மீட்சிப் படலம்
 
7825.
மற்றது காலத்து மணி தூங்கிய பசும் பொன்
பொற்றை புரையும் பொறி மஞ்ஞை மீது வைகும்
வெற்றி நெடு வேல் கை விமலன் விறலோனைப்
பற்றின் ஒடு நோக்கி இனைய பகர் கின்றான்.
1
   
7826.
கேட்டி இது வீர கெடல் உற்ற வெஞ்சூரன்
ஈட்டுத் திரு என்ன இருஞ்சிறையின் முன் வைப்ப
வாட்டம் உறு சயந்தன் வானோர் தமை எல்லாம்
மீட்டு வருதி எனவே விளம்பினன் ஆல்.
2
   
7827.
குன்றம் எறிந்த குமரன் இது கூறுதலும்
நன்று இது எனவே தொழுது நனி மகிழ்ந்து
வென்றி விடலை விடை பெற்றுப் போர்க் களத்தின்
நின்றும் அவுணன் நெடு நகரத்து ஏகினன் ஆல்.
3
   
7828.
மீது படு திண் தோள் விடலை அறம் திறம்புங்
கோது படு தீயோர் குழீஇய நகருள் புக்குத்
தாது படு தண்டார்ச் சயந்தன் அமரருடன்
தீது படு வெய்ய சிறைக் களத்துச் சென்றனனே.
4
   
7829.
செல்லும் விறலோன் திறத்தை நனி நோக்கி
அல்லல் அகலும் அரி சுதனும் வானோர்கள்
எல்லவரும் அற்புத நீர் எய்திப் பதம் பூட்டும்
வல்லி பரிய மலர்க்கை குவித்தனரே.
5
   
7830.
செங்கை குவித்தே திறலோய் சிறைப் பட்ட
நங்கள் துயர் அகற்ற நண்ணினையோ நீ என்றே
அங்கு அவர்கள் எல்லோரும் ஆர்த்து எழுந்து கூறுதலும்
எங்கள் பெருமான் இளவல் இது புகன்றான்.
6
   
7831.
வம்மின்கள் வம்மின்கள் வானத்தீர் எல்லீரும்
நும்மை அயர்வித்த நொறில் பரித்தேர் வெஞ்சூரை
அம்ம அவுணர் அனிகத்துடன் எங்கோன்
இம் எனவே வேலால் இது போழ்ந்து எறிந்தனனே.
7
   
7832.
என்று ஆங்கு இசைப்ப இமையோர் அது கேளாப்
பொன்றாது முத்தி புகுந்தோர் என மகிழ்ந்து
வன்தாள் மிசைப் பிணித்த வல்லிகளின் மூட்டு அறுத்துச்
சென்றார் அவுணன் திரு நகரம் நீங்கினரே.
8
   
7833.
நுணங்கு நூல் உடை இளையவன் முன் செல நொய்து                                       என்ன
அணங்கினோருடன் சயந்தனும் தேவரும் அவண் நீங்கிக்
குணங்கர் ஈண்டிய களத்திடை நணுகியே குமரன் தாள்
வணங்கி மும்முறை புகழ்ந்தனர் திகழ்ந்தனர் மகிழ்வுற்றார்.
9
   
7834.
குன்று எறிந்தவன் அமரர் பால் பேர் அருள் கொடு                                     நோக்கி
நன்றி இல்லவன் சிறை இடைப் பல பகல் நணுகு உற்றீர்
துன்று பேர் இடர் மூழ்கினர் ஈங்கு இனித் துயர் இன்றி
என்றும் வாழ்குதிர் துறக்கமேல் வெறுக்கையில் இருந்து                                     என்றான்.
10
   
7835.
கந்தன் இம்மொழி வழங்கலும் கடவுளர் களிப்பு எய்தி
உய்ந்தனம் எனப் பின்னரும் வணங்கினர் உது காணா
முந்து தொல் இடர் நீங்கியே புந்தியில் முதம் எய்தி
இந்திரன் திரு பெற்றிடு ஞான்றினும் இனிது உற்றான்.
11
   
7836.
கண்டனன் தொழு மைந்தனைப் புல்லினன் களிப்பு                                    உள்ளம்
கொண்டனன் புறம் நீவினன் பல்லுகம் கொடியோன்
                                   செய்
ஒண் தளைப் புகுந்து எய்த்தனை போலும் என்று உரை                                    செய்யா
அண்டர் யாரையும் முறை முறை தழீஇயினன் அமரேசன்.
12
   
7837.
செற்றமே தகும் அவுணர் தம் காவலன் செருவத்தில்
அற்றை காறுமா விளிந்திடு பூதர் தம் அனிகங்கள்
முற்றும் ஆயிடை வரும் வகை முருகவேள் முன் உற்றான்
மற்ற எல்லையில் துஞ்சிய கணம் எலாம் வந்து உற்ற.
13
   
7838.
முஞ்சு தானைகள் ஆர்ப்பொடு குழீஇக் குழீஇ முருகேசன்
செஞ்சரண் முனம் பணிந்து தம் இனத்தொடும் செறிகின்ற
எஞ்சல் இல்லது ஓர் எல்லை நீர்புணரியில் எண் இல்லா
மாசு கான்றிடு நீத்தம் வந்து ஈண்டிய மரபு என்ன.
14
   
7839.
கருணை அம் கடல் ஆகியோன் கனை கடற்கு                                  இறையாகும்
வருணன் மாமுக நோக்கியே வெய்ய சூர் வைகுற்ற
முரண் உறும் திறல் மகேந்திர நகரினை முடிவு எல்லைத்
தரணி ஆம் என உண்குதி ஒல்லையில் தடிந்து என்றான்.
15
   
7840.
என்ற மாத்திரைச் சலபதி விழுமிது என்று இசை உற்றுத்
துன்று பல் உயிர் தம்மொடு மகேந்திரத்து தொல் ஊரை
அன்று வன்மை சேர் புணரியுள் அழுத்தினன் அவனிக்                                       கீழ்
நின்று மாயவன் அடு உலகு உண்டிடு நெறியே போல்.
16
   
7841.
ஆன காலையில் அறுமுகன் முகுந்தனும் மலரோனும்
வான் உளோர்களும் இறைவனும் வழுத்தினர் மருங்கு
                                     ஆக
ஏனை வீரர்கள் யாவரும் புடை வர இகல் பூதத்
தானை ஆர்த்து உடன் சென்றிடச் செருநிலம் தணப்பு                                      உற்றான்.
17
   
7842.
கலங்கல் கொண்டிடு மகேந்திர வரைப்பினைக் கடந்தே                                     பின்
இலங்கை மாநகர் ஒருவியே அளக்கரை இகந்து ஏகி
நலங்கொள் சீர் உடைச் செந்தியில் தொல்லை மாநகர்                                     எய்தி
அலங்கல் அஞ்சுடர் மஞ்ஞை நின்று இழிந்தனன் அயில்                                     வேலோன்.
18
   
7843.
கேகயத்தின் நின் றிழிந்து தொல் சினகரங்
                               கிடைத்திட்டுப்
பாக சாதனன் ஆதி ஆம் அமரர்கள் பணிந்து ஏத்த
வாகைசேர் அரித்தவிசின் மேல் வதனம் மூ இரண்டு                                உள்ள
ஏக நாயகன் உலகு அருள் கருணையோடு இனிது                                உற்றான்.
19
   
7844.
ஈண்டு இது நிகழ்ந்த எல்லை இப்பகல் அவுணர் ஆகி
மாண்டவர் நமர்கள் அன்றே மற்று அவர் படிவம் முற்றும்
தீண்டினம் கதிர்க் கையாலும் தீர்வு இதற்கு இது என்பான்                                      போல்
பூண் தகு தடந்தேர் வெய்யோன் புனல் பெரும் கடலுள்                                      புக்கான்.
20
   
7845.
வேலையின் நடுவு புக்கு மே வரும் வடவைச் செந்தீக்
காலம் அது இறுதியாகக் கடிது எழீஇக் ககன நக்கிப்
பாலுற விரிந்து இயாண்டும் படர்ந்து கொண்டு என்ன                                       வந்தி
மாலை அம் பொழுதில் செக்கர் வான் முழுது ஈண்டிற்று                                       அன்றே.
21
   
7846.
அன்னதொரு போழ்து தனில் ஆறு இரு தடந்தோள்
முன்னவனை நான் முகவனே முதல தேவர்
சென்னி கொடு தாழ்ந்து சிறியேங்கள் இவண் உன்றன்
பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றார்.
22
   
7847.
என்று உரை செய் காலை எமை ஆளுடைய அண்ணல்
நன்று என இசைந்திட நறைக் கொள் புனல் சாந்தத்
துன்று மலர் தீபம் அவி தூபம் முதல் எல்லாம்
அன்று ஒரு கணத்தின் முன் அழைத்தனர்கள் அங்ஙன்.
23
   
7848.
எந்தை உமை தேர்ந்திட இயம்பிய குமார
தந்திர நெறிப் படி தவாது அறுமுகற்கு
முந்திய குடங்கர் முதல் மூவகை இடத்தும்
புந்தி மகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே.
24
   
7849.
எஞ்சல் இல் அருச்சனை இயற்றி இணை இல்லோன்
செஞ்சரணினைத் தமது சென்னி கொடு தாழா
அஞ்சலி செய்து ஏத்திடலும் ஆங்கு அவரை நோக்கி
நெஞ்சு உறு மகிழ்ச்சியொடு நீடு அருள் புரிந்தான்.
25
   
7850.
நீண்ட அருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு
வேண்டும் குறை உண்டு எனின் விளம்புதிர்கள் என்னக்
காண் தகைய சூர்முதல் களைந்து எமை அளித்தாய்
ஈண்டு உன் அருள் பெற்றனம் யாது குறை மாதோ.
26
   
7851.
ஒன்று இனி அளிப்பது உள உன் அடியம் யாக்கை
நின்றிடு பகல் துணையும் நின் இரு கழற்கண்
மன்ற தலைவன் அன்புற வரம் தருதி எந்தாய்
என்றிடலும் நன்று என இரங்கி அருள் செய்தான்.
27
   
7852.
மலர் அயன் ஆதி ஆம் வரம்பிலோர் எலாம்
பலர் புகழ் குமரனைப் பரவி வைகினார்
உலகினில் யாரையும் ஒறுத்த தானவர்
குலம் என மாய்ந்தது கொடிய கங்குலே.
28
   
7853.
கங்குலும் தாரகா கணமும் மாய்ந்திடப்
பொங்கு ஒளி வீசியே பொருவில் ஆதவன்
இங்கு உள உலகு எலாம் ஈறு செய்திடும்
சங்கரனாம் எனத் தமியன் தோன்றினான்.
29
   
7854.
குணதிசை அமர் புரி கொடியர் உய்த்திடும்
கணை என விரிகதிர் காட்டி அங்கு அவை
அணைதலும் குருதி நீர் அடைந்த தன்மை போல்
இணை அறு செக்கர் பெற்று இரவி தோன்றினான்.
30
   
7855.
அப் பொழுது அவ்விடை அமரர் கம்மியன்
கைப்படு செய்கையால் கந்தவேள் ஒரு
செப்பரு நிகேதனம் செய்வித்து ஈசனை
வைப்புறு தாணுவில் வருவித்தான் அரோ.
31
   
7856.
ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்
மா மலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்
தூமணி விளக்கொடு தூபம் கண்ணடி
சாமரை ஆதிகள் அமரர் தந்திட.
32
   
7857.
முழுது ஒருங்கு உணர்ந்திடு முருகன் யாவரும்
தொழுதகும் இறைவனூல் தொடர்பு நாடியே
விழுமிய கண்ணுதல் விமலன் தாள் மலர்
வழிபடல் புரிந்தனன் மனம் கொள் காதலால்.
33