஆனது                                     அன்றே.
447
   
7735.
ஒன்று ஒரு முதல்வன் ஆகி உறைதரு மூர்த்தி முன்னம்
நின்று அமர் செய்தேன் இந்நாள் நெஞ்சு இனித் தளரேன்                                        அம்மா
நன்று இதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானே                                        ஆனேன்
என்றும் இப்புகழே நிற்கும் இவ்வுடல் நிற்பது உண்டோ.
448
   
7736.
வான் உளோர் சிறையை நீக்கி வள்ளலை வணங்கி இந்த
ஊன் உலாம் உயிரைப் போற்றி அளியர் போல் உறுவன்                                        என்னின்
ஆனதோ எனக்கு இது அம்மா ஆயிர கோடி அண்டம்
போனது ஓர் புகழும் வீரத் தன்மையும் பொன்றிடாவோ.
449
   
7737.
என்ன இத்தகைய பன்னி நிற்றலும் எவர்க்கும் மேலோன்
உன்ன அரும் தகைத்தாய் நின்ற ஒரு பெரும் தோற்றம்                                       நீத்து
மின்னிவர் கலாபம் ஊர்ந்த வியன் உருக் கொண்டு                                       நண்ணித்
துன்னலன் போதம் ஆற்றித் தொன்மை போல் ஆகச்                                       செய்தான்.
450
   
7738.
காரணன் ஆகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சியோ அரிய தன்றே.
451
   
7739.
அத்தகு காலை தானே அவுணர் கோன் உணர்ச்சி நீங்கிச்
சித்தமது இடையே தொல்லைச் சீற்றமும் இகலும் உற்ற
மெய்த்தகு குழவித் திங்கள் விண்ணெறி செல்லச் செல்லும்
எத்திசை இருளும் அன்னது அகன்றுழி எழுந்ததே போல்.
452
   
7740.
பிணி முகம் உயர்த்து நின்ற பெருந்தகை தோற்றம்                                காணூஉத்
தணிவரும் சினம் மேற் கொண்டு சமரின் மேல் ஊக்கம்                                சேர்த்தி
அணியது என்று திண்மை என்னா அங்கையோடு
                               அங்கை தாக்கி
மணி முடி துளக்கி நக்கு மற்று இவை புகலல் உற்றான்.
453
   
7741.
சேய் உரு அமைந்த கள்வன் செருவினை இழக்கல்                               ஆற்றான்
மாயையின் ஒன்று காட்டி எனை இவண் மையல்
                              செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆர் எனக்கு ஒப்பு                               உண்டு என்றும்
காயம் அது அழிவு இலாதேன் கருத்து அழிகின்றது                               உண்டோ.
454
   
7742.
குன்றினை எறிந்த வேல் கைக் குமரனோடு அமர் அது                                     ஆற்றி
வென்றிடுகின்றேன் மெல்ல மேலது நிற்க இந்த
வன் திறல் சமரை மூட்டி நின்ற வானவரை எல்லாம்
தின்று உயிர் குடித்து முன் என் சினம் சிறிது அகல்வன்                                     என்றான்.
455
   
7743.
ஆயது துணிவாக் கொண்ட அவுணர்கள் மன்னன்                                   பின்னும்
தீயது ஓர் தொல்லை மாயச் சீர் கொள் மந்திரத்தைப்                                   பன்னி
ஞாயிறு மருட்கை கொள்ள ஞாலமும் ககன முற்றும்
மாயிருள் உருவம் கொண்டு மறைந்து நின்று ஆர்க்கல்                                   உற்றான்.
456
   
7744.
தெண் திரை நேமி தன்னில் தீவிடம் எழுந்தது என்ன
எண் திசை எல்லை முற்றும் இரு நில வரைப்பும் எல்லா
அண்டமும் ஆகி ஈண்டும் ஆரிருள் வடிவை வானோர்
கண்டனர் அவுணன் மாயம் ஈது எனக் கலக்கம் உற்றார்.
457
   
7745.
அத்துணை அவுணர் மன்னன் அவ்விருள் இடையே                           பாய்ந்து
பத்தி கொள் சிகரம் அன்ன பஃறலை அளவை தீர்ந்த
கைத்தலம் உளது ஓர் யாக்கை கதும் எனக் கொண்டு                           விண்ணோர்
மெய்த் தொகை நுகர்வான் உன்னி விண் இடைக்
                          கிளர்ந்து சென்றான்.
458
   
7746.
ஆடியல் கொண்ட சூரன் அந்தரத்து எழலும் வானோர்
கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைச்
சாடிய வருவன் என்னாத் தலைத் தலை சிதறி நில்லாது
ஓடினர் கூற்றை நேர்ந்த உயிர் என இரங்கல் உற்றார்.
459
   
7747.
நண்ணினர்க்கு இனியாய் ஓலம் ஞான நாயகனே ஓலம்
பண்ணவர்க்கு இறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற்கு அரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண் நுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.
460
   
7748.
தேவர்கள் தேவே ஓலம் சிறந்த சிற்பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம் வேல் படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்.
461
   
7749.
கங்குலின் எழுந்த கார் போல் கனை இருள் மறைவின்                                          ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை இல்லேம்
எங்கு இனி உய்வம் ஐய இறையும் நீ தாழ்க்கல் கண்டாய்
அங்கு அவன் உயிரை உண்டு எம் ஆவியை அருளுக என்றார்.
462
   
7750.
தேற்றலை போலும் ஈது சிறிது நீ பாணிப் பாயேல்
ஆற்றலின் மறைந்து நின்றே அகிலமும் தானே உண்ணும்
மாற்றலன் ஆவி தன்னை வாங்குதி வல்லை என்னாப்
போற்றினன் முதல்வன் தன்னை மயூரமாய்க் கொண்ட                                      புத்தேள்.
463
   
7751.
அங்கு அவர் மொழியும் வெய்யோன் ஆற்றலும்
                        தெரிந்து செவ்வேள்
செங்கை அது ஒன்றில் வைகும் திருநெடு வேலை
                        நோக்கி
இங்கு இவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின்                         என்னாத்
துங்கம் அது உடைய சீர்த்திச் சூரன் மேல் செல்லத்                         தொட்டான்.
464
   
7752.
ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிரம் கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீ அழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவ முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே.
465
   
7753.
அன்னவன் தனது மாயம் அழிந்ததும் ஐயன் வைவேல்
முன்னுறு மாறு நோக்கி முடிவு இலா வரத்தினேனை
என் இவண் செய்யும் அம்மா இவன் விடும் எஃகம்                                     என்னா
உன்னினன் முறுவல் எய்தி உருகெழு சீற்றம் கொண்டான்.
466
   
7754.
வாரிதி வளாகம் தன்னை மாதிர வரைப்பை மீக்கீழ்ச்
சேர் உரு நிலயம் தன்னைத் திசைமுகன் முதலா உள்ளா
ஆர் உயிரோடும் வீட்டி அடுவன் மேல் இதனை
                                   என்னாச்
சூர் எனும் அவுணன் மற்றைத் தொடுகடல் நடுவண்                                    ஆனான்.
467
   
7755.
வன்னியின் அலங்கல் கான்று வான் தழை புகையின்                                    நல்கிப்
பொன் என இணர்கள் ஈன்று மரகதம் புரையக் காய்த்துச்
செந்நிற மணிகள் என்னத் தீம்பழம் கொண்டு கார் போல்
துன்னு பல் சுவடு போக்கிச் சூதம் ஆய் அவுணன்                                    நின்றான்.
468
   
7756.
மாசு அறு ககன கூட வரம்பு அதன் அளவு மேல் போய்
ஆசையின் எல்லை காறும் அளவை தீர் உலவை ஓச்சிக்
காசினி அகலம் தாங்கும் கச்சபத் துணைத் தூரோட்டிப்
பாசடை பொதுளி வெஞ்சூர் பராரை மால் வரையின்                                    நின்றான்.
469
   
7757.
ஒர் ஆயிர நூறு அது என்னும் ஓசனை அளவை ஆன்ற
பராரை மா உருவம் ஆகிப் பல உடைச் சினை மாண்                                        கொம்பர்
விராவிய சூழ்ச்சி தன்னால் வேலைகள் முழுதும் விண்ணும்
தராதல வரைப்பும் எல்லாம் தண் நிழல் பரப்பி நின்றான்.
470
   
7758.
நெடுங்கலை முயல் மான் கொண்டு நிலவும் அம்புலியும்                                     நீத்தம்
அடுங்கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானும்
கடங் கலுழ்கின்ற ஆசைக் கரிகளும் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மா உருக் கொண்டு நின்றான்.
471
   
7759.
மிக்கு உயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப்                                         புள்ளும்
மைக் குயில் சேவல் ஆகி மயூரம் ஆம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடல் பூவையும் கொடியது ஆன
குக்குட முதலும் அஞ்சக் கொக்குரு வாகி நின்றான்.
472
   
7760.
கால் எனும் மொய்ம்பன் உட்கக் கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க் கரம் மறிக்க வெய்யோன்
பாலர் மெய் வியரா நிற்பப் பணை முலை அரிவை                                    மார்கள்
சேல் எனும் விழிகள் பொத்தச் சேகரம் ஆகி நின்றான்.
473
   
7761.
அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரையாவும்
தத்தமது இருப்பை நீங்கத் தாது அவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒரு தனி மாவாய் நின்றான்,.
474
   
7762.
நிலமிசை இனைய வாறோர் நெடும் பெரும் சூதம் ஆகி
உலவையின் செறிவு தன்னால் உம்பரும் திசையும் எற்றித்
தலைமுதல் அடியின் காறும் சாலவும் தளர்ந்து தள்ளுற்று
அலமரு வாரிற்றானே அசைந்தனன் அசைவிலாதான்.
475
   
7763.
பைவிரி பாந்தள் புத்தேள் பரம் பொறா அழுங்கப்
                                   பாரின்
மை விரி படிவச் சூறை மாருதம் எறிய மாழை
மெய் விரி குடுமிக் கோட்டு மேரு வெற்பு அசைந்தால்                                    என்ன
மொய் விரி அவுணன் யாக்கை அலைத்தனன் முடிவது                                    ஓரான்.
476
   
7764.
இடிந்தன சரிந்த ஞாலம் ஏழ் வகைப் பிலங்கள் முற்றும்
பொடிந்தன கமட நாகம் புரண்டன புழைக்கை மாக்கள்
முடிந்தன மறிந்தவேலை முழுவதும் ஒன்றா குற்ற
மடிந்தன உயிரின் பொம்மல் வரைக் குலம் அறிந்த                                     அன்றே.
477
   
7765.
தாரகை உதிர்ந்த கோளும் தலை பனித் திரிந்த                                  வெய்யோன்
தேரொடு மாவும் தானும் தியங்கினன் திங்கள் புத்தேள்
பேர் உறு மானம் நீங்கிப் பெயர்ந்தனன் ஏனை வானோர்
மேருவும் கயிலை வெற்பும் புக்கனர் வெருவு நீரார்.
478
   
7766.
ஏற்றம் இல் சுவர்க்க முற்றும் இற்றன அதற்கும் அப்பால்
மேல் திகழ் முனிவர் வைகும் உலகமும் பகிர்ந்து வீழ்ந்த
நால் திசை முகத்தன் மாயோன் நண்ணிய உலகும்
                                   அற்றே
சாற்றுவது என் கொல் அண்டச் சூழலும் தகர்ந்தது                                    அன்றே.
479
   
7767.
தெண் திரை நடுவண் நின்ற தீயவன் செயலும்
                            அன்னான்
கொண்டிடும் உருவும் உள்ளக் கொள்கையும் வலியும்                             சீரும்
அண்டர்கள் எவர்க்கும் மேலாம் ஆதி அம் பகவன்                             தொட்ட
விண் தொடர் தனி வேல் காணா வெஞ்சினம்
                            விளைத்தது அன்றே.
480
   
7768.
தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து
ஆயிர கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன
மீ உயர்ந்து ஒழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றம்                                    கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே.
481
   
7769.
வயிர்த்திடு நிலைமை சான்ற வன்கணான் உயிரை
                         வௌவச்
செயிர்த்திடும் தெய்வச் செவ்வேல் திணிநில வரைப்பில்                          அண்டம்
மயிர்த் தொகை ஆக ஏனைப் பூதமும் அழிய அங்கண்
உயிர்த் தொகை முருக்கத் தோன்றும் ஒருவனில்
                         சென்றது அன்றே.
482
   
7770.
மாறு அவர் உழந்து பன்னாள் வரம்பறு பிரமம் ஆவார்
வேறு இலையாமே என்ற இருவரும் வெருவி நீங்க
ஈறொடு முதலும் இன்றி எழுகிரி விலக்கி விண்மேல்
சேறலின் நிலைமை காட்டிப் படர்ந்தது கடவுள் செவ்வேல்.
483
   
7771.
வேதனை அகத்தர் ஆகும் விண்ணவர் படைகள் தம்முள்
யாதனை இதற்கு நேரா இயம்புவ தெரியில் தோன்றிப்
பூதனை உயிர் உண் கள்வன் புண்டரீ கத்தன் வன்மை
சோதனை புரிந்த மேலோன் குலமே என்பது அல்லால்.
484
   
7772.
மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி ஏழு மற்றைத்
தெண்டிரைக் கடலும் வானும் சேண் உயர் பிறங்கல்                                    முற்றும்
எண்டிசைப் புறமும் அண்டத் தேணியின் பரப்பும் ஈண்ட
ஒண் தழல் சிகையின் கற்றை உமிழ்ந்தது ஆல் ஒருங்கு                                    ஞாங்கர்.
485
   
7773.
பற்றிய ஞெகிழி பாரில் படர்ந்தன பௌவம் யாவும்
சுற்றிய திசையும் வானும் சூழ்ந்தன சோதி வைகும்
பொற்றையது ஒன்றே அல்லாப் பொருப் பெலாம்
                          செறிந்த பொன்தோய்
கற்றை அம் கதிரின் அண்டச் சூழலும் கதுவல் உற்ற.
486
   
7774.
விடம் பிடித்து அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப்                                         பாணி
இடம் பிடித்திட்ட தீயில் தோய்த்து முன் இயற்றி அன்ன
உடம் பிடித் தெய்வம் இவ்வாறு உரு கெழு செலவின்
                                        ஏகி
மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மா முதல் தடிந்தது அன்றே.
487
   
7775.
ஆடல் வேல் எறித லோடும் ஆமிர வடிவாய் அண்ட
கூடமும் அலைத்த கள்வன் அரற்றொடு குறைந்து                                  வீழ்ந்தும்
வீடிலன் என்ப மன்னோ மேலை நாள் வரத்தின் என்றால்
பீடு உறு தவமே அன்றி வலியது பிறிது ஒன்று உண்டோ.
488
   
7776.
கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் பசுங்காய்                                  தூங்கித்
தள்ளரும் நிலைத்தாய் நின்ற மாவுருச் சாய்தலோடும்
உள்ளுறு சினமீக் கொள்ள ஒல்லை தொல் உருவம்
                                 எய்தி
வள்ளுறை உடைவாள் வாங்கி மலைவது கருதி                                  ஆர்த்தான்.
489
   
7777.
செங்கதிர் அயில் வாள் கொண்டு செரு முயன்று உருமின்
                                      ஆர்த்துத்
துங்கமொடு எதிர்ந்து சீறும் சூர் உரம் கிழித்துப் பின்னும்
அங்கம் அது இரு கூறாக்கி அலை கடல் வரைப்பில்                                       வீட்டி
எங்கணும் மறைகள் ஆர்ப்ப எஃகம் வான் போயிற்று                                       அம்மா.
490
   
7778.
புங்கவர் வழுத்திச் சிந்தும் பூ மழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி அருள் உருக் கொடு வான்                                      தோய்
கங்கையில் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள் தம் பெருமான் செங்கை எய்தி வீற்று இருந்தது                                      அவ்வேல்.
491
   
7779.
தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேலவன் எழுந்து மீட்டும் மெய் பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகிச் சினம் கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த் தொழில் கருதி வந்தான்.
492
   
7780.
மணிகிளர் வரைய தொன்றும் மரகதப் பிறங்கல் ஒன்றும்
துணை அடி சிறகர் பெற்றுச் சூற்புயல் அழிய ஆர்த்துத்
திணி நில விசும்பின் மாட்டே சென்று எனச் சேவலோடு
பிணிமுக உருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்.
493
   
7781.
ஆட்படு நெறியில் சேர்த்தும் ஆதியின் ஊழ் தந்து                                   உய்க்கத்
தாட் படை மயூரம் ஆகித் தன் நிகர் இல்லாச் சூரன்
காட் படை உளத்தன் ஆகிக் கடவுளர் இரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞான நாயகன் தன்                                   முன்னம்.
494
   
7782.
மருள் கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை
அருள் கெழு நாட்டம் சேர்ந்த ஆங்கு அவன் இகலை                              நீங்கித்
தெருள் கெழு மனத்தன் ஆகி நின்றனன் சிறந்தார்                              நோக்கால்
இருள் கெழு கரும் பொன் செம்பொன் ஆகிய                              இயற்கையே போல்.
495
   
7783.
தீயவை புரிந்தார் ஏனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல் கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இந் நாள்
                              செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பு இலா அருள்
                              பெற்று உய்ந்தான்.
496
   
7784.
அக்கணம் எம்பிரான் தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட உருவை நோக்கிக் கடிதில் நீ கொடியே ஆகி
மிக்கு உயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்
தக்கதே பணி இது என்னா எழுந்தது தமித்து விண்மேல்.
497
   
7785.
செந்நிறம் கெழீஇய சூட்டுச் சேவல் அம் கொடி ஒன்று                                       ஆகி
முன் உறு மனத்தில் செல்லும் முரண்தகு தடந்தேர்                                       மீப்போய்
இந் நில வரைப்பின் அண்டம் இடிபட உரு மேறு உட்க
வன்னியும் வெருவ ஆர்த்து மற்று அவண் உற்றது                                       அன்றே.
498
   
7786.
சீர் திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்கொண்டு ஒழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை ஏறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரி என நடாத்தல் உற்றான்.
499
   
7787.
தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீ பதைபதைத்து ஒடுங்கச்
                                   சூறை
துடித்திட அண்டகூடம் துளக்குறக் கலாபம் வீசி
இடித் தொகை புரள ஆர்த்திட்டு ஏகிற்று தோகை                                    மஞ்ஞை.
500
   
7788.
படத்தினின் உலகம் போற்றும் பணிக்கிறை பதைப்பப்                                     பாங்கர்
அடுத்திடு புயங்கம் முற்றும் அலமர அவனி கேள்வன்
இடத்து அமர்கின்ற பாம்பும் ஏங்குற விசும்பில் செல்லும்
உடற்குறை அரவும் உட்க உலாயது கலாப மஞ்ஞை.
501
   
7789.
பாரோடு விரிஞ்சன் தன்னைப் படைத்திட பன்னாள்                                    மாயன்
கார் என வந்து முக்கண் கடவுளைப் பரித்ததே போல்
வீரருள் வீரனாகும் வேல் உடைக் குமரன் தன்னைச்
சூர் உரு ஆகி நின்ற தோகை மேல் கொண்டது அம்மா.
502
   
7790.
வெயில் விடும் அநந்த கோடி வெய்யவர் திரண்டு                                   ஒன்றாகிப்
புயல் தவழ் கடவுள் வானில் போந்திடு தன்மையே போல்
அயிலினை உடைய செவ்வேள் மரகதத்து அழகு சான்ற
மயில் இடைவைகி ஊர்ந்தான் மாமுகம் திசைகள் முற்றும்.
503
   
7791.
நேமிகள் ஏழும் ஒன்றாய் நிமிர்ந்து எழும் வடவை
                                   முற்றும்
தாம் ஒரு வடிவாய் அங்கண் சார்ந்திடு நிலைமை என்ன
மா மயில் உயர்த்துச் சென்ற வாகை வேல் வீரன் மீண்டு
தீமை கொள் அவுணன் மூதூர்ச் செரு நிலத்து எல்லை                                    புக்கான்.
504
   
7792.
புக்கு உள குமர மூர்த்தி பொறி மயில் உருவ மாயும்
குக்குட மாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி
மிக்க நும் இயற்கை ஆகி மேவுதிர் விரைவின் என்ன
அக்கணம் அவரும் தொல்லை வடிவு கொண்டு அடியில்                                       வீழ்ந்தார்.
505
   
7793.
வள்ளலை வணங்கிப் பல்கால் வழுத்தியே தொழுது
                                    தத்தம்
உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூ நீர்
தள்ளுற உரைகள் முற்றும் தவறிடப் பொடிப்ப யாக்கை
கள் உணவு உற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றார்.
506
   
7794.
வீசுறு சுடர்வேல் ஐயன் வெய்ய சூர் முதலைச் சாடித்
தேசு உறு மஞ்ஞை ஊர்ந்து வந்தது தெரிந்து போர் செய்
காசினி இடையே நின்ற கணங்களும் வீரர் யாரும்
ஆசறும் இளவலும் சென்று அடி தொழுது ஆர்த்துச்                                    சூழ்ந்தார்.
507