கந்த விரதப் படலம்
 
9952.
உரை செறி மகவான் செம்மல் உம்பரில் இருப்ப இம்பர்
முரசு எறிதானை வேந்தன் முசுகுந்தன் என்னும் வள்ளல்
விரை செறி நீபத் தண்தார் வேலவன் விரதம் போற்றித்
திரைசெறி கடல் பார் ஆண்ட செயல் முறை விளம்பல்                                       உற்றாம்.
1
   
9953.
முந்து ஒரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன்                                     என்னும்
அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக்
கந்தவேள் விரதம் எல்லாம் கட்டுரை பெரியோய் என்ன
மைந்த நீ கேட்டி என்னா மற்று அவை வழாது                                     சொல்வான்.
2
   
9954.
எள் அரும் சிறப்பின் மிக்க எழுவகை வாரம் தன்னுள்
வெள்ளி நாள் விரதம் தானே விண்ணவர் உலகம் காத்த
வள்ளல் தன் விரதம் ஆகும் மற்று அது புரிந்த மேலோர்
உள்ளம் மேல் நினைந்த எல்லாம் ஒல்லையின் முடியும்                                       அன்றே.
3
   
9955.
பகிரதன் என்னும் வேந்தன் படைத்த பார் உலகை                                    எல்லாம்
நிகர் அறு கோரன் என்னும் நிருதன் அங்கு ஒருவன்                                    வௌவ
மகவொடு மனையும் தானும் வனத்து இடைவல்லை ஏகிப்
புகர் அவன் தனது முன்போய்த் தன் குறை புகன்று                                    நின்றான்.
4
   
9956.
பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல் கேளா
வேல்கரன் மகிழும் ஆற்றால் வெள்ளி நாள் விரதம்                                      தன்னை
நோற்குதி மூன்று ஆண்டு நுங்களுக்கு அல்லல் செய்த
மூர்க்கனும் முடிவன் நீயே முழுது உலகு ஆள்வை
                                     என்றான்.
5
   
9957.
நன்று என வினவி மன்னன் ஞாயிறு முதல் ஆம் நாளில்
ஒன்று எனும் வெள்ளி முற்றும் உணவினைத் துறந்து                                    முன்பின்
சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி
இன்துயில் அதனை நீத்தி ஆண்டு மூன்று அளவு                                    நோற்றான்.
6
   
9958.
நோற்றிடும் அளவில் ஐயன் நுதி உடைச் செவ்வேல்
                                   வந்து
மாற்றலன் உயிரை உண்டு வல்லையின் மீண்டு செல்லப்
போற்றியே பகீரதப் பேர்ப் புரவலன் தன் ஊர் எய்தி
ஏற்ற தொல் அரசு பெற்றான் இன்னும் ஓர் விரதம்                                    சொல்வாம்.
7
   
9959.
வாரிச மலர்மேல் வந்த நான் முகன் மதலை ஆன
நாரத முனிவன் என்போன் நலம் தகு விரதம் ஆற்றி
ஓர் எழு முனிவர் தம்மில் உயர்ந்திடு பதமும் மேல் அம்
சீர் ஒடு சிறப்பும் எய்தச் சிந்தனை செய்தான் என்றே.
8
   
9960.
நூல் படு கேள்வி சான்ற நுண்ணிய உணர்வின் மிக்கோன்
பார்ப் பதி உதவு முன்னோன் பதமுறை பணிந்து போற்றி
ஏற்பு உறு முனிவர் ஆன எழுவகையோரில் யானே
மேல்பட விரதம் ஒன்றை விளம்புதி மேலோய் என்றான்.
9
   
9961.
முன்னவன் அதனைக் கேளா முழுது அருள் புரிந்து                              நோக்கி
அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி
பொன்னடி வழிபாடு ஆற்றிப் பொருவில் கார்த்திகை
                             நாள் நோன்பைப்
பன்னிரு வரும் காறும் பரிவுடன் புரிதி என்றான்.
10
   
9962.
நாரதன் வினவி ஈது நான் புரிந்திடுவன் என்னாப்
பாருலகு அதனில் வந்து பரணி நாள் அபராணத்தில்
ஓர்பொழுது உணவு கொண்டே ஒப்பு இல் கார்த்திகை                                 நாள் தன்னில்
வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்றல்                                 உற்றான்.
11
   
9963.
தூசு ஒடு கயத்தில் மூழ்கித் துய்ய வெண் கலைகள் சுற்றி
ஆசு அறு நியமம் முற்றி ஆன்று அமை புலத்தன் ஆகித்
தேசிகன் தனது பாதம் சென்னிமேல் கொண்டு செவ்வேள்
பூசனை புரிந்திட்டு அன்னான் புராணமும் வினவினான்                                           ஆல்.
12
   
9964.
கடிப் புனல் அள்ளித் தன்னோர் கை கவித்து உண்டு                                     முக்கால்
படித்திடு தருப்பை என்னும் பாயலில் சயனம் செய்து
மடக் கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல்
அடித்துணை உன்னிக் கங்குல் அவதியும் உறங்காது                                     உற்றான்.
13
   
9965.
அந்த நாள் செல்லப் பின்னர் உரோகிணி அடைந்த                                  காலைச்
சந்தியா நியமம் எல்லாம் சடக்கு என முடித்துக் கொண்டு
கந்த வேள் செம் பொன் தண்டைக் கான் முறை
                                 வழிபட்டு ஏத்தி
வந்த மாதவர் களோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான்.
14
   
9966.
பாரணம் விதியில் செய்தோன் பகல் பொழுது உறங்கும்                                        ஆயின்
ஆரண மறையோர் தம்மில் ஐம் பதிற்று இருவர் தம்மைக்
காரணம் இன்றிக் கொன்ற கடும் பழி எய்தும் என்னா
நாரதன் மாயம் வல்லோன் இமைத்திலன் நயனம் சற்றும்.
15
   
9967.
விழியொடும் இமை கூடாமே வெய்யவன் குடபால் வீழும்
பொழுது அளவு இருந்து மற்றைப் புறத்து உள செயலும்                                       போற்றி
அழிவு அறு விரதம் இவ்வாறு ஆறு இரு வருடம் ஆற்றி
எழுவகை முனிவோருக்கும் ஏற்றம் ஆம் பதத்தைப்                                       பெற்றான்.
16
   
9968.
இந்த நல் விரதம் தன்னை ஈண்டு ஒரு மறையோன்                                       நோற்று
முந்திய மனுவே ஆகி முழுது உலகு அதனை ஆண்டான்
அந்தணன் ஒருவன் பின்னும் அவ் விரதத்தைப் போற்றிச்
சிந்தையில் நினைந்து ஆங்கு எய்தித்திரிசங்கு ஆகி                                       உற்றான்.
17
   
9969.
ஈங்கு ஒரு மன்னன் வேடன் இருவரும் நோற்று வண்மை
தாங்கிய அந்தி மானே சந்திமான் என்று பேராய்
வீங்கு நீர் உடுத்த பாரை மேலை நாள் புரத்தார் என்ப
ஆங்கு அவர் பின் நாள் முத்தி அடைவது திண்ணம்                                        அம்மா.
18
   
9970.
இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று
முப் புவனத்தின் வேண்டும் முறைமையை அடைந்த நீரார்
மெய்ப் படு தொகையை யாரே விளம்புவர் ஈதே அன்றி
ஒப்ப அரும் விரதம் வேறும் ஒன்று உளது உரைப்பக்                                     கேண்மோ.
19
   
9971.
வெற்பு ஓடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேல்                                       செம்கை
அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாரும்
சொல்படு துலையின் திங்கள் சுக்கில பக்கம் தன்னில்
முன் பகல் ஆதி ஆக மூ இரு வைகல் நோற்றார்.
20
   
9972.
முந்திய வைகல் ஆதி மூ இரு நாளும் காலை
அந்தம் இல் புனலின் மூழ்கி ஆடை ஓர் இரண்டு தாங்கிச்
சந்தியில் கடன்கள் செய்து தம்பவிம் பங் கும் பத்தில்
கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குல் போதில்.
21
   
9973.
நிறை தரு கட்டி கூட்டி நெய்யினால் சமைக்கப்பட்ட
குறை தவிர் மோதகத்தைக் குமர நாயகற்கு அருத்திப்
பிறவுள விதியும் செய்து பிரான் திருப் புகழ் வினாவி
உறுபுனல் சிறிது மாந்தி உபவசித்து இருந்தார் மாதோ.
22
   
9974.
ஆரண முனிவர் வானோர் அங்குஅதன் மற்றை வைகல்
சீர்' அணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை ஆற்றிப்
பாரணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ் விரதம்                                       தன்னால்
தாரணி அவுணர் கொண்ட தம் பதத் தலைமை பெற்றார்.
23
   
9975.
என்று இவை குரவன் செப்ப இறையவன் வினவி எந்தாய்
நன்று இவை புரிவன் என்னா நனிபெரு வேட்கை எய்தி
அன்று தொட்டு எண் இல் காலம் அவ் விரதங்கள்                                        ஆற்றிக்
குன்று எறி நுதிவேல் ஐயன் குரைகழல் உன்னிநோற்றான்.
24
   
9976.
ஆன காலையில் ஆறுமா முகம் உடை அமலன்
கோன் அவன் தனக்கு அருளுவான் மஞ்ஞை மேல்                                    கொண்டு
தானை வீரனும் எண்மரும் இலக்கரும் சார
வான் உளோர்களும் கணங்களும் சூழ் உற வந்தான்.
25
   
9977.
வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து
கந்த வேள் அடி பணிந்தனன் கை தொழூஉப் பரவ
அந்தம் இல் பகல் விரதங்கள் ஆற்றினை அதனால்
எந்த நல் வரம் வேண்டினை அதுபுகல் என்றான்.
26
   
9978.
என்ற காலையில் முசு முகம் உடையவன் எந்தாய்
நன்று பார் எலாம் எனது செம் கோல் இடை நடப்பான்
வென்றி மொய்ம்பினன் ஆதி ஆம் வீரரை எல்லாம்
ஒன்று கேண்மையின் துணைவராத் தருதி என்று                                   உரைத்தான்.
27
   
9979.
மன்னவன் இவ்வகை வேண்டுகோள் வினவு உறா
                                    வள்ளல்
அன்னவாறு உனக்கு உதவுவம் என்று அருள் புரிந்து
மின்னல் வாள் படை வீரமொய்ம்பன் முதல் விளம்பும்
துன்னு தானை அம் தலைவரை நோக்கியே சொல்வான்.
28
   
9980.
நோற்றல் கூடிய முசுகுந்தன் நிம்மினும் எம்பால்
ஏற்றமே தகும் அன்பினான் எழுகடல் புவியும்
போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கு அவன்
                                  புடைபோய்
ஆற்றல் கான்றிடு துணைவராய் இருத்திர் என்று                                   அறைந்தான்.
29
   
9981.
முழுது அருள் புரிதரும் கடவுள் சொல் வினவியே
                               முடிவது இல்லாச்
செழுமதித் தண் குடைச் சூர் குலம் தனை அடும் திறல்                                இனேங்கள்
பழிபட பானுவின் வழிவரும் சிறுமகன் பாங்கர் ஆகி
இழிதொழில் புரிகிலோம் என மறுத்து உரை செய்தார்                                யாரும் வீரர்.
30
   
9982.
ஞான நாயகன் அவர் மொழிதனைத் தேர்ந்து நம் உரை                                      மறுத்தீர்
ஆனது ஓர் பான்மையால் நீவிர் மானுடவராய் அவனி                                      மன்னன்
சேனை ஆகிப் புறம் போற்றியே பல் பகல் சேர்திர்                                      பின்னர்
வான் உளோர் புகழவே நோற்று நம் பக்கலில் வருதிர்                                      என்றான்.
31
   
9983.
ஐயன் வாய் மொழியினால் வீர மொய்ம்பு உடையவன்                                ஆதி யான் ஓர்
மையல் மானுடவராய்த் தொல்லை நாள் உடையது ஓர்                                வன்மை நீங்கி
மெய் எலாம் வியர் உறப் பதை பதைத்து ஏங்கியே                                விழுமம் மிக்குப்
பொய்யரேம் பிழை பொறுத்து அருடியால் என்று பொன்                                அடி பணிந்தார்.
32
   
9984.
கமலம் ஆர் செய்ய சேவடியின் மேல் தாழ்ந்து                            கைதொழுது போற்றிக்
குமரவேள் விடைதனைப் பெற்று மானவர் எலாம்
                           கொற்ற மன்னன்
தமர்களாய் ஒழுகினார் நேமி அம்படை உடைத்து தரும                            மூர்த்தி
அமரர் கோன் இளவலாய் ஆங்கு அவன் பின் செலும்                            அமைதியே போல்.
33
   
9985.
ஆயது ஓர் காலையின் முசு முகத்து இறையவன்
                             ஆடல் வேல் கை
நாயகன் பொன் பதம் வந்தியா நிற்ப நல் அருள் புரிந்தே
பாய பொன் சுடர் மணித் தோகை அம் புரவியும்
                             படைகள் ஆகும்
மா இரும் பூதரும் தானும் அந் நிலை தனில் மறைதல்                              உற்றான்.
34
   
9986.
மறைந்தனன் குமரன் ஏக மன்னவன் மகிழ்ச்சி கொண்டு
சிறந்திடு கருவூர் என்னும் திருநகர் அரசின் மேவி
அறம் தரு மாடவீதி அளப்பு இல புரிவித்து ஆங்கே
நிறைந்திடு வீரர் தம்மை நிலைபெற இருத்தினானே.
35
   
9987.
ஆயவர் தங்கட்கு எல்லாம் அரும் பெறல் ஆக்கம் உள்ள
தேயமும் கரி தேர் வாசித் திரள் களும் வரிசை முற்றும்
தூய பல் சனங்கள் ஆகும் தொகுதியும் உதவித் தண்ட
நாயக முதல்வர் ஆக நல்கினன் ஞால மன்னன்.
36
   
9988.
அன்னது ஓர் காலம் தன்னில் அரம்பையர் அவனி                                   ஆளும்
மன்னவர் தம் பால் தோன்றி வளர்தலும் வாகை                                   மொய்ம்பின்
முன்னவன் முதலோர்க்கு எல்லாம் முசுகுந்த வேந்தன்                                   அந்தக்
கன்னியர் தம்மைக் கூவி கடிமணம் இயற்று வித்தான்.
37
   
9989.
அந்தம் இல் வன்மை சான்ற ஆடலம் புயத்தோன் புட்ப
கந்தி என்று உரை பெற்று உள்ள கன்னிகை தன்னை                                     வேட்டுச்
சிந்தையின் மகிழ்வால் சேர்ந்து சித்திர வல்லி என்னும்
பைம் தொடி தன்னை அன்பால் பயந்தனன் பதும                                     மின்போல்.
38
   
9990.
அத்தகு பொழுதில் பின்னை அனகனே சனகன் என்னும்
புத்திரர் தம்மை நல்கிப் புவனி ஆள் முசுகுந்தற்குச்
சித்திரவல்லி என்னும் சீர் கெழு புதல்வி தன்னை
மெய்த்தகு வதுவை நீரால் விதிமுறை வழாமல் ஈந்தான்.
39
   
9991.
ஏனைய வீரர் தாமும் இயல் புளி வழாமல் வேட்ட
தேன் இவர் குழலாரோடும் சிறந்த இல் வாழ்க்கைப்                                       போற்றிப்
பால் நலம் குதலைச் செவ்வாய்ப் பாலரை நீல வேல்கண்
மான் அனையாரை நல்கி மனுகுலத்து ஒன்றி உற்றார்.
40
   
9992.
சித்திரவல்லி என்னும் சீருடைச் செல்வி ஆங்கு ஓர்
தத்தையை வளர்த்தலோடும் தண்டகத் தருமன் தேவி
அத்தனிக் கிளியை வெஃக ஆங்கு அவன் தூதர் போந்து
கைத் தலத்து அதனைப் பற்றிக் கடிதினில் கொடுபோய்                                        ஈந்தார்.
41
   
9993.
அவ்வழி கிள்ளை காணாள் ஆயிழை அயர்தலோடும்
எவ்வழி போயிற்றோ என்று இறையவன் உலகின் நாடி
மை வழிகின்ற மேனி மறலி தன் துணைவி ஆனாள்
கை வழி அமரும் தன்மை கதும் என உணர்ந்தான்                                       அன்றே.
42
   
9994.
பூ தலம் புரந்த செம் கோல் புரவலன் வீர மொய்ம்பன்
ஆதியர் தம்மைக் கூவி அங்ஙனம் தூண்ட அன்னோர்
ஏதம் இல் கரிதேர் வாசி எல்லையின் மறவர் சுற்ற
மேதி அம் கடவுள் மூதூர் விரைந்து போய் வளைந்து                                     கொண்டார்.
43
   
9995.
தன் நகர் வளைதலோடும் தருமன் வந்து ஏற்ற காலை
அன்னவ னோடு போர் செய்தே அடுமுரண் தொலைச்சி                                     அம் பொன்
வன்ன மென் கிள்ளை தன்னை வாங்கினர் மீண்டு தம்                                     கண்
மின் உளம் மகிழ நல்கி வேந்தற்கு விசயம் செய்தார்.
44
   
9996.
சித்திரவல்லி பின்னர்ச் சீர்கெழு சூல் கொண்டு உற்று
மெய்த் தகு பலம் காய் வேண்டி வேண்டினள் வினவ                                  லோடு
முத்து அணி அலங்கல் திண் தோள் முசுகுந்தன் அது                                  கொண்டு ஏக
அத் திரு மலை நல் நாட்டுக் களப்பு இல் ஓர் தம்மை                                  உய்த்தான்.
45
   
9997.
மஞ்சு சூழ் மலை நாட்டு உள்ளார் மன்னவர் மன்னன்                                    ஆணைக்கு
அஞ்சலர் இகழ்தலோடும் ஆடல் அம் புயனும் ஏனைச்
செம் சிலை வீரர் தாமும் சென்றனர் அந்நாட்டு உள்ள
வெம் சுரம் ஈர் ஒன்பானும் வென்று ஒரு பகலின்                                    மீண்டார்.
46
   
9998.
பூண்டிடும் கழல் கால் வீரர் பொற்பு உறு புதல்வி
                                   ஆனாள்
வேண்டிய தீய பைங்காய் வியத்தக நல்கிப் பின்னர்
ஈண்டு உள தரணி எல்லாம் ஏகியே திறை கொண்டு                                     எங்கும்
ஆண்டைய மன்னன் கோலும் ஆணையும் நடக்கச்                                     செய்தார்.
47
   
9999.
கரு முதிர்கின்ற காமர் கற்பக வல்லி அன்னாள்
எரிகிளர் அங்கி வன்மன் என்பது ஓர் குமரன் தன்னை
அரியது ஓர் தவத்தின் சீரால் அளித்தனள் அதனைக்                                     கண்டு
பெரிது உளம் மகிழ்ந்து மன்னன் பேர் அரசாட்சி                                     செய்தான்.
48
   
10000.
அன்ன காலையில் வலாசுரன் என்பது ஓர் அவுணன்
பல் நெடும் பெரும் சேனையும் தானும் ஆய்ப் படர்ந்து
பொன்னின் நாட்டினைச் சுற்றியே அடர்த்தலும் புலவோர்
மன்னர் மன்னவன் அவனுடன் சில பகல் மலைந்தான்.
49
   
10001.
நிருதர் போற்றிய வலாசுரன் தன்னொடு நேர்ந்து
பொருது வென்றிலன் ஆதலால் பூதலம் புரக்கும்
குருதி வேல் படை முசுகுந்த மன்னனைக் கூவி
வருதி என்று ஒரு தூதனை விடுத்தனன் மகவான்.
50
   
10002.
ஏய தூதுவன் இருநிலம் புக்கனன் இமையோர்
நாயகன் பணி உரைத்தலும் நன்று என வினவி
மா இரும் திறல் வீரர் தம் படையொடும் வான் மேல்
போயினான் முசுகுந்தன் என்று உரை பெறும் புகழோன்.
51
   
10003.
போன மன்னவன் புரந்தரன் பொன் அடி வணங்கித்
தானை விண்ணர்வர்க்கு அதிபன் ஆம் தலைமையைத்                                  தாங்கி
மான் இனங்கள் மேல் மடங்கல் சென்ற அன்னவல்                                  அவுணர்
சேனை அம் கடல் யாவையும் இமைப்பினில்
                                 செறுத்தான்.
52
   
10004.
சுற்று நிற்புறும் அவுணர் ஆம் சூழ் பெரும் பௌவம்
வற்று கின்று உழி வலாசுரன் தன்னொடு மகவான்
செற்ற நீரொடு சிலபகல் நின்று போர் செய்து
கொற்றம் ஆர் குலிசத்தினால் அவன் உயிர் குடித்தான்.
53
   
10005.
மன்னு தொல் புகழ் வலன் உயிர் கோறலால் வலாரி
என்ன ஓர் பெயர் பெற்றனன் வாகையும் எய்திக்
கொன்னு உனைப் படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு
பொன் நகர்த் திருக் கோயிலில் புரந்தரன் புகுந்தான்.
54
   
10006.
காய்ந்த மாற்றலர் தம் வலி கடந்து எனைக் ககன
வேந்தன் ஆக்கினை வீரமும் மேதகு புகழும்
ஈந்து எனக்கு நல் துணைவனும் ஆயினை இதனால்
ஆந்தர் அங்கம் ஆம் சுற்றம் நீ அல்லையோ என்றான்.
55
   
10007.
என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக்
குன்று போல் உயர் தன் பெரும் கோயில் உள்                                  கொடுபோய்
மன்றல் மாண்புனல் ஆடியே மணிக் கலை புனைந்து
சென்று மால் தொழும் தேவனைப் பூசனை செய்தான்.
56
   
10008.
எயிலை அங்கு எரி ஊட்டிய கண் நுதல் இமைய
மயிலும் மைந்தனும் ஒருபுடை மகிழ்வுடன் மேவக்
கயிலையின் கணே அமர்தல் போல் இருத்தலும்                                   கண்டான்
பயிலும் அன்பு உடை மன்னவன் பரவசம் ஆனான்.
57
   
10009.
ஆடினான் தொழுது ஏத்தினான் அடிகளை முடிமேல்
சூடினான் உளம் உருகினான் துள்ளினான் சுருதி
பாடினான் கரம் கொட்டினான் பகர் ஒணா உவகை
கூடினான் மொழி குழறினான் பொடிப்பு மெய்                                   கொண்டான்.
58
   
10010.
சிறந்த வெள்ளி அம் கிரியின் மேல் கண் நுதல்
                                  செல்வன்
உறைந்த இப்பெரும் கோலத்தைக் கண்டு கண்டு                                   உளத்தே
நிறைந்த மா மகிழ்வு எய்தியே இருந்தனன் நெடுநாள்
மறந்தனன் கொலோ பிறப்பினான் மயங்கியே என்றான்.
59
   
10011.
ஓவிலாமலே ஒருபொருள் போற்றுவான் உன்னி
மேவு கின்றவன் அவசம் ஆய் விழி துயின்றது போல்
மாவின் மாமுகம் வாங்கியும் மயங்கிய மன்னன்
தேவ தேவனை நோக்கியே தொழுது இவை செப்பும்.
60
   
10012.
ஏகனே போற்றி யார்க்கும் ஈசனே போற்றி அம்மை
பாகனே போற்றி மேல் ஆம் பரம்சுடர் உருவே
                                      போற்றி
மேகம் ஆர் களனே போற்றி விடைமிசை வருவாய்                                       போற்றி
மோகம் ஆர் தக்கன் வேள்வி முடித்திடும் முதல்வா                                       போற்றி.
61
   
10013.
அம்புய ஆசனன் மால் இன்னும் அளப்பு அரும்                                திறத்தாய் போற்றி
நம்பனே போற்றி எங்கள் நாதனே போற்றி கோது இல்
செம் பொனே மணியே போற்றி சிவபெருமானே போற்றி
எம்பிரான் போற்றி முக்கண் இறைவனே போற்றி
                          
     போற்றி.
62
   
10014.
பொங்கு அரா அணிகளாகப் புனைதரு புனிதா போற்றி
அங்கராகத்தில் பூதி அணிந்திடும் ஆதி போற்றி
வெங்கு அராசலத்தின் வன்தோல் வியன் புயம்                             போர்த்தாய் போற்றி
சங்கரா பரமா போற்றி தாணுவே போற்றி போற்றி.
63
   
10015.
முன் எனும் பொருளுக்கு எல்லாம் முன்னவா போற்றி                             முப்பால்
மன் உயிர்க்கு உயிரே போற்றி மறைகளின் முடிவே                             போற்றி
என்னை முன் வலிந்து ஆட் கொண்டே இருநிலம்                             விடுத்தாய்ப் போற்றி
நின் உருக் காட்டி என்னை நினைப்பித்த நித்தா
                            போற்றி.
64
   
10016.
எவ் எவர் தம்மை யேனும் யாவரே எனினும் போற்றின்
அவ் அவர் இடமாக் கொண்டே அவர்க்கு அருள்                               தருவாய் போற்றி
மெய்வரு தெளிவில் உன்னை வெளிப்பட உணர்ந்து                               உளோர்க்குத்
தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி.
65
   
10017.
அம்புய மலர்மேல் அண்ணல் அச்சுதன் ஆதி வானோர்
தம்பதம் எமக்கு நல்கும் தற் பரா என்றேயாரும்
நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட
                        அடைந்தோர்க்கு எல்லாம்
உம்பர் தம் பதமும் ஈயும் உலகு உடை முதல்வா
                        போற்றி.
66
   
10018.
உறைதரும் அமரர் யாரும் உழையராய்ச் சூழ நாப் பண்
மறைபயில் பெரியோர் உற்று வழிபட இருந்தாய் போற்றி
அறுவகை ஐந்தும் ஆறும் ஆகிய வரைப்பின் மேல் ஆம்
இறைவனே போற்றி போற்றி என் பிழை பொறுத்தி                                       என்றான்.
67
   
10019.
இவை முசுகுந்தன் கூற எம்பிரான் கருணை செய்தே
அவன் முகம் தன்னை நோக்கி ஆழியான் அளப்பு
                                  இல் காலம்
உவகையால் வழிபாடு ஆற்றி உம்பர்கோன் இடத்தில்                                   வைத்தான்
புவிதனில் கொடு போய் நம்மைப் பூசனை புரிதி                                   என்றான்.
68
   
10020.
என்று இவை முக்கண் மூர்த்தி இந்திரன்
                              கேளாவண்ணம்
நன்று அருள் புரிதலோடும் நனிபெரு மகிழ்ச்சி எய்தி
உன் திரு உளம் ஈது ஆயின் உய்ந்தனன் அடியேன்                               என்னா
வென்றி கொள் மன்னர் மன்னன் விம்மிதன் ஆகி                               உற்றான்.
69
   
10021.
இந்திரன் அமலன் பூசை இவ்வழி முடித்த பின்னர்ச்
செம் தழல் ஓம்பி ஏனைச் செய்கடன் புரிந்து வேறு ஓர்
மந்திரம் புகுந்து தேனு வருக என வல்லை கூவி
வெம்திறல் மனனற்கு அந்நாள் விருந்து செய்வித்தான்                                      அன்றே.
70
   
10022.
விருந்து செய் வித்த பின்னர் விசித்திரக் கலையும் பூணும்
தெரிந்திடு மணியும் முத்தும் தெய்வதப் படையும் மற்றும்
பரிந்து உடன் உதவி இன்னும் வேண்டுவ பகர்தி என்னப்
புரந்தரன் அருளலோடும் புரவலன் இதனைச் சொல்வான்.
71
   
10023.
ஏவரும் தெரிதல் தேற்றாது இருந்திடும் இமையா
                                     முக்கண்
பாவை ஓர் பாகன் தன்னைப் பரிவொடு கொடுத்தி ஐய
பூ உலகம் தனின் யான் போய்ப் பூசனை புரிதற்கு                                      என்னத்
தேவர்கள் முதல்வன் கேளா இனையன செப்பல்                                      உற்றான்.
72
   
10024.
உந்தியால் உலகைத் தந்த ஒரு தனி முதல்வன்
                                     முன்னம்
மைந்தர் தாம் இன்மையாலே மன் உயிர்த் தொகுதிக்கு                                      எல்லாம்
தந்தையாய் இருந்த தம் கோன் சரணமே அரணம்                                      என்னாச்
சிந்தை செய்து ஊழி காலம் செய்தவம் இயற்றிஇட்டான்.
73
   
10025.
தவம் உழந்து இருந்த காலைச் சாரத புணரி சுற்றக்
கவுரியும் தானும் ஐயன் கருணையால் வந்து தோன்றப்
புவிதனை அளந்த மாயோன் பொள் என எழுந்து                                     போற்றிச்
சிவன் அடி வணக்கம் செய்து செம்கையால் தொழுது                                     நின்றான்.
74
   
10026.
மாது ஒரு பாகன் மகிழ்ந்து அருள் செய்து
நீ தவம் ஆற்றி நெடும் பகல் நின்றாய்
ஏது இவண் வேண்டும் இயம்புதி என்னச்
சீதரன் இன்னன செப்புதல் உற்றான்.
75
   
10027.
அந்தம் இல் ஆயுவும் ஆர் உயிர் காப்பும்
செம் திருவோடு உறை செல்வமும் ஈந்தாய்
மைந்தன் இலாமல் வருந்தினன் எந்தாய்
தந்து அருளாய் தமியேற்கு இனி என்றான்.
76
   
10028.
குன்றினை ஆற்றிடும் கோன் இவை செப்ப
நன்று எனவே நகையா நவை இல்லா
ஒன்று ஒரு செம்மல் உனக்கு உதவு உற்றாம்
என்று அருள் செய்தனன் யாரினும் மேலோன்.
77
   
10029.
கழை இசை போற்றும் கரும் கடல் வண்ணன்
முழுது உலகு கீன்றிடும் முற்றிழை பாதம்
தொழுதிலன் நின்று துதித்திலன் அன்பால்
வழிபடு நீரின் வணங்கிலன் மாதோ.
78
   
10030.
முறையினால் தனக்கு இளையவள் என்றே முன்னினன்                கொலோ மூலமும் நடுவும்
இறுதியும் இலாப் பரமனுக்கு எம் போல் இவளும் ஓர்                சத்தி என நினைந்தனனோ
மறு இலா மலைமகள் என உளத்தே மதித்தனன்                கொலோ மாயவன் கருத்தை
அறிகிலேம் உமை அம்மை பால் சிறிதும் அன்பு                செய்திலன் முன்பு செய் வினையால்.
79
   
10031.
ஆன்ற ஐம்புலன் ஒருவழிப் படுத்தி ஆர்வம் வேர்                      அறுத்து ஐயம் ஒன்று இன்றி
ஊன் திரிந்திடினும் நிலை திரியா உண்மையே பிடித்து                      உலகங்கள் முழுதும்
ஈன்ற எம் பெருமாட்டியை நீக்கி எம்பிரானையே                      வழிபடும் இயற்கை
மூன்று தாள் உடை ஒருவனுக்கு அல்லால் ஏனையோர்                      களால் முடியுமோ முடியா.
80
   
10032.
அன்ன காலையில் எம் பெருமாட்டி ஆழி அம் படை                       அண்ணலை நோக்கி
என்னை நீ இவண் அவ மதித் தனை ஆல் எம்பிராற்கு
                      நீ அன்பு உளன் அன்றால்
முன்ன நீ பெறு மதலையும் ஐயன் முனிவின் ஒல்லையின்                       முடிந்திட என்னாப்
பன்ன அரும் கொடு மொழி தனை இயம்பிப் பரா பரன்                       தனை நோக்கியே பகர்வாள்.
81
   
10033.
ஆனது ஓர் பரப் பிரமமும் யானே அல்லது இல்லை                      என்று அறிவிலாப் பேதை
மானுடப் பெரும் பசுக்களை எல்லாம் மருட்டியே                      திரிவஞ்சகன் முன்னம்
ஞானநீரினார் அறிவினால் அன்றி நணுகு உறாத நீ                      அணுகி நிற்பதுவோ
ஊன் உலாவிய உயிரினுக்கு உயிராம் ஒருவ செல்லுதும்                      வருக என உரைத்தாள்.
82
   
10034.
இன்னவாறு உரைத்து எம் பெருமாட்டி எம்பிரான்
                 தனைக் கொண்டு போம் அளவில்
அன்னதன்மை கண்டு அச்சுதக் கடவுள் அலக்கண்                  எய்தியே அச்சம் உற்று அயர்ந்து
தன்னுளம் தடுமாறி மெய் பனித்துத் தளர்ந்து நேமி
                 அம் தண் கரைக் கணித்தாய்
மன்னு பல் பொருள் கலம் தனைக் கவிழ்த்த வணிகன்                  ஆம் என வருந்தினன் மாதோ.
83
   
10035.
அம்மை தன் பொருட்டால் இடையூறு இங்கு அடைந்தது                  என்று மால் அகம் தனில் உன்னி
எம்மை ஆள் உடை இறையவன் தனையும் இறைவி                  தன்னையும் இளம் குமரனையும்
மெய்மை சேர்வடிவாக ஆங்கு அமைத்து வேத ஆகம                  விதிமுறை வழாமல்
பொய்மை தீர்ந்திடும் அன்பினால் பூசை புரிந்து
                 பின்னரும் வருந்தியே நோற்றான்.
84
   
10036.
அனைய தன்மையால் ஆண்டு பல்லாயிரம் கோடி
புனிதன் ஆகியே நோற்றனன் அதுகண்டு புழுங்கி
முனிவராய் உளோர் இன்னமும் வருகிலன் முதல்வன்
இனி அரும் தவம் செய்பவர் இல்லையால் என்றார்.
85
   
10037.
அந்த எல்லையில் சத்தியும் சிவமும் ஆய் அனைத்தும்
வந்திடும் பரிசு அளித்தவர் இருவரும் வரலும்
சிந்தையின் மகிழ்வு எய்தியே அம்மை சேவடியின்
முந்தி ஓடியே வணங்கினன் முழுதும் ஒருங்கு                                உணர்ந்தோன்.
86
   
10038.
இறைவி தாள் மலர் பணிந்த பின் எம்பிரான் பதமும்
முறையினால் பணிந்து இருவர் தம் கீர்த்திகள் முழுதும்
மறையின் வாய்மையால் பல் முறை யால் வழுத்து தலும்
நிறையும் நல் அருள் புரிந்தனன் தனக்கு நேர் இலாதான்.
87
   
10039.
மாது நீ இவற்கு அருள்புரி என்ன அம் மாது
சீதரன் தனை நோக்கியே நம் பெரும் தேவன்
ஓதும் வாய்மையும் யான் முனிந்து உரைத்திடும்
                               உரையும்
பேதியா இனி யாவரே அன்னவை பெயர்ப்பார்.
88
   
10040.
எங்கள் நாயகன் விழிபொழி அங்கியால் இறந்து
துங்க மேன்மை போய்ப் பின் முறை முன்பு போல்                                     தோன்றி
உங்கு உன் மா மகன் இருக்க என்று உரைத்தனள்                                     உமையாள்
அங்கு அது ஆக என்று அருளியே மறைந்தனன் ஐயன்.
89
   
10041.
அம்மை தன்னுடன் எம்பிரான் மறைதலும் அண்ணல்
விம்மிதத் தொடு தன் பதி புகுந்து வீற்று இருப்ப
மைம் மலிந்திடு மெய் உடைக் காம வேள் வாரா
இம்மெ எனக் கடிது உதித்தனன் அவன் மனத்து                                   இடையே.
90
   
10042.
வந்திடும் காமவேள் வடிவு உடைக் காளையாய்க்
கந்தம் ஆர் பூம் கணை கன்னல் வில் கை கொடே
மைந்தர் ஆனோர் களும் மாதரும் காமம் மேல்
புந்திவைத்திடும் வகை போர் புரிந்து உலவினான்.
91
   
10043.
தண் நிழல் குடை எனச் சசிபடைத்து உடையவன்
எண்ண மற்று ஒரு பகல் யார்க்கும் மேல் ஆகிய
கண் நுதல் பகவன் மேல் கணை மலர் சிதறியே
துண் எனத் துகள் அது ஆய்த் தொலைதல் உற்றான்                                       அரோ.
92
   
10044.
பூழியாய் மாண்டு உளான் பொருவு இலா நல் அருள்
ஆழியான் ஆணையால் அரு வொடே உருவமாய்
வாழிசேர் தொல்லை நாள் வளனொடு மன்னினான்
சூழிமால் திரிதரும் தோகை சொல் தவறுமோ.
93
   
10045.
நிற்ப மற்று இத்திறம் நேமியான் முன்னைநாள்
அற்புடன் வழிபடும் அமலையைக் குமரனைத்
தற்பரக் கடவுளைத் தனது மார்பில் கொடே
பல் பகல் பணியின் மேல் பால் கடல் துஞ்சினான்.
94
   
10046.
நீடவே துயிலும் மால் நெட்டு உயிர்ப்பு அசைவினால்
பீடு சேர் நாக அணைப் பேர் உயிர்ப்பு அசைவினால்
பாடு சூழ் தெண் திரைப் பால் கடல் அசைவினால்
ஆடியே வைகினார் அலகுஇலா ஆடலார்.
95
   
10047.
அன்னது ஓர் அமைதியில் அசுர சேனைக்கு எலாம்
மன்னன் ஆய் உற்று உளான் வாற்கலி என்பவன்
என்னை வானவரொடும் ஈடுஅழித்து அமர்தனில்
முன்னை நாள் வென்றனன் முடிவு இலா மொய்ம்
                                  பினால்.
96
   
10048.
அத்திறம் கண்டு நான் அமரரோடு ஏகியே
பத்து நூற்றுத் தலை பாந்தள் மேல் துயில் கொளும்
சுத்தனைப் போற்றியே தொழுது வாற் கலியினால்
எய்த்தனம் காத்தியால் எம்மை நீ என்றனன்.
97
   
10049.
நஞ்சு பில்கு எயிறு உடை நாகம் ஆம்பள்ளிமேல்
துஞ்சும் வால் அறிவினான் துயிலை விட்டே எழீஇ
அஞ்சலிர் உங்களுக்கு அல்லலே ஆற்றிய
வஞ்சனார் உயிர்தனை வல்லை உண்டிடுதும் ஆல்.
98
   
10050.
என்று தன் கை அமைத்து ஏழொடே உலகம் உண்டு
அன்று ஒர் ஆல் இலையின் மேல் அறிதுயில் மேவிய
மன்றல் அம் தண் துழாய் மாலை சூழ் மவுலியான்
ஒன்று பேர் அன்பினால் ஒன்று எனக்கு உரை
                                    செய்தான்.
99
   
10051.
பார்த்தியால் எனது எனும் பைம் பொன் மார்பத்து இடை
மூர்த்தியாய் வைகிய முதல்வியைக் குமரனைத்
தீர்த்தனைப் பூசனை செய்து நின் தீவினை
ஆர்த்தி நீங்குதி எனா ஆதரத்து அருளினான்.
100
   
10052.
அன்னவாறு அருள் செய்தே அனையர் மூவோரையும்
பொன் உலா மார்பினும் பொள் என வாங்கியே
என்னது ஆகிய கரத்து ஈந்தனன் ஈதலும்
சென்னிமேல் தாங்கினேன் மாதவத் திண்மையால்.
101
   
10053.
அங்கு அதன்பின் முறையாக அச்சுதன்பால் கடல்                                 அகன்று
நம் குழுஎலாம் சூழ் நாவலம் தீகத்து அணுகி
எங்கள்பிரான் அருள் நடம் செய் எல்லை இலாத்                                 தில்லை தனில்
துங்க மணி மன்று தனைத் தொழுது பரவசம் ஆனான்.
102
   
10054.
செல் அரிய பரவசம் ஆய்த் திரு முன்னே வீழ்ந்து                                இறைஞ்சித்
தொல்லை தனில் அறிவு இழந்து துணை விழிகள்
                               புனல் பெருகப்
பல் உயிர்க்கும் உயிர் ஆகும் பரமசிவ பூரணத்தின்
எல்லை தனில் புக்கு அழுந்தி எழுந்திலன் ஈர்                                இருதிங்கள்.
103
   
10055.
இத்திறத்தால் அவசம் அதாய் ஈறுமுதல் நடுவும் இலா
அத்தனது திருவடிக் கீழ் அடங்கியே ஆணையினால்
மெய்த்துரியம் கடந்த உயிர்மீண்டு சாக் கிரத்து அடையத்
தத்துவ மெய் உணர்ச்சி எலாம் தலைத் தலைவந்து                                  ஈண்டின ஆல்.
104
   
10056.
கண் துயில்வான் எழுந்தது எனக் கதும் என மாயோன்
                                    எழுந்து
புண்டரிகப் பதம் தொழுது போற்றி செய்து புறத்து ஏகித்
தெண் திரை சூழ் புவிக்கு அரசு செலுத்திய ஆல்                                     கலியுடனே
மண்டு பெரும் சமர் செய்து வல்லைதனில் உயிர்                                     உண்டான்.
105
   
10057.
வால் கலிதன் உயிர் உண்டு வாகை புனைந்தே திருமால்
சீர்க்கருணை நெறிஅதனால் தேவர்க்கும் என்தனக்கும்
ஏற்கும் வகை விடை உதவி இம் எனவே மறைந்து ஏகிப்
பால் கடலில் பணி அணை மேல் பண்டு போல் கண்                                    வளர்ந்தான்.
106
   
10058.
தேவர் குழாத் தொடு மீண்டு சிறந்திடும் இத் துறக்கத்தில்
ஆவலுடன் வந்தே யான் அன்று முதல் இன்று அளவும்
பூவை நிறம் கொண்ட புத்தேள் பொன் மார்பில் வீற்று                                     இருந்த
மூவரையும் அருச்சித் தேன் முது மறைநூல் விதி                                     முறையால்.
107
   
10059.
மன்னர்க்கு மன்னவ நீ வழிபடுதல் காரணம் ஆத்
தன் ஒப்பு இலாதாரைத் தருக என்றாய் தந்திடுவது
என் இச்சை அன்றே மால் இசை உனக்கு உண்டாம்                                ஆகில்
பின்னைத் தந்திடுவன் எனப் பெருந்தகை யோன்                                பேசினன் ஆல்.
108
   
10060.
பேசுதலும் முசுகுந்தன் பெயர்ந்து பால் கடல் இடை                                   போய்க்
கேசவனை அடிவணங்கிக் கிட்டி நின்று வேண்டுதலும்
வாசவன் தன் இடம் தன்னில் வைத்திடும் நம் உயிர்க்கு                                   உயிரைப்
பூசனை செய் கொடு போந்து பூதலத்தின் இடை
                                  என்றான்.
109
   
10061.
நன்று எனவே இசைவு கொண்டு நாரணனை                                 விடைகொண்டு
சென்று புரந்தற்கு உரைப்பச் சிந்தை தளர்ந்தே இரங்கி
அன்று தனை ஈன்ற தனிப் புனிற்று ஆவை அகலுவது                                           ஓர்
கன்று எனவே நனிபுலம்பி ஒரு சூழ்ச்சி கருதினன் ஆல்.
110
   
10062.
தேவர் பிரான் அவ் அளவில் தெய்வதக் கம்மியன்                                  செயலான்
மூ வடிவம் மூ இரண்டு முறை வேறு வேறு ஆக
ஏவர்களும் வியப்பு எய்த இமைப்பின் முனம் அமைப்                                  பித்துக்
காவலன் கை தனில் கொடுப்பக் கைதவம் என்று                                  அறிந்தனனே.
111
   
10063.
ஆதியில் விண்ணவர் தச்சன் அமைத்திடு மூ இரு
                                   வடிவும்
பூதல மன்னவன் வாங்கிப் புதல்வனொடும் கவுரியொடும்
வீதி விடங்கப் பெருமான் மேவியதாம் என இருந்தும்
ஏதும் உரையா நெறியால் இவர் அவர் அன்று என                                    மொழிந்தான்.
112
   
10064.
துங்கம் உறு முசுகுந்தன் சொல் வினவிச் சுடர் ஆழிப்
புங்கவன் தன் மார்பம் எனும் பொன் ஊசல் ஆட்டு                                  உகந்து
மங்கையொடும் குமரனொடும் மகிழ்ச்சியொடும் வீற்று                                  இருந்த
எங்கள் பிரான் தனைக் கொடு வந்து இவர் ஆமோ                                  என்றனனே.
113
   
10065.
இந்திரன் இவ்வாறு உரைப்ப இமையா முக் கண் பகவன்
முந்து திறல் முசுகுந்தன் முகம் நோக்கி நின்பாலில்
வந்தனம் ஆல் எம்மை இனிமாநிலத்தில் கொடு போந்து
புந்தி மகிழ்வால் பூசை புரிவாய் என்று அருள் செய்தான்.
114
   
10066.
ஊழி நாயகன் மகவான் உணராமே இஃது உரைப்பக்
கேழ் இலாப் பேர் உவகை கிடைத்து இனிது பணிந்து                                        ஏத்தி
ஆழியான் பூசனை கொண்டு அமர்ந்தவராம் இவரை
வாழியாய் தருக என வாங்கினன் மன்னவர் மன்னன்.
115
   
10067.
வாங்கிய பின் இமையவர் கோன் மன்னவனை முகம்                                  நோக்கி
ஈங்கு இவரை அறுவரொடும் இருநிலத்தின் இடைகொடு                                  போய்ப்
பூங் கமலாலய முதலாப் புகல் கின்ற தவம் தன்னில்
தீங்கு அறவே வழிபாடு செய்தி என விடை
                                 கொடுத்தான்.
116
   
10068.
நன்று எனவே விடை கொண்டு நால் நிலத்து இடை                                   இழிந்து
தென்திசை ஆரூர் தன்னில் சிவன் உறை பூம் கோயில்                                   புக்கு
மன்றல் கமழ் தண் துளவோன் வழிபட வீற்று                                   இருந்தோரை
வென்றி அரி அணைமீதில் விதி முறையால் தாபித்தான்.
117
   
10069.
கடன் ஆகை நள்ளாறு காறாயல் கோள் அரியூர்
மடன் ஆக முத்து ஈனும் வாய்மியூர் மறைக்கானம்
உடன் ஆகும் தலம் ஆறில் ஓர் ஆறு வடிவு கொண்ட
படம் நாக மதி வேணிப் பரஞ்சுடரை அமர்வித்தான்.
118
   
10070.
இப்படியே ஒருபகலில் எழுவரையும் தாபித்து
மெய்ப் பரிவில் வழிபாடு விதிமுறையால் புரிவித்துச்
செப்ப அரிய புகழ் ஆரூர்த் தேவனுக்கு விழாச்                                    செய்வான்
முப் புவனங்களும் போற்றும் முசுகுந்தன் உன்னினன்                                    ஆல்.
119
   
10071.
அந் நாளில் இமையவர் கோன் அருச்சனை செய் பரம்                              பொருளைக்
கொன்னார் வேல் மன்னவன் கைக் கொடுத்த ஒரு                              கொடும் பவத்தால்
பொன் நாட்டின் திரு இழந்து புலை உருவம் தனைத்                              தாங்கிக்
கைந் நாகம் மிசை ஊர்ந்து கமலை எனும் பதி                              அடைந்தான்.
120
   
10072.
ஆரூரின் மேவிய பின் அமலன் விழாப் போற்றுதற்குப்
பார் ஊரும் திரைஊரும் பல ஊரும் வருக என்றே
வார் ஊரும் முரசு எறிந்து மதக்களிற்றின் மிசை ஏறித்
தேர் ஊரும் செம்பொன் மணித் திருவீதிப் புடை                                    சூழ்ந்தான்.
121
   
10073.
பூம் கமலா புரி வாழும் புங்கவனார்க்கு அனைதற் பின்
ஓங்கு திருவிழா நடத்தி ஒழிந்த பதிப் பண்ணவர்க்கும்
ஆங்கு அது போல் நிகழ்வித்தே அந்தம் இல் சீர்                                    முசுகுந்தன்
பாங்கில் வரும் வீரருடன் பார் உலகம் புரந்து
                                   இருந்தான்.
122
   
10074.
ஆண்டு பல அப்பதியில் அமலன் விழாச் சேவித்துக்
காண் தகைய தவம்புரிந்து கடைஞர் வடிவினை நீங்கித்
தூண் தகைய தோள் மகவான் தொல் உருவம் தனைப்                                    பெற்று
மீண்டு சுரர் பதிபுகுந்து விபவம் உடன் வீற்று
                                   இருந்தான்.
123
   
10075.
விண்ணவர் கோன் ஏகிய பின் விரவு புகழ்க் கருவூரில்
எண் அரிய பல காலம் இறை அரசு செலுத்திய பின்
மண் உலகம் புரக்க அங்கிவன் மனுக்கு முடிசூட்டித்
துண் எனவே நோற்று இருந்து தொல் கயிலை தனை                                  அடைந்தான்.
124
   
10076.
துங்க மிகு முசுகுந்தன் தொல்கயிலை அடைந்த பின்னர்
எங்கள் விறல் மொய்ம்பின்னும் இலக்கருடன்                                   எண்மர்களும்
தங்கள் சிறார் தமை விளித்துத் தத்தமது சிறப்பு நல்கி
அங்கி வன்மன் பால் இருத்தி அரிய தவம் ஆற்றினரே.
125
   
10077.
மாதவம் எண்ணில இயற்றி மானுடத் தன்மையை நீங்கி
ஆதி தனில் அடல் எய்தி அருள் முறையால்                                அனைவர்களும்
மேதகு சீர்க் கந்த கிரி விரைந்து ஏகி வேல் கடவுள்
பாத மலர் பணிந்து ஏத்திப் பத்திமை செய்து உற்றனர்                                ஆல்.
126
   
10078.
ஆகையால் அயன் அறியா அருமறை மூலம் தெரிந்த
ஏக நாயகன் விரதம் எவரேனும் போற்றி இடின்
ஓகையால் நினைந்த எலாம் ஒல்லை தனில் பெற்றிடுவர்
மாகமேல் இமையவரும் வந்து அவரை வணங்குவரே.
127