வேள்விப் படலம்
 
9535.
இகந்த சீர் பெறும் இப் பெரும் சாலையில்
அகந்தை மிக்க அயன் பெரும் காதலன்
மகம் புரிந்தது மற்று அது சிந்திடப்
புகுந்த வாறும் பொருக்கு எனக் கூறுகேன்.
1
   
9536.
மருத் துழாய் முடி மால் அயன் பாங்கு உற மகத்தின்
கருத்தன் ஆகிய தீயவன் முன்னமே கருதி
வரித்த மேலவர் தங்களை நோக்கியே மரபின்
இருந்து முத் தழல் என்றலும் நன்று என இசைந்தார்.
2
   
9537.
முற்றும் நாடிய இருத்தினோர் அரணியின் முறையால்
உற்ற அங்கியை வேதிகைப் பறப்பை மேல் உய்த்துச்
சொற்ற மந்திர மரபினால் பரிதிகள் சூழ்ந்து
மற்றும் உள்ளது ஓர் விதிஎலாம் இயற்றினர் மன்னோ.
3
   
9538.
ஆங்கு முத்தழல் விதிமுறை செய்தலும் அயன் சேய்
பாங்கர் உற்றிடும் இருத்தினர் யாரையும் பாரா
நீங்கள் உங்களுக்கு ஆகிய செய்கையை நினைந்து
தூங்கல் இன்றியே புரிமின் ஓ கடிது எனச் சொன்னான்.
4
   
9539.
சொன்ன வாசகம் கேட்டலும் இருத்தின் ஓர் தொகையின்
முன்னம் ஆகிய அம் மகம் தனக்கு அவி முழுதும்
வன்னி ஆதி ஆம் சமிதையும் தருப்பையும் மற்றும்
இன்ன போல்வதும் கொடு வழங்கினர்களால் இருவர்.
5
   
9540.
அந்த வேள்வி செய்வித்தனர் ஒருவரால் அவிகள்
எந்தை அல்லவர் கொள்ளவே அவர் அவர்க்கு இசைத்த
மந்திரம் தனைப் புகன்றனர் ஒருவர் அவ்வானோர்
தந்தமைக் குறித்து அழைத்தனர் ஒருவர் பேர் சாற்றி.
6
   
9541.
மற்று அவர்க்கு எலாம் அமைந்திடும் அவிகளை                                     மலர்க்கை
பற்றி அங்கி வாய் அளித்தனர் ஒருவர் அப் பரிசின்
அற்றம் நோக்கியே இருந்தனர் ஒருவர் அங்கு அதற்கு
முற்றும் நல் அருள் புரிந்தனர் ஒருவர் அம் முதல்
                                    போல்.
7
   
9542.
இருத்தினோர்களும் பிறரும் ஈது இயற்றுழி ஆக
கருத்தன் ஆகிய தக்கன் அத் தேவரைக் கருதிப்
பரித்து நுங்குதிர் என்று அவி புரிதொறும் பகர்ந்தே
அருத்தி உற்றனன் கடவுளர் தமக்கு எலாம் அமுதின்.
8
   
9543.
திருந்துகின்ற நல் சுவையினால் தூய்மை ஆல் திகழும்
மருந்து போன்றன என்னினும் உயிர் தொறும் மனத்தும்
இருந்த எம்பிரான் அன்றியே மிசைதலின் இமையோர்க்கு
அருந்தும் நீர் எலாம் நஞ்சு எனல் ஆகிய அவிகள்.
9