இரணியன் புலம்புறு படலம்
 
7804.
அது நிகழ்ந்துழி அகன் பதி அவுணர்கள் ஒரு சில்லோர்
கதும் எனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட
நுதி கொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவல்                                       உற்றார்
பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும்.
1
   
7805.
காவல் மன்னவன் இறந்தனன் எனும் உரை கன்னத்துள்
மேவும் எல்லையில் அசனி ஏறு உண்டவெம் பணியே                                     போல்
தேவி ஆகிய பதும கோமளை எனும் திரு மங்கை
ஆவி நீங்கினள் தலை அளி ஆகியது அது அன்றோ.
2
   
7806.
எவ்வெவர்க்கும் மேலாகிய அவுணர் கோற்கு இல்லாகி
அவ்விடத்து உறை துணைவியர் வயிறு அலைத்து அழுங்கு                                            உற்று
வெவ்வழல் பெருங் குண்டம் ஒன்று ஆக்கியே விளி உற்ற
தெய்வதப் புனைவன் மகள் யாக்கை முன் செல உய்த்தார்.
3
   
7807.
மான் கிளர்ந்தன அரிமதர் மழைக் கண் மெல்லியர்                                    எல்லாம்
வான் கிளர்ந்து எழுகின்றது ஓர் மா பெரும் கனல்
                                   ஊடே
கான் கிளர்ந்திட மலர் தரும் தாமரைக் கானத்தில்
தேன் கிளர்ந்து தம் இனத்தொடும் புகுந்து எனச்                                    செல்லுற்றார்.
4
   
7808.
செல்லல் போதும் என்று ஒழிந்திட அரற்றினோர்                                செந்தீயில்
செல்லல் போது நாள் மாலையும் அங்கியில் சேர்ந்து                                ஓங்கும்
அல்லல் போது முன் நின்றிடு நிசிஎலாம் அகன்று என்ன
அல்லல் போது மா நகர்த்திரு ஏகினள் அது காலை.
5
   
7809.
இந்தவாறு இவர் அங்கியுள் மாண்டனர் இது நிற்கத்
தந்தை பட்டதும் சேவலும் மஞ்ஞையும் தான் ஆகித்
கந்த வேள் புடை வந்ததும் கண்டனன் கலங்கு உற்றுப்
புந்தி நொந்து நின்று இரணியன் வான் இடைப் புலம்பு                                       உற்றான்.
6
   
7810.
நன்று என்பதை உணராய் நான் உரைத்த வாசகங்கள்
ஒன்றும் சிறிதும் உறுதி எனக் கொண்டு இலையே
பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே
என்று உன்னை முன் போல் இருந்திட நான் காண்பதுவே.
7
   
7811.
அன்புடையன் கொல் என்று அயலார் எடுத்து உரைப்பத்
துன்பு உடையேன் போலத் துயரா அயர்கின்றேன்
என் புடையே முன்னர் எனது உயிர் கொண்டு ஏகினன்                                          ஆல்
நின் புடையே நின்று நெடும் பழியின் நீங்காதேன்.
8
   
7812.
மாற்றார் வலி கண்டு மற்று உன்னை வன் செருவில்
போற்றாது ஒளித்த பொறி இலியேன் தன் முன்னம்
தோற்றாமல் எங்கு ஒளித்தாய் சொல்லாய் சுதன் போலக்
கூற்று ஆனவனை இன்னும் கூட மனம் கொள்ளுதியோ.
9
   
7813.
கையார் அழல் ஏந்தும் கண் நுதலோன் தந்தவரம்
மெய்யாம் ஒரு காலும் வீடாய் அஃது எல்லாம்
பொய் ஆகும் வண்ணம் புதல்வன் என வந்து உதித்தேன்
ஐயா உனக்கோர் அருங்கூற்றம் ஆயினனே.
10
   
7814.
நில்லா உடலை நிலையாம் எனக் கருதிப்
பல்லாரும் கண்டு பழிக்கும் படி உனக்கும்
சொல்லாது அகன்றேன் நீ துஞ்சிய பின் வந்தனன் ஆல்
நல்லார்களில் தேரின் நானே தலை அன்றோ.
11
   
7815.
அத்திர நேர் கூறும் அவுணர் தமக்குள் மிக்க
குத்திரனே ஆகும் கொடியேன் நீ துஞ்சிய பின்
மித்திரனே போன்று இரங்கி மீண்டேன் உனக்கு என்னைப்
புத்திரனே என் கை புவிக்குப் பொறை அன்றோ.
12
   
7816.
ஆழியான் வேதன் அமரர்க்கு இறை முதலோர்
வாழியாய் என்று வழுத்தியிட வைகிய நீ
பூழியார் மேனிப் புராரி சிறுவன் தேரில்
கோழியாய் நின்று விலா ஒடியக் கூவுதியோ.
13
   
7817.
ஓகையால் அண்டத்து உயிர்கள் எலாம் வந்து இறைஞ்சச்
சேகையாய் மல்கும் திருத்தாள் கொண்டு உற்றிடும் நீ
வாகை ஆர்கின்ற வடிவேல் கரத்தோனைத்
தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றால் ஓ.
14
   
7818.
மேற்றான் விளையும் இஃது என்றே வினயமுடன்
ஆற்றான் மொழிந்தேன் அது சிறிதும் கேட்டிலையே
மாற்றான் என வந்த மைந்தனுடன் போர் செய்தே
தோற்றாயே அற்றால் மயிலாய்ச் சுமக்குதியோ.
15
   
7819.
மாறு உற்றிடத் தொல் வடிவம் தனை இழந்து
வேறு உற்ற புள் வடிவாய் மேவினாய் ஆங்கு அதனால்
ஈறு உற்றனை அன்றே என் செய்கை செய்வதற்கும்
பேறு உற்றிலன் வாளா பேணினேன் இவ்வுயிரே.
16
   
7820.
பிள்ளைப் பிறை புனைந்த பிஞ்ஞகன் தன் காதலனைப்
புள்ளிக் கலாபப் பொறி மயிலாய்ப் போற்றும் எல்லை
எள்ளல் பொருட்டால் யான் முன் உரைத்த வற்றை
உள்ளத்து இடை எந்தாய் உன்னுதியோ உன்னாயோ.
17
   
7821.
பொங்கு உற்ற சீற்றம் பொரும் போர் இகல் உள்ளம்
தங்கு உற்ற மானம் சயம் அகந்தை வன்மை எலாம்
அங்கு உற்ற நின்னை அடைந்தது இலை அவ்வனைத்தும்
எங்கு உற்றது ஐயா இயம்பாய் எனக்கு அதுவே.
18
   
7822.
என்று கனகன் இரங்கி நெடுஞ்சேணில்
நின்று தளர்ந்து நெடிது உயிர்த்துப் பூதர் எனைத்
தின்று சினம் தீர்வர் தெரியின் எனச் சிந்தை செய்து
துன்று திரை வேலை இடைத் தொன்மை போல்                                   புக்கனனே.
19
   
7823.
புக்க கனகன் புலர்ந்து புகரோன் பால்
அக்கணமே எய்தி அழிவுற்ற தந்தையர்க்கும்
தக்க துணைவர்க்கும் தாயர்க்கும் ஏனையர்க்கும்
மிக்க கடன்கள் விதிமுறையே செய்தனனே.
20
   
7824.
தாக்கிச் சமர் மலைந்த தானவர்க்குச் செய் பரிசே
தூக்கிப் புரிந்து துயரினுக்கோர் வித்து என்றே
ஆக்கத்தினை வெறுத்தே ஆதிப் பிரானை உள்ளே
நோக்கிக் கதி அடைவான் நோற்று ஒரு சார் உற்றனனே.
21