திருப்பரங்குன்று சேர் படலம்
 
7858.
இன்ன பண்பினால் சிவனடி வழிபடல் இயற்றி
அந் நிலைக்களம் நீங்கியே அமரர் கண் முனிவர்
தன்ன தானை அம் தலைவர்கள் புடை தழீஇச் சாரப்
பொன்னின் மஞ்ஞையின் எருத்த மேல் கொண்டனன்                                      புனிதன்.
1
   
7859.
சீர் தங்கிய மயூரமேல் அமர்தரும் செவ்வேள்
சார்தல் உற்றிடு மால் அயன் மகபதி தம்மை
நேர்தலில் படை வீரரை நோக்கியே நீவிர்
ஊர்தி மேலராய் வம்மின் நம் புடை என உரைத்தான்.
2
   
7860.
மற்றது காலையில் வண் துழாய் முடிக்
கொற்றவன் முதலிய குழுக் கொள் தேவரும்
வெற்றி கொள் வீரரும் வேறு தத் தமக்கு
உற்றிடும் ஊர்திமேல் ஒருங்கு உற்று ஈண்டினார்.
3
   
7861.
ஞாயிறு கறங்கு என நணுகும் பொன் முடிக்
கோயிலின் மருங்கினில் குழீஇக் குழீஇ இரண்டு
ஆயிரம் வெள்ளம் ஆம் அடல் வெம் பூதரும்
ஏயென எழுந்தனர் எழுந்த பூழியே.
4
   
7862.
மிக்கு உயர் அறிஞரை மேவில் கீழ்மை செய்
மக்களு மேல் நெறி அடைதல் வாய்மையே
தக்க தொல் பூதர்கள் சரணம் தோய்தலில்
புக்கது பொன் நகர் புவியும் பூழியாய்.
5
   
7863.
அழற்றிய பல் கதிர் ஆத பத்திரம்
நிழற்றிய விண் அளாய் நிமிர்ந்த கேதனம்
குழற்றிய துளைவயிர் கோடு காகளம்
மிழற்றிய பேரிகை மிகவும் ஆர்த்தவே.
6
   
7864.
மேக்கு உயர் வட்டமும் விளங்கு காம்புமாய்
நீக்கம் இல் கவிகைகள் நிழற்றி மல்குவ
மாக்கிளர் பஃறொடை வானக் கம்பலந்
தூக்கிய திறன் எனத் தோன்று கின்றவே.
7
   
7865.
மேற்றலை கடவிய வெய்யன் வெம்மையால்
நோற்றலை எய்தி வான் உணங்க நோன்றிரை
ஆற்றலை முயன்று என அனிக வேலையுள்
கோல் தலை அசைவ வெண் கொடியின் கானமே.
8
   
7866.
பாங்கு அமை பதலையே முதல பல்லியம்
ஆங்கு ஒலி வழங்குவ அவுணத் தீயரைத்
தாங்கினை என்று இறை தண்டம் செய்திட
வாங்கிய திரைக் கடல் வாய் விட்டு ஒக்கும் ஆல்.
9
   
7867.
காந்தளம் சென்னியன் கடவு மா மயில்
கூந்தொறும் கூந்தொறும் குலைந்து பஃறலைப்
பாந்தளம் அசைதலும் பசலை மூக்கினால்
ஆய்ந்திடு கின்றன அகிலம் குத்தியே.
10
   
7868.
மூக்கு உடை அலகினால் முகிலைக் கீறியே
ஊக்கொடு பரல் என உருமுப் பற்றும் ஆல்
தீக்கிளர் அன்னது ஓர் செய்ய சூட்டு உடைக்
கூக்குரல் வாரணம் கொடியது ஆகையால்.
11
   
7869.
இந்நிகழ் உற்றிட எழுந்த தானைகள்
முன் அயல் கடைக் குழை மொய்த்துச் சென்றிடப்
பன்னிரு மொய்ம்புடைப் பகவர் மேலவன்
அந் நகரத்தினும் அகன்று போயினான்.
12
   
7870.
பொரியரை விளவு கால் புனிற்றுத் தீங்கனி
வரு பயன் கொண்டு தாம் வறிது வீழ்த்து எனக்
கரி இனம் பாரிடக் கணங்கள் ஆர்ப்பினால்
வெருவின உணர்வில மயங்கி வீழ்ந்தவே.
13
   
7871.
சாற்றிடில் தம்வினை தம்மைச் சூழும் ஆல்
ஆற்றலில் பெற்ற மதலைக்கும் வல்லியம்
மாற்றரும் துப்பு உடை வயவர் தானையுள்
ஏற்றுரி முரசினுக்கு இடைந்து அழிந்தவே.
14
   
7872.
குஞ்சரம் எறிந்திடும் கொலைவல் கோளரி
எஞ்சலில் கயமுகர் எண் இல் பூதர்கள்
விஞ்சிய பிளிற்று ஒலி வினவி மெய் பனித்து
அஞ்சின நஞ்சு எழ அயர்ந்த தேவர் போல்.
15
   
7873.
உரங்குறை போழ்தில் யார் ஒடுங்கல் இல்லவர்
வரங்குறை மான் முக வயவர் ஓதையால்
கரங்குறைவு இன்றி நீள் கடுங்கண் யாளி போய்க்
குரங்கு உறை சூழலுட் குலைந்து புக்கவே.
16
   
7874.
வசை படு பாரிடம் வழுக்கலில் வகை
மிசை படும் ஊற்றமாய் மேல் கொண்டு உற்றன
இசை படு பாரிடம் இடிக்கும் கொட்பினால்
அசை படு கின்றன அடுக்கல் ஆனவே.
17
   
7875.
உரகமும் மடங்கலும் ஒடுங்கி உட்கியே
வரைகளின் முழை புக வானத்து ஆர்ப்பன
அரிமுக வீரர் தம் அரவத் தன்மையால்
இரிவன புரள் வன எழிலி ஏறு எலாம்.
18
   
7876.
காட்டக எயினர் தம் கல் என் சும்மையால்
கூட்டுறை புட்குலம் குலைவு உற்றால் எனச்
சூட்டு உடை வாரணம் தோகை ஆர்ப்பது
கேட்டு உளம் நடுங்கினர் கிலேசம் கொண்டுளார்.
19
   
7877.
அரங்கு உறு மதலை மேல் ஆடு நீரரின்
மரங்களை அலைத்திடு கடுவன் மந்திகள்
கரம் குலைவோடு பல் காட்டி வாய் வெரீஇ
இரங்கின சேவல் அம் கொடி இடிப்பினால்.
20
   
7878.
ஆரண முழங்கு ஒலி அமரர் வாழ்த்து ஒலி
சீரண இய வொலி சேனைப் பேர் ஒலி
காரணம் இல்லவன் கடவு மா மயில்
வாரண ஒலிகளான் மறைதல் உற்றவே.
21
   
7879.
இடன் உறு குறிஞ்சியில் இனைய தன்மையால்
நடவை கொள் பெரும் படை நடுவண் ஏகியே
சுடர் பொழி வேலினான் தூய கூடலின்
குடதிசை அமர் பரம் குன்றை எய்தினான்.
22
   
7880.
ஆவது ஓர் பொழுதினில் அங்கண் முன் உறை
மூவிரு தவத்தரும் முளரியான் முதல்
ஏவரும் எந்தையை இறைஞ்சி இவ்விடை
மேவுதி சிறந்தது இவ் வெற்பு என்று ஓதினார்.
23
   
7881.
என்றலும் முருகவேள் யாமும் இவ்வரைச்
சென்றிட நினைந்தனம் அதனைச் செப்பினீர்
நன்று உமது எண்ணமும் நமது சிந்தையும்
ஒன்றிய வே என உவப்பில் கூறினான்.
24
   
7882.
மைம்மலை துழனியும் வடிவம் பெற்றுடைக்
கைம்மலை பொழி தரு கடாம் கொள் சாரலின்
அம்மலை ஏறினன் அமலை தன்னொரு
செம்மலையாகி வந்து உதித்த சிற்பரன்.
25
   
7883.
வற்றரும் திரைக் கடல் வடாது மாதிரப்
பொற்றையை நுகர்ந்து எனப் புத சேனைகள்
கொற்றவன் வரு பரங் குன்றின் சாரலைச்
சுற்றிய மிசையினும் துவன்றிப் புக்கவே.
26
   
7884.
காலை அங்கு அது தனில் கடவுள் கம்மியன்
மாலுறு கிரிதனில் வரம்பு இல் வீதியும்
கோல நல் தெய்வதக் குலமும் கோயிலும்
சோலையும் வாவியும் துவன்ற நல்கினான்.
27
   
7885.
அத்துணை எம்பிரான் அமரர் கம்மியன்
கைத் தொழில் நோக்கியே கருணை செய்து போய்ச்
சித்திர மறுகிடைச் சேனை வீரரை
வைத்தனன் மந்திர வரைப்பை எய்தினான்.
28
   
7886.
ஏயின மஞ்ஞை நின்று இழிந்து நான்முகன்
மாயவன் மகபதி வயவர் மற்றையோர்
ஆயினர் புடைவர அவையின் ஊடுபோய்ச்
சீய மெல்லணை மிசைச் சிறப்பின் வைகினான்.
29
   
7887.
பரீ இயயல் வந்திடு பங்கயன் முதல்
மரீஇயினர் தமை எலாம் வயின் வயின் தொறும்
ஒரீயினன் அமரரை ஒல்லை ஏவினான்
பொரீஇயினர் இல்லதோர் புனித மேலையோன்.
30
   
7888.
குலக்கிரி பொருவிய குறளின் வேந்தரும்
வெலற்கு அரும் திறல் உடை வீர மொய்ம்பனும்
இலக்கரும் எண்மரும் யாரும் எந்தை தன்
மலர்க் கழல் தொழுதனர் மருங்கின் ஈண்டினார்.
31
   
7889.
ஏவலின் இயன்றனர் இனையர் நின்றிட
மூவிரு பராசர முனிசிறார்களும்
சேவலை உயரிய தேவ நாயகன்
பூவடி அருச்சனை புரிந்து போற்றினார்.
32
   
7890.
வழிபடு புதல்வர்கள் வழுத்தி நின்றுழி
உழுவல் அன்போடு கண்ணோடிச் செஞ்சடைக்
குழவி வெண் பிறையினான் கூறும் தொல்லருள்
முழுவதும் நினைந்தனன் முற்றும் உணர்ந்துளான்.
33
   
7891.
சலம் புரியும் பராசரன் எனும் முனி
குலம் புரி தவம் எனும் குமரர் தேர் உறப்
புலம் புரி போதகப் பொருண்மை யாவையும்
நலம் புரி குமரவேள் நவின்று வைகினான்.
34
   
7892.
பொருவரு மகேந்திரப் புரத்தை நீங்கியே
தரணியில் வந்தவா சாற்றினாம் இனிப்
பெருமை கொள் இந்திரன் பெண்ணை எம்பிரான்
திருமணம் செய்திடும் செய்கை செப்புவாம்.
35