144முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்
      கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி
      காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா
      திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே
      விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)