வீரபத்திரப் படலம்
 
9605.
அந்த எல்லை எமை ஆளுடைய அண்ணல் அகிலம்
தந்த மங்கை தனது அன்பினை வியந்து தளரும்
சிந்தை கொண்ட செயல் முற்றிடும் மாறு சிறிதே
புந்தியுள் உற நினைந்தனன் நினைந்த பொழுதே.
1
   
9606.
பொன்னின் மேருவின் இருந்திடும் பொலம் குவடு எலாம்
மின்னும் வெள்ளி முளை மேல் கொடு விளங்கியது என
மன்னு தண் சுடர் மதிக் குறை மிலைச்சும் மவுலிச்
சென்னி ஆயிரமும் வான் முகடு சென்று ஒளிரவே.
2
   
9607.
விண் தலம் தனில் இலங்கு சுடரின் மிடலினை
கண்டல் அந்தரம் ஒதுங்குவன போல் கதிர் உலா
மண்டலம் திகழ் முகம் தொறும் வயங்கு பணியின்
குண்டலங்கள் இணை கொண்ட குழை கொண்டு உலவே.
3
   
9608.
ஆன்ற திண் கடல் வறந்திட இறந்த தன் இடைத்
தோன்று கின்றது ஓர் மடங்கல் வலி இன்று தொலைய
மூன்று கண்கள் முகம் ஆயிரமும் மேவி முனிவால்
கான்ற அங்கிகளின் அண்டம் முழுதும் கரியவே.
4
   
9609.
சண்ட மாருதமும் அங்கியும் ஒதுங்கு தகவால்
துண்ட மீது உறும் உயிர்ப்புடன் எழுந்த சுடு தீ
அண்ட கோளமுடன் அப்புறம் ஆகி அழியாக்
கொண்டல் ஊடு தவழ் மின்னு என வேகுஉலவவே.
5
   
9610.
மலரின் வந்து உறையும் நான் முகன் முகுந்தன் மகவான்
புலவர் தம் புகழ் அனைத்தையும் நுகர்ந்த பொழுதில்
சில ஒழும் கொடி தழின் புடைகள் சிந்தி எனவே
நிலவு செய்த பிறை வாள் எயிறு நின்று இலகவே.
6
   
9611.
துண்டம் ஈதின் அழலோ இதழின் வீழ்ந்த சுசியோ
மண்டு தீ விழிகள் கான்ற கனலோ மனம் மிசைக்
கொண்டது ஓர் வெகுளி ஆகிய கொடும் தழல் அதோ
எண் திசா முகமும் ஆகி அடுகின்றது எனவே.
7
   
9612.
தண்டல் இன்று உறையும் ஆவிகள் வெரீஇத் தளர மேல்
அண்டர் அண்ட நிரை விண்டிட அவற்று இடை உறும்
தெண் திரைக் கடல் கலங்க அடல் உற்ற சிவனின்
கொண்ட ஆர்ப்பு முழு எண் திசை குலாய் நிமிரவே.
8
   
9613.
தரா தலங்கள் முழுது உண்டு உமிழுகின்ற தகை சேர்
அரா இனங்கள் தமை அம் கடகம் அங்கதம் ஒடே
விராய மென்தொடிகளா விடுபு விண் உற நிமிர்ந்து
இராயிரம் கொள் புயம் எண்திசை எலாம் செறியவே.
9
   
9614.
வரத்தின் மே தகைய வேதன் முதலான வலியோர்
சிரத்தின் மாலிகை அடுக்கல் அவர் என்பு செறிபூண்
பெருத்த கேழலின் மருப்பினுடன் ஆமை பிறவும்
உரத்தின் மேவு புரி நூலொடு பெயர்ந்து ஒளிரவே.
10
   
9615.
குந்தம் வெம் பலகை தோ மரம் எழுக்குலிசம் வாள்
செம் தழல் கழு முள் சூலமொடு பீலி சிலை கோல்
முந்து தண்டம் அவிர் ஆழி வசி ஆல முதலாம்
அந்தம் இல் படைகள் அங்கைகள் ஒருங்கு உலவவே.
11
   
9616.
ஐய மாழை தனின் மாமணியின் ஆகி அறிவார்
செய்யலாது வரு பேர் அணிகளோடு சிவணிப்
பை உலாவு சுடர் வெம் பணிகளான பணியும்
மெய் எலாம் அணி இடம் தொறும் மிடைந்து இலகவே.
12
   
9617.
நெஞ்சல் அஞ்சல் அரும் பிறவி நீடு வினையின்
சஞ்சலம் சலம் அகன்ற தனது அன்பர் குழுவை
அஞ்சல் அஞ்சல் எனும் அம் சொல் என விஞ்சு சரண்                                         மேல்
செம் சிலம் பொடு பொலம் கழல் சிலம்பம் இகவே.
13
   
                வேறு  
9618.
அந்தி வான் பெரு மேனியன் கறை மிடறு அணிந்த
எந்தை தன் வடிவு ஆயவன் நுதல் விழி இடையே
வந்து தோன்றியே முன் உற நின்றனன் மாதோ
முந்து வீர பத்திரன் எனும் திறல் உடை முதல்வன்.
14
   
9619.
அங்க வேலையில் உமையவள் வெகுளியால் அடல் செய்
நங்கை ஆகிய பத்திர காளியை நல்கச்
செம் கை ஓர் இரண்டாயிரம் பாதி செம் முகமாய்த்
துங்க வீரபத்திரன் தனை அடைந்தனள் துணையாய்.
15
   
9620.
எல்லை தீர் தரு படைக் கலத்து இறையும் அவ் இறைவல்
புல்லுகின்றது ஓர் திறல் உடைத் துணைவியும் போலத்
தொல்லை வீரனும் தேவியும் மேவரு தொடர்பை
ஒல்லை காண் உறா மகிழ்ந்தனர் விமலனும் உமையும்.
16
   
9621.
தன்னை வந்து அடை பத்திரை தன்னொடு தடம்தாள்
மன்னு வார் கழல் கலித்திட வலம் செய்து வள்ளல்
அன்னை தாதையை வணங்கியே அவர் தமை நோக்கி
முன்ன நின்று கை தொழுதனன் இவை சில மொழிவான்.
17
   
9622.
மால் அயன் தனைப் பற்றி முன் தந்திடோ மற வெம்
காலன் ஆவியை முடித்திடோ அசுரரைக் களைகோ
மேலை வானவர் தம்மையும் தடிந்திடோ வேலை
ஞாலம் யாவையும் விழுங்குகோ உலகு எலாம் நடுக்கோ.
18
   
9623.
மன்னு உயிர்த்தொகை துடைத்திடோ வரம்பி இல ஆகித்
துன்னும் அண்டங்கள் தகர்த்திடோ நுமது தூ மலர்த்
                                         தாள்
சென்னிஇல் கொடே ஆவது ஒன்று என்னினும் செய்வன்
என்னை இங்கு நீர் நல்கியது எப் பணிக்கு என்றான்.
19
   
9624.
என்ற வீரனை நோக்கியே கண் நுதல் எம்மை
அன்றி வேள்வி செய் கின்றனன் தக்கன் அவ்விடை நீ
சென்று மற்று எமது அவியினைக் கேட்டி அத் தீயோன்
நன்று தந்தனனே எனின் இவ்விடை நடத்தி.
20
   
9625.
தருதல் இன்று எனின் அனையவன் தலையினைத்
                                    தடிந்து
பரிவினால் அவன் பால் உறு வோரையும் படுத்துப்
புரியும் எச்சமும் கலக்குதி அங்கு அது பொழுதின்
வருதும் ஆயிடை ஏகுதி என்றனன் வள்ளல்.
21
   
9626.
அந்த வேலையில் பத்திரை தன்னொடும் அடலின்
முந்து வீரன் அவ் இருவர் தம் பதங்களின் முறையால்
சிந்தை அன்புடன் வணங்கியே விடை கொண்டு சிவனை
நிந்தை செய்தவன் வேள்வியை அழித்திட நினைந்தான்.
22
   
9627.
உன்னி மற்று அவண் நீங்கியே ஆற்றவும் உருத்துத்
தன் உயிர்ப் பினால் அளவை இல் கணங்களைத் தந்து
துன்னு கின்ற மெய் வியர்ப்பினால் சிலவரைத் தொகுத்து
வன்னி போல் மயிர்க் கால் தொறும் சிலவரை வகுத்தான்.
23
   
9628.
மொழியினில் பல பூதரை அளித்தனன் முளரி
விழியினில் பல பூதரை அளித்தனன் வேணி
உழியினில் பல பூதரை அளித்தனன் உந்திச்
சுழியினில் பல பூதரை அளித்தனன் தூயோன்.
24
   
9629.
தோளில் எண் இலா வீரரை அளித்தனன் சுவையின்
கோளில் எண்இலா வீரரை அளித்தனன் குளிர் பொன்
தாளில் எண் இலா வீரரை அளித்தனன் தடக்கை
வாளில் எண் இலா வீரரை அளித்தனன் வலியோன்.
25
   
9630.
கையினில் சில பூதரை அளித்தனன் களத்தில்
வெய்ய மார்பினில் கன்னத்தில் சிலவரை விதித்தான்
ஐயது ஓர் முழம் தாள் தனில் சிலவரை அளித்தான்
குய்யம் மீதினில் ஊருவில் சிலவரைக் கொடுத்தான்.
26
   
9631.
இன்ன தன்மையில் வீர பத்திரன் எனும் இறைவன்
தன்னை நேர்வரும் எண் இலா வீரரைத் தந்து
துன்னு கின்றுழிப் பத்திரை என்பது ஓர் துணைவி
அன்ன பண்பினில் காளிகள் தொகையினை அளித்தாள்.
27
   
9632.
வீரப்பத்திர உருத்திரன் வேறு வேறு அளித்த
சாரதர்க்கு உளம் ஓர் சிலர் நீல் நிறம் தழைப்போர்
கோரபத்திரம் மணிக்கலன் மின்னுவில் குலவக்
கார் எனப் பொலிந்து உரும் எனக் கழறுகின்றனர் ஆல்.
28
   
9633.
அக்கு மாலையும் மணிகளும் உடுக்கள் போல் அவிரப்
பக்க வாண் நிலா எயிறுகள் பிறை எனப் பயில
மிக்கு நீடிய வடிவினர் ஆகியே மேல் ஆம்
செக்கர் வான் எனச் சேந்து எழு பூதர்கள் சிலரே.
29
   
9634.
அண்டரைத் தொலை வித்திடும் வீரனை அடைந்தோர்
பிண்டம் உற்றும் வான் நிறத்தினர் பூதரில் பெரியோர்
பண்டிரைத் தொரு முனிமகன் பின் தொடர் பாலின்
தெண் திரைக் கடல் தொகை எனக் கிளர்ந்தனர் சிலரே.
30
   
9635.
வெம் பொன் மேனியர் அணுகுறின் அவர் தமை
                                      விரைவில்
பைம் பொன் மேனியர் ஆக்கும் அத் திருநிழல் பரப்பி
அம் பொன் மார்பு உடை முகுந்தனில் வடிவுடையவராய்ச்
செம் பொன் மால் வரை நிரை எனத் தோன்றினர் சிலரே.
31
   
9636.
மேயவான் பசப்பு ஊர் தரு மேனியர் ஆகிக்
காயம் இத்துணை எனப்படாக் கணக்கினர் ஆகி
மாயர் கண் துயில் சேக்கையைத் தங்கணே வகுத்துச்
சேய தொல் மரத் தொகை எனக் கெழீஇ யினர் சிலரே.
32
   
9637.
அங்கு அவர்க்குள் அடல் விடை ஆனைந்
தங்கி நின்று தயங்கினர் ஓர் சிலர்
பொங்கு சீற்றப் பொருதிறல் வால் உளைச்
சிங்க மா முகம் ஆய்த் தெழித்தார் சிலர்.
33
   
9638.
புழை கொள் கை உடைப் போர் வலி யாளியின்
முழை கொள் மாமுகம் ஆகி மொய்த்தார் சிலர்
வழுவை யான் அனம் மன்னினர் ஓர் சிலர்
உழுவையின் முகம் ஆகி உற்றார் சிலர்.
34
   
9639.
அலை முகப் பரி ஆனனம் எய்தியே
கொலை முகத்துக் குழீஇயினர் ஓர் சிலர்
மலை முகத்து மரை களிறு எண்கு உடன்
கலை முகத்துக் கவின் அடைந்தார் சிலர்.
35
   
9640.
இனியர் தம் குழு எண் இல அன்னர் கைப்
புனைய நின்ற பொருபடை எண் இல
வினை கொள் வன்மையும் வீரமும் இற்று என
நினைவதற்கு அரிது எங்கன் நிகழ்த்து கேன்.
36
   
9641.
கையில் எண் இல் படையினர் காய் கனல்
செய்ய பூணினர் தீக் கலுழ் கண்ணினர்
வெய்ய சொல்லர் வெருவரு மேனியர்
வையம் யாவும் மடுக்கு உறும் வாயினார்.
37
   
9642.
கட்டு செம் சடைக் கற்றையர் காய்ந்து எழு
நெட்டு அழற்கு நிகர் வரு நாவினர்
வட்டி மாலைகள் மானும் எயிற்றினர்
தொட்ட மூவிலை சூலம் துளக்குவார்.
38
   
9643.
துண்டம் மீது சொரி தரும் தீயினர்
அண்ட கூடம் அலைத்திடும் கையினர்
சண்ட மாருதம் தாழ்க்கும் செலவினர்
உண்டு போர் என்று உளம் தளிர்ப்பு எய்துவார்.
39
   
9644.
மடித்த வாயினர் வானவர் என்பினால்
தொடுத்த கண்ணி துயல் வரு மார்பினர்
தடித்த தோளர் தனித் தழல் என்னினும்
பிடித்து நுங்கும் பெரும் பசி மிக்கு உளார்.
40
   
9645.
நச்சில் தீயவர் நால் நில மங்கையும்
அச்சுற்று எஞ்ச அடிகள் பெயர்த்துளார்
கச்சை தோல் மிசை கட்டிய தட்டியர்
உச்சிட்டம் என்று உலகினை உண்கிலர்.
41
   
9646.
சூழி யானை துவன்றிய மால் வரைப்
பாழி ஆகப் படர் செவி வாயினர்
ஊழி மாருதம் உட்கும் உயிர்ப்பினர்
ஆழி ஆக அகன்ற அகட்டினார்.
42
   
9647.
ஆழ்ந்த சூர்ப் பசும் கண்ணர் அடித்துணை
தாழ்ந்த கையர் தடக்கு உறும் தாளினர்
வீழ்ந்து மிக்க வியன் அதரத்தினர்
சூழ்ந்த பூதத் தொகையினர் யாவரும்.
43
   
9648.
அத்தகை நின்றிட அண்ணலுடன் சேர்
பத்திர காளி பயந்திடு கின்ற
கத்து கடல் புரை காளிகள் தம்மை
இத்துணையே என எண்ண அரிதாம் ஆல்.
44
   
9649.
அந்தம் இல் பல் படை அம் கையில் ஏந்தி
உந்திய தும்பைகள் உச்சி மிலைச்சிச்
சுந்தரம் எய்திய தோற்றம் அது ஆகி
விந்தை எனச் சிலர் மேவினர் அன்றே.
45
   
9650.
தோளின் மிசைத் திரி சூலம் இலங்கக்
கோள் இல் உயிர்ப் பலி கொள்கலன் ஏந்தித்
தாள் இடை நூபுர சாலம் இலங்கக்
காளிகள் போல் சிலர் காட்சி மலிந்தார்.
46
   
9651.
வாகினி எங்கு உள வென்றிட மல்கு
மோகினி போல் சிலர் மொய்த்தனர் மாயச்
சாகினிபோல் சிலர் சார்ந்தனர் அல்லா
யோகினி போல் சிலர் உற்றனர் அம்மா.
47
   
9652.
அயிர் உற அண்டம் அனைத்தையும் எற்றா
உயிர் அவி நுங்கிய உன்னி எழுந்தே
செயிர் அவியாது தெழித்திடும் தொல்நாள்
வயிரவி போல் சிலர் மன்னினர் மாதோ.
48
   
9653.
நீடு அலை மாலை நிலத்து இடை தோய
ஆடு உறு பாந்தள் அணிக்கலன் மின்ன
ஈடு உறு வான் உறும் ஏறு என ஆர்த்தே
மோடிகள் ஆம் என மொய்த்தனர் சில்லோர்.
49
   
9654.
இவ் வகை மாதர்கள் யாவரும் வெவ்வேறு
ஐ வகை மேனியர் ஆய் வதனங்கள்
கை வகை எணிலர் ஆய்க் கவின் மாட்சிச்
செவ்வியராய்ச் செரு மேல் கிளர்கின்றார்.
50
   
9655.
கணம் திகழ் அனைய பூதர் காரிகை மார்கள் யாரும்
அணங்கு உறு காளி தன்னோடு ஆண்தகை வீரன்
                                      தாளில்
பணிந்தனர் பரசி அன்னார் பாங்கரில் விரவிச் சூழ்ந்து
துணங்கை கொடு ஆடிப் பாடித் துள்ளியே போதல்                                       உற்றார்.
51
   
9656.
ஈட்டம் மிக்கு எழுந்து செல்லும் இன்னது ஓர் பூதர்                                       தம்மில்
மோட்டு இகல் பானு கம்பன் முதலிய கணங்கள் முத்தி
வீட்டு உடைத் தலைவன் ஆன வீரப்பதிரன் முன் ஆகி
ஈட்டு உடைப் பல்லியங்கள் யாவையும் இயம்பிச்
                                      சென்றார்.
52
   
9657.
கொண்ட பேர் ஆற்றலோடும் குலவிய வீரன் தன்பால்
அண்டம் மேல் உரிஞ்சப் பல்வேறு அணிப் பெரும்                             கவிகை கொண்டும்
விண்டு உலாம் கவரி ஈட்டம் வீசியும் சேரல் உற்றார்
தண்டனே பினாகி சிங்கன் ஆதி ஆம் தறுகண் பூதர்.
53
   
9658.
பாசி இழை மகளிர் சில்லோர் பத்திரை பாங்கர் ஆகித்
தேசு உடைக் கவிகை ஈட்டம் திருநிழல் பரப்ப ஏந்தி
மாசு அறு கவரி வட்டம் வரம்பு இல இரட்டிப் பல்வேறு
ஆசிகள் புகன்று செம்பொன் அணிமலர் சிதறிப்                                      போந்தார்.
54
   
9659.
படர்ந்திடு புணரி போலப் பார்முழுது ஈண்டித் தானை
அடங்கலும் ஆர்க்கும் ஓதை அகிலமும் செறிய
                              விண்ணும்
உடைந்தது அவ் அண்டம் கொல்லோ உதுகொலோ                               இதுவோ என்னா
மிடைந்த பல் அண்டத் தோறும் விதிர்ப் பொடும்                               விளம்பல் உற்றார்.
55
   
9660.
பூழிகள் எழுந்த அம்மா புவி எலாம் பரவித் தொல்பேர்
ஆழியும் அடைத்து வான்புக்கு அச்சுதன் பதம் காறு
                                    ஏகி
ஊழியின் முதல்வன் ஆர்க்கும் ஒலியினால் உடைந்த                                     அண்டப்
பாழிகள் தொறும் உற்று எல்லாப் புவனமும் பரந்த                                     அன்றே.
56
   
9661.
அங்கு எழு பூழி தன்னால் அவர் விழி கலுழும் தீயால்
செம் கையில் படைகள் தேய்ப்பச் சிதறிய கனலால்                                         வையம்
எங்கணும் எரிகள் துன்னி இரும் புகைப் படலம் ஈண்டிக்
கங்குலும் பகலும் காணாக் கடைப் பகல் போன்றது                                         அன்றே.
57
   
9662.
இப்பெரும் தானை சூழ எம்பிரான் எழுந்து சீற்றத்
துப்புடன் ஏகித் தக்கன் தொல் மகம் புரியும் சாலை
வைப்பினை அணுகித் தன்பால் வருபடைத் தலைவர்க்                                       கொன்று
செப்பினன் என்ப மன்னோ சேண் உரும் ஏறு நாண.
58
   
9663.
பற்று அலர் புரம் மூன்று அட்ட பரமனை இகழ்ந்து
                                    நீக்கிச்
சிற்றினம் பொருள் என்று உன்னிச் சிறு விதி என்னும்                                     தீயோன்
இற்றிடும் நெறியால் வேள்வி இயற்றும் இச் சாலை
                                    வாயில்
சுற்று ஒடு சேமம் செய்து துயக்கு அறக் காத்திர்
                                    என்றான்.
59
   
9664.
என்றலும் தானையோர்கள் எயில் புறம் முற்றும் சூழ்ந்து
நின்றனர் வானின் ஊடு நெருங்கினர் வாய்தல் தோறும்
சென்றனர் கொடிய தக்கன் சேனையாய் எதிர்ந்தோர்                                      தம்மைக்
கொன்றனர் அவர் ஊன் துய்த்துக் கூற்றனும் உட்க                                      ஆர்த்தார்.
60