தக்கன் சிவபூசை செய் படலம்
 
9940.
மருமலர் அயன் இவை வகுப்ப நாடியே
புரிகுவன் அஃது எனப் புகன்று தாதை தாள்
பரிவொடு சிறுவிதி பணிந்து காசி ஆம்
திரு நகர் அதன் இடைச் சேறல் மேயினான்.
1
   
9941.
சென்றனன் காசியில் சிறந்த தொல் மணி
கன்றிகை ஒரு புடை கங்கை வேலையில்
பொன் திகழ் செம் சடைப் புனிதற்கு ஆலயம்
ஒன்று முன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான்.
2
   
9942.
அருள் உருவு ஆகியே அகிலம் ஆவிகள்
தருவதும் கொள்வதும் ஆகித் தாணுவாய்
உரு அருவு ஆகிய ஒப்பு இல் பேற் ஒளித்
திரு உருவு ஒன்றினைச் சிவனுக்கு ஆக்கினான்.
3
   
9943.
நாயகன் மொழிதரு நவை இல் ஆகமம்
மேயின முறை தெரி விரதன் ஆகியே
பாய் புனல் புனை சடைப் பரமன் தாள் மலர்
ஆயிரம் ஆண்டு காறும் அருச்சித்து ஏத்தினான்.
4
   
9944.
அருச்சனை புரிதலும் அயன் தன் காதலன்
கருத்து உறும் அன்பினைக் கண்டு கண் நுதல்
பொருக்கு என வெளிப்படப் புகழ்ந்து பொன் உலாம்
திருக் கழல் வணங்கினன் தெளிவு பெற்று உளான்.
5
   
9945.
அகந்தை அது ஆகியே ஐய நின் தனை
இகழ்ந்தனன் என்கணே எல்லை இல் பவம்
புகுந்தன அவை எலாம் போக்கி நின் இடைத்
தகும் பரிசு அன்பினைத் தருதி ஆல் என்றான்.
6
   
9946.
ஆயவை தொலைத்து அளித்து அவன் தன் பூசையின்
நேயம் அது ஆகியே நிமலன் தன் கண
நாயக இயற்கையை நல்கி வல்லையில்
போயினன் தக்கனும் புனிதன் ஆயினான்.
7
   
9947.
கங்கைச் சடையான் தனைத் தக்கன் அக் காசி தன்னில்
அங்கு அர்ச்சனை செய்திடப் போந்துழி அம்புயன் மால்
துங்கத்து இமையோர் இறையாவரும் சூர மாதர்
சங்கத் தவரும் மக எல்லை தணந்து போனார்.
8
   
9948.
போகு உற்றவர்கள் அனை வோரும் பொருவு இல் சீர்த்தி
வாகு உற்ற வீரன் சயம் தன்னை வழுத்தித் தங்கட்கு
ஆகு உற்ற தொல்லைத் தலம் தோறும் அடைந்து மாது ஓர்
பாகத்து அமலன் தனைப் பூசனைப் பண்ணல் உற்றார்.
9
   
9949.
ஆராதனைகள் புரிந்தே அனை வோரும் எங்கும்
பேராது நிற்கும் பெருமான் அருள் பெற்று மெய்யில்
தீராத சின்னங்களும் தீர்ந்து சிறந்து தத்த
மூர் ஆகியது ஓர் பதம் மேவி உறைதல் உற்றார்.
10
   
9950.
மேதக்க தக்கன் மகம் தன்னில் விரைந்து புக்கு ஆங்கு
ஏதத்து அடிசில் மிசைந்தே பொருள் யாவும் ஏற்றுப்
பூதத் தரின் மாய்ந்து எழுந்தே தம் புரிகள் தோறும்
பேதைத் தொழில் அந்தணர் யாரும் பெயர்ந்து போனார்.
11
   
9951.
என்று இங்கு இவைகள் குரவோன் இசைத்திட்டல் கேளா
நன்று என்று சென்னி துளக்கு உற்று நனி மகிழ்ந்து
குன்றின் சிறை கொய்தவன் தந்த குரிசில் உள்ளத்து
ஒன்றும் கவலை இலன் ஆகி அவ் உம்பர் உற்றான்.
12